ஆ! என்ன ருசி!!
நம்முடைய ஒவ்வொரு எண்ணம், சொல் மற்றும் செயலுக்கும் ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.
நாம் உண்பது ஒரு செயல்.
எதற்காக உண்கிறோம்?
பதில் மிகவும் சிறியது.
நாம் வாழ்வதற்காக
நாம் உயிர் வாழ நமது உடல் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
நமது உடல் ஆரோக்கியமானதாக இருந்தால் நாம் நீண்ட நாள் வாழலாம்.
நமது உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது?
சத்துள்ள உணவை உண்பதன் மூலம்.
ஆனால் நாம் உண்ணும் போது நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.
நாம் ருசியாக உண்பதில்தான் குறியாக இருக்கிறோம்.
ருசியான உணவுகள் பல சமயங்களில் உடலுக்குக் கேடு விளைவிப்பவை என்பதை மறந்து விடுகிறோம்.
நாவினால் மட்டுமே ருசியை உணரமுடியும்.
ஆனால் உணவு நாவில் சில வினாடிகளே தங்குகிறது.
நாவிற்கு சிறிது ருசியை அளித்து விட்டு, சீரண உறுப்புகளை நோக்கி நகர்ந்து விடுகிறது.
அங்கு ருசிக்கு வேலையில்லை.
ஆனால் என்ன பொருள் உணவுக்கு ருசியைக் கொடுத்ததோ அதற்குதான் அங்கு வேலை.
அப்பொருள் பிரச்சினை அற்றதாக இருந்தால் அதனால் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் அது கேடு விளைவிப்பதாக இருந்தால் அதனால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது.
வழக்கமாக ருசி தரக்கூடிய பொருட்கள் இரசாயனப் பொருட்கள். (Chemicals) அவை நாவுக்கு ருசியை அளிக்கும். உடல் நலனைப் பாதிக்கும்.
நாம் நீண்ட நாள் வாழ விரும்புகிறோம். ஆனால் ருசிக்குக் காட்டும் ஆர்வத்தை ஆரோக்கியம் தரும் உணவுக்குக் காட்டுவதில்லை.
விளைவு?
நாம் உண்ணும் உணவு உடல் நலனைப் பாதிக்கிறது.
நம்மை நோய் நொடிகளுக்குள் தள்ளி விடுகிறது.
அப்புறம் அவற்றிலிருந்து வெளி வரவே வாழ்கிறோம்.
மீதி உள்ள நாட்களில் இரசாயனப் பொருட்களையே மருந்து என்ற பெயரில் சாப்பிடுகிறோம்.
அதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நோய்க்கான மருந்து side effects என்ற பெயரில் பல நோய்களுக்குக் காரணமாகிறது.
அப்புறம் நோயே நமது வாழ்க்கையாகி விடுகிறது.
அப்படியே ஆன்மீகத்துக்கு வருவோம்.
நாம் உலகில் வாழ்கிறோம். ஆனால் உலகுக்காக வாழ்வில்லை.
உலகம் நமக்குச் சொந்தமானதல்ல.
நாம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆனால் நீண்ட என்றால்?
உண்மையில் நீண்ட நாள் என்பதற்குப் பொருளேயில்லை.
ஐந்து ஆண்டுகளை விட பத்து ஆண்டுகள் நீளமானது.
பத்து ஆண்டுகளை விட இருபது ஆண்டுகள் நீளமானது.
இருபது ஆண்டுகளை விட ஐம்பது ஆண்டுகள் நீளமானது.
ஐம்பது ஆண்டுகளை விட எழுபது ஆண்டுகள் நீளமானது.
எழுபது ஆண்டுகளை விட எண்பது ஆண்டுகள் நீளமானது.
இப்படியே கூட்டிக் கொண்டே போகலாம்.
ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர் நீண்ட நாள் வாழவில்லை.
நாம் உலகில் வாழ்வதன் நோக்கம் நித்திய கால ( முடிவில்லாத) வாழ்வுக்கு நம்மைத் தயாரிக்க.
முடிவில்லாத வாழ்வு இவ்வுலகில் வாழ முடியாது.
விண்ணகத்தில்தான் வாழ முடியும்.
