Wednesday, February 17, 2021

*திக்குத் தெரியாத காட்டில்*(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்*
(தொடர்ச்சி)

அடுத்த கேள்வி:
"அருளடையாளங்கள் வழங்க திருச்சபையின் வழி காட்டுதல் என்ன? வெளிப்படையாக வெளியிடு..."

"கேள்வி புரிகிறதா?"

"இது ஒரு கேள்வி என்பது புரிகிறது. முதல் வார்த்தை என்னவென்று புரிகிறது.

கேள்வியை விளங்கும்படியாக கேட்டிருந்தால் பதிலைத் தேடி கண்டுபிடிக்க முடியும்.

 இதுவும் திக்குத் தெரியாத காட்டில் கொண்டுபோய் கண்ணையும் கட்டி விட்டது போல் இருக்கிறது.


பரவாயில்லை. நாம் பேசுவதற்கு முதல் வார்த்தையே போதும்."


"அருள் அடையாளங்கள்."

"ஆமா, தூய தமிழ்ச்சொல். 

தேவ திரவிய அனுமானம் என்ற சொல் 

திரு அருட்சாதனமாக மாறி

 இப்பொழுது அருளடையாளம் என்ற பெயர் பெற்றிருக்கிறது.

விசுவாசமும், சமாதானமும், ஆன்மாவும் மாறியது போல.


ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் அவன் ஆன்மாவிற்குக் கேடு விளைந்தால், அவனுக்கு வரும் பயனென்ன?
(மத்.16:26)


26மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?(மத்.16:26)

பழைய மொழிபெயர்ப்பில் இருந்த ஆன்மா புதிய மொழிபெயர்ப்பில் வாழ்வாக மாறி இருக்கிறது.

அதேபோல்தான் தேவ திரவிய அனுமானம் அருள் அடையாளமாக மாறியிருக்கிறது."

"மாறியதில் தவறு ஒன்றும் இல்லையே!"

"அதற்குள் இறங்கினால் வெளியே வர முடியாது. இப்போதைக்கு அந்த முயற்சி வேண்டாம்.


நாம் விஷயத்துக்கு வருவோம்.
(Let us come to the point)

அருள் அடையாளம்.

(an outward and visible sign of an inward and invisible grace.)
உள்ளார்ந்த அருளை காட்டும் வெளியரங்க அடையாளம்.

அருள் அடையாளம்.(Sacrament) கொடுக்கப்படுவது கண்ணுக்கு தெரியும். ஆனால் அது வழங்கும் இறைஅருள் நமது கண்ணுக்கு தெரியாது.

அடையாளம் உடல் சம்பந்தப்பட்டது. அருள் ஆன்மா சம்பந்தப்பட்டது.

உடலும் ஆன்மாவும் இணைந்தவன் தான் மனிதன்.

மனிதனுடைய உடலை நம்மால் பார்க்க முடியும் ஏனென்றால் அது ஒரு சடப்பொருள். 

ஆன்மாவை கண்ணால் பார்க்க முடியாது, ஏனென்றால் அது ஆவி.

இரண்டிலும் ஆன்மா தான் முக்கியம். ஏனெனில் அது அழியாது.

அருள் அடையாளமும் மனிதனை போன்றதுதான்.

உடல் கண்ணுக்கு தெரிவது போல அடையாளமும் கண்ணுக்கு தெரியும்.

ஆன்மா கண்ணுக்கு தெரியாதது போல அருள் கண்ணுக்கு தெரியாது.

உடலுக்கு முடிவு இருப்பது போல அடையாளத்திற்கும் முடிவு உண்டு.


அருள் அடையாளத்தைக் கொடுத்து முடித்தவுடன் அடையாளமும் முடிந்து விடும். 

 ஆனால் அது சுட்டிக் காண்பிக்கும் உள்ளரங்க அருள் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டிருக்கும்.

'குருவானவர் குழந்தையின் தலையில் தண்ணீர் ஊற்றி 

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நான் உன்னைக்  கழுவுகிறேன்."  என்கிறார்.


இது வெளி அடையாளம், குருவானவர் தொடர்ந்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க மாட்டார்.

 ஆனால் இந்த வெளி அடையாளத்தின் போது ஆன்மாவிற்குள் நுழைந்த அருள் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வேலை செய்து கொண்டே இருக்கும்."

"அருள் என்றால் என்ன?"

"நீங்கள் உலகத்தில் வாழ உங்களுக்கு உதவியாக இருப்பது எது?"

"பொருள்."

"உலக வாழ்வு வாழ உதவியாக இருப்பதை பொருள் என்பது போல

 ஆன்மீக வாழ்வு வாழ உதவியாக இருப்பதை அருள் என்கிறோம்.

சுருக்கமாக சொல்வதானால் ஆன்மீக வாழ்வு வாழ இறைவன் செய்யும் உதவியை அருள் (grace) என்கிறோம்.

இறைவனோடு நமக்கு உறவை ஏற்படுத்தும் அருளை தேவ இஷ்டப் பிரசாதம் (Sanctifying grace) என்கிறோம்.

நற்செயல்கள் புரிய நமக்கு உதவியாக இருக்கும் அருளை உதவி வரப்பிரசாதம் (Actual grace) என்கிறோம்."

"அருள் அடையாளங்கள் (Sacraments) ஏழு என்பது தெரியும்.

அவை ஒவ்வொன்றையும் பற்றி கொஞ்சம் விளக்கமாக பேசுவோமா?"


"முதலில் அருள் அடையாளங்கள் ஏழையும் சொல்லுங்கள்."

"1. திருமுழுக்கு
2. உறுதிப்பூசுதல்
3. நற்கருணை
4. ஒப்புரவு
5. நோயில்பூசுதல்
6. குருத்துவம்
7. திருமணம்"

இயேசு என்னும் ஏரியில் இருந்து வயல்கள் ஆகிய ஆன்மாக்களுக்கு அருள் வரமாகிய தண்ணீர் வருவதற்காக வாய்க்கால்களாக விளங்குபவை 7 அருள் அடையாளங்களும்.

திருமுழுக்கு முதல் அருள் அடையாளம் மட்டுமல்ல மற்ற அருளடையாளங்களுக்கு வாசல் போன்றது.

திருச்சபைக்கு நுழை வாசலும் அதுதான்.

நமது ஞான வாழ்வுக்கு ( Spiritual life) ஆரம்பமே திருமுழுக்கு தான்.

"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்.

 *பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து*


நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். 
(மத். 28:19, 20 )

இயேசுவின் சீடர்கள் ஆக வேண்டுமென்றால் முதலில் திருமுழுக்கு பெறவேண்டும்.

பெற்றபின் அவர்
கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்."

"திருமுழுக்குப் பெறுபவரை தண்ணீருக்குள் முக்கி எடுக்க வேண்டும் என்று சில சபையினர் சொல்கின்றார்களே. நாம் அப்படி செய்வதில்லையே."


"ஏங்க, பக்கத்து வீட்டுக்காரன் இட்லிக்கு மிளகாய் பொடி வைத்து சாப்பிட்டால் நாமும் அப்படித்தான் சாப்பிட வேண்டுமா?

கத்தோலிக்க திருச்சபை தண்ணீரை தலையில் ஊற்றச் சொல்கிறது.

தண்ணீர் ஒரு வெளி அடையாளம் மட்டுமே. அதிலிருந்து அருள் வெள்ளம் வராது. அருளைத் தருபவர் பரிசுத்த ஆவியானவர்.


நமது திருச்சபையின் ஒழுங்கு முறைப்படி 

திருமுழுக்கு பெறுபவரின் தலையில் தண்ணீர் ஊற்றி 

"தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் நான் உன்னைக் கழுவுகிறேன்"

என்று சொல்ல வேண்டும்.

I baptize thee in the name of the Father and of the Son and of the Holy Ghost.

வார்த்தைகளில் மாற்றம் இருக்க கூடாது.

திருமுழுக்கு கொடுக்கும்போது நமது
 ஆன்மாவில் உள்ள அனைத்து பாவங்களும், ஜென்ம பாவமும் கர்மப் பாவங்களும், முற்றிலுமாக மன்னிக்கப்படுகின்றன.

நமது ஆன்மா தேவ இஷ்டப் பிரசாதத்தால் நிரப்பப்படுகிறது.

நமக்கும் இறைவனுக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்படுகிறது.

சாவான பாவத்தால் மட்டுமே அவ்வுறவை அழிக்க முடியும்.

நம் வாழ்வில் சாவான பாவம் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.
'
திருமுழுக்கு பெற்ற உடன் மரணம் நேர்ந்தால் நேராக விண்ணக பேரின்பத்திற்குச் சென்றுவிடுவோம்."

"விவரம் தெரிந்த பின்புதான் திருமுழுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றார்களே.

நாம் ஏன் குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுக்கிறோம்?"

"அவர்களுடைய வீட்டில் குழந்தை பிறந்தவுடன் பால் ஊட்டுகிறார்களா, 

அல்லது உணவின் அவசியத்தை உணரும் அளவிற்கு வளர்ந்த பின்புதான் சாப்பாடு கொடுக்கின்றார்களா?"

"அதுவும் சரிதான்."

"எதுவும் சரிதான்?"

"குழந்தைகளுக்கு பாலூட்டுவது."

"உடல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் குழந்தையை கவனிக்க வேண்டியது பெற்றோரின் தலையாய கடமை.


குழந்தைக்கு திருமுழுக்கு கொடுத்தால் மட்டும் போதாது. அது வளரும்போது தாயானவள் 

எப்படி அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று சொல்ல கற்றுக் கொடுக்கிறாளோ அதே போல  

இயேசு மரி சூசை என்றும் சொல்ல கற்றுக் கொடுக்க வேண்டும்.

எப்படி "அப்பாவை பாரு, ஒரு முத்தம் கொடு" என்று கற்றுக் கொடுக்கிறாளோ அதேபோல 

"இயேசுவை பாரு, இயேசுவே இரட்சியும் சொல்லு" 

என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

குடும்ப ஜெபம் சொல்லும்போது குழந்தைகளை உடன் வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் விளையாடினாலும், தூங்கினாலும், அழுது கொண்டிருந்தாலும் நாம் ஜெபம் சொல்வது அவர்களுக்கு தெரிய வேண்டும்.

குழந்தைகளை அருகில் வைத்து பெற்றோர் ஞான காரியங்களை பேச வேண்டும்.

குழந்தைகள் அருகில் வைத்து பேசத் தகாதவை பேசுவதோ சண்டை போடுவதோ கூடாது.

கோவிலுக்கு திருப்பலிக்குச் செல்லும் போது குழந்தைகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

உள்ளே விளையாடுகிறார்கள் என்பதற்காக வெளியே எடுத்துச்சென்று தாங்களும் திருப்பலியில் கலந்து கொள்ளாமல் குழந்தைகளையும் கலந்து கொள்ள விடாமல் தடுப்பது சரியல்ல.

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்று சொன்ன இயேசுைவைப் பார்க்கத்தான் திருப்பலிக்கு செல்கிறோம்.


குழந்தைகளோடு நாம் சென்றால் அவரை விட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது."

"குருவானவரைத் தவிர வேறு யாரும் திருமுழுக்கு கொடுக்கலாமா?

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment