Wednesday, January 31, 2024

உண்மையான விசுவாசி.

உண்மையான விசுவாசி.

"தம்பி ஹோட்டலுக்கு வாரியா?"

"'ஹோட்டலுக்கா? என்ன விசேஷம்?"

''ஏதாவது tiffin சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது."

"'தாராளமாக சாப்பிடுங்கள். அதற்கு நான் எதற்கு?"

"எனக்கு கம்பெனி கொடுக்கத்தான்."

"'என்னிடம் எந்தக் கம்பெனியும் இல்லையே!"

''நீதான் கம்பெனி. வா, போவோம்"

"'சரி ஆசைப்பட்டு கூப்பிடுகிறீர்கள். வருகிறேன்."

ஹோட்டலுக்குப் போனோம். இருவருக்கான tableல் அமர்ந்தோம்.

சர்வர் வந்தார்.

"என்ன வேண்டும்?"

"இருவருக்கும் இட்லி கொண்டு வாருங்கள்."

கொஞ்ச நேரம் கழித்து கையில் இரண்டு தட்டுகளில் தோசையுடன் சர்வர் வந்தார்.

தட்டுகளை எங்கள் முன் வைத்தார்.

நாங்கள் கேட்டது இட்லி, வந்தது தோசை.

ஆனால் இட்லி order செய்த நண்பர் எதுவும் சொல்லாமல் தோசையைச் சாப்பிட ஆரம்பித்தார்.

ருசித்துச் சாப்பிட்டார்.

''சூப்பராக இருக்கிறது, சாப்பிடுங்கள்."

"நீங்கள் இட்லி order செய்தீர்களே.
தோசை வந்திருக்கிறதே.

அதைப் பற்றி சர்வரிடம் எதுவும் கேட்கவில்லையே."

"எனக்கு இந்த ஹோட்டலில் இது பழக்கமாகிவிட்டது.

நான் எனக்கு விருப்பமானதைக் கேட்பேன்.

சர்வர் இருப்பதைக் கொண்டு வருவார்.

அவர் எதைக் கொண்டு வந்தாலும் அது சுவையாகவே இருக்கும்.

கொண்டு வந்ததைச் சாப்பிடுவேன்."

நானும் சாப்பிட ஆரம்பித்தேன்.

சாப்பிட்டுக் கொண்டே சுற்றிலும் பார்த்தேன்.

எல்லோருமே தங்கள் முன் இருந்ததை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

'''எல்லோரும் நம்மை போல்தானா? எதைக் கேட்டாலும் வந்ததைத்தான் சாப்பிடுவார்களா?"

"மற்றவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

என்னைப் பொறுத்தமட்டில் கேட்டது வந்தாலும் வரும்,

 கேளாதது வந்தாலும் வரும்.

நான் எதையும் கேட்காமல் உட்கார்ந்திருந்தாலும் சர்வர் எதையாவது கொண்டு வருவான்.

 எது வந்தாலும் ருசியாக இருக்கும். ஆகவே எது வந்தாலும் ருசித்துச் சாப்பிடுவேன்.

தோசை ருசியாக இருக்கிறதா?"

'''உண்மையில் ருசியாக இருக்கிறது.

இனிமேல் நான் இந்த ஹோட்டலுக்கு வந்தால் தோசைக்கு தான் order செய்வேன்."

"ஆனால் தோசை தான் வரும் என்று சொல்ல முடியாது.

இட்லி வரலாம்,
 சப்பாத்தி வரலாம்,
 பூரி வரலாம்,

 வந்த பின்பு தான் என்ன வந்திருக்கிறது என்பது தெரியும்.

 ஆனால் எது வந்தாலும் உண்பதற்கு ருசியாக இருக்கும்."

"'நீங்கள் இதைச் சொல்லும் போது எனக்குக் கடவுளைப் பற்றி ஞாபகம் வருகிறது."

''புரியவில்லை."

"'கடவுள் நல்லவர். அவரிடம் இருப்பவை எல்லாம் நல்லவை.

தன்னால் படைக்கப்பட்டவர்கள் ஏதாவது கேட்டால் அவர்களுக்குக் கேட்டதைக் கொடுப்பார் என்று சொல்ல முடியாது.

கேட்டதையே கொடுத்தாலும் கொடுப்பார்,

 கேளாததை கொடுத்தாலும் கொடுப்பார்.

கேட்பவர்களுக்கு எது நல்லதோ அதைக் கொடுப்பார்.

அவர் எதைக் கொடுத்தாலும் பெறுபவர்களுக்கு அது நன்மை பயப்பதாகவே இருக்கும்.

நான் +2 முடித்தவுடன் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் போட்டேன்.

இடம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன்.

ஆனால் இடம் கிடைக்கவில்லை.

அது எனது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு கலைக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன்.

இப்போது இளங்கலை தமிழ் படித்து கொண்டிருக்கிறேன்."

"வேறு வழி இல்லாமல் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?

விருப்பத்துடன் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?"

"'விருப்பத்தோடு தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்ப வேண்டும்."

"நீங்கள் சொல்வது உண்மைதான்.

நாம் இந்த உலகில் பிறக்க வேண்டும் என்று விரும்பிக் கொண்டு பிறக்கவில்லை.

பிறந்த பின்பு தான் நாம் உலகிற்கு வந்ததே நமக்குத் தெரியும்.

விரும்பி பிறக்கா விட்டாலும் விருப்பத்தோடு தானே வாழ்கிறோம்.

நான் இந்த ஹோட்டலில் கேட்டது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததைச் ருசித்து சாப்பிடுகிறேன்.

காரணம் இந்த ஹோட்டலில் எல்லா வகை உணவுகளும் விருப்பத்தோடு உண்பதற்கு ஏற்றவை."

"'ஹோட்டல் அனுபவத்தைப் போல தங்களுக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு இறை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்களேன்."

"நமது இறை அனுபவம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

முதலில் நமது அன்னை மரியாளின் இறை அனுபவத்தைப் பற்றி சிறிது பேசுவோம்.

மரியாள் மூன்று வயது முதல் கோவிலில்தான் வளர்ந்தாள்.

சிறுவயதிலேயே தனது கன்னிமையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டாள்.

அவளுக்குத் திருமண வயது வந்தவுடன் அவரது கன்னிமைக்கு பாதுகாப்பாகத்தான் கோவிலில் உள்ள குரு அவளை விதவரான (Widower) சூசையப்பருக்கு திருமண ஒப்பந்தம் செய்தார்.

சூசையப்பர் தன்னுடைய கன்னிமைக்குப் பாதுகாவலராக இருப்பார் என்ற நிபந்தனையின் பேரில் தான் மரியாள் திருமணத்துக்குச் சம்மதித்தாள்.

கன்னியாக இருக்க வேண்டும் என்றாலே குழந்தைப் பேறு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் தானே அர்த்தம்.
அவர் கடவுளிடம் தான் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

குழந்தைப் பேறு வேண்டாம் என்றிருந்த அவளிடம் இறைவனே குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற விருப்பத்தை வானத்தூதர் அவளிடம் தெரிவித்த போது,

தனது கன்னிமைக்கு எந்த பழுதும் ஏற்படாது என்று அறிந்தவுடன்,

இறைமகனை மனு மகனாகப் பெற சம்மதித்தாள்.

குழந்தைப் பேறே வேண்டாம் என்றிருந்த அவளிடம் கடவுளே குழந்தையாகப் பிறந்தார்.

கடவுள் நல்லவர்.

ஆகவே அவரது கன்னிமைக்கு எந்த பழுதும் ஏற்படவில்லை.

மரியாள் தாயானவுடன் ஒரு நல்ல தாய் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படியே நடந்து கொண்டாள்.

சுய விருப்பம் அல்ல, இறை விருப்பமே அவளிடம் நிறைவேறியது."

"'கன்னிமை என்ற அவளது சுய விருப்பத்துக்கு எந்தவித பழுதும் ஏற்பட வில்லையே.

அது கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டுகிறது.

சூசையப்பர் மரியாளைத் திருமணம் புரியச் சம்மதித்தபோது  இறை மகன் அவளிடம் அவளது மகனாகப் பிறப்பார் என்பது அவருக்குத் தெரியாது.

ஆனால் அதுவே இறைவனது திட்டம் என்பதை அறிந்தவுடன் அதை முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்.

வாழ்வின் இறுதிவரை மனு மகனாகப் பிறந்த இறை மகனுக்காகவே வாழ்ந்தார்.

 அவர் மடியில் தனது தலையை வைத்தே மரணம் அடைந்தார்."

‌"மரியாளின் வாழ்வில் மட்டுமல்ல நமது வாழ்விலும் இறைவன் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து நம்மைப் பராமரித்து வருகிறார்.

நம்மைப் படைக்கும் போது ஏதாவது ஒரு நோக்கத்தோடு தானே படைத்திருப்பார்.

அந்த நோக்கத்தை நாம் அடையும் வகையில் தானே நம்மை அவர் பராமரித்து வருகிறார்.

நம் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு திட்டத்தை வைத்திருப்பார்.

நமக்கு அவர் முழு சுதந்திரத்தைக் கொடுத்திருப்பதால் நாமும் நமது வாழ்க்கைக்கான திட்டங்களைப் போடுகிறோம்.

கடவுளுக்கு முக்காலமும் தெரியும்.

நமக்கு நமது கடந்த காலமும் நிகழ்காலமும் மட்டுமே தெரியும்.

எதிர்காலத்தைப் பற்றி எதுவும் தெரியாது.

ஆனாலும் எதிர் காலத்திற்கென்று திட்டங்கள் போடுகிறோம்.

நமது திட்டம் இறைவனது திட்டத்தோடு ஒத்திருந்தால் பிரச்சனை இல்லை.

ஆனால் வித்தியாசமானதாக இருந்தால் கடவுள் நமது திட்டத்தை ரத்து செய்துவிட்டு அவரது திட்டத்தை நம்மில் நிறைவேற்றுவார்.

நாம் உண்மையான இறை விசுவாசிகளாக இருந்தால் நாம் திட்டம் போடும்போதே இறைவனது திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தோடு போட வேண்டும்.

நமது திருமணங்கள் கூட இறைவனால் தான் நிச்சியமிக்கப்படுகின்றன.

அதனால் தான் இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்."

"'உங்கள் திருமணம் எப்படி நடந்தது?"

"நான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை.

கிடைத்த பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு விருப்பமுடன் வாழ்கிறேன்.

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம்.

பிறந்திருக்கும் இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளே.

அன்போடும் ஆசையோடும்தான் வளர்த்து வருகிறோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, January 30, 2024

இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். (மாற்கு நற்செய்தி 6:3)

இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். 
(மாற்கு நற்செய்தி 6:3)

சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கிய இறை மகனுக்கு 

சொந்த ஊரில் உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் செய்ய இயலவில்லை. 

சர்வ வல்லப தேவனாகிய அவருக்கு ஏன் சொந்த ஊரில் வல்ல செயல்கள் எதையும் செய்ய இயலவில்லை?

இரண்டு உள்ளங்கள் உறவில் இணைய வேண்டும் என்றால் இரண்டு உள்ளங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

ஒரு உள்ளம் ஒத்துழைத்து, அடுத்த உள்ளம் ஒத்துழைக்காவிட்டால் உறவு ஏற்படாது.

கடவுளுக்கும் நமக்கும் உள்ள உறவும் அப்படித்தான்.

கடவுள் அன்பின் மிகுதியால் நம்மைப் படைத்தவர்.

நம் மீது அவர் கொண்ட அன்புக்கு என்றும் குறைவில்லை, மாற்றமும் இல்லை.

ஆனால் நாம் அவரது உறவை ஏற்றுக் கொள்ள மனம் உள்ளவர்களாக இருந்தால்தான் அவருக்கும் நமக்கும் இடையில் உறவு ஏற்படும்.

நம் மீது இறைவன் கொண்டுள்ள உறவுக்கு அடிப்படை அவர் நம் மீது கொண்டுள்ள மாறாத அன்பு.

நாம் அவரோடு உறவு கொள்ள வேண்டுமென்றால் நம்மிடம் இருக்க வேண்டிய அடிப்படை விசுவாசம்.

இறையன்பு அவரை நம்மோடு இணைக்கிறது.

விசுவாசம் நம்மை அவரோடு இணைக்கிறது.

நம்மிடம் விசுவாசம் இல்லையேல் நம்மால் அவரோடு உறவில் இணைய முடியாது.

சொந்த ஊரில் இயேசுவுக்கு புதுமைகள் செய்ய முடியாமைக்குக் காரணம் அங்கே உள்ள மக்களின் விசுவாசமின்மை.

அவர் 30 ஆண்டுகள் அங்கே மரியாளுக்கும், தச்சு வேலை பார்த்த சூசையப்பருக்கும் மகனாக வாழ்ந்தார்.

ஆகவே அங்கு வாழ்ந்த மக்கள் அவரை அப்படித்தான் ஏற்றுக் கொண்டார்களே தவிர இறை மகனாக ஏற்றுக் கொள்ளவில்லை. 

அன்னை மரியாளின் சகோதரியின் பெயரும் மரியாள்தான்.

அவளுடைய மக்கள் சின்ன யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர்.

அவர்கள் இயேசுவுக்கு சித்தி மக்கள், சகோதர உறவு உள்ளவர்கள். (Cousins of Jesus)

அவர்கள் வாழ்ந்த நாசரேத் ஊரில் தான் இயேசுவும் 30 ஆண்டுகள் தச்சனின் மகனாக வாழ்ந்தார்.

ஆகவே அங்குள்ள மக்கள் அவரைத் தச்சனின் மகனாகவும்,

 யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரனாகவும் (Cousin) பார்த்தார்களே தவிர 

இறை மகனாகப் பார்க்கவில்லை.

அதாவது அவரை மெசியா என்று விசுவசிக்கவில்லை.

ஒரு ஒப்புமை.

ஒரு கடைக்குப் போகிறோம். கடைக்காரர் விற்பதற்காக ஏராளமான பொருட்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

கடையில் உள்ள அத்தனை பொருட்களும் விற்பனைக்காகத்தான்.

நாம் கடையில் போய் நிற்கிறோம்.

கடைக்காரர் பொருட்களை விற்பதற்குத் தயாராக இருந்தும் நம்மால் பொருட்களை வாங்க முடியவில்லை.

ஏனெனில் நம்மிடம் பைசா இல்லை!

நமது ஆன்மீக வாழ்வில் நமக்கு உதவுவதற்காக இறைவன் அளவு கடந்த அருள் வரங்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

நமக்கு இறைவன் மீது விசுவாசம் இருந்தால் வேண்டிய அளவு அருள் வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் விசுவாசம் இல்லாவிட்டால் எதையும் பெற முடியாது.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்ன இயேசு நாம் கேட்டதைக் கொடுப்பார், விசுவாசத்துடன் கேட்டால்.

ஆனால் நம்மில் சிலர் விசுவாசம் என்ற வார்த்தையின் பொருளைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

விசுவாசம் என்றால் என்ன?

ஒரு ஒப்புமை.

ஒரு தகப்பனார் தன் மகனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூட்டிச் சென்று அங்கே ஒன்பதாவது வகுப்பில் Admission போடுகிறார்.

மகன் மாணவனாக மாறுகிறான்.

வகுப்பில் பாடம் நடத்துபவரை ஆசிரியராக ஏற்றுக்கொள்பவன் அவரது மாணவன்.

ஆனால் ஏற்றுக் கொண்டால் மட்டும் மாணவனாகி விடுவானா?

அவரை ஏற்றுக்கொள்வதோடு அவர் போதிக்கும் கல்விக்கு அவனை முற்றிலுமாக அர்ப்பணிக்க வேண்டும்.

அப்படி அர்ப்பணிக்காமல் தினமும் வகுப்புக்கு போய் வருவதாக மட்டும் இருந்தால் பெயருக்கு அவன் மாணவனாக இருக்கலாம், ஆனால் உண்மையில் மாணவன் அல்ல.

ஆசிரியரிடம் கல்வி கற்பவன் தான் மாணவன்.

ஆசிரியர் சொல்வதை ஒரு காது வழியே வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுபவன் மாணவன் அல்ல.

இயேசுவை விசுவசிப்பவன் விசுவாசி.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்வதோடு அவர் தரும் மீட்புக்கு தன்னையே அர்ப்பணித்து வாழ்பவன் தான் விசுவாசி.

இயேசுவை ஏற்றுக் கொள்கிறேன் என்று வாயினால் சொல்பவன் அதனால் மட்டும் விசுவாசி ஆகிவிட முடியாது.

தனது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இயேசுவுக்குத் தன்னையே அர்ப்பணித்து 'வாழ்பவன்' தான் விசுவாசி.

Underline 'வாழ்பவன்'.

தனது விசுவாசத்தால் இயேசுவோடு ஒன்றித்து வாழ்பவன் 

அவர் என்ன சொன்னாலும்,

அவர் அவனில் எப்படி செயல் புரிந்தாலும் முழு மனதோடு ஏற்றுக் கொள்வான்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணி புரிபவர் பள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன் பள்ளியில் இருக்க வேண்டும்.

பள்ளிக்கூட மணிக்கு அவர் கட்டுப்பட வேண்டும்.

அவர் நினைக்கிற நேரத்திற்கு மணி அடிக்க முடியாது.

அதுபோல விசுவாசி இறைவனது விருப்பத்துக்கு கட்டுப்பட வேண்டும்.

இறைவனை அவனுடைய விருப்பத்துக்குக் கட்டுப்படுத்த விரும்பக் கூடாது.

"இறைவா, உமக்கு விருப்பம் இருந்தால் எனக்கு முதல் குழந்தையாக ஆண்மகனை தாரும்."

என்று அவரிடம் வேண்டினாலும்,

அவர் பெண் மகவைத் தந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தையையே தராவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவன் தான் உண்மையான விசுவாசி.

லூர்து செல்வம்.

"காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். "(யோவான் நற்செய்தி 3:8)

" காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். "
(யோவான் நற்செய்தி 3:8)


 யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கதேமைப் பார்த்து இயேசு சொன்னார்,

 "ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 
 
மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். 

 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 

 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. 

தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். "

விசுவாசிகளின் வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை இயேசு ஒரு ஒப்புமை வாயிலாக விளக்குகிறார்.

இரண்டு படகுகளை எடுத்துக் கொள்வோம்.

ஒன்று துடுப்பினால் இயங்கும் படகு.

அடுத்தது பாய்மரத்தால் இயங்கும் படகு.

துடுப்பினால் இயங்கும் படகை அதில் பயணம் செய்பவன் இயக்குகிறான்.

துடுப்பினால் படகு செல்ல வேண்டிய திசையை பயணம் செய்பவன் அவனது விருப்பப்படி மாற்றிக் கொள்கிறான்.

அவனது விருப்பப்படி படகில் பயணிக்கிறான்.

ஆனால் பாய் மரப் படகு அதில் பயணிப்பவன் விருப்பப்படி அல்லாமல் 

காற்று வீசும் திசையில் பயணிக்கும்.

படகின் பயணத்தை தீர்மானிப்பது காற்று, பயணிப்பவன் அல்ல.

காற்று அழைத்துச் செல்லும் திசையில் பயணிப்பவன் பயணம் செய்ய வேண்டும்.

காற்று எங்கிருந்து வரவேண்டும், எங்கு நோக்கி செல்ல வேண்டும் என்பதை படகில் பயணிப்பவனால் தீர்மானிக்க முடியாது.

ஆண்டவர் காற்று வீசுவதை பற்றி கூறிவிட்டு

தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்று கூறுகிறார். 

இப்போது இரு மனிதர்களை எடுத்துக் கொள்வோம்.

ஒருவர் ஞானஸ்நானம் பெறாதவர்.
அதாவது தூய ஆவியால் பிறக்காதவர்.

அடுத்தவர் தூய ஆவியால் பிறந்தவர்.

தூய ஆவியால் பிறக்காதவர்

வாழ்க்கையில் தூய ஆவியைப் பற்றி கவலைப்படாமல் தனது விருப்பம் போல் வாழ்பவர்.

அவரைப் படைத்த இறைவன் அவர் எங்கே செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கே அவரால் செல்ல இயலாது.

இறைவன் அவரைப் படைத்ததன் நோக்கத்தை அடைய முடியாது.

தூய ஆவியால் பிறந்தவர் தனது விருப்பப்படி வாழாமல் ஆவியானவருடைய விருப்பப்படி வாழ்வார்.

முதலில் தன்னை முழுவதும் தூய ஆவியானவருக்கு கையளித்து விடுவார்.

அதன் பிறகு அவர் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிப்பவர் பரிசுத்த ஆவியே.

நாம் இந்த உலகில் தான் பிறந்திருக்கிறோம்.

உண்மைதான்.

உலகில் வாழ உணவு, உடை, இருப்பிடம் போன்ற சில அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

உண்மைதான்.

அதற்கு உலகைச் சார்ந்த பணம் தேவை.

உண்மைதான்.

அதற்கு வருமானம் வரக்கூடிய ஏதாவது ஒரு வேலை அல்லது தொழில் செய்ய வேண்டும்.

உண்மைதான்.

அதற்கு நாம் நமது மூளையைப் பயன்படுத்தி திட்டங்கள் தீட்ட வேண்டும்.

உண்மைதான்.

நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.

உண்மைதான்.

துடுப்பு உள்ள படகை அதில் பயணிப்பவன் இயக்கி பயணிப்பது போல

 இவ்வுலகில் வாழ்பவர்களும் தங்கள் சிந்தனைத் திறனைப் பயன்படுத்தி வாழ்க்கை படகை ஓட்ட வேண்டும்.

உண்மைதான்.

மேற்கூறப்பட்ட யாவும் இவ்வுலகில் வாழ்வதற்கு.

ஆனால் இவ்வுலகம் நிரந்தரமானதல்ல.

இவ்வுலக வாழ்க்கையும் நிரந்தரமானதல்ல.

உடலில் உடுத்த உடை, உடல் வளர உணவு, உடல் வாழ வீடு ஆகியவை உடல் இருக்கும் வரை தான் தேவை.

ஒரு காலம் வரும். நமது உடல் மண்ணுக்குள் சென்று, மண்ணோடு மண்ணாகி விடும்.

அதன் பின் நாம் கஷ்டப்பட்டு ஈட்டிய உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.

நிரந்தரமதற்ற இவ்வுலகு இருப்பது போலவே,

நிரந்தரமான, அழியாத மறுவுலகு ஒன்றும் இருக்கிறது.

அழியும் தன்மையுள்ள நமது உடல் மண்ணுக்குள் சென்றவுடன்

 அழியாத தன்மையுள்ள நமது ஆன்மா மறு உலகுகில் வாழ சென்று விடும்.

மறு உலகில் இரண்டு விதமான வாழ்க்கைகள் இருக்கின்றன.

பேரின்ப வாழ்வு, பேரிடர் வாழ்வு.

மறுவுலகில் பேரின்ப வாழ்வு வாழவே நமது ஆன்மா படைக்கப்பட்டது.

ஆனால் இவ்வுலகில் தனது இஷ்டப்படி வாழ்ந்த உடலோடு சேர்ந்து வாழ்ந்த ஆன்மாவால் பேரின்ப வாழ்வுக்குள் நுழைய முடியாது.

பேரிடர் வாழ்வுக்குள்தான் அது நுழையும்.

பேரின்ப வாழ்வுக்குள் நுழைய வேண்டுமென்றால் ஆன்மா இவ்வுலகில் பரிசுத்த ஆவியால் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

பாய்மரப் படகு காற்றினால் இயக்கப்படுவது போல நமது ஆன்மா பரிசுத்த ஆவியால் இயக்கப்பட வேண்டும்.

நமது விருப்பம் போல் வாழக்கூடாது.

பரிசுத்த ஆவியால் இயக்கப்படுகின்றவர்கள் சுயமாக எதுவும் செய்ய முடியாது.

ஓட்டுநர் விருப்பப்படி தான் பேருந்து பயணிக்கும்.

ஓட்டுநர் இறங்கிவிட்டால் பேருந்து நின்றுவிடும்.

காற்று வீசும் போது தான் பாய் மரப் படகு பயணிக்கும்.

காற்று வீசாவிட்டால் படகால் பயணிக்க முடியாது.

அதே போல் தான் நமது ஆன்மாவும் பேரின்ப வாழ்வை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால்

தூய ஆவி என்னும் காற்று வீச வேண்டும்.

 தூய ஆவியானவர் எந்த வழியே நமது ஆன்மாவை வழி நடத்துகிறாரோ அந்த வழியே நமது ஆன்மா பயணிக்க வேண்டும்.

ஆவியாரின் வழிநடத்துதலில் நமது சுய விருப்பங்களுக்கு இடம் இல்லை.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றையும் முற்றிலுமாக தூய ஆவியாரின் கரங்களில் ஒப்படைத்து விட வேண்டும்.

அவரின் விருப்பப்படி நினைக்க வேண்டும்,

 அவரின் விருப்பப்படி பேச வேண்டும்,

 அவரது விருப்பப்படி செயல்பட வேண்டும்.

வாழ வேண்டியது நாமல்ல,

 தூய ஆவியானவரே நம்மில் வாழ வேண்டும்.

நமது உணவு, உடை, இருப்பிடம் கூட தூய ஆவியானவருக்குக் கட்டுப்பட்டவை தான்.

தூய ஆவியானவரின் சொற்படி உண்பவர்கள் ருசிக்காக அல்ல, பசிக்காக உண்பார்கள்.

அவர்களிடம் போசனப் பிரியம் இருக்காது.

மது அருந்த மாட்டார்கள்.

நோன்பு அனுசரிப்பதன் மூலம் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரம் செய்வார்கள்.

உணவை அயலானோடு பகிர்ந்து உண்பார்கள்.

ஆடம்பரமாக உடை அணிய மாட்டார்கள்.

ஒழுக்கமாக (Decently) உடை அணிவார்கள். 

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுத்து உதவுவார்கள்.

அவர்கள் வாழும் வீடு ஜெப வாழ்வு வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் காலையில் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழுந்து,

இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு,

இறைவாக்கை வாசித்து தியானித்து விட்டு

அன்றைய வாக்கை வாழ்வதற்காகப் புறப்படுவார்கள்.

அன்றைய நாளில் என்ன செய்தாலும்

உண்டாலும், உடுத்தாலும், நடந்தாலும், என்ன வேலை செய்தாலும்

இறைவனுடைய பிரசன்னத்தில் இறைவனுக்காகச் செய்வார்கள்.

உள் தூண்டுதல்கள் (Inspirations) மூலம் ஆவியானவர் ஒவ்வொரு வினாடியும் அவர்களை வழிநடத்துவார்.

ஏதாவது துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றை ஆவியானவர் சிலுவைகளாக மாற்றுவார்.

ஆவியானவரின் தூண்டுதல்களின் படி நடந்தால் அவர்களது ஒவ்வொரு அசைவும் விண்ணக பேரின்ப வாழ்வை நோக்கியே அவள்களை நகர்த்தும்.

நமது அன்னை மரியாள் தூய ஆவியானவரின் வழி நடத்துதலின்படி வாழ்வதற்காகத் தான் தன்னையே அவரின் அடிமையாக அர்ப்பணித்தாள்.

நாமும் ஆவியானவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு 

அவர் நம்மை நடத்துகிற படி நடப்போம்.

பேரின்ப வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்

Monday, January 29, 2024

நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." (மாற்கு நற்செய்தி 5:28)

"நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." 
(மாற்கு நற்செய்தி 5:28)


 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்

 
 இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து

"நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டே

 அவரது மேலுடையைத் தொட்டார். 

 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றார்.

இயேசு மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, 

"என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். 


 அப்பெண் அஞ்சி நடுங்கிக் கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, 

நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். 


இயேசு அவரிடம், "மகளே, உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று.

அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார். 

இயேசு கடவுள். முக்காலமும் அறிந்தவர். 

சுகம் இல்லாத ஒரு பெண் தான் சுகம் பெறுவதற்காக விசுவாசத்துடன் தனது மேலாடையை தொடுவாள் என்பது அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

இருந்தாலும் உண்மையை குணமான பெண்ணின் வாயிலிருந்து வரவழைக்க வேண்டும்,

அதாவது,

அவளே விசுவாச அறிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்,

"என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார். 

அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல,

உலகில் உள்ள அத்தனை பேருக்கும் உடலில் ஏதாவது ஒரு நோய் இருக்கும்.

அனைவரும் நோயில்லாமல் வாழவே விரும்புகிறோம்.

கடவுளுக்கு எல்லாம் முடியும் என்பது நமக்கு தெரியும்.

நாம் மீட்பராக ஏற்றுக் கொண்டுள்ள இயேசு கடவுள் என்பதும் நமக்கு தெரியும்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசுவே வாக்கு கொடுத்திருப்பதும் நமக்கு தெரியும்.

கேட்பதை விசுவாசத்தோடு கேட்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும்.

இரத்தப் போக்கினால் வருந்திய பெண் விசுவாசத்தோடு இயேசுவின் மேலாடையை மட்டுமே தொட்டாள், குணம் அடைந்தாள்.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும் போது இயேசுவையே நமது நாவினால் தொடுகிறோம்.

நமது நாவினால் அவரை ருசித்து, புசித்து விழுங்கிய பின் அவரது உடல் நமது உடலோடு ஐக்கியமாகி விடுகிறது.

நாமும் இயேசுவும்

"இருவர் அல்ல, ஒருவர்."

 என்று கூறுமளவிற்கு ஐக்கியமாகி விடுகிறோம்.

நமது உடல் நோய்கள் நீங்கி நாம் குணம் பெற வேண்டுமென்று இயேசுவிடம் கேட்கிறோம்.

நம்மையே விசுவாசிகள் என்று அழைத்துக் கொள்ளும் நம்மிடம்

 உண்மையாகவே விசுவாசம் இருந்தால் 

நாம் இயேசுவை உணவாக உட்கொண்ட வினாடியே நமது உடலில் உள்ள அத்தனை நோய்களும் குணமாகி விட வேண்டுமே!

குணமாகி விடவில்லை என்றால் நம்மிடம் விசுவாசம் சிறிது கூட இல்லை என்று தானே அர்த்தம்.

இயேசுவிடம் நாம் வேண்டுவது கிடைக்க வேண்டும் என்பதற்காக வேளாங்கண்ணி, பூண்டி, உவரி போன்ற திருத்தலங்களுக்குத் திருயாத்திரையாகப் போகிறோம்.

அங்கெல்லாம் இருக்கும் அதே ஆண்டவர்தான் நமது உள்ளூர்க் கோவிலிலும் இருக்கிறார்.

வீட்டுக்குப் பக்கத்திலுள்ள கடையில் உப்பு இருக்கும்போது அதை வாங்க 10 மைல் தொலைவில் உள்ள கடைக்குப் போவோமா?

திருத்தலங்களுக்குத் திருயாத்திரை போக வேண்டாம் என்று சொல்லவில்லை.

வீட்டில் சாப்பாடு இருந்தாலும் திருமண விருந்துக்குப் போவதில்லை?

உள்ளூர்க் கோவிலில் தினமும் திருப்பலி இருந்தால் தினமும் திருப்பலிக்குப் போகலாமே!

குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமை முழுத் திருப்பலிக்குப் போகலாமே!

போகிறோமா?

முழுமையான விசுவாசத்தோடு திருப்பலியிலும், திருவிருந்திலும் கலந்து கொள்கிறோமா?

இப்போது நண்பர் ஒருவர் சொல்கிறார்,

"தாங்கள் உடல் நோய்கள் குணமாவதற்காகத் திருப்பலிக்குச் செல்லவில்லை,

ஆன்மீக நோயாகிய பாவத்திலிருந்து விடுதலை பெறவும்,

ஆன்மீக வளர்ச்சிக்காக ஆன்மீக உணவை உண்பதற்காகவும் மட்டுமே திருப்பலிக்குச் செல்கிறோம்."

கூறுவது முற்றிலும் சரி. அதற்காகத்தான் திருப்பலியிலும் திரு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும் அவர்கள் தங்களைத் தாங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

"அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறோமா?"

தூய்மையான உள்ளத்தோடு திருவிருந்தில் கலந்து கொண்டால்தான்

ஆன்மீகத்தில் வளர்ச்சி அடைய முடியும்.

உடல் நோய்கள் குணமாவது முக்கியமல்ல.

அவற்றைச் சிலுவைகளாக ஏற்றுக்கொண்டு,

அவற்றைச் சுமந்து கொண்டு ஆண்டவர் பின் சென்றால் நாம் பாக்கியசாலிகள்.

அதற்கும் விசுவாசம் வேண்டும்.

விசுவாசம் தான் நமது கிறிஸ்தவ வாழ்வின் உயிர்.

உயிரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, January 28, 2024

"ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்." (மாற்கு 5:19)

" ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்." (மாற்கு  5:19)

கலிலேயாக் கடலின் மேற்கு பகுதியில் யூதர்களும், கிழக்குப் பகுதியில் புற இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள்.

இயேசு புற இனத்தார் வாழும் கெரசேனர் நாட்டிற்குச் செல்கிறார்.

அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். 
(மாற்கு நற்செய்தி 5:17)

நற்செய்தி அறிவிக்கச் சென்ற இயேசுவை புற இனத்தார் ஏன் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு வேண்டிக் கொண்டார்கள்?

 இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார். 

அவர் பல பேய்களினால் பிடிக்கப்பட்டிருந்தவர்.

இயேசு அவற்றிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்தார்.

பேய்கள் இயேசுவின் அனுமதியோடு மலைப்பகுதியில்  பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த 
பன்றிகளுக்குள்  புகுந்தன.

ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது. 


பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிப்போய் நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள். நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர். 

அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பேய் பிடித்திருந்தவர்,  ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள். 


 நடந்ததைப் பார்த்தவர்கள் பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். 


அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு இயேசுவை வேண்டிக் கொண்டார்கள். 

ஆக தங்களில் ஒருவருக்கு இயேசு குணமளித்ததற்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக அவரை தங்களை விட்டு போய்விடுமாறு வேண்டிக் கொண்டார்கள்.

அவர்களை நன்றி கெட்ட ஜென்மங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?

அப்படியானால் நாம்?

நமக்காக, 

நம்மைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக, 

மனிதனாகப் பிறந்து 
பாடுகள் பட்டு 

சிலுவையிலே தன்னைப்  பலியாக்கி,

இப்போது ஒவ்வொரு வினாடியும் நம்மோடிருந்து எண்ணிறந்த ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றி,

நம்மை வழிநடத்தி வரும் இயேசுவை 

நமது பாவத்தினால் நம்மை விட்டு வெளியேற்றுகிறோமே 

நாம் எப்படிப்பட்டவர்கள்?

நன்றி உள்ளவர்களா?
 நன்றி கெட்டவர்களா?

ஒரு வினாடி சிந்திப்போம்.

நமக்கு நிலை வாழ்வு அளிப்பதற்காக,

நமது ஆன்மீக வளர்ச்சிக்காக,

தன்னையே நமக்கு ஆன்மீக உணவாகத் தரும் இயேசுவை கடவுளுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையோடு பெறுகிகிறோமா?

ஏதோ தின்பண்டத்தைப் பெறுவது போல் பெருகிறோமா?

ஒரு வினாடி நடுநிலைமையோடு சிந்தித்துப் பார்த்தால் நாம் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களா நன்றி கெட்டவர்களா என்பது நமக்கு தெரிய வரும்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கப்படும் திருப்பலியில் கலந்துவிட்டு

வீட்டுக்குத் திரும்பியபின் நாம் பாவம் செய்தால்

அப்போது நினைத்துப் பார்ப்போம் 

நாம் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களா நன்றி கெட்டவர்களா என்று.


கெரசேனர் பகுதி மக்கள் இயேசுவைத் தங்களை விட்டு போய்விடுமாறு வேண்டிக் கொண்டாலும்

அவர் தன்னைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்க ஒருவரை விட்டுத் தான் செல்கிறார்.

யாரை?


 அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார். 


ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார். 


அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். 

ஆக அந்நாட்டு மக்கள் இயேசுவைத் தங்கள் பகுதிக்குள் வர அனுமதிக்காவிட்டாலும் தன்னைப் பற்றி எடுத்துக் கூற அவர்களில் ஒருவரையே அங்கே இயேசு விட்டுச் சென்றார்.

அவர் பேய் பிடித்திருந்தவராக இருந்தாலும் அவரிடமிருந்தும் நாம் ஒரு ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவரைப் பற்றி நற்செய்தி ஆசிரியர் தனது நூலில் குறிப்பிட்டிருப்பது அதற்காகத்தான்.

நற்செய்தி வாசிப்பிலிருந்து நாம் பாடம் எதுவும் கற்றுக் கொள்ளாவிட்டால் நற்செய்தி வாசித்து ஒரு பயனும் இல்லை.

நாம் உண்ணும் உணவு நமது உடலுக்கு சக்தியையும் வளர்ச்சியையும் தராவிட்டால் உண்பதால் என்ன பயன்?

நாம் வாசிக்கும் இறைவாக்கு நமது வாழ்விலும் நமது அயலான் வாழ்விலும் எந்த பயனும் ஏற்படுத்தாவிட்டால்

இறைவாக்கை வாசித்து எந்த பயனும் இல்லை.

இறைவாக்கை வாசித்துத் தியானிக்கும் போது இறைவன் நமது வாழ்வில் செய்து கொண்டு வரும் நன்மைகளைப் பற்றியும் தியானிக்க வேண்டும்.

அவர் செய்து கொண்டு வரும் நன்மைகளுக்கு அவருக்கு நன்றி செலுத்துவதோடு

நம்மைச் சுற்றி வாழும் அனைவரிடமும் அவரைப் பற்றியும் அவர் செய்து கொண்டு வரும் நன்மைகளைப் பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.

இந்த சிறிய நற்செய்திப் பணிக்கு பெரிய படிப்புகள் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நம்மிடம் இருப்பதை கொடுத்தாலே போதும்.

என்னுடைய அம்மா முதல் வகுப்பு கூட படிக்கவில்லை.

ஒரு எழுத்துக் கூட எழுத வாசிக்கத் தெரியாது.

அவர்களுக்குப் பைபிள் பங்குச் சுவாமியார்தான்.

திருப்பலியின் போது சுவாமியார் வைக்கும் பிரசங்கம் தான் அவர்களுக்கு பைபிள் வாசிப்பு.

அதை அவர்கள் வாழ்ந்ததோடு மற்றவர்களுக்கும் அறிவித்தார்கள்.

அதற்கு இறைவன் அவர்களுக்கு அளித்த பரிசு,

அவர்களது மூத்த மகன் 
சங். சுவாமி ஞா. மிக்கேல் பெர்க்மான்ஸ் சே. ச. (இந்தியா முழுவதும் பயணித்து சர்வ சமய ஐக்கியப் பணி ஆற்றியவர்.)

இறைவன் நமக்குத் தந்ததை அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.

அதுவே நாம் ஆற்றும் சிறந்த நற்செய்தி பணி.

லூர்து செல்வம்.

Saturday, January 27, 2024

ஞானம் நிறைந்த வாழ்வு.ன

ஞானம் நிறைந்த வாழ்வு.


ஒரு மன்னருடைய பிறந்த நாளன்று அவரை வாழ்த்துவதற்காக ஏராளமான பேர் அரண்மனைக்கு வந்திருந்தார்கள்.

மன்னருக்கு சிறு பிள்ளைகள் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.

ஆகவே ஏராளமான பள்ளிக்கூட மாணவர்கள் அரண்மனைக்கு வந்திருந்தார்கள்.

அவர்களுக்குக் கொடுப்பதற்காக நிறைய சாக்லெட்களை மன்னர் வாங்கி வைத்திருந்தார்.

அவர் மாணவர்களை பார்த்து,

"உங்களுக்கு சாக்லெட் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று எனக்கு தெரியும்.

எனது சிம்மாசனத்துக்கு அருகில் உள்ள பெரிய பெட்டியில் 
சாக்லெட்கள் நிறைய உள்ளன.

ஒவ்வொருவராக வந்து இரண்டு கைகளாலும் எவ்வளவு சாக்லெட் களை அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளி உங்களது சட்டைப் பையில் போட்டுக் கொள்ளுங்கள்."

மாணவர்கள் வரிசையாக வந்து மன்னர் சொன்னபடி செய்தார்கள்.

ஒரு ஐந்து வயது சிறுவன் மட்டும் சாக்லெட்களை அள்ளாமல் மன்னரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"தம்பி ஏன் சாக்லெட்களை அள்ளாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?"

"அரசே, உங்கள் கரங்களால் அவற்றை அள்ளி ஒரு பையில் போட்டு என்னிடம் தாருங்கள்."

"உனது கைகளுக்கு என்ன பிரச்சனை?"

பையன் இரண்டு கைகளையும் விரித்துக் காண்பித்தான்.

"புரிகிறது. உனது கைகள் சிறியவை. சட்டைப் பையும் சிறியது.

ஆகவே தான் எனது கைகளால் அள்ளி ஒரு பையில் போட்டு தர சொல்கிறாய்.

உனது மூளையைப் பாராட்டுகிறேன்."

மன்னர் சிறுவன் சொன்னபடியே செய்தார்.

அதற்குப் பின்னால் வந்த மாணவர்கள் அந்த சிறுவனையே பின்பற்றினார்கள்.

அனேக சமயங்களில் சிறுவர்களுக்கு இருக்கும் சிந்திக்கும் திறனும், விவேகமும் பெரியவர்களிடம் இருப்பதில்லை.

சிறு குழந்தை தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தன்னுடைய தாயை முற்றிலுமாக பயன்படுத்திக் கொள்கிறது.

அதற்கு அது பயன்படுத்தும் ஒரே ஆயுதம் அழுகை.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியர் தங்களது பள்ளிக்கூடத் தேவைகளுக்கு தங்களது பெற்றோரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாம் பெரியவர்கள் நாம் நினைத்ததை நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையில்

 யார் யாரை எப்படிப் பயன்படுத்த வேண்டுமோ அப்படிப் பயன்படுத்த தவறிவிடுகிறோம்.

ஆன்மீக ரீதியாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் நமது இயலாமை நமக்கு புரியும்.

நமது தாயால் நாம் கருத்தரிக்கப் படுவதற்கு முன் நாம் ஒன்றும் இல்லாமல் இருந்தோம்.

ஒன்றுமில்லாமையால் ஒன்றும் செய்ய முடியாது.

 நம்மில் முழுமையாகச் செயல் புரிந்தவர் எல்லாம் வல்ல கடவுள்.

எல்லாம் வல்லவரால் எல்லாம் செய்ய முடியும்.

தனது பண்புகளில் அளவில்லாத கடவுளால் செய்ய முடிவதை அளவுள்ள நம்மால் செய்ய முடியாது.

இது நமக்குத் தெரியும்.

நமக்குத் தெரிவது அறிவு.

அறிவைப் பயன்படுத்தத் தெரிவது ஞானம்.

நமக்கு அறிவு இருக்கும் அளவுக்கு ஞானம் இல்லை.

அதனால்தான் கடவுளால் எல்லாம் முடியும் என்ற நமது அறிவு நமக்குப் பயன்படும் அளவுக்கு அதைப் பயன்படுத்தத் தெரியவில்லை.

முதலில் எழுதி இருந்த கதையில் வரும் ஐந்து வயது சிறுவனுக்கு இருக்கும் ஞானம் கூட வயதில் பெரியவர்களாகி விட்ட நம்மிடம் இல்லை.

சிறிய கைகளால் அள்ளுவதை விட பெரிய கைகளால் அதிகம் அள்ளலாம் என்ற அறிவு அவனுக்கு இருந்தது.

அதற்காக பெரிய கைகளை உடைய மன்னரைப் பயன்படுத்தலாம் என்ற ஞானமும் அவனுக்கு இருந்தது.

தனது ஞானத்தை பயன்படுத்தி அதிகமான சாக்லட் களைப் பெற்றுக் கொண்டான்.

நமது அன்னை மரியாளை

 "ஞானம் நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

அருளால் நிறைந்த அவள் தனது அருள் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் 

அருளின் ஊற்றாகிய ஆண்டவரின் அடிமையாக வேண்டும் என்ற ஞானம் அவளுக்கு இருந்ததால்தான்

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது சொற்படியே எனக்கு ஆகக் கடவது"

என்று தன்னையே கடவுளுக்கு அர்ப்பணித்தாள்.

கடவுளின் சர்வ வல்லமை வாய்ந்த சொல் அவளிடம் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டது.

படைக்கப்பட்ட அவள் படைத்தவருக்கே தாயாக மாறினாள்.

சர்வ வல்லவக கடவுள் அவள் சொல்லுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

இயேசு தனது அன்னையை நமது அன்னையாக நமக்குத் தந்ததற்குக் காரணமே நாமும் அவளைப் போல ஞானம் உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

நாம் ஒன்றும் இல்லாமையிலிருந்து சர்வ வல்லப கடவுளால் படைக்கப் பட்டிருக்கிறோம் என்று நமக்கு தெரியும்.

அவர் நம்மை தனக்காகத்தான் படைத்திருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்.

"ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.

 அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத்தேயு நற்செய்தி 6:33)

என்று அவர் கூறியிருப்பதும் நமக்குத் தெரியும்.

ஆகவே நாம் அவருக்காக மட்டுமே வாழ வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும்.

அவர் நமக்காக மட்டுமே திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதும் நமக்குத் தெரியும்.

நாம் நமது முயற்சியால் நமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை விட அதிகமான அளவு கடவுளிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்பதும் நமக்குத் தெரியும்.

இவ்வளவும் தெரிந்திருந்தும் நாம் நமது முயற்சியால் நமக்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

நமக்கு அறிவு இருக்கும் அளவுக்கு ஞானம் இல்லை என்று அர்த்தம்.

நமது அன்னை தன்னை இறைவனின் அடிமையாக அர்ப்பணித்து அவருக்காக மட்டும் வாழ்ந்தது போல 

நாமும் நம்மை இறைவனுக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து அவருக்காக மட்டும் வாழ்வோம்.

செடி வைத்தவனுக்குத் தண்ணீர் ஊற்றத் தெரியும்.

படைத்தவருக்குத் தனது படைப்பை காப்பாற்றத் தெரியும்.

நம்மை இறைவன் கையில் ஒப்படைத்து விட்டு அவருக்காக வாழ்வோம்.

நம்மை முற்றிலுமாக அவர் கவனித்துக் கொள்வார்.

நாம் அவருக்காக மட்டும் வாழ்வதே ஞானம் நிறைந்த வாழ்வு.

லூர்து செல்வம்.

Thursday, January 25, 2024

"நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; "(மாற்கு நற்செய்தி 16:17)

"நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; "
(மாற்கு நற்செய்தி 16:17)

இயேசு தனது சீடர்களை "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்ற 
அனுப்பிய போது அவர்களைப் பார்த்து,

" நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; 

நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். " என்று கூறிவிட்டு,

நம்பிக்கை கொண்டோர் என்னவெல்லாம் செய்வார்கள் என்று கூறுகிறார்.


" பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். 

கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. 

அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்." 

இயேசுவின் வார்த்தைகளைச் சிறிது தியானிப்போம்.

நமக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாமும் அதை விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றோம்.

மீட்பு பெறுவது உறுதி என்று நம்புகிறோம்.

ஒரு சிறிய ஒப்புமை.

நமக்குச் சுகமில்லை.

மருத்துவரிடம் செல்கிறோம்.

மருத்துவர் மருந்து கொடுக்கிறார்.

மருந்தை ஒழுங்காகச் சாப்பிடுங்கள், சுகமாகி விடும் என்கிறார்.

நாம் மருந்தைச் சாப்பிடுகிறோம்.

ஒரு மாதம் ஆகியும் சுகமாகவில்லை.

திரும்பவும் மருத்துவரிடம் செல்கிறோம்.

"ஐயா நீங்கள் தந்த மருந்தைச் சாப்பிட்டேன், ஆனால் இன்னும் குணம் ஆகவில்லை." என்று சொல்கிறோம்.

''தம்பி, இன்னும் நோய் குணமாகவில்லை என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்.

நீ மருந்தை ஒழுங்காகச் சாப்பிடவில்லை." என்று தான் மருத்துவர் கூறுவார்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெற்ற நாம் 


இயேசுவின் பெயரைச் சொல்லி பேய்களை ஓட்ட முயன்றோம், அவை ஓடவில்லை.

நம்மால் புதிய மொழிகளைப் பேச முடியவில்லை.

பாம்புகளை நம் கையால் பிடிக்க முடியவில்லை. 

கொல்லும் நஞ்சைக் குடித்தோம்,

மருத்துவரிடம் போக வேண்டியிருந்தது.

  

 உடல் நலமற்றோர்மீது கைகளை வைத்தோம், அவர்கள் குணமடைய வில்லை.

இயேசுவிடம் சென்று,

" ஆண்டவரே, நீங்கள் கூறிய படி நற்செய்தியை விசுவசித்து ஞானஸ்தானம் பெற்றோம்.

 ஆனால் நீங்கள் 
விசுவசிப்பவர்கள் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று சொன்னீர்களோ 

அவற்றில் ஒன்றைக் கூட எங்களால் செய்ய முடியவில்லை.

 ஏன் ஆண்டவரே?'' என்று கேட்கிறோம்.

அவர் நம்மைப் பார்த்து,

"எனது மக்களே, நான் உங்களைப் படைத்த கடவுள்.

உங்களை எனது சாயலில் படைத்தேன்.

என்னை விசுவசித்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நான் சொன்னேனோ அவற்றையெல்லாம் உங்களால் செய்ய முடியும்.

உங்களால் செய்ய முடியாவிட்டால் உங்களிடம் கடுகளவு விசுவாசம் கூட இல்லை என்று தான் பொருள்.

விசுவசிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் போதாது.

முழு மனதோடு விசுவசிக்க வேண்டும்.

முழு மனதோடு விசுவசித்தல் என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.

 பள்ளிக்கூடப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள்.

வேலை கிடைக்க வேண்டும் என்று எனக்கு விண்ணப்பித்திருக்கிறீர்கள்.

நீங்கள் விசுவாசத்தோடு விண்ணப்பிக்க வேண்டும்.

அதாவது உங்களது விண்ணப்பம் உங்களுக்கு நலன் பயப்பதாய் இருந்தால் நான் அதை உறுதியாகக் கேட்பேன், கேட்டதைத் தருவேன் என்று நீங்கள் விசுவசிக்க வேண்டும்.

நீங்கள் கேட்பது உங்களுக்கு நலம் தருமா, தராதா என்பது எனக்குத் தெரியும்.

நீங்கள் கேட்ட வேலை உங்களுக்கு ஆன்மீக ரீதியாக நலம் தராது என்றால் அதைத் தர மாட்டேன் என்பதையும் விசுவசிக்க வேண்டும்.

எந்த வேலை ஆன்மீக ரீதியாக உங்களுக்குப் பயன் தருமோ அந்த வேலை உங்களுக்குக் கிடைக்க நானே ஏற்பாடு செய்வேன் என்பதையும் 
விசுவசிக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் வழக்கமாக செய்வது என்ன?

"ஆண்டவரே நான் உம்மிடம் விண்ணப்பித்திருக்கும் வேலை எனக்குக் கிடைத்துவிட்டால் முதல் மாதச் சம்பளத்தை உமக்குக் காணிக்கையாகத் தந்து விடுகிறேன்."

உங்களுக்கு என்மேல் இருக்கும் விசுவாசத்தை விட உங்களது காணிக்கையின்மேல் அதிக விசுவாசம் இருக்கிறது.

அதாவது உங்களது காணிக்கையின் மேல் ஆசைப்பட்டு நீங்கள் கேட்டதை நான் தருவேன் என்று நம்புகிறீர்கள்.

உங்களது வருமானத்திலிருந்து காணிக்கை செலுத்துவது நல்ல காரியம் தான்.

கோவிலில் செலுத்தப்பட்ட காணிக்கை பிறர் அன்பு பணிகளுக்காகச் செலவழிக்கப்படும்.

அதைச் செய்யுங்கள்.

ஆனால் அதை உங்களது விண்ணப்பம் கேட்கப்படுவதற்கு நிபந்தனையாக நீங்கள் போடக் கூடாது.

அப்படிப் போட்டால் உங்களுக்கு என் மேல் முழுமையான விசுவாசம் இல்லை என்றுதான் அர்த்தம்."


"இப்போது புரிகிறது ஆண்டவரே.

 நிபந்தனையற்ற நம்பிக்கை,
நிபந்தனையற்ற அன்பு,
நிபந்தனையற்ற சேவை ஆகியவற்றையே நீர் விரும்புகிறீர்.

உம்மிடம் கேட்பது உமக்குச் சித்தம் இருந்தால் கிடைக்கும்,

உம் பெயரால் சொல்வது உமக்குச் சித்தம் இருந்தால் நடக்கும் என்று நூறு சதவீதம் உறுதியாக நம்ப வேண்டும்.

நாங்கள் எதை விரும்பினாலும் எங்களது விருப்பம் அல்ல உமது விருப்பமே எங்களில் நிறைவேற வேண்டும்.

நாங்கள் கேட்டது கிடைத்தாலும் உமது சித்தம்.

கிடைக்காவிட்டாலும் உமது சித்தம்.

நாங்கள் சொன்னது நடந்தாலும் உமது சித்தம்.

நடக்காவிட்டாலும் உமது சித்தம்.

உமது சித்தத்திற்கு முற்றிலும் அடிபணிய எங்களுக்கு வரம் தாரும், ஆண்டவரே."

லூர்து செல்வம்

Wednesday, January 24, 2024

"அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. "(மாற்கு நற்செய்தி 4:31)

"அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. "
(மாற்கு நற்செய்தி 4:31)


இயேசு இறையாட்சியை ஒரு கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார்.
 

அது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியதாக இருந்தாலும் அது முளைத்து வளர்ந்த பின் 

வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்.

இறையரசு ஒரு சிலருக்கு அல்ல, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் உரியது.

இறைவாக்கைக் கேட்டு அதன்படி வாழும் அனைவரும் இறையரசின் உறுப்பினர்கள் .

இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, 
மனுக்குலத்தின் அனைத்து மக்களுக்கும் மீட்பு அளிக்கவே உலகிற்கு வந்தார்.
 
அதற்காகத்தான் தனது சீடர்களை உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்க அனுப்பினார்.


கடுகு மரம் வானத்துப் பறவைகள் அனைத்துக்கும் அடைக்கலம் கொடுக்க காத்துக் கொண்டிருப்பது போல 

இறைமகன் இயேசு உலக மக்கள் அனைவரும் தனது ஆட்சி எல்கைக்குள் வர ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதோடு,

வருபவர்களை ஏற்று அரவணைக்க இருகரம் விரித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இறையாட்சி என்பது எது?

இயேசுவின் ஆட்சி.

இயேசு அன்புமயமானவர், 
இரக்கமே உருவானவர்,
தியாகசீலர்.

ஆகவே இறையாட்சி என்பது 
அன்பின் ஆட்சி,
இரக்கத்தின் ஆட்சி
தியாகத்தின் ஆட்சி.

இயேசு இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தனது சீடர்களை உலகெங்கும் அனுப்பி ஏறக்குறைய 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நற்செய்தியை ஏற்று இயேசுவின் விருப்பப்படி இறையாட்சியை ஏற்றுக்கொண்டவர்களுடைய எண்ணிக்கை 

மொத்த உலக மக்கள் தொகையில் சதவீத கணக்குப்படி அதிகமாக இருந்தாலும்,

இன்னும் இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாதோர் ஏராளமானோர் ‌ இருக்கிறார்கள்.

உலக மக்கள் தொகை ஏறத்தாழ 810 கோடி.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்ட கிறிஸ்தவர்கள் 260கோடி.

அப்படியானால் 550 கோடி மக்கள் இன்னும் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை.

 புள்ளி விபரக் கணக்குப்படி உலகின் மொத்த மக்கள் தொகையில் 32 சதவீதம் பேர் இறை இயேசுவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

மீதமுள்ள 68 சதவீத மக்கள் நிலை என்ன?

அதாவது இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபைக்கு வெளியே உள்ளவர்களுக்கு இறையாட்சி (மீட்பு) உண்டா?

Non-Catholics can be saved, as the Church affirms (CCC 846-48), but we should not presume that this will necessarily happen, lest we fall into the sin of religious indifferentism. Regarding the level of their purgation, God will judge in a mercifully just way in each person’s case (cf. 1 Cor. 3:10-15).

ஒரு சிறிய ஒப்புமை.

நாம் உண்பதற்கு வேண்டிய உணவு விவசாயி பயிரிடும் நிலத்தில் இருந்து தான் வருகிறது.

அப்படியானால் விவசாயம் செய்யாதவர்களுக்கு உணவு கிடைக்காதா?

விவசாயிக்கு நேரடியாகக் கிடைக்கும்.

மற்றவர்களுக்கு அவன் வழியாகக் கிடைக்கும்.

"உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 

 நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்;"
(மாற்கு. 16:15,16)

இவை இயேசுவின் வார்த்தைகள்.

இயேசுவின் சீடர்களால் போதிக்கப்படும் நற்செய்தியை ஏற்று, ஞானஸ்நானம் பெறுபவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள்.

அவர்கள் ஏற்றுக் கொண்ட நற்செய்தியின் படி வாழ்ந்தால் அவர்களுக்கு மீட்பு உறுதி.

தங்களது தவறின்றி (through no fault of their own,)

இயேசுவையும், அவருடைய திருச்சபையையும் அறியாதவர்கள் (do not know Christ and his Church:)

நேர்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேடி,
 இறைவன் அருளால், 
இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கிற மனசாட்சியின் படி வாழ்ந்தால் அவர்களுக்கு  மீட்பு உண்டு.

(but who nevertheless seek God with a sincere heart, and, moved by grace, try in their actions. to do his will as they know it through the dictates of their conscience - those too may achieve eternal salvation.)

உணவுப் பொருளை நாம் எங்கேயிருந்து பெற்றாலும் அது வருவது விவசாயியின் மூலமாகவே.

தங்கள் மனசாட்சியின் படி வாழ்ந்து மீட்புப் பெற்றாலும் அவர்கள் பெற்ற மீட்பு வருவது இயேசுவின் மூலமாகவே.

நமது மீட்புக்காகத் தன்னையே சிலுவையில் பலியாக்கிய இயேசுவின் மூலமாகவே நாம் மீட்புப் பெறுகிறோம்.

இயேசுவின் விருப்பப்படி வாழ்கின்ற அனைவரும் அவரது இறையாட்சியில் வாழ்கின்றவர்களே.

கத்தோலிக்கர்களாகிய நமக்கு இறை மகன் இயேசுவை அனைவருக்கும்  கொடுக்க வேண்டிய கடமையும், உரிமையும் உண்டு.

(We Catholics have the obligation and also the sacred right to evangelize all men.)

"விண்ணகத் தந்தையே,
 உமது ஆட்சி எங்கும் வருக.''

லூர்து செல்வம்

Tuesday, January 23, 2024

இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? (மாற்கு நற்செய்தி 4:21)

21 இயேசு அவர்களிடம், "விளக்கைக் கொண்டு வருவது எதற்காக? மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா? விளக்குத் தண்டின் மீது வைப்பதற்காக அல்லவா? 
(மாற்கு நற்செய்தி 4:21)

கடவுள் ஒளிமயமானவர்.

ஒளிமயமான கடவுள் நம்மை பார்த்து,

"நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்." என்கிறார்.

மனிதரைத் தனது சாயலாகப் படைத்த போது அவர்களோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்புகளில் ஒன்று ஒளி.

அவரால் படைக்கப்பட்ட சூரியனின் ஒளி உலகைச் சார்ந்த ஒளி.

அவர் ஆன்மீக ஒளி.

உலக ரீதியாக பகலில் சூரிய ஒளியை அனுபவிக்கிறோம்.

இரவில் பூமியின் இருண்ட பகுதியில் வாழ்கிறோம்.

இரவில் நெருப்பின் உதவியால் விளக்கை ஏற்றி அதன் ஒளியை அனுபவிக்கிறோம்.

ஆன்மாவைச் சார்ந்த உண்மைகளை விளக்குவதற்கு இயேசு உவமைகளை கூறுவது வழக்கம்.

ஆன்மீக ஒளியை விளக்குவதற்கு ஆண்டவர் உலக ஒளியை ஒப்புமையாகக் கூறுகிறார்.

ஒளியால் தன்னைத் தானே மறைக்க முடியாது.

அது உலகியல் ஒளிக்கும் பொருந்தும்,
ஆன்மீக ஒளிக்கும் பொருந்தும்.

இரவில் நாம் விளக்கில் ஒளியை ஏற்றி, விளக்கை மரக்காலால் மூடி வைக்க மாட்டோம்.

மூடி வைக்கப்பட்ட விளக்கால் யாருக்கும் பயனில்லை.

ஏனெனில் அந்த விளக்கால் இரவின் இருளை அகற்ற முடியாது.

இறைவன் பரிசுத்தமானவர், ஆகவே ஒளிமயமானவர்.

நமது முதல் பெற்றோரை அவர் படைக்கும் போது பரிசுத்தமானவர்களாகப் படைத்தார்.

ஆகவே அவர்கள் கடவுளைப் போலவே ஒளியாக இருந்தார்கள்.

ஆனால் இறைவன் தங்களோடு பகிர்ந்து கொண்ட ஒளியைத் தங்களுடைய பாவத்தினால் இழந்தார்கள்.

மனிதர்கள் பாவத்தினால் இழந்த பரிசுத்தத்தனத்தை, அதாவது, ஒளியை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனு மகனாகப் பிறந்தார்.

ஜென்மப் பாவத்தினால் ஆன்மீக ஒளியின்றிப் பிறந்த நாம் ஞானஸ்நானத்தின் போது இழந்த ஒளியை, அதாவது,  
பரிசுத்தத்தனத்தை மீண்டும் பெற்றோம்.

நம்மிடம் உண்மையான பிறர் அன்பு இருந்தால் நம்மிடம் நல்லது எது இருந்தாலும் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம்.

அப்படியானால் நமது பரிசுத்தத்தனத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பாவமின்றி இருப்பது தான் பரிசுத்தத்தனம்.

பரிசுத்தத்தனத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது எப்படி?

இயேசு நம்மை பரிசுத்தர்களாக மாற்றுவதற்காக, 

அதாவது,

 நம்முடைய பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை பெற்று தருவதற்காக 

அதாவது,

நமது பாவங்களினால் இழந்த ஒளியை மீட்டுத் தருவதற்காக 

பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாகத் தன் தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

அவருடைய மரணத்தினால் நாம் பெற்ற மீட்பின் பயனை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நமக்கு மீட்பைத் தந்த இயேசு கிறிஸ்துவை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

நமது சிந்தனையில் உள்ள இயேசுவை நமது சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அதாவது நமது வாய்மொழியால் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதனாலும்,

முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்க்கையினாலும்

 நமது ஆண்டவரை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும்.

நாம் பரிசுத்தர்களாக வாழும் போது கிறிஸ்து நம்மோடு பகிர்ந்து கொண்ட ஒளி பிரகாசிக்கும்.

கிறிஸ்துவின் ஒளி அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி மெஞ்ஞானத்தை அனைவருக்கும் அளிக்கும்.

மலைமேல் இருக்கும் ஒளி மறைவாயிருக்க முடியாது.

  மனிதர்முன் ஒளிரும் நமது ஒளியாகிய நற்செயல்களைக் கண்டு மற்றவர்கள் நமது விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள். 

நமது நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையால் ஒளிமயமான இயேசுவை அனைவரும் பெற்று பயன் பெறுவார்களாக.

லூர்து செல்வம்.

Monday, January 22, 2024

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. (மாற்கு நற்செய்தி 4:8)ஃ

 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. 
(மாற்கு நற்செய்தி 4:8)

பயிர்த்தொழில் செய்யும் விவசாயி முதலில் தான்  பயிர் செய்யும்  நிலத்தை நன்கு பண்படுத்தி, பக்குவப்படுத்தி 

அதன் பின்பு தான் விதைகளை விதைக்கவோ, நாற்றுக்களை நடவோ செய்ய வேண்டும்.

பயிர் செய்யப்பட வேண்டிய நிலம் பாறை போல் கடினமாக இருக்கக் கூடாது.

கடினமான நிலத்தில் விதைகள் வேரூன்ற முடியாது.

வேரூன்ற  முடியாத விதையால் தளிர் விடவும் முடியாது.

நிலம் முட்செடிகள் நிறைந்ததாக இருக்கக் கூடாது.

விதைகளிலிருந்து வெளிவரும் தளிரை முட்செடிகள் வளர விடாமல் அமுக்கி விடும்.

நமது ஆன்மா இறைவனால் ஆன்மீகப் பயிர்த் தொழில் செய்யப்பட வேண்டிய நிலம்.

இறைவன் நமது ஆன்மாவின் மீது விதைகளாகிய தனது வார்த்தைகளை விதைக்கின்றார்.

இறை வார்த்தைகள் நமது ஆன்மாவில் முளைத்து, தளிர் விட்டு வளர வேண்டுமென்றால் 

நாம் முதலில்  ஆன்மீகப் பயிர் முளைத்து வளர்வதற்கு ஏற்றபடி

 நமது ஆன்மாவை பண்படுத்தி பக்குவப்படுத்த வேண்டும்.

நமது ஆன்மாவில் கடினத் தன்மை இருந்தால் முதலில் அதை இறை வார்த்தைகள் வளர்வதற்கு ஏற்றபடி அதை மென்மையானதாக மாற்ற வேண்டும்.

கடினமான உள்ளத்தவர்களால் இறை வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆண்டவர் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்த காலத்தில் கடின உள்ளம் கொண்டிருந்த பரிசேயர்களாலும், சதுசேயர்களாலும், மறை நூல் அறிஞர்களாலும் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இளகிய உள்ளம் படைத்த சாதாரண மக்கள்தான் இயேசுவின் நற்செய்தியால் பயன் பெற்றார்கள்.

நமது ஆன்மாவில் விதைக்கப்படும் இறை வார்த்தை முளைத்து வளர்ந்து பலன் தர வேண்டும் என்றால்,

 இறையன்புக்கு எதிரான
முள் செடிகளுக்குச் சமமான, எண்ணங்கள் நமது உள்ளத்தில் இருக்கக் கூடாது.

இறைவனை முழுமையாக அன்பு செய்பவர்கள் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.

உலகப் பொருட்களின் மீது இருக்கும் பற்று, 
சகுனம் பார்த்தல், 
நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்தல் 
குறி பார்த்தல் ஆகியவை போன்ற குருட்டு நம்பிக்கை உள்ளவர்களுக்கு இயேசுவின் மேல் உண்மையான அன்போ நம்பிக்கையோ இருக்காது.


திருமணம் ஒரு திரு அருட்சாதனம். இயேசுவால் ஏற்படுத்தப்பட்டது. திருமண வாழ்வை ஆசீர்வதிக்க வேண்டியவரும் அவர்தான்.

அவரால் படைக்கப்பட்ட நாம் அவரால் திட்டமிடப்பட்ட நேரத்தில் பிறந்து, வாழ்கிறோம்.

நாம் நேரம் பார்த்து பிறக்கவில்லை.

ஆனால் படைக்கப்படாத ஜாதகத்தைப் பார்த்து பெண்ணையோ மாப்பிள்ளையையோ நிச்சயிப்பதோடு,

நல்ல நேரம் பார்த்து திருமண நாளை நிச்சயித்தால்

நமக்கு இயேசுவின் மீதும் அவரால் படைக்கப்பட்ட நேரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

நமக்கு இறைவன் மீது உண்மையான அன்பு இருந்தால் அவர் மீது முழுமையான நம்பிக்கையும் இருக்கும்.

நமது குருட்டு நம்பிக்கையின் அடிப்படையில் திருமணத்தை நிச்சயத்து விட்டு திருமண வாழ்க்கையின் ஆசீர்வாதத்தை நம்மைப் படைத்தவரிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

இறையன்பின் அடிப்படையில் அவரது விருப்பப்படி நாம் நமது வாழ்க்கையை நிச்சயித்தால்தான் அவரது ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.

நமது ஆன்மாவில் குருட்டு நம்பிக்கைகளாகளாகிய முள் செடிகள் இருந்தால் இறை வார்த்தை நமக்கு எந்த பலனும் தராது.

ஆகவே நமது ஆன்மாவிலிருந்து இறைவனுக்கு விருப்பமில்லாத எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் அப்புறப்படுத்தி விட்டு 

இறைவன் மீது உள்ள நம்பிக்கையோடு இறை வார்த்தையை வாசித்து 
ஆன்மாவில் விதைத்துப் பயன்பெறுவோம்.

பண்படுத்தப்பட்ட நிலத்தில் விதையை விதைத்து

 அது முளைத்து தளிர் விடும்போது அது வளர்ந்து பலன் தருவதற்குத் தேவையான உரத்தை  அடிக்கடி போட்டுக் கொண்டிருப்போம்.

இறைவார்த்தையாகிய விதையிலிருந்து முளைத்த ஆன்மீகப் பயிர் வளர ஆண்டவரின்  அருள் உரத்தை இட்டு  அருள் நீரைப் பாய்ச்சவேண்டும்.

பக்தி நிறைந்த ஜெபத்தின் மூலமாக இறைவனின் அருள் வரத்தை ஈட்ட வேண்டும்.

பயிர் வளர்ந்து வரும் போது பாவம் என்னும் களை முளைத்தால் அதை பாவ சங்கீர்த்தனம் என்னும் களை கொத்தியால் அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கண்ணும் கருத்துமாக நமது ஆன்மீகப் பயிரை வளர்த்தால் நமக்கு 100 மடங்கு பலன் கிடைக்கும்.


பண்படுத்தப்பட்ட ஆன்மாவில் விழுகின்ற  இறை வார்த்தைகளில் ,

பண்படுத்தப்படும் அளவுக்கு ஏற்ப,

 சில  முப்பது மடங்காகவும்

 சில  அறுபது மடங்காகவும் 

சில  நூறு மடங்காகவும்

 விளைச்சலைக் கொடுக்கின்றன. 

பரிசுத்தமான உள்ளத்தோடு இறை வார்த்தைகளை வாசித்து பயன்பெறுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, January 20, 2024

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். (மாற்கு நற்செய்தி 1:15)

காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" என்று அவர் கூறினார். 
(மாற்கு நற்செய்தி 1:15). 

காலம் நிறைவேறிவிட்டது.

கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர், நித்தியர்.

நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றி வலம் வரும் கிரகங்கள் ஆகியவை கடவுளால் படைக்கப்பட்டதிலிருந்து நாம் வாழும் பிரபஞ்சத்தின் காலம் ஆரம்பமானது.

மனித குலத்தைப் பொறுத்த மட்டில் நமது வரலாற்றின் காலம் ஆதாம் படைக்கப்பட்ட வினாடியிலிருந்து ஆரம்பமானது.

நமது முதல் பெற்றோர் இறைவனது கட்டளையை மீறி பாவம் செய்ததால் இறைவனோடு அவர்களுக்கு இருந்த ஆன்மீக உறவு முறிந்தது.

ஆனாலும் இரக்கமே உருவான இறைவன் மனிதர்களை மீட்க மீட்பரை அனுப்பப் போவதாக அவர்களுக்கு வாக்களித்தார்.

இறைமகன் மனு மகனாக உருவெடுத்தது வரை உள்ள காலம் எதிர்பார்ப்பின் காலம்.

இறைமகன் அன்னை மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த வினாடியில் எதிர்பார்ப்பின் காலம் நிறைவேறியது.

இறையாட்சி நெருங்கி வந்து விட்டது.

மனித குலம் தனது பாவத்தினால் இழந்த இறையரசை மீட்டுத் தர இயேசு மனிதனாகப் பிறந்தார்.

இயேசு நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தபோது 

"இறையாட்சி நெருங்கி வந்து விட்டது." 

என்ற செய்தியோடு இயேசு நற்செய்தியைப் போதிக்க ஆரம்பித்தார்.  

இறையாட்சியின் இறைவன் இயேசுவே.

அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு, சிலுவையில் தன்னைப் பலியாக ஒப்புக்கொடுக்கும் வினாடியில் இறையாட்சி முழுமையாக மனித குலத்துக்குள் வந்துவிடும்.

அதாவது மனித குலம் தனது பாவத்திலிருந்து மீட்பு பெறுவதற்கான காலம் வந்துவிடும்.

அதற்கு இயேசு பொது வாழ்வுக்குள் வந்த நேரத்திலிருந்து மூன்று ஆண்டுகளே இருந்தன.

அதனால் தான் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்றார்.

அதற்கு ஆயத்தமாக மனிதர்கள் மனம் மாற வேண்டும்,

மனம் மாற வேண்டும் என்றால் இயேசுவின் நற்செய்தியை நம்ப வேண்டும்.

இந்த வார்த்தைகளோடு தான் இயேசு தனது நற்செய்தி அறிவிக்கும் பணியை ஆரம்பித்தார்.

நாம் இப்போது இறையாட்சியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதாவது இறையரசின் குடி மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

We are the citizens of the kingdom of God.

இயேசுவின் சீடர்களால் நமக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியை ஏற்று மனம் மாறி ஞானஸ்நானம் பெற்ற வினாடியிலிருந்து இறையரசின் குடி மக்களாக வாழ்கிறோம்.

நெருங்கி வந்துவிட்டது என்று இயேசு சொன்ன இறையாட்சி இப்போது நமக்குள் இருக்கிறது, நாம் அதற்குள் இருக்கிறோம்.


நாம் இறையரசின் குடி மக்களாக வாழ வேண்டுமென்றால் முதலில் மனம் மாற வேண்டும்,

அடுத்து நற்செய்தியின் படி வாழ வேண்டும்.

நற்செய்தியை நம்புவது அதை வாழ்வதற்காகத்தான்.

நாம் அநேக சமயங்களில் சொல்கிறபடி செய்வதில்லை.

இயேசு இப்போது நம்மிடம் வந்து "நான் கேட்டுக் கொண்டபடி மனம் மாறியிருக்கிறீர்களா?" என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

"மாறியிருக்கிறோம்" என்றுதான் சொல்வோம்.

உண்மையிலேயே மனம் 
மாறியிருக்கிறோமா?

மனம் மாறினால் வாழ்க்கையும் மாற வேண்டுமே?

நமது வாழ்க்கை மாறியிருக்கிறதா?

இப்போது நண்பர்கள் ஒரு கேள்வி கேட்கலாம்.

நாங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது குழந்தைகளாக இருந்தோம்.

எங்களது ஆன்மீக வாழ்க்கை அப்போதுதான் ஆரம்பித்தது.

மாறுவதற்கு எங்கள் மனதில் என்ன இருந்தது?

நியாயமான கேள்வி.

குழந்தைகளாக இருந்த நாம் உடல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர ஆரம்பித்தோம்.

வளர்ந்து கொண்டிருக்கிறோம்.

மாற்றம் இல்லையேல் வளர முடியாது.

ஒவ்வொரு வினாடியும் நமது உடல் மாறிக்கொண்டு தான் இருக்கிறது.

மாற்றத்தின் காரணமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் ஆன்மீக ரீதியாக 

மாற்றம் நமது ஆன்மீக வளர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம்,

 தளர்ச்சிக்கும் காரணமாக இருக்கலாம்.

குழந்தைப் பருவத்தில் எப்படி இருந்தோம் என்பதைப் பற்றி இப்போது நமக்குக் கவலை இல்லை.

நேற்று எப்படி இருந்தோம் என்பது நமக்குத் தெரியும்.

இன்று எப்படி இருக்கிறோம் என்பதும் நமக்குத் தெரியும்.

நேற்று இருந்த நமது ஆன்மீக நிலைக்கும், 

இன்று இருக்கும் நமது ஆன்மீக நிலைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

நேற்று நம்மிடம் இருந்த குற்றம் குறைகளிலிருந்து விடுதலை பெற்று,

இன்று புண்ணியங்கள் செய்திருந்தால் நாம் வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.

குற்றம் குறைகள் 
அதிகமாகியிருந்தால் நாம் தளர்ச்சி அடைந்திருக்கிறோம்.

இதை நாம் கண்டு பிடிப்பதற்காகத்தான் ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதும் இரவில் தூங்கப் போகும் போதும் ஆன்மப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஆன்மீகவியலார் கூறுகின்றார்கள்.

நேற்று பயன்படுத்தப்பட வேண்டிய நேரத்தை வீண் கற்பனைகளில் செலவழித்திருக்கலாம்.

காலையில் செய்யும் ஆன்ம பரிசோதனையில் இதைக் கண்டுபிடித்தால் 

இன்று நேரத்தை ஆன்மீக ரீதியில் பயனுள்ள முறையில் செலவழித்து ஆன்மீகத்தில் வளரலாம்.

நேற்று ஒருவருக்கு உதவி செய்திருந்தால் இன்று இருவருக்கு உதவி செய்து பிறரன்பில் வளரலாம்.

ஒவ்வொரு நாளும் நமது ஜெப நேரத்தை அதிகரித்து ஆன்மீக வாழ்வில் வளரலாம்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் 
 நேற்று இருந்த அதே நிலையில் மாற்றம் இன்றி இன்று இருக்க முடியாது.

No status quo in spiritual life.

ஒன்று வளர்ந்திருப்போம், அல்லது தளர்ந்திருப்போம்.

ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் ஆன்ம பரிசோதனையின் போது நாம் பெற்றது வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா என்பதைக் கண்டுபிடித்து மறுநாள் வளர முயற்சி செய்ய வேண்டும்.

கடவுள் மட்டும் மாறாதவர், ஏனெனில் அவர் அளவில்லாதவர்.

நாம் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை நோக்கி மாறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு ஒரே வழி இயேசுவின் நற்செய்தியை அறிந்து அதை வாழ்வாக்குவது தான்.

இப்போது இயேசு நம்மிடம் சொல்கிறார்,

நற்செய்தியை அறியுங்கள்,
மனம் மாறுங்கள்,
இறையரசின் குடிமக்களாய் வளருங்கள்.

தினமும் நற்செய்தியை வாசிப்போம்.

தினமும் மனம் மாறுவோம்.

ஆன்மீகத்தில் வளர்ந்து 
கொண்டேயிருப்போம்.

லூர்து செல்வம்.

Friday, January 19, 2024

அவர் மதிமயங்கிவிட்டார். என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். They said, "He is out of his mind "(Mark 3:21)

அவர் மதிமயங்கிவிட்டார்.
 என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
 They said, "He is out of his mind "
(Mark 3:21)

"'ஏன் தம்பி, பிரசங்க நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தாய்?"

"சாமியார் மணிக்கணக்காகப் பிரசங்கம் வைத்தால் தூங்காமல் என்ன செய்வார்கள்?"

"'மணிக்கணக்காகவா? நீதான் பிரசங்கம் ஆரம்பிக்கும் போதே தூங்க ஆரம்பித்து விட்டாயே!

நீ இழந்தது சாமியாரின் பிரசங்கத்தை அல்ல, இயேசு ஆண்டவரின் வார்த்தைகளை ."

"நான் ஒண்ணும் இழக்கவில்லை.

இயேசு ஆண்டவரின் வார்த்தைகள் என்னுடைய பைபிளிலும் இருக்கின்றன. எனக்கு நேரம் கிடைக்கும் போது வாசித்துக் கொள்வேன்." 

"'திருப்பலியின்போது கிடைத்தது நேரமில்லையோ?

சுவாமியார் இறை வசனங்களுக்கு விளக்கம் சொன்னார். 

விளக்கத்தைக் கேட்டபின் வீட்டிற்குப் போய் வாசித்தால் வசனம் விளங்கும்.

நீ  பள்ளிக்கூடத்துக்கு போனதில்லையா?

வகுப்பில் ஆசிரியர் கூறிய பாட விளக்கத்தை நன்கு கேட்ட பின்  வீட்டில் போய் பாடத்தை படித்தால் நன்கு விளங்கும்.

ஆசிரியருடைய உதவி இல்லாமல் நீயாகவே படித்தால் என்ன விளங்கும்?

பைபிளை கத்தோலிக்கத் திருச்சபையின் உதவி இல்லாமல் தாங்களாகவே படித்து தங்களுக்கு இஷ்டப்பட்ட பொருளைக் கொடுப்பதினால்தான் இன்று உலகில் ஆயிரக்கணக்கான பிரிவினை சபைகள் பிறந்து கொண்டிருக்கின்றன."

"நான் வாசிக்கும் வசனங்களுக்கான விளக்கத்தை பரிசுத்த ஆவி கொடுப்பார்."

"'பரிசுத்த ஆவி தான் உன்னை கோவிலில் போய் பிரசங்க நேரத்தில் தூங்கு என்று சொன்னாராக்கும்.

இன்றைக்கு நீ எப்போது பூசைக்கு வந்தாய்?"

''நான் வந்த போது முதல் வாசகம் முடிந்து விட்டது."

"'அப்போ முழு பூசை காணவில்லை.
அதிலும் பிரசங்க நேரத்தில் தூக்கம்.

எட்டு மணி பூசைக்கு ஏழே முக்காலுக்கே வந்து விட வேண்டும் என்று சாமியார் சொன்னது ஞாபகத்தில் இல்லையா?"

"சாமியார் சொல்லுவார். 
அவருக்கென்ன.

 வேலை இல்லை, கோவிலிலேயே இருக்கிறார். இஷ்டப்பட்ட நேரத்தில் வந்து கொள்ளலாம்.

 நான் அப்படியா? வேலை பார்த்தால்தான் சாப்பாடு.

காலையில் இருக்கிற வேலையை முடித்துவிட்டுத் தானே கோவிலுக்கு வர முடியும்."

"' படிக்கிற காலத்தில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் முன் போவாயா?
 ஆரம்பித்த பின் போவாயா?"

"ஆரம்பித்த பின் போனால் அடி கிடைக்கும், ஆகவே சீக்கிரமே போய்விடுவேன்."

"'அப்போ பூசை துவங்குமுன்பே கோவிலுக்கு வர வேண்டுமென்றால் உன்னை யாராவது அடிக்க வேண்டும், அப்படித்தானே?

ஞாயிறு பூசைக்குப் பிந்தி வருவது பாவம். அதுவே ஒரு அடி தானே.

திருமண வீட்டில் விருந்துக்குப் போகும் போது இலை போடும் முன் பந்தியில் இருக்க வேண்டும்.

 இலை எடுக்கும் போது போனால் சாப்பாடு கிடைக்காது.

திருப்பலிக்குப் பிந்திப் போனால் திருப்பலியினால் கிடைக்க வேண்டிய அருள் வரங்கள் கிடைக்காது.

அழுக்குப் போகாமல் குளித்தால் சுத்தம் எப்படி கிடைக்கும்?

பிரசங்க நேரத்தில் ஏன் தூங்குகிறாய் என்று கேட்டால் பிரசங்கம் வைப்பவரைக் குறை சொல்கிறாய்.

பூசை துவங்கும் முன்னாலேயே ஏன் வரவில்லை என்று கேட்டால் சாமியாருக்கு வேலை இல்லை என்கிறாய்.

நமது ஆன்மீக வாழ்வுக்காக தங்களையே அர்ப்பணித்து வாழும் குருக்களை விமர்சனம் செய்வது சிலருக்கு பொழுது போக்காகி விட்டது.

இப்படிப்பட்டவர்கள் இப்போது மட்டுமல்ல இயேசுவின் காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் இயேசுவையே விடவில்லை."

"என்ன சொல்கிறீர்கள்? இயேசுவை அவர்கள் என்ன செய்தார்கள்?"

"'இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?"

"நமக்குப் பாவத்திலிருந்து விடுதலைதர உலகுக்கு வந்தார்."

"'நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய பாடுகள் படுவதற்கு முன்னாலேயே 

மூன்று ஆண்டுகள் அவர் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்ததோடு சென்ற இடம் எல்லாம் அவர்களுக்கு நன்மையையே செய்து வந்தார்.

நோயாளிகளைக் குணமாக்கினார்.

பார்வையற்றவர்களுக்கு பார்வை கொடுத்தார்.

முடக்கு வாதக்காரர்களை நடக்க வைத்தார்.

சூம்பிய கையர்களின் கைகளைக் குணமாக்கினார்.

பேய் பிடித்தவர்களை பேயிலிருந்து விடுவித்தார்.

இப்படி சென்றவிடமெல்லாம் நன்மையே செய்து வந்த அவரை

மறை நூல் அறிஞர்கள் எப்படி விமர்சித்தார்கள் தெரியுமா?"

 "இவனைப் பெயல்செபு பிடித்திருக்கிறது. 

 பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்று விமர்சித்தார்கள்.

 மக்கள் எப்படி விமர்சித்தார்கள், தெரியுமா?

 அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்."

"புத்தி கெட்ட மக்கள்.

கடவுள் பேய்த் தலைவனின் உதவியினால்  பேயை ஓட்டினார் என்றும்,

அவர் மதி மயங்கி இருக்கிறார் என்றும் சொல்பவர்களுக்கு எப்படி புத்தி இருக்கும்?"

"' இயேசுவுக்குத் தெரியும்,

காய்த்திருக்கும் மரத்தின் மேல் தான் கல்லெறி விழும் என்று.

மக்கள் அவரை எப்படி விமர்சித்தாலும் அவர் தொடர்ந்து அவர்களுக்கு நன்மையை மட்டுமே செய்து வந்தார்.

விமர்சனங்கள் அவரை எதிர்மறையாகப் பாதிக்கவில்லை.

தனக்கு மட்டுமல்ல,

 எதிர்காலத்தில் தனது பணியை செய்யவிருக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் தனக்கு கிடைத்தது போலவே விமர்சனங்கள் கிடைக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.

அவர்கள் தன்னைப் போலவே விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும்,

 அவர்களுக்கு நன்மையையே செய்ய வேண்டும் 

என்று அறிவுறுத்துவதற்காகவே அவர் முன்மாதிரிகையாக நடந்து காட்டினார்.

இன்று நமது குருக்களுக்கு உன்னைப் போன்ற ஆட்களிடமிருந்து கிடைக்கும் விமர்சனங்கள் ஏற்கனவே இயேசுவுக்குக் கிடைத்தவை தான்.

இதை நன்கு அறிந்த நமது குருக்கள் யார் எப்படி விமர்சித்தாலும் தங்களது ஆன்மீகப் பணியை தொடர்ந்து நல்ல முறையில் செய்து வருகின்றார்கள்.

காற்றடிக்கப்பட்ட பந்தை தரை மீது வீசினால் அது மேல் நோக்கி எழும்பும்.

கடவுளின் அருளைப் பெற்று பணிபுரியும் அவரது சீடர்களை மக்களது விமர்சனங்கள் கீழ்நோக்கி அடித்தால் அவர்களது  பணி மேலும் மேலும் சிறக்கும்."

"மன்னிக்க வேண்டுகிறேன்.

நான் செய்த தவறுக்கு மற்றவர்கள் மீது பழியைப் போடுவது தவறுதான்."

"'நீ மன்னிப்புக் கேட்க வேண்டியது கடவுளிடம். ஏனெனில் நீ விமர்சித்தது அவருடைய சீடர்களை.

யார் இயேசுவின் சீடர்களுக்குச் செவி கொடுக்கிறார்களோ அவர்கள் இயேசுவுக்கே செவி கொடுக்கிறார்கள்.

யார் இயேசுவின் சீடர்களை விமர்சிக்கின்றார்களோ அவர்கள் இயேசுவையே விமர்சிக்கின்றார்கள்."

லூர்து செல்வம்.

Wednesday, January 17, 2024

பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;(மாற்கு. 1:13)

 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்;
(மாற்கு. 1:13)

இறைமகன் இயேசு கடவுள். பாவமே செய்ய முடியாதவர்.

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே அவர் மனு மகனாகப் பிறந்ததால் 

நாம் செய்த பாவங்களின் சுமையை அவரே சுமந்து,

பாவிகள் பெறவேண்டிய ஞானஸ்நானத்தைப்

பரிசுத்தராகிய அவர் பெற்றதுமன்றி,

நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் பாலை நிலத்தில் 40 நாள் நோன்பிருந்தார்.

நமக்குப் பாவச் சோதனைகள் ஏற்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காக,

 தன்னையே பசாசின் சோதனைக்கு உட்படுத்தினார்.

நமது பாவங்களை மன்னிப்பதற்காக இறைமகன் மனு மகனாகப் பிறப்பார் என்ற உண்மை சாத்தானுக்குத் தெரியும்.

அவர் பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததும் அவனுக்கு தெரியும்.

நாம் பாவமன்னிப்புப் பெறுவதை தடுப்பதற்காக சாத்தான் அவரை குழந்தைப் பருவத்திலேயே கொன்று விட தீர்மானித்தான்.

ஏரோது மன்னன் மூலமாக அதை நிறைவேற்றத் தீர்மானித்தான்.

ஆனால் அதில் அவன் தோல்வியடைந்தான்.

அதன் பின் 30 ஆண்டுகள்  ஒரு சாதாரண மனிதன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்வதைப் போல இயேசுவும் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

முப்பதாவது வயதில் இயேசு யோர்தான் நதியில் அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெற்றபோது,

அவர்தான் மனு மகனாகப் பிறந்த இறை மகனா என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளச் சாத்தான் தீர்மானித்தான்.

அதற்காகவே இயேசு 40 நாள் பாலைவனத்தில் நோன்பு இருந்தபின் அவரைச் சோதித்தான்.

அவர் இறை மகனா என்பதை உறுதி செய்து கொண்டு,

அவர் மனிதருக்கு பாவ மன்னிப்புக் கொடுப்பதற்கு முன் அவரைக் கொன்று விட வேண்டும் என்பது அவனுடைய திட்டம்.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே"

என்று இயேசு சொன்னவுடன் அவர்தான் மனு மகனாகப் பிறந்த இறைமகன் என்பதை உறுதி செய்து கொண்டான்.

எங்கே பாவம் இருக்கிறதோ அங்கே புத்தி வேலை செய்யாது என்பதற்கு சாத்தான் ஒரு சான்று.

இறைமகன் மனுமகனாகப் பிறந்து மனிதருக்குப் பாவ மன்னிப்பு அளிப்பார் என்ற விவரம் மட்டும்தான் அவனுக்குத் தெரியும்.

அவர் பாடுகள் பட்டு,
 சிலுவையில் தனது உயிரைப் பலியாகக் கொடுத்து 
பாவப் பரிகாரம் செய்து
 பாவங்களை மன்னிப்பார் 
என்ற உண்மை அவனுக்குத் தெரியாது.

அதனால் தான் அவர் மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கு முன் அவரைக் கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தான்.

அதற்காகத்தான் பரிசேயர்களையும் ,
சதுசேயர்களையும்,
 மறை நூல் அறிஞர்களையும்
 யூதாசையும் தனது கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டான்.

இயேசுவைப் பாடுகளுக்கு உட்படுத்தி, சிலுவையில் அறைந்து கொன்றதின் மூலம்,

எதைத் தடுக்க ஆசைப்பட்டானோ அதை நிறைவேற்ற அவனே தன்னை அறியாமல் உதவி செய்தான்.

கடவுள் தீமையை அனுமதித்ததே அதிலிருந்து மிகப்பெரிய நன்மையை வெளிக் கொண்டு வருவதற்காகத் தான் என்ற உண்மை சாத்தானுக்குத் தெரியாமல் போனதில் ஆச்சரியம் இல்லை.

ஏனெனில் பாவம் இருக்கும் இடத்தில் புத்தி வேலை செய்யாது.

இயேசு தான் சோதிக்கப்படுவதற்கு சாத்தானுக்கு அனுமதி கொடுத்தது அதன் மூலம் நமக்கு ஒரு முக்கியமான ஆன்மீகப் பாடம் கற்பிப்பதற்காகத்தான்.

சோதனை பற்றிய வசனங்களை வாசித்து,

 தியானித்துப் பார்த்தால் இது புரியும்.

இயேசு தனது நற்செய்திப் பணியை ஆரம்பிக்கும் முன் சோதிக்கப்பட்டார்.

நற்செய்தி பணி செய்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு புரிய வைப்பதற்காகச்
 சோதிக்கப்பட்டார்.

40 நாட்கள் நோன்பிருந்தபின் இயேசு பசியாக இருந்தார்.

அவரது பசியை  அவரைச் சோதிப்பதற்குத் தனக்கு சாதகமாக சாத்தான் பயன்படுத்திக் கொண்டான்.

ஒரு கல்லை எடுத்து அவரிடம் காண்பித்து,

"நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றான். 

நற்செய்தி பணியாளர்களுக்கு இறைவனின் வார்த்தை தான் உணவு. ஆன்மீக உணவு.

தங்களுக்குக் கிடைத்த ஆன்மீக உணவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தான் நற்செய்திப் பணி.

சாத்தானுக்கு அவர்கள் நற்செய்திப் பணி புரிவது பிடிக்காது.

அதைத் தடுப்பதற்காக இந்த உலகைச் சார்ந்த உணவை, உலக வசதிகளை சாத்தான் அவர்களுக்குக் காண்பித்து, தங்கள் பணியின் மூலம் அவற்றைத் தேடச் சோதிப்பான்.

இயேசு மறுமொழியாக, "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.

நற்செய்தி பணியாளர்கள் உலகைச் சார்ந்த உணவுக்காகவும் வசதிகளுக்காகவும் நற்செய்தி பணியைச் செய்யக்கூடாது 
என்பதைப் புரிய வைப்பதற்காக,

அவர்கள் உலகைச் சார்ந்த உணவினால்  வாழவில்லை, 

இறை வார்த்தையினால்தான், தங்களது ஆன்மீக வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்கிறார்.

உலகைச் சார்ந்த பணிபுரிவோர் தங்களது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக செல்வத்தைச் சேர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

 ஆனால் ஆன்மீகப் பணியாளர்கள் தங்களுடையவும், மற்றவர்களுடையவும் ஆன்மீக வளர்ச்சிக்காக உழைக்கிறார்கள்.

உழைக்க ஆன்மீக சக்தியைக் கொடுப்பது இறை வார்த்தைதான்.

 கையில் பைபிளை மட்டும் வைத்துக் கொண்டு, காணிக்கை பிரிப்பதை மட்டுமே மையமாகக் கொண்டு நற்செய்தியை அறிவிக்கும்  நமது பிரிவினை சகோதரர்களுக்கு ஆண்டவரின் வார்த்தை ஒரு பாடம்.

பின்பு சாத்தான் அவரை அழைத்துச் சென்று உலகத்தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் அவருக்குக் காட்டி, 


"நீர் என்னை வணங்கினால்
இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். " என்றான்.

உலக நாடுகளில் தங்களது புகழ் பரவ வேண்டும் என்பதற்காக,

அதாவது சுய புகழுக்காக,

நற்செய்தி பணி ஆற்ற வேண்டும் என்று சாத்தான் சோதிக்கிறான்.

இயேசு அவனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக" என்று மறைநூலில் எழுதியுள்ளது" என்றார்.

நம்மைப் படைத்த கடவுளை ஆராதிப்பதும், அவர் ஒருவருக்கே பணி புரிவதும்தான் நற்செய்திப் பணியில் நோக்கம் என ஆண்டவர் பதில் சொல்கிறார்.

நற்செய்திப் பணியாளர்கள் உலகத்தில் புகழ் பெறுவதற்காக அல்ல,

இறைவனின் அதிமிக மகிமைக்காகவே பணிபுரிய வேண்டும் என்று சொல்கிறார்.

பின்னர் சாத்தான் அவரை எருசலேம்  கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 
  
தேவ தூதர்கள் உமது கால் கல்லில் மோதாதபடி  தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது"  என்றான்.

இயேசு அவனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே" என்றார்.

கோவில் கோபுரத்தின் உச்சியிலிருந்து யாதொரு தீங்கும் ஏற்படாதபடி கீழே குதிப்பது ஒரு வீர சாகசச் செயல்.

 தங்களது திறமைகளை மக்களுக்குக் காண்பிப்பதற்காக நற்செய்தி பணி ஆற்றுபவர்கள் செயல்படக்கூடாது.

நற்செய்திப் பணியாளருக்கு பேச்சாற்றல் இருக்கலாம்.

ஆனால் அந்த ஆற்றலை மக்களுக்குக் காண்பிப்பதற்காக பணி புரியக் கூடாது.

தாழ்ச்சியுடன் இறைவாத்தையை அறிவிப்பதற்காகப் பணி புரிய வேண்டும்.

தான்  நற்செய்திப் பணியைத் துவங்குமுன் இந்த சோதனைக்குத் தன்னை உட்படுத்தியதன் மூலம்  

நற்செய்திப் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய குண நலன்கள் பற்றி இயேசு பாடம் எடுக்கிறார்.

"உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்'' என்று இயேசு சொன்னவுடன் அவர் இறை மகன்தான் என்பதை சாத்தான் உறுதி செய்து கொண்டான்.

இயேசுவின் போதனைப்படி நற்செய்தி பணியாளர்கள் எப்படி இருக்கக் கூடாது?

உலகைச் சார்ந்த உணவின் மீது பற்றுள்ளவர்களாகவும்,

உலக செல்வத்தின் மீது ஆசை உள்ளவர்களாகவும்,

தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருக்கக் கூடாது.

எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?

ஆன்மீக உணவின் மீது மட்டும் பற்று உள்ளவர்களாகவும்,

அருள் செல்வத்தை மட்டும் தேடுபவர்களாகவும்,

தாழ்ச்சி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்த மூன்று குணங்களும் உள்ளவர்களால்தான் தங்களை நற்செய்தி பணிக்கு முற்றிலுமாக அர்ப்பணிக்க முடியும்.

திருமுழுக்குப் பெற்று, இயேசுவின் சீடர்களாக மாறிய நாம் அனைவரும் நற்செய்திப் பணியாளர்கள் தான்.

சாத்தான் இயேசுவைச் சோதிப்பதற்கு பைபிள் வசனங்களைத்தான் பயன்படுத்துகிறான்.

இயேசு அவனுக்குப் பதில் சொல்வதற்கு  பைபிள் வசனங்களைத்தான் பயன்படுத்துகிறார்.

இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கையில் பைபிளை வைத்திருப்பவர்கள் எல்லாம் போதகர்கள் அல்ல.

உண்மையில் நமது பிரிவினைச் சபையினர் நம்மை சோதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவிலிருந்து அப்போஸ்தலிக்கப் பாரம்பரியம் வழியாக வந்த கத்தோலிக்க நற்செய்தி பணியாளர்கள் தான் உண்மையான போதகர்கள்.

இதை மனதில் வைத்துக் கொண்டு நமது பிரிவினைச் சகோதரர்கள் மட்டில் கவனமாக இருப்போம்.

இறைவனது மகிமைக்காக மட்டும் நற்செய்திப் பணியாற்றுவோம்.

லூர்து செல்வம்.

என் ஜெபம் கேட்கப்படவில்லை!

என் ஜெபம் கேட்கப்படவில்லை!

"ஏண்டா, பேரப்பிள்ளை சோகமா இருக்க?"

"'கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நமது ஆண்டவர் சொன்னார்ல,

என் மேலே அவருக்கு என்ன கோபமோ தெரியல, நான் கேட்டதைத் தரமாட்டேங்கிறாரு."

"'கடவுளுக்கு யார் மேலேயும்  கோபமே வராது.

பொறுமைக்கு எதிர்க் குணம் தான் கோபம்.

கடவுள் அளவு கடந்த பொறுமை உள்ளவர்.

உலகம் போகிற போக்கிற்கு அவருக்கு கோபம் வருவதாக இருந்தால் இதற்குள் உலகத்தை ஒன்றுமே இல்லாததாகச் செய்திருப்பார்.

உன்னுடைய அப்பா சொன்ன ஒரு சொல்லை நீ கேட்காவிட்டால் உனக்கு அடி கிடைக்கும்.

ஆனால் கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் நாம் பாவம் மேல் பாவம் செய்து கொண்டேயிருக்கிறோம்.

வருடக்கணக்காக தொடர்ந்து பாவங்கள் செய்து கொண்டேயிருந்தாலும் நாம் அவரிடம் திரும்பி வருவதற்காகப் பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்."

"அப்போ என் ஜெபத்தை ஏன் அவர் கேட்கவில்லை?"

"'நீ அவரிடம் என்ன கேட்டாய்?"

"கல்லூரிப் படிப்பில் முதல்தர மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றிருக்கிறேன்.

உடனே நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டியிருக்கிறேன்.

இதுவரை ஒன்றன்பின் ஒன்றாக மூன்று வேலைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

ஆனால் ஒரு வேலையும் கிடைக்கவில்லை."

"'உன்னைப் படைத்தவர் கடவுள்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறாயா?"

"இதென்ன, தாத்தா, கேள்வி? இது கூடவா எனக்குத் தெரியாது?"

'''நீ ஒரு பொருளை வாங்கும் போது அதைப் பயன்படுத்துவதற்கென்று ஒரு திட்டம் வைத்திருப்பாய் அல்லவா?"

''முதலில் திட்டத்தைப் போட்டு விட்டுதான் பொருளை வாங்குவேன்."

'"உன்னைப் படைப்பதற்கு முன் கடவுள் உனக்கென்று ஒரு திட்டம் போட்டிருப்பார் அல்லவா?"

''உறுதியாக. ஆனால் அவர் என்ன திட்டம் போட்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது."

"'அவர் திட்டப்படி தான் 
நீ பிறந்திருக்கிறாய், வளர்ந்திருக்கிறாய், 
பள்ளிக்கூடப் படிப்பில் வெற்றி பெற்றிருக்கிறாய்,

அவர் திட்டப்படி உனக்கு வேலை கிடைக்கும்.

உனக்கு உனது கடந்த காலம் மட்டும் தெரியும்.

நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருப்பது மட்டும் தெரியும்.

எதிர்காலத்தில் உனக்கு என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

உனது முழுமையான வாழ்க்கை வரலாறே கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

உனக்கு என்ன வேலை கிடைக்க வேண்டும், 

எப்போது கிடைக்க வேண்டும் என்பது கடவுளுடைய திட்டத்தில் இருக்கும்.

முயற்சி செய்ய வேண்டியது நீ. 
பலனைக் கொடுக்க வேண்டியது கடவுள்.

நீ விண்ணப்பித்திருக்கும் வேலைகள் உனது வாழ்க்கையின் வெற்றிக்கு உதவாது என்று கடவுளுக்குத் தெரிந்திருக்கலாம்.

என்ன வேலை உதவும் என்று கடவுளுக்குத் தெரியும்.

முயற்சியையும் விடாதே, ஜெபத்தையும் விடாதே.

உனக்குப் பொருத்தமான வேலை கிடைக்கும்."

"எனக்கு என்ன வேலை உதவுமென்று கடவுளுக்குத் தான் தெரியுமே, பிறகு ஏன் நான் ஜெபிக்க வேண்டும்?"

"' நீ  ஏதாவது கேட்பதற்காகத் தான் உனது பெற்றோருடன் பேசுவாயா?"

"எனது அன்பைத் தெரிவிப்பதற்காகவும்,

அவர்களோடு எனது உறவை வளர்த்துக் கொள்வதற்காகவும்,

நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும்

எனது பெற்றோரிடம் நான் பேசுவேன்.

எனக்கு வேண்டியதை நான் கேட்காமலேயே எனது பெற்றோர் எனக்குத் தருவார்கள்.''

"'கடவுள் நமது நல்ல தந்தை.  நமது வாழ்வு சிறக்க நமக்கு என்னென்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

அவருடைய நல்ல பிள்ளையாக வாழ வேண்டியது நமது கடமை.

நமக்கு வேண்டியதை அவரே தருவார்.

"ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். 
 

உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். 
  

ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். (மத்.  6:31-33)

புரிகிறதா?"

"அப்படியானால் நமது உலக வாழ்க்கைக்குத் தேவையான எதையும் கடவுளிடம் கேட்கக் கூடாதா?"

"'பிள்ளைகளுக்கு உள்ள உரிமையோடு தந்தையிடம் கேட்கலாம்.

நாம் கேட்பதில் எது நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்குமோ அதைக் கடவுள் கட்டாயம் தருவார்.

ஆன்மீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இல்லாவிட்டால் அதை தர மாட்டார்.

உதவிகரமாய் இருப்பதை அவரே தேர்வு செய்து நமக்குத் தருவார்.

நமக்கு இருக்க வேண்டியது தந்தையின் மேல் அசைக்க முடியாத விசுவாசம்.

தர வேண்டியதை அதற்குரிய நேரம் வரும்போது தருவார்."

"இப்போது புரிகிறது, தாத்தா. 
இறைவனுக்கும் நமக்கும் உள்ள ஆன்மீக உறவை வளர்ப்பதற்கு உதவிகரமாக இருக்கக்கூடிய உதவிகளை மட்டுமே இறைவனிடம் கேட்க வேண்டும்.

நம் மீது நமக்கு இருக்கும் அக்கறையை விட கடவுளுக்கு அதிக அக்கறை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம் மீது நமக்கு இருக்கும் உரிமையை விட நம் மீது கடவுளுக்கு இருக்கும் உரிமையே அதிகமானது.

ஏனெனில் நித்திய காலமாக நம்மை தனது நினைவில் வைத்திருந்து 

தனது பிள்ளையாக நம்மைப் படைத்தவர் அவர்.

அவர் என்ன செய்தாலும் நமது நன்மைக்காகவே இருக்கும்.

அவர் நம்மை அன்பு செய்வது போல நாமும் அவரை அன்பு செய்து,

அவரது விருப்பம் நம்மில் நிறைவேற ஏற்ற பிள்ளைகளாக வாழ்வோம்.

நாம் அவரிடம் வேண்டுவது,

அவரது விருப்பப்படி உறுதியாகக் கிடைக்கும்.

நன்றி, தாத்தா."

லூர்து செல்வம்.

Monday, January 15, 2024

ஜெபிப்போமாக

ஜெபிப்போமாக!

ஜெபம் என்றால் என்ன? 