இவ்வுலக வாழ்வின் முடிவுதான் விண்ணக வாழ்வின் ஆரம்பம்.
ஆகவே இவ்வுலகில் நமது சிந்தனை, சொல், செயல் எல்லாம் விண்ணக வாழ்வையே நோக்கமாகக் கொண்டனவாக இருக்க வேண்டும்.
ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம்?
நாம் வாழும் இந்த உலகம் நிரந்தரமானது அல்ல என்பது தெரிந்தாலும்,
அது நிரந்தரமானது என்று நினைத்து தானே வாழ்கிறோம்.
இந்த உலகில் வாழ்வதற்காகத் தானே சாப்பிடுகிறோம்.
இந்த உலகில் வாழ்வதற்காகத் தானே உடற்பயிற்சி செய்கிறோம்.
இந்த உலகில் வாழ்வதற்காகத் தானே படிக்கிறோம்,
பட்டம் பெறுகிறோம்,
வேலை தேடுகிறோம்,
வேலை செய்து சம்பளம் வாங்குகிறோம்,
முடிந்தால் கிம்பளமும் வாங்குகிறோம்,
பணத்தைச் சேமித்து வீடு கட்டுகிறோம்,
சொத்து சேர்க்கிறோம்,
நோய் நொடிகள் வந்தால் நமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சேர்த்த சொத்தை எல்லாம் செலவழிக்கிறோம்.
நிரந்தரமற்ற உலகில்
அது நிரந்தரமானது போல வாழ்கிறோம்.
நிரந்தரமான மறுவுலக வாழ்வைப் பற்றி நினைக்கிறோமா?
நினைத்தால் இவ்வுலக வாழ்வைப் பற்றி கவலைப்படாமல் மறுவுலகிற்காக வாழ ஆரம்பித்திருப்போமே!
அப்படியானால்,
சாப்பிடக்கூடாதா?
படித்து பட்டம் பெறக்கூடாதா?
வேலை தேடக்கூடாதா?
சம்பளம் வாங்கக்கூடாதா?
பணம் சேமிக்க் கூடாதா?
வீடு கட்டக்கூடாதா?
நோய் நொடிகள் வந்தால் மருத்துவம் பார்க்கக் கூடாதா?
எல்லாம் செய்யலாம்.
செய்வதை எல்லாம் மறுவுலக வாழ்வுக்காகச் செய்ய வேண்டும்.
இவையெல்லாம் இவ்வுலக வாழ்வுக்கு உதவுவதற்காக செயல்பாடுகள்.
அவற்றை எப்படி மறுவுலக வாழ்வுக்காகச் செய்வது?
நாம் இவ்வுலகில் படைக்கப்பட்டது மறுவுலக வாழ்வுக்காக.
அதாவது, இவ்வுலகில் நாம் வாழ்வது மறுவுலக வாழ்வுக்காக.
அதாவது, நாம் உண்பது, உடுப்பது, உறங்குவது, படிப்பது, பட்டம் பெறுவது etc. etc. எல்லாம் மறுவுலக வாழ்வுக்காகத்தான்.
"இறைவா, நான் இந்த செயலை உமக்காக,
உமது அன்புக்காக,
உம்மோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக,
அதற்கு இடையூறாக இருக்கும் என் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுக்கிறேன்."
என்ற கருத்தோடு நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் நமது ஒவ்வொரு செயலும் ஒரு செபமாக மாறிவிடும்.
நாம் சுவாசிப்பது கூட நாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கும் காணிக்கையாகவும், செபமாகவும் மாறிவிடும்.
ஒரே வாக்கியத்தில் இறைவனுக்காக வாழும் வாழ்வே செபம் தான்.
நமக்காக நாம் வாழும் வாழ்வு நாவில் படும் தேன் போல் கொஞ்ச நேரமே ருசிக்கும்.
இறைவனுக்காக வாழும் வாழ்வு நித்திய காலமும் ருசிக்கும்.
வாழ்வோம் இறைவனுக்காக.
இறைவனுக்காக மட்டும்.
நமது வாழ்க்கை மூலம் இறைவனையே ருசித்துப் பார்ப்போம்.
"ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்."
(திருப்பாடல்கள் 34:8)
Taste and see how sweet the Lord is.
லூர்து செல்வம்.