Monday, June 30, 2025

இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.(தொடர்ச்சி)



இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.
(தொடர்ச்சி)

"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது." (அரு.15:5)

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

என்று சொன்ன இயேசு,

"நான் திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்.'' என்றும் சொல்கிறார்.

தந்தையின் பண்புகளை மக்களும் பெற்றிருப்பர்,

செடியில் இருக்கும் சத்துக்களைக் கொடிகளும் பெற்றிருக்கும்.

செடி வேர்கள் மூலமாக நிலத்திலிருந்து சத்துக்களை எடுத்து கொடிகள் மூலமாக கனிகளுக்கு அனுப்பும்.

கொடிகளில்தான் திராட்சை காய்த்துப் பழுக்கும்.

இறைமகன் இயேசு தனது சீடர்களின் மூலமாகத்தான், அதாவது, நமது  மூலமாகத்தான் தனது மீட்புச் செய்தியை உலகெங்கும் அறிவிக்கிறார்.

அவர் நம்முள்ளும், நாம் அவருள்ளும் இருந்தால் தான் நற் செய்தி அறிவிப்பு நடக்கும்.

நமது வாழ்வு = நற் செய்தி அறிவிப்பு.

வாழ்வு சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் கணம்.

சிந்தனையில் ஆரம்பத்து சொல் வழியாக செயலில் இறங்குவது தான் நற் செய்தி அறிவிப்பு வாழ்வு.

சிந்தனை என்றால் தியானம், எண்ணிப் பார்த்தல்.

தியானம் இன்றி ஆன்மீக வாழ்வு இல்லை.

துவக்க நிலையில் உள்ள ஆன்மீக வாழ்வுக்கு சாதாரண தியானம் போதும்.

ஆனால் ஆழமான ஆன்மீக வாழ்வுக்கு ஆழ்நிலைத் தியானம் (Contemplation) அவசியம்.

ஆழ்நிலைத் தியானம் தியானம் என்றால்?

கடலில் குளிப்பவர்கள் கடலில் இறங்கினால் போதும்.

ஆனால் முத்து எடுக்க விரும்புபவர்கள் கடலின் ஆழத்துக்கு மூழ்க வேண்டும்.

அப்படியே ஆழமான விசுவாசத்தின் அடிப்படையில் வாழ விரும்புவர்கள் ஆழ்நிலைத் தியானத்தில் இறங்க வேண்டும்.

சாதாரண தியானத்தில் ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வை நினைப்போம்.

ஆனால் ஆழ்நிலைத் தியானத்தில் நம்மில் வாழும் அனைத்துக்கும் ஆதி காரணரான மூவொரு தேவனை உற்று நோக்க வேண்டும்.

நமது எண்ணம் ஒரு புள்ளியில் குவிய வேண்டும்.

அந்தப் புள்ளி பரிசுத்த தம திரித்துவக் கடவுளாக இருக்க வேண்டும்.

நமது சிந்தனை இறைவனில் நூற்றுக்கு நூறு குவிந்து விட்டால் நமது மனதில் திரி ஏக கடவுள் மட்டும் இருப்பார்.

அவரைத் தவிர வேறு எந்த எண்ணமும் துளி கூட இருக்காது.

ஐம்புலன்கள் அனைத்தும் ஆண்டவரில் குவிந்திருக்கும்.

நமது கண்களுக்கு புறத்தில் உள்ள எதுவும் தெரியாது.

நமது காதுகளுக்கு வேறு யார் பேசினாலும் கேட்காது.

வாய்க்கு வேறு எந்த ஒரு வேலையையும் இல்லை.

உடலில் தொடுதல் உணர்வே இருக்காது.

யாரும் நம்மை அடித்தால் கூட அதை உணர மாட்டோம்.

கடவுள், கடவுள், கடவுள் மட்டும் தான் நம்மில் இருப்பார்.

நமது சிந்தனை முழுவதிலும் தம திரித்துவக் கடவுள் மட்டும் வாழ்வார்.

 நித்திய காலமும் தன்னை அறிந்து சிந்திக்கிற தந்தை,

 நித்திய காலமும் தந்தையின் சிந்தனையில் பிறக்கிற வார்த்தை, மகன்,

தந்தையும் மகனும் நித்திய காலமும் செய்கிற அன்பு 

ஆகிய கடவுள்  கடவுள் நம்மில் நிறைந்து வாழும்போது நமது ஐம்புலன்களுக்கு கடவுள் மட்டுமே தெரியும்.

நமது அகத்தில் மட்டுமல்ல புறத்திலும் முழுமையாக கடவுள் நிறைந்திருப்பார்.

எந்தப் பொருள் கண்ணில் பட்டாலும் அதில் கடவுள் தான் தெரிவார்.

யார் கண்ணில் பட்டாலும் அவரிலும் கடவுள் தான் தெரிவார்.

உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஆளிலும் கடவுள் தெரிவதால் நம்மால் எல்லா பொருட்களையும்,
பிராணிகளையும், மனிதர்களையும் நேசிக்க மட்டுமே முடியும்.

இறைவனையும், அவரால் படைக்கப் பட்டவர்களையும்
நேசித்து வாழ்வதே செபவாழ்வு.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆழ் நிலைத் தியானத்தில் ஈடுபட்டால்

உலகப் பொருட்களை அநாவசியமாக அழிக்க மாட்டோம்,

யாரையும் பகைக்க மாட்டோம்,

யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்.

புனித பிரான்சிஸ் அசிசி மிருகங்களையும், பறவைகளையும் கூட சகோதர, சகோதரிகளாகக் கருதினார்.

இயேசு தன்னை முத்தமிட்டு காட்டிக் கொடுத்த யூதாசைக் கூட "நண்பனே" என்று தான் அழைத்தார்.

நமது உள்ளத்தில் மட்டுமல்ல உலகிலும் இறைவன் நிறைந்திருப்பதால்

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் இறைவனுள், இறைவன் மூலமாகவே பார்ப்போம்.

இறைவன் மூலமாகவே பார்ப்பதால் படைப்புகளிலுள்ள‌ நன்மைகள் அனைத்தும் நமக்குத் தெரியும்.

அனைத்தையும் இறைவனில் இறைவனுக்காக நேசிப்போம்.

அன்பு மயமானவர் நம்மையும் அன்பு மயமானவர்களாக மாற்றி விடுவார்.

இனி அன்பு, அன்பு, அன்பு மட்டுமே நமது எல்லாமாக இருக்கும்.

அன்பு தான் செபம்.

நாமே செபமாக மாறிவிடுவோம்.

அதில் தானே பேரின்பம் இருக்கிறது.

செப வாழ்வு வாழும் போது விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே ஆரம்பித்து விடுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 29, 2025

இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.



இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.

"தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்."
(லூக்கா நற்செய்தி 10:42)

மார்த்தாள், மரியாள் வீட்டுக்கு இயேசு சென்றிருந்த போது மார்த்தாள் அவருக்கு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.

 மரியாள்    ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அதாவது ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருந்தாள். 

ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பது தான் செபம்.

நமது வீட்டில் சிறு பிள்ளைகள் தாயின் மடியில் அமர்ந்திருக்கும்.

அல்லது தாயின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்.

தெருவில் போய் விளையாடினாலும் அடிக்கடி வீட்டுக்குள் வந்து அம்மாவைப் பார்த்து விட்டு விளையாடப் போகும்.

அதாவது தாயின் பிரசன்னத்தில், சந்நிதியில் விளையாடிக் கொண்டிருக்கும்.

அதேபோல, நாம் கடவுளுடைய சந்நிதியில் வாழ்வது தான் செபம்.


எப்படி ஒரு குழந்தை தனது தாயின் சந்நிதியில் வாழ்கிறதோ

அப்படியே பிள்ளைகளாகிய நாம் நமது தந்தையாகிய இறைவன் சந்நிதியில் வாழ்வோம்.

அதுதான் செபம்.

செபம் இல்லாத வாழ்க்கை இயேசு இல்லாத பைபிள்.

Life without prayer is Bible without Jesus.

இயேசுவைப் பற்றியதுதான் நற் செய்தி. இயேசு இல்லாவிட்டால் அது வெறும் செய்தி.

செபம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.

உயிர் இல்லாத உடல்.

சிலர் செபத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை செபம் என்றால் இறைவனிடம் கேட்டல்.

அவர்கள் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறைவாக்கை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள். அது செபத்தின் ஒரு பகுதி.

நடக்க முடியாமலிருக்கும் போது ஊன்றுகோல் உதவுவது போல செபம் உதவுகிறது என்பது அவர்கள் எண்ணம்.

Some people wrongly think that prayer is a support system which is used when we  can no longer help ourselves

அவர்கள் கட்டங்கள் வரும் போது மட்டும் கடவுளைத் தேடுவார்கள்.

கடவுளைத் தேடுவது செபம் அல்ல.  கடவுளில் வாழ்வதுதான் செபம். 

சர்வ வல்லமை வாய்ந்த, சர்வ ஞானமுள்ள கடவுளில், கடவுளோடு வாழும் போது நாம் ஏன் உதவியைத் தேட வேண்டும்?

நடந்து செல்பவன் வேகமாகச் செல்ல காரைத் தேட வேண்டும்.

காரில் பயணிப்பவன் எதைத் தேட வேண்டும்?

கடவுளில் வாழ்பவன் தன் தேவைகளை நினைத்தாலே போதும்.

நமது நினைவுகளை அறியும் கடவுள் அவற்றை நிவர்த்தி செய்வார்.

செபம் உதவி கேட்கும் கருவி அல்ல. உதவி செய்பவருக்குள் வாழ்வதுதான் செபம்.

அநேகர் காலை செபம், இரவு செபம், செபமாலை, திருப்பலி ஆகியவற்றை மட்டுமே செபம் என்று நினைக்கிறார்கள்.

எல்லாவற்றையும் சேர்த்தாலே ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தான் ஆகும்.

ஆனால் 24 மணி நேரமும் செப நேரம்தான். சுவாசிப்பது தொடங்கி தூங்குவது ஈறாக அனைத்து செயல்களும் செபம் தான்.

இறைவன் எங்கும் இருக்கிறார். அனைத்தும் அவருக்குள் நடைபெறுகின்றன.

நாம் செய்யும் அனைத்தும் நமது சம்மதத்துடன், உணர்வு பூர்வமாக நடைபெறும் போது செபம்.

 வெறுமனே வாழ்வது
 மிருகங்களுடைய வாழ்க்கைக்குச் சமம்.

மிருகங்களால் செபம் செய்ய முடியாது.

இறைவன் சர்வ வல்லபர், நாம் ஒன்றுமில்லாதவர்கள்.

இயேசு நம்மை இறைவனை நோக்கி, "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே!" என்று அழைக்கச் சொன்னார்.

இயேசுவின் அருளால் ஒன்றுமில்லாத நாம் தந்தை இறைவனின் பிள்ளைகளாகும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்கச் சொன்ன கடவுள் தன்னை நேசிப்பது போல நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.

அவரது நேசத்தினால் நாம் அவருடைய பிள்ளைகள் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.

 "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

இது நமது ஆண்டவரின் அறிவுரை.

ஆற்றுத் தண்ணீரின் அளவு கடல் நீரின் அளவை விடக் குறைவாக இருந்தாலும் ஆறு கடலில் கலக்கும் போது அது கடல் நீரோடு ஒன்றித்து விடுவது போல 

நிறைவில்லாத நாம் நிறைவான இறைவனோடு ஒன்றிக்கும் போது நமது நிறைவின்மை இறைவனின் நிறைவோடு ஒன்றித்து விடுகிறது.

நாம் இறைவனோடு ஒன்றிப்பது தான் செபம்.

ஒன்றித்து வாழ்வது செப வாழ்வு.

(தொடரும்)

லூர்து செல்வம்

Saturday, June 28, 2025

''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு நற்செய்தி 16:18)



''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு நற்செய்தி 16:18)

" நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது,

சீமோன்  மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;(பாறை)  இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 
.
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"

 என்று கூறி சீமோன்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் படுவார் என்பதை முன்னறிவிக்கிறார். 

பேதுரு என்றால் இராய் (பாறை).
தமிழில் பேதுருவை இராயப்பர் என்று அழைக்கிறோம்.

"உன் பெயர் பேதுரு; (பாறை)

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

இதை விடத் தெளிவாக யாரும் கூற முடியாது.

ஆனால் பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுப்பதில் நமது பிரிவினை சகோதரர்கள் கில்லாடிகள்.

அவர்கள் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.

பாப்பரசரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் அவரவர்கள் தங்களைத் தாங்களே தலைவர்களாக நியமித்துக் கொள்வதால் தான் இன்று 40,000க்கும் மேற்பட்ட பிரிவினை சபையினர் உலகெங்கும் பரவிக்கிடக்கிறார்கள்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள்.

இயேசு பாடுகள் படுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

அவர்களிடம் குருக்களும், திருப்பலியும், திவ்ய நற்கருணையும் கிடையாது.

இயேசு உலகுக்கு வந்தது நமது பாவங்களை மன்னிக்க.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

ஆனால் பிரிந்து சென்றவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் கிடையாது.

பாப்பரசரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ விரும்பாத ஒரு சிலர், சபையை விட்டு வெளியேறி, தங்களை Pastor என அறிவித்துக் கொண்டு செபக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

செபக் கூட்டங்களின் தலையாய நோக்கம் காணிக்கை வசூலிப்பது.

நம்மவர்களில் சிலர் நமது திருப்பலியில் கலந்து கொள்வதோடு பிரிந்து சென்றவர்களின் செபக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் அங்கேயும் இயேசு தானே இருக்கிறார் என்பார்கள்.

திருப்பலியும், திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்தில் இயேசு எப்படி இருப்பார்?

நற் செய்தி அறிவிப்பவர்கள் இயேசுவின் சீடர்களின் நேரடி வாரிசுகளா இருக்க வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் திருப்பலி நிறைவேற்ற முடியாது, பாவ சங்கீர்த்தனம் கேட்க முடியாது.

திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்திற்கு வேறு எதற்காக இயேசுவைப் பின்பற்றுபவர்கள் போகிறார்களோ தெரியவில்லை.

கடன் தொல்லை தீரும், வருமானம் அதிகரிக்கும், வியாதி வருத்தமெல்லாம் நீங்கும் என்று ஆசை வார்த்தை காட்டி மக்களைத் தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள் Pastors.

ஆனால் இயேசு அப்படி வாக்களிக்கவில்லை.

"என்னைப் பின்பற்றுபவர்கள் நான் சுமந்தது போல் தங்கள் சிலுவைகளைச் சுமந்து வர வேண்டும்" என்றுதான் கூறியுள்ளார்.

இராயப்பராகிய பாறை மேல் கட்டப்பட்ட திருச்சபையின் வழி காட்டுதலின்படி வாழ்வோம்,

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

Friday, June 27, 2025

"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."(மத்தேயு நற்செய்தி 8:8)



"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."
(மத்தேயு நற்செய்தி 8:8)

நாம் திவ்ய நற்கருணை நாதரை நாவில் உணவாக வாங்குமுன் செய்யும் செபம் இந்த வசனம் தான்.

சிந்தித்துச் சொல்கிறோமா, அல்லது,  வாயினால் மட்டும் சொல்கிறோமா?

நாம் அடிக்கடி சொல்லும் செபங்கள் மனப்பாடமாகி விடுவதால் சொல்ல ஆரம்பித்தவுடன் வாய் மடமடவென்று சொல்லி விடும்,
ஆரம்பக் கல்வி மாணவர்கள் வாய்பாடு சொல்வது போல.

ஒரு சிறுவனிடம் "ஆறெட்டு எத்தனை" என்று கேட்டால்,

அவன், "ஓரெட்டு எட்டு" என்று ஆரம்பிப்பான்.

அது வாய் பாடு!

செபம் உள்ளத்திலிருந்து வர வேண்டும்,  உதட்டிலிருந்து மட்டும் அல்ல.

உள்ளத்திலிருந்து வந்தால் உள்ளம் , "நான் எப்படித் தகுதியற்றவன்?" என்று சிந்திக்கும், தியானிக்கும்.

''இயேசு அளவில்லாத விதமாய் பரிசுத்தமானவர். என்னால் அந்த அளவுக்கு பரிசுத்தமாக முடியாது.

ஆனாலும் இயேசு தனது அளவு கடந்த இரக்கத்தின் காரணமாக, தனது சிலுவை மரணத்தின் மூலம் தகுதி இல்லாத என்னை தகுதியானவனாக ஏற்றுக் கொண்டு என்னிடம் வருகிறார்.

நமது பாவங்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவரே ஏற்றுக் கொண்டு அதற்காக சிலுவையில் மரித்தார்.

தனது தவறான நடத்தையால் பிள்ளை என்ற தகுதியை இழந்த பிள்ளையைத் தாய் தன் அன்பின் காரணமாக பிள்ளையாக ஏற்றுக் கொள்வது போல

தகுதி இல்லாத நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்கிறார்."

தியானத்தின் மூலமாக இந்த உண்மையை அறிந்து கொண்ட நாம் இயேசு ஏற்றுக் கொண்ட தகுதியை இழக்காமல் இருக்க,

அதாவது, பாவம் செய்யாது வாழ முயற்சி செய்வோம்.

அடுத்து நாம் இயேசுவை நினைக்கும் போதெல்லாம் நமது பாவங்களுக்காக மனத்தாபப்படுவோம்.

இயேசுவை நினைக்கும் போதெல்லாம், 

"ஆண்டவரே, உமது மன்னிப்பை பெற நான் தகுதி அற்றவன்.  ஆயினும் உமது இரக்கத்தின் காரணமாக, என்னை மன்னியும். 

தகுதியற்ற என்னை தகுதி உள்ளவனாக மாற்றும்."
என்று வேண்டுவோம்.

திருப்பலியின்போது மட்டுமல்ல வீட்டுக்கு வந்த பின்னும் இயேசுவின் ஞாபகமாகவே இருப்போம். 

நூற்றுவர் தலைவன் இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே  தன் பையன் குணமாவான் என்று உறுதியாக விசுவசித்தான். 

அந்த விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா? 

நமது வேண்டுதல் உறுதியாக நிறைவேறும் என்று விசுவசிக்கிறோமா? 

விசுவசித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிறாமல் 
இயேசுவின் விருப்பப்படி வாழ்வதில் அதிக கவனம் செலுத்துவோம். 

நமது விருப்பம் நிறைவேறுவதில் காட்டும் ஆர்வத்தை விட இயேசுவின் விருப்பம் நிறைவேறுவதில் அதிக ஆர்வம் காட்டுவோம்.

நமக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்வோம்.

மனிதன் தான் செய்த பாவத்தினால் இறைவனைத் தந்தை என்று அழைக்கும் தகுதியை இழந்து விட்டான். 

ஆனாலும் இறைவன் தனது அன்பின் மிகுதியால் மனிதனாகப் பிறந்து மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னைத்தானே பலியாக்கி

பிள்ளை என்று ஏற்றுக்கொள்ளப் பட தகுதியற்ற நம்மை பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.

நாம் பாவத்தை விலக்கி, கிடைத்த தகுதியை தக்க வைத்துக் கொள்வோம். 

லூர்து செல்வம்

Thursday, June 26, 2025

"அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்.15:7)


"அதுபோலவே மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." (லூக்.15:7)

ஒரு டாக்டருக்கு எப்போது அதிகமான மகிழ்ச்சி ஏற்படும்?

பரிபூரண சுகமாக இருக்கும் அவருடைய மனைவி மக்களைப் பார்க்கும் போது ஏற்படும் 
மகிழ்ச்சியை விட 

அவருடைய மருத்துவ மனையில் மிகவும் சுகமில்லாமல் இருந்த ஒரு நோயாளி சுகமாகும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

ஏனெனில் அவருடைய பணி நோயாளிகளைக் குணமாக்குவது.

ஒரு ஆசிரியர் எப்போது அதிக மகிழ்ச்சி அடைவார்?

நன்கு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,

பள்ளித் தேர்வுகளில் வெற்றியே பெறாத ஒரு மாணவன் பொதுத் தேர்வில் 35 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறும் போது ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

படிப்பே வராத மாணவர்களுக்கு தான் ஆசிரியர் அத்தியாவசியம்.

தொடர்வதற்கு முன் படைப்பின் அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடவுளுக்கு எல்லாம் தெரியும், நித்திய காலமாகத் தெரியும்.

கடவுள் நித்திய காலமாக இருக்கிறார், 

உலகமும், மனுக்குலமும் படைக்கப்பட்டன. .

அவற்றைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் இறைவன் மனதில் நித்திய காலமாக இருந்தது.

மனிதனை பாவம் அற்ற பரிசுத்த நிலையில் தான் படைத்தார். 

ஆனால் மனிதன் பாவம் செய்வான் என்பது கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

பாவம் செய்த மனிதனை பாவத்திலிருந்து மீட்க 
தான் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதும் அவருடைய நித்திய காலத் திட்டம்.

இந்த அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு தான் இறை வசனத்தைத் தியானிக்க வேண்டும்.


"மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்கள்" யார்"

இயேசுவையும், அன்னை மரியாளையும் தவிர மற்ற அனைத்து மனிதர்களும் சென்மப் பாவத்தோடு உற்பவித்தவர்கள்தான் தான்.

இயேசு கடவுள், பாவம் செய்ய முடியாதவர்.

அன்னை மரியாள் கடவுளின் விசேச சலுகையால் சென்மப் பாவம் இன்றி உற்பவித்தாள்.

ஆனால் அன்னை மரியாளும் மனுக்குலத்தைச் சேர்ந்தவள்தான். மீட்கப்பட வேண்டியள்தான்.

இயேசு தனது சிலுவை மரணத்தின் மீட்புப் பலனை மரியாளுக்கு முன்கூட்டியே கொடுத்து அவளைச் சென்மப் பாவம் இன்றி உற்பவிக்கச் செய்தார்.

"Jesus applied the redemptive benefits of His cross-death to the Virgin Mary in advance, causing her to be conceived without original sin."

ஆகவே அன்னை மரியாள் உட்பட அனைத்து மனிதர்களையும் மீட்கவே இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

ஆன்மீக ரீதியாக அனைத்து மனிதர்களும் பாவிகள் தான்.

ஆகவே மீட்பு அனைவருக்கும் அத்தியாவசியம்.

அனைவருக்கும் நற் செய்தி அறிவிக்கப் படுகிறது.

1. நற் செய்தியை ஏற்று மனம் திரும்பி திரு முழுக்குப் பெற்று பாவ மாசு இல்லாமல் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

2.மனம் திரும்பாதவர்களும் இருக்கிறார்கள்.

3.திரு முழுக்குப் பெற்றாலும் பாவ வாழ்க்கை வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.

இவர்களில் முதல் வகையினர் நேர்மையாளர்கள்.

ஒரு முறை மனம் திரும்பிய பின் நேர்மையாக வாழ்பவர்கள்.

தொடர்ந்து நேர்மையாக வாழ வேண்டும்.

திரும்பவும் மனம்திரும்ப வேண்டிய அவசியம் இல்லை.

பாவத்தில் விழ நேரிட்டால் மனம் திரும்ப வேண்டும்.

பாவத்தில் விழாமல் தொடர்ந்து நேர்மையாக வாழ வேண்டும்.

அடுத்த இரு வகையினரும் மனம் திரும்ப வேண்டிய பாவிகள்.

இவர்கள் மேல் கடவுள் அதிக அக்கரை காட்டுகிறார்.

இயேசுவின் சீடர்கள், குருக்கள், அவர்களை அடிக்கடி சென்று பார்த்து அவர்களை மனம் திருப்ப முயற்சி செய்கிறார்கள்.

முயற்சி வெற்றி பெற்று அவர்கள் மனம் திரும்பினால் அதனால் மோட்சத்தில் ஏற்படும் மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கும்.

நேர்மையாளர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட மனம் திரும்பியவர்களால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகமானதாக இருக்கும்.

ஒரு பெற்றோருக்கு ஐந்து பிள்ளைகள்.  நான்கு பேர் நல்ல சுகமாக இருக்கிறார்கள்.

ஒருவன் ஒரு விபத்தில் மாட்டி சாகக் கிடக்கிறான்.

மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறான்.

டாக்டர்கள் முயற்சியால் பிழைத்துக் கொண்டான்.

பெற்றோருக்கு பிரச்சினை இல்லாத பிள்ளைகளால் ஏற்படும் மகிழ்ச்சியை விட சாகாமல் பிழைத்துக் கொண்டவனால் ஏற்படும் மகிழ்ச்சி  அதிகமாக இருக்கும்.

அதேபோல்தான் ஏற்கனவே பரிசுத்தவான்களாக இருப்பவர்களால் ஏற்படும் மகிழ்ச்சியை விட பாவிகளாயிருந்து பரிசுத்தவான்களாக மாறியவர்களால் மோட்சத்தில் அதிக மகிழ்ச்சி ஏற்படும்.

ஆகவே தான் இயேசு,

 "நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 5:32)

நாம் பாவிகள். நம்மைத் தேடித்தான் இயேசு உலகுக்கு வந்தார்.

நாம் மனம் திரும்பி பரிசுத்தவான்களாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்துடன் பரிசுத்த திருச்சபையை நிறுவினார்.

நமது குருக்களுக்கு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார்.

ஏழு தேர்வுத் திரவிய அனுமானங்களில் இரண்டு பாவமன்னிப்புக்கானவை.

திருமுழுக்கு தான் நமது சென்மப் பாவத்தை மன்னித்து நம்மைத் திருச்சபையின் உறுப்பினர்கள் ஆக்குகிறது.

திருமுழுக்கு பெற்ற பின் நாம் செய்யும் பாவங்களுக்குப் மன்னிப்புப் பெறவே பாவ சங்கீர்த்தனம்.

குளிப்பது எதற்கு?

உடலில் ஒட்டியுள்ள அழுக்கு போவதற்கு.

தினமும் காலையில் குளிக்கிறோம், இரவில் வியர்வை மூலமாக வெளி வந்த அழுக்கைப் போக்குவதற்கு.

மாலையில் குளிக்கிறோம், அல்லது கால், கை, முகத்தைக் கழுவுகிறோம், நாம் வெளியே சென்று வரும்போது உடலில் ஒட்டும் அழுக்கைப் போக்குவதற்கு.

சாப்பிட்டவுடன் கை கழுவுகிறோம்.

உடல் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குக் காட்டும் அக்கறையை ஆன்மா சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்குக் காட்டுகிறோமா?

காலையில் எழுந்தவுடனும், இரவில் படுக்கப் போகுமுன்னும் நமது பாவங்களுக்காக மனத்தாபப் படுகிறோமா?

ஆன்மா சாவான பாவ நிலையில் இருந்தால் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

எதற்காக ஒவ்வொரு பங்கிலும் ஒரு பங்குக்குரு இருக்கிறார்?

பள்ளிக்கூடத்தை மேற்பார்வை இடுவதற்கா?

இயேசு அதற்காக உலகுக்கு வரவில்லை, அதற்காக குருத்துவத்தை ஏற்படுத்தவில்லை.

இயேசு நமது பாவங்களை மன்னிக்கவும், நமக்காகப் பலியாகவும் உலகுக்கு வந்தார்.

குருத்துவத்தின் நோக்கமும் அதுதான்.

பங்கு மக்களின் பாவங்களை மன்னிக்க வேண்டும், பாவங்களுக்குப் பரிகாரமாக திருப்பலி ஒப்புக் கொடுக்க வேண்டும்.

திருப்பலிக்குப் போகிறோம், பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

சாவான பாவ நிலையில் திவ்ய நற்கருணை அருந்தக் கூடாது.

சாவான பாவ நிலையில் உள்ளவர்கள் பாவ சங்கீர்த்தனம் செய்தபின் தான் நற்கருணை நாதரை உணவாகப் பெறலாம்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும் என்று திருச்சபை கூறுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை.

தேவைப்படும் போதெல்லாம் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

அற்பப் பாவம் இருந்தாலும் பாவ சங்கீர்த்தனம் செய்யலாம்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்பவர்களின் ஆன்மா மிகவும் பரிசுத்தமாக இருக்கும்.

திருச்சபை நமக்குக் குருக்களைத் தந்திருப்பது நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்கும், பாவங்களுக்குப் பரிகாரமாக திருப்பலி நிறைவேற்றுவதற்கும்தான்.

நமது குருக்களை நாம் பாவ மன்னிப்புப் பெற பயன்படுத்தியிருக்கிறோமா,

அல்லது கோயில் கட்டவும், பள்ளிக்கூடத்தில் வேலை வாங்கவும், 
விழாக்கள் கொண்டாடவும் மட்டும் பயன்படுத்தியிருக்கிறோமா?

நாம் ஒவ்வொரு முறை பாவ சங்கீர்த்தனம் செய்யும்போதும் விண்ணகத்தில் நம் பொருட்டு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

லூர்து செல்வம்

Wednesday, June 25, 2025

" என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்." (மத்தேயு நற்செய்தி 7:21)



"என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்."
(மத்தேயு நற்செய்தி 7:21)

செபம் என்றால் என்ன என்ற கேள்விக்கு சரியான விடை மேற்படி வசனம்.

வெறுமனே வார்த்தைகளை வாயினால் உச்சரிப்பது மட்டும் செபம் அல்ல.

இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்வது மட்டும் செபம் அல்ல.

நம்மில் பலர் அதைத்தான் செய்கிறோம்.

இயேசுவை அழைக்கிறோம், தேவையானதைக் கேட்கிறோம்.

இது செபத்தின் ஒரு பகுதி.

முழுமையான செபம் அல்ல.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வதுதான் செபம்.

சிந்தனை, சொல், செயல் மூன்றும் 
சேர்ந்திருப்பதுதான் செபம்.

சிந்தனை -- தியானம்.
சொல் ----------வார்த்தைகள்.
செயல் --------- வாழ்க்கை.

நாம் வார்த்தைகளால் மட்டுமே செபிக்கிறோம்.

செபமாலையை எடுத்துக் கொள்வோம்.

1. தேவ ரகசியங்களைத் தியானிக்க வேண்டும்.

2.விசுவாசப் பிரமாணம் 
தமதிரித்துவ தோத்திரம்,
 கர்த்தர் கற்பித்த செபம், 
மங்கள வார்த்தை செபம் ஆகியவற்றை வாயினால் சொல்ல வேண்டும்.

3. சிந்தனையில் தியானித்ததை வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு,

துக்க தேவ ரகசியங்களைத் தியானித்த படி வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்று, அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.

நாம் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் தந்தையின் விருப்பம். 

சிந்தனையாலும், வார்த்தைகளாலும், வாழ்க்கையாலும் செபிப்பதுதான் செபம்.

இம்மூன்றில் ஒன்று குறைந்தால் கூட அது முழுமையான செபம் அல்ல.

நாம் தியானிக்கிறோம். சொல்கிறோம்.
வாழ்கிறோமா?

கர்த்தர் கற்பித்த செபத்தில் முதல் பகுதியில் இறைவனைப் புகழ்கிறோம்.

இரண்டாவது பகுதியில் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம்.

வேண்டியதைக் கேட்கும் போதே நாம் எப்படி வாழ்வோம் என்பதை இறைவனிடம் சொல்கிறோம்.

1. ஒவ்வொரு நாளும் கிடைப்பதில் அன்றைக்குத் தேவையானது போக மீதியை சேமித்து வைக்காமல் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வோம். எங்கள் அன்றாட தேவைகளை நீரே பூர்த்தி செய்வீர் என்று உறுதியாக நம்புகிறோம்.

2. எங்களுக்கு விரோதமாக ஏதாவது தவறு செய்தவர்களை மன்னிக்கிறோம். தந்தையே! உமக்கு விரோதமாக நாங்கள் செய்த பாவங்களை மன்னியும்.

3. நாங்கள் சோதனையில் விழாமல் வாழ பாவ சந்தர்ப்பங்களை தவிர்ப்போம்.
தந்தையே, அதற்கு எங்களுக்கு உதவும்.

4. உமது உதவியுடன் தீமையிலிருந்து மீட்கப்படுவோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செபமும் நமது வாழ்க்கையோடு இணைந்ததாக இருக்க வேண்டும்.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்வதுதான் உன்னதமான செபம்.

லூர்து செல்வம்

Tuesday, June 24, 2025

"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"



 "கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

 இவை பாப்பரசர் 14ஆம் லியோ அவரைச் சந்தித்த மக்களிடம் கூறிய வார்த்தைகள்.

"God can work in our lives, through our lives, and through us reach out to other people," the pope told the assembled crowd.

(https://www.facebook.com/share/p/1ENT4Xm3Ek/?mibextid=xfxF2i)

கடவுள் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.

தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் தனது சாயலை நமக்குத் தந்தார்.

கடவுள் அன்பு மயமானவர். நித்திய காலமாக அவர் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை அன்பு செய்வது மட்டும் தான்.

தனது அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டதன் மூலம் நம்மையும் அன்பு செய்பவர்களாகப் படைத்தார்.

பாவம் உலகிற்குள் நுழையுமுன் மனிதர்கள், 

அதாவது நமது முதல் பெற்றோர்,

 இறைவனை அன்பு செய்தார்கள்,  தாங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்தார்கள்.

 கடவுளை விட விலக்கப்பட்ட கனியை அதிகமாக அன்பு செய்த வினாடி பாவம் நுழைந்தது.

அன்பு இருந்தது, ஆனால் திசை மாறிவிட்டது.

பாவத்திற்கு முன் கடவுளோடு நடந்தவர்கள் பாவத்திற்குப் பின் அவரைப் பார்த்தவுடன் ஒழிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

மனிதனிடமிருந்த இறைவனின் சாயல் என்ன ஆயிற்று?

பழுதடைந்து விட்டது.


காலையில் கண்ணாடி முன் நின்று பவுடர் போட்டு அழகு படுத்தப்பட்ட முகம் 

தெருவுக்கு வந்தவுடன் தெரு மண்ணை அள்ளி வரும் காற்று பவுடர் போட்ட முகத்தில் மண்ணை அப்பிய பின் முகம் எப்படி இருக்கும்,

 அப்படி ஆகிவிட்டது மனித ஆன்மா.

பழுதடைந்த சாயலை மீட்டுத் தர,  

அதாவது, ஆன்மா இழந்த இறை அன்பை மீண்டும் கொடுத்து 

இறைவனோடு நமக்கு இருந்த உறவைப் புதிப்பிக்க இறைமகன் மனுமகனாகப் பிறந்தார்.

திரு முழுக்கு பெற்றவுடன் நாம் பாவத்தால் பழுது படுத்திய இறைச் சாயலை மீண்டும் முழுமையாகப் பெற்றோம்.

"உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்"

"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை." இவை‌ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகள்.

ஆகவேதான் "நானே உலகின் ஒளி" என்று கூறிய ஆண்டவர்,

"நீங்கள் உலகின் ஒளி" என்றும் கூறினார்.

ஆனால் 

''நானே வழி" என்று கூறிய ஆண்டவர் 

"நீங்களே வழி" என்று கூறவில்லை.

தந்தையிடம் செல்ல அவர் மட்டும்தான் வழி, ஏனெனில் அவர்தான் உலக மீட்பர்.

ஆனாலும் வேறொரு பொருளில் நாம் ஒவ்வொருவரும் 

"நான் வழி" என்று கூறலாம்.

என்ன பொருளில்?

"கடவுள் நம் வாழ்வில், நம் வாழ்வின் மூலம், மற்றும் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

 என்று பாப்பரசர் 14ஆம் லியோ கூறுகிறார்.


"கடவுள் நம் வழியாக மற்றவர்களைச் சென்றடைய முடியும்,"

இயேசு உலகெங்கும் நற் செய்தியை அறிவிக்க அவரது சீடர்களைத்தான் அனுப்பினார்.

சீடர்களின் வழியாகத்தான் இயேசு உலகெங்கும் சென்றார்.

சீடர்கள் தங்கள் வாய் மொழிப் போதனை மூலமும், தங்கள் நற்செய்தி வாழ்க்கை மூலமும் இயேசுவை மக்களுக்கு அளித்தார்கள்.

இன்று நாம் இயேசுவின் சீடர்கள்.

நமது முன்மாதிரியான வாழ்வின் மூலம், 

அதாவது நம் வழியாக கடவுள் மற்றவர்களைச் சென்றடைகிறார். 

இயேசுவை அறியாதவர்கள் நம் வழியாக அறிய வேண்டும்.

நாம் சொல்வதைக் கேட்டும், நாம் வாழ்வதைப் பார்த்தும் மற்றவர்கள் இயேசுவை அறிய வேண்டும்.

"இவன் கிறிஸ்தவன், கிறிஸ்துவைப் போல் வாழ்கிறான்.

நாமும் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டுமென்றால் இவனைப் போல் வாழ வேண்டும்." என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும்.

குடிகாரன் வாயிலிருந்து வரும் நாற்றத்தை வைத்து அவன் குடிகாரன் என்பதைக் கண்டு கொள்ளலாம்.

நாம் வாங்கிக் கொடுத்த பௌடரின் வாசத்தை வைத்து மனைவி வருவதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு கையில் புத்தமும் இன்னொரு கையில் பிரம்பும் இருப்பதைப் பார்த்து இவர் ஒரு ஆசிரியர் என்பதை   அறிந்து கொள்ளலாம்.

ஒருவரது இரக்க குணத்தையும், உதவி செய்யும் மனப்பாங்கையும் வைத்து இவர் கிறித்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பகைவரை நேசித்தல்,
 தீமைக்கு நன்மை செய்தல், குற்றம் செய்பவர்களை மன்னித்தல், 
துன்ப நேரத்திலும் முக மலர்ச்சியாக இருத்தல்

போன்ற குணங்கள் நம்மிடம் இருந்தால் நாம் சொல்லாமலே நாம் கிறிஸ்தவர்கள் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

இவ்வாறு நமது வாழ்வின் வழியாக நாம் இயேசுவை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.

நம்மிடம் யார் வழியாக இயேசு வருகிறார்?

நம்முடைய பங்குக் குருவானவர் வழியாக.

திருப்பலியில் போது குருவானவர் "இது என் சரீரம்" என்று சொல்லும் போது அப்பம் இயேசுவின் உடலாக மாறுகிறது.

"இது என் இரத்தம்" என்று சொல்லும் போது திராட்சை இரசம் இயேசுவின் இரத்தமாக மாறுகிறது.

குருவானவர் கையிலிருந்து தான் இயேசு நமது ஆன்மீக உணவாக வருகிறார்.

குருவானவர் மூலமாகத்தான் இயேசு நமது பாவங்களை‌ மன்னிக்கிறார்.

காலையில் திருப்பலியில் இயேசுவைப் பெற்ற நாம் நாள் முழுவதும் அவரை வாழ வேண்டும்.

நமது வாழ்க்கை மூலமாகத்தான் 
இயேசுவின் சாயலை நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் பார்ப்பார்கள்.

 பார்த்து அவரைத் தேடி வருவார்கள்.

வருகிறவர்களுக்கு நாம் இயேசுவைக் கொடுக்க வேண்டும்.

இயேசு மக்களிடம் வர  வழியாக நாம் வாழ்வோம்.


லூர்து செல்வம்.