இறைவனோடு உரையாடுவது தான் ஜெபம்.

 நாம் இறைவனோடு பேசுவதும், இறைவன் நம்மோடு பேசுவதும் தான் ஜெபம்.

வெறுமனே வாய் திறந்து பேசுவது அல்ல, மனம் திறந்து பேசுவது.

நமது உள்ளம் இறைவனது உள்ளத்தோடு உரையாடுவதுதான் ஜெபம்.

உள்ளங்களின் உரையாடல் தான் ஜெபம் என்றால் அதில் நமது உடலுக்கு  இடமில்லையா?

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றுக்கும் ஜெபத்தில் இடம் இருக்கிறது.

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து பயணிப்பது தான் வாழ்க்கை.

மூன்றும் இறைவனோடு கைகோர்த்து பயணிப்பது தான் ஜெப வாழ்க்கை, மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கை.

ஜெபத்தையும் நமது வாழ்க்கையையும் பிரிக்க முடியாது,

அதாவது,

இறைவனையும் நமது வாழ்க்கையையும் பிரிக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும்?

ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் வாழ்கிறோம்?

ஒவ்வொரு நாளும் 24 மணி நேரம் வாழ்கிறோம்.

நாள் முழுவதும் வாழ்கிறோம், ஆகவே நாள் முழுவதும் ஜெபிக்க வேண்டும்.

அதுவும் நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் ஜெபிக்க வேண்டும்.

நாள் முழுவதும் கோவிலில் அமர்ந்து ஜெபிக்க வேண்டுமா?

கோவிலில் தானே நமது ஆண்டவர் இருக்கிறார்.

மரியாளின் வயிற்றில் மனுவுரு எடுத்த இறைமகன் இயேசு ஆண்டவர் கோவிலில் திவ்ய நற்கருணையில் இருக்கிறார்.

தந்தை, மகன், தூய ஆவியாகிய தமதிரித்துவக் கடவுள் நித்திய காலத்திலிருந்தே எங்கும் இருக்கிறார்.

God is omnipresent.

 ஆகவே நாம் கோவிலுக்குள் இருந்தாலும்,

 கோவிலுக்கு வெளியே இருந்தாலும் 

இறைவனோடு தான் இருக்கிறோம். 

நமது ஒவ்வொரு அணுவும் இறைவனால் தான் இயங்குகிறது.

"அவரின்றி அணுவும் அசையாது" என்பது பழமொழி.

நமக்காக மட்டும் வாழ்வது உலக வாழ்க்கை.

இறைவனுக்காக மட்டும் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை.

ஆன்மீக வாழ்க்கை = ஜெபம். 

இறைவனுக்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வினாடியும் நாம் ஜெபித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்க வேண்டும்.

வேறு எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாதா?

வேறு எதையும் பேசக்கூடாதா?

வேறு எதையும் செய்யக்கூடாதா?

எதைப்பற்றி சிந்தித்தாலும்,
 எதைப் பேசினாலும்,
 எதைச் செய்தாலும்

 இறைவனுக்காகச் செய்தால், 

நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இறைவன் இருக்கிறார்.

கடைக்குச் சென்று மனைவிக்காக ஒரு புடவை எடுக்கிறோம்.

கடைக்குச் செல்லும் போதும், புடவையைத் தேர்வு செய்யும்போதும்,
 அதற்காகப் பணம் கொடுக்கும் போதும்,
அதை வீட்டுக்குக் கொண்டு வரும்போதும்,
மனைவியிடம் கொடுக்கும் போதும் நமது உள்ளத்தில் மனைவி இருப்பது போல,

நமது வாழ்க்கையில் எதைச் செய்தாலும்,

மூச்சு விட்டாலும்,
முகம் கழுவினாலும்,
சாப்பிட்டாலும்,
பள்ளிக்கூடம் சென்று பாடம் படித்தாலும்,
அலுவலகம் சென்று பணி புரிந்தாலும் 

செய்வதை எல்லாம் இறைவனுக்காகச் செய்யும்போது நாம் ஜெபிக்கிறோம்.

இறையன்புக்காகவும்,
பிறரன்புக்காகவும் 
நாம் எதை செய்தாலும் நாம் ஜெபிக்கிறோம்.

நாம் உலகில் பிறந்தது இறைவனுக்காக வாழ.

நாம் மரணமடைவது இறைவனோடு வாழ.

இவ்வுலகிலும் மறு உலகிலும் நம்மையும் இறைவனையும் பிரிக்க முடியாது.

இவ்வுலகில் 
நாம் பிறப்பதும் ஜெபம்.
வாழ்வதும் ஜெபம்.
மரணிப்பதும் ஜெபம்.
விண்ணுலகில் நித்திய காலம் வாழ்வதும் ஜெபம்.

இறைவனில், இறைவனுக்காக, இறைவனோடு வாழ்வோம்.

அதுதான் ஜெப வாழ்வு.

லூர்து செல்வம்.

ஒற்றை வரிப் பிரசங்கம்.

ஒற்றை வரிப் பிரசங்கம்.
 

  கலிலேயாவில் உள்ள கானாவில் நடந்த திருமணத்துக்கு  இயேசுவும், அவருடைய தாயும்,  சீடரும்  அழைப்புப் பெற்றிருந்தனர். 


திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். 

இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். 


" இயேசுவின் தாய் பணியாளரிடம், 

அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். 
(அரு. 2:5)

மரியாள் தனது மைந்தனிடம் சொன்னது ஜெபம்.

பணியாளரிடம் சொன்னது பிரசங்கம்,

ஒற்றை வரிப் பிரசங்கம்.

  "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." 

"அவர் சொல்வதைக் கேளுங்கள்" என்று சொல்லவில்லை. "செய்யுங்கள்" என்று சொன்னார்.

பங்குத் குருவானவர் ஞாயிறுத் திருப்பலியில் ஆற்றும் பிரசங்கத்தை நாம் கேட்கிறோம்,

சில சமயங்களில் தூங்கிக் கொண்டே கேட்கிறோம்.

அரைத் தூக்கத்தில் கேட்டது அரை குறையாக தான்  நமது மனதை அடையும்.

நாம் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

 தூங்காமல் கேட்டாலும் கூட, என்ன சொல்லப்படுகிறது என்பதை விட

 எப்படிச் சொல்லப்படுகிறது என்பதில் தான் அதிக கவனம் செலுத்துகிறோம்.

பிரசங்கத்தின் முடிவில்,

"பிரசங்கம் Super" என்று ஒரு Certificate கொடுப்பதோடு நமது கடமை முடிந்து விடுகிறது.

குருவானவர் செய்த ஒரு மணி நேர பிரசங்கம் முடிந்தவுடன்

அன்னை மரியாள் ஆற்றிய ஒற்றை வரிப் பிரசங்கம் நமது ஞாபகத்துக்கு வர வேண்டும்.

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்"

சாதாரணமாக திருமணத்திற்கு அழைக்கப்படுபவர்கள் மணமக்களை வாழ்த்துவதோடும், அளிக்கப்படும் விருந்தை உண்பதோடும் தங்கள் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.

ஆனால் திருமணத்துக்கு அழைக்கப்பட்ட அன்னை மரியாள் தன்னைக் குடும்பத்தில் ஒருவராகவே கருதி செயல் புரிகிறார்.

ஆகவே தான் திராட்சை ரசம் தீர்ந்தவுடன் அதில் அக்கறை காட்டி ஆவன செய்யும்படி தனது மைந்தனிடம் வேண்டுகிறாள்.


இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே." 

என்று சொன்ன போதும்

தான் சொல்வதை மகன் செய்வார் என்ற உறுதியான நம்பிக்கையுடன்,

"அவர் உங்களுக்குச்  சொல்வதெல்லாம் செய்யுங்கள்."

என்று பணியாளர்களிடம் கூறுகிறார்.

'"எனது நேரம் இன்னும் வரவில்லையே."

இயேசு எதற்காக உலகிற்கு வந்தாரோ அந்த நேரம் அதாவது அவரது பாடுகளின் நேரம் இன்னும் வரவில்லையே என்று இயேசு சொல்கிறார்.


"பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்."
(  அரு. 13:1)


பாஸ்கா திரு விருந்தின் போது இயேசு  திராட்சை இரகத்தைத் தனது இரத்தமாக மாற்ற விருந்தார்.

புனித வியாழனன்றுதான் அவரது பாடுகள் ஆரம்பித்தன.

அதுதான் அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம்.

பாடுகள் பட்டு மரிக்கவே இயேசு உலகிற்கு வந்தார், புதுமைகள் செய்வதற்கு அல்ல.

ஆனாலும் கானாவூர் திருமணத்தின் போது தனது அன்னையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டார்.

அன்னை மரியாளால் தனது மகன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு கானாவூர்த் திருமண நிகழ்ச்சி ஒரு அடையாளம்.

"அவர் கூறியபடி செய்யுங்கள்" என்று அன்னை மரியாள் பணியாளர்களிடம் கூறிய பின்

 தூய்மைச் சடங்குகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக இருந்த  ஆறு கல்தொட்டிகளை

  தண்ணீரால் நிரப்பச் சொன்னார்.

அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். 

தனது பாடுகளுக்கு முந்திய நாள் திராட்சை ரசத்தை தனது ரத்தமாக மாற்றவிருந்ததற்கு முன் அடையாளமாக,

 கானாவூர்த் திருமணத்தின் போது இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றினார்.

தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது அவரது பொதுவாழ்வில் அவர் செய்த முதல் புதுமை.

திராட்சை இரசத்தை அவரது ரத்தமாக மாற்றியது பொது வாழ்வின் போது அவர் செய்த கடைசிப் புதுமை.

முதல் புதுமையைத் திருமண வீட்டின் விருந்தினர்களுக்கு உணவு கொடுப்பதற்காகச் செய்தார்.

ஒருவகையில் கத்தோலிக்கத் திருச்சபையும் ஒரு திருமண வீடு தான்.

இயேசு மணவாளன், 
திருச்சபை மணவாட்டி.

நாம் அனைவரும் திருச்சபையின் உறுப்பினர்கள்.

முதல் புதுமையைத் திருமண வீட்டின் விருந்தினர்களுக்கு உணவாகக் கொடுக்கச் செய்தது போல,

கடைசிச் புதுமையை இயேசு தனது மனவாட்டியான திருச்சபையின் உறுப்பினர்களாகிய நமக்கு உணவாகத் தருவதற்காகச் செய்தார்.


முதல் புதுமையில் தண்ணீரை திராட்சை இரசமாக்கினார்.

கடைசிப் புதுமையில் திராட்சை இரசத்தைத் தனது இரத்தமாக மாற்றினார்.

கடைசி இரவு உணவின்போது அவர் செய்த புதுமை அவரது பொது வாழ்வின் கடைசிப் புதுமை.

ஆனாலும் இதைப்பற்றி சிறிது ஆழ்ந்து தியானித்தால் மற்றொரு உண்மை புலனாகும்.

 தனது உடலையும் ரத்தத்தையும் தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்துவிட்டு,

 மறுநாள் பாடுகள் பட்டு மரணித்து,

 மூன்றாம் நாள் உயிர்த்து,

விண்ணகம் எய்திய இயேசு இன்றும் 

நமது பொது வாழ்வின் போது நம்மோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தனது ஆன்மாவோடும் சரீரத்தோடும் அன்று வாழ்ந்த அதே இயேசு 

அதே ஆன்மாவோடும் அதே சரீரத்தோடும்தான் 

இன்றும் திவ்ய நற்கருணையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போஸ்தலர்கள் உணவாக உண்ட அதே இயேசுவைத் தான் நாமும் இன்று திருப்பலியின் போது உணவாக உண்கிறோம்.

இவை வெறும் வார்த்தைகள் அல்ல சத்தியமான உண்மை.

இந்த உண்மையை உணர்ந்து நாம் திவ்ய நற்கருணையை உண்கிறோமா?

நமக்கு பிடித்தமான ஒரு அரசியல் தலைவர் நமது இல்லத்திற்கு வந்தால் நாம் அவருக்கு என்ன மரியாதையைக்  கொடுப்போமோ

அந்த அளவு மரியாதையைக் கூட நாம் நமது ஆண்டவருக்குத் கொடுப்பதாக தெரியவில்லை.

அரசியல் தலைவர் ஒரு சாதாரண மனிதன்.

இயேசு நம் அனைவரையும் படைத்த கடவுள்.

மனிதனுக்குத் தலையை மட்டும் வணங்கினால் போதுமானது.

கடவுளை முழங்காலிலிருந்து ஆராதிக்க வேண்டும்.

முழங்காலில் இருந்து ஆண்டவரை வாங்க வேண்டிய நாம்,

குடியரசு தின விழாவின் போது மாணவர்கள் வரிசையாக சென்று ஆரஞ்சு வில்லையை ஆசிரியரிடமிருந்து வாங்கி வாய்க்குள் போடுவது போல,

நற்கருணை நாதரையும் வாங்கி வாயில் போட்டுக்கொள்கிறோம்.

இதுதான் நம்மைப் படைத்த சர்வ வல்லபக் கடவுளுக்கு நாம் கொடுக்கும் மரியாதை.

நமது நண்பன் நமது வீட்டுக்கு வந்தால் அவனை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு,

 அவனோடு பேசாமல் நமது வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால்

அவன் நம்மைப் பற்றி என்ன நினைப்பான்?

இயேசு நமக்குள் உணவாக வரும்போது நாம் அவரோடு எவ்வளவு நேரம் பேசுகிறோம்?

அவர் நம்மிடம் பேசுவதை எவ்வளவு நேரம் கேட்கிறோம்?

கேட்க வேண்டும்.

 அவர் செய்யச் சொல்வதைச் செய்கிறோமா?

நமது தாய் அன்னை மரியாள் 

"அவர் கூறியபடி செய்யுங்கள்" என்று நம்மிடம் கூறுகிற படி,

இயேசு சொல்வதைச் செய்கிறோமா?

ஒவ்வொரு முறை நற்கருணை வாங்கும் போதும் 

இயேசு நம்மிடம் சொல்வதைச் செய்தால் நமது வாழ்க்கை எப்படி எல்லாமோ மாறியிருக்க வேண்டுமே.

 நாம்  துவக்கத்தில் இருந்தது போலவே தான் இப்போதும் இருக்கிறோம்!

கடவுள் மாறாதவர்.

மாறாமை  என்ற அவரது பண்பை நம்மோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

நாம் மாறினால் தான் வளர்ச்சி அடைய முடியும்.

நமது ஆன்மீக வளர்ச்சியைப் பொருத்தமட்டில் முதலில் நாம் மனம் மாற வேண்டும்.

"அதுமுதல் இயேசு, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்றத் தொடங்கினார். ''
(மத். 4:17)

நமது மன மாற்றம் செயலில் தெரிய வேண்டும்.

பைபிளை வாசிக்கும்போது இறைவாக்கு நமது கண் வழியே மனதுக்குள் செல்கிறது.

கோவிலில் பிரசங்கத்தை கேட்கும்போது இறைவாக்கு நமது காதுகள் வழியே மனதுக்குள் போகிறது.

அன்னை மரியாள் ஆற்றிய

"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்." 

என்ற பிரசங்கம் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

கேட்டதை செயல்படுத்தி ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

அன்னை மரியாளின் வாழ்க்கை நமக்கு ஒரு முன்மாதிரிகை.

லூர்து செல்வம்.