Saturday, March 8, 2025

"மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" (லூக்கா நற்செய்தி 4:4)


 "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" 
(லூக்கா நற்செய்தி 4:4)

மனிதன் ஆன்மாவோடும், உடலோடும் படைக்கப்பட்டவன்.

ஆன்மா ஆவி. (Spirit)
உடல் சடப்பொருள். (Matter)

ஆன்மாவும் வாழ வேண்டும்.
உடலும் வாழ வேண்டும்.

ஆன்மா அழியாதது, உடல் வாழ்ந்து முடிந்த பின்பும் ஆன்மா அழியாமல் நித்திய காலமும் வாழும்.

ஆன்மாவின் வாழ்க்கையை ஆன்மீக வாழ்வு(Spiritual life) என்போம்.

உடலின் வாழ்க்கை உலகில் முடிந்து போவதால் அதை லௌகீக வாழ்வு(Worldly life) என்போம்.

உடல் மண்ணிலிருந்து உருவாக்கப் பட்டதால் அது வாழ மண்ணிலிருந்து வரும் உணவுப் பொருள் தேவை. சாத்தான் இயேசுவைச் சோதிக்கும் போது குறிப்பிடும் 'அப்பம்' மண்ணில் விளையும் கோதுமையிலிருந்து தயாரிக்கப் படுவது.

ஆன்மா நித்திய விண்ணக வாழ்வுக்காக இறைவனின் சாயலில் படைக்கப்பட்டதால் அது வாழ இறைவனின் அருள்தான் உணவு. இறைவன் வார்த்தையின் படி ஆன்மா வாழ்ந்தால் அதற்கு இறையருள் உணவாகக் கிடைக்கும்.

இயேசு நாற்பது நாள் எதுவும் சாப்பிடாமல உபவாசம் இருந்த பின் அவரைச் சோதித்த சாத்தான்

 "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்" என்றது. 

இயேசு,"மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே"
(இணைச் சட்டம் 8:3)

என்ற இறைவாக்கைப் பதிலாகச் சொன்னார்.

"மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்" என்பது இறைவாக்கு.

இயேசு மனிதனுடைய ஆன்மீக வாழ்வைக் குறிப்பிடுகிறார். 

ஆன்மீக வாழ்வு தான் மனிதனுடைய உண்மையான வாழ்வு.

அதற்கு உதவவே உடல், உதவி முடித்துவிட்டு அது மண்ணுக்குள் போய்விடும்.

ஆன்மா அதன் வாழ்வைத் தொடரும்.

மனிதனை மனிதனாக்குவது அவனை இயக்கிக் கொண்டிருக்கும் அவனது ஆன்மா.

மனிதன் வாழ வேண்டுமென்றால் 
ஆன்மீக ரீதியாக அவனுடைய ஆன்மா வாழ வேண்டும் என்பது பொருள்.

உடல் வாழ்வது லௌகீக வாழ்வு.

லௌகீக வாழ்வு இவ்வுலகில் முடிந்துவிடும், மறு உலகில் தொடராது. 

அப்பம் அழியக்கூடியது, அதை உண்ணும் உடலும் அழியக் கூடியது.

ஆனால் ஆன்மீக வாழ்வுக்கு முடிவு இல்லை. 

இவ்வுலகில் உடலோடு வாழும் ஆன்மா இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் மறுவுலக நிரந்தரமான வாழ்வை ஆரம்பித்து விடும்.

இயேசு "மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்" என்று சொன்னபோது 

மனிதனின் லௌகீக வாழ்வை விட ஆன்மீக வாழ்வே முக்கியமானது அதை வாழ்வதற்காகவே மனிதன் உலகில் பிறந்திருக்கிறான் என்பதை குறிப்பிடுகிறார்.

உணவு, உடை, இருப்பிடம் போன்ற பொருள் சார்ந்த தேவைகள் மனிதனின் உயிர்வாழ்விற்கு அவசியமானவை.

ஆனால், இந்தத் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்வது மனித வாழ்வின் முழுமையான அர்த்தத்தை தராது.

 அன்பு, கருணை, நம்பிக்கை, அமைதி போன்ற ஆன்மீகத் தேவைகளைப்    பூர்த்தி செய்வதன் மூலமே 

மனிதன் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் அடைய முடியும்.


கடவுளின் வார்த்தை மனிதனின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யுக்கூடியது.

 இதுதான் மனிதனுடைய ஆன்மாவை திடப்படுத்துவதோடு 
அதைச் சரியான விண்ணகப் பாதையில் வழி நடத்துகிறது.

நமது விசுவாசத்தையும் நம்பிக்கையையும், இறையன்பையும் வளர்த்து

 இயேசு பிறந்த நாளில் வான தூதர்கள் போற்றிய சமாதான வாழ்வை நமக்குத் தருகிறது. 

இறைவனோடு நாம் வாழும் சமாதான வாழ்வே நமக்கு நித்திய பேரின்ப வாழ்வை தரும்.

இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் எதைத் தேடி ஓடுகிறார்கள், 

இறைவனின் அருளையா, உலகின் பொருளையா?

படிப்பது, பட்டம் பெறுவது, வேலை தேடுவது அனைத்தும் பொருள் ஈட்டத்தானே!

பொருள் ஈட்டுவதில் தவறு இல்லை 

ஆனால் ஈட்டிய பொருளின் உதவியால் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் இறை அருளை ஈட்ட வேண்டும். 

ஆனால் நம்மில் அநேகர் பிறருக்கு உதவி செய்யாமல் பொருள் ஈட்ட மட்டும் உதவி செய்ய இறைவனை வேண்டுகிறார்கள்.

அருள் ஈட்ட உதவாத பொருள் waste!

பொருளும் இறைவன் தந்தது தான். 

பொருளை பிறர் அன்பு பணிகளில் செலவழித்து இறையருளை ஈட்டுவோம்.

ஈட்டுக அருளை 
பொருள் கொண்டு, 
ஈட்டாக்கால் பொருளால் 
என்ன பயன்?

மனிதன் அப்பத்தினால் அல்ல, இறையருளால் வாழ்கிறான். 

லூர்து செல்வம்

Friday, March 7, 2025

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. (லூக்கா நற்செய்தி 5:31)


இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 
(லூக்கா நற்செய்தி 5:31)

வரி தண்டுபவராக இருந்து இயேசுவின் அழைப்பை ஏற்று அவரை பின்பற்றிய மத்தேயு அவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.

இயேசுவும் அழைப்பை ஏற்று பந்தியில் அமர்ந்தார்.

அவரோடு வரி தண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். 


பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும்
வரி தண்டுபவர்களைப் பாவிகளாக கருதினார்கள்.

 அவர்கள் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், "வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?" என்று கேட்டனர். 

அவர்கள் தாங்கள் மட்டுமே திருச்சட்டத்தை அனுசரிப்பதாகவும் மற்றவர்கள் அனுசரிக்கவில்லை எனும் கருதினார்கள். 

உண்மையில் அவர்கள் திருச்சட்டத்தை அதன் வார்த்தைகளின் படி (By its words) வாழ்ந்தார்கள், கருத்தின் படி அல்ல. (Not by its spirit)

இறைவன் முன்னால் அனைவரும் பாவிகள், அவர்கள் உட்பட.

சீடரிடம் கேட்ட கேள்விக்கு இயேசு பதில் அளித்தார்.

, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை."

ஆன்மீக ரீதியாக மக்கள் அனைவரும் பாவிகளே. 
(ஆன்மீக நோயாளிகள்.)

இயேசு ஆன்மீக மருத்துவர்.

, "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை."

என்ற இயேசுவின் வார்த்தைகள் வரி தண்டுபவர்களுக்கு மட்டுமல்ல 

பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் 

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற, வாழப் போகிற அனைத்து மக்களுக்கும்  பொருந்தும்.

வசனத்தை வாசிக்கும் நாம் அதை நம்மோடு பொருத்திப் பார்க்க வேண்டும். 

நம்மை பாவ நோய் எந்த அளவுக்குப் பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க வேண்டும்.

சுகமின்மையை மட்டும் தரும் அற்பப் பாவ நோய் மட்டுமா,

ஆன்மீக மரணத்தை தரும் சாமான பாவ நோயுமா,

எந்த அளவுக்கு நோய் நம்மை பீடித்திருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சாமான பாவ நோயாக இருந்தால் உடனடியாக பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அற்பப் பாவ நோய் மட்டும் இருந்தால் அதற்காகவும் மனத்தாபப்பட்டு, மன்னிப்புப் பெற்று அது தொடராதபடி கவனமாக இருக்க வேண்டும்.

அற்பப் பாவங்களை வெட்டி எறியாவிட்டால் அவை சாவான பாவத்துக்கு வழி விட்டு விடும்.

''நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 

நான் பாவிகளை தேடியே உலகுக்கு வந்தேன்" என்று ஆண்டவர் சொன்னால் அவர் பரிசுத்தவான்களை தேடி வரவில்லையா?

ஆதாம் ஏவாள் வழி வந்த அனைத்து மனிதர்களும் பாவிகள் தான். 

அன்னை மரியாள் விதிவிலக்கு. அவள்  சென்மப் பாவம் இன்றி பிறந்தது சுய சக்தியினால் அல்ல.

இயேசு தனது சிலுவை மரணத்தின் ஆன்மீக பலனை முன் விளைவாக (pre-effect) தன் தாய்க்குக் கொடுத்து அவளை சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவிக்கச் செய்தார்.

தனது தாயை சென்மப் பாவம் இன்றி படைத்தார்.

மற்ற அனைத்து மக்களும் சென்ம பாவத்தோடு உற்பவித்ததால் அவர்கள் அனைவரும் பாவிகளே.

"நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" . 
(மத்தேயு நற்செய்தி 9:13)
என்று இயேசு கூறியது உண்மைதான். 

நமது கத்தோலிக்க திருச்சபையையே 

"பாவிகளின் கூடாரம்"

 என்று தான் அழைக்கிறோம்.

எப்படி மருத்துவ மனைகளில் நோயாளிகள் மட்டும் குணம் அடைவதற்காக அனுமதிக்கப்படுகிறார்களோ 

அதேபோல திருச்சபையில் பாவ மன்னிப்பு பெற்று பரிசுத்தவான்களாக மாறுவதற்காக பாவிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபைப் பாவிகளை பரிசுத்தவான்களாக மாற்றும் கூடாரம். 

யாரும் பிறக்கும் போதே பரிசுத்தவான்களாக பிறப்பதில்லை. 

இல்லாத பரிசுத்தவான்களைத் தேடி ஆண்டவர் உலகத்துக்கு வரவில்லை. 

இருக்கின்ற, வாழ்கின்ற பாவிகளைத் தேடியே ஆண்டவர் உலகத்துக்கு வந்தார்.

நம்மைத் தேடியே உலகத்துக்கு வந்தார்.

இதை நாம் உணர்ந்து இயேசுவின் கையால் பாவ மன்னிப்புப் பெற்று பரிசுத்தர்களாக மாறுவோம். 

பரிசுத்தர்கள் மட்டுமே வாழும் மோட்ச வாழ்வுக்கு நம்மை உரியவர்களாக மாற்றுவோம்.

லூர்து செல்வம்.

Thursday, March 6, 2025

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"(லூக்கா நற்செய்தி 9:25)


"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"
(லூக்கா நற்செய்தி 9:25)

விலையுயர்ந்த கார் ஒன்றுக்கு உரிமையாளர் ஒருவர் காரில் அலுவலகம் சென்று காரை வெளியே நிறுத்தி விட்டு அவரது பணியைச் செய்து கொண்டிருந்தார்.

11 மணியளவில் சட்டைப் பைக்குள் கையை விட்டபோது கார்ச் சாவி இல்லை.

அறைக்குள் தேடிப் பார்த்தார், காணவில்லை.

எங்கோ தொலைந்து விட்டது.

"சரி, போனால் போகட்டும், இன்னொரு சாவி வீட்டில் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்."

என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, Peon ஐக் கூப்பிட்டு,

"உனது சைக்கிளில் எனது வீட்டுக்குச் சென்று எனது மனைவியிடம் எனது கார்ச் சாவியை வாங்கி வா" என்றார்.

அவனும் வாங்கி வந்தான்.

மாலையில் வேலை முடிந்து வீடு திரும்ப வெளியே வந்த போது காரைக் காணவில்லை.

கார்த் திருடனுக்கு இரண்டு சாவிகள் தேவையில்லை.

சாவி சிறியதுதான், ஆனால் அது இல்லாவிட்டால் காருக்கும் பாதுகாப்பு இல்லை, வீட்டுக்கும் பாதுகாப்பு இல்லை.

"சாவி தானே, போனால் போகட்டும்" என்று நினைப்பவன் தனது உடமைகளை எல்லாம் இழக்க நேரிடும்.

ஆன்மீக வாழ்வில் நமது ஆன்மாவின் பாதுகாப்பு தான் நமது பாதுகாப்பு, உண்மையில் நமது ஆன்மா தான் நாம்.

ஆன்மாவை இழக்கும் போது நாம் நம்மையே இழந்து விடுகிறோம்.

நாம் சாவான பாவம் செய்யும் போது நமது ஆன்மாவை இழக்கிறோம்.

ஆன்மீக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல் ஒருவன் உலகத்துக்கே அதிபதி ஆகி விட்டாலும் அவனது பதவியால் அவனுக்கு எந்த ஆதாயமும் இல்லை.

ஞாயிறு திருப்பலியில் கலந்து கொள்ளாவிட்டால் சாவான பாவம்.

திருப்பலியில் கலந்து கொள்ளாமல் வியாபாரத்தில் இறங்குபவனுக்கு கோடிக்கணக்கில் ஆதாயம் கிடைத்தாலும் அதனால் அவனுக்கு எந்த ஆன்மீக ஆதாயமும் இல்லை.

"ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?"

என்ற இறைவாக்கு தான் 

கல்லூரிப் பேராசிரியர் சவேரியாரை வேத போதகராகவும், புனித சவேரியாராகவும் மாற்றியது.

ஆன்மாவும் உடலும் சேர்ந்தவன் தான் மனிதன்.

ஆனாலும், ஆன்மாவுக்காக உடல் படைக்கப்பட்டது, உடலுக்காக ஆன்மா படைக்கப்படவில்லை.

ஆன்மா வாழ உடல் உதவிகரமாய் இருக்க வேண்டும்.

ஆன்மா தான் வாழ உடலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவம் இல்லாத ஆன்மா உயிரோடு இருக்கிறது.

உயிரோடு இருந்தால் மட்டும் போதாது அது வாழ வேண்டும், வளர வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர 
நற்செயல்கள் அவசியம்.

நற்செயல்கள் செய்ய உடல் ஆன்மாவோடு ஒத்துழைக்க வேண்டும்.

நற்செயல்களால் ஆன்மா புண்ணிய வாழ்வில் வளரும்.

உடல் இச்சைகளைப்
 பூர்த்தி செய்ய உடல் ஆன்மாவை அழைப்பதுதான் சோதனை.

சோதனையில் விழாதபடி ஆன்மா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழுவது பாவம்.

உடல் இச்சைகளுக்கு ஆன்மா இணங்கினால் அது நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.

ஆகவே, நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஆன்மாவைப் பத்திரமாகப் பாதுகாத்து வாழ்ந்தால், வாழ்வின் இறுதியில் உடல் மண்ணுக்குள் போனாலும் ஆன்மா விண்ணுக்குப் பறந்து  விடும்.

ஆன்மாவை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

1. உடலை ஒறுத்து உடல் இச்சைகளுக்கு Good bye சொல்ல வேண்டும்.

2. ஆன்மா இறைவனையும், அயலானையும் நேசித்து இறைப் பணிக்காகவும், பிறர் அன்பு பணிக்காகவும் மட்டுமே வாழ வேண்டும்.

3.விண்ணகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே மண்ணகத்தில் வாழ வேண்டும்.

4.உலகில் வாழ்ந்தாலும் உலகிற்காக வாழக்கூடாது.

5.சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்.

6. நமது அயலானில் இயேசுவைக் காண வேண்டும்.

7. உலகை இழந்தாவது ஆன்மாவைக் காப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, March 5, 2025

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."(மத்தேயு நற்செய்தி 6:1)


"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது."
(மத்தேயு நற்செய்தி 6:1)


"தாத்தா, "நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது."
என்று இயேசு சொன்னார்.

அதற்கு என்ன அர்த்தம்?"

"'ஒளியை யாரும் மறைக்க முடியாது.

ஒளி‌ பட்ட பொருட்கள் நமது கண்களுக்குத் தெரியும்.

நமது ஒளியில் மக்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய இயேசுவைக் காண்பார்கள்.

நாம் நமது சிந்தனை, சொல், செயல்களால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ வேண்டும்.

நமது நற்செயல்கள் இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்.

நமது நற்செயல்களைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைக் காண வேண்டும்.

கண்டு நமது முன்மாதிரிகையைப் பின்பற்றி அவர்களும் இயேசுவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

போதுமா?"

"நமது நற்செயல்களைப் பார்த்தால் தானே நம்மில் இயேசுவைக் காண முடியும்?

எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். 

மரக்காலுக்குள் வைத்தால் விளக்கால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.

இதெல்லாம் புரிகிறது.

ஆனால் 

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்."

இந்த வசனம் தான் புரியவில்லை.

மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் நம் அறச் செயல்களைச் செய்யாவிட்டால்

நம்மில் பிரதிபலிக்கும் இயேசுவை மக்கள் எப்படிப் பார்க்க முடியும்?"

"'உனக்கு இதுதான் பிரச்சினையா?

தினமும் சாப்பிடுகிறாயா?"

"தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறேன்."

"'ஏன் சாப்பிடுகிறாய்?"

"சாப்பிடாவிட்டால் எப்படி உயிர் வாழ முடியும்?"

"'கேள்விக்குப் பதில் சொல்லு."

"உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன்."

"'எப்படிப் பட்ட உணவைச் சாப்பிடுகிறாய்?"

"சத்துள்ள, ருசியான உணவைச் சாப்பிடுகிறேன்."

"'சத்துள்ள, சரி. எதற்கு ருசியான?"

'' ருசி இல்லாவிட்டால் எப்படிச் சாப்பிட முடியும்?"

"'ஒரு தட்டில் சத்துள்ள, ஆனால் ருசியில்லாத உணவு இருக்கிறது.

இன்னொரு தட்டில் இரசாயனப் பொருட்களால் ருசியேற்றப்பட்ட Fast food இருக்கிறது. 

இரண்டில் எதைச் சாப்பிடுவாய்?"

"முதல் தட்டிலுள்ள உணவைத் தான் சாப்பிடுவேன்.

இரசாயனப் பொருட்களால் ருசியேற்றப்பட்ட Fast food உடல் நலத்துக்குக் கெடுதி, மருந்தே இல்லாத நோய்களை உண்டாக்கும்."

"'Very good. இப்போ நீ கேட்ட கேள்விக்கு நீயே பதில் சொல்லி விடலாம்.

எங்கே, சொல்லு பார்ப்போம்."

"வழி தெரியவில்லை என்று சொன்னால் வழி காண்பிக்க 
கூட வருவீர்கள் என்று நினைத்தேன்.

நீங்கள் வழியைச் சொல்லிவிட்டு இந்த வழியே போ என்கிறீர்கள்.

பரவாயில்லை. போகிறேன்.

உயிர் வாழச் சாப்பிட வேண்டும், ருசிக்காக மட்டும் சாப்பிடக் கூடாது. 

ருசிக்காக மட்டும் சாப்பிட்டால் நீண்டநாள் உயிர் வாழ முடியாது,
நோய் வந்து குறுகிய காலத்துக்குள் சாக நேரிடும்.


அதேபோல  கடவுளுக்காக அறச் செய்ய வேண்டும். அவற்றைப் பார்க்கும் மக்கள் நம்மில் கடவுளைக் காண்பார்கள்.

மக்கள் பார்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு அறச் செயல்களைச் செய்யக் கூடாது.

நமது நோக்கம் இயேசுவைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் நம்மை அல்ல.

அதாவது மக்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் முன் அறச் செயல்கள் செய்யக் கூடாது.

நாம் செய்வதை மக்கள் பார்ப்பார்கள், 

ஆனால், நம்மைப் பார்ப்பதற்காகச் செய்யக் கூடாது.

நமது செயல்களில் இயேசுவை, நம்மில் வாழும் இயேசுவைப், பார்ப்பதற்காகச் செய்ய வேண்டும்.

உயிர் வாழ்வதற்காகச் சாப்பிட வேண்டும்,

சாப்பிடுவதற்காக உயிர் வாழக் கூடாது.

போதுமா? இன்னுங் கொஞ்சம் வேணுமா?"

"'ஒரு உதாரணம் கொடுத்து விளக்கு."

"மருத்துவ மனைக்குச் சென்று சுகமில்லாதவர்களைப் பார்த்து ஆறுதல் கூறுவது ஒரு அறச் செயல்.

நாம் மனிதர்கள், ஆவி அல்ல. 
நாம் போவதை, வருவதை மக்கள் பார்க்கத்தான் செய்வார்கள்.
ஆனால் அவர்கள் பார்க்க வேண்டும், நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லக் கூடாது.

மற்றவர்கள் வர்கள் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றால் நாம் செல்வதற்கு ஆன்மீக ரீதியாக எந்தப் பயனும் இல்லை.

நமது செயலின் தன்மையைத் தீர்மானிப்பது நமது உள்ளத்தில் உள்ள நோக்கம்.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்”

நமது மனதில் மாசில்லா விட்டால் நாம் செய்வது அறச் செயல்.

மனதில் தற்பெருமை என்ற பாவம் இருந்தால் நாம் செய்வது அறத்துக்கு எதிரான செயல்.

நம்மைப் பற்றி நாம் பெருமையாகப் பேசிக்கொண்டு திரியக் கூடாது.

மற்றவர்கள் பேச வேண்டும் என்று ஆசைப்படவும் கூடாது."

"'Good. ஒரு முறை ஒரு உபதேசியார் கோவில் கட்டுவதற்கு நன்கொடை பிரிக்கச் சென்றிருந்தார்.

வசதியுள்ள ஒருவர் வீட்டுக்குச் சென்று, நன்கொடை நோட்டை அவர் கையில் கொடுத்து விட்டு,

"நீங்கள் தரும் தொகையை எழுதுங்கள். ஐயாயிரம் ரூபாயும், அதற்கு மேலும் எழுதினால் உங்கள் பெயர் கோயில் கல்வெட்டில் பொறிக்கப் படும்." என்றார்.

அவர் நோட்டில் பெயர் எழுதி,

4500 என்று எழுதி, ரூபாயைக் கையில் கொடுத்து விட்டார்.

"இன்னும் 500 எழுதினால் உங்கள் பெயர்......"

"மன்னிக்கவும், நான் கொடுப்பது கோவிலுக்குக் காணிக்கை, கல் வெட்டுக்கு அல்ல."

தனது பெயரை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கொடுத்தால் அது அறச்செயல் அல்ல.

"மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள்.

செய்தால் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது." என்று ஆண்டவர் கூறுகிறார்.

நமது ஒவ்வொரு சொல்லும் விண்ணகத்‌ தந்தையின் மகிழ்ச்சிக்காக இருக்க வேண்டும்,

நம்மை நாமே மகிழ்ச்சிப் படுத்துத்துவதற்காக அல்ல.

நல்ல சமாரியன் உவமையில் அடிபட்டுக் கிடந்த மனிதனுக்கு உதவி செய்த சமாரியன் அவன்மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே உதவி செய்தான்.

அன்பிலிருந்து பிறந்தது இரக்கம்.

இறைவன் நம்மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக பாவத்தால் அருள் வாழ்வை இழந்த நம்மீது இரங்கி மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு தன்னையே பலியாக்கி நம்மை மீட்டார்.

நமக்காகத் தன்னையே பலியாக்கியதால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை.

அவருடைய அன்பு நிபந்தனை அற்றது. 

தன்னுடைய அன்பைத்தான் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். 

அந்த அன்பின் அடிப்படையில் அவரது சாயலில் வாழும் நாம் நமது அயலானுக்கு இரக்கத்தால் உந்தப்பட்டு உதவி செய்ய வேண்டும், சுய விளம்பரத்துக்காக  அல்ல.

இரக்கத்தினால் செய்யப்பட்ட உதவியில் அவன் இயேசுவைக் காண வேண்டும்.

இயேசுவைப்போல நாமும் இரக்கம் உள்ளவர்களாக இருப்போம். 

பிறர் மீது நாம் இரங்குவதில் விண்ணகத்திற்கு ஏறுவதற்கான ஏணி இருக்கிறது. 

லூர்து செல்வம்

Tuesday, March 4, 2025

"மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."(மத்தேயு நற்செய்தி 6:16)


"மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."
(மத்தேயு நற்செய்தி 6:16)

இன்று சாம்பற்புதன்.

தவக் காலத்தின் ஆரம்ப நாள்.

தவக் காலம் என்றால் தவம் செய்ய வேண்டிய காலம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.

ஏனென்றால் நாம் நமது வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு வினாடியும் 
தவம் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றை ஆன்மீக ரீதியாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் தவம்.

அதற்காகத்தான் ஐம்புலன்களின் கட்டுப்பாடு.

இந்தத் தவத்துக்குக் காலவரையறை கிடையாது.

பார்க்கக் கூடாதவற்றைப் கண் பார்க்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

கேட்கக் கூடாதவற்றைப் காது கேட்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

பேசக் கூடாதவற்றைப் பேச வாய் 
ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

நினைக்கக் கூடாதவற்றை  நினைக்க மனது  
ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

அனுபவிக்கக் கூடாத இச்சைகளை உடல் 
அனுபவிக்க ஆசைப்பட்டால் அதை அடக்குவதும்,

தவ முயற்சிகளில் அடங்கும்.

பார்க்கக் கூடியவற்றை அளவோடு பார்ப்பதும்

பேசக் கூடியதை அளவோடு பேசுவதும்,

கேட்கக் கூடியதை அளவோடு கேட்பதும்,

சாப்பிடக்கூடியதை அளவோடு சாப்பிடுவதும், தவ முயற்சிகள் தான்.

நேரத்தை வீணாக்காமல் செபத்தில் ஈடுபடுவதும் தவமுயற்சிதான்.

நமது நேரத்தின் பெரும் பகுதியை நமக்காகச் செலவழிக்காமல் பிறர் அன்புப் பணிகளுக்காகச் செலவழிப்பதும் தவ முயற்சி தான்.

நமது விருப்பங்களைத் தியாகம் செய்து மற்றவர்களது விருப்பங்களை நிறைவேற்றுவதும் தவ முயற்சி தான்.

ஒரே வாக்கியத்தில், உடலையும் மனதையும் ஒறுத்து இறைவனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் தவ முயற்சிதான்.

இறைவனுக்காக வாழ்வதுதான் தவவாழ்வு.

இறைவனுக்காக வாழ்பவன் தன்னையே தியாகம் செய்து வாழ்வான்.

தியாகம் செய்வதில் தான் தவம் அடங்கியிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் முழுவதும் தவம் செய்ய வேண்டுமென்றால் எதற்காகத் தனியே தவக் காலம்?

ஆண்டு முழுவதும் சாப்பிடுகிறோம், ஆனாலும் வீட்டு விழா நாட்களில் விசேடமாக விருந்து சாப்பிடுகிறோம் அல்லவா,  அதேபோல் தான்.

தவம் ஆன்மீக ரீதியானது.

எந்த ஆன்மீக விழாவுக்குத் தயாரிப்பதற்காகத் தவக் காலம்?

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்த புனித வெள்ளிக்காக நம்மைத் தயாரிக்கவா?

இயேசு உயிர்த்தெழுந்த விழாவுக்கு நம்மைத் தயாரிக்கவா?

இக்கேள்விக்கு விடை காணுமுன் வேறொரு கேள்வி.

பொதுவாக ஆண்டவர் மரித்த நாளை துக்கப் பண்டிகை என்று அழைப்போம்.

உலகியல் ரீதியாக பிறந்த நாளை மகிழ்ச்சியாகவும், இறந்த நாளைத் துக்கமாகவும்,  கொண்டாடுவது வழக்கம்.

கேட்கப் படக் கூடிய கேள்வி ஆன்மீக ரீதியானது.

உயிர்த்த ஞாயிறு மகிழ்ச்சியின் விழா. அதில் சந்தேகமில்லை.

ஆண்டவர் இறந்த நாள்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

முகம் வாட்டமாய் இருந்தால் அகத்தில் வருத்தம், துக்கம் இருக்கிறது என்று அர்த்தம்.

ஒருவர் முகவாட்டமாய் இருந்தால் நாமும் முகத்தை வாட்டமாய் வைத்துக் கொண்டு, "வீட்டில் ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்போம்.

சாதாரணமாக அமர்ந்திருக்கிற ஆளிடம் போய், "ஏதாவது பிரச்சினையா?" என்று கேட்போமா?

புனித வெள்ளிக்காக நம்மைத் தயாரிக்க நோன்பு இருந்தால்,
அது துக்கப் பண்டிகையாக இருந்தால்

அதை நினைத்து நோன்பு இருந்தால் நமது முகம் எப்படி இருக்க வேண்டும்?

வாட்டமாய் இருக்க வேண்டும்.

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகம் சொல்கிறது,

"நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்."

மனதில் நமது பாவங்களுக்காக மனத்தாபப்பட்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நோன்பை ஒப்புக்கொடுக்க வேண்டும்,

பாவங்கள் மன்னிக்கப்படும்போது ஆன்மீக மகிழ்ச்சி பிறக்கும்.

சிலுவையில் இயேசு மரித்த போது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.

இது எதற்கு அடையாளம் ?


 யூத ஆலயத்தில், திரை என்பது மகா பரிசுத்த ஸ்தலத்தை சாதாரண மக்களிடமிருந்து பிரிக்கும் ஒரு தடையாக இருந்தது. 

இங்கு பிரதான ஆசாரியர் மட்டுமே செல்லலாம்.

இயேசுவின் மரணத்தின் மூலம், இந்தத் திரை கிழிந்தது, 

இது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான தடை நீங்கியது என்பதைக் குறிக்கிறது.

ஒரே வரியில்,

நாம் மீட்கப் பட்டோம்.

நமது மீட்பு துக்கமான செய்தியா? மகிழ்ச்சியான செய்தியா?

சிலுவையில் தொங்கிய நல்ல கள்ளன் இயேசு மரித்தவுடன் அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

இயேசுவின் காலத்தில் உயிர் வாழ்ந்தவர்களுள் சிலுவை மரணத்தால் முதலில் மகிழ்ந்தவன் நல்ல கள்ளன்.

" இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 23:43)

பேரின்ப வீட்டுக்கு அழுது கொண்டா போயிருப்பார்?

ஆன்மீக மகிழ்ச்சியோடு போயிருப்பார்.

கெட்ட கள்ளன்?

நாமும் ஆன்மீக ரீதியாக கள்ளர்கள், பாவிகள் தான்.

நாம் நல்ல கள்ளர்களாக இருந்தால் ஆன்மீக ரீதியாக இயேசு மரித்த நேரம் மகிழ்ச்சிகரமான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

உலகியல் ரீதியாக துக்கமான நேரம், ஆன்மீக ரீதியாக மகிழ்ச்சிகரமான நேரம்.

நமக்கும் இயேசு இடையில் தடையாக இருந்த திரை கிழிந்த நேரம்.

நாம் மனம் திரும்பிய பாவிகளாக மரித்தால் நமக்கும் இயேசுவுக்கும் இடையில் தடையாக இருக்கும் திரையாகிய உடலைக் கிழித்துக் கொண்டு நமது ஆன்மா இயேசுவோடு சேரும்.

நாம் இப்போது நோன்பு இருப்பது நாம் மனம் திரும்பி அருள் வாழ்வில் வளர்ந்து இயேசுவோடு இணைவதற்காகத்தான்.

அப்படி இணைய வேண்டுமானால் நாமும் நாம் சுமந்து சென்று கொண்டிருக்கும் சிலுவையில் மரிக்க வேண்டும்.

அதற்காகத்தான் நாம் சிலுவையைச் சுமந்து கொண்டு அவரைப் பின்பற்ற வேண்டும் என்கிறார்.

நாம் இருக்கும் நோன்பு நமது சிலுவை தான்.

முகவாட்டமாக அல்ல, முக மலர்ச்சியோடு நோன்பிருந்து,

நமது சிலுவையையும் மகிழ்ச்சி யாக சுமப்போம்.


இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்து போல நாமும் மரித்து உலக இறுதியில் உயிர்ப்போம்.

இயேசுவோடு இணைந்து நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

ஆக, இயேசு உயிர்த்தெழுந்த விழாவுக்கு நம்மைத் தயாரிக்கவே தவக்காலம்.

இயேசுவோடு மரித்து, இயேசுவோடு உயிர்க்கவே நோன்பு இருக்கிறோம்.

நாம் வருந்த வேண்டும், 
அழ வேண்டும், 
நாம் செய்த பாவங்களுக்காக. 

மகிழ வேண்டும் மீட்பு பெற்றமைக்காக.

லூர்து செல்வம்.

Monday, March 3, 2025

அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார். (மாற்கு நற்செய்தி 10:28)


அப்போது பேதுரு அவரிடம், "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார். 
(மாற்கு நற்செய்தி 10:28)

இயேசு சீடர்களிடம், "செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். 
அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்று கூறியபோது 

இராயப்பர் இயேசுவிடம்

"நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே"
கூறினார்.

"நாங்கள் செல்வந்தர்கள் அல்ல, இருந்தாலும் எங்களிடம் உள்ளதை எல்லாம் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியிருக்கிறோமே, எங்களுக்கு என்ன ஆகும்" என்ற பொருளில் கூறுகிறார்.

அதற்கு இயேசு‌ சீடர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 

இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்." என்றார்.

இராயப்பர் சீடர்கள் விட்டு வந்த லௌகீகப் பொருட்களைக் குறிப்பிடுகிறார்.


இயேசு அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஆன்மீக பிரதிபலன்களைக் குறிப்பிடுகிறார்.

அவர்கள் விட்டு வந்தது  லௌகீக ரீதியிலான குடியிருந்த வீடு, பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் உடமைகள்.


பிரதிபலன்களாகக் கிடைக்கப் போவது உலகிலுள்ள அனைத்து உறவுகளும், ஆன்மீக ரீதியாக.

விட்டு வந்தது ஒரு வீடு. இனி நாட்டிலுள்ள அனைத்து வீடுகளும் அவர்களுடையவைதான், அதிலுள்ள அனைத்து மக்களும் அவர்களுடைய உறவினர்கள் தான். எல்லோரும் ஆன்மீக உறவினர்கள். எல்லோரும் இறையன்பினாலும், 
பிறரன்பினாலும் பிணைக்கப் பட்டவர்கள் 

உலகமே வீடு, வானமே கூரை, மக்கள் அனைவரும் உறவினர்கள்.

இயேசுவுக்காக வாழ வந்தவர்களுக்கு 
கிடைக்கவிருக்கும் முக்கிய மான பிரதிபலன் இன்னல்கள், துன்பங்கள்.

இயேசு துன்பங்களை அவரைப் பின்பற்றுபவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாக் குறிப்பிடுகிறார்.

அவர் பட்ட பாடுகளும், சிலுவை மரணமும் தான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தந்திருக்கின்றன.

ஆன்மீக ரீதியாக அவைகள் நமக்கு ஆசீர்வாதங்கள்.

இயேசுவின் பணியில் தங்களை அர்ப்பணித்திருக்கும் குருமார்கள் நம்மை சிலுவை அடையாளத்தால் தான் ஆசீர்வதிக்கிறார்கள். 

நாம் நமது நெற்றியில் சிலுவை அடையாளம் போடும்போது இயேசுவின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்கிறது.

துன்பங்களாகிய சிலுவைகளைச் சுமந்துகொண்டு தான் இயேசுவின் சீடர்களாக வாழ முடியும்.

இயேசுவின் வாழ்வில் சிலுவைக்குப் பின்தான் உயிர்ப்பு.

புனித வெள்ளிக்குப் பிறகுதான் உயிர்த்த ஞாயிறு.

நமக்கும் சிலுவையின் மூலம் தான் நித்திய பேரின்ப வாழ்வு. 

எந்த அளவுக்கு இந்த உலகில் இயேசுவுக்காகத் துன்பங்களை அனுபவிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நித்திய பேரின்பமும் இருக்கும்.

உலகைத் துறந்து இயேசுவுக்காக வாழ்பவர்களுக்கு இவ்வுலகில் சிலுவை, மறு உலகில் நிலை வாழ்வு. 

லௌகீக ரீதியில் துன்பங்கள் நமது உடல் விருப்பத்திற்கு எதிரானவை.

உடலுக்கு வலியைக் கொடுக்கும் நோய் நொடிகள், பசி, பட்டினி போன்றவற்றையும்,

மற்றவர்கள் நமக்குத் தரும் துன்பங்களையும், 

இயேசுவுக்கு எதிரானவர்கள் நமக்கு தரும் தொந்தரவுகளையும், 

மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் செயல்பாடுகளால் நாம் படும் துன்பங்களையும் 

 பொறுமையுடன் சகித்துக் கொண்டு அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தால் அவை நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழைவதற்காக அருள் உதவியைப் பெற்றுத் தருகின்றன.

இந்த காலகட்டத்தில் இயேசுவுக்கு எதிரானவர்களால் ஏற்படும் துன்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கோவில்கள் இடிக்கப்படுகின்றன. 

புனிதர்களின் சுருபங்கள் உடைக்கப்படுகின்றன.

வழிபாடு செய்பவர்கள் அடிக்கப்படுகின்றனர்.

இவற்றையெல்லாம் உலகம் தனது வெற்றியாகக் கருதுகிறது.

இவற்றை நாம் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கும் போது இவை நாம் பெரும் ஆன்மீக வெற்றிகள்.

நமக்காக இயேசு சிந்திய ரத்தம் நமக்கு மீட்பைத் தந்தது.

இயேசுவுக்காக நாம் சிந்தும் ரத்தம் திருச்சபையை வளர்க்கிறது.

இவ்வுலகில் நாம் படும் துன்பங்கள் தற்காலிகமானவை. 

ஆனால் அவற்றின் காரணமாக நாம் பெரும் மறு உலக வாழ்வு நிலையானது. 

இயேசுவுக்காகச் சொந்தங்களை விட்டு வருபவர்களுக்கு உலகமே சொந்தமாகி விடுகிறது. 

அன்று பன்னிரு சீடர்களும் தங்கள் வீடுகளையும் ரத்த உறவுகளையும் விட்டு வந்தது போல

இன்று நம்மிடையே பணியாற்றும் குருக்கள் தங்கள் வீடுகளையும் ரத்த உறவுகளையும் விட்டு வந்திருக்கிறார்கள். 

நாம் அவர்களுக்கு பெற்றோராகவும் சகோதர சகோதரிகளாகவும் செயல்பட வேண்டும். 

அவர்களை நமது குடும்பத்தின் அங்கத்தினர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நமது ரத்த சொந்தங்களை நாம் நேசிப்பது போல ஆன்மீக சொந்தங்களாகிய அவர்களையும் நேசிக்க வேண்டும்.

நமது ஆன்மீக வாழ்வு பற்றி அவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். 

நமக்காக வந்திருப்பவர்களை நம்மவர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்பது திருச்சபையின் கட்டளை.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அவர்களை நமது உடன் பிறந்தவர்களாக் கருத வேண்டும்.

இதுவே இயேசுவின் விருப்பம்.


இயேசுவின் விருப்பமே நமது விருப்பமாக இருக்க வேண்டும்.

விருப்பம் செயலாக மாற வேண்டும்.

லூர்து செல்வம்.

Sunday, March 2, 2025

"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."(மாற்கு நற்செய்தி 10:14)

"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது."
(மாற்கு நற்செய்தி 10:14)

சிறு பிள்ளைகளைப் போன்றவர்களுக்கே மோட்ச பேரின்ப வாழ்வு உரியது.

பாவம் அற்றவர்கள் தான் மோட்சத்துக்குள் நுழைய முடியும்.

பாவம் என்றால் என்ன என்று தேரியாதவர்களால் பாவம் செய்ய முடியாது.

சிறு பிள்ளைகளுக்கு ஒழுக்க நெறிகளைப் பற்றியோ, கடவுளுடைய கட்டளைகளைப் பற்றியோ எதுவும் தெரியாது.

ஆகவே அவர்களால் அவற்றை மீற முடியாது. 

அவர்களுடைய ஆன்மா எப்போதும் பரிசுத்தமாக இருக்கும். 

அந்த நிலையில் அவர்கள் மரிக்க நேரிட்டால் விண்ணக வாழ்வை அடைவது உறுதி. 

இயேசு குழந்தையாக பிறந்த சமயத்தில்  ஏரோது மன்னனால் கொலை செய்யப்பட்ட அத்தனை மாசில்லாக் குழந்தைகளும் இப்போது விண்ணக பேரின்ப வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்களும் சிறு பிள்ளைகளைப் போல பாவ மாசுமறு இல்லாமல் வாழ வேண்டும் என்பதுதான் இறைவனின் விருப்பம். 

சிறு பிள்ளைகள் மோட்சத்துக்குள் நுழைய உத்தரிக்கிற தலம் வழியாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

ஆனால் பெரியவர்களிடம் சாவான பாவம் இல்லாவிட்டாலும் அற்ப பாவங்கள் இருந்தால் அவர்கள் உத்தரிக்கிற தலம் சென்று உத்தரித்த பிறகு தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைய முடியும்.

நாம் விண்ணக வாழ்வுக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம், 

பாவம் இல்லாமல் மரிப்பவர்களுக்கு விண்ணக வாழ்வு உறுதி, 

மரிக்கும் சிறு பிள்ளைகள் உத்தரிக்கிற தலம் செல்லாமலேயே விண்ணக வாழ்வை அடைவார்கள் 

என்ற  மறை உண்மைகளின் அடிப்படையில் சிறிது தியானித்தால் நமது வாழ்க்கைக் கண்ணோட்டம் வித்தியாசமாக இருக்கும்.

ஒரு Wall poster ல் இவ்வாறு எழுதியிருந்தது:

"எங்கள் தந்தை இவ்வுலக துன்ப வாழ்வை விட்டு விட்டு நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்க இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்."

யாராவது " நான் பள்ளி இறுதித் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என்ற செய்தியை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் " என்று சொன்னால் அவரைப் பற்றி என்ன நினைப்போம்?

அல்லது,

"எங்கள் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொள்கிறோம்" 

என்று அழைப்பு விடுப்பவர்களை பற்றி என்ன நினைப்போம்? 

மனக் கோளாறு உள்ளவர்கள் என்று தான் நினைப்போம்.

மகிழ்ச்சியான செய்தியை மகிழ்ச்சியாக அறிவிக்க வேண்டும்.

துக்கமான செய்தியை வருத்தத்தோடு அறிவிக்க வேண்டும்.

நித்திய பேரின்ப வாழ்வை அடைய இறைவனடி சேர்வது மகிழ்ச்சியான செய்தியா?துக்கமான செய்தியா?

பேரின்ப வாழ்வை துக்கமான செய்தி‌ என்று நினைப்பவர்களும் மனக் கோளாறு உள்ளவர்கள்தான்.

இரண்டு நண்பர்கள் இருந்தார்கள்.

இருவருக்கும் ஒரே வயது.

இருவரும் சிறு வயது முதலே நெருங்கிப் பழகி அன்பால் பிணைக்கப் பட்டிருந்தார்கள்.

எப்போதும் அவர்களை ஒன்றாகவே பார்க்கலாம்.

எப்போதும் மகிழ்ச்சியாக பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

இருபது வயது நடக்கும் போது இருவரில் ஒருவர் எதிர் பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்து விட்டார்.

வீடே அழுகையில் மூழ்கிக் கிடந்தது.

எல்லோரும் அழுது கொண்டிருந்தபோது நண்பன் மட்டும் எப்போதும்போல 
மகிழ்ச்சியாக இருந்தான்.

இது மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஒருவர் அவனிடம், "நண்பன் இறந்து கிடக்கிறான். நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்  உனக்கு உணர்ச்சியே இல்லையா?"

"உணர்ச்சி இருப்பதால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நண்பன் நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிக்கச் சென்றிருக்கிறான்.

கடவுளிடம் சென்றிருக்கிறான்.

உண்மையான உணர்ச்சி இல்லாதவர்கள்தான் நண்பனின் பேரின்ப வாழ்வை நினைத்து மகிழாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்."

லௌகீக உள்ளத்தோர்க்கு இந்த பதில் விளங்காது.

உண்மையான ஆன்மீக வாதிகளுக்குப் புரியும்.

நமது வாழ்வின் அனுபவங்களை ஆன்மீக் கண் கொண்டு நோக்குவோம்.

லௌகீக தோல்விகள் கூட ஆன்மீக வெற்றிக்கு அடித்தளம் ஆகலாம். 

புனித பிரான்சிஸ் அசிசி இளைஞனாக இருந்தபோது அவரது பெற்ற தந்தை அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். 

அவர் ''விண்ணகத் தந்தையே எனது தந்தை" என்று வாழ ஆரம்பித்தார். 

பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டே ஆன்மீக பணியாற்றினார். 

ஏழைகளின் சபையாகிய பிரான்சிஸ்கன் துறவற சபையை நிறுவினார்.

சிறு பிள்ளைகளின் மாசுமறுவற்ற தன்மை நமது ஆன்மீகமாக இருக்கட்டும்.


லூர்து செல்வம்.