Tuesday, August 29, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)5

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)5

"தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்."

 உண்மையைப் புரிந்து கொள்வதற்கு உதவியாக,

முதலில் ஒரு ஒப்புமை.

நாவல் வாசிப்பவர்களுக்கு,
நாடகம் பார்ப்பவர்களுக்கு,
சினிமா பார்ப்பவர்களுக்கு

ஒரு உண்மை புரிந்திருக்கும்.

ஒவ்வொன்றிலும் ஒரு கதை இருக்கும்.

கதாநாயகனுக்கும், வில்லனுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் தான் கதை.

போராட்டத்தின் இறுதியில் கதாநாயகன் வெற்றி பெறுவான்.

நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடைபெறும் போராட்டம் தான் நமது ஆன்மீக வாழ்வு.

நன்மை நமது வாழ்வில் கதாநாயகன்.
தீமை வில்லன்.

கடவுள் நன்மைத் தனமே உருவானவர்.

ஒரே வார்த்தையில் 'நல்லவர்'.

நாம் நல்லவர்களாக வாழ வேண்டும் என்றால் 

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள நல்ல பண்புகளின் வழிகாட்டுதலின்படி வாழ வேண்டும்.

அவர் நம்மை அவரது சாயலில் படைக்கும் போது அன்பு, இரக்கம், நீதி போன்ற நல்ல பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

நாம் கடவுளை நேசிக்க வேண்டும் என்றால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள பண்புகளுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த பண்புகளை நாம் விரும்ப வேண்டும்.

கடவுள் தந்துள்ள பண்புகளை விரும்பினால் தான் நம்மால் கடவுளையும் விரும்ப முடியும்.

இந்த பண்புகளை 'நன்மை' என்ற ஒரே வார்த்தையால் அழைக்கலாம்.

நன்மை தான் நமது ஆன்மீக வாழ்வில் கதாநாயகன்.

இப்பொழுது ஒன்று புரியும்.

தீமை தான் நாம் எதிர்த்துப் போராட வேண்டிய வில்லன்.

நன்மைக்கு ஊற்று இறைவன்.

தீமைக்கு ஊற்று சாத்தான்.

சாத்தானின் சோதனையால் தான் பாவம் அதாவது தீமை உலகுக்குள் நுழைந்தது.

நமது முதல் பெற்றோர் காலத்திலிருந்தே நன்மைக்கும் தீமைக்குமான போராட்டம் ஆரம்பித்து விட்டது.

இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான்,

அதாவது, பாவத்திலிருந்து,

 அதாவது, தீமையிலிருந்து விடுதலை பெற்று

 நல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்,

இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

பாவத்திலிருந்து விடுதலை பெற மனித இயல்பினால் மட்டும் இயலாது.

சர்வ வல்லமை வாய்ந்த கடவுளுடைய உதவி நம்மோடு இருந்தால் மட்டுமே நம்மால் தீமையை வெல்ல முடியும்.

இந்த உதவியைத் தந்தையிடமிருந்து கேட்டுப் பெறவே

"தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்."

என்று ஜெபிக்கும்படி இயேசு நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்.

தீமையின் பண்புகள் நன்மையின் பண்புகளுக்கு நேர் எதிர் மாறானவை.

வெறுப்பு, கல்நெஞ்சம், அநீதி போன்றவை தீமையின் பண்புகள்.

இப்பண்புகளை உடையவன் கடவுளுக்கு ஏற்ற செயல்களைச் செய்ய மாட்டான்.

கடவுளுக்கு ஏற்காத செயல் பாவம்.

கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம்.

முதலில் கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் விரும்ப வேண்டும்.

தீமைகள் நிறைந்த வாழ்வு நமது விருப்ப எல்லைக்குள் வரக்கூடாது.

நன்மைத் தனமே உருவான கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ விரும்புகின்றவர்களே,

'தீமையிலிருந்து எங்களைக் காத்துக் கொள்ளும்' என்று தந்தையை நோக்கி வேண்ட வேண்டும்.

மனித பலவீனத்தினால் தீமையில் விழ நேரிட்டால் தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும் என்று வேண்ட வேண்டும்.

"எனக்கு வேண்டாதவர்களை வெறுப்பேன்,

அவர்கள் என்னிடம் ஏதாவது உதவி கேட்டால் அவர்கள் மீது இரக்கம் வராது"

என்று எண்ணுபவர்கள் இந்த ஜெபத்தைச் சொல்வது வீண்.

பசி உள்ளவர்கள் தான் சாப்பாட்டின் முன் அமர வேண்டும்.

இறைவனுக்கேற்ற வாழ்வு வாழ விரும்புகின்றவர்கள் தான்

கர்த்தர் கற்பித்த ஜெபத்தைச் சொல்ல வேண்டும்.

தந்தையை நோக்கி சொல்வதைச் செய்ய முடியாதவர்கள் ஏன் சொல்ல வேண்டும்?

நல்லவர்களாக, இறைவனுக்கு ஏற்றவர்களாக வாழ விரும்புவோம்.

நமது சுய பலத்தால் அது முடியாதாகையால்

உதவி கேட்டு தந்தையை நோக்கி ஜெபிப்போம்.

நமது சிந்தனையில் கடவுள் இருக்க வேண்டும்.

சிந்தனை சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.

"விண்ணகத் தந்தையே உமக்கு ஏற்ற வாழ்வு வாழ விரும்புகிறோம்.

நாங்கள் பலவீனர்கள்.

உமது அருள் வரத்தால் உமக்கு ஏற்ற, 

நன்மைகள் நிறைந்த,

 அருள்வாழ்வு வாழ எங்களுக்கு உதவ வேண்டும்.

உமது அரசில் நித்தியகாலம் உமது பிள்ளைகளாகவும், குடிமக்களாகவும் வாழ அருள் புரிய உம்மை நோக்கி வேண்டுகிறோம்.

உமது திருமகனாகிய இயேசு கிறிஸ்து 

எங்களுக்காக பட்ட வேதனைகள் நிறைந்த பாடுகளைப் பார்த்து

 எங்கள் மீது இரங்கி 

எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்."

லூர்து செல்வம்.

Monday, August 28, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)4

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)4

"எங்களைச் சோதனையில்  
 விழவிடாதேயும்"



அரசுப் பொதுத் தேர்வுக்காகப் பாடங்களைப் படித்துத் தயாரித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு,

பாடப் புத்தகத்தை வைத்துவிட்டு கதைப் புத்தகத்தை எடுத்து வாசிக்கலாமா என்று சோதனை வரும்.

பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் போது சினிமாவுக்குப் போகலாமா என்று சோதனை வரும்.

ஆன்மீக வாழ்விலும் விண்ணகத்தை நோக்கி புண்ணிய நடை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பாவத்தில் விழலாமா என்று சோதனை வரும்.

பாவச் சோதனைகள் வரும்போது அவற்றை எதிர்த்து நின்று ஜெயிக்க போதுமான அருள் வரம் வேண்டி தந்தையிடம் ஜெபிக்கிறோம்.

ஒரு நோயாளி வைத்தியரிடம் செல்லும் போது தனது நோய் குணமாக வேண்டும் என்று அவனுக்கு ஆசை இருக்க வேண்டும்.

நோயாளியாகவே வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்ற ஒருவன் மருத்துவரிடம் சென்று பயனில்லை.

அதேபோல் நமது ஆன்மீக வாழ்வில் பாவச் சோதனைகளை வென்று புண்ணிய வாழ்வு வாழ வேண்டும் என்ற ஆசை நமக்கு இருக்க வேண்டும்.

பாவ வாழ்வே வாழ வேண்டும் என்று ஆசையோடு இருக்கும் ஒருவன் விண்ணகத் தந்தையை நோக்கி,

"எங்களைச் சோதனையில்  
 விழவிடாதேயும்."

என்று வேண்டுவது அர்த்தமற்றது.

மது அருந்துவதையே வழக்கமாகக் கொண்ட ஒருவன் 

கையில் ஜெபமாலையுடனும்,
வாயில் கர்த்தர் கற்பித்த செபத்துடனும், மங்கள வார்த்தை செபத்துடனும் மதுக் கடைக்குச் சென்றால்

அவன் கடவுளைக் கேலி செய்கிறான் என்று அர்த்தம். 

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்லாமல்,

YouTube ல் பூசை பார்த்துக் கொண்டு,

விண்ணகத் தந்தையை நோக்கி சொல்லும் ஜெபத்திற்குப் பொருளே இல்லை.

"எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்"

என்று ஜெபிக்கும் நாம் பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

அசிங்கமான காட்சிகள் நிறைந்த சினிமா என்று தெரிந்தும் சினிமா தியேட்டருக்குள் சென்று உட்கார்ந்தபின்,

''தந்தையே, அசிங்கமான காட்சிகள் வரும்போது நான் அவற்றைப் பார்க்காதபடி என்னைக் காப்பாற்றும்" 

என்று வேண்டினால்,

தந்தை நம்மை நோக்கி,

"முதலில் தியேட்டரை விட்டு வெளியே போ."

என்று தான் சொல்வார்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்கு செல்லும் போது திருப்பலி மட்டும்தான் நமது எண்ணத்தில் இருக்க வேண்டும்.

கண் பீடத்தில் இருக்க வேண்டும்.
காது குருவானவர் சொல்லும் ஜெபத்தில் இருக்க வேண்டும்.

அங்கும் எங்கும் பராக்குப் பார்க்கக் கூடாது.

யாரைப் பாவத்தில் விழத்தாட்டலாம் என்று சுற்றித் திரியும் சாத்தான்,

அசிங்கமான (Indecent) உடை அணிந்து கோவிலுக்குள்ளும் வந்திருப்பான்.

அவனைப் பார்க்க நேர்ந்தால் கண் பீடத்திற்குச் செல்லாது.

அவன் மேல் தான் நிற்கும்.

குளிக்கச் சென்று சேற்றை அள்ளி பூசி விடக் கூடாது.

கண்ணைப் பீடத்தின் மீதும் குருவானவர் மீதும் வைத்திருந்தால் பாவ சந்தர்ப்பங்கள் தவிர்க்கப்படும்.

(சாத்தானிடம் சென்று decent ஆக உடை அணிந்து வந்தால் என்ன என்று கேட்டால் 'என்னுடைய சுதந்திரத்தில் தலையிட நீ யார்?' என்று கேட்பான்.)

கண்ணடக்கம் கோவிலில் மட்டுமல்ல தெருவிலும் தேவை.

திருமண விருந்துக்குச் செல்கிறோம்.

பிரியாணி பரிமாறப்படுகிறது.

மிகவும் ருசியாக இருக்கிறது.

மட்ட சனம் என்னும் புண்ணியமும்,

 போசன பிரியம் என்ற தலையான பாவமும் 

நம் கண் முன் நின்று நம்மை அழைக்கின்றன.

பாவத்தில் விழாதிருக்க வேண்டுமானால் நாம் தான் நமது நாவை அடக்கி அளவோடு சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முன் ஒரு கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லிவிட்டு,

சாப்பாட்டின் மீது சிலுவையும் போட்டுவிட்டு,

ருசியைப் பார்த்தவுடன் அளவுக்கு மீறி சாப்பிட்டால்

 நாம் சொன்ன ஜெபத்துக்கும் பொருளில்லை,
 போட்ட சிலுவைக்கும் பொருள் இல்லை.

பாவத்தில் விழாதிருக்க நமக்குத் தந்தை போதிய அருள் வரங்களைத் தருவார்,

 ஆனால் நாம் அவற்றை பயன்படுத்தினால் தான் பலன் பெறுவோம்.

கடவுளோடு நாம் ஒத்துழைக்க வேண்டும்.

 கடவுள் நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் சம்மனசை ஆன்மீக துணையாளராகத் தந்திருக்கிறார்.

தனது உட்தூண்டுதல்களால் (Inspiration) அவர் நம்மை வழி நடத்துவார்.

சோதனை சமயத்தில் நமக்கு உதவுமாறு நமது காவல் சம்மனசிடம் செபிக்க வேண்டும்.

நாம் எப்போதும் செப உணர்வோடு,

நமது விண்ணகத் தந்தையை நினைத்துக் கொண்டே வாழ்ந்தால்,

சோதனைக்குள் விழமாட்டோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Sunday, August 27, 2023

அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)3

அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)3

"எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்."

என்று தந்தையிடம் அடிக்கடி கூறுகிறோம்.

நாம் சொல்வதை உணர்ந்து சொல்கிறோமா?

அல்லது, 

இயந்திரத்தனமாக சொல்கிறோமா?

உணர்ந்து சொன்னால் நாம் பாக்கியசாலிகள்.

இயந்திரத்தனமாகச் சொன்னால்  
நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்.

கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறோம்,

ஆனால் நிபந்தனையின் அடிப்படையில்தான் மன்னிப்புக் கேட்கிறோம்.

என்ன நிபந்தனை?

"தந்தையே நாங்கள் உமக்கு விரோதமாக பாவங்கள் செய்திருக்கிறோம்.

எங்களது சகோதர சகோதரிகள் எங்களுக்கு விரோதமாகக் குற்றங்கள் செய்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களை மன்னிப்பது போல, தந்தையே, நீர் எங்களை மன்னியும்.

நாங்கள் அவர்களை மன்னிக்காவிட்டால் நீரும் எங்களை மன்னிக்க வேண்டாம்."

நாம் நமது விரோதிகளை மன்னிக்கிறோம் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் மன்னிப்பு கேட்கிறோம்.

ஆகவே நமது விரோதிகளை நாம் மன்னிக்காவிட்டால் கடவுளிடமிருந்து நாம் மன்னிப்பை எதிர்பார்க்கக் கூடாது.

ஆகவே கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுமுன்

 யார் யார் நமது மனதை நோகச் செய்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்த்து,

 முதலில் அவர்களை மனமார மன்னித்து விட வேண்டும். 

அவர்களை நமது நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

நண்பர்களுக்கு மத்தியில் அன்பு என்னும் பிணைப்பு இருக்கும்.

கடவுள் நம்மிடம் கூறியிருப்பது,

''என்னை நேசி. 
உனது அயலானையும் நேசி.

இரண்டு நேசங்களும் ஒரே நேசம் தான்.

ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்று இல்லை.

உனது அயலானை நேசிக்காமல் என்னை நேசிப்பதாகச் சொன்னால் அது சுத்தப் பொய்.

நான் என்னை நேசிப்பவர்களையும் நேசிக்கிறேன்,

 நேசிக்காதவர்களையும் நேசிக்கிறேன்.

 மனுக்குலம் முழுவதையும் நேசிக்கிறேன்.

கடவுளே இல்லை என்பவர்களையும் நேசிக்கிறேன்.

நீயும் அனைவரையும் நேசித்தால் தான் என் மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதி பெறுவாய்."

ஆகவே கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்குமுன்,

 நமக்கு எதிராகச் செயல்படுபவர்களை நாம் மன்னித்து விட வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அநேகர் கிறிஸ்தவ சமயத்துக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கடவுள் அவர்களையும் நேசிக்கிறார்.

நாம் நேசிக்கிறோமா? வெறுக்கிறோமா?

 சிந்தித்துப் பார்த்துவிட்டு கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்லுவோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Saturday, August 26, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)(தொடர்ச்சி)2

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)
(தொடர்ச்சி)2

நாம் ஆன்மீக ரீதியாகப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

உலக ரீதியாகப் பேசினால் நாம் இப்போது பேசுவதற்கு எதிர் மறையாக இருக்கும்.

