Thursday, September 11, 2025

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? (லூக்கா.6:41)

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? 
(லூக்கா.6:41)

 காலில் பட்ட சகதியைச் சகதியால் கழுவ முடியுமா?

சுத்தமான தண்ணீரால் தான் சகதியைக் கழுவ முடியும்.

இலக்கணமே படிக்காதவன் மொழித் தேர்வுக்கான விடைத்தாளை மதிப்பீடு செய்ய முடியுமா?

எதைச் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு நாம் தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

உலகெங்கும் சென்று நற் செய்தியை அறிவியுங்கள் என்று அவருடைய சீடர்களாகிய நமக்கு இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்.

அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. 

அந்தக் கடமையை நிறைவேற்ற முதலில் நாம் நற்செய்தியை அறிந்திருக்க வேண்டும்.

அடுத்து நற்செய்தியை வாழ வேண்டும்.

நற்செய்தியை அறிந்து வாழ்பவர்கள் மட்டும் தான் அதை அறிவிக்க முடியும். 

தன்னை சுற்றியுள்ளோரை பகைத்துக் கொண்டு அவர்களோடு  சண்டை போட்டுக் கொண்டிருப்பவனால் 

மற்றவர்களை பார்த்து "பகைவர்களை நேசியுங்கள், உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்." என்று கூற முடியுமா? 

உங்கள் அயலானை நேசியங்கள் என்று கூற முடியுமா?

நம்மைச் சுற்றி வாழும் கெட்டவர்களை திருத்த வேண்டும் என்றால்  முதலில் நாம்‌ நல்லவர்களாக வாழ வேண்டும்.

கோவில் பக்கமே போகாதவன் மற்றவர்களிடம் "ஞாயிறு திருப்பலிக்கு செல்லுங்கள்'' என்று அறிவுரை கூற முடியுமா?

நாம் திருந்தி வாழாமல் மற்றவர்களை திருத்த முற்பட்டால் அவர்கள் நம்மை பார்த்து

"நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்?"

என்ற நற் செய்தி வசனத்தை‌ நம்மை நோக்கிக்  கூறுவார்கள்.

மற்றவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவதற்கு அவர்களுடைய குற்றம் குறைகளைக் காண முயற்சி செய்யக் கூடாது.

அவர்களை குற்றங்களிலிருந்து விடுவித்து அவர்களை நல்லவர்களாக மாற்றும் நல்ல எண்ணத்தோடு குற்றம் குறைகளை கவனிக்கலாம்.

மருத்துவர் ஒருவரை குணமாக்க அவரது நோய் நொடிகளைப் பற்றி ஆராய்வது போல நாம் மற்றவர்கள் விடயங்களில் நல்ல நோக்கத்தோடு தலையிடலாம்.

அவர்க்கு முன் நாம் ஆன்மீகச் சுத்தம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

நமது வாழ்வில் தவறுகள் இல்லாதிருந்தால் தான் நம்மால் மற்றவர்களுடைய தவறுகளை சுட்டி காண்பிக்க முடியும்.

சதா இருமிக் கொண்டிருக்கும் மருத்துவர் இருமலுக்கு மருந்து சொல்ல அருகதை அற்றவர்.
 

மழைக்குக் கூட பள்ளிக்கூடத்தின் பக்கம் ஒதுங்காதவரிடம் சென்று 

'எனக்கு ஒரு கடிதம் எழுதித் தர  முடியுமா? என்று யாராவது கேட்பார்களா?

வகுப்பில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலைக் கூற வேண்டுமென்றால் 

ஆசிரியர் தயாரிப்புடன் வகுப்புக்குள் நுழைய வேண்டும்.

நினைவில் வைத்துக் கொள்வோம்.

சமூகத்தைச் சீர்திருத்த நினைக்குமுன் நம்மை நாமே சீர்திருத்திக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, September 10, 2025

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். (லூக்கா நற்செய்தி 6:36)

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். 
(லூக்கா நற்செய்தி 6:36)

நமது விண்ணகத் தந்தை எந்தெந்த வகையில் நம்மோடு இரக்கம் உள்ளவராய் இருக்கிறார்?

ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியைத் தின்றால் "சாவீர்கள்" என்று தந்தை நமது முதல் பெற்றோரிடம்  கூறியிருந்தார்.

பாவத்தின் விளைவாக நிகழ்ந்தது ஆன்மீக மரணம். 

பாவம் ஆன்மாவின் உயிராகிய தேவ இஷ்டப் பிரசாதத்தை நீக்கி விடுகிறது.

ஆனால் கடவுள் மனிதர்களை அப்படியே விட்டு விடவில்லை.

தனது இரக்கத்தின் மிகுதியால் 
மனுக் குலத்தைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்.

அவரும் தனது சிலுவை மரணத்தின் மூலம் நம்மை நித்திய மரணத்திலிருந்து மீட்டார்.

தனது சாயலாக நம்மைப் படைத்த கடவுள் அவரது இரக்க சுபாவத்தையும் நம்மோடும் பகிர்ந்துள்ளார்.

அவர் இரக்கமாய் செயல் புரிந்தது போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

நாமும் நமது பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களைத் திருத்த வேண்டுமே தவிர தண்டிக்கக் கூடாது.

நாம் பாவம் செய்யும் போது இறைவனுக்கு பகைவர்களாக மாறுகிறோம். 

ஆனால் கடவுள் நம்மை நேசிப்பதை நிறுத்தவில்லை. 

நமது பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்கிறார். 

நாமும் நம்மை பகைப்பவர்களையும் நேசிக்க வேண்டும். 

இதை எழுதும் பொழுது எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு மன்னன் தன்னை எதிர்த்துப் போரிட வந்த எதிரியோடு போரிட்டு வென்று அவனையும் அவனது படை வீரர்களையும் கைது செய்தான்.

தனது வெற்றியை விழாவாகக் கொண்டாடத் தீர்மானித்தான்.

அவனுடைய அமைச்சர்கள் அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்கள். 

வெற்றி விழா கொண்டாடும் முன் கைது செய்யப்பட்ட அனைத்து எதிரிகளையும் அழித்து விட வேண்டும்.

அமைச்சர்களின் ஆலோசனையை மன்னன் ஏற்றுக்கொண்டார். 

விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது. 

பெரிய மேடையும் பந்தலும் போடப்பட்டன.

விழா நாளன்று விழாவில் கலந்து கொள்ள வந்த மக்கள் அனைவரும் பந்தலில் அமர்ந்திருந்தனர்.

