Monday, August 21, 2023

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"(மத்.19:24).

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"
(மத்.19:24)

''தாத்தா, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியுமா?"

"'உன்னால் நுழைய முடியுமா?"

"அதற்குள் ஒரு நூலை நுழைக்கவே நான் படுகிற பாடு!

என்னாலும் நுழைய முடியாது, ஒட்டகத்தாலும் நுழைய முடியாது."

"'ஆனால் ஒட்டகத்தால் நுழைய முடியும் என்று ஆண்டவர் சொல்கிறாரே!"

"அவர் அப்படிச் சொல்லவில்லை. 

ஊசியின் காதில் எப்படி ஒட்டகத்தால் நுழைய முடியாதோ,

அதேபோல் பணக்காரர்களாலும் 
விண்ணரசில் நுழைய முடியாது என்று சொல்கிறார்.

அது எப்படி என்று தான் புரியவில்லை."

"'உனக்கு மட்டுமல்ல இயேசுவின் சீடர்களுக்கே புரியவில்லை. 

 "அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?" என்று இயேசுவிடம் கேட்டனர்."

"அதற்கு ஆண்டவர் சொன்ன பதிலும் புரியவில்லை.

"மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்" என்று ஆண்டவர் பதில் சொன்னார்.

கடவுள் சர்வ வல்லவர் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் பணக்காரனால் முடியாது என்று கூறிவிட்டு,

பணக்காரனால் முடியாதது கடவுளால் முடியும் என்று கூறுவதற்கு

கடவுள் தனக்கு இஷ்டப்பட்ட பணக்காரர்களை மட்டும் தான் மோட்சத்திற்குக் கூட்டிக் கொண்டு போவார் என்று அர்த்தமா?"

"'ஆமா. தனக்கு இஷ்டப்பட்ட பணக்காரர்களை மட்டும் தான் விண்ணரசில் சேர்த்துக் கொள்வார்"

"இது அதைவிடப் புரியவில்லை.
நல்லவர்கள் விண்ணரசுக்குள், நுழைவார்கள் கெட்டவர்கள் நுழைய மாட்டார்கள் என்று சொன்னால் புரியும்.

கடவுளுக்கு இஷ்டப்பட்டவர்கள் விண்ணரசுக்குள் நுழைவார்கள்,

கடவுளுக்கு இஷ்டப்படாதவர்கள்
நுழைய மாட்டார்கள் என்று சொன்னால் எப்படிப் புரியும்?"

"'நான் சொன்னதையே தான் நீயும் சொல்கிறாய்.

ஆனால் புரியவில்லை என்கிறாய்.

நான் நான்கும் ஐந்தும் ஒன்பது என்கிறேன்,

நீ 'அதெப்படி? ஐந்தும் நான்கும்தான் ஒன்பது' என்கிறாய்."

"தாத்தா, குழப்பாமல் முழுப் பதிலையும் நீங்களே கூறி விடுங்கள்."

"'உலகில் வாழ்பவர்கள் எல்லோரிடமும் பணம் இருக்கிறது.

அந்த அர்த்தத்தில் எல்லோரும் பணக்காரர்கள் தான்.

தாங்கள் வைத்திருக்கும் பணத்தின் காரணமாக யாரும் விண்ணரசில் நுழைய முடியாது.

பணத்தின் மேல் பற்று உள்ளவர்கள் விண்ணரசில் நுழையவே முடியாது. ஏனெனில் அவர்கள் பணத்துக்கு ஊழியம் செய்பவர்கள்.

அவர்கள் கடவுளின் இஷ்டப்படி,

 அதாவது,

 விருப்பப்படி,

 அதாவது,

 சித்தப்படி நடக்காதவர்கள்.

கடவுளின் சித்தப்படி நடக்காதவர்கள் எப்படி விண்ணரசில் நுழைய முடியும்?

பணத்தின் மீது பற்று இல்லாமல் கடவுள் மீது மட்டும் பற்று உள்ளவர்கள் உறுதியாக விண்ணரசில் நுழைவார்கள்.

கடவுள் மீது மட்டும் பற்று உள்ளவர்கள் கடவுளின் இஷ்டப்படி வாழ்வார்கள்,

அதாவது,"


"கடவுளின் சித்தப்படி வாழ்வார்கள். அவர்களுக்கு விண்ணரசு உரியது."

"'ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

கடவுளுக்கு ஊழியம் செய்பவன் பணத்துக்கு ஊழியம் செய்ய மாட்டான்.

