Thursday, August 3, 2023

"இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?"(மத்.13:55)

"இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?"
(மத்.13:55)

அன்னை மரியாள் மீது பக்தி இல்லாத நமது பிரிவினை சபையார் எடுத்து விளையாடும் வசனம் இது.

அன்னை மரியாளுக்கு இயேசுவைத் தவிர வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்று கூறும் இவர்கள்,

 மரியாள் முக்காலமும் கன்னி என்ற வேத சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 

புனித சூசையப்பர் கபிரியேல் தூதர் அவரிடம் சொன்ன ரகசியத்தை கடைசிவரையில் யாரிடமும் வெளியிடவில்லை.

இயேசுவும் திருக்குடும்பத்தில் தச்சனின் மகனாகவே வாழ்ந்தார்.

பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசு மாதாவின் வயிற்றில் கருத்தரித்ததை அவள் தான் பிற்பாடு இயேசுவின் சீடர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். 

புனித அன்னம்மாள் மரியாளைப் பெற்று மூன்று ஆண்டுகள் வளர்த்து அதன் பின் அவளைக் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுத்து விட்டாள்.

அதன் பின் அவளுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது.

அவளுக்கும் மரியாள் என்றே புனித அன்னம்மாள் பெயர் சூட்டினாள்.

அவளுக்குத் திருமண வயது ஆனதும் சூசையப்பருக்குச் சகோதரரான கிலோப்பாவுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுத்தாள்.

அவளுடைய மக்கள் தான் யாகப்பன், சூசை, சீமோன், யூதா ஆகியோர். 

இயேசுவுக்குச் சித்தி மக்கள்.

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,

 மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்."
(அரு. 19:25)


"அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாள்தான் புனித அன்னம்மாளின் இரண்டாவது மகள்.

"பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், 

சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், 

சலோமேயும் இருந்தனர்."
(மாற்கு.15:40)

சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாள் தான் அன்னை மரியாளின் தங்கை.

புனித மத்தேயுவும் இதைக் குறிப்பிடுகிறார்.
( மத். 27:56)

தங்களுக்கு எல்லாம் பைபிள் தான் என்று கூறுபவர்களுக்கு பைபிளில் உள்ள இந்த வசனங்கள் எப்படி தெரியாமல் போயிற்று?

கண்ணை மூடிக்கொண்டு வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அன்னை மரியாள் உதவி செய்திருக்காவிட்டால் நற்செய்தி ஆசிரியர்கள் நற்செய்தி நூல்களை முழுமையாக எழுதியிருக்கவே முடியாது.

கபிரியேல் தூதர் மாதாவுக்கு தூதுரைத்தது, புனித சூசையப்பரைப் பற்றிய உண்மைகள், பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தது, இடையர்கள் இயேசுவைச் சந்தித்தது,
இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது,
 மூன்று ஞானிகள் இயேசுவைச் சந்தித்தது, திருக்குடும்பத்தின் எகிப்திய பயணம், 12 வயதில் இயேசு காணாமல் போனது போன்ற செய்திகளை அன்னை மரியாள் சொல்லியிருக்காவிட்டால் நற்செய்தி ஆசிரியர்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?

இயேசு விண்ணகம் எய்திய பின்
அன்னை மரியாளின் பாதுகாப்பில் தான் அப்போஸ்தலர்கள் வாழ்ந்தார்கள்.

பைபிளை வாசிப்பவர்கள் அது கூறும் இறைச் செய்தியை அறிந்து, அதை விசுவசித்து, அதைத் தங்கள் வாழ்வாக்கும் நோக்கத்தோடு வாசிக்க வேண்டும்.

தங்களுக்குள் தங்களுக்கு இஷ்டமான ஒரு கருத்தை வைத்துக்கொண்டு, அதற்கு ஆதாரமான வசனத்தைத் தேடுவதற்காக பைபிளை வாசிக்கக் கூடாது.

அப்படி வாசிப்பவர்கள் தான் பைபிள் வசனங்களுக்குத் தங்கள் இஷ்டப்படி பொருள் கூறுவார்கள்.

இயேசுவைச் சுமந்து வாழ்ந்தவள் அன்னை மரியாள்.

அதே இயேசுவைச் சுமந்து கொண்டிருப்பதுதான் பைபிள்.

அன்னை மரியாளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவள் பெற்றெடுத்த இயேசுவையும் ஏற்க முடியாது.

அன்னை மரியாள் பெற்றெடுத்தது இயேசு ஒருவரைத்தான்.

அவள் முக்காலமும் கன்னி.

தாயை ஏற்றுக் கொள்ளாதவர்களால் மகனையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இயேசுவே அன்னை மரியாள் வழியாகத்தான் உலகிற்கு வந்தார்.

அதே மரியாள் வழியாக நாம் இயேசுவிடம் செல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

''அன்னையே, மரியே, இயேசுவின் தாயே, தயவு கூர்ந்து எங்களை உமது திருமகனிடம் அழைத்துச் செல்லும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment