Tuesday, September 30, 2025

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். (லூக்கா நற்செய்தி 10:37)




அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார். 
(லூக்கா நற்செய்தி 10:37)

 
இயேசு, "உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று கூறியபோது 

திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரிடம் 

 "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று  கேட்டார். 


அதற்குப் பதில் அளிக்கும் வகையில் இயேசு நல்ல சமாரியன் உவமையைக் கூறினார்.

 "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார்.

 அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். 

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு நயம் இருக்கும்.

எருசலேம் ஆலய நகரம், ஆன்மீக வாழ்வைக் குறிக்கிறது.

எரிக்கோ ஒரு வியாபார நகரம், லௌகீக வாழ்வைக் குறிக்கிறது.

கள்வர் லௌகீக வாதிகள், ஆன்மீகத்துக்கு எதிரிகள்.

ஆன்மீகம் சார்ந்த பக்தி வாழ்க்கையை விட்டு விட்டு லௌகீகம் சார்ந்த வாழ்க்கைக்குத் திரும்பும் போது இந்த விபத்து நடக்கிறது.

ஆன்மீகத்திலேயே இருந்திருந்தால் ஆண்டவர் துணையோடு பத்திரமாக இருந்திருப்பார்.

லௌகீக வாதிகளுக்குதான் ஆன்மீக விபத்துக்கள் ஏற்படும்.

அடிபட்டுக் கிடந்தவர் வழியாக ஒரு குருவும், லேவியர் ஒருவரும் வருகிறார்கள்.

இருவருமே இனரீதியாக யூதர்கள். அடிபட்டுக் கிடப்பவரும யூதர்.  அவர்கள் அடிபட்டுக் கிடப்பவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

அதாவது அவரைத் தங்கள் அயலானாக ஏற்கவில்லை.

மூன்றாவதாக ஒரு சமாரியர் வருகிறார்

அவர் அடிபட்டுக் கிடப்பவர் மீது பரிவு கொண்டு,   

அவரது காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். 

மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்கிறார். 

 இந்த உவமையைக் கூறிய பின் இயேசு ஒரு கேள்வி கேட்கிறார்,

"கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" 

அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்கிறார்.

 இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறுகிறார். 

மனிதர்கள் ஒவ்வொரும் அவரவர் அயலானுக்கு உதவி செய்ய வேண்டும்.

அயலான் என்றால் அதே இனத்தைச் சேர்ந்தவன் என்று அர்த்தம் அல்ல.

அதே சமயத்தைச் சேர்ந்தவன் என்றும்  அர்த்தம் அல்ல.

இரத்த உறவினன் என்றும் அர்த்தம் அல்ல.

இறைவனால் அவரது சாயலில் படைக்கப்பட்டவன், அதாவது அன்பும், இரக்கமும் உள்ளவன்.

அன்பும், இரக்கமும் உள்ளவன் தான் அயலானுக்குரிய கடமையைச் செய்ய முடியும்.

குருவும், லேவியரும் அடிபட்டுக் கடந்தவனைப் போல் யூதர்கள் தான், ஆனால் அன்பும், இரக்கமும் இல்லாதவர்கள்.

ஆகவே தங்கள் இனத்தவனுக்கு உதவி செய்யவில்லை.

ஆனால் அன்பும் இரக்கமும் உள்ள சமாரியர் இனம் பார்க்காமல் வேற்று இனத்தவருக்கும் உதவி செய்கிறார்.

இயேசு ஏன் அடிபட்டுக் கிடந்தவருக்கு அயலான் யார் என்று கேட்கிறார்?

எல்லோரும் மனிதர்கள் தான், மனிதனுக்குரிய பண்புகள் உரியவர்கள் தான் மனிதர் என்று அழைக்கப்பட ஏற்றவர்கள். அன்பு இல்லாதவர் மனிதர் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்.

அதேபோல நமக்கு அடுத்து இருப்பவர்கள் அனைவரும் அயலான்கள்தான் என்றாலும் 
அயலானுக்குரிய பண்பாகிய இரக்கம் உள்ளவர்கள் தான் அப்பெயருக்கு ஏற்றவர்கள்.

அதை நமக்கு உணர்த்தவே இந்த உவமை. 

இரக்கம் உள்ள சமாரியரே அயலான் என்ற பெயருக்கு ஏற்றவர்.

 இன, மத, சமூக வேறுபாடுகள் இல்லாமல், தேவைப்படும் அனைவருக்கும் நாம் உதவ வேண்டும் என்பதே இந்த உவமையின் முக்கியக் கருத்து.

அடிபட்டுக் கிடந்தவர் எருசலேமிலிருந்து எரிக்கோவுக்குப் பயணிப்பவர்,

அதாவது பக்தி நிறைந்த ஆன்மீக வாழ்வை விட்டுப் பாவ வாழ்க்கையை நோக்கிப் பயணிப்பவர்,

ஒரே வார்த்தையில் நல்லவரல்ல.

உதவி செய்பவர் இரக்கம் உள்ளவராக இருந்தால் உதவி தேவைப்படுபவர் எப்படி பட்டவர்களாக இருந்தாலும், நல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும் உதவி செய்வார்.

இயேசு இரக்கம் உள்ளவர், நாம் பாவம் செய்தவர்கள் ஆனால் நல்லவராகிய இயேசு கெட்டவர்களாகிய நம்மை ஒவ்வொரு வினாடியும் பாதுகாத்து பராமரித்து வருகிறார். 

அவரது அன்பைப் பார்த்து நாம் மனம் திரும்ப வேண்டும்.

நல்ல சமாரியன் மூலம் இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன?

நாம் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.  

நமது பிறர் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமது இரக்கத்தின் காரணமாக அவர்களுக்கு உதவ வேண்டும்.

அதனால் தான் இயேசு

"நீரும் போய் அப்படியே செய்யும்" என்கிறார்.

நாமும் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்

Monday, September 29, 2025

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, (லூக்கா நற்செய்தி 9:51)



இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 
(லூக்கா நற்செய்தி 9:51)

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் எது?

 இயேசுவுக்கு மட்டுமல்ல அனைத்து மனிதர்களுக்கும் அவர்களுடைய ஆன்மா சரீரத்தை விட்டுப் பிரியும் நாள் தான் விண்ணேற்றம் அடையும் நாள்.

மனிதனின் ஆன்மா உடலோடு இருக்கும் போது அது மண்ணுலகில் இருக்கிறது.

அது உடலை விட்டுப் பிரிந்தவுடனே உடல் மண்ணுக்கும்,
ஆன்மா விண்ணுக்கும் போகும்.

அப்படியானால் புனித வெள்ளி தான் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள்.

புனித வெள்ளி இயேசுவின் மரணநாள். 

வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு இயேசு மரித்த வினாடியில் 

அவரது ஆன்மா பாதாளங்களில் இறங்கி 

அங்கு மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த பழைய ஏற்பாட்டு ஆன்மாக்களோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்.

இயேசுவோடு மரித்த நல்ல கள்ளனும் அவரோடு விண்ணகம் அடைந்தார்.

(அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார்.)
(லூக்கா நற்செய்தி 23:43)


புனித வியாழன் இறுதி இரவு உணவு நாள்.

புனித வெள்ளி மரண நாள்.

இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 

இறுதி இரவு உணவிற்கு (Last Supper) இடம் ஏற்பாடு செய்வதற்காக  தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். 

அவர்கள் சமாரியருடைய ஓர் ஊர் வழியாகப் போகத் தீர்மானித்தார்கள். 

ஆனால் சமாரியர்கள் அவ்வழியே செல்ல அனுமதிக்கவில்லை.

ஆகவே வேறோரு ஊர் வழியாக எருசலேமுக்குச் சென்றார்கள்.

சமாரியர்களுக்கு எருசலேமைப் பிடிக்காது.

சமாரியர் கலப்பின யூதர்கள்.

சமாரியர்கள் யோசேப்பின் பிள்ளைகளான எப்பிராயீம் (Ephraim) மற்றும் மனாசே (Manasseh) ஆகிய கோத்திரங்களின் நேரடி வம்சாவளியினர்.

அசீரிய படையெடுப்பின் போது 
இவர்களுக்கும் அசீரியர்களுக்கும் ஏற்பட்ட திருமண உறவின் காரணமாக பிறந்த கலப்பின மக்கள் இவர்கள்.

இவர்கள் எருசலேம் ஆலயத்திற்குச் செல்லவில்லை.    

கெரிசிம் மலையில் (Mount Gerizim) வழிபாடு செய்தார்கள்.

இவர்களும் மெசியாவின் வருகையை எதிர்பார்த்தார்கள்.

முன்பு ஒரு முறை இயேசு ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டபோது 

அவள் இயேசுவிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்று சொன்னாள். 

 "உம்மோடு பேசும் நானே அவர்" என்று இயேசு சொன்னார்.

அதன்பிறகு இயேசு சமாரியாவில் நற் செய்தி அறிவித்தார்.

ஆனால் இறுதி இரவு உணவுக்காக எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது சமாரியா ஊருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் கோபமுற்ற யாக்கோபும் யோவானும் "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?" என்று கேட்டார்கள். 

இது அவர்கள் ஆன்மீக வாழ்வில் முதிர்ச்சி அடையவில்லை என்பதைக் காட்டுகிறது.

இரக்கம் உள்ள இயேசு 
 அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 

இயேசு சமாரிய மக்களையும் நேசித்தார். அவர்களுக்காகவும் தான் அவர் பாடுகள் பட்டு மரிக்கப் போகிறார். 

அதனால் தான் சமாரியாவை அழிக்க விரும்பிய அருளப்பரையும் யாக்கோபையும் அவர் கடிந்து கொண்டார்.

இது இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம். 

நாம் பகைவர்களையும் மன்னிக்க வேண்டும். 

அவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் அழிந்து போக நாம் ஆசைப்படக்கூடாது. 

அவர்களும் வாழ வேண்டும். 

இப்போது கட்டுரையின் தலைப்பில் உள்ள விண்ணேற்றம் என்பது பற்றி சிறிது தியானிப்போம்.

இயேசுவின் விண்ணேற்ற விழாவை அவர் உயிர்த்த 40வது நாள்   கொண்டாடுகிறோம்.

40 நாட்கள் அவ்வப்போது சீடர்களுக்குக் காட்சி கொடுத்த இயேசு அதற்குப் பிறகு காட்சி கொடுக்கவில்லை என்பதையே இந்த விழா குறிக்கிறது.

ஆனால் அவர் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தபோது,

"தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று கூறிய வினாடி இயேசுவின் ஆன்மா விண்ணகத் தந்தையிடம் சென்று விட்டது.

விண்ணகம் எங்கு இருக்கிறது? 

எங்கு என்ற வினாச் சொல் லௌகீக உலகில் ஒரு இடம் எங்கு இருக்கிறது என்பதைப் பற்றி அறிய, கேட்கப் பயன்படுத்தப்படுகிறது.

இது முழுக்க முழுக்க மண்ணுலகைச் சார்ந்த சொல்.

நம்மிடம் வேறு சொல் இல்லாததால் விண்ணுலகைப் பற்றி அறியவும் இந்தச் சொல்லைப் பயன்படுத்திகிறோம்.

விண்ணுலகம் இடம், காலத்துக்கு அப்பாற்பட்டது.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற உண்மையை நமது லௌகீகப் பொருளில் புரிந்து கொள்ளக்கூடாது. 

உலகம் சடப் பொருளால் ஆனது.

சடப் பொருள் இடத்தை அடைக்கும் தன்மை கொண்டது. 

ஒரு பொருள் இருக்கும் இடத்தில் இன்னொரு பொருள் இருக்க முடியாது. 

கடவுள் சடப்பொருள் அல்ல, ஆவி. 

ஆவி இருக்க இடம் தேவையில்லை.

அப்படியானால் கடவுள் எப்படி எங்கும் இருக்கிறார்? 

கடவுள் தனது வல்லமையால் எங்கும் இருக்கிறார். 

பிரபஞ்சம் முழுவதும் அவரது வல்லமைக்கு உட்பட்டது. 

அவரன்றி சடப் பொருளாகிய  ஒரு அணுவும் அசையாது.


நமது ஆன்மாவைப் போலவே இயேசுவின் ஆன்மாவும் ஆவி.

ஏற்றம் என்றால் ஏறிச் செல்வது.

விண்ணேற்றம் என்றால் விண்ணுக்கு ஏறிச் செல்வது.

நமது மொழியில் சடப் பொருள்தான் ஏறிச் செல்ல முடியும்.

இயேசுவின் ஆன்மா எப்படி ஏற முடியும்?

இது லௌகீக மொழியை ஆன்மீகம் பற்றி பேச பயன்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்.

நாம் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணகம் ஒரு இடமல்ல, வாழ்க்கை நிலை.

மனிதர்களாகிய நாம் மரிக்கும் போது நமது ஆன்மா விண்ணக நிலையை அடைகிறது.

இயேசு மரித்த உடனே அவரது ஆன்மா விண்ணக நிலையை அடைந்தது.

இயேசு மூன்றாம் நாள் உயிர்க்கும் போது ஆவியின் நிலையை (Spiritualized body) அடைந்த உடலோடு உயிர்த்தார்.

 நாற்பது நாட்கள் சீடர்களுக்குக் காட்சி கொடுத்த போதும் விண்ணக நிலையில் தான் காட்சி கொடுத்தார், அன்னை மரியாள் வேளாங்கண்ணியில் காட்சி கொடுத்தது போல. 

இயேசுவைப் போலவே நாம் மரிக்கும்போதும் நமது ஆன்மா மட்டும் விண்ணக நிலையை அடையும். 

உலகின் இறுதி நாளில் ஆவி நிலையில் உள்ள உடலோடு உயிர்ப்போம்.

விண்ணகத்தில் நமது ஆன்மாவும், உடலும் வாழ இடம் தேவையில்லை.

இயேசுவுடன் நித்திய நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்

Sunday, September 28, 2025

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். (அரு.1:51)

 

மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். 
(அரு.1:51)

ஏற்கனவே இயேசுவை அறிந்திருந்த பெத்செய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பு(அரு.1:44) 

கானா ஊரினரான நத்தனியேலை
(அரு.21:2)  
இயேசுவிடம் அழைத்து வந்தார்.


நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,

 "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார். 
(அரு.1:47)



நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று இயேசுவிடம் கேட்டார். 

இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். 

அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து யூதர்கள் பைபிள் வாசிப்பது வழக்கம்.

ஒரு வேளை அவர் பைபிள் வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

அப்போது பிலிப்பு அவரை அழைத்திருந்திருக்கலாம்.

அவர் இருந்த இடத்தை இயேசு சொன்னவுடனே

நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 

அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார். 

வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார


இயேசு குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் யாக்கோபின் கனவை நினைவூட்டுகின்றன.

 யாக்கோபு பெத்தேலில் இருந்தபோது ஒரு கனவு கண்டார்.

 அந்தக் கனவில், தரையிலிருந்து வானம் வரை ஒரு ஏணி நீட்டிக்கப்பட்டிருந்தது. 

அதில் கடவுளின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். 

அந்த ஏணியின் உச்சியில் கடவுள் நின்று பேசினார். (தொடக்கநூல் 28:12-13).

யாக்கோபின் கனவில், அந்த ஏணி பூமியையும் பரலோகத்தையும் இணைத்தது.

 கடவுளின் தூதர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தனர். 

ஆனால், இயேசு கூறிய வார்த்தைகளில், தூதர்கள் "மனுமகன் மீது ஏறி இறங்குவார்கள்".


இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு முக்கியமான மறைப்பொருள் தெளிவாகிறது:


யாக்கோபின் கனவில், ஏணியானது பூமியையும் பரலோகத்தையும் இணைத்தது.


இயேசுவின் காலத்தில், அவரே அந்த ஏணியாக, அதாவது பரலோகத்தையும் பூமியையும் இணைக்கும் ஒரே வழியானவராக இருக்கிறார்.


இஸ்ரயேலின் வம்சத்தில் மீட்பர் பிறப்பார் என்பது கடவுளின் திட்டம்.

 யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர்தான் இஸ்ரேல். 

எனவே, இஸ்ரயேலின் கனவை விவரித்த வார்த்தைகளை இயேசு தன்னையே விவரிக்கப் பயன்படுத்தியதன் மூலம், இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மீட்பர் நான்தான் என்று இயேசு மறைமுகமாக உணர்த்துகிறார். 

அவரே கடவுளையும் மனிதனையும் இணைக்கும் ஒரே பாலம்.

நத்தனியேல் இயேசுவைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி நாம் தியானிக்கும்போது,

 நமது ஆன்மிக வாழ்வில் என்ன முன்னேற்றத்தை இந்த தியானம் தரும் என்பதைப் பார்ப்போம்.


​முதலில், பிலிப்புதான் நத்தனியேலுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்லி, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார்.

​இயேசுவுக்கு நத்தனியேலைப் பற்றி ஏற்கனவே தெரியும், 

ஆனால் இயேசுவைப் பற்றி நத்தனியேலுக்கு எதுவும் தெரியாது. 

"நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமோ?" என்று அவர் கேட்டதிலிருந்து இது தெளிவாகப் புரிகிறது.

​பிலிப்பு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே தனது நற்செய்திப் பணியைத் தொடங்கிவிட்டார். 

அவர்தான் நத்தனியேலுக்கு இயேசுவைப் பற்றி அறிவித்து, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தவர். 

அதற்கான உந்துதலை இயேசுவே கொடுத்திருக்க வேண்டும்.


​நத்தனியேல் இயேசுவிடம் வந்தவுடன், "தான் தான் உலகின் மீட்பர்" என்ற உண்மையை இயேசு மறைமுகமாக அறிவித்துவிட்டார்.

 விண்ணகத்துக்குச் செல்வதற்கான ஏணி இயேசுதான் என்பதை நத்தனியேலுக்கும் நமக்கும் அவர் உணர்த்திவிட்டார்.

​நாம் திருமுழுக்கு பெற்ற நாளிலிருந்தே இயேசுதான் உலகின் மீட்பர் என்பது நமக்குத் தெரியும். 

ஆனால், நாம் பைபிளை வாசிக்கும்போதுதான் அதைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள முடிகிறது.


​நமது ஆன்மிக வாழ்வின் நோக்கமே விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதுதான்.

 அதற்கான ஏணி இயேசு மட்டுமே. 

நாமும் இயேசுவாக மாறினால் மட்டுமே இறைவனின் தூதர்கள் நம் மீதும் ஏறி இறங்குவார்கள்.

​ஏனெனில், மனுமகன் மீது ஏறி இறங்கும் தூதர்கள், அவரோடு ஒன்றித்திருக்கும் நம் மீதும் ஏறி இறங்குவார்கள்.

 நாம் இயேசுவோடு ஒன்றித்து வாழ்வதுதான் மிக முக்கியம்.


​இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உணவாக உட்கொள்வதன் நோக்கமும் அதுதான்.

 நாமும் விண்ணக வாழ்வின் சுவையை இந்த பூமியிலிருந்தே சுவைக்க ஆரம்பிப்போம்.


​நமது தியானம் செயலாக மாறுவது எப்படி?

​அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

​நத்தனியேலைப் போல ஆர்வத்துடன் பைபிள் வாசிக்க வேண்டும்.

​பிலிப்புவைப் போல, இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, 

அவர்களை இயேசுவிடம் அழைத்து வர வேண்டும்.

​இயேசுவைப் போல வாழ்ந்து, நமது பண்புகளால் அவராகவே மாற வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இயேசுவாக மாறி வாழ்வோம்,

இவ்வுலகிலும், விண்ணுலகிலும். 

லூர்து செல்வம்.

Saturday, September 27, 2025

அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். (லூக்கா நற்செய்தி 16:25)



அதற்கு ஆபிரகாம், "மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். 
(லூக்கா நற்செய்தி 16:25)

செல்வர், ஏழை இலாசர்‌ உவமையில் இயேசு  ஏழைகள் மீது இரக்கம் இன்றி தன் சிற்றின்ப வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டு வாழும் செல்வந்தனுக்கும்,

துன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழும் ஏழைக்கும் 

மறுவுலகில் எப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும் என்று தெளிவுபடுத்துகிறார்.

உவமையில் செல்வந்தன் செய்த பாவங்களையோ, ஏழை செய்த புண்ணியங்களையோ இயேசு குறிப்பிடவில்லை.

"செல்வர்   விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 

 ஏழை இலாசர்  உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். 

செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளைத் தின்று  பசியாற விரும்பினார். ஆனால் அவர் விருப்பம் நிறைவேறவில்லை.

 ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். 

செல்வர் இறந்தார். அவர் 
பாதாளத்தில் வதைக்கப் பட்டார். அதுவே அவருக்கு நிரந்தரமாகிவிட்டது.

இந்த உவமையினால் இயேசு சொல்லித் தரும் பாடம்,

உலகில் செல்வம் மிகுதியால் உண்டு குடித்து அதனால் கிடைக்கும் சிற்றின்பத்தில் மட்டும் மூழ்கி இருப்பவர்களுக்கு ஆன்மீக வாழ்வில் ஆர்வம் இருக்காது. 

லௌகீக வாழ்வில் மட்டும் ஆர்வம் உள்ளவர்களுக்கு விண்ணுலக வாழ்வு சாத்தியமில்லை. 

ஆனால் ஏழ்மையிலும் ‌ பாவம் செய்யாமல் வாழ்ந்து தங்கள் ஏழ்மையை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொள்கிறவர்களுக்கு விண்ணுலக நிலை வாழ்வு உறுதி.

ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 
(மத்தேயு நற்செய்தி 5:3)

செல்வர்  நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். 

ஆனால் மிகுதியான உடைமைக்குச் சொந்தமான அவர் தனது உணவை பசியோடு இருந்த ஒரு ஏழையோடு பகிர்ந்து கொள்ளவில்லை.

பகிர்ந்து கொண்டிருந்தால் அது கடவுளோடு பகிர்ந்து கொண்டதாக இருந்திருக்கும்.

உறுதியாக அவருக்கு ஆபிரகாம் மடியில் இடம் கிடைத்திருக்கும்.

அவரிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்வோம்.

நம்மிடம் என்ன இருந்தாலும் அது கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்டதே.

கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட எதுவும் நமது பயன்பாட்டுக்காக மட்டுமல்ல.

நமது அயலானோடு பகிர்ந்து கொள்ளவும் தான்.

நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை.

நமக்கு பசிக்கும் போது நமக்கு நாமே உணவு கொடுக்க ஆசைப்படுகிறோம்.

அப்படியானால் நமது அயலானுக்குப் பசிக்கும் போது அவனுக்கு நாமே உணவு கொடுக்க நாம் ஆசைப்பட வேண்டும்.

அந்த ஆசை வந்தால்தான் நாம் நமது அயலானை நேசிக்கிறோம் என்று அர்த்தம்.

அந்த ஆசை வந்தால் நம்மால் தனியாகச் சாப்பிட முடியாது.

அப்படிப் பகிர்ந்து உண்ணாமல் தாங்களாகவே அவ்வளவையும் சாப்பிடுகிறவர்கள் உவமையில் வரும் செல்வனை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஏழை இலாசரிடமிருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்?

ஏழ்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழ்மையால் வரும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வதோடு அவற்றை இறைவனுக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்க வேண்டும்.

இருக்கிறவன் இருப்பதைக் காணிக்கையாகக் கொடுக்கிறான்.

இல்லாதவன் இல்லாமையைக் 
காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.

கடவுள் விரும்புவது நாம் கொடுக்கும் பொருளை அல்ல,
கொடுக்கிற மனதை.

இறைவனுக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருக்க வேண்டும்.

இயேசுவின் திரு விருந்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதற்காக ஆசைப்படுவதை "ஆசை‌ நன்மை" (Spiritual Communion) என்போம்.

இப்போது ஒரு கேள்வி எழும். உவமையைக் கூறிய இயேசு 

செல்வருக்குப்  பெயர் கொடுக்காமல்

ஏழைக்கு ஏன் இலாசர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்?

 "லேசரஸ்" (Lazarus) என்ற சொல்லுக்கு "கடவுள் என் உதவி" என்பது பொருள்.

எபிரேய மொழியில், 'எல்' (El) என்றால் 'கடவுள்' என்றும், 'அசார்' (azar) என்றால் 'உதவி' என்று பொருள்.

ஏழைகள் தாங்கள் ஏழ்மையோடு இருப்பதற்காக வருந்தக் கூடாது, மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதை வலியுறுத்த 

ஏழைக்கு "கடவுள் என் உதவி" என்ற பொருளில் இலாசர் என்ற பெயரைக் கொடுத்தார்.

செல்வர் பணம் உள்ளவர், அவ்வளவு தான்.

தங்களிடம் உள்ள பற்றை அவர்கள் விட்டு விட்டால் அவர்கள் ஏழையரின் உள்ளத்தோராக (Poor in spirit),

அதாவது கடவுளின் உதவியைப் பெற்றவர்களாக மாறி விடுவார்கள்.

கடவுள் ஏழைகள் பற்றிய தனது கருத்தை நமக்குப் புரிய வைக்கவே

செல்வருக்குப் பெயர் கொடுக்காமல் ஏழைக்கு இலாசர் என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்.

நம்மிடம்  செல்வம் இருந்தாலும் அதன் மேல் பற்று இல்லாமல் 

எளிய மனத்தவராய்

 இருப்பதை பிறரோடு பகிர்ந்து வாழ்வோம்.

நமது இறைவனோடு ஒன்றித்து வாழும் நித்திய பேரின்ப வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்

Friday, September 26, 2025

"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார். (லூக்கா நற்செய்தி 9:44)


"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 9:44)

இயேசு இவ்வார்த்தைகளைத் தனது சீடர்களிடம் கூறினார்.

பேய் பிடித்த ஒருவனை இயேசு குணமாக்கிய போது 

மக்கள் கடவுளின் மாண்பைக் கண்டு மலைத்து நின்றார்கள். இயேசு செய்த யாவற்றையும் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். 

அந்த சந்தர்ப்பத்தில் இயேசு  தம் சீடர்களிடம், தான் படப்போகும் பாடுகள் பற்றி கூறுகிறார்.

ஏன் இந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறார்?

இயேசு தனது புதுமைகள் மூலம் தான் வல்லமை கொண்ட மெசியா என்பதைச் சீடர்களுக்கு எண்பித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயத்தில் தான் புதுமைகள் செய்வதற்காக உலகுக்கு வரவில்லை,

மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு மரிப்பதே தான் உலகுக்கு வந்ததன் நோக்கம் என்பதைச் சீடர்களுக்குப் புரிய வைப்பதற்காக 

புதுமை செய்தவுடனே சீடர்களிடம் 

"நான் சொல்வதைக் கேட்டு மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்" என்கிறார். 

ஆனால் அவர்கள் அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளவில்லை.

காரணம் இயேசு தனி இஸ்ரேல் இராச்சியம் அமைத்து அதை ஆள்வார் என்று ஏற்கனவே அவர்கள் மனதில் பதிந்திருந்த எண்ணம்

 அவர் பாடுகள் படுவார் என்ற‌ உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளாதவாறு தடுத்தது.

ஆயினும் அவர் சொன்னதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்க அஞ்சினார்கள். 

சீடர்களைப் போலவே நாமும் சில சமயங்களில் இயேசுவைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம்.

இயேசு நமது அரசர், ஆனால் அவருடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல, விண்ணுலகைச் சார்ந்தது.

சீடர்களைப் போலவே நாமும் இயேசு இவ்வுலகில் ஆட்சி செலுத்தப் போகிறார் என்று தவறாக எண்ணி

இவ்வுலகைச் சார்ந்த உதவிகளையே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எதைக் கேட்டாலும் அது விண்ணக வாழ்வைச் சார்ந்ததாக இருந்தால்தான் தருவார்.

இயேசு இவ்வுலகில் தான் பிறந்தார், இவ்வுலகில் தான் வாழ்ந்தார், 

ஆனால் இவ்வுலகுக்காக பிறக்கவில்லை, இவ்வுலகுக்காக வாழவில்லை.

பிறகு எந்த உலகுக்காக?

விண்ணுலகுக்காக.

அவர் நித்திய காலமும் விண்ணுலகில்தானே வாழ்ந்து வருகிறார்.

மண்ணுலகில் வாழும் நம்மை அவர் வாழும் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வதற்காக மண்ணுலகில் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே நமது வாழ்வின் நோக்கம் விண்ணுலகம் தான்.

தென்காசிக்குச் செல்வதற்காக மதுரையில் Train ஏறுபவன் தென்காசிக்குத்தானே டிக்கெட் எடுக்க வேண்டும்?

மதுரையிலிருந்து மதுரைக்கே டிக்கெட் எடுப்பவனை என்ன சொல்வோம்?

முட்டாள் என்று சொல்வோம்.

நாமும் அநேக சமயங்களில் முட்டாள்களாகவே செயல்படுகிறோம்.

விண்ணக வாழ்வுக்காகப் படைக்கப்பட்ட நாம் நம்மைப் படைத்த கடவுளிடம் விண்ணகம் செல்வதற்கு வேண்டியதைக் கேட்காமல் இந்த உலகில் வாழ்வதற்கான உதவிகளை மட்டும் கேட்டால் நாமும் முட்டாள்கள் தானே.

இந்த முட்டாள்தனத்திலிருந்து நம்மை விடுவித்து விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லவே இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

அதற்காக அவரைக் கொல்லத் தேடுபவர்கள் கையில் தன்னை ஒப்படைக்க வேண்டும், அவர்கள் கையில் பாடுகள் பட்டு, நமது ஆன்மீக மீட்புக்காக மரிக்க வேண்டும் என்று தனது சீடர்களிடம் கூறினார்.

நாம் உலகில் ஈட்டுகிற பணம், சொத்து போன்றவை நமக்கு எக்காலமும் பயன்படாது.

இந்த உண்மையை உணர்ந்து இயேசு எதற்காக வந்தாரோ அதற்காக வாழ இயேசுவின் உதவியைக் கேட்டு மன்றாடுவோம்.

லூர்து செல்வம்

Thursday, September 25, 2025

அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். (லூக்கா நற்செய்தி 9:3)



அப்போது அவர்களை நோக்கி, "பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். 
(லூக்கா நற்செய்தி 9:3)


இயேசு தனது சீடர்களை மக்களுக்கு நற் செய்தியை அறிவிக்க அனுப்பும் போது அவர்கள் வசம் கொடுத்து அனுப்பியது இரண்டு விடயங்கள் தான்.

1. அறிவிக்க வேண்டிய நற் செய்தி.

2. பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும், அதிகாரமும்.

பயணத்தின் போது ஒரு அங்கியைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று பணித்தார்.

ஏன் இந்தக் கட்டுப்பாடு?

ஏன் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று கட்டளையிட்டார்?

சீடர்களுக்குக் கொடுக்கப்பட பணி நற் செய்தி அறிவிப்பு.

பள்ளிக்கு வரும் மாணவன் கல்வி சார்ந்த பொருள்களை மட்டும் பள்ளிக்குக் கொண்டு வர வேண்டும்.

சம்பந்தம் இல்லாத பொருட்களை எடுத்துச் சென்றால் அவனது கவனம் அவற்றின் மேல் தான் இருக்கும், கல்வியின் மீது இருக்காது.

ஆண்டவர் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று கூறிய பொருட்கள் நற் செய்தி அறிவிப்போடு நேரடித் தொடர்பு இல்லாதவை.

அவை கட்டாயம் தேவைப்பட்டால் நற் செய்தியைக் கேட்கும் மக்கள் கொடுத்து உதவுவார்கள்.

இயேசு நற் செய்தி அறிவித்த காலத்தில் மக்கள் அளித்த உணவைத் தான் உண்டார்.

அவர் உணவைப்  பற்றிக் கவலைப்படவில்லை.

உணவு கிடைக்காவிட்டால் பட்டினி தான்.

ஒரு முறை பசியாக இருந்ததால் ஒரு அத்தி மரத்தில் பழம் தேடிய செய்தி பைபிளில் இருக்கிறது.

"மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. 

இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை.
(மாற்கு நற்செய்தி 11:12,13)


"அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார். பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்."
(மத்தேயு நற்செய்தி 12:1)

அன்று இயேசுவுக்கும், சீடர்களுக்கும் யாரும் சாப்பிடக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

பசியாக இருந்ததால் சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

ஆக அவர்களுக்கு நற் செய்தி அறிவிப்பின் அளவுக்கு உணவு முக்கியமானதல்ல.

ஆன்மீக உணவாகிய இறை அருள் தான் முக்கியம்.

நற் செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும் போதே இறை அருள் கிடைத்துக்‌ கொண்டிருக்கும்.

அன்று சீடர்களுக்குக் கொடுக்கப்பட அறிவுரை நமது குருக்களுக்கும் பொருந்தும்.

"நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும்." ‌என்பது நமது திருச்சபை நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

அவர்களுக்கு உரிய அத்தனை உடைமைகளையும் துறந்து விட்டு தான் நற் செய்திப் பணி புரிய வந்திருக்கிறார்கள்.

அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய வேண்டியது நாம் தான்.

திருப்பலிக்கென்று நாம் கொடுக்கும் பணம் அந்த நோக்கத்திற்காகத் தான்.

என்ன பணிக்காக திருச்சபை பங்குக் குருக்களை நமக்குத் தந்திருக்கிறது?

இயேசு சீடர்களை அனுப்பிய அதே பணிக்காகத்தான்.

1.  நற் செய்தியை நமக்கு அறிவிக்க.

2. பேய்களை அடக்கவும் பிணிகளைப் போக்கவும்.

இரண்டுமே முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிகள்.

1. திருப்பலியின் போது மட்டுமல்ல,

 தமது இல்லங்களைச் சந்திக்க வரும்போதும், 

நாம் குருவானவரிடம் ஆன்மீக ஆலோசனை பெற அவரைச் சந்திக்கும் போதும்

 நற் செய்தியை மையமாக வைத்து தான் நம்மோடு பேசுவார்.

ஆனால் நம்மில் அநேகர் பங்குக் குருவை ஆன்மீக ஆலோசகராக (Spiritual Director) பயன்படுத்துவதில்லை.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் வேலை கேட்க,

நமது கல்லூரிகளில் Admission கிடைக்க சிபாரிசுக் கடிதம் வாங்க

போன்ற காரியங்களுக்காகவே பங்குக் குருவை அணுகுகிறார்கள்.

இயேசு அதற்காக குருக்களை நம்மிடம் அனுப்பவில்லை. 

திருப்பலி நிறைவேற்றுதல், இயேசுவை நமக்கு உணவாக தருதல், 
நமது பாவங்களை மன்னித்தல், 
தேவத் திரவிய அனுமானங்களை நிறைவேற்றுதல் போன்ற ஆன்மீக பணிகளுக்காகவே 
இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.

2. நமது ஆன்மாவை சாத்தானின் பிடியிலிருந்து விடுவிப்பதும்,

பாவம் என்ற ஆன்மீக 
நோயிலிருந்து நம்மை குணமாக்கவும் இயேசு அவர்களை நம்மிடம் அனுப்பியுள்ளார்.

இந்த பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டுமென்றால் 
பள்ளிக்கூடங்களின் நிர்வாகப் பிடியிலிருந்தும்,

 பங்கை சார்ந்த நிலங்களின் நிர்வாகப் பிடியிலிருந்தும் நமது குருக்களை  ஆயர் விடுவிக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களால் முழுநேர ஆன்மீக பணி செய்ய முடியும். 

நமது ஞான மேய்ப்பர்களை  முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிக்காக பயன்படுத்திக் கொள்வோம்.

அவர்களை நமது குடும்ப உறுப்பினர்களாக பாவித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம். 

அவர்களுக்குச் செய்யும் உதவி இயேசுவுக்கு நாம் செய்யும் உதவி.

லூர்து செல்வம்.

Wednesday, September 24, 2025

இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். (லூக்கா நற்செய்தி 8:50)



இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 8:50)

தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்த தன் மகளைக் குணமாக்க இயேசுவை அழைத்துச் சென்று கொண்டிருந்த போது மகள் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது.

அப்போது இயேசு சிறுமியின் தந்தையை நோக்கி,

"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார். 

அதன் பின் அவளது வீட்டுக்குச் சென்று அவளுக்கு உயிர் கொடுத்தார்.

நாம் இப்போது இயேசுவின் வார்த்தைகளை நமது தியானத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

இயேசுவின் வார்த்தைகள் உயிருள்ளவை.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் கூறப்பட்ட வார்த்தைகள் அதே போன்ற எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தும்.

சாகக் கிடந்த சிறுமியின் தந்தை எதற்காக இயேசுவிடம் வேண்டினாரோ அது நிறைவேற வாய்ப்பு இல்லை என்ற செய்தி வந்த பிறகும்

இயேசு வேண்டியவரை நோக்கி,

"அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்கிறார்.

இதேபோன்ற சூழ்நிலைகள் நமது வாழ்விலும் வரலாம்.

ஒருவர் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.

நேர்காணப் போகுமுன் அதிகாலையில் எழுந்து பைபிளைத் திறந்து அன்றைய வாசகத்தை வாசித்து விட்டு,

 காலையில் ஆறு மணிக்கே நற்கருணை நாதரைச் சந்திக்கிறார்.

நேர் காணல் காலை பத்து மணிக்கு.

"ஆண்டவரே, நான் வேலைக்கு விண்ணப்பித்திருப்பது உமக்குத் தெரியும். நான் வேலை சம்பந்தமான நேர்காணலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.

நேர் காணலில் நான் வெற்றி பெறவும், வேலை கிடைக்கவும் எனக்கு உதவி செய்யும்."

நேர் காணப் போய்க் கொண்டிருக்கும் போது காலை எட்டு மணியளவில் ஒரு கார் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தது.

சிறிது விலகி தனது பைக்கை நிப்பாட்டி விட்டு காருக்குள் எட்டிப் பார்த்தார்.

காரை ஓட்டி வந்தவர் Wheelல் குப்புறப் படுத்திருந்தார்.

வேறு யாரும் காருக்குள் இல்லை.

இது எப்படி நிகழ்ந்தது அவரால் யூகிக்க முடியவில்லை.

கதவிலுள்ள கண்ணாடி திறந்திருந்தது.

அருகில் யாருமில்லை.

உடனே இவர் தன் பைக்கை ஒரு ஓரத்தில் நிப்பாட்டி விட்டு,

கதவுத் திறப்பு வழியே காருக்குள் ஏறி, படுத்திருந்தவரை கட்டப்பட்டு தூக்கி Driver seat ஓரமாக உட்கார வைத்து விட்டு காரை அருகிலிருந்த மருத்துவ மனைக்கு ஓட்டிச் சென்று, அங்கு நின்ற சிலர் உதவியுடன் படுத்திருந்தவரை மருத்துவ மனையில் admit செய்தார்.

மருத்துவர் வந்து அவரைக் காப்பாற்றி விட்டார்.

அவர் எழுமட்டும் அவர் அருகில் அமர்ந்திருந்தார்.

மணி ஒன்பது ஆகிவிட்டது.

நடந்ததை எல்லாம் அவரிடம் சொன்னார்.

அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

"தம்பி, கடவுளுக்கு நன்றி. உன் Bike ரோட்டோரம் கிடக்கிறது. நீ என் காரில் நேர் காணச் செல்."

இவர் காரில் சம்பந்தப்பட்ட அலுவலகம் செல்லும் போது மணி பத்தரை.

நேர் காணலில் கலந்து கொள்ள முடியவில்லை.

"ஆண்டவரே, உம்மால் நல்லது மட்டுமே செய்ய முடியும்.
ஆபத்தில் இருந்த ஒருவருக்கு உதவி செய்ய உதவியதற்கு நன்றி."

என்று கூறி விட்டு காரில் மருத்துவ மனைக்கு வந்து Car Driver டம் எல்லா விபரங்களையும் கூறிவிட்டு,

அவரோடு ரோட்டுக்கு வந்து பைக்கை எடுத்துக் கொண்டு நேரே கோவிலுக்குச் சென்று 

நற்கருணை நாதரைச் சந்தித்து நன்றி கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

பைபிளைத் திறந்து காலையில் வாசித்த வசனத்தை திரும்பவும் வாசித்தார்.

""அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்"

"ஆண்டவரே, என்ன நேர்ந்தாலும் என் நம்பிக்கையை இழக்க மாட்டேன்.

நீர் நல்லதை மட்டுமே செய்வீர்.
என்ன நேர்ந்தாலும் உமக்கு நன்றி கூறுவேன்."

இது நடந்த இரண்டாவது நாள் அவர் எதிர்பாராத வகையில் அவருக்கு ஒரு Courier post வந்தது.

திறந்து பார்த்தார்.

நியமன உத்தரவு.
(Appointment order)

அவர் வண்ணப்பிக்காத கம்பெனியிலிருந்து.

உதவி நிர்வாகியாக.

அவர் விண்ணப்பித்திருந்த கம்பெனி வாக்களித்ததிலிருந்து இரு மடங்கு சம்பளம்.

நற்கருணை நாதரைச் சந்தித்து நன்றி கூறிவிட்டு 

உத்தரவில் இருந்து விலாசத்திற்குச் சென்றார்.

நிர்வாகி நாற்காலியில் அமர்ந்திருந்தவர் அன்று மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற அதே நபர்.

"சார், நீங்களா!!"

"நானே தான். அமருங்கள்."

"நான் இதை எதிர் பார்க்கவில்லை.இறைவனுக்கு நன்றி, உங்களுக்கும் நன்றி."

"அன்று மருத்துவ மனையில் உங்களோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்த விபரங்ஙளின் அடிப்படையில் உத்தரவை அனுப்பினேன்.

அன்று என் மேல் கோபம் வந்ததா?"

"எதற்கு?"

"என்னால்தானே நீங்கள் விண்ணப்பித்த வேலை கிடைக்கவில்லை."

"உங்களால் அல்ல. கடவுளால். நடப்பதெல்லாம் அவரது சித்தப்படிதானே நடக்கும்.

நீங்கள் அவரது சித்தம் நிறைவேற அவர் பயன்படுத்திய கருவி.

எனக்கு நீங்கள் வேலை தருவீர்கள் என்று நம் இருவருக்கும் தெரியாது.

ஆனால் இது கடவுளின் நித்திய காலத் திட்டம்."

"அன்று காரில் நான் வந்து கொண்டிருந்த போது ஒரு மாதிரி வந்தது.

உடனை brake போட்டு வண்டியை நிறுத்தி விட்டு wheel ல் சாய்ந்து கொண்டேன்.

அப்புறம் என்ன நடந்தது என்று மருத்துவ மனையில் தான் தெரியும்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு மயக்கம் வரச் செய்தவர் கடவுள், உங்களை அனுப்பியவரும் கடவுள். இது உங்கள் நம்பிக்கை."

"சத்தியமாக. நம்மை ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வழி நடத்துபவர் அவர்தான்."

"நமது கம்பெனியையும் லாபகரமான முறையில் வழி நடத்த கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்."

"கடவுளுடைய திட்டம் நமக்கு உதவிகரமாகவே இருக்கும். கடவுளால் நல்லதை மட்டுமே செய்ய முடியும்."

கடவுளை‌ நம்புவோம்.

அவரால் நமக்கு நன்மையை மட்டுமே செய்ய முடியும் என்று நம்புவோம்.

நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

என்ன நடந்தாலும் நல்லதாகவே இருக்கும்.

லூர்து செல்வம்.