பணத்துக்கு ஊழியம் செய்பவன் கடவுளுக்கு ஊழியம் செய்ய மாட்டான்.

கடவுளுக்கு ஊழியம் செய்யும்  பணக்காரன் கடவுளின் இஷ்டப்படி பணம் சம்பாதிப்பான்.

தன்னிடம் உள்ள பணத்தைக் கடவுளின் இஷ்டப்படி செலவழிப்பான்.

ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகச் செலவழிப்பான்.

அதாவது பிறரன்புப் பணிகளில் செலவழிப்பான்.

அவன் கடவுளின் விருப்பப்படி வாழ்வதால் விண்ணரசில் நுழைவான்.

ஆனால்,

பணத்துக்கு ஊழியம் செய்யும் பணக்காரன் பணத்தைச் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருப்பான்.

எப்படி வேண்டுமானாலும் பணம் சேர்ப்பான்.

 பிறரன்புப் பணிகளுக்காக எதுவும் செய்ய மாட்டான்.

பிறரிடம் உள்ளதை தன்வசப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவான்.

அவனைப் பொருத்தமட்டில் பணம் மட்டும்தான் அவன் கடவுள், அவனைப் படைத்தவர் அல்ல.

 அவனைப் படைத்த கடவுளின் சித்தத்துக்கு எதிராக செயல்படுபவன் எப்படி விண்ணரசில் நுழைய முடியும்?"


"தாத்தா, எனக்கு இப்போது ஒரு சிறு சந்தேகம்.

பணத்தின் மீது பற்றுள்ள ஒருவன் இறைவனின்  கட்டளைகளின் படி நடந்தால் விண்ணகம் செல்வானா?"

"'உனது கேள்வியே தவறு.

பணத்தின் மீது பற்றுள்ளவனால் இறைவனின் கட்டளைகளை அனுசரிக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசி என்பது கடவுளின் கட்டளை.

ஆனால் அவன் எல்லாவற்றுக்கும் மேலாக பணத்தை நேசிப்பான்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்லாமல் வியாபாரத்தைக் கவனித்தால் இரண்டு லட்சம் ரூபாய் ஆதாயம் வரும் என்று தெரிந்தால் அவன் கோவிலுக்குப் போவானா, கடைக்குப் போவானா?"

"கோவிலுக்குப் போகின்ற ஒவ்வொருவருக்கும் பங்குச் சாமியார் மூன்று லட்சம் ரூபாய் கொடுப்பார் என்று அறிவித்தால்,

 அவன் தினமும் கோவிலுக்குப் போவான், கடவுளை வணங்க அல்ல, பணத்தைப் பெற்று வர."

"'பணத்தின் மீது மட்டும் பற்று உள்ளவனுக்கு இறையன்பும் இருக்காது, பிறர் அன்பும் இருக்காது.

பிறரன்பே இல்லாதவன் பிறரன்பை சார்ந்த கட்டளைகளுக்கு எப்படிக் கீழ்ப்படிவான்?

பண ஆசை உள்ள மகன் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவானேயொழிய, பெற்றோரைக் கவனிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டான்.

ஒரு நாட்டின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காக அதன் மீது போர் தொடுக்கும் நாடு அதற்காக எத்தனை கொலைகள் செய்கின்றது?

உலகில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட

 போர்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

பணத்துக்கு ஊழியம் செய்பவன்

 இறைவனுக்கும் ஊழியம் செய்ய மாட்டான்,

 அயலானுக்கும் ஊழியம் செய்ய மாட்டான்.

பணம் வைத்திருப்பவன் இறைவன் மீது பற்று உள்ளவனாக இருந்தால் 

இறையன்புப் பணிகளுக்கும், பிறரன்பு பணிகளுக்கும் தன்னிடமுள்ள பணத்தைச் செலவழிப்பான்.

கடவுள் மீது மட்டும் அவனிடம் பற்று இருப்பதால், அவன் விண்ணரசில் நுழைவான்.

பணக்காரனுடைய மீட்பு பற்றி இயேசு கூறியது புரிகிறதா?"

"புரிகிறது."

"'நீ ஈட்டும் பணத்தை என்ன செய்வாய்?"

"அன்பு பணிகளுக்காகச் செலவழிப்பேன்."

"'உனக்காகச் செலவழிக்க மாட்டாயா?"

"நானும் கடவுளுடைய பிள்ளை தானே. கடவுளுடைய எல்லா பிள்ளைகளுக்கும் சேவை செய்ய நமக்குக் கடமை இருக்கிறது."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment