Tuesday, July 2, 2024

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."(மத்தேயு.9:2)

"அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், "மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."
(மத்தேயு.9:2)

இறைமகன் இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நம்மை மீட்பதற்காக மனிதனாகப் பிறந்தார்.

அவர் உலகுக்கு வந்ததன் நோக்கம் பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு.

புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்க வேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல.

பாவ மன்னிப்பில் தான் மீட்பு அடங்கியிருக்கிறது, உடல் நோய்களிலிருந்து விடுதலை பெறுவதில் அல்ல.

அப்படியானால் ஏன் அவர் தனது பொது வாழ்வில் சென்ற இடமெல்லாம் புதுமைகள் செய்து மக்களின் நோய்களைக் குணமாக்கினார்?

ஆன்மீக மீட்புக்கான அடிப்படைகளைப் போடுவதற்காக.

கட்டடம் கட்டுமுன் அதற்கான அடிப்படையைப் போடுகிறோம்.

அடிப்படையின் மேல் தான் கட்டடம் நிற்கும்.

மேல் நோக்கிக் கட்டடம் கட்ட ஏன் கீழ் நோக்கித் தோண்டுகிறோம்?

அடிப்படைக்காக.

மீட்புக்கான ஆன்மீக வாழ்வின் அடிப்படை விசுவாசம், நம்பிக்கை, இறையன்பு.

இதற்கும் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்குவதற்கும் என்ன சம்பந்தம்?

நோய்களைக் குணமாக்கும் ஒவ்வொரு முறையும் இயேசு சொன்னார்,

" உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

குணமாக்கியவர் இயேசு.

தன்மீது விசுவாசம் உள்ளவர்களைக் குணமாக்குகிறார்.

உண்மையான விசுவாசம் இருக்கும் இடத்தில் தான் நம்பிக்கையும், இறையன்பும் இருக்க முடியும்.

நோய்களைக் குணமாக்கியதன் நோக்கமே இந்த மூன்று புண்ணியங்களையும் மக்களிடையே வளர்ப்பது தான்.

ஒவ்வொரு நோயாளியைக் குணமாக்கும் போதும் அவனுக்குள் இம்மூன்றும் விதைக்கப்படும்.

படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவிலும் இறைவன் அவரது தூண்டுதல் (Inspiration) மூலம் இறைவன் செயல்புரிந்து கொண்டிருக்கிறார்.

முதலில் நமது ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுவார்.

நாம் தூண்டுதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக் கொள்பவர்கள் அவரை விசுவசிப்பர்.

பாவம் தவிர மற்ற அனைத்து ஆன்மீக செயல்பாடுகளுக்கும் காரணர் கடவுள் தான்.

ஆக நோயாளிகளின் ஆன்மாவில் விசுவாசத்தைத் தூண்டுகிறார்.

அதை ஏற்றுக் கொள்வர்கள் அவரைத் தேடி வருவார்கள்.

முடக்குவாதன் குணமான புதுமையை எடுத்துக் கொள்வோம்.

"சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர்.

 இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு முடக்குவாதமுற்றவரிடம், 

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்."

ஆக நோயாளியும், அவனைக் கொண்டு வந்தவர்களும் கடவுளின் விசுவாசத் தூண்டுதலை ஏற்றுக் கொண்டு, விசுவாசத்தோடு அவரைத் தேடி வருகிறார்கள்.

விசுவாசத்தோடு இருந்ததால் அவர் நோயாளியைப் பார்த்து,

"மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"

என்கிறார்.

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தும்.

இயேசு உலகுக்கு வந்தது ஆன்மாவின் நோயைக் குணமாக்க.

ஆகவே தான் நோயாளியைப் பார்த்து,

"உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன". என்கிறார்.

அப்படியானால் பாவ மனஸ்தாபத்துக்கான தூண்டுதலையும் நோயாளி ஏற்றுக் கொண்டான் என்று அர்த்தம்

''மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்."
(மத்தேயு.9:6)

தான் இறைமகன் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக நோயாளியின் பாவங்களை மன்னிக்கிறார்.

தொடர்ந்து அவனைக் குணப்படுத்துகிறார்.

நோயாளிகளின் ஆன்மீக நோய் குணமான பிறகுதான் அவனது உடல் நோய் குணமானது.

ஆக, இயேசு உடல் சார்ந்த நோய்களைக் குணமாக்கியதின் நோக்கமே ஆன்மீக நோயை குணமாக்குவது தான்.

அவர் செய்த புதுமைகள் மூலம் விசுவாசம் தோன்றியது, வளர்ந்தது, உறுதிப்பட்டது.

நமது வாழ்க்கைக்கு நாம் என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம்?

நாமும் நமது உடல் சார்ந்த நோய்கள் குணமாவதற்காக இயேசுவை நாடுகிறோம்.

இயேசு நம்மிடம் சொல்கிறார்,

"முதலில் நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து உங்களது ஆன்மீக நோயிலிருந்து விடுதலை பெறுங்கள்.

அதன் பிறகு உடல் சார்ந்த நோய்களிலிருந்து விடுதலை பெற விண்ணப்பியுங்கள்.

நான் உங்களை முழுமையாகக் குணப்படுத்துவேன்."

பாவ நோயிலிருந்து விடுதலை பெறாமல் உடல் சார்ந்த நோயிலிருந்து விடுதலை பெற்று வாழ்வதில் எந்த பயனும் இல்லை.

உடலில் நோய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு நாள் உடல் மண்ணுக்குள் போய்த்தான் ஆக வேண்டும்.

ஆகவே நமது ஆன்மா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே முழுக் கவனத்தையும்  செலுத்துவோம்.

ஆண்டவர் நம்மை இரண்டு வகை நோய்களிலிருந்தும் குணமாக்குவார்.

லூர்து செல்வம்.

'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."(மத்தேயு.8:34)

'' உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டு வந்து, அவரைக் கண்டு தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்."
(மத்தேயு.8:34)


இயேசு  கதரேனர் வாழ்ந்த பகுதியில் , பேய் பிடித்த இருவரைக் குணமாக்கினார். 

அதைக் காண வந்த நகர மக்கள் அவரைத் தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டினர்.

அவர்களில் இருவரை இருவரை இயேசு குணமாக்கியிருக்கிறார்.

முறைப்படி மக்கள் அவரை ஊருக்குள் வரவேற்று, அவருக்கு நன்றி கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் நகருக்குள் வர விடாமல் தடுத்ததோடு

அவரை அவ்விடத்தை விட்டு போகச் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

ஆனால் நாம் யூகிக்கலாம்.

கதரேனர் புறசாதியினர். பன்றி வளர்க்கும் தொழிலையும் செய்து வந்தவர்கள்.

இயேசு யூதர். அவர்கள் வளர்த்து வந்த பன்றிகளைக் கடலுக்குள் அனுப்பி விட்டார். பன்றிகள் இறந்து விட்டன.

அந்தக் கோபம் அவர்களுக்கு இருந்திருக்கும்.

அவர்கள் ஆன்மீகத் தாகம் உள்ளவர்கள் அல்ல.

தங்கள் உலகைச் சார்ந்த சொத்தைக் கடலுக்குள் அனுப்பிய ஆன்மீகவாதியை நகருக்குள் விட அவர்களுக்கு மனதில்லை.

அவர் செய்த உதவியை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

இயேசுவுக்கு அவர்களுடைய மன   நிலை தெரியும்.

ஆனாலும் அவர்களைத் தேடி கடல் கடந்து வந்தார்.

இருவரைக் குணமாக்கினார்.

நகரினர் அவரை உள்ளே விடாததால் 

இயேசு படகேறி மறு கரைக்குத்  தம் சொந்த நகருக்குச் சென்றார். 

இயேசு யூதராக இருந்தாலும் இறைமகனாகிய அவர் தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மக்களின் மீட்புக்காகத்தான் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே தான் கதரேனர்களைத் தேடி தனது சீடர்களுடன் வந்தார்.

அவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

பைபிள் நிகழ்வுகளைப் பார்க்கும் போது சினிமா பார்ப்பது போல வெளியிலிருந்து பார்க்கக்கூடாது.

நிகழ்வுக்குள்  இயேசுவோடு நாமும் இருக்க வேண்டும்.

நிகழ்வு நம்மையும் பாதிக்க வேண்டும்.

இயேசு இருவரைக் குணமாக்கும் போதும், நகரினர் அவரை நகரை விட்டு போகச் சொன்னபோதும் நாம் அங்கே நின்று இயேசுவின் முகத்தைப் பார்க்க வேண்டும்.

யாருடைய ஆன்மீக மீட்புக்காக விண்ணிலிருந்து இறங்கி மண்ணுக்கு வந்தாரோ,

யார் பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக துன்பங்கள் நிறைந்த மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டாரோ

அவர்கள் அவரைப் பார்த்து,

"நீர் எங்களிடம் வர வேண்டாம், போய்விடும் '' என்று சொன்னால் அவருடைய முகபாவனை எப்படி இருக்கும் என்பதை நாம் நேரில் பார்க்க வேண்டும்.

ஏனெனில் நாமும் அநேக சமயங்களில் அந்த மக்கள் செய்ததைத்தான் செய்கிறோம்.

நாம் எத்தனை முறை இயேசுவைப் பொறுத்த மட்டில் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய் நடந்து கொள்கிறோம்!

திருப்பலியில் கலந்து கொள்ளும் போது எத்தனை முறை பலிபீடத்தையும், குருவானவரையும் பார்க்காமல்

 அக்கம் பக்கத்தையும், Cell phone ஐயும் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை வாயால் செபம் செய்துகொண்டு, சிந்தனையில் உலகெங்கும் வலம் வந்து கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை வாசகங்கள் வாசிக்கும் போதும், குருவானவர் பிரசங்கம் வைக்கும் போதும் காது கொடுத்துக் கேட்காமல் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு, தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை திருவிருந்து அருந்திவிட்டு ஆண்டவரிடம் பேசாமல் அருகில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டு இருந்திருக்கிறோம்!

எத்தனை முறை காலையில் கட்டிலை விட்டு எழும்போது கடவுளை நினையாமல் காபியை நினைத்துக் கொண்டு எழுந்து இருந்திருக்கிறோம்!

பகல் 12 மணி நேரமும் எதைப்பற்றி எல்லாமோ நினைக்கும் போது கடவுளைப் பற்றி எவ்வளவு நேரம் நினைக்கிறோம்?

அந்த மக்கள் இயேசுவைத் தங்களை விட்டுப் போகச் சொன்னார்கள்.

நாம் அவரை அருகில் வைத்துக் கொண்டு அவமானப் படுத்திக் கொண்டிருக்கிறோம்!

நினைத்துப் பார்ப்போம்.

நம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் இயேசுவை

 நாமும் எப்போதும் நினைத்து அவருக்காகவே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, July 1, 2024

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."(மத்தேயு.8:24)

" திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்."
(மத்தேயு.8:24)

இயேசு சீடர்களோடு படகில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்.

சீடர்கள் விழித்திருக்கிறார்கள், ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருக்கிறார்.

திடீரெனக் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. படகுக்குமேல் அலைகள் எழுகின்றன.

 சீடர்கள் அவரிடம் வந்து, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள்.

இயேசு கடவுள்.

முக்காலமும் அறிந்தவர்.

படகில் ஏறும்போதே கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படும் என்று அவருக்குத் தெரியும்.

தெரிந்தும் ஏன் சீடர்களோடு படகில் பயணித்தார்?

ஏன் படகில் தூங்கினார்?

இன்னொரு உண்மையும் நமக்குத் தெரிந்தால் இது புரியும்.

இயற்கையைப் படைத்தவர் அவர்.

இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் திட்டமிடுபவர்.

அவருடைய திட்டமின்றி அணுவும் அசையாது.

இயற்கை நிகழ்வுகள் நமக்கு எதிர்பாராதவையாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு சுனாமி நாம் எதிர்பார்க்காமல் நடந்தது.

ஆனால் கடவுளின் நித்திய காலத் திட்டப்படி தான் நடந்தது.

அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அவரது திட்டப்படி தான் ஏற்பட்டன.

நமது எண்ணப்படி சுனாமியின் விளைவு அழிவு.

ஆனால் இறைவனின் எண்ணப்படி அது மாற்றம்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் கடவுள் எதையும் திட்டமிட மாட்டார்.

அப்படியானால் கடல் கொந்தளிப்பைத் திட்டமிட்டு சீடர்களை அழைத்துச் சென்று அவர் ஏன் தூங்கினார்?

என்ன நோக்கத்திற்காக?

வகுப்பில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ஆசிரியர் திட்டம் தீட்டுவது போல

சீடர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்காக இயேசு திட்டமிட்டார்.

எதில் பயிற்சி?

ஆன்மீக வாழ்வுக்கு எது அத்தியாவசியமோ அதில் பயிற்சி.

ஆன்மீக வாழ்வுக்கு அடிப்படையான புண்ணியங்கள் மூன்று,

விசுவாசம், நம்பிக்கை,
 தேவசிநேகம்.

இவற்றில் முதன்மையானது விசுவாசம்.

சீடர்கள் இயேசுவை விசுவசித்து, நம்பிதான் அவர் பின்னால் வந்தார்கள், அவரை நேசித்தார்கள்.

ஆனாலும் இயேசு எதிர்பார்த்த அளவு அவர்களிடம் விசுவாசம் இல்லை.

அவர்களது விசுவாசத்தின் அளவை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்பின் அதை அதிகரிக்க வேண்டும்.

அதற்காகத் தான் புயலையும், கடற் கொந்தளிப்பையும் கடவுள் திட்டமிட்டார்.

அவர்களிடம் போதுமான விசுவாசம் இருந்திருந்தால்

கடலைப் படைத்த கடவுள் அவர்களோடு இருக்கும் போது 

 "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்" என்று கத்தியிருக்க மாட்டார்கள்.

தங்களுக்கு கடல் கொந்தளிப்பால் எந்த ஆபத்தும் வராது என்று தெரிந்திருக்கும்.

அவர்கள் பயந்ததைப் பார்த்த இயேசு 

 அவர்களை நோக்கி, "விசுவாசம் குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டார்.

  காற்றையும் கடலையும் அடக்கி அவர்களது விசுவாசத்தை அதிகப் படுத்தினார்.

மூன்று ஆண்டுகள் விடாமல் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தும் சீடர்களுடைய விசுவாசம் போதிய அளவு வளரவில்லை.

விசுவாசம் வளர்ந்திருந்தால் அவரது பாடுகளின் போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.

அவர் உயிர்த்தெழுந்ததை நம்பாமல் கல்லரையைப் பார்க்கப் போயிருக்க மாட்டார்கள்.

மாதா போகவில்லை.

தூய ஆவியானவரின் வருகையின் போதுதான் அவர்களுடைய விசுவாசம் உறுதியடைந்தது.

நமது விசுவாசத்தை அதிகப் படுத்ததான் கடவுள் நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார்.

நமக்குத் துன்பங்கள் வரும் போது நம்மை விசுவாசத்தில் உறுதிப்படுத்தும்படி இறைவனிடம் வேண்ட வேண்டும்.

கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், நமது ஆன்மீக நன்மைக்காகவே நமக்குத் துன்பங்களை அனுமதிக்கிறார் என்பதை விசுவசிக்க வேண்டும்.

நம்மைப் படைத்தவர் நம்மோடு இருக்கிறார் என்பதை உறுதியாக விசுவசித்தால் நாம் துன்பத்தைக் கண்டு பயப்பட மாட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்று மகிழ்ச்சி அடைவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 30, 2024

"இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்." (மத்தேயு.8:20)

"இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்." 
(மத்தேயு.8:20)


 மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, "போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்" என்றார். 


இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை" என