நாம் முழுக்க முழுக்க ஆன்மீகவாதிகளா,

அல்லது தேவைப்படும் போது மட்டும் ஆன்மீகவாதிகளா 

என்பது நமது தியானத்தின் (Meditation) முடிவில் தெரியும்.

கர்த்தர் கற்பித்த செபத்தில் முதலில் இறைவணக்கம் செய்துவிட்டு அடுத்து நமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.

"எங்கள் அன்றாட  உணவை இன்று, எங்களுக்குத்  தாரும்." 

அன்றன்றைய உணவை அன்றன்று தரும்படிதான் தந்தையிடம் வேண்டுகிறோம்.

"இன்று எங்களுக்கு வேண்டிய உணவை இன்று தாரும்."

பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுகிறார்கள்.

நாளைக்குரிய உணவை இன்றே போடுவதில்லை.

நாளைக்குரிய உணவை நாளை போடுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு  இருக்கிறது.

கடவுள் நம்மை ஒவ்வொரு நாளும்  பராமரித்து வருகிறார்.

நமக்கு தினமும் அன்றன்றைய உணவைத் தர வேண்டியது கடவுளின் பொறுப்பு.

 அதற்காக உழைக்க வேண்டியது நமது கடமை.

உழைப்பதற்காகத்தான் நமக்கு கடவுள் உடலைத் தந்திருக்கிறார்.

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்தின் மீது இருக்கும் நம்பிக்கை 

நமக்குக் கடவுள் மீது இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய உணவை இன்று தரும்படி கடவுளிடம் கேட்டோம்.

நமது உழைப்பின் மூலம் பல நாட்களுக்குத் தேவையான உணவு நமக்கு இன்றே கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

"எங்கள் தந்தையே" என்று செபத்தை ஆரம்பிக்கும் போதே மனுக்குலம் முழுவதும் ஒரே குடும்பம் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டோம்.

அப்படியானால் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நமது சகோதர சகோதரிகள்.

நம்மிடம் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருக்கிறது.

நாம் தந்தையிடம் கேட்டதோ இன்றைய உணவைத் தான்.

அவரோ பல நாட்களுக்குப் போதுமான உணவைத் தந்திருக்கிறார்.

இன்றைக்கு தேவையானதை வைத்துக் கொண்டு,

மீதம் இருப்பதை நமது சகோதர சகோதரிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமா?

 அல்லது 

நாமே வரும் நாட்களில் சாப்பிடுவதற்காக நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டுமா?

இன்றைய உணவை இன்று எங்களுக்குத் தாரும் என்று நாம் தந்தையிடம் கேட்டபோது,

நாளைய உணவையும் சேர்த்துத் தந்தால் அதை எனது சகோதரனோடு பகிர்ந்து கொள்வேன் என்று தான் அர்த்தம்.

அன்றன்றைய உணவை அன்றன்று தந்தை நமக்குத் தருவார் என்ற நம்பிக்கை இருந்தால் இருப்பதைப் பகிர்ந்து கொள்வோம்.

நம்பிக்கை இல்லாவிட்டால்  மீதம் இருப்பதை நாளைக்காகச் சேமித்து வைப்போம்.

செபத்தில் நாம் காண்பிக்கும் நம்பிக்கை உண்மையிலேயே நமக்குள் இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்ப்போம்.

உணவைப் பற்றி நாம் சொன்னது அனைத்தும் மற்ற பொருட்களுக்கும் பொருந்தும்.

"இரண்டு அங்கி வைத்திருப்பவன் இல்லாதவனோடு பகிர்ந்து கொள்ளட்டும்:

 உணவு உடையவனும் அவ்வாறே செய்யட்டும்"  இது நற்செய்தி.
(.லூக். 3:11)

நமது அயலானுக்கு எதைக் கொடுத்தாலும் அதைத் தனக்கே தருவதாக இயேசு கூறியிருக்கிறார்.

அவசரத் தேவைகளுக்காக மற்றவர்களுக்கு நம்மிடம் இருப்பதைக் கொடுக்கிறோமா? 

விண்ணகத் தந்தையிடம் வாயால் கூறியதைக் கையால் செய்கிறோமோ?

வருமானத்தில் செலவு போக மீதி இருப்பதைச் சிறு சேமிப்புக் கணக்கில் சேர்த்து வைக்கிறோமே, இது தவறா?

உலக ரீதியாக இதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் நம்மிடம் இருப்பதை அவசர தேவைகளுக்காக நம்மிடம் வந்து கேட்கும் அயலானுக்குக் கொடுத்து உதவாமல் இருப்பது ஆன்மீக ரீதியாக தவறு.

"கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். 

அமுக்கிக் குலுக்கிச் சரிந்துவிழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். 

ஏனெனில், எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்." (லூக்.6:38)

ஒரு நாளைக்கு தேவையானதுக்கு அதிகமாக தந்தை நமக்குத் தருவது

 தேவைக்கு அதிகமாக இருப்பதை நமது அயலானோடு பகிர்ந்து கொள்வதற்காகத்தான்,

நமது ஆடம்பர வசதிகளை பெருக்கிக் கொள்வதற்காக அல்ல.

நம்மிடம் பணம் இருக்கிறது என்பதற்காக விலை கூடிய ஆடம்பரப் பொருட்களை வாங்கி வீட்டில் குவிப்பது 

நமது பிறர் அன்பு பணிகளுக்கு எதிரானது.

பிறர் அன்பு பணிகளுக்காக கடவுள் தந்த பணத்தை 

நமது ஆடம்பரத்தை அதிகரிப்பதற்காக நாமே செலவழித்தால் 

அது பிறருக்கு சேர வேண்டிய பணத்தைத் திருடுவது போலாகும். 

(தொடரும்)

லூர்து செல்வம்

Friday, August 25, 2023

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)

மறைநூல் அறிஞரையும்,
பரிசேயரையும் பற்றி இயேசு கூறும் வார்த்தைகள்,

"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை."

நாம் இந்த வார்த்தைகளைப் பாரபட்சமின்றித் தியானித்தால்

 அவை பல சந்தர்ப்பங்களில் நமக்கும் பொருந்தும் போல் தோன்றுகிறது. 

நாம் மறைநூல் அறிஞரையும்,
பரிசேயரையும் போல் வாழ்ந்து விடக்கூடாது என்பதுதான் இயேசுவின் விருப்பம்.

ஆனால் நாமும் சில சமயங்களில் அப்படித்தான் வாழ்கிறோம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

நாம் ஒவ்வொரு நாளும் பலமுறை கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம்.

அது செபம் மட்டுமல்ல. நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக அறிவுரைகளை இயேசு அதன் மூலம் நமக்குக் கூறுகிறார்.

இயேசுவின் தந்தை மனுக் குலத்தின் தந்தை.

அந்த ஜெபத்தைச் சொல்லும் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ சமயத்தைச் சேராத மற்றவர்களுக்கும் அவர்தான் தந்தை.

"விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே" என்று நாம் சொல்லும் போது, 

மனுக்குலம் முழுவதையும் ஒரே குடும்பம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

ஜெபத்தை வாயால் சொல்லும் போது இந்த உண்மையை வாயால் ஏற்றுக் கொள்கிறோம்.

 ஆனால் நம் உள்ளத்தில் உண்மையாகவே இயேசு எதிர்பார்க்கும் குடும்ப உணர்வு இருக்கிறதா என்பதை சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்த்தால் 

அது இல்லை என்பது புரியும்.

"நான், 
எனது குடும்பம், 
எனது சகோதர சகோதரிகள், எனது பொருள்கள், 
எனது வேலை, 
என்னுடைய சம்பளம், 
என்னுடைய செலவு"

என்று அனைத்தையும் நம் ஒருவருடைய கண்ணோக்கிலிருந்து தான் பார்க்கிறோம்.

ஒவ்வொரு மாத பணியின் முடிவிலும் நாம் வாங்கும் சம்பளத்தை

 "எங்கள் சம்பளம்"

 என்று நாம் மனதார ஏற்றுக்கொண்டால் 

அதை மனுக் குலத்தில் யார் யாருக்குத் தேவையோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து உதவுவோம்.

'எங்கள்' என்ற வார்த்தையில் மனிதர்கள் அனைவரும் அடங்குவர்.

கடவுளை 'தந்தையே' என்று அழைக்கும் போது மனுக்குலம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற உண்மையை உளமார ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொள்கிறோமா?

தந்தை இருக்கும் இடம் தான் குடும்பம் இருக்க வேண்டிய இடம்.

அப்படியானால் விண்ணுலகம் தான் நமது வீடு.

இந்த உலகத்தில் நாம் வாழவில்லை,

 விண்ணுலகில் வாழ்வதற்காகப் பயணித்துக் கொண்டிருக்கிறோம்

என்ற உண்மையை உணர வேண்டும்.

சொல்வதை உணர்கிறோமா?

கர்த்தர் கற்பித்த செபத்தை இதை உணர்ந்து சொன்னால் செபம் சொல்லும்போது நாம் விண்ணுலகில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

ஏற்படுகின்றதா?

"உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராட்சியம் வருக" என்று கூறும் போது,

இறையரசின் வருகைக்காக நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்று எப்போதாவது சிந்தித்து பார்த்திருக்கிறோமா?

அல்லது கூட்டத்தில் சிந்திக்காமலேயே 'ஜே ஜே' போடுவது போல,

சிந்திக்காமலேயே 'வருக' என்று கூறுகிறோமா?

"உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூலோகத்திலும் செய்யப்படுவதாக."

"விண்ணுலக வாசிகள் எப்படி உமது விருப்பத்தை நீர் விரும்புகிறபடி நிறைவேற்றுகிறார்களோ 

அதே போல பூமியில் வாழும் அனைவரும் உமது விருப்பத்தை நிறைவேற்றுவார்களாக"

என்று சொல்கிறோம்.

வழக்கமாக நாம் ஏதாவது ஒரு விண்ணப்ப செபத்தைச் சொல்லிவிட்டு தான் 

அந்த விண்ணப்பம் நிறைவேறுவதற்காக கர்த்தர் கற்பித்த செபத்தைச் சொல்கிறோம்.

அதாவது நமது விருப்பத்தை இறைவனிடம் தெரிவித்து விட்டு

 அந்த விருப்பத்தை அவர் நம்மில் நிறைவேற்ற அவர் கற்பித்த செபத்தையே சொல்கிறோம்.

அதாவது வாயால் 'உமது சித்தம் நிறைவேறுக' என்று கூறிவிட்டு

 மனதில் 'ஆண்டவரே, நான் கேட்டதைத் தாரும்' என்று வேண்டுகிறோம்.

அதாவது சொல்வது ஒன்றை, விரும்புவது மற்றொன்றை.

உண்மையில் இறைவன் சித்தம் தான் நிறைவேற வேண்டும் என்று விரும்பினால்,

நமக்கு வேண்டியதை கேட்காமலேயே,

"ஆண்டவரே எனக்கு நீர் எதைத் தர வேண்டும் என்று விரும்புகிறீரோ அதைத் தாரும்,

நான் உமது விருப்பத்தை நிறைவேற்ற அருள் தாரும்."

என்று மனதில் நினைத்துக் கொண்டு 

அவர் கற்பித்த ஜெபத்தின் வார்த்தைகளைக் கூறுவோம்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Thursday, August 24, 2023

"போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்."( மத்.22:36)

 "போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்."
( மத்.22:36)

இயேசுவின் பொது வாழ்வின் போது அவர் எங்கு சென்றாலும் அவரின் பின்னாலே சென்ற மக்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.

அவரின் நற்செய்தியைக் கேட்கவும்,

தங்களது நோய்களிலிருந்து விடுதலை பெறவும் விரும்பி அவர் பின்னால் சென்ற பாமர மக்கள் முதல் வகை.

அவரது பேச்சுக்களில் குறை கண்டுபிடிக்கவும்,

அவரைக் கொல்வதற்காகத் திட்டம் தீட்டி அதற்கான நேரத்தை அறிவதற்காக அவர் பின்னால் சென்ற படித்த அறிஞர் பெருமக்களாகிய

சதுசேயர், பரிசேயர், மறைநூல் அறிஞர்கள், யூத சமய குருக்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் இரண்டாவது 
வகையைச் சேர்ந்தவர்கள்.

ஒரு நாள் உயிர்த்தெழுதல் பற்றி சதுசேயர் கேட்ட கேள்விக்கு  இயேசு சரியாகப் பதில் சொன்னதைக் கேட்டு வெறுப்படைந்த 

பரிசேயர்களைச் சேர்ந்த ஒரு சட்ட வல்லுநர் இயேசுவைச் சோதிப்பதற்காக ஒரு கேள்வி கேட்டார்.

முதலாவது அவர் ஒரு சட்ட வல்லுநர். அவர் கேட்ட கேள்விக்கு அவருக்குப் பதில் தெரியும்.

அடுத்து அவர் கேள்வி கேட்டது பதிலைத் தெரிந்து கொள்வதற்காக அல்ல, மாறாக இயேசுவை சோதிப்பதற்காக.

பதிலில் ஏதாவது குற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டு பிடித்துச் சுட்டிக் காண்பிப்பதற்காக.

அவர் கேட்ட கேள்வியும், இயேசு கூறிய பதிலும் நம் அனைவருக்கும் தெரியும்.

இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல,

நமது காலத்தில் கூட, அன்று வாழ்ந்தது போல இரண்டு வகையினர்

நம் மத்தியில் வாழ்கின்றனர்.

 மீட்பு பெறுவதற்காக மட்டும் வாழ்பவர் ஒரு வகையினர்.

இவர்கள் தாங்கள் பாவிகள் என்பதை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு,

பாவத்திலிருந்து விடுபட்டு,

பரிசுத்தமான புண்ணிய வாழ்வு வாழ்ந்து,

நமது மீட்பரோடு நித்திய காலம் வாழ்வதற்காக விண்ணகம் செல்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்கள்.

 உலகப் பொருள்களின் மீதுள்ள பற்றை விட்டு, ஆன்மீகத்தில் மட்டும் பற்றுக் கொண்டு வாழ்வார்கள்.

தங்களிடம் உள்ள உலகப் பொருள்களை ஆன்மீக வாழ்வுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இறையன்பு பணிகளுக்கும், பிறர் அன்பு பணிகளுக்கும் மட்டுமே அவற்றை பயன்படுத்துவார்கள்.

சுய இன்பத்திற்காக அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள்.

அவர்களுக்கு இறைவனுடைய பராமரிப்பின் மீது முழுமையான நம்பிக்கை இருக்கும்.

ஆகவே தங்களுக்கு எது நேர்ந்தாலும் இறைவனது விருப்பப்படிதான் நேர்ந்திருக்கும் என்று நம்பி,

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.

உலக பார்வையில் அது வெற்றியாக இருக்கலாம்,

 தோல்வியாக இருக்கலாம்,

 இன்பமாக இருக்கலாம்,

 துன்பமாக இருக்கலாம்,

ஆன்மீகப் பார்வையில் அது இறைவனுடைய திருவுளம்.

அவர்களைப் பொறுத்த மட்டில்,
வியாதிகள் போன்ற துன்பங்கள்

இயேசுவுக்காகச் சுமக்க வேண்டிய சிலுவைகள்.

எப்படி ஒரு பள்ளி மாணவன் தனக்கு ஒரு புதிய பாடப் புத்தகம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவானோ,

அப்படியே இவர்கள் தங்களுக்குப் புதிய நோய் நொடிகள், துன்பங்கள் ஏற்பட்டால்,

அவற்றை தாங்கள் பாவப் பரிகாரம் செய்ய கிடைத்திருக்கும் புதிய வாய்ப்புகள் என நம்பி மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள்.