அமைச்சர்கள் விழா மேடையில் அமர்ந்திருந்தார்கள். 

மேடையில் ஏறிய மன்னன் மக்களை நோக்கி, 

"அன்பு மக்களே, வெற்றி விழா ஆரம்பிக்கும் முன் அமைச்சர்களின் ஆலோசனைப்படி நான் சிறைச்சாலைக்குச் சென்று அனைத்து விரோதிகளையும் அழித்துவிட்டு வருகிறேன்."

என்று கூறிவிட்டு சில படை வீரர்களோடு மன்னன் சிறைச்சாலைக்குச் சென்றான்.

ஒரு மணிநேரம் நேரம் ஆகிவிட்டது.

மன்னனின் வருகையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

ஆனால் அவர்கள் எதிர்பாராத ஒன்று நடந்தது.

தோள் மேல் கை போட்டு இரண்டு மன்னர்களும் வந்து கொண்டிருந்தார்கள். 

கைது செய்யப்பட்ட வீரர்கள் அவர்களைப் பின் தொடர்ந்து மகிழ்ச்சி பொங்க  வந்து கொண்டிருந்தார்கள்.

வீரர்கள் மக்களோடு பந்தலில் அமர்ந்தார்கள்.

இரண்டு மன்னர்களும் மேடை மேல் ஏறினார்கள்.

அமைச்சர்களுக்கும் மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. 

மன்னன் மைக் முன்னால் நின்று கொண்டு மக்களைப் பார்த்து,

"அன்பு மக்களே, அமைச்சர்களின் ஆலோசனைப்படி நான் அனைத்து எதிரிகளையும் அழித்துவிட்டேன். 

இப்போது என்னோடு வந்திருப்பவர்கள் நமது நண்பர்கள். 

நான் எதிரிகளை மன்னித்த வினாடியில் பகைமை அழிந்தது, நட்பு பிறந்தது.

மக்களே ஒன்றை அறிந்து கொள்ளுங்கள், பகைவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி அவர்களை மன்னிப்பது தான். 

இனி அவர்கள் நமது எதிரிகள் அல்ல, நண்பர்கள்."

மக்கள் கரகோஷம் செய்து மன்னர் சொன்னதை ஏற்றுக் கொண்டார்கள்.

நமது விண்ணக தந்தை இரக்கமாய் இருப்பது போல இந்த கதையில் வரும் மன்னனும் இரக்கமாக இருந்தார்.

நாமும் நமது பகைவர்கள் மீது இரங்கி அவர்களை மன்னித்து நண்பர்களாக்கிக் கொள்வோம்.


நண்பர் ஒருவர் ஒவ்வொரு நாளும் காலை உணவை யாருடனாவது பகிர்ந்து உண்ட பின்தான் அவர் உண்பார்.

ஒரு நாள் காலை பத்து மணி வரை யாரும் வரவில்லை.

நண்பர் வரும் ஆளை அழைப்பதற்காகத் தெருவில் நின்று கொண்டிருந்தார்.

பத்தரை மணிக்கு வந்த நபரை சாப்பிட அழைத்தார்.

அவரும் அழைப்பை ஏற்று வந்தார்.

சாப்பிடும் முன் அவரை நோக்கி, "நமக்கு உணவைத் தந்த கடவுளுக்கு நன்றி கூறி விட்டு சாப்பிடுவோம்" என்றார்.

ஆனால் அவர்,

"கடவுள் உணவு தரவில்லை.
சாப்பிட அழைத்த உமக்கு நன்றி. கடவுளுக்கு ஏன் நன்றி?
எத்தனை பேர் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் கடவுள் சாப்பாடு கொடுக்கிறாரா?"

என்று கூறியதோடல்லாமல் கடவுளைத் திட்ட ஆரம்பித்தார்.

"நான் கடவுள் பக்தி உள்ளவன்.
அவரைத் திட்டும் உமக்கு சாப்பாடு கிடையாது. நீர் போகலாம்." என்றார்.

அவரும் எழுந்து போய் விட்டார்.

நண்பர் திரும்ப தெருவுக்கு வந்தார்.

கொஞ்சம் பொறுத்து இயேசு வந்து கொண்டிருந்தார்.

"ஆண்டவரே வாருங்கள். நான் உங்களை எதிர் பார்க்கவில்லை. வாருங்கள் சாப்பிட்டு விட்டு பேசுவோம்."

"நான் அனுப்பிய ஆளுக்கு ஏன் நீ சாப்பாடு கொடுக்கவில்லை."

"நீங்கள் அனுப்பிய ஆளா அது?
அவன் உங்களைத் திட்டுகிறான். உங்களைத் திட்டுபவனுக்கு எப்படி சாப்பாடு கொடுப்பேன்."

"அவன் என்னை ஐம்பது ஆண்டுகளாகத் திட்டிக் கொண்டு தான் இருக்கிறான்.

நான் அவனுக்குச் சாப்பாடு கொடுத்து அவனைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்.

"உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; 

உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்."

என்று நான் சொன்னதை எத்தனை முறை வாசித்திருக்கிறாய்.

பட்டினியாய் இருப்பவன் மீது இரக்கப் படாவிட்டால் நீ என்னை ஆண்டவரே என்று கூப்பிட்டு என்ன பயன்?"

"ஆண்டவரே என்னை மன்னியுங்கள்.

நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?"

"அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து சாப்பாடு கொடு."

"ஆண்டவரே, உங்களுக்கு?"

"நீ அவனுக்கு அளிக்கும்போது எனக்கே அளிக்கிறாய்."

"நன்றி ஆண்டவரே, வருகிறேன்."

இரக்கம் அன்பின் குழந்தை.
நாம் அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். நம்மை இகழ்வோரையும் அன்பு செய்ய வேண்டும். அவர்கள் கட்டத்தில் இருக்கும்போது அவர்கள் மேல் இரங்க வேண்டும்.

யாராவது நம்மைக் கோபத்தில் அடித்தால் நமக்குப் பதிலுக்குக் கோபம் வரக்கூடாது, இரக்கம் வர வேண்டும்.

"ஐயோ, பாவம். நம்மை அடிக்கும்போது அவனுக்கும் கை வலிக்குமே.
வீணாக சக்தி விரயமாகுமே."

என்று நினைத்து அவன்மீது இரக்கப்பட வேண்டும் 

யாராவது நம்முடைய பொருட்களைத் திருடினால் அவனுடைய இல்லாமையை நினைத்து இரக்கப்பட வேண்டும்.

"உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்."

உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள். "

இது நமது இரக்கத்தை வலியுறுத்தும் ஆண்டவரின் வார்த்தைகள்.

நாம் கட்டப்படும் போது மற்றவர்கள் நம்மீது இரங்கி உதவ வேண்டும் என்று எதிர் பார்ப்போம்.

அதையே நாம் மற்றவர்களுக்குச் செய்வோம்.

"பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்."
இவை நமது ஆண்டவரின் வார்த்தைகள்.

நாம் வாழ வேண்டும் என்பதற்காகக் கூறப்பட்ட வார்த்தைகள்.

நமது விண்ணகத் தந்தை இரக்கம் உள்ளவராய் இருப்பது போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, September 9, 2025

"இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்."(லூக்கா நற்செய்தி 6:21)



 "இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்."
(லூக்கா நற்செய்தி 6:21)

அழுதுகொண்டிருப்போர் யார்?

யாருக்கு அழுகை வரும்?

யாருக்கு வேண்டுமானாலும் வரும்.

எப்போது வரும்?

மனம் அல்லது உடல் சார்ந்த ஏதாவது வலி ஏற்படும் போது அழுகை வரும்.

நம்மைப் பேறுபெற்றோர் ஆக்கக்கூடிய அளவுக்கு வரக்கூடிய வலிகளைப் பற்றித் தியானிப்போம்.

மனம் சார்ந்த வலிகள்:

பாவம் செய்தவர்கள் இறைவனின் அன்பைப் பற்றித் தியானிக்கும்போது 
"நம் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்து விட்டோமே" என்று வருந்தும் போது மனதில் ஏற்படும் வலியை உத்தம மனத்தாபம் என்கிறோம்.

உத்தம மனத்தாபப்படுவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும்.

உத்தம மனத்தாபப்பட்டு அழுபவர்கள் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் விண்ணகத்தில் சிரித்து மகிழ்வார்கள்.

இவ்வுலகில் அழுகைக்கும், மறுவுலகில் சிரிப்புக்கும் காரணமாக இருப்பது நமது உத்தம மனத்தாப அழுகை.

உலகில், குறிப்பாக வேத போதக நாடுகளில், நற் செய்தியை ஏற்று, கிறித்தவர்களாக, இயேசுவுக்காக வாழும் இறைமக்களை 

பிற மதத்தவர் படுத்தும் பாட்டினால் கிறித்தவர்களின் மனதில் ஏற்படும் வலி, அதன் விளைவாக ஏற்படும் அழுகை ஆகியவற்றை இயேசுவுக்காக ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்.

அவர்களுடைய அழுகையும் விண்ணகத்தில் மகிழ்ச்சியாக மாறும்.


ஏழ்மை, 
நோய் நொடிகள்
வறுமை, 
பசி,
விபத்துக்கள் 
போன்றவற்றால் ஏற்படும் துயரங்கள்,  
இன்னும் பல துன்பங்களால்
கண்ணீர் விடுபவர்கள்

இவற்றைச் சிலுவைகளாக ஏற்று,  தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்பவர்களது அழுகையும் விண்ணுலகில் மகிழ்ச்சியாக மாறும்.

நாம் கண்ணீர் விடுவதற்காகப் படைக்கப் படவில்லை.

நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான் படைக்கப் பட்டிருக்கிறோம்.

நாம் வாழும் உலகம் நித்திய பேரின்ப வீட்டுக்குப் போவதற்கான பாதைதான்.

பாதையில் என்ன நடந்தாலும் நிரந்தரம் அல்ல.

உலகே தற்காலிகமானதுதான்.

தற்காலிகமாக நடப்பவற்றை பேரின்ப வாழ்வை நோக்கி பயணிக்கப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்பமோ துன்பமோ,
இலாபமோ நட்டமோ 
வருகின்றவை அனைத்தையும் 
ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம்.
நித்திய பேரின்பத்தைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Monday, September 8, 2025

''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு."(மத்தேயு நற்செய்தி 1:16)




''யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு."
(மத்தேயு நற்செய்தி 1:16)

மத்தேயு எழுதியிருப்பது இயேசுவின் மூதாதையர் பட்டியல்.

ஆனால் ஆபிரகாம் வழியில் ஆண் வழியில் இயேசுவின் உடனடி மூதாதையர் யாரும் இல்லை.

ஏனென்றால் யோசேப்பு இயேசுக்குத் தந்தை இல்லை.
"எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 

யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு. 
(மத்தேயு நற்செய்தி 1:15,16)

மாத்தானின் மகன் யாக்கோபு என்று சொன்னவர், யாக்கோபின் மகன் யோசேப்பு என்று சொல்லவில்லை.

மரியாவின் கணவர் யோசேப்பு என்று சொல்கிறார்.

ஏன்?

மத்தேயு எழுதுவது புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் சேர்ந்தது தான் பைபிள்.

மூதாதையர் பட்டியல் பழைய ஏற்பாட்டுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் இணைப்பைக் கொடுக்கிறது.

பட்டியல்படி பழைய ஏற்பாட்டின் இறுதி நபர் யோசேப்பு.

ஆனால் புதிய ஏற்பாடும் யோசேப்புடன்தான் ஆரம்பிக்கிறது.


"இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்; 

அவருடைய (இயேசுவுடைய) தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 


இந்தத் திருமண ஒப்பந்தம் தான் புதிய ஏற்பாட்டின் ஆரம்பம்.

ஆனால் புதிய ஏற்பாட்டின் முதல் நபர் மரியாள் தான், ஏனெனில் இயேசுவைப் பெற்றவள் மரியாள்.

ஆனால் மரியாளின் தந்தையின் பெயரை மத்தேயு குறிப்பிடவில்லை.

மரியாளின் கணவர் பெயரைக் குறிப்பிடுகிறார்.

பழைய ஏற்பாட்டின் கடைசி நபர் யார்?

பட்டியல் படி யோசேப்பு. 

ஆனால் அவர் புதிய ஏற்பாட்டின் முதல் நபராகிய மரியாளின் கணவர்.

மரியாள் யோசேப்போடு திருமண ஒப்பந்தத்தில் இணைந்திருப்பவர்.

ஆகவே புதிய ஏற்பாட்டைப் பழைய ஏற்பாட்டோடு இணைப்பவர் யோசேப்பு.

இப்போ ஒரு உண்மை மனதில் எழும்.

யோசேப்பு, மரியாள், இயேசு மூவரும் அடங்கிய திருக்குடும்பம் தான் புதிய ஏற்பாட்டின் ஆரம்பம்.

இந்த உண்மையை நம் மனதில் பதிய வைக்கவே

மத்தேயு மரியாவின் கணவர் யோசேப்பு என்று சொல்கிறார்.

புதிய ஏற்பாட்டின் ஆரம்பம் திருக்குடும்பம் என்று நம் மனதில் பதிய வைப்பதில் என்ன ஆன்மீக பயன் இருக்கிறது?

அதைக் கொஞ்சம் தியானிப்போம்.

பழைய ஏற்பாட்டின் ஆரம்பமும் ஒரு குடும்பம் தான்.

ஆனால் பாவம் செய்த குடும்பம்.

பாவம் செய்த குடும்பத்தின் வாரிசுகளைப் பாவத்திலிருந்து மீட்டது ஒரு குடும்பத்தோடு ஆரம்பிக்கிறது.

அது திருக்குடும்பம்.

குடும்பத் தலைவர் ஒரு நேர்மையாளர்.

தலைவி பாவ மாசின்றி உற்பவித்தவள்.

மகன் கடவுள்.

நாம் உடல் ரீதியாக பாவம் செய்த குடும்பத்தின் பிள்ளைகள்.

ஆன்மீக ரீதியாக திருக்குடும்பத்தின் பிள்ளைகள்.

இந்த உண்மையை உணர்ந்து 
யோசேப்பின் பாதுகாப்பில், மரியாளின் பிள்ளைகளாய், மகன் இயேசுவால் மீட்கப்படுவோம்.

திருக்குடும்பத்தைப்‌ போல் வாழ்வோம்.

திருக்குடும்பத்தைப் போல மகிழ்ச்சியான வாழ்வது எப்படி?

திருக்குடும்பத்தினர் ஏழைகளாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

தலைவர் யோசேப்பு ஒரு ஏழைத் தச்சன்.

அவரது வளர்ப்பு மகன் இறைமகன் என்று அவருக்குத் தெரியும்.

ஆனால் அவரிடம் எந்த உதவியும் கேட்கவில்லை.

 தச்சு வேலை செய்து அந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தினார்.

இயேசுவும் தச்சு வேலை தான் செய்தார்.

சர்வ வல்லபரான கடவுள் தச்சு வேலை செய்து 
தான் வாழ்ந்த குடும்பத்துக்கு உணவளித்தார்.

பொது வாழ்வின் போது ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தவர் 

 திருக்குடும்பத்தில் வாழ்ந்த போது எந்த வேலையும் செய்யாமல் குடும்பத்துக்கு உணவளித்திருக்க முடியும்.

ஆனால் யோசேப்பும், அவரும் கட்டப்பட்டு உழைத்துக் கொடுத்ததைக் கொண்டு அன்னை மரியாள் சமைத்துக் கொடுத்தாள்.

இயேசு கடவுள். நினைத்த இடத்திற்கு நினைத்தவுடன் செல்லக் கூடிய வல்லமை உள்ளவர்.

ஆனால் நாசரேத்திலிருந்து எருசலேம் ஆலயத்திற்கு நடந்து தான் சென்றார்கள்.

கடவுளாகிய  இயேசு பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த இயேசு யோசேப்புக்கு மரணம் வந்தபோது அவரைக் காப்பாற்றவில்லை.

யோசேப்பு மரணம் அடைய வேண்டும் என்பதும், மரியாள் விதவையாய் வாழ வேண்டும் என்பதும் அவருடைய சித்தம்.

இறைவன் சித்தப்படிதான் திருக்குடும்பம் வாழ்ந்தது.

ஆன்மீக வாழ்வில் ‍திருக் குடும்பம்தான் நமது குடும்பங்களுக்கு முன்மாதிரிகை.

திருக்குடும்பத்தைப் பின்பற்றி நாம் ஏழ்மையை நேசிப்போம்.

உழைத்து வாழ்வோம்.

நமது மூத்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்போம்.

இறைவன் சித்தப்படி வாழ்வோம்.

நாமும் திருக் குடும்பமாக வாழ்வோம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு இயேசு குருவானவர் உருவத்தில் பிறக்க வேண்டும்.

நமது குடும்பம் தான் குருத்துவத்தின் நாற்றங்கால்.

நமது குடும்பமாகிய நாற்றங்காலிலிருந்து பறிக்கப் படும் நாற்றுகள் தான் குருமடங்களில் நடப்படுகின்றன.

ஆகவே நாம் நமது நாற்றங்கால்களை இறைவன் சித்தப்படி பராமரிப்போம்.

விவசாயிகளுக்குத் தெரியும் நல்ல நாற்றுகள்தான் நல்ல விளைச்சலைத் தரும்.

நாற்றுகளை இறையன்பிலும், பிறர் அன்பிலும் வளர்ப்போம்.

திருச்சபையின் வளர்ச்சி குடும்பங்கள் கையில் தான் இருக்கிறது.

திருச்சபையின் ஆரம்பம் திருக்குடும்பத்தில் வளர்ந்த இயேசுவால்.

திருச்சபையின் வளர்ச்சி நம் குடும்பத்தில் வளரும் இயேசுக்களால்.  

நாம் நித்திய காலம் வாழப் போவதும் பரிசுத்த தம திரித்துவமாகிய திருக் குடும்பத்தோடு தான்.

தம திரித்துவமும் ஒரு குடும்பம் தான்.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூவரும் ஒருவரோடொருவர் ஒன்றித்து ஒரே கடவுளாய் வாழும் குடும்பம்.

நாம் பரிசுத்த தம  திரித்துவத்தோடு முடிவில்லா காலமும் ஒன்றித்து வாழ்வதே மோட்சம்.

மோட்சத்தில் அனைவரும் இறைவனோடு ஒன்றித்து ஒரே குடும்பமாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.




.

Sunday, September 7, 2025

''ஆரோக்கிய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்."

 

''ஆரோக்கிய  மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்."

அன்னை மரியாளுக்கு நாம் கொடுத்திருக்கும் பல பெயர்களில் ஆரோக்கிய மாதா ஒன்று.

ஆரோக்கியம் என்றால் நலம்.

வேளை நகரில் காட்சி கொடுத்த மாதா அவளைத் தேடி வேண்டுபவர்களுக்கு நோய் நொடிகளிலிருந்து விடுதலை கொடுப்பதால் அவளை ஆரோக்கிய மாதா என்று அழைக்கிறோம்.

காலால் நடக்கமுடியாமல் ஊனமுற்றிருந்த பையனுக்கு சுகமளித்ததை வேளாங்கண்ணியின் வரலாறாறில் வாசிக்கிறோம்.

இன்றும் தாயின் ஆரோக்கியப் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நமது ஆண்டவர் இயேசுவும் தனது பொது வாழ்வின் போது சென்ற இடமெல்லாம் தன்னைத் தேடி வந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்.

ஆரோக்கியம் என்றாலே முதலில் நமது மனதில் தோன்றுவது உடல் ஆரோக்கியம் தான்.

ஆனால் ஆன்மீக ஆரோக்கியம் தான் கிறிஸ்தவர்களாகிய நமக்கு முக்கியம்.

இயேசு உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கினாலும் இயேசு உலகுக்கு வந்ததன் நோக்கம் அது அல்ல,  ஆன்மீக ஆரோக்கியம் தான் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம்.

அதாவது பாவ நோயிலிருந்து ஆன்மாவை மீட்பது தான் அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம்.

ஆரம்பத்தில் மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காகத்தான் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.

ஆரோக்கிய மாதாவின் காட்சிகளின் நோக்கமும் அதுதான்.

ஆன்மீக ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படாமல் உடல் ஆரோக்கியத்தை மட்டும் தேடுபவர்கள் எப்படி விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்?

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பதே நமது ஆன்மீகக் கடமைகளை தடை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

மாணவன் சரியான நேரத்தில் பள்ளிக்குப் போக அவனது அப்பா ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார்.

அவன் சைக்கிளிலேயே பகல் முழுவதும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் அவனைப் பற்றி என்ன சொல்வோம்?

நல்ல ஆரோக்கியத்தால் இறைவனால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒருவர் ஆன்மீக வாழ்வில் அக்கரை காட்டாமல் முழுக்க முழுக்க லௌகீக இன்பங்களில் மட்டும் நாட்டம் செலுத்தினால் அவனது ஆரோக்கியத்தால் அவனுக்கு என்ன பயன்?

ஆரோக்கிய மாதாவின் திருத்தலத்துக்கு திருயாத்திரை செல்பவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் செல்வது வெறுமனே யாத்திரை அல்ல,

திரு யாத்திரை. இறைவனது அருளைப் பெறுவதற்காகச் செல்லும் யாத்திரை.

"யாத்திரையாகச் சென்றோம். கூட்டத்தோடு கூட்டமாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டோம். அன்னையின் தேர் வலத்தில் கலந்து கொண்டோம். கடலில் குளித்தோம். கடைகளில் கண்டதை வாங்கினோம். ஹோட்டலில் சாப்பிட்டோம். ஊருக்குத் திரும்பினோம்."

இப்படிச் சொல்பவர்களுக்கு திருப்பலி கூட ஒரு நிகழ்வுதான்.

ஆரோக்கிய அன்னையின் திருவிழாவுக்கு திருயாத்திரை செல்பவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது ஆன்மீக ஆரோக்கியத்துக்கு.

நல்ல பாவ சங்கீர்த்தனம், திருப்பலியில் முழுமையான ஈடுபாடு, 
திரு விருந்து, 
ஆரோக்கியமான ஆன்மீக வாழ்வுக்கு உதவ அன்னையிடம் வேண்டுதல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற ஆன்மீக காரியங்களில் ஆர்வமாக ஈடுபடுவது தான் உண்மையான திருவிழாவில் பங்கேற்பு.

அன்னையின் திருவிழா நமது ஆன்மீக வாழ்வுக்கு உந்தும் சக்தியாக விளங்க வேண்டும்.

உடல் சார்ந்த ஆரோக்கியத்துக்காக வேண்டக் கூடாதா?

வேண்ட வேண்டும், அது நமது ஆன்மீக வாழ்வுக்கு உதவிகரமாக இருப்பதற்காக.

அன்னை மரியாள் புதுமை செய்து நமக்கு ஆரோக்கியம் தருவது தனது வல்லமையை நம்மிடம் விளம்பரம் செய்வதற்காக அல்ல,

நம்மைத் தனது திருமகனிடம் அழைத்துச் செல்வதற்காக.

அவள் நமது விண்ணகப் பாதையில் நமது வழிகாட்டி, நமது வழித்துணை.

எப்போதும் அவளது கரம் பிடித்து நடந்தால் உடல், உள்ள, ஆன்மீக ஆரோக்கியத்தோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைவது உறுதி.

அவளுக்கு மிகவும் பிடித்தமான செபம் செபமாலை.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபமாலை சொல்லுவோம்.

குறைந்தது மங்கள வார்த்தை செபத்தை நிறுத்தி, ஒவ்வொரு வார்த்தையாக, மனதுக்குள்ளே தியான உணர்வோடு சொல்லிக் கொண்டேயிருப்போம்.

இறைவனின் தாயே என்று சொல்லும் போதெல்லாம் இறைவன் நம்மை அவரோடு அரவணைத்துக் கொள்வார்.

நமது மரண நேரத்திலும் அன்னையே வந்து நம்மைத் தனது திருமகனிடம் அழைத்துச் செல்வார்.

"ஆரோக்கிய மாதாவே, எங்கள் ஆன்மாவின் ஆரோக்கியத்தை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறோம்.''

லூர்து செல்வம்.

Saturday, September 6, 2025

தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. (லூக்கா நற்செய்தி 14:27)



தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 
(லூக்கா நற்செய்தி 14:27)

அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது. 
(லூக்கா நற்செய்தி 14:33)

இயேசு தனது சீடர்களாக இருக்க விரும்புபவர்களுக்கு இரண்டு நிபந்தனைகள் போடுகிறார்.

1. தங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு வர வேண்டும்.

2. உடமைகள் எதுவும் இல்லாமல் வர வேண்டும்.

1. சிலுவையைச் சுமந்து அதில் மரிப்பதற்காகவே பிறந்த இயேசுவைப் போல சிலுவையைச் சுமந்து அதில் மரிப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.

பிரசவ வேதனை நமது தாய் சுமந்த சிலுவை. அப்படியானால் நாம் சிலுவையோடு தான் பிறந்திருக்கிறோம்.

சிலுவையோடு பிறந்த நாம் சிலுவையோடு வாழ்ந்து சிலுவையோடு மரிக்க வேண்டும் என்பது தான் நம்மைப் படைத்தவரின் விருப்பம்.

இயேசு எதற்காகச் சுமந்தார்?

நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நம்மை மீட்டு அவரது நித்திய பேரின்பத்தில் பங்கு தருவதற்காக.

இயேசு எதற்காகச் சிலுவையைச் சுமந்தாரோ அதை நாம் அடைவதற்காகவே நாம் நமது சிலுவையைச் சுமக்க வேண்டும்.

சிலுவை எப்போது உலகிற்குள் நுழைந்தது?

நமது முதல் பெற்றோர் பாவம் செய்த போது.

"பிரசவ வலியுடன் நீ பிள்ளை பெறுவாய்" என்று ஏவாளையும்

"நெற்றி வியர்வை நிலத்தில் விழ நீ உழைத்து உண்பாய்" ஆதாமையும் கடவுள் ஆசீர்வதித்தபோது சிலுவை உலகில் நுழைந்தது.

அப்போது அதற்குச் சிலுவை என்ற பெயர் இல்லை. 

சிலுவை என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது ஆண்டவரின் வருகைக்குப் பிறகுதான்.

கடவுளின் வாயிலிருந்து வருவதெல்லாம் ஆசீர்வாதங்கள் தான்.

ஆகவே நாம் சிலுவையினால் ஆசீர்ததிக்கப் பட்டிருக்கிறோம்.

சிலுவை எந்த வடிவில் வரும்?

துன்பத்தின் வடிவில் வரும்.

நமக்கு வரும் துன்பங்களை ஆசீர்வாதங்களாக ஏற்றுக் கொண்டு வாழ்வதன் மூலம் நாம் நமது சிலுவையைச் சுமக்கிறோம்.

அப்படியானால் நமது வாழ்க்கையே சிலுவை தான்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததால் நாம் சிலுவையைச் சுமக்கும் போது இயேசுவோடு ஒன்றித்து வாழ்கிறோம்.

இயேசுவோடு ஒன்றித்து வாழ்வது தான் நிலை வாழ்வு.

அப்படியானால் இயேசுவோடு ஒன்றித்து சிலுவையைச் சுமந்தால் நாம் உலகிலேயே நிலை வாழ்வைச் சுவைக்க ஆரம்பித்து விடுவோம்.

இயேசு அதில் மரிக்குமுன் சிலுவை ஒரு தண்டனைக் கருவியாக இருந்தது.

இயேசுவைத் தண்டிப்பதாக நினைத்துக் கொண்டுதான் பரிசேயர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். 

ஆனால் இயேசு தனது சிலுவை மரணத்தின் மூலம் அதை ஆசீர்வாதத்தின் கருவியாக மாற்றினார். 

ஆகவேதான் நாம் மற்றவர்களை ஆசீர்வதிக்க நினைக்கும் போது அவர்களது நெற்றியில் சிலுவை அடையாளம் போடுகிறோம். 

நமது ஒவ்வொரு நாளையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு நாளையும் சிலுவை அடையாளத்தால் ஆரம்பிக்கிறோம். 

சிலுவை இன்றி மீட்பு இல்லை. 

 நாம் சிலுவையைச் சுமப்பது எப்படி?

இறைவனை மறந்து நமது விருப்பம் போல் வாழும்போது பாவம் நமது வாழ்வில் நுழைகிறது. 

நமது விருப்பங்களைத் துறந்து 
இறைவனது விருப்பப்படி வாழும் போது சிலுவை நமது வாழ்வில் நுழைகிறது. 

உண்மையில் இறைவன் விருப்பப்படி வாழ்வதுதான் சிலுவை. 

நமது விருப்பங்களை இறைவனது விருப்பங்களுக்கு உட்படுத்தி வாழ்வதுதான் சிலுவை. 

காலையில் நெடு நேரம் தூங்க வேண்டும் என்பது நமது விருப்பம். 

காலையில் எழுந்து செபமாலை சொல்ல வேண்டும் என்பது இறைவனது விருப்பம். 

செபமாலை சொல்ல வேண்டும் என்பதை நமது விருப்பமாக மாற்றிக் கொள்வது சிலுவை. 

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் இறைவனது விருப்பத்திற்கு உட்பட்டு வாழ்வதுதான் சிலுவை. 

உடலைச் சார்ந்த துன்பங்கள் மட்டுமல்ல ஆன்மாவைச் சார்ந்த துன்பங்களும் சிலுவை தான்.

ஆன்மாவைச் சார்ந்த துன்பம் என்றால்?

நமது விழுந்த இயல்பின் 
(Fallen nature) காரணமாக இறைவனின் கட்டளைகளுக்கு எதிராக செயல்பட ஆவல் ஏற்படுகிறது. 

அந்த ஆவலை அடக்கி இறைவன் விருப்பப்படி வாழ நமக்கு எதிராக நாம் செயல்பட வேண்டி இருக்கிறது.

இப்படிச் செயல்படும் போது நமது ஆன்மாவில் ஏற்படும் உணர்வு ஆன்மாவைச் சார்ந்த துன்பம்.

காலையில் எழுந்து திருப்பலிக்குச் செல்ல வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். 

தொடர்ந்து தூங்க வேண்டும் என்பது நமது விருப்பம். 

இப்போது நமது விருப்பத்துக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். 

அப்படி செயல்படும் போது ஏற்படும் உணர்வுகளை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். 

அதாவது சிலுவையைச் சுமந்து கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். 

எப்போதெல்லாம் இறைவனின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட விருப்பம் ஏற்படுகிறதோ

 அப்போதெல்லாம் அந்த விருப்பத்தை அடக்கி இறைவனின் விருப்பத்திற்கு இணங்க செயல்படும்போது

 நாம் சிலுவையை சுமக்கிறோம்.

இந்தக் கண்ணோக்கின்படிப் பார்த்தால் நாம் சிலுவையைச் சுமக்காமல் இறைவனைப் பின்பற்ற முடியாது.


"பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் 
தன்னலம் துறந்து 
தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்."
(லூக்கா நற்செய்தி 9:23)


தன்னலத்தைத் துறப்பதுதான் சிலுவை.

நம்மோடே ஒட்டிப் பிறந்த துன்பத்தை ஆண்டவருக்காக ஏற்றுக் கொண்டால் அது சிலுவை,     ஏற்றுக் கொள்ளாவிட்டால் அது வெறும் துன்பம் தான்.

வெறும் துன்பத்தால் எந்த பயனும் இல்லை.



2.ஆன்மீகப் பாதையில் உடமைகள் எதுவும் இல்லாமல் எப்படிப் பயணிப்பது?

நமது ஆன்மாவுக்கு நமது உடலே ஒரு உடமை தான்.

நமது இறுதி நாள் வரை இந்த உடமை இல்லாமல் வாழ முடியாது.

உணவு, உடை, இருப்பிடம் போன்ற உடமைகள் இல்லாமல் நமது உடல் வாழ முடியாது.

அப்படியானால் உணவு, உடை, இருப்பிடம் போன்ற உடமைகள் இல்லாமல் நாம் எப்படி உயிர் வாழ்வது?

இவ்வுலகில் உயிர் இல்லாமல் எப்படி ஆன்மீக வாழ்வு வாழ்வது?

ஆன்மீக மொழியில் இல்லாமல் என்றால் பற்று இல்லாமல் என்பது பொருள்.

நமது கையில் விலை உயர்ந்த பேனா ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

அதன் மீது நமக்கு பற்று இருந்தால் எங்கு சென்றாலும் அதை எடுத்துக் கொண்டுதான் போவோம். 

பற்று இல்லாவிட்டால் அதை எழுதுவதற்கு மட்டும் பயன்படுத்துவோம்,

 மற்ற நேரங்களில் அது இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்பட மாட்டோம்.

அது தொலைந்து விட்டால் கூட அதற்க்காக உட்கார்ந்து அழ மாட்டோம்.

நமது உடலையும் அது எதற்காக படைக்கப்பட்டுள்ளதோ அதற்காக பயன்படுத்துவதோடு திருப்தி அடைய வேண்டும். 

உடல் மீது பற்று இல்லாதவர்கள் அது வாழ்வதற்காக உண்பார்கள். 

பற்று உள்ளவர்கள் நாவின் சுவைக்காக உண்பார்கள்.

பற்று இல்லாதவர்கள் அன்று நமது முதல் பெற்றோர் எதற்காக உடை அணிந்தார்களோ அதற்காக மட்டும் அணிவர். 

பற்று உள்ளவர்கள் உடல் அலங்காரத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

கோவிலுக்கு வரும்போது அலங்கார உடை அணிந்து வருபவர்கள் 

மற்றவர்கள் திருப்பலியின் போது பீடத்தின் மேல் வைக்க வேண்டிய பார்வையை 

தங்கள் உடையை நோக்கி ஈர்ப்பார்கள்.

மற்றவர்களின் பார்வை சம்பந்தப்பட்ட பாவத்துக்கு அவர்கள் காரணமாக இருப்பார்கள்.

பணத்தின் மீது பற்று உள்ளவர்கள் பணத்தை பணத்திற்காகவே ஈட்டுவார்கள்.

கோடிக்கணக்காய் ஈட்டிய பின்பும் திருப்தி ஏற்படாது.

பற்று இல்லாதவர்கள் தேவைக்காக மட்டும் ஈட்டுவார்கள். 

விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது, 

விலை உயர்ந்த வாகனங்களில் பயணிப்பது, 

விலை உயர்ந்த உடைகளை உடுத்த்துவது,

சுவையுள்ள உணவை அளவுக்கு மீறி உண்பது 

போன்ற செயல்கள் ஊதாரித் தனத்தின் வெளிப்பாடு.

ஊதாரி மைந்தன் உவமைமையில் வரும் மைந்தன் ஊதாரித்தனமாக செலவழித்து தான் தந்தையின் சொத்தை காலி
செய்தான்.

உடமை பொருட்களின் மீது அளவுக்கு மீறிய பற்று வைத்திருப்பவனுக்கு இறைப் பற்று இருக்காது.

கடவுள் மீது பற்று உள்ளவர்களுக்கு உடமை பொருட்களின் மீது பற்று இருக்காது.

கடவுள் நமக்கு உலகைச் சார்ந்த பொருட்களைத் தந்திருப்பது நாம் மட்டும் பயன்படுத்துவதற்கு அல்ல, 

நமது அயலானோடு பகிர்ந்து கொள்வதற்கு. 

நாம் வாழும் நிலத்தில் கடவுள் மேட்டையும், பள்ளத்தையும் படைத்திருப்பது ஏன்?

நிலம் சமதளமாக இருந்தால் ஆறுகள் ஓடமுடியுமா?

ஆறுகள் ஓடாவிட்டால் நாடு எங்கும் செழிப்பாக இருக்க முடியுமா?

எங்கும் வெப்ப நிலை ஒரே மாதிரியாக இருந்தால் காற்று வீசாது, மேகம் பயணிக்காது, மழை பெய்யாது.

இயற்கை மூலம் இறைவன் நமக்குக் கற்பிக்கும் பாடம்

 ஏற்ற தாழ்வுகள் இருப்பதால் இயற்கை இயங்குவது போல,

மனிதர்களிலும் ஏற்ற தாழ்வுகள் இருப்பதால் தான் ஒருவருக்கொருவர் பிறரன்பை வெளிப்படுத்தி ஆன்மீகத்தில் வளர‌ முடிகிறது.

செல்வன்  இல்லாதவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தனது பிறரன்பில் வளர்கிறான்.

இல்லாதவன் தனது ஏழ்மையை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு உழைப்பின் மூலம் ஆன்மீகத்தில் வளர்கிறான்.

நமக்கு முன்மாதிரியாக இறை மகனே ஒரு ஏழைத் தாயின் வயிற்றில் மனுவுரு எடுத்து, ஏழைக் குழந்தையாய்ப்‌ பிறந்து ஏழையாகவே வளர்ந்து, ஏழைக் தச்சனாக உழைத்து வாழ்ந்தார்.

ஏழைகள் இயேசுவின் வாழ்க்கையை மனதில் இருத்தி வாழ்ந்தால் ஏழையாகப் பிறந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவார்கள்.

ஒன்றும் இல்லாதவன் எல்லாம் உடையவன்.

உலகெல்லாம் அவனுடையது தான், அவன் பற்றின்றி வாழ்கிறான்.

ஒரே வகை உணவை உண்பவன் செல்வந்தன்.

விதவிதமான உணவு உண்பவன் பிச்சைக் காரன்.

"ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது."
(மத்தேயு நற்செய்தி 5:3)


உலகப் பொருள்களின் மீது பற்று இல்லாமல் வாழ்பவர்களுக்குதான் இறை அரசு உரியது.   

உலகப் பற்று இல்லாமல், இறைவனை மட்டும் பற்றிக் கொண்டு,

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு,

இயேசுவைப் பின்பற்றுவோம்.

லூர்து செல்வம்.

Friday, September 5, 2025

பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர். (லூக்கா.6:2)




பரிசேயருள் சிலர், "ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர். 
(லூக்கா.6:2)


ஒரு ஓய்வுநாளில்  இயேசு வயல்வழியே சென்றபோது  அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர் 


பரிசேயருள் சிலர், "ஓய்வு நாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்?" என்று கேட்டனர். 

செய்யக் கூடாத எதை சீடர்கள் செய்து விட்டார்கள்?

பசியின் காரணமாகத் தானியக் கதிர்களைக் கொய்து, கசக்கித் தின்றார்கள்.

பரிசேயர்கள் சட்டத்தை அதன் எழுத்துப்படி கடைப்பிடிக்க வலியுறுத்துபவர்கள்.

அவர்களுடைய கருத்துப்படி கதிர்களைக் கொய்வது வயலில் அறுவடை செய்வதற்குச் சமம்.

கசக்குவது மில்லில் அரைப்பதற்குச் சமம்.

அறுவடை செய்வதும், மில்லில் அரைப்பதும் ஓய்வுநாளில் தடை செய்யப்பட்டவை.

ஆகவே சீடர்கள் ஓய்வு நாளில் செய்யக் கூடாததைச் செய்தார்கள்.

ஆனால் சீடர்கள் செய்தது தங்கள் பசியை அமர்த்தவே கதிர்களைக் கசக்கித் தின்றார்கள்.

இதை விளங்க வைக்க இயேசு   "தாமும் தமமுடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா?". என்று கேட்டார்.

பழைய ஏற்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியை இயேசு குறிப்பிடுகிறார்

தாவீது மன்னரும்   அவருடைய 400 வீரர்களும் சவுல் அரசனின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக  ஓடிப்போனபோது பசி அமர்த்த
 அஹிமலேக் குருவிடம் சென்றார்கள். அப்போது, அவர் வேறு உணவு   இல்லாததால், அவர் அவர்களுக்கு  காணிக்கை அப்பத்தைக் கொடுத்தார்.
(1சாமுவேல். 21:1-6)

பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது இறைவனுக்கு உணவு அளிப்பதற்குச் சமம். இது இயேசுவின் நற் செய்தி.

 இயேசு அவர்களிடம், "ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார். 
(லூக்கா.6:5)

இயேசுவின் சீடர்கள் இரவும் பகலும் அவரோடே இருந்தார்கள்.

அவர்களுடைய பசியை அமர்த்துவது அவருடைய பொறுப்பு.

தானிய வயல்கள் மூலம் அவர்களுடைய பசியை அமர்த்தினார்.

அவர் கடவுள். கடவுளுக்கு உலகிலுள்ள அனைத்தும் கட்டுப்பட்டவை.

இயேசுவை கடவுளாக ஏற்றுக் கொள்ளாத பரிசேயர்களுக்கு இயேசு சொன்னது புரிந்திருக்காது.

நாம் இயேசுவைக் கடவுளாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஓய்வு நாளில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

ஓய்வு நாள் முழுக்க முழுக்க இறைப்பணிக்கென்று ஒதுக்கப்பட்ட நாள்.

எல்லா நாட்களும் இறைப் பணிக்கான நாட்கள் தான்.

ஓய்வு நாள் விசேசித்த விதமாய் இறைப் பணிக்கானது.

தினமும் தான் சாப்பிடுகிறோம், திருவிழா சமயத்தில் வித்தியாசமாகச் சாப்பிடுவதில்லை? 
அதேபோல.

நமக்கு ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள்.

அன்று திருப்பலிக்குச் செல்கிறோம்.

ஆனால் அதோடு ஓய்வுநாள் கடமை முடிந்து விடுவதில்லை.

"ஓய்வுநாளும் மானிடமகனுக்குக் கட்டுப்பட்டதே"

என்று இயேசு கூறுகிறார்.
ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; 

"தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்;

 அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 

நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்;

 நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்;

 சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்" என்பார். 
(மத்தேயு .25:35,36)

மேற்கூறப்பட்ட ஆண்டவரின் விருப்பத்துக்கு இணங்க வாரம் முழுவதும் நாம் செயல்பட வேண்டும்.

ஓய்வு நாளில் நற்செயல்களுக்கு ஓய்வு கொடுத்து விடக்கூடாது. 

எப்படி பணி நாட்கள் ஆண்டவருக்கு உரியவையோ அப்படியே ஓய்வு நாளும் ஆண்டவருக்கு உரியது. 

ஆகவே நாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலியில் கலந்து கொண்ட பின் பகலில் ஏழைகளுக்கு உதவும் நற்செயல்களை செய்ய வேண்டும். 

பசிப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். 

தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

அன்னியர்களை உபசரிக்க வேண்டும்.

ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்க வேண்டும்.

நோயுற்றோரைக் கவனிக்க வேண்டும்.


சிறையில் இருப்பவர்களுச்கு ஆறுதல் கூற வேண்டும்.

இவற்றைச் செய்யும் போது நாம் இறைவனை வழிபடுகிறோம்.

வார நாட்களில் இவற்றைச் செய்ய நேரம் போதாமல் இருந்திருக்கலாம்.

ஓய்வு நாள் முழுவதையும் அவற்றுக்காகப் பயன்படுத்த வேண்டும்.

நாம் செய்கிறோமா என்பது அவரவர் சிந்தனைக்கு உட்பட்ட விடயம்.

ஞாயிறு திருப்பலி முடிந்தவுடன் வீட்டுக்கு ஓடாமல் கொஞ்ச நேரம் நின்று வந்தவர்களின் நலம் விசாரிக்கலாமே?

ஒருவரை பார்த்து புன் சிரிப்பு சிரிக்கும் போது இயேசுவைப் பார்த்தே புன்னகை பூக்கிறோம்.

குறைந்த பட்சம் இயேசுவுக்கு ஒரு Tea வாங்கிக் கொடுக்கலாமே!

கோவிலுக்கு வெளியே கை ஏந்துபவர்களுக்குக் கொடுக்கும் போது இயேசுவுக்கே கொடுக்கிறோம்.

ஓய்வு நாளில் பிறர் அன்புப் பணி செய்வதன் மூலம் இறைப்பணி ஆற்றுவோம்.

லூர்து செல்வம்