Wednesday, February 24, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 10 (தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 10
(தொடர்ச்சி)


"பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் கனிகளுக்கும் என்ன வித்தியாசம்?"

"தாய்க்கும், பிள்ளைகளுக்கும் உள்ள வித்தியாசம்."

"ஒப்புமை புரியவில்லை."

"கொடைகள் இறைவனிடமிருந்து வருவதால், அவை நமது ஆன்மீக வாழ்வில் இறைவனுக்கு உகந்த காரியங்களைச் செய்கின்றன.

செய்யப்படுகின்ற இறைவனுக்கு உகந்த காரியங்கள்தான் அவை பெற்றெடுக்கும் கனிகள்.

The gifts of the Holy Spirit are like virtues, 

the fruits of the Holy Spirit are the actions that those virtues produce."

"அதாவது பரிசுத்த ஆவி தனது கொடைகள் மூலமாக. நற்செயல்களை செய்விக்கிறார்.

சரியா?"

"சரி. பரிசுத்த ஆவியின் உதவியால்தான் (கொடை)

நற்செயல்களாகிய (moral actions)
கனிகளைச் செய்கிறோம்.

பரிசுத்த ஆவியின் கனிகள்தான் அவர் நம்மில் செயலாற்றுகிறார் என்பதற்கு அத்தாட்சி.

ஒரு இடத்திலிருந்து நறுமணம் வந்தால் அங்கே மலர்கள் இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்.
'
அதேபோன்று ஒருவரிடம் பரிசுத்த ஆவியின் கனிகள் செயல்பட்டுக்கொண்டு  இருந்தால்

 அவர் பரிசுத்த ஆவியால் இயக்கப்பட்டு வாழ்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்."

"நமது ஒத்துழைப்பு இல்லாமல் பரிசுத்த ஆவி செயலாற்றுவாரா?"

" நமது ஒத்துழைப்பைக் கொடுக்கவும், கொடுக்காதிருக்கவும் கடவுள் நமக்குப் பரிபூரண சுதந்திரத்தைத் தந்திருக்கிறார்.

நமது ஒத்துழைப்பைக் கடவுள் எதிர் பார்க்கிறார்.

ஒத்துழைப்பைக் கொடுத்தால் பயனடைய போவதும் நாம்தான்.

 கொடுக்காவிட்டால் இழக்கப் போவதும் நாம்தான்.

 கடவுளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

கடவுள் கொடைகளை இலவசமாகத் தருகிறார். நாம் அவற்றைப் பயன்படுத்தினால்தான் அவை கனிகளைக் கொடுக்கும்."


"பரிசுத்த ஆவியின் கனிகள் எவை?"

"1.அன்பு, (charity) 
2.மகிழ்ச்சி,( joy)
3. சமாதானம், (peace)
4.பொறுமை, (patience)
5.பரிவு,( kindness)
6.நன்னயம், (goodness)
7.நம்பிக்கை,faith
 8.கனிவு,( mildness)
9.தன்னடக்கம் (modesty)
10.பணிவு நயம் (self-control)
11.தாராள குணம் (generosity)
12.நிறை கற்பு (chastity)"

, " கொடைகள் ஏழு, கனிகள் 12.

எந்த கொடை பெற்றது எந்த கனி என்று கூற முடியுமா?"

"7 கொடைகளும் இணைந்து செயல் புரிந்து கிடைத்ததுதான் 12 கனிகளும்."


"கனிகளின் பெயர்களைப் பார்க்கும்போது அவை ஞானஸ்நானமே பெறாத நபர்களிடம் கூட காணப்படுகின்ற குணங்கள் போலவே தோன்றுகின்றன. ஏதாவது வித்தியாசம் உண்டா?"

"விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் உள்ள வேறுபாடுதான்.

 ஞானஸ்நானம்பெற்றவர்களுக்கு பரிசுத்த ஆவி கொடுக்கும் கனிகள் விண்ணகத்திற்கு உரியவை

 ஞானஸ்நானம் பெறாதவர்களிடம் உள்ள அதே பெயருடைய குணங்கள் மண்ணகத்திற்கு உரியவை.

உதாரணத்துக்கு,

இறைவன் தனது படைப்பின் போது எல்லா மனிதர்களுக்கும் தனது அன்பை பகிர்ந்து அளித்திருக்கிறார்.

அன்பு எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட கொடை,

கையில் பணம் இருந்தால் அதைக்கொண்டு எதை வேண்டுமென்றாலும் வாங்கலாம்.

ஆனால் பயன்படுவதை வாங்குபவன் மட்டுமே புத்திசாலி.

அதேபோன்றுதான் இறைவன் தந்த அன்பை இறையுலகம் செல்லவும் பயன்படுத்தலாம், பூவுலகிற்காக மட்டுமே வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.

கிறிஸ்தவ அன்பு, 

அதாவது,

 பரிசுத்த ஆவியின் கொடையாகிய அன்பு, விண்ணக , நித்திய, பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்லும்.

சாதாரண அன்பு இவ்வுலகில் வாழ வைக்கும்.

டாலரும் நோட்டு தான்.
ரூபாயும் நோட்டு தான்.

ஆனால் டாலர் அமெரிக்காவில் செல்லும் இந்தியாவில் செல்லாது.

ரூபாய் இந்தியாவில் செல்லும்,அமெரிக்காவில் செல்லாது.

இறையன்பு விண்ணகத்தில் செல்லுபடியாகும் நோட்டு.

மனித அன்பு மண்ணகத்தில் மட்டும் செல்லுபடியாகும் நோட்டு.

இப்பொழுதெல்லாம் இறைநம்பிக்கை இல்லாதவர்கள் "மனிதம்" பற்றி பேசுகிறார்கள்.

இவர்கள் பேசும் மனிதமும் மனிதத்தை சார்ந்த நல்ல செயல்களும் உலகத்தில் வாழ வைக்கும்.

ஆனால் இறையன்பு சேர்ந்த மனிதம் தான் விண்ணகத்திற்கு இட்டுச்செல்லும்.

*இறைவன் பெயரால்* ஒரு சிறுவனுக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தாலும் அதற்கு விண்ணகத்தில் சன்மானம் உண்டு.


ஆனால் ஒருவன் '*தன் பெயரால்*'

 பத்து கோடி ரூபாய் தானம் செய்தாலும்,

அதை கோவில் கட்டவே கொடுத்தாலும்,

காணிக்கையாக உண்டியலில் போட்டாலும்,

 அதற்குரிய பலனாகிய புகழ் உலகத்தில் மட்டும்தான் இருக்கும்.
'
புரிகிறதா மேலும் விளக்கம் வேண்டுமா?"


"மனிதனுக்கு மனிதனுக்காக உதவினால் கிடைக்கும் புகழ் உலகு உள்ளளவும் இருக்கும்.


அதே மனிதனுக்கு இறைவன் பெயரால் உதவினால் கிடைக்கும் சன்மானம் நித்திய காலமும் நீடிக்கும்.

இரண்டுமே உதவிதான். ஆனா பலன் வெவ்வேறு.

எனக்கு புரிந்திருக்கிறதா?'

"புரிந்திருக்கிறது.''

"இப்போது ஒவ்வொரு கனியாக சாப்பிடலாமா?''

"அதற்காகத்தான். காத்துக்கொண்டிருக்கிறேன்"

"முதலில் அன்பு என்னும் கனியை எடுப்போம்.

இறையன்பு பிறர் அன்பும் சேர்ந்ததுதான் பரிசுத்த ஆவியின் கனியாகிய அன்பு. (Charity)

நம்மைப் படைத்த இறைவனையும் இறைவனில் நமது சகோதரர்களையும்  

பிரதிபலன் எதிர்பார்க்காது நேசிப்பதே உண்மையான அன்பு.

இறைவன் நம்மை பிரதிபலன் எதிர்பார்க்காது நேசிக்கிறார்.

 நம்மை நேசிப்பதால் அவருக்கு எந்தவிதமான பலனும் கிடையாது, ஏனெனில் நாம் இல்லாமலேயே அவர் நிறைவானவர்.

 நாம் நேசிக்கும் போது பயனடையப் போவது நாம்தான்.

நாமும் நாம் அடையப்போகும் பலனுக்காக அல்ல, இறைவனை இறைவன் என்பதற்காகவே நேசிக்க வேண்டும்.

நமது அயலானையும் இறைவனுக்காக நேசிக்க வேண்டும். நமது நேசம் நமது செயல்களில் பிரதிபலிக்க வேண்டும்.

செயல் இல்லாத அன்பு செத்த அன்பு."

" இறைவனை இறைவன் என்பதற்காகவே நேசிக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன?"

"உணவை உண்பவர்களில் இருவகையினர் உண்டு.

ஒரு வகையினர் அது உணவு என்பதற்காகவே உண்பார்கள்.

இன்னொரு வகையினர் உணவிலுள்ள ருசிக்காக உண்பார்கள்.

உணவு என்பதற்காகவே உண்பவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

ருசிக்காக உண்பவர்கள்தான் நோய் நொடிகளுக்கு ஆளாகிறார்கள்.

இறைவன் நம்மை படைத்தவர் என்பதற்காகவே அவரை நேசிக்க வேண்டும்.

நம்மை எதற்காக படைத்தாரோ அதை அவர் நிறைவேற்றுவார்.

இவ்வுலகில் நமக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளை இறைவன் தருவார் என்பதற்காக நேசிக்கக் கூடாது.

அவற்றை எதிர்பார்த்து இறைவனை நேசிப்பவர்கள்தான் தாங்கள் எதிர்பார்த்தது கிடைக்காவிட்டால் வாழ்வில் ஏமாற்றங்களைச் சந்திக்கிறார்கள்.

கடவுள் நாம் எதிர்பார்ப்பவற்றை அல்ல, நமது ஆன்மீக நித்திய பேரின்ப வாழ்வுக்கு உதவியாக இருப்பவற்றை மட்டுமே தருவார்.

அவர் தருவதும் தராததும் நமது ஆன்மீக நன்மைக்கே என்பதை நாம் உணர்ந்தால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

எதிர்பாராது நேசிப்பவர்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்."

"அதாவது முதல் கனியை ருசித்து உண்பவர்கள் 

இரண்டாவது கனியாக மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் அனுபவிப்பார்கள்.

பரிசுத்த ஆவி தரும் மகிழ்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும்?"


"நம்மில் அநேகர் மகிழ்ச்சியைப் பற்றி தவறான கருத்து வைத்திருக்கிறார்கள்.

 வேண்டியதெல்லாம் கிடைக்கும்போது உணர்ச்சி பொங்க அனுபவிப்பதையே மகிழ்ச்சி என்று எண்ணுகிறார்கள்.

உதாரணத்திற்கு, திருவிழா சமயங்களில் கிடைக்கும் ருசியான மட்டன் பிரியாணி உணவு அப்படிப்பட்டவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை 'அளிக்கும்.'

சாதாரண உணவு மகிழ்ச்சியை 'அழிக்கும்.'

எதிர்பார்த்ததைவிட அதிகமான சம்பள உயர்வு கிடைத்துவிட்டால் மகிழ்ச்சி பொங்கும்.

எதிர்பார்த்தது கூட கிடைக்காவிட்டால் மகிழ்ச்சி வரவே வராது.

இப்படிப்பட்ட மகிழ்ச்சி பரிசுத்த ஆவி தரும் மகிழ்ச்சி அல்ல.

எது கிடைக்கிறதோ அதில் திருப்தி காணும் மகிழ்ச்சிதான் உண்மையான மகிழ்ச்சி.

எதிர்மறை நிகழ்வுகளால் இம் மகிழ்ச்சியை பாதிக்க முடியாது.

உண்மையில் உண்மையான மகிழ்ச்சிக்கு எதிர்மறை நிகழ்வு, தடை போன்றவை கிடையாது.


நாற்சந்தி ரோட்டில் போலீஸ் நின்று கொண்டு Stop காண்பித்தால், தடை என்று சொல்வோமா?

வகுப்பில் ஆசிரியர், "கூச்சல் போடாதீர்கள்" என்று சொன்னால் அதை எதிர்மறை உத்தரவாக கருதுவோமா?

ஆன்மீக வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளும் நமது ஆன்மாவை விண்ணத்திற்கு வழிகாட்டும் கைகாட்டிகளே!

என்ன நடந்தாலும் நமது மகிழ்ச்சியைக் கூட்டுமேயொழிய குறைக்காது.

"அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."
(லூக். 2:10)

வானவர் கொண்டுவந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி என்ன?

1.உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார்.

2.உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை.

3. மண்ணுலகில் நல்மனதோற்கு சமாதானம்.

மரியாயின் வயிற்றின் கனி சமாதானத்தின் வேந்தன்."

"இப்படியும் சொல்லலாமே :

அன்பு மயமான இறைமகன் மனுமகன் ஆனதால்

 நாம் பெற்றது மகிழ்ச்சியும், சமாதானமும்."

(சமாதானம் தொடரும்)

லூர்து செல்வம்

No comments:

Post a Comment