மண்ணுலகில் வாழ்ந்தாலும் விண்ணுலகையே நினைத்துt வாழ்வதால் 

அவர்கள் மண்ணுலகில் விண்ணுலக வாழ்வின்  முன் ருசியை (Pretaste) அனுபவித்துக் கொண்டு வாழ்வார்கள்.

ஒரு வகையில் விண்ணுலக வாழ்வை மண்ணுலகிலே ஆரம்பித்து விடுவார்கள்.

அடுத்த வகையினர் இதற்கு எதிர்மாறானவர்கள்.

இயேசுவின் காலத்திய 
சதுசேயர்களையும், பரிசேயர்களையும், சட்ட வல்லுநர்களையும் போன்றவர்கள். 

இவர்களும் கோவிலுக்குப் போவார்கள்,

 வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்,

ஜெபக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள்

ஆனால் எங்கு சென்றாலும் ஆன்மீகத்தை வாழ்வதைவிட,

 மற்றவர்களிடம் குற்றம் குறைகள் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் வாழும் இடத்தில் சமாதானம் இருக்காது.

மற்றவர்களைத் திருத்துவதாக நினைத்துக்கொண்டு,

இவர்கள் பேசுகின்ற பேச்சுகளாலும், செய்கின்ற செயல்களாலும்,

பிரச்சனைகள் மட்டுமே தோன்றும்.

பங்கு நிர்வாகக் கூட்டங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பங்குக் குருவுக்கு தலைவலி கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்.

பைபிள் வாசிப்பார்கள், வாழ்வதற்கு அல்ல வாதாடுவதற்கு.

வாசித்த வசனப்படி தாங்கள் வாழ்வதை விட,

யார் யார் வாழ்கின்றார்கள்,
 யார் யார் வாழவில்லை என்பதை ஆராய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுவார்கள்,

ஆனால் உரிய தயாரிப்பு இருக்காது.

காலையில் வீட்டில் பாத்திரங்களைக் கழுவாமல்

 அவற்றில் உணவை வைத்துச் சாப்பிட்டால் 

உணவு தரும் பயனை விட 
வியாதிக் கிருமிகளின் தொல்லையே அதிகமாக இருக்கும்.

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறுமுன் நமது ஆன்மா சுத்தமாக இருக்கிறதா என்பதை முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அசுத்தமான ஆன்மாவோடு அவற்றைப் பெற்றால் அசுத்தம் இன்னும் அதிகமாகும்.

அநேகர் பாவசங்கீர்த்தனத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.

அன்று வாழ்ந்த சதுசேயர்களும், பரிசேயர்களும் இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மரிக்க காரணமாக இருந்தார்கள்.

இன்று அவர்களைப் போல் வாழ்பவர்கள் இயேசுவைப் பாடுகள் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பரிசேயர்களைப் போல வாழாமல்,

மீட்புப் பெற வாழ்ந்த பாவிகளைப் போல் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 23, 2023

"வந்து பார்" (அரு.1:46

 "வந்து பார்" (அரு.1:46)

பிலிப்பு நத்தனயேலிடம் மெசியா நாசரேத் ஊரினர் என்று கூறியபோது,

நத்தனயேல்,  "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்றார்.

 பிலிப்புவோ, 

"வந்து பார்" என்றார்.

"எந்த யூகத்தின் அடிப்படையில் "நாசரேத்தூரிலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமா ?" என்று கூறுகிறீர்களோ தெரியவில்லை.

வந்து மெசியாவைப் பார்த்து உங்கள் அனுபவத்தின் மூலம் உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

கற்பனையை விட அனுபவமே நமக்கு உண்மையை உணர்த்தும்."

என்பது பிலிப்பு கூறியதன் கருத்து.

பைபிள், திருச்சபையின் வரலாறு, புனிதர்களின் வரலாறு  போன்ற நூல்களை வாசிப்பதன் மூலம்

ஆன்மீகம் பற்றிய அநேக உண்மைகளை அறிந்து கொள்கிறோம்.

புனித நூல்களை வாசிப்பது அறிவு பெறுவதற்கோ, 

தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்கோ, 

வினாடி வினாக்களுக்கு பதில் கொடுப்பதற்கோ அல்ல.

 நாம் வாசித்தவற்றை நமது வாழ்க்கை அனுபவமாக ஆக்கும் போது தான் வாசிப்பு பலன் தரும்.

திருப்பலிக்குச் செல்லும்போது குருவானவர் வைக்கின்ற பிரசங்கத்தைக் கேட்கிறோம்.

பிரசங்கத்தைக் கேட்பது அதை விமர்சனம் பண்ணுவதற்கு அல்ல.

"பிரசங்கம் Super" என்று சொல்வதனால் பிரசங்கம் Super ஆகி விடாது.

குருவானவர் கூறுகின்ற ஆன்மீக புத்திமதிகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டு,

அவற்றை மனதில் பதித்து,

நமது சிந்தனை, சொல், செயல் மூலம் நமது வாழ்வாக்கும் போது தான் குருவானவரின் பிரசங்கம் Super ஆகிறது.

இயேசுவைப் பற்றி நிறைய உண்மைகளைத் தெரிந்து வைத்திருக்கிறோம்.

இயேசு கூறுகிறார்,

''என்னை பற்றித் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் என்ன பயனும் இல்லை.

வந்து என்னைப் பார். 

தியானிப்பதின் மூலம் என்னை அனுபவி.

உனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நான் நீயாக வேண்டும்.

திவ்ய நற்கருணைப் பேழையில் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என்னை அடிக்கடி வந்து பார்.

உன் மனதில் உதிக்கும் உள் தூண்டுதல்களை (Inspirations) உனது வாழ்வில் நடைமுறைப்படுத்து.

அப்போதுதான் எனது வார்த்தைகள் உன்னை வாழவைக்கும்.

திருப்பலியில் என்னை வந்து பார். 

வெறுமனே பார்ப்பதற்காக அல்ல, 

திருப்பலியில் கலந்து கொள்வதற்காக என்னை வந்து பார்.

திரு விருந்தின் போது முழங்காலில் இருந்து,

என்னை உனது நாவில் வாங்கி,

என்னை உனது ஆன்மீக உணவாக உட்கொள்ளுவதன் மூலம் 

அனுபவபூர்வமாக நான் உன்னைப் படைத்த கடவுள், 

உனக்காக இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்த மீட்பர் 

என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு, பிரகடனப் படுத்து.

என்னை நீ கையில் வாங்கினால்

 தின்பண்டமாகத் தின்பதற்காக கடையில் வாங்கும் ஆரஞ்சு வில்லையின் மதிப்பைத் தான் எனக்கு கொடுக்கிறாய்.

கையில் வாங்கும் போது தரையில் விழ நேரிடும் நற்கருணைத் துகள்களை வருவோர் போவோரெல்லாம் மிதிக்கும் போது 

அன்று நான் சிலுவையைச் சுமந்தபோது ரோமானியப் படைவீரர்கள் எனக்கு செய்த கொடுமைகளை நீ எனக்குச் செய்கிறாய்.

அவர்கள் எத்தனை முறை என்னைக் காலால் மிதித்தார்கள் தெரியுமா?

அந்த அனுபவத்தை நீ எனக்குத் திரும்பவும் தர வேண்டுமா?

என்னை வந்து பார்.

உனக்காக நான் பட்ட 
அவமானங்களைச் சிந்தித்துப் பார்.

அவை திரும்பவும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்.

என்னை வந்து பார், 
நீ மீட்பு பெறுவதற்காக.

என்னை வந்து பார், 
உனது ஆன்மீக வாழ்வுக்கு வேண்டிய அருள் வரங்களைப் பெறுவதற்காக.

என்னை வந்து பார், 
நிலைவாழ்வு பெறுவதற்காக."

நமது ஆன்மீக வாழ்வை அனுபவப் பூர்வமாக வாழ்வோம்.

அன்று நத்தனயேல் இயேசுவை அனுபவப் பூர்வமாக வாழ்ந்தது போல நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, August 22, 2023

"இவ்வாறே கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்." (மத்.20:16)

"இவ்வாறே கடைசியானோர் முதலாவர், முதலானோர் கடைசியாவர்." (மத்.20:16)

தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவர்

நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்று வேலையாட்களுடன் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினார்.

அதே கூலி அடிப்படையில்
 9 மணிக்கும்,

பன்னிரண்டு மணிக்கும் 

பிற்பகல் மூன்று மணிக்கும்
 
 ஐந்து மணிக்கும்

ஆட்கள் வேலைக்கு அமர்த்த படுகின்றனர்.


மாலையானதும் திராட்சைத் தோட்டத் தலைவர் தன் காரியத்தலைவனிடம்,

 "வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு" என்றார்.

ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்டவர்கள் வந்து தலைக்கு ஒரு வெள்ளிக்காசு பெற்றுக்கொண்டார்கள்.

இதைக் கவனித்த முதலில் வந்தோர் தங்களுக்கு அதிகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அனைவருக்கும் அதே கூலி தான் கொடுக்கப்பட்டது.

விண்ணரசுக்குச் செல்ல ஆள்களைத் தயார் செய்ய பூமியில் நிறுவப்பட்ட திராட்சை தோட்டம் தான் நமது தாயாகிய கத்தோலிக்க திருச்சபை.

திருச்சபை தன்னில் இணைந்து ஆன்மீக வாழ்வு வாழ்பவர்களுக்கு நித்திய நிலை வாழ்வு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கின்றது. 

சிலர் குழந்தைப் பருவத்திலிருந்து தங்கள் வாழ்நாளின் இறுதி கட்டம் வரை திருச்சபையில் ஆன்மீக வாழ்வு வாழ்கின்றார்கள்.

சிலர் குழந்தைப் பருவத்திலிருந்து எப்படியெல்லாமோ வாழ்ந்து விட்டு முப்பது வயதில் திருச்சபையில் ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

 சிலர் 50 வயதிலும், 
சிலர் 70 வயதிலும், 
சிலர் மரண நேரத்திலும் 
ஆன்மீக வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் ஆன்மீக வாழ்க்கையை வாழும் காலம் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது.

ஆனால் மரணத்துக்குப் பின் எல்லோருக்கும் நித்திய நிலை வாழ்வு வழங்கப்படுகிறது.

பூமியில் நீண்ட நாள் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு நீண்ட கால மோட்சமும்,

குறைந்த காலம் ஆன்மீக வாழ்வு வாழ்ந்தவர்களுக்கு குறுகிய கால மோட்சமும் வழங்கப்படுவதில்லை. 

எல்லோருக்கும் நித்திய கால வாழ்வு தான்.

முதலில் நிலை வாழ்வு பெற்றோர் கடைசியில் பெற்றோருக்கு சமமாகி விடுகிறார்கள்.


கடைசி = முதல்
முதல் = கடைசி

விண்ணக சாம்ராஜ்யத்திற்குள்

 கடைசியில் நுழைப்பவர், முதலில் நுழைப்பவருக்கு சமமாவர்.

முதலில் நுழைப்பவர் கடைசியில் 
நுழைப்பவருக்குச் சமமாவர்.

அது எப்படி?

உலகில் ஒரு அலுவலகத்தில் பணி புரிவோருக்கு உரிய பணிமூப்புப் பட்டியல்
 (Seniority list) தயாரிப்பவர்கள் முதலில் பணியில் சேர்ந்தவர்களிடமிருந்து ஆரம்பிப்பர்.

உலகம் இடம், நேரம் ஆகிய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.

ஒரு குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இருந்தால்

 ஒவ்வொருவர் இருக்கவும் ஒரு இடம் இருக்கும்.

 ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருக்க முடியாது.

மேலும் ஒவ்வொருவரும் பிறந்த ஆண்டிலிருந்து அவர்களுடைய வயது கணக்கிடப்படும்.

நால்வரில் மூத்தவர்களும் இருப்பர். இளையவர்களும் இருப்பர்.

ஆனால் விண்ணரசு இடம், நேரம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது.
(Beyond place and time)

உலகில் இருப்பது போல் அங்கு இடம் கிடையாது,

 நேரமும் கிடையாது.

உலகம் படைக்கப்பட்டது முதல் நேரம் ஆரம்பித்தது.

உலகம் முடியும் போது நேரமும் முடிவுக்கு வந்துவிடும்.

ஆனால் விண்ணரசுக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை.

 ஏனென்றால்,

விண்ணரசராகிய கடவுளுக்கு துவக்கமும் இல்லை, முடிவும் இல்லை.

உலக கணக்கின்படி 1990மாவது ஆண்டில் ஒருவர் விண்ணரசுக்குள் நுழைந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொருவர் 2000மாவது ஆண்டில் நுழைந்தார்.

உலக கணக்கின்படி ஒருவர் முன்னாலும் இன்னொருவர் பின்னாலும் நுழைந்தார்கள்.

ஆனால் நேரம் இல்லாத விண்ணுலகில் முன், பின் என்ற கருத்துக்கே இடமில்லை.

உலக கணக்குப்படி முதலாமவர்களும், கடைசியானவர்களும்

விண்ணகத்தில் ஒன்றுதான்.

மக்கள் உலக கணக்குப்படி எந்த காலத்தில் விண்ணரசில் நுழைந்தாலும்

அவர்களுக்கு நித்திய நிலைவாழ்வு தான் சன்மானமாக வழங்கப்படும்.

விண்ணரசில் துவக்கம், முடிவு, நேற்று, இன்று, நாளை போன்ற காலக் கருத்துகளுக்கு இடமில்லை.

2023ஆண்டுகளுக்கு முன் விண்ணரசுக்குள் நுழைந்த நல்ல கள்ளனுக்கும் 

இன்று நுழைப்பவர்களுக்கும்,

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து நுழைப்பவர்களுக்கும்

ஒரே நிலைவாழ்வு தான்.

உவமையில் வரும் திராட்சை தோட்ட முதலாளி நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்ற அடிப்படையில் வேலைக்கு ஆள் அமர்த்தியது போல 

நமது ஆண்டவராகிய இயேசு,

"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனது வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரிடத்தில் விசுவாசம் கொள்பவன், முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்." 

என்று வாக்களித்துள்ளார்.

"அவர் நமக்கு வாக்களித்தது முடிவில்லா வாழ்வாகும்."
(1அரு.2:25)

ஏக, பரிசுத்த. கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையில் வாழும் நமக்கு நித்திய நிலை வாழ்வு காத்திருக்கிறது.

லூர்து செல்வம்.

Monday, August 21, 2023

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"(மத்.19:24).

"பணக்காரன் விண்ணரசில் நுழைவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது"
(மத்.19:24)

''தாத்தா, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியுமா?"

"'உன்னால் நுழைய முடியுமா?"

"அதற்குள் ஒரு நூலை நுழைக்கவே நான் படுகிற பாடு!

என்னாலும் நுழைய முடியாது, ஒட்டகத்தாலும் நுழைய முடியாது."

"'ஆனால் ஒட்டகத்தால் நுழைய முடியும் என்று ஆண்டவர் சொல்கிறாரே!"

"அவர் அப்படிச் சொல்லவில்லை. 

ஊசியின் காதில் எப்படி ஒட்டகத்தால் நுழைய முடியாதோ,

அதேபோல் பணக்காரர்களாலும் 
விண்ணரசில் நுழைய முடியாது என்று சொல்கிறார்.

அது எப்படி என்று தான் புரியவில்லை."

"'உனக்கு மட்டுமல்ல இயேசுவின் சீடர்களுக்கே புரியவில்லை. 

 "அப்படியானால் யார்தான் மீட்புப்பெற முடியும்?" என்று இயேசுவிடம் கேட்டனர்."

"அதற்கு ஆண்டவர் சொன்ன பதிலும் புரியவில்லை.

"மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்" என்று ஆண்டவர் பதில் சொன்னார்.

கடவுள் சர்வ வல்லவர் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் பணக்காரனால் முடியாது என்று கூறிவிட்டு,

பணக்காரனால் முடியாதது கடவுளால் முடியும் என்று கூறுவதற்கு

கடவுள் தனக்கு இஷ்டப்பட்ட பணக்காரர்களை மட்டும் தான் மோட்சத்திற்குக் கூட்டிக் கொண்டு போவார் என்று அர்த்தமா?"

"'ஆமா. தனக்கு இஷ்டப்பட்ட பணக்காரர்களை மட்டும் தான் விண்ணரசில் சேர்த்துக் கொள்வார்"

"இது அதைவிடப் புரியவில்லை.
நல்லவர்கள் விண்ணரசுக்குள், நுழைவார்கள் கெட்டவர்கள் நுழைய மாட்டார்கள் என்று சொன்னால் புரியும்.

கடவுளுக்கு இஷ்டப்பட்டவர்கள் விண்ணரசுக்குள் நுழைவார்கள்,

கடவுளுக்கு இஷ்டப்படாதவர்கள்
நுழைய மாட்டார்கள் என்று சொன்னால் எப்படிப் புரியும்?"

"'நான் சொன்னதையே தான் நீயும் சொல்கிறாய்.

ஆனால் புரியவில்லை என்கிறாய்.

நான் நான்கும் ஐந்தும் ஒன்பது என்கிறேன்,

நீ 'அதெப்படி? ஐந்தும் நான்கும்தான் ஒன்பது' என்கிறாய்."

"தாத்தா, குழப்பாமல் முழுப் பதிலையும் நீங்களே கூறி விடுங்கள்."

"'உலகில் வாழ்பவர்கள் எல்லோரிடமும் பணம் இருக்கிறது.

அந்த அர்த்தத்தில் எல்லோரும் பணக்காரர்கள் தான்.

தாங்கள் வைத்திருக்கும் பணத்தின் காரணமாக யாரும் விண்ணரசில் நுழைய முடியாது.

பணத்தின் மேல் பற்று உள்ளவர்கள் விண்ணரசில் நுழையவே முடியாது. ஏனெனில் அவர்கள் பணத்துக்கு ஊழியம் செய்பவர்கள்.

அவர்கள் கடவுளின் இஷ்டப்படி,

 அதாவது,

 விருப்பப்படி,

 அதாவது,

 சித்தப்படி நடக்காதவர்கள்.

கடவுளின் சித்தப்படி நடக்காதவர்கள் எப்படி விண்ணரசில் நுழைய முடியும்?

பணத்தின் மீது பற்று இல்லாமல் கடவுள் மீது மட்டும் பற்று உள்ளவர்கள் உறுதியாக விண்ணரசில் நுழைவார்கள்.

கடவுள் மீது மட்டும் பற்று உள்ளவர்கள் கடவுளின் இஷ்டப்படி வாழ்வார்கள்,

அதாவது,"


"கடவுளின் சித்தப்படி வாழ்வார்கள். அவர்களுக்கு விண்ணரசு உரியது."

"'ஒருவன் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது.

கடவுளுக்கு ஊழியம் செய்பவன் பணத்துக்கு ஊழியம் செய்ய மாட்டான்.

பணத்துக்கு ஊழியம் செய்பவன் கடவுளுக்கு ஊழியம் செய்ய மாட்டான்.

கடவுளுக்கு ஊழியம் செய்யும்  பணக்காரன் கடவுளின் இஷ்டப்படி பணம் சம்பாதிப்பான்.

தன்னிடம் உள்ள பணத்தைக் கடவுளின் இஷ்டப்படி செலவழிப்பான்.

ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகச் செலவழிப்பான்.

அதாவது பிறரன்புப் பணிகளில் செலவழிப்பான்.

அவன் கடவுளின் விருப்பப்படி வாழ்வதால் விண்ணரசில் நுழைவான்.

ஆனால்,

பணத்துக்கு ஊழியம் செய்யும் பணக்காரன் பணத்தைச் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருப்பான்.

எப்படி வேண்டுமானாலும் பணம் சேர்ப்பான்.

 பிறரன்புப் பணிகளுக்காக எதுவும் செய்ய மாட்டான்.

பிறரிடம் உள்ளதை தன்வசப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவான்.

அவனைப் பொருத்தமட்டில் பணம் மட்டும்தான் அவன் கடவுள், அவனைப் படைத்தவர் அல்ல.

 அவனைப் படைத்த கடவுளின் சித்தத்துக்கு எதிராக செயல்படுபவன் எப்படி விண்ணரசில் நுழைய முடியும்?"


"தாத்தா, எனக்கு இப்போது ஒரு சிறு சந்தேகம்.

பணத்தின் மீது பற்றுள்ள ஒருவன் இறைவனின்  கட்டளைகளின் படி நடந்தால் விண்ணகம் செல்வானா?"

"'உனது கேள்வியே தவறு.

பணத்தின் மீது பற்றுள்ளவனால் இறைவனின் கட்டளைகளை அனுசரிக்க முடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசி என்பது கடவுளின் கட்டளை.

ஆனால் அவன் எல்லாவற்றுக்கும் மேலாக பணத்தை நேசிப்பான்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக்குச் செல்லாமல் வியாபாரத்தைக் கவனித்தால் இரண்டு லட்சம் ரூபாய் ஆதாயம் வரும் என்று தெரிந்தால் அவன் கோவிலுக்குப் போவானா, கடைக்குப் போவானா?"

"கோவிலுக்குப் போகின்ற ஒவ்வொருவருக்கும் பங்குச் சாமியார் மூன்று லட்சம் ரூபாய் கொடுப்பார் என்று அறிவித்தால்,

 அவன் தினமும் கோவிலுக்குப் போவான், கடவுளை வணங்க அல்ல, பணத்தைப் பெற்று வர."

"'பணத்தின் மீது மட்டும் பற்று உள்ளவனுக்கு இறையன்பும் இருக்காது, பிறர் அன்பும் இருக்காது.

பிறரன்பே இல்லாதவன் பிறரன்பை சார்ந்த கட்டளைகளுக்கு எப்படிக் கீழ்ப்படிவான்?

பண ஆசை உள்ள மகன் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டுவானேயொழிய, பெற்றோரைக் கவனிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டான்.

ஒரு நாட்டின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காக அதன் மீது போர் தொடுக்கும் நாடு அதற்காக எத்தனை கொலைகள் செய்கின்றது?

உலகில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட

 போர்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம்.

பணத்துக்கு ஊழியம் செய்பவன்

 இறைவனுக்கும் ஊழியம் செய்ய மாட்டான்,

 அயலானுக்கும் ஊழியம் செய்ய மாட்டான்.

பணம் வைத்திருப்பவன் இறைவன் மீது பற்று உள்ளவனாக இருந்தால் 

இறையன்புப் பணிகளுக்கும், பிறரன்பு பணிகளுக்கும் தன்னிடமுள்ள பணத்தைச் செலவழிப்பான்.

கடவுள் மீது மட்டும் அவனிடம் பற்று இருப்பதால், அவன் விண்ணரசில் நுழைவான்.

பணக்காரனுடைய மீட்பு பற்றி இயேசு கூறியது புரிகிறதா?"

"புரிகிறது."

"'நீ ஈட்டும் பணத்தை என்ன செய்வாய்?"

"அன்பு பணிகளுக்காகச் செலவழிப்பேன்."

"'உனக்காகச் செலவழிக்க மாட்டாயா?"

"நானும் கடவுளுடைய பிள்ளை தானே. கடவுளுடைய எல்லா பிள்ளைகளுக்கும் சேவை செய்ய நமக்குக் கடமை இருக்கிறது."

லூர்து செல்வம்.

Sunday, August 20, 2023

"என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?"(மத்.19:20)

"என்னிடத்தில் இன்னும் குறைவாய் இருப்பதென்ன?"
(மத்.19:20)

நிலை வாழ்வு பெற விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்..


கட்டளைகளைக் கடைப் பிடித்து வாழ்ந்தால், 

அதாவது,

பாவம் இல்லாமல் வாழ்ந்தால் உறுதியாக மோட்ச வாழ்வு கிடைக்கும்.

பள்ளிக்கூடத்தில் தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்றால் வெற்றி பெற்று விடலாம்.

ஆனால் நாம் அதோடு திருப்தி அடைந்து விடலாமா?

நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற முயற்சி செய்ய வேண்டாமா?

அவ்வாறேதான் ஆன்மீகத்திலும் நாம் நிறைவு (perfection) பெற முயற்சி செய்ய வேண்டும்.

இயேசு சொல்கிறார்,

"நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்."

நிறைவு பெற விரும்புகிறவர்கள் முதலில் தங்களது உடமைகள் எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

பிறகு இயேசுவை முழுமையாகப் பின் செல்ல வேண்டும்.

அவர்களுக்கு வானகத்தில் நிறைய செல்வம் கிடைக்கும்.

இயேசு கொடுத்திருக்கிற இந்த நற்செய்தியை நாம் எப்படி நமது வாழ்வாக மாற்றுவது.

நாம் எல்லோரும் ஒரே மாதிரியான உடைமைகள் உள்ளவர்கள் அல்ல.

சிலருக்கு நில உடைமைகள், கட்டடங்கள், வாகனங்கள் நிறைய இருக்கலாம் 

அல்லது 

உபயோகத்துக்கு போதுமான அளவு மட்டும் இருக்கலாம்.

சிலர் மாதச் சம்பளம் வாங்குபவர்களாக இருக்கலாம்.

இவர் அன்றாடக் கூலிக்கு வேலை செய்பவர்களாக இருக்கலாம்.

நற்செய்தி அறிவுரை ஒன்று தான்.

அரசு பதிவு அலுவலகம் மூலமாகவோ, அல்லது நேரடியாக பணத்துக்கோ உடைமைகளை விற்று

பணத்தை ஏழைகளுக்கு பங்கு வைத்து கொடுக்க வேண்டுமா? 

துறவற அந்தஸ்துக்கு அழைக்கப்படும் நம்மவர்கள் தங்களுக்கு உரிமையான உலகைச் சார்ந்த சொத்துக்களின் உரிமையை கைவிட்டு விட்டு ஒன்றும் இல்லாதவர்களாக துறவற சபைகளில் சேர்ந்து விடுகிறார்கள்.

பின் சபை விதிமுறைகளின் படி வாழ்கிறார்கள்.

ஒருமுறை துறவற சபையைச் சார்ந்த ஒருவர் பிரயாணம் செய்த வாகனத்தைப் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர்,

"சுவாமி, நீங்கள் உங்களது உலகச் சொத்துக்களைத் துறந்து விட்டு ஏழ்மை வார்த்தப் பாட்டின் படி வாழும் சபையில் சேர்ந்து வாழ்வதாகச் சொல்கிறீர்கள்.

ஆனால் நீங்கள் பயன்படுத்தும் விலை உயர்ந்த வாகனத்தைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே?" என்றார்.

அதற்கு அந்தத் துறவி,

"இந்த வாகனம் எனக்கு உரியது அல்ல, நான் பயன்படுத்துகிறேன், அவ்வளவுதான்." என்றார்.

அவர் சொல்லுவது உண்மையாக இருக்கலாம்.

ஆனால் சொந்தப் பொருளாகப் பயன்படுத்தினாலும்,

சொந்தமில்லாமல் பயன்படுத்தினாலும் 

பயன்படுத்துவதுதான்.

இயேசு உலகை முழுவதும் படைத்து, பராமரித்து வருபவர். 

ஆனால் அவர் மனிதனாகப் பிறந்த போது அதற்காக ஒரு மாட்டு தொழுவத்தைத் தான் பயன்படுத்தினார்.

சூசையப்பருக்கு நாசரேத்தூரில் சொந்த வீடு இருந்தது.

நினைத்திருந்தால் இயேசு அங்கேயே பிறந்திருக்கலாம்.

ஆனால் நமக்கு முன்மாதிரிகை காண்பிப்பதற்காகத்தான் அவர் மாட்டுக் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அது மட்டுமல்ல 30 ஆண்டுகள் திருக் குடும்பத்தில் அவர் வாழ்ந்த போது தச்சுத் தொழில் செய்து தான் வாழ்ந்தார்.

ஐந்து அப்பத்தை 5000 பேருக்கு பங்கு வைத்தவருக்கு தச்சுத் தொழில் செய்து தான் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் உழைப்பின் மகிமையை உலகிற்கு உணர்த்த அவரே உழைத்தார்.

பொது வாழ்வின் போது எங்கு சென்றாலும் நடந்து தான் சென்றார்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவரை உணர்வுப் பூர்வமாக பின்பற்றுபவர்கள்.

அவர் வாழ்ந்தபடியே சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் நாம் வாழ வேண்டும்.

துறவிகளின் வாழ்க்கை முற்றிலும் இயேசுவின் வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

இந்த நற்செய்தி துறவிகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது அல்ல.

எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.

ஆடரம்பர வசதிகள் இல்லாத தனது சொந்த வீட்டில் வாழ்ந்து கொண்டு 

அரசு ஊழியராகவோ ஆசிரியராகவோ 

பணி புரியும் ஒருவர் எப்படி தனக்குரியதை விற்று ஏழைகளுக்குக் கொடுப்பது?

அதற்கு உடமைகளை விலைக்கு விற்று ஏழைகளுக்கு உதவ வேண்டிய அவசியம் இல்லை.

தன்னையும், தனது உடைமைகளையும் முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டாலே போதும்.

இறைவனுக்கு உரியதை நாம் பயன்படுத்துபவர்களாக மாறிவிடுவோம்.

நாம் பயன்படுத்துவதை ஏழைகளுக்கும் உதவிகரமாக இருக்கும் படியாக பயன்படுத்த வேண்டும்.

வெளியே சென்று உணவைப் பங்கு வைக்க முடியாவிட்டாலும்,

வீட்டு வாசலில் நின்று கொண்டு

 "அம்மா தர்மம்"

 என்று அழைக்கும் சகோதரருக்கு நமது உணவில் பங்கு அளிக்கலாமே!

இதற்கு தேவைப்படுவது இறைவனுக்காக உதவும் மனம் மட்டுமே.

"உன்னை நேசிப்பது போல உனது அயலானையும் நேசி"

என்ற இறைக் கட்டளைக்குள் அனைத்தும் வந்துவிட்டது.

பத்துக் கட்டளைகளின் படி
 நடப்பவர்களுக்கு குறைவாய் இருப்பது அவர்களது உடைமைகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழ்வதுதான்.

பகிர்ந்து உண்டால் பசி தீரும்,

உடல் பசி மட்டுமல்ல, ஆன்மீகப் பசியும் தான்.

லூர்து செல்வம்.

Friday, August 18, 2023

"குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே"(மத்.19:14)

"குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே"
(மத்.19:14)

புதிய ஏற்பாட்டின் முதல் வேத சாட்சிகள் மாசில்லாக் குழந்தைகள்.

கிறிஸ்து யார் என்று அறிய முன்னரே

அவருக்காக உயிரைக் கொடுத்தவர்கள் அவர்கள்.

குழந்தைகளுக்கு தாங்கள் யார் என்று தெரியாது.

எதற்காக உலகத்தில் பிறந்திருக்கிறோம் என்று தெரியாது.

தங்களைப் படைத்தவர் யார் என்று தெரியாது.

பாவம் என்றால் என்ன என்று தெரியாது.

அவர்களால் பாவம் செய்யவும் முடியாது.

தாங்கள் ஞானஸ்நானம் பெற்று ஜென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டோம் என்று தெரியாது.

ஜென்மப் பாவம் என்றால் என்ன என்றே தெரியாது.

விசுவாசம் என்றால் என்ன என்றே தெரியாது.

ஒரே வரியில் அவர்களுக்கு எதுவுமே தெரியாது,

அவர்கள் தான் பாக்கியசாலிகள்.

இயேசு பாவம் செய்ய முடியாத பரிசுத்தர்.

அவரால் தனது விருப்பத்திற்கு எதிராக செயல்பட முடியாது,

ஆகவே பாவம் செய்ய முடியாது.

குழந்தைகளாலும் பாவம் செய்ய
 முடியாது,

ஏனென்றால் அவர்களுக்கு பாவம் என்றால் என்ன என்றே தெரியாது.

குழந்தைகள் பாவம் இன்றி இருப்பதால் அவர்கள் பரிசுத்தர்கள்.

பரிசுத்தராகிய இயேசு பரிசுத்தர்களாகிய குழந்தைகளை விரும்புகிறார்.

ஆகவேதான் "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்" என்கிறார்.

குழந்தைகளைப் போல் பாவம் இல்லாதிருப்பவர்களுக்குத் தான் விண்ணரசு உரியது.


சீடர்கள் இயேசுவிடம் , "விண்ணரசில் யார் பெரியவன்?" என்று கேட்டபோது, அவர் பதிலாக 

 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: 

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்.

எனவே, இக்குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுகிறவன் எவனோ, 

அவனே விண்ணரசில் பெரியவன்.


"மேலும் இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்கிறவன் எவனும்,

 என்னையே ஏற்றுக்கொள்கிறான்."
(மத்.18:3,4)

மனித வாழ்க்கை குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்து முதுமைப் பருவத்தில் முடிவடைகிறது.

ஏன் இயேசு "நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்." என்கிறார்?

இயேசு இவ் வார்த்தைகளை குழந்தைகளைப் பார்த்து சொல்லவில்லை.

வயதானவர்களைப் பார்த்து தான் சொல்கிறார்.

குழந்தைகளால்தான் வயதானவர்களாக மாற முடியும்.

குழந்தை வளர்ந்து, பையனாகி, வாலிபனாகி, பெரிய மனிதனாகி, கிழவனாகி மரணம் அடைகிறான்.

ஆனால் கிழவனால் வாலிபனாகவோ பையனாகவோ குழந்தையாகவோ பின்னுக்கு வளர முடியாது.

இங்கே குறிப்பிடப்பட்டிருப்பது உடல் ரீதியான வளர்ச்சி, அல்லது, மாற்றம்.

உடல்ரீதியாக ஒரு குழந்தை பையனாக மாற முடியும், ஆனால் பையனால் குழந்தையாக மாற முடியாது.

ஆனால் இயேசு பேசுவது ஆன்மீகம்.

ஆன்மீகத்தில் ஒரு குழந்தை பாவ மாசு இல்லாமல் பரிசுத்தமாய் இருக்கிறது.

குழந்தைக்குக் கடவுளின் கட்டளைகள் தெரியாது, ஆகவே அவற்றை மீற முடியாது.

அதாவது குழந்தையால் பாவம் செய்ய முடியாது.

குழந்தை பையனாக மாறியபின் அது குழந்தை அல்ல.

பையனுக்குக் கடவுளின் கட்டளைகள் போதிக்கப்படுகின்றன.

அவன் கட்டளைகளை மீறும் போது பாவம் அவனுக்குள் நுழைகிறது, பரிசுத்தத்தனம் வெளியேறுகிறது.

பாவ நிலையில் அவன் விண்ணரசுக்கு ஏற்றவன் அல்ல.

அவன் விண்ணரசுக்கு ஏற்றவனாக மாற வேண்டுமென்றால்,

ஆன்மீகத்தில் அவன் குழந்தையாக மாற வேண்டும்,

அதாவது பாவத்தை விட்டு வெளியேறி பரிசுத்தமானவனாக வாழ வேண்டும்.

குழந்தைக்கு கட்டளைகள் தெரியாததால் அது பரிசுத்தமாக இருக்கிறது.

பையன் கட்டளைகளை அறிந்த பின்னும் தான் குழந்தையாய் இருந்தபோது தன்னிடம் இருந்த பரிசுத்த நிலையைப் பாதுகாக்க வேண்டும்.

அதாவது அறிந்த கட்டளைகளின் படி வாழ வேண்டும்.

50 வயதான ஒரு முதியவர் பாவங்களால் நிறைந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

உடல் ரீதியாக அவர் முதியவர்.

ஆன்மீக ரீதியாக அவர் குழந்தையாக மாற வேண்டும்.

எப்படி மாறுவது?

தான் செய்த எல்லா பாவங்களுக்காகவும் உத்தம மனஸ்தாபப்பட்டு,

 இறைவனிடம் மன்னிப்பு கேட்டு,

 பாவ சங்கீர்த்தனம் செய்தால் அவரது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்.

"ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்; என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன்."
(திருப்பாடல்கள்.51:7)

என்ற சங்கீதப் படி அவரது ஆன்மா பரிசுத்தம் அடைகிறது.

அவர் உடல் ரீதியாக முதியவர்.
ஆன்மீக ரீதியாகக் குழந்தை.

உடல் ரீதியாக நாம் என்ன மாற்றம் அடைந்தாலும்,

ஆன்மீக ரீதியாக நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தைப் பத்திரமாக காப்பாற்ற வேண்டும்.

உடல் ரீதியாக நமக்கு எத்தனை வயது ஆனாலும் ஆன்மீக ரீதியாக குழந்தையாகவே இருக்க வேண்டும்.

எழுபது வயதில் மரணம் அடைந்தாலும் விண்ணகத்திற்குள் குழந்தையாகவே நுழைவோம், 

ஒரு விவசாயி கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தை சுத்தப்படுத்திய பின் 

அதை உழுதுப் பண்படுத்தி பயிர்த்தொழில் செய்வதுபோல,

 பாவங்களாகிய கல்லும் முள்ளும் நிறைந்த நமது ஆன்மாவைப்

 பாவ சங்கீர்த்தனத்தின் மூலம் பரிசுத்தப் படுத்திய பின்

 அதை ஆன்மீக ரீதியாகப் பண்படுத்தி

புண்ணியங்களாகிய நாற்றுக்களை நட்டு,

இறைவனின் அருளாகிய நீரைப் பாய்ச்சிப் புண்ணியப் பயிரை வளர்க்க வேண்டும்.

பயிர் பூத்துக், காய்த்துப் பலன் தரும்.

நமது மரணத்தின் போது அறுவடை செய்து 

நமது உழைப்பின் பலனை விண்ணகத்திற்குள் எடுத்துச் செல்வோம்.

"குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன்."

குழந்தை எப்போதாவது தனது பெருமைகளைப் பற்றி பீத்திக் கொள்வதைப் பார்த்திருக்கிறோமா?

"என்னிடம் எதுவும் இல்லை, தாருங்கள்" 

"பசிக்கிறது, ஊட்டுங்கள்."

"என்னால் நடக்க முடியவில்லை, எடுத்துக் கொள்ளுங்கள்"

"எனக்கு முத்தம் கொடுங்கள், என்னோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருங்கள்"

என்று தான் குழந்தை சொல்லும். 

குழந்தை தாழ்ச்சியுள்ளது.
தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.

ஆதலால் தான், ''குழந்தையைப்போலத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் விண்ணரசில் பெரியவன்.''

என்று ஆண்டவர் சொல்கிறார்.

நாம் இவ்வுலகில் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல,

எவ்வளவு பரிசுத்தர்களாக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.

ஒரு குழந்தையைப் பார்க்கும் போது அதன் மாசின்மை கருதி,

அதைக் கையில் எடுத்து,

கன்னத்தில் முத்தமிட்டால்,

நாம் இயேசுவையே கையில் எடுத்து முத்தம் கொடுக்கிறோம்.

லூர்து செல்வம்

Thursday, August 17, 2023

"இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"(மத்.19:6)

"இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"
(மத்.19:6)

இப்போதெல்லாம் செய்யக்கூடாததை செய்வதுதான் நாகரீகம் (Fashion) ஆகிவிட்டது.

பசிக்காக மட்டும் சாப்பிடுவது நடைமுறை.
ருசிக்காக மட்டும் சாப்பிடுவது நாகரீகம்.

உடலை மறைக்க உடை அணிவது நடைமுறை.
உடலைக் காண்பிப்பதற்காகவே உடை அணிவது நாகரீகம்.

ஒழுங்காக நடப்பது நடைமுறை.
கோணிக்கோணி நடப்பது நாகரீகம்.

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்வது நடைமுறை.
விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து போவது நாகரீகம்.

நாகரீகம் என்பது ஒரு நல்ல வார்த்தை. ஆனால் அதன் பெயரால் அநேக அட்டூழியங்கள் நடக்கின்றன.

கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்.

ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்ததாக வரும் பைபிள் வசனம் நமக்குத் தரும் இறை செய்தி 

ஆதாம் ஏவாள் இருவருக்கும் ஒரு உடல், ஈருயிர், ஓருடல்.

உடலிலிருந்து உயிர் பிரியும்போது ஏற்படுவது மரணம்.

கணவன், மனைவி என்ற இரண்டு உயிர்களைக் கொண்ட திருமணம் என்ற ஒரு உடலிலிருந்து

ஏதாவது ஒரு நபர் பிரிந்து விட்டாலும் திருமணம் என்ற உடல் இறந்து விட்டது.

திருமணத்தை இணைப்பது இறைவன்.

அதிலிருந்து பிரிந்து செல்வோர் இறைவனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

ஒரு முறை, திருமணமாகி சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இரண்டு தம்பதியர் பங்குக் குருவானவரைப் பார்க்க வந்தார்கள். 

கணவன் சொன்னான்:

''சுவாமி, நீங்கள் தான் எங்களைத் திருமணத்தில் சேர்த்து வைத்தீர்கள்.

இப்போது எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை.

சேர்த்து வைத்த நீங்களே எங்களைப் பிரித்து வைத்து விடுங்கள்."

குருவானவர் சொன்னார்,

"ஏழு தேவத்திரவிய அனுமானங்களில் திருமணத்தை தவிர மற்ற ஆறையும் குருவானவர் நடத்தி வைக்கிறார்.

திருமணத்தை நடத்துபவர்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் தான். குருவானவர் பார்வையாளர் மட்டுமே."

"அப்படியானால் நாங்களாக பிரிந்து போய்விடலாமா?"

"'முடியாது. யார் முன்னால் திருமணம் செய்து கொண்டீர்கள்?"

"உங்கள் முன்னால் தான்."

"'என் அறையிலா?"

".இல்லை. கோவிலில்."

"'கோவிலில் யார் முன்னால்?"

"திவ்ய நற்கருணை ஆண்டவர் முன்னால்."

"'அப்படியானால் இருவரும் கோவிலுக்கு வாருங்கள் "

சென்றார்கள்.

"'திவ்ய நற்கருணை ஆண்டவர் முன்னால் இருவரும் அருகருகே முழங்காலில் இருங்கள்.

இருவரும் திவ்ய நற்கருணை பேழையில் இருக்கும் ஆண்டவரைப் பார்த்துக் கொண்டே இருங்கள்."

"எவ்வளவு நேரம்?"

"'அவர் உங்களை பிரித்து விடும் மட்டும்."

"பிரித்து விட்டு விடுவாரா?"

"நிச்சயமாக."

சுவாமியார் அறைக்குச் சென்று விட்டார்.

கணவனும் மனைவியும் திவ்ய நற்கருணை நாதரை மணிக்கணக்காகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.

மதியானம் ஆனது. பசி எடுத்தது. ஆண்டவர் வெளியே வரவில்லை.

தொடர்ந்து முழங்காலில் இருந்தார்கள். மூன்று மணி ஆனது.

பசி மயக்கம் வந்தது. ஆனால் ஆண்டவர் வரவில்லை.

கணவன் மனைவியைப் பார்த்து,

"திவ்ய நற்கருணை பேழையிலிருந்து ஆண்டவர் வருவது போல் தெரியவில்லை, 

வா, திரும்பவும் சாமியைப் பார்ப்போம்."

இருவரும் எழுந்து குருவானவரிடம் வந்தார்கள்.

"சுவாமி மணிக்கணக்காக ஆண்டவரை பார்த்துக் கொண்டே இருந்தோம், 

எங்களுக்குப் பசிக்கிறதே தவிர ஆண்டவர் வருவதாகத் தெரியவில்லை."

"'பசிக்கும், பசிக்கட்டும்."

"எவ்வளவு நேரம் பசியோடு இருக்க வேண்டும்?"

"உங்கள் இருவரில் ஒருவர் இறக்கு மட்டும். ஒருவர் இறந்தவுடன் அவரை இயேசு அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

மீதம் இருப்பவர் வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்."

''சுவாமி என்ன விளையாடுகிறீர்களா?

நாங்கள் மணவிலக்கு கேட்டால் எங்களை பட்டினி கிடந்து சாகச் சொல்கிறீர்கள்?''

'"மரணத்தால் மட்டுமே கணவனையும் மனைவியையும் பிரிக்க முடியும்.

தற்கொலை செய்யக்கூடாது.

அதனால் தான் ஆண்டவரையே பார்த்துக் கொண்டிருங்கள் என்று சொன்னேன்.

அவருக்கு எப்போது விருப்பமோ அப்போது வந்து ஒருவரையோ இருவரையுமோ அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

அவர் முன்னால் தான் திருமணம் செய்து கொண்டீர்கள். அவர்தான் முடிவு எடுக்க வேண்டும்."

''இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்?"

"'வீட்டுக்குச் சென்று உங்கள் இருவரில் ஒருவர் மரிக்குமட்டும் சேர்ந்து வாழுங்கள்.

வீட்டுக்குச் செல்லுங்கள். இயேசு உங்களோடு இருப்பாராக."

கடவுள் இணைத்ததைப் பிரிக்க மனிதனுக்கு அதிகாரம் இல்லை.

லூர்து செல்வம்.

"ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் எனக் கூறினார்" (மத்.19:5)

 "ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் எனக் கூறினார்" (மத்.19:5)

நண்பர் ஒருவர் திருமணம் முடித்த சில தினங்களுக்குள் மனைவியோடு தனிக் குடித்தனம் சென்று விட்டார்.

"உங்களைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி, படிக்க வைத்து, வேலையும் வாங்கி கொடுத்து ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்த உங்கள் பெற்றோரை இப்படி தனியே விட்டுவிட்டு வந்து விட்டீர்களே, இது சரியா?" என்று கேட்டேன்.

அதற்கு அவர்,

"சார், நீங்கள் பைபிளே வாசிப்பதில்லையா? 

"கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான்."

என்று இயேசுவே சொல்லியிருக்கிறார்.

நீங்கள் கிறிஸ்தவர் தானே. இயேசுவுக்கு விரோதமாக பேசலாமா?"

இப்படித்தான் சிலபேர் பைபிளையே பைபிளுக்கு விரோதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லாத ஒருவர் ஒழுங்காக ஜெபம் சொல்லும் ஒருவரை நோக்கி,

 "என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்."

என்று இயேசுவே சொல்லி இருக்கிறார்.

நீங்கள் அவர் சொன்னதற்கு மாறாக அவரை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று அழைக்கிறீர்களே!

நீங்கள் நரகத்துக்கு போவது உறுதி." என்றார்.

வசனத்தின் தொடர்ச்சியாகிய

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."

என்ற வரிகளை அவர் சொல்லவில்லை.

'' நற்செய்தியை வாழாமல் வாயினால் ஜெபிப்பதால் மட்டும் பயனில்லை. 

இயேசுவைப் பார்த்து ஆண்டவரே ஆண்டவரே என்று அழைப்பவர்கள் விண்ணகத் தந்தையின் சித்தப்படி நடக்கவும் வேண்டும்."

என்ற பைபிளின் அறிவுரையை பைபிள் வசனத்தைக் கொண்டே மறுத்துப் பேசத் தங்கள் புத்தியை சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

நாத்திகன் ஒருவன் ''கடவுள் இல்லை" என்று பைபிளே கூறுகிறது, என்றான்.

"கடவுள் இல்லை" என்று அறிவிலி தனக்குள் சொல்லிக் கொள்கிறான்: "

என்ற முழு வசனத்தையும் அவன் வேண்டுமென்றே கூறவில்லை.

பைபிளை வைத்துக் கொண்டு விளையாடுபவர்கள் மட்டில் கவனமாக இருப்போம்.

குழந்தை பிறந்தவுடன் தனது தாயின் முகத்தையே பார்க்கிறது.

அதற்கு தாய் தான் எல்லாம்.

அதைப் பாலூட்டி சீராட்டி வளர்ப்பவள் அவள் தான்.

தாயை விட்டு குழந்தையைப் பிரிக்க முடியாது.

தாயைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு பாலூட்ட முடியாது.

ஆகவே குழந்தை எப்போதும் தாயோடே ஒட்டிக் கொண்டிருப்பதில் தவறு ஏதுமில்லை.

குழந்தை முகம் பார்க்க ஆரம்பித்தவுடன் தாய் அதற்குத் தந்தையை அறிமுகப்படுத்தி வைக்கிறாள்.

அதன்பின் அது வளரும் வரை அதற்கு எல்லாம் தாயும் தந்தையும் தான்.

பிள்ளை வெளி உலகில் இறங்கும் போதும் கூட பெற்றோரின் அறிவுரையின் படி தான் நடந்து கொள்ளும்.

மற்றவர்களோடு பழகும் போதெல்லாம் பெற்றோரின் ஞாபகம் பிள்ளையின் மனதில் இருக்கும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது படிப்பில் இருக்கும் ஆர்வத்தைப் போலவே 

பெற்றோர் மீதும் ஆவல் இருக்கும். 

ஏனெனில் அவனைப் படிக்க வைப்பவர்கள் பெற்றோரே.

திருமண வயது வந்தவுடன் பெற்றோர் தங்களது பையனுக்கு ஏற்ற பெண்ணாகப் பார்த்து அவனுக்கு திருமணம் செய்து வைக்கின்றார்கள்.

திருமண அமைப்பு இறைவனால் ஏற்படுத்தப்பட்டது.

அவர் மனிதனைப் படைக்கும் போது ஆணும் பெண்ணுமாகவே,

 அதாவது,

 கணவனும் மனைவியுமாகவே படைத்தார்.

கணவனும் மனைவியும் ஒரு உடலில் வாழும் இரண்டு உயிர்களைப் போல இணைந்திருக்க வேண்டும் என்பது அவரது திட்டம்.

பெற்றோர் தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கும் போது 

திருமணமான கணவனும் மனைவியும் இறைவனின் திட்டப்படி வாழ வேண்டும்.

எப்படி அவனுடையபெற்றோர் இருவராயினும் ஒருவராய் வாழ்ந்தார்களோ

 அப்படியே திருமணம் முடித்த மகனும் அவன் மனைவியும்  வாழ வேண்டும்.

இப்போது ஒரு குடும்பம் இரண்டு குடும்பங்களாக மாறி இருக்கிறது.

குடும்ப அமைப்பில் இரண்டாவது குடும்பம், முதல் குடும்பத்தைப் போலவே தனித்துவத்தைக் கொண்டது.

எப்படி அப்பாவும் அம்மாவும் ஒரு குடும்பமாக ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டு வாழ்ந்தார்களோ

 அதேபோல மகனும் மருமகளும் மற்றொரு குடும்பமாக ஒருவரோடு ஒருவர் இணைக்கப்பட்டு வாழ வேண்டும்.

இரண்டும் வெவ்வேறு குடும்பங்கள்.

ஒரு குடும்பத்தின் உள் விவகாரங்களில் தலையிட மற்றொரு குடும்பத்திற்கு உரிமை இல்லை.

அதாவது மகனின் குடும்பத்தில் உள் விவகாரங்களில் தந்தை தலையிடக்கூடாது.

அந்த அர்த்தத்தில் மகனின் குடும்பம் தந்தையின் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்துவிட்டது.

ஆனால் குடும்பம் என்ற சமூக அமைப்பை விட்டு வெளியே வரவில்லை.

குடும்பம் என்ற சமூக அமைப்பு இறை அன்பினாலும், பிறர் அன்பினாலும் கட்டுப்பட்டது.

அப்பாவும் அம்மாவும் தங்களை நேசிப்பது போலவே தங்களது மகனையும் மறுமகளையும் நேசிப்பார்கள்.

உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றால் நேசிக்கக் கூடாது என்று அர்த்தம் அல்ல.

கடவுள் மனிதனைப் படைக்கும் போது அவனுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுத்தார்,

 ஆனாலும் அவனை முழுமையாக, அளவு கடந்து நேசித்தார்.

மனிதன் முழுமையான சுதந்திரத்தோடு வாழ்ந்தாலும்

 இறைவனின் அன்புக்கு கட்டுப்பட்டே வாழ்ந்தான்.

அதே போல் தான் திருமணமான மகன் திருமணத்தின் உள் விவகாரங்களில் முழுமையான சுதந்திரத்தோடு வாழ்ந்தாலும்,

மகன் என்ற முறையில் தந்தையின் அன்புக்கு கட்டுப்பட்டவன்.

திருமணமாகுமுன் தன் பெற்றோரை எப்படி நேசித்தானோ 

அதே போல் தான் திருமணத்திற்கு பின்னும் நேசிக்க வேண்டும்.

திருமணத்திற்கும் பின் இறைவனது நான்காவது கட்டளையை மறந்து விட வேண்டும் என்று இயேசு சொல்லவில்லை.

தான் பையனாக இருந்த போது தனது பெற்றோரை எப்படி நேசித்தானோ அதேபோல்தான் தனது முதுமையிலும் பெற்றோரை நேசிக்க வேண்டும்.

தனது பிள்ளைகளை எப்படி நேசிக்கிறானோ அதே போல் தான் தனது பெற்றோரையும் நேசிக்க வேண்டும்.

ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும் என்ற கட்டளை,

ஒரு குடும்பம் மற்றொரு குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்ற கட்டளைக்கு எதிரானது அல்ல.

திருக்குடும்பம் உலகில் உள்ள மற்ற எல்லா குடும்பங்களையும் தேசித்ததால் தான் 

மற்ற எல்லா குடும்பங்களுக்காகவும் தன்னையே பலியிட தங்கள் மகனை அளித்தது.

நமது மீட்பர் ஒரு குடும்பத்திலிருந்து தான் வந்தார்.

சூசையப்பரோ மாதாவோ தங்கள் மகனைப் பார்த்து,

"நீங்கள் ஏன் மற்றவர்கள் குடும்பத்தின் ஆன்மீக விஷயங்களில் தலையிடுகிறீர்கள்".

 
என்று கேட்கவில்லை.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் குடும்பத்தின் ஆன்மீக காரியங்களில் ஆலோசனை கூறக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை.

தங்கள் மகனும் மருமகளும் ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு பெற்றோர் இடையூறாக இருந்து விடக்கூடாது.

எப்படி பங்குத் தந்தையின் ஆன்மீக ஆலோசனைக்கு பங்கில் உள்ள அனைத்து குடும்பங்களும் கட்டுப்பட்டு இருக்கின்றனவோ 

பெற்றோரின் ஆன்மீக ஆலோசனைக்கு மகனும், மருமகளும் கட்டுப்பட்டிருக்கிறார்கள்.

மனைவியின் பேச்சைக் கேட்டு மகன் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போனால்,

"மகனே இன்று ஆண்டவரின் நாள். உனது மனைவியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வா.''

என்று பெற்றோர் மகனுக்கு ஆலோசனை கூற வேண்டும்.

இது உள் விவகாரங்களில் தலையிடுவது ஆகாது.

 பிள்ளைகளை ஆன்மீகத்தில் வளர்க்க பெற்றோருக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு.

எப்படி வண்டியின் ஒரு சக்கரம் உருள மறுத்தால் வண்டியே நகர மறுக்குமோ,

அதேபோல இறைச் சமுகத்தில் உள்ள குடும்பங்களில் ஏதாவது ஒரு குடும்பம் இறைச் சித்தத்திற்கு எதிராக நடந்தால் 

அது மொத்த இறைச் சமுகத்தையும் பாதிக்கும்.

அலுவலகத்திற்குச் செல்லும் போது நமது சட்டையின் ஒரு கையை கிழித்துப் போட்டு விட்டு.

 ஒற்றைக் கை சட்டையைப் போட்டு அலுவலகம் சென்றால் எல்லோரும் நம்மைத்தான் பார்ப்பார்கள்,

ஆச்சரியத்தோடு அல்ல, நக்கலாக.

தந்தையின் அன்புள்ள ஆன்மீக ஆலோசனையைக் கேட்டு மகன் நடக்காவிட்டால்

அவனுடைய குடும்பத்தையும் உலகம் இப்படித்தான் பார்க்கும்.

திருமணமான மகன் தன் மனைவியோடு ஓருடலாய், அன்புடன் வாழ வேண்டும்.

தன்னைப் பெற்று வளர்த்துவிட்ட தனது பெற்றோரை நேசிக்கவும் மறந்து விடக்கூடாது.

லூர்து செல்வம்.

Wednesday, August 16, 2023

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."(மத்.18:22)

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்."(மத்.18:22)

இராயப்பர் இயேசுவிடம்,

 "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது?

 ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.

அதற்கு இயேசு,

"ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்." என்றார்.

தவறுவது மனித இயல்பு.
To err is human.

மன்னிப்பது தெய்வீக இயல்பு.
To forgive is divine.

நமது ஆதித் தாய் செய்த பாவத்தினால் நாம் ஜென்மப் பாவத்தோடு பிறந்தோம்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது ஜென்மப் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டாலும்

 நமது பாவ இயல்பு நம்மோடு தான் இருக்கிறது.

ஆகவேதான் நாம் அடிக்கடி பாவம் செய்கிறோம்.

பாவிகள் என்ற பேரையும் சம்பாதித்துக் கொண்டோம்.

நாம் பாவம் செய்யும்போது கடவுளுக்கு நம் மீது கோபம் ஏற்படவில்லை.

ஏற்பட்டிருந்தால் நமது ஆதி பெற்றோரே அழிந்திருப்பார்கள்.

கோபம் அவரது இயல்பு அல்ல.

அன்பும், இரக்கமுமே அவரது இயல்பு.

அன்பும், இரக்கமும் உள்ள இடத்தில் மன்னிக்கும் குணமும் இயல்பாக இருக்கும்.

எப்படி அவரது அன்புக்கு அளவில்லையோ,

எப்படி அவரது இரக்கத்துக்கு அளவில்லையோ

அப்படியே அவர் மன்னிப்பதற்கும் அளவில்லை.

ஆகவே தான் நமது இயல்பின் படி நாம் எத்தனை முறை பாவம் செய்தாலும்,

'பாவத்திற்காக வருந்தி, மன்னிப்புக் கேட்டால் உடனே மன்னித்து விடுகிறார். 

ஆகவே தான் இராயப்பர் ஏழு முறை மன்னித்தால் போதுமா என்று கேட்ட போது,

ஏழு முறை அல்ல எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க வேண்டும் என்கிறார்.

மன்னிப்புக் கேட்கும் போது இனிமேல் இத்தகைய பாவத்தைச் செய்ய மாட்டேன் என்ற மன உறுதியோடு தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இந்த மன உறுதியில் உறுதியாக இருக்க வேண்டும்.

ஆனாலும் மனித இயல்பின் காரணமாக அதே பாவத்தில் நாம் திரும்பவும் விழ நேரிடலாம்.

விழ நேரிட்டால் நாம் எழுந்து நிற்க வேண்டும்.

திரும்பவும் பாவத்திற்காக வருத்தப்பட்டு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

உடனே மன்னிப்புக் கிடைக்கும்.

திரும்பவும் பாவத்தில் விழாதபடி அருள் வரங்களை இறைவனிடம் கேட்டு மன்றாட வேண்டும்.

இறைவனது அருளின் உதவியால் நாம் திரும்பவும் பாவத்தில் விழ மாட்டோம் என்று நம்ப வேண்டும்.

நமது இடைவிடாத ஜெபம் தான் நம்மை பாவத்தில் விழாதபடி காப்பாற்றும்.

ஆனாலும் மனித பலவீனத்தால் நாம் திரும்பவும் பாவத்தில் விழ நேர்ந்தால் எழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமே தவிர நம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

பாவ மன்னிப்பு பெறுவதற்காகத்தான் நம் ஆண்டவர் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

காலையில் குளித்துவிட்டு வெளியே போகிறோம்.

மறுநாள் காலையிலும் குளித்துவிட்டு வெளியே போகிறோம்.

தினமும் காலையில் குளிப்பதற்கு நாம் வெட்கப்படுவதில்லை.

பாவ சங்கீர்த்தனம் செய்யத் தேவைப்பட்டால் செய்ய வெட்கப்படக் கூடாது.

பாவ சங்கீர்த்தின் போது நாம் பேசுவது நமது மீட்பராகிய இயேசுவிடம்தான்.

இயேசுவோடு பேச ஏன் வெட்கப்பட வேண்டும்?

நாம் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் இயேசு மன்னிப்பார்.

இது அவரே நமக்குத் தந்திருக்கும் வாக்குறுதி.

அவர் கொடுத்த வாக்கை மீற மாட்டார்.

நமது உடம்பில் சகதி பட்டால் மட்டுமா குளிக்கிறோம்?

தூசி பட்டாலும் குளிப்பதில்லை?

அதுபோல் அற்ப பாவங்கள் செய்தாலும் அவற்றிற்காக பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக்கொள்வோம்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து நமது ஆன்மாவின் பரிசுத்தத்தனத்தைக் காப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, August 15, 2023

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."(மத்.18:20)

கடவுள் எங்கும் இருக்கிறார்.

அவரால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் அவனைப் பராமரிப்பதற்காக கடவுள் இருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனிடமும் இருந்து அவனைப் பராமரித்து வரும் கடவுள் ஏன் 

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."

என்று சொல்கிறார்?

ஒரு மனிதன் தனியாக இருப்பதற்கும், 

இரண்டு, மூன்று பேரோடு இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

மனிதன் இரண்டு, மூன்று பேரோடு இருக்கும்போது ஒரு சமூகத்தில் இருக்கிறான்.

சமூகத்தில் இருக்கும்போது சமூகம் சார்ந்த சில விதிமுறைகளுக்கு அவன் கட்டுப்பட்டிருக்கிறான்.

மற்றவர்களோடு இருக்கும் போது அன்பு என்னும் உறவினால் பிணைக்கப்பட்டிருக்கிறான்.

சமூகத்தில் உள்ளவர்கள் அன்பு உறவோடு பழகினால் அவர்களிடம் சமாதானம் நிலவும்.

அன்புக்கு எதிரான பண்புகளோடு பழகினால் சமூகம் சண்டைக் காடாக மாறிவிடும்.

இரண்டு, மூன்று பேரோடு இருப்பதற்கும், 

இரண்டு, மூன்று பேரோடு கடவுள் பெயரால் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

வெறுமனே இரண்டு மூன்று பேரோடு இருந்தால் அங்கு இருப்பது உலகம் சார்ந்த ஒரு சமூகம்.

கடவுள் பெயரால் இரண்டு மூன்று பேரோடு இருந்தால் அது இறைச் சமூகம்.

இறையன்பினாலும் பிறர் அன்பினாலும் பிணைக்கப்பட்டு இருப்பது இறைச் சமூகம்.

இறைச் சமுகத்தில் இறைவன் இருப்பதால் அங்கு அன்புக்கு எதிரான பண்புகளுக்கு இடமே இல்லை.

கடவுள் அன்புமயமானவர்.

ஒளி இருக்கும் இடத்தில் இருட்டு இருக்க முடியாது.

அன்பு மயமான கடவுள் இருக்கும் சமூகத்தில் அன்புக்கு எதிரான பண்புகள் இருக்க முடியாது.

கடவுள் சமாதானமே உருவானவர்.

சமாதானமே உருவான கடவுள் இருக்கும் இடத்தில் சமாதானமும் அதற்கு உயிரான அன்பும் நிலவும்.

கடவுளின் பேரால் தனியாக இருக்கும் மனிதனிடமும் இறையன்பு இருப்பதால் மன அமைதி நிலவும்.

கடவுளின் பெயரால் கூடி இருக்கும் இறை சமூகத்தைப் பற்றி சிறிது தியானிப்போம்.

மனிதன் முதல் முதலில் சந்திக்கும் இறைச் சமூகம் அவன் பிறந்து வளரும் குடும்பம்.

குடும்பத்தில் பெற்றோர், சகோதர சகோதரிகளோடு, அவர்களை ஆன்மீக ரீதியாகப் பராமரிப்பதற்காக கடவுள் இருக்கின்றார்.

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் நாம் முதலில் சந்திப்பது நம்மோடு வாழும் இறைவனைத் தான்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்தான் கண்விழிக்கிறோம்.

இறைவனிடம் உறவாடி விட்டு, அவரோடு தான் நமது மற்ற கடமைகளை ஆரம்பிக்கிறோம். 

நாம் பல் துலக்கும் போது கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 நாம் குளிக்கும்போது கடவுள் நம்மோடு இருக்கிறார்.

நமது பெற்றோரிடமும், சகோதர சகோதரிகளிடம் பேசும்போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

நாம் சாப்பிடும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

அலுவலக பணிக்கு கிழம்பும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

 நமது ஒவ்வொரு அசைவின்போதும் கடவுள் நம்மோடு இருப்பதை உணர வேண்டும்.

அவரன்றி அணுவும் அசையாது.

நமது அசைவுகளின் போது நமக்கு என்ன நேர்ந்தாலும் அது நம்மோடு இருக்கும் இறைவன் சித்தப்படி தான் நேர்ந்திருக்கும்.

நாம் தவறி கீழே விழுந்தாலும், அதனால் உடலில் காயம் ஏற்பட்டாலும் அதுவும் இறைவன் சித்தப்படி தான் நேர்ந்திருக்கும்.

இந்தத் தெளிவு நமக்கு இருந்தால் நமக்கு என்ன நேர்ந்தாலும் நமது மகிழ்ச்சி சிறிதும் கூட குறையாது.

குடும்பத்தில் இறைவன் இருப்பதால் அதை உணர்ந்து அவரோடு வாழும்போது குடும்பத்தில் அன்பும், சமாதானமும், மகிழ்ச்சியும் எப்போதும் நிலவும்.

தங்களோடு இறைவன் இருப்பதை உணர்ந்து வாழும் பெற்றோர்
 
குடும்ப உறுப்பினர்களிடம் இறைவனுக்கு எதிரான எதையும் செய்யச் சொல்ல மாட்டார்கள்.

ஆகவே குடும்பத்தில் பாவம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவர்கள் குடும்பத்தை இறைவனின் வழியில் நடத்துவதால் இவ்வுலகில் வாழ்ந்தாலும் குடும்பம் விண்ணகம் நோக்கி ஆன்மீக நடை போடும்.

குடும்பமே இறை உணர்வோடு வாழ்வதால்  
.
நற்செய்தியை வாசித்தல், தியானித்தல், 
காலை மாலை குடும்ப ஜெபம், தவறாமல் ஞாயிறு திருப்பலி, திருவிருந்து,
இன்னும் இது போன்ற ஞான காரியங்களில் அக்கறை காட்டுவார்கள்.

குடும்பமே திருத் குடும்பமாகத் திகழும். 

குடும்ப வாழ்வில் நாம் சம்பாதிக்கும் இறைவனின் அருள் வரங்கள் 

குடும்பத்திற்கு வெளியே உள்ள சமூகத்திலும் நாம் சிறு சிறு இறைச் சமூகங்களை உருவாக்க உதவும்.

வெளி உலகில் நாம் யாரோடெல்லாம் பழகுகிறோமோ அவர்களெல்லாம் நமது ஆன்மீக உறவுக்குள் வருவார்கள்.

குடும்பத்தில் நம்மோடு வாழும் கடவுள் நாம் பழகும் நண்பர்கள் மத்தியிலும் வாழ்வார்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்மோடு வாழும் கடவுளோடு அவர்களோடும் வாழ வேண்டும்.

ஒவ்வொரு இறைச் சமூகத்தையும் இறைவன் ஆசீர்வதித்து வழி நடத்துவார்.

எல்லா கிறிஸ்தவர்களும் தாங்கள் செல்லும் இடமெல்லாம் இறைச் சமூகங்களை உருவாக்கிக் கொண்டே போனால் காலப் போக்கில் நாம் வாழும் நாடே ஒரு பெரிய இறைச் சமூகமாக மாறிவிடும்.

நாம் செல்லும் இடமெல்லாம் நம்மோடு வாழும் இறைவனோடு செல்வோம்.

நம்மை வழிநடத்தும் கடவுள் நாம் யாரோடெல்லாம் பழகுகிறோமோ அவர்களையெல்லாம் வழி நடத்துவார்.

இறைவன் நம்மோடு வாழ்வதால் நமது வாழ்வு ஒரு முன்மாதிரிகையான வாழ்வாக மாறும்.

நாம் செல்லும் இடமெல்லாம் நற்செய்தியை வாழ்ந்து காட்டினால்

அதுவே மிகப்பெரிய நற்செய்தி அறிவிப்புப் பணியாகும்.

இயேசு சொல்கிறார்,

"யாரோடு பழகினாலும் என் பெயரால் பழகுங்கள். நான் உங்கள் மத்தியில் வாழ்ந்து உங்களை வழி நடத்துவேன்."

லூர்து செல்வம்.

Monday, August 14, 2023

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே."(லூக்.1:42)

"பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே."
(லூக்.1:42)

எலிசபெத்து பரிசுத்த ஆவியால் நிரப்பப்பெற்று,

 "பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே. உம்முடைய வயிற்றின் கனியும் ஆசீர்வதிக்கப் பட்டதே." என்றாள். 

ஆக மரியாளை பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று வாழ்த்தியது பரிசுத்த ஆவியானவர் தான்.

பரிசுத்த ஆவியானவர் உள் தூண்டுதல் (Inspiration) மூலம் சொன்னதை எலிசபெத்து சப்தமாகக் கூறினாள்.

அன்னை மரியாள் ஏன் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்?

ஏனெனில் அவள் இறைமகன் மனுவுரு எடுத்த போது அவரைக் கருவுற்று, பெற்றெடுத்து, வளர்த்தாள்.

இயேசுவை 10 மாதம் வயிற்றில் சுமந்ததால் அவள் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்.

இதற்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லை.

மாதா தன் வயிற்றில் 10 மாதம் சுமந்த அதே குழந்தையை நாம் எப்போதாவது நம் வயிற்றில் சுமந்திருக்கிறோமா?

எப்போதாவது?

மாதா சுமந்தது போல் இல்லாவிட்டாலும், வேறு எந்த வகையிலாவது சுமந்திருக்கிறோமா?.

நாம் திவ்ய நற்கருணை வாங்கும்போது மாதா சுமந்த அதே இயேசுவைத் தான் நமது நாவில் வாங்கி வயிற்றுக்குள் அனுப்புகிறோம்.

மாதா இயேசுவைத் தன் வயிற்றில் சுமக்க வேண்டியிருந்த ஒரே காரணத்துக்காகத்தான் சென்மப் பாவமின்றி உற்பவித்தாள்.

பரிசுத்தரைத் தாங்கும் தாய் பரிசுத்தமானவளாக இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம்.

அதே பரிசுத்தரை வயிற்றில் தாங்க வேண்டிய நாம் எப்படி இருக்க வேண்டும்?.

நாமும் பரிசுத்தர்களாக இருக்க வேண்டும்.

அன்னை மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது மட்டுமல்ல,

வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி, அருள் நிறைந்தவளாய்,

ஆண்டவருடைய முழு அடிமையாக வாழ்ந்தாள்.

நாம் சென்மப் பாவத்தோடு உற்பவித்தோம்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது.

ஆனால் நமது வாழ்நாளில் பாவங்கள் செய்து கொண்டேயிருக்கிறோமே, நாம் எப்படி பரிசுத்தரை நமது நாவில் வாங்க முடியும்?

பாவிகளைத் தேடியே உலகத்துக்கு வந்த நமது ஆண்டவர்,

பாவிகளாகிய நமக்குள் வரத் தீர்மானித்து விட்டார்.

நாம் பயன்படுத்தும் பொருள்கள் அழுக்கடைந்து விட்டால் அவற்றைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்துவதில்லை?

அதேபோல பரிசுத்தராகிய இயேசு பாவிகளாகிய நமக்குள் வர ஒரு ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்.

அதாவது பாவ சங்கீர்த்தனம் என்னும் திருவருட்சாதனத்தின் மூலம் நமது பாவங்களை மன்னித்து,

பரிசுத்தர்களாக மாற்றி நமக்குள் வர திட்டமிட்டிருக்கிறார்.

நமது ஆன்மா சாவான பாவ நிலையிலிருந்தால், பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெறாமல் திவ்ய நற்கருணை வாங்கக் கூடாது.

பாவத்தோடு நற்கருணை வாங்கினால் புதிதாக ஒரு பாவத்தைக் கட்டிக் கொள்கிறோம்.

அப்படி வாங்குவது குளிக்கப் போன இடத்தில் சேற்றை அள்ளிப் பூசிக்கொண்டு வெளியே வருவது போல் ஆகும்.

ஆகவே சாவான பாவம் நிலையில் உள்ளவர்கள் நற்கருணை வாங்குவதற்கு முன் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து,

 பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது திருச்சபையின் கண்டிப்பான கட்டளை.

அதைக் கடைபிடிக்காமல் ஏதோ தின்பண்டத்தைக் கையில் வாங்குவது போல வாங்கி வாயில் போட்டுக் கொண்டு வீட்டுக்குப் போகின்றவர்கள் நரகத்தை நோக்கி நடக்கின்றார்கள்.

யார் பாவ நிலையில் உள்ளார்கள் என்பது நற்கருணை கொடுக்கும் குருவானவருக்குத் தெரியாது.

சாமியாரை ஏமாற்றி விட்டதாக நினைத்துக் கொண்டு பாவ நிலையில் நற்கருணை வாங்குபவர்கள் இயேசுவை ஏமாற்ற முடியாது.

நாம் கண்ணை மூடிக்கொண்டால் இருட்டு வந்து விடாது.

மாதா பக்தர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது நாம் அவளது மகனை நற்கருணையாகப் பெறும்போது,

பாவ மாசு இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

பரிசுத்தமான நிலையில் நாம் இறைமகனை ஏற்றுக்கொள்ளும்போது நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

பாவமின்றி பரிசுத்தர்களாய் வாழ்வோம்.

பாவம் செய்ய நேர்ந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்வோம்.

பரிசுத்தமான நிலையில் இறை மகனை உணவாக ஏற்றுக் கொள்வோம்.

இறை மகனோடு நாம் பரிசுத்தர்களாய் வாழ்ந்தால் நாமும் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே.

லூர்து செல்வம்.

Sunday, August 13, 2023

"நாம் அவர்களுக்கு இடறலாகாதபடி....." (மத்.17:27)

"நாம் அவர்களுக்கு இடறலாகாதபடி....." (மத்.17:27)

இறையியல் ரீதியாக உலகைப் படைத்த கடவுளாகிய இயேசு

சமூக ரீதியாக யூத குலத்தைச் சேர்ந்தவர்.

அரசியல் ரீதியாக யூதர்கள் சுதந்திரக் குடிகள் அல்ல,

 ரோமையர்களின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

கடவுளின் கண்ணோக்கில் மனிதர்கள் அவரைத் தவிர வேறு யாருக்கும் கீழ்பட்டவர்கள் அல்ல.

உலகைச் சார்ந்த மனிதர்கள் ஆயிரக்கணக்கான அரசியல் தலைவர்களுக்கு உட்பட்டிருக்கலாம்.

ஆனால் கடவுளின் முன் அனைவரும் சமம், பரிபூரண சுதந்திரக் குடிகள்.

இறையியல் ரீதியாக மனிதர்கள் தங்கள் சுதந்திரத்தைக் கொண்டு இறைவனின் ஆட்சியை ஏற்றுக் கொள்ளலாம்

 அல்லது

 சாத்தானின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளலாம்.

பாவத்தின் மூலம் சாத்தானின் ஆட்சியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு ஆன்மீக விடுதலை அளிப்பதற்காகத்தான் இயேசு மனிதனாகப் பிறந்தார்.

அனேக யூதர்கள் எதிர்பார்த்தது போல, மெசியா யூதர்களுக்கு அரசியல் விடுதலை பெற்றுக்
 கொடுப்பதற்காக உலகுக்கு வரவில்லை.

இயேசுவின் சீடர்களில் சிலர் கூட அவர்   சுதந்திர யூத சாம்ராஜ்யத்தை நிறுவுவார் என எதிர்பார்த்தார்கள். 

அருளப்பரும், யாகப்பரும் அந்த சாம்ராஜ்யத்தில் தங்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்க வேண்டும் என்று இயேசுவிடம் விண்ணப்பித்திருந்தார்கள்.

ஆனால் இயேசுவின் அரசு இவ்வுலகத்தை சார்ந்தது அல்ல.

அவரைப் பொறுத்தமட்டில் யூதர்கள் அவரால் படைக்கப்பட்ட உரிமைக் குடிமக்கள்.

ஆகவே, யாருக்கும் அரசியல் ரீதியான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

"இப்படியானால் மக்களுக்குக் கடமையில்லை." (மத்.17:20)

ஆனாலும் தான் வரி கட்ட முடியாது என்று சொன்னால்,

தான் உலகுக்கு வந்த நோக்கத்துக்குச் சம்பந்தம் இல்லாத குழப்பம் மக்களிடையே ஏற்படும்.

முழுக்க முழுக்க ஆன்மீக நோக்கத்தோடு உலகுக்கு வந்த இயேசு உலகியல் குழப்பங்களுக்கு காரணமாக இருக்க விரும்பவில்லை.

தான் வரி கட்ட மறுத்தால் வரி கட்டுபவர்களுக்கு அது இடரலாக இருக்கும்.

மற்றவர்களுக்கு இடரலாக இருக்க விரும்பாத இயேசு வரி வசூலிப்பவர்கள் கேட்ட வரியை கட்டி விட்டார்.

இயேசு நடந்து கொண்ட விதத்திலிருந்து நாம் சில முக்கியமான ஆன்மீகப் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் உலகின் அரசியல், சமூகக் கட்டமைப்புக்குள் பிறந்திருந்தாலும்,

முதலில் நாம் கடவுளின் பிள்ளைகள்.

அதற்குப் பிறகுதான் உலக அரசியலின் குடிமக்கள்.

கடவுளை நேசிப்பதும் அவரது கட்டளைகளுக்குப் கீழ்ப்படிந்து நடப்பது மட்டுமே நமது முதல் கடமை.

இக்கடமைக்கு குந்தகம் ஏற்படாத வகையில் இவ்வுலகைச் சார்ந்த அரசியல் சமூக கடமைகளுக்கு நாம் கட்டுப்பட்டிருக்கிறோம்.

   நமது ஆன்மீகக் கடமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உலகக் கடமைகளுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள் அல்ல.

உதாரணத்திற்கு உலக அரசு நாம் ஞாயிற்றுக்கிழமை இறைவனுக்காக ஓய்வு எடுக்கக்கூடாது என்று கட்டளையிட முடியாது.

நமது ஆன்மீகக் கடமைகளை மாற்ற இந்த உலகைச் சார்ந்த அரசு சட்டங்கள் இயற்ற முடியாது.

நமது ஆன்மீகத்தைப் பாதிக்காத உலக அரசின் சட்டங்களுக்கு கீழ்படிய கடமைப் பட்டிருக்கிறோம்.

முழுக்க முழுக்க இவ்வுலகை சார்ந்த நமது மத்திய அரசுக்கு நமது விசுவாச சத்தியங்களையும், வழிபாட்டு முறைகளையும் பற்றி பேச உரிமை இல்லை.

பேசினால் அதைக் கேட்க நமக்கு கடமை இல்லை.

இயேசு இறையியலில் கடவுள்.
சமூகயியலில் யூதர்.
அரசியலில் ரோமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்.

கடவுள் என்ற முறையில் நம்மைப் பாவத்திலிருந்து மீட்டார்.

யூதர் என்ற முறையில் யூத சமயத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தார்.

அரசியலில் ரோமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் என்ற முறையில்,

ரோமை அரசு அவருக்கு மரண தண்டனை விதித்த போது அதை எதிர்த்துப் பேசாமல் ஏற்றுக் கொண்டார்.

நமது உலக அரசு நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக நம்மை என்ன பாடுப்படுத்தினாலும் இயேசுவுக்காகப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நமக்கு மரண தண்டனை கொடுக்குமானால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நமக்கு மரண தண்டனை கொடுப்பவர்கள் விண்ணகத்திற்கான வாசலை நமக்காகத்
 திறந்து விடுகிறார்கள்.

ஆன்மீகம் சாராத, அதற்கு எதிராக இல்லாத உலகச் சட்டங்களுக்கு நாம் கீழ்படிய வேண்டும்.

ஆன்மீகத்திற்கு எதிரான உலகச் சட்டங்களை நாம் எதிர்க்க வேண்டும்.

மதம் மாறக்கூடாது என்பது ஆன்மீகத்துக்கு எதிராக சட்டம்.

அது கடவுளால் படைக்கப்பட்ட எந்த மனிதனையும் கட்டுப்படுத்தாது.

எந்த நாட்டில் பிறந்தாலும் நாம் இறைவனின் பிள்ளைகள்.

எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நாம் இறைவனின் பிள்ளைகள்.

எந்த நாட்டில் மரித்தாலும் நாம் இறைவனின் பிள்ளைகள்.

இதை மாற்ற எந்த உலக அரசுக்கும் உரிமை இல்லை.

லூர்து செல்வம்.

Friday, August 11, 2023

"அதற்கு இயேசு கூறியது: "உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:"(மத்.17:20)

"அதற்கு இயேசு கூறியது: "உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:"
(மத்.17:20)

கடுகளவு விசுவாசம் நம்மிடம் இருந்தால் ஒரு மலையை இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லச் செய்ய முடியும் என்று ஆண்டவர் கூறுகிறார். 

நம்மால் ஒரு குண்டூசியைக் கூட அசைக்க முடியவில்லை.

ஆண்டவர் கருத்துப்படி நம்மிடம் விசுவாசம் கொஞ்சம் கூட இல்லை.

விசுவாசிகள் என்ற பெயர் மட்டும் இருக்கிறது.

நாம் விசுவாசம் என்ற வார்த்தைக்கு நமது மனதில் முழுமையற்ற கருத்து ஒன்றை பதித்து வைத்திருக்கிறோம்.

"சர்வ லோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை விசுவசிக்கிறேன்."

"எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்றுக் கொள்கிறேன்."

என்ற பொருளை மட்டும் எடுத்துக் கொள்கிறோம்.

"நான் ஏற்றுக் கொள்கிற எல்லாம் வல்ல கடவுளுக்கு ஏற்ற அர்ப்பண வாழ்வு வாழ்கிறேன்"

என்ற பொருளை எடுத்துக் கொள்ளவில்லை.

அர்ப்பண வாழ்வு வாழ்ந்தால் அவர் எல்லாம் வல்லவர் என்பது நமது ஆன்மீக அனுபவத்தின் மூலம் நமக்குத் தெரியும்.

"விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்: என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,

18 பாம்புகளைக் கையால் பிடிப்பர். "கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. 

பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்."

நம்மில் எத்தனை பேரிடம் இவ்வருங்குறிகள் காணப்படுகின்றன?

புனித அந்தோனியார் நஞ்சு கலந்த உணவைச் சாப்பிட்டார். ஆனால் சாகவில்லை. அவர் முழுமையாக விசுவாசி.

பிணியாளர்கள் மீது கையை வைத்தார். அவர்கள் குணமானார்கள். அவர் முழுமையாக விசுவாசி.

ஆகவே தான் அவரால் கோடிக் கணக்கில் புதுமைகள் செய்ய முடிந்தது.

நாம் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் அவருக்கு மட்டும் அர்ப்பணிக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு சிந்தனையையும், ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு செயலையும் அவருக்கு மட்டுமே அர்ப்பணித்து வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் பேய்கள் கூட நமக்குப் பயப்படும்.

புனிதர்கள் அர்ப்பண வாழ்வு வாழ்ந்தார்கள்.

இன்று அவர்களது திருத்தலங்களில் புதுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நாம் முழுமையாக அர்ப்பண விசுவாச வாழ்வு வாழ்ந்தால் நமக்கென கடவுளிடம் எதுவும் கேட்டு விண்ணப்பிக்க மாட்டோம்.

ஏனெனில் நாம் வாழ்வது அவரது சித்தம் நிறைவேறுவதற்காக மட்டும்.

அர்ப்பண வாழ்வு வாழ்பவர்களில் இயேசுவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர்களுக்கு வேண்டியதை அவரே பார்த்துக் கொள்வார்.

அவரிடம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இயேசு அன்புமயமானவர்.

அவருக்காக தங்களையே அர்ப்பணித்து வாழ்பவர்கள் அன்பினால் மட்டும் இயக்கப்படுவார்கள்.

அவர்களுடைய சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பு மட்டுமே பிரதிபலிக்கும்.

அவர்கள் அதிசயங்கள் செய்வதற்காக அன்பு செய்ய மாட்டார்கள்.

அவர்களுடைய அன்பு தான் அதிசயங்களைச் செய்யும்.

விசுவாச சத்தியங்களை ஏற்றுக் கொள்வோம், வாழ்வோம்.

அர்ப்பணித்து வாழ்வோம்.

அர்ப்பணித்து வாழ்வதே விசுவாசம்.

லூர்து செல்வம்.

Thursday, August 10, 2023

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்." (மத்.16:24)

"தாத்தா, கடவுள் நம்மை இந்த உலகில் படைத்தது நமது சிலுவையை நாம் சுமந்து அவர் பின்னால் செல்வதற்காகத் தானா?

அவர் சிலுவையைச் சுமந்து கொண்டு கல்வாரி மலைக்குச் சென்றபோது அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் நம்மை ஏன் கஷ்டப்படச் சொல்லுகிறார்?"

"'ஒரு தாய் பிரசவ சமயத்தில் எவ்வளவு வேதனை அனுபவித்தாள் என்று அவளுக்குத் தெரியும்.

தெரிந்தும் தன் மகளுக்கு ஏன் திருமணம் செய்து வைக்கிறாள்?

ஏன் பேரன் பேத்திகளுக்கு ஆசைப்படுகிறாள்?"

"தாத்தா, பிரசவ வலி அனுபவிக்காமல் குழந்தை பெற முடியாது. 

ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தபின் அதை பெற்ற தாய் அனுபவிக்கும் இன்பத்தை வேறு யாராலும் அனுபவிக்க முடியாது.

பிரசவ வலிக்குப் பின் கிடைக்கும் இன்பத்தைக் கருதி தான் பெண்கள் அந்த வலிக்கு ஆசைப்படுகிறார்கள்."

"' விவசாயி வயல் சகதிக்குள் இறங்கி கஷ்டப்பட்டு வேலை செய்கிறான் என்றால் அதனால் அவனுக்கு வரவிருக்கும் வருமானத்தை எண்ணி தான்.

விவசாயி சேற்றுக்குள் இறங்காவிட்டால் நீ சோற்றுக்கு எங்கே போவாய்?

புனித வெள்ளிக்குப் பின் உயிர்ப்பு ஞாயிறு.

 இது இறைவன் வகுத்த நியதி.

இறைவன் வகுத்த அடிப்படை விதிகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்."

"தாத்தா, நீங்கள் வேறொரு பதிலைச் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்."

"'என்ன பதிலை?" 

"மனிதன் செய்த பாவத்தின் விளைவு தான் துன்பம் (சிலுவை) என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்."

"'ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு எதிர்க் கேள்வி உண்டு.

மனிதன் செய்த பாவத்தின் விளைவு தான் துன்பம் என்று நான் சொன்னால்,

மனிதன் பாவம் செய்வான் என்று தெரிந்தும் கடவுள் ஏன் அவனைப் படைத்தார் என்று கேட்பாய்.

அதற்குப் பதில் என்னிடம் இல்லை.

கடவுள் அளவற்ற ஞானம் உள்ளவர். 

நீ கடவுளின் படைப்பை பற்றி கேள்வி கேட்டாய். 

கடவுளின் படைப்பை பற்றி கடவுளிடம்தான் கேட்க வேண்டும்.

என்னிடம் கேட்டால் எனது அனுபவத்துக்கு உட்பட்ட பதிலைத் தான் சொல்வேன்.

கடவுள் மனிதனை பரிபூரண சுதந்திரத்தோடு படைத்தார்.

மனிதன் தனது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பாவம் செய்தான்.

பாவத்தின் விளைவு மனிதனுடைய ஆன்மீக மரணம்.

அதிலிருந்து அவனை மீட்பதற்காக இறைமகன் மனிதனாகப் பாடுகள் பட்டு மரித்துப் பரிகாரம் செய்தார்.

இவை நடந்து முடிந்த விஷயங்கள்.

நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்த இயேசு கிறிஸ்து சொன்னபடி நாம் நடக்க வேண்டும் என்பதுதான் நடக்க வேண்டிய விஷயம்.

நம்மை மீட்பதற்காக இயேசு சிலுவையைச் சுமந்தார். 

நாம் மீட்புப் பெற வேண்டுமென்றால் அவர் சிலுவையைச் சுமந்தது போல நாமும் சுமக்க வேண்டும்.

அன்று இன்ப வனத்தில் பசாசு ஏவாளை நோக்கி "ஏன்" என்று கேட்டது.

"அது இறைவனின் கட்டளை. அதை ஏன் என்று கேட்க நீ யார்?"

என்று ஏவாள் கேட்டிருந்தால் பாவம் நுழைந்திருக்காது.

அறிவியலில் ஏன் என்று கேட்டால் தான் அறிவு வளரும்.

ஆன்மீகத்தில் இறைவனது கட்டளையை 'ஏன்' என்று கேட்காமல் கீழ்படிந்து நடந்தால் தான் ஆன்மீகம் வளரும்.

"உனது பகைவனை நேசி.

உனக்கு தீமை செய்தவனுக்கு நன்மை செய்.

உனது சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்செல்."

இவை இயேசு நமக்கு கொடுத்திருக்கும் கட்டளைகள்.

மருத்துவர் மருந்துச் சீட்டுக் கொடுக்கும்போது ஏன் என்று கேட்கிறோமா?

சொன்ன மருந்தை வாங்கி சாப்பிடுவதில்லை?

மருத்துவர் மேல் நமக்கு நம்பிக்கை இருப்பதால் அவர் சொன்னபடி செய்கிறோம்.

இயேசுவின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் ஏன் என்று கேட்காமல் அவர் சொன்னபடி செய்கிறார்கள்."

"அப்போ கேள்வியே கேட்க கூடாதா?"

"'விளக்கம் கேட்டு கேள்வி கேட்கலாம்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."

"இந்த வசனத்தை விளக்குங்கள், தாத்தா'' என்று நீ கேட்டிருக்கலாம்."

"சரி, தாத்தா, விளக்குங்கள்."

"'இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாகச் சிலுவையைச் சுமந்து சென்று அதில் தன்னையே பலியாக தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

நாம் மீட்புப் பெற வேண்டுமென்றால் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நமது சிலுவையை சுமக்க வேண்டும்.

பாவத்தின் விளைவாக மனித வாழ்வில் துன்பங்கள் இயல்பாகி விட்டன.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் துன்பங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

துன்பங்களைத் துன்பங்களாக அனுபவித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை.

இயேசு தனது துன்பங்களை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக மாற்றியதால் அவரது துன்பங்களை சிலுவை என்று அழைக்கிறோம்.

நாமும் நமது துன்பங்களை இயேசுவின் பெயரால் பாவப் பரிகாரமாக மாற்றி, அதாவது, சிலுவையாக மாற்றி, அதை இயேசுவின் பின் சுமந்து செல்ல வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

குருவைப் பின்பற்ற வேண்டியது சீடர்களின் கடமை.

ஆகவே சிலுவையைச் சுமந்து நம்மை மீட்ட இயேசுவை நாமும் சிலுவையைச் சுமந்து பின் செல்ல வேண்டும்.

ஒரு மாணவன் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவன் என்பதற்கு அடையாளம் அவன் அணியும் சீருடை.

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளம் நாம் சுமக்கும் சிலுவை தான்.

புரிகிறதா? இன்னும் விளக்க வேண்டுமா?"

"புரிகிறது, தாத்தா. எவையெல்லாம் சிலுவைகள்?"

"'நமது உடலுக்கு இன்பம் தராத எல்லாம் சிலுவை தான்.

காலையில் இன்னும் கொஞ்சம் தூங்க வேண்டும் போல் இருக்கிறது.

விருப்பத்தை அடக்கி எழுவது சிலுவை.

உணவு ருசியாக இருப்பதால் நிறைய சாப்பிட ஆசையாக இருக்கிறது.

ஆசையை அடக்கி அளவோடு சாப்பிடுவது சிலுவை.

நம்மைத் திட்டுபவர்களைப் பதிலுக்குத் திட்ட வேண்டும் போல் இருக்கிறது.

பாவப்பதிகாரமாக அமைதி காப்பது சிலுவை.

உடலுக்குப் பிடிக்காத எதையும் பாவப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்தால் அது சிலுவை."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தினமும் ஆயிரக்கணக்கான சிலுவைகளைச் சுமக்கலாம் போல் இருக்கிறது."

"'நமது வாழ்க்கையே ஒரு சிலுவை தான்."

லூர்து செல்வம்.