Sunday, February 21, 2021

*திக்குத் தெரியாத காட்டில்* 6(தொடர்ச்சி)

*திக்குத் தெரியாத காட்டில்* 6
(தொடர்ச்சி)



"ஒரு கதை சொல்லலாமா."

 
"சொல்லுங்க. கரும்பு தின்ன கூலியா?"

"ஒரு ஊர்ல ஒரு அப்பா இருந்தாரு. அவருக்கு இரண்டு பிள்ளைகள்.அவர் பெரிய பணக்காரர். தன்னுடைய காலத்திற்கு பிறகு தன்னுடைய சொத்துக்களை நல்லா நிர்வாகம் பண்ணத் கூடியவனுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.  

அந்த இரண்டு பேரில் யாருக்கு திறமை அதிகம் என்பதை சோதிக்க விரும்பினார்.

ஆளுக்கு பத்து ரூபாய் கையில் கொடுத்தார்.

வீட்டில் உள்ள இரண்டு அறைகளை காண்பித்தார்.

"இங்கே பாருங்கள்.  
ஆளுக்கு ஒரு அறை.

 ஒவ்வொருவரிடமும் பத்து ரூபாய் இருக்கிறது. 

நான் இப்பொழுது வீட்டைவிட்டு வெளியே போய் விடுவேன்.

 மாலையில் திரும்பி வீட்டுக்கு வரும்போது இந்த பத்து ரூபாயையும் கொண்டு வாங்கிய பொருளால் அவரவர் அறையை நிரப்பி வைத்திருக்க வேண்டும்.

 யாருடைய அறை திருப்தியாக நிறைந்து இருக்கிறதோ அவனுக்கு ஒரு பரிசு"

என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டார்.

இரவில் 8 மணி அளவில் வீடு திரும்பினார்.

மூத்தவனுடைய அறைக்குச் சென்றார். உள்ளே ஒரே இருட்டு.

அவன் பத்து ரூபாய்க்கு வைக்கோல் வாங்கி உள்ளே வைத்திருந்தான். அதுவும் அறையை நிறப்பவில்லை.

"அப்பா நீங்கள் கொடுத்தது வெறும் 10 ரூபாய் மட்டுமே. அதைக் கொண்டு மிக அதிகமாக வாங்க கூடிய பொருள் வைக்கோல் மட்டுமே.

உங்களுக்கு திருப்தி ஏற்படாவிட்டால் தப்பு என்னுடையது அல்ல.

பத்து ரூபாவுடையதுதான்."


அடுத்து இளையவன் அறைக்குச் சென்றார். அறை பூட்டியிருந்தது.

மகன் வெளியே நின்றான்.

அப்பா வந்தவுடன் கதவைத் திறந்தான்.

அறையின் நடுவில் மேஜையின் மேல் ஒரு மெழுகுவர்த்தியும், பத்தியும் எரிந்து கொண்டிருந்ததன.

அறை நிறைய பிரகாசம்!

"அப்பா ஐந்து ரூபாய்க்கு மெழுகுவர்த்தி. ஐந்து ரூபாய்க்கு பத்தி. அறை நிறைய வெளிச்சமும் பத்தி வாசமும் நிறைந்திருக்கிறது.''

அப்பாவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மூத்தவனைப் பார்த்து,

"ஆளுக்கு பத்து ரூபாய்தான் கொடுத்தேன்.

 உன் அறையை வைக்கோலால் கூட நிரப்ப முடியவில்லை.

 உனது தம்பி அறை முழுவதும் ஒளியாலும் நறுமணத்தாலும் நிரப்பி வைத்திருக்கிறான்."

"சரி. சரி. பரிசை அவனிடமே கொடுங்கள்."

."எதற்காக இந்த கதை என்பது புரிகிறதா?"

"நன்றாகவே புரிகிறது. இருந்தால் மட்டும் போதாது. இருப்பதை ஒழுங்காக பயன்படுத்த தெரிய வேண்டும். சரியா?"

"பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் இந்த கதைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறது மாதிரியாவது தெரிகிறதா?"

"மாதிரியாவதா? முதல் கொடையாகிய ஞானம் பற்றி விளக்குவதற்காக தானே இந்த கதை! 

விளக்குங்கள்."


"முதலில் ஒரு விஷயத்தை சொல்லி விட வேண்டும்.

 ஏழு கொடைகளும் ஒன்றோடொன்று தொடர்பு உடையவை.

 எப்படி உடல் உறுப்புகள் வெவ்வேறாக இருந்தாலும்,   அவை ஒரே உடலில் தொடர்பு உடையவையாய் இருப்பதுபோல

 பரிசுத்த ஆவியின் கொடைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை.

முதல் கொடை ஞானம் ஏழாவது கொடை தெய்வ பயம்.

தெய்வ பயம்தான் ஞானத்தின் ஆரம்பம் என்பார்கள்.

Fear of God is the beginning of wisdom.

இறை பயம் உள்ளவனிடம் தான் ஆன்மீக ஞானம் இருக்கும்.

இறை பயம் இறைவனுக்கு எதிராக பாவம் செய்ய பயப்படுவான்.

பாவம் என்பது வெறும் செயல் அல்ல. எதிரான செயல்.

இறைவன் அளித்த கொடையாகிய புத்தியையும், அதன் மூலமாக பெற்ற அறிவையும் இறைவனுக்காக பயன்படுத்துவது புண்ணியம். இறைவனை எதிர்த்து பயன்படுத்துவது பாவம்.

விலங்குகளுக்கு புத்தியும் இல்லை அறிவும் இல்லை ஆகவே அவற்றால் பாவம் செய்ய முடியாது.

மனிதர்களிடம் புத்தி இருக்கிறது.

 அதை பயன்படுத்தும்போது அறிவு கிடைக்கிறது

 அந்த அறிவை மனிதன் இறை சேவையில் பயன்படுத்த வேண்டும்.

மனிதன் தனது புத்தியை சரியான முறையில் பயன்படுத்தினால் அவனுக்கு சரியான அறிவு கிடைக்கும்.

சரியான அறிவு தவறான பாதைக்கு போகாது.

தெய்வ பயம் உள்ளவன்தான் பாவத்திற்கு இட்டுச் செல்லும் படி தன்னுடைய புத்தியை பயன்படுத்த மாட்டான்.

புத்தியினால் பெற்ற அறிவை புண்ணிய வழியில் பயன்படுத்த உதவியாக இருப்பதுதான் ஞானம்.

இப்போது ஏழு கொடைகளில் நான்கை முடிச்சு போட்டிருக்கிறோம். எந்த நான்கையும் சொல்லுங்கள்."   

"தெய்வ பயம், ஞானம், புத்தி, அறிவு.

இப்போ ஒரு சந்தேகம் தெய்வ பயம் இல்லாதவர்களிடமும் புத்தியும் அறிவும் இருக்கிறதே."

"எல்லா மனிதர்களிடமும் புத்தியும் அறிவும் இருக்கிறது.

புத்தி உள்ளவன்தான் மனிதன்.

இறை நம்பிக்கை இல்லாதவர்களும் மனிதர்கள்தானே. 

ஆகவே புத்தியும் அறிவும் இருக்கிறது.

சில விஞ்ஞான அறிவு பெற்ற புத்திசாலிகளிடம் இறை நம்பிக்கை இல்லை.

அவர்களுடைய புத்தியும் அறிவும் இவ்வுலகை சார்ந்தவை.

இறைநம்பிக்கை இல்லாதவர்களிடம் ஆன்மீகம் இல்லை.

ஆன்மீகம் இல்லாதவர்களுக்கும் பரிசுத்த ஆவியின் கொடைகளுக்கும் சம்பந்தம் இல்லை.

நாம் இப்போது பேசிக்கொண்டிருப்பது ஆன்மீகம் பற்றி.

பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே புத்தியையும் அறிவையும் பயன்படுத்தும் மனிதர்களை பற்றி அல்ல.

சரி. விஷயத்துக்கு வருவோம்.

முதல் கொடையாகிய ஞானம் எதற்கு பயன்படுகிறது?"


"நாம் நம்மிடம் உள்ள புத்தியைக் கொண்டு ஈட்டிய அறிவை இறை ஊழியத்திற்கு பயன்படுத்த நமக்கு உதவியாக இருப்பதற்காக பயன்படுகிறது."

"கரெக்ட். தினமும் பைபிள் வாசிக்கிறோம். வாசித்ததை புத்தியைக் கொண்டு யோசிக்கிறோம். யோசிக்கும்போது பெறும் அறிவு இறைவாக்கை பற்றிய அறிவு.

இப்போது ஒரு சிறு கேள்வி.

பைபிள் வாசிப்பவர்களில் பாவம் செய்பவர்கள் இருக்கிறார்களா?"

"இருக்கிறார்கள்."

"பைபிள் வாசிப்பது ஒரு நல்ல செயல்.

நல்ல செயலைச் செய்பவர்கள் எப்படி பாவம் செய்ய முடியும்?"

"வாசித்தபடி வாழ்ந்தால் பாவம் உள்ளே நுழைய முடியாது.

இறைவன் தரும் நன்கொடையாகிய ஞானத்தைப் பயன்படுத்துபவர்கள் தாங்கள் பைபிளில் படித்த அறிவை தங்களது வாழ்க்கையில் பயன்படுத்துவார்கள்.

இங்கேயும் ஒரு பிரச்சனையை இருக்கிறது.

பைபிள் வாசிக்கும்போது இறைவன் வாசிப்பவர்களுக்கு என்ன சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்.


ஆனால் அநேகர் தாங்கள் வாசிக்கும்போது பைபிள் வசனங்களுக்கு இஷ்டம்போல் அர்த்தம் கொடுத்துக்கொண்டு தாங்கள் கொடுத்த அர்த்தத்தின் படி வாழ்கின்றார்களே!"


"நீங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை,

நம்மை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஏறத்தாழ 40,000 சபைகளாக பிரிந்து கிடக்கிறார்கள்.

 காரணம் வயது 40,000 விதமாகப் புரிந்து கொண்டதுதான்!

பைபிள் வாசகங்களை சரியாக புரிந்து கொள்வதற்கும் பரிசுத்த ஆவி தரும் ஞானம் வேண்டும்.

புத்தியும் சரி, கத்தியும் சரி பயன்படுத்த தெரியாவிட்டால் ஆபத்தில் முடியும்.

ஒரு ஆசிரியர் ஒரு நாள் வகுப்பிற்கு ஒரு தம்ளரில் சாராயத்தை எடுத்து வந்தார்.

தம்ளரை மேஜையின் மேல் வைத்துவிட்டு, ஒரு புழுவை எடுத்து சாராயத்துக்குள் போட்டார்.

மாணவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே போடப்பட்ட குழு துடிதுடித்து செத்தது.

"மாணவர்களே நீங்கள் இப்பொழுது பார்த்த காட்சியில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்?"

ஆசிரியர் சாராயத்தின் தீமையை விளக்குவதற்காக செய்த பரிசோதனை இது.

ஆனால் ஒரு மாணவன் எழுந்து சொன்னான்:

"சாராயம் குடிப்பது உடலுக்கு நல்லது என்ற பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறேன், சார்."

ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது

"டேய் சாராயத்துக்கு போடப்பட்ட செத்துப் போனதையும் நீ பார்க்கவில்லையா?"

"அதை பார்த்து தான் அந்த பாடத்தை கற்றுக் கொண்டேன்.

எனது வயிற்றுக்குள் நிறைய புழுக்கள் இருப்பதாக டாக்டர் சொன்னார்.

அதனால்தான் நான் மெலிந்து கொண்டே போகிறேனாம்.

நான் சாராயம் சாப்பிட்டால் அந்த புழுக்கள் எல்லாம் இறந்து விடும்.

சாராயம் என் உடம்பிற்கு நல்லது என்று இன்று கற்றுக்கொண்டேன்."

இப்படி புரிந்து கொள்பவர்களும் பைபிள் வாசிப்பவர்களில் இருக்கிறார்கள்.

பைபிளை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பரிசுத்த ஆவியின் ஞானம் நம்முள் இருக்க வேண்டும். நாம் அதை பயன்படுத்த வேண்டும்."

"உறுதிப்பூசுதல் பெற்றுவிட்டால் பைபிள் வாசகங்கள் அனைத்திற்கும் சரிவர பொருள் நமக்கு தெரிந்து விடுமா?"

"முன்னபின்ன பார்த்திராத ஒரு வசனத்தை வாசிக்க நேர்ந்தால் புத்தி பொருள் காண முயற்சிக்கும்.

அதன் சரியான பொருள் புத்திக்கு எட்டாவிட்டால் ஞானம் உதவிக்கு வரும்.

"தம்பி உன்னை வழி நடத்துவதற்கு என்றே இயேசு தனது குருக்களை நியமித்திருக்கிறார்.

உன்னுடைய பங்குத்தந்தையை உன்னை வழி நடத்துவதற்கு என்றே இயேசு தந்திருக்கிறார். 

புரியாதவற்றை அவரிடம் கேட்டு புரிந்துகொள்."  என்று வழிகாட்டும்.

"பைபிளை புரிந்து கொள்வதற்கு மட்டுமா நமக்கு ஞானம் கொடையாகத் தரப்பட்டிருக்கிறது?"

"இல்லை. நமது உலக அனுபவங்களை கூட ஆன்மீக அனுபவங்களாக மாற்றம் உதவியாக இருக்கும்.

பணத்தினால் சாதித்துவிட முடியும் என்று ஒரு காரியத்தில் இறங்கி இருப்போம்.

ஆனால் தோல்வியை சந்திப்போம்.

அப்போது ஞானம் வழிகாட்டும்:

"பணம் உன்னை படைக்கவில்லை.

உன்னைப் படைத்த இறைவனை நம்பி, ஜெபத்தின் உதவியுடன் காரியத்தில் இறங்கு. 

ஜெபத்தின் உதவியுடன் இறங்கும் பொழுது எது கிடைக்கிறதோ அதுவே உனக்கு கிடைக்க வேண்டியது.

உனக்கு வேண்டியதை தீர்மானிக்க வேண்டியது உன்னை படைத்த இறைவனே.

இந்த விசுவாச உணர்வோடு செயலில் இறங்கும்போது எது கிடைக்கிறதோ அதுவே உனக்கு வெற்றி."
இது ஞானம் காட்டும் வழி.


பிரச்சனையே நாம் விரும்புவது எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவதே.

இறைவன் தருவதை தான் நாம் விரும்ப வேண்டும் எனவே நிலையை நோக்கி ஞானம் வழிகாட்டும்.

"நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லது நடக்கும்."

அதாவது நம்பிக்கையோடு இறைவனிடம் ஜெபித்தால் என்ன நடந்தாலும் அது நமது நன்மைக்கே.

இந்த மனநிலை உள்ளவன்

 மரணமே வந்தாலும் 

"இறைவா உமக்கு நன்றி"

 என்று சொல்லிக் கொண்டே அவரிடம் செல்வான்."

(தொடரும்)  

லூர்து செல்வம்

No comments:

Post a Comment