Thursday, January 4, 2024

"கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது". (1கொரி.2:9)

"கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது, மனித உள்ளத்தில் எழாதது. கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது". (1கொரி.2:9)

''தாத்தா, நாம் கண், காது, வாய், மூக்கு, உடல் ஆகிய ஐம்பொறிகளால் ஆன மனிதர்கள்.

ஐம்பொறிகளால்தான் உலகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

கண்ணுக்குப் புலப்படாத, 
காதுக்கு எட்டாத, 
மனித உள்ளத்தில் எழாத மோட்சத்தை நம்மால் எப்படி அனுபவிக்க முடியும்.

கொஞ்சம் சொல்லுங்களேன்."

 "கடவுள் தம்மை அன்பு செய்கிறவர்களுக்காகத்தான் மோட்சத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இவ்வுலகில் உடலும் ஆன்மாவும் சேர்ந்து வாழ்பவன் தான் மனிதன்.  அன்பு உடலைச் சார்ந்ததா? ஆன்மாவைச் சார்ந்ததா?"

"ஆன்மாவைச் சார்ந்தது."

"'அன்பைக் கண்ணால் பார்க்க முடியுமா?"

"நமது ஆன்மாவையும் கண்ணால் பார்க்க முடியாது, அதைச் சார்ந்த அன்பையும் கண்ணால் பார்க்க முடியாது."

"'கண்ணால் பார்க்க முடியாத அன்பை உன்னால் அனுபவிக்க முடியுமா?"

''முடியுமே. அன்பு என்பது ஒரு பொருள் அல்ல, உணர்வு.

ஒரு பொருளை ரசிப்பதற்கு தான் ஐம்பொறிகள் தேவை. ஆன்மாவைச் சார்ந்த அன்பு என்ற உணர்வை ஆன்மாவால் ரசித்து அனுபவிக்க முடியும்."

"எப்போது நாம் மோட்சத்திற்குச் செல்வோம்?"

"நாம் இறந்த பின்பு. நாம் இறக்கும் போது ஐம்பொறிகளை உடைய நமது உடல் மண்ணுக்குள் ஐக்கியமாகிவிடும். ஆன்மா மட்டும்தான் மோட்சத்திற்குச் செல்லும்.

இப்போ புரிவது போல் தெரிகிறது.

நமது ஆன்மாவுக்கு ஐம்பொறிகள் இல்லை.

ஆவியாகிய கடவுளுக்கும் ஐம்பொறிகள் இல்லை.

கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.

நமது ஆன்மாவால் நாம் கடவுளை அன்பு செய்கிறோம்.

அன்பு செய்கிற கடவுளோடு, 
அன்பு செய்கிற நமது ஆன்மா ஐக்கியமாகி விடுகிறது.

அதுதானே மோட்சம்."

'"கடவுளோடு நாம் வாழும் ஐக்கிய நிலைதான் மோட்சம்.

நமது உடல் உலகைச் சார்ந்த ஒரு பொருள்.(Matter)

கடவுள் நமது முதல் பெற்றோரின் உடலை (ஏற்கனவே அவரால் படைக்கப்பட்டிருந்த)
 மண்ணிலிருந்து உண்டாக்கினார். 

ஆன்மாவைப் படைத்து உடலோடு சேர்த்தார்.

ஆதாமின் வழி வந்த நமது உடல் மண்ணைச் சார்ந்தது. ஆன்மா தனியாக படைக்கப்பட்டு அதோடு சேர்க்கப்பட்டது.

நாம் மரணம் அடையும் போது மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உடல் மண்ணுக்கே திரும்பி விடுகிறது.

ஆன்மா இறைவனிடம் திரும்பி விடுகிறது.

நமது உடலைச் சார்ந்த ஐம்பொறிகளும் மண்ணைச் சார்ந்தவை.

மண்ணைச் சார்ந்த மனித கண்களால் மோட்சத்தைப் பார்க்க முடியாது.

உலகப் பொருளான நமது உடல் இருக்க உலகம் என்ற இடம் தேவை.

உலகம் ஒரு இடம்.
ஆனால்
மோட்சம் ஒரு வாழ்க்கை நிலை."  

"ஆனால், தாத்தா, இயேசுவின் இரண்டாவது வருகைக்குப்பின்,

நாம் உயிர்க்கும் போதுநமது ஆன்மாவும் உடலும் ஒன்று சேர்ந்து விடும் அல்லவா."

"'இயேசு சிலுவையில் மரிக்கும் போது அவரது உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா 

 அவர் உயிர்த்தபோது அவரது உடலோடு சேர்ந்து கொண்டது.

இயேசு உயிர்த்தபோது மண்ணைச் சார்ந்த அவரது உடல் விண்ணைச் சார்ந்த உடலாக மாறியது.


உயிர்த்த உடல் தங்க இடம் தேவையில்லை.

இயேசுவும், அன்னை மரியாளும் மாற்றம் அடைந்த உடலோடு தான் விண்ணகத்தில் வாழ்கிறார்கள்.

உலக முடிவில் நாம் உயிர்க்கும்போது நமது மண்ணக உடல் விண்ணக உடலாக மாறி நமது ஆன்மாவோடு சேரும்.

அதன் பின் நாமும் இயேசுவைப் போலவும், அன்னை மரியாளை போலவும் ஆன்ம சரீரத்தோடு மோட்சத்தில் வாழ்வோம்.

அதன் பின் நமது உடலுக்கு உலகில் தேவைப்படுவது போல் உணவு தேவைப்படாது.

நோய் நொடிகள் வராது.

உலகில் நமது உடல் அனுபவிப்பது சிற்றின்பம்,

மோட்சத்தில் நமது உடலும் ஆன்மாவும் இறைவனோடு ஐக்கியமாகி அனுபவிப்பது பேரின்பம்.

உலகில் சிற்றின்ப வாழ்வு நமது மரணத்தோடு முடிந்து விடும்.

மோட்சத்தில் நமது பேரின்ப வாழ்வு நித்திய காலமும் நீடிக்கும்."

",தாத்தா, மோட்சம் எங்கு இருக்கிறது?

"'கடவுள் இருக்கும் இடத்தில் மோட்சம் இருக்கிறது."

''தாத்தா மோட்சத்தில் இடம் இல்லை என்று சொன்னீர்கள்.

ஆனால் கடவுள் இருக்கும் இடத்தில் ... என்று சொல்கிறீர்கள்.

அது எப்படிப் பொருந்தும்?"

"'உலகைச் சார்ந்த மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவர் கடவுள்.  

மனித மொழி உலகைச் சார்ந்த மனித அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் பயன்படக்கூடியது.

விண்ணகத்தைப் பற்றியோ 
அதைச் சார்ந்த கடவுளைப் பற்றியோ உள்ள படி விவரிக்க மனித மொழி பயன்படாது.

ஆனாலும் மனிதர்களாகிய நமக்கு அது மட்டும் தான் தெரியும்.

வேறு வழி இல்லாமல் அதற்கு அப்பாற்பட்டவைகளையும் விவரிக்க அதைப் பயன்படுத்துகிறோம்.

இறைவாக்கை நமக்கு அறிவிக்கும் பைபிள் மனித மொழியில் தான் எழுதப்பட்டிருக்கிறது.

அதில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு மனித அனுபவத்தைச் சார்ந்த பொருள் கொடுக்க கூடாது.

அவற்றை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாரோ அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்."

"அவற்றை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?"

'"கடவுளால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் மூலமாகத்தான் நமக்கு பைபிள் கடவுளால் தரப்பட்டிருக்கிறது.

ஆகவே பைபிள் வசனங்களுக்குப். பொருள் கூறும் அதிகாரம் கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டும் தான் உண்டு.

கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு பைபிளைப் பற்றிப் பேச அதிகாரம் இல்லை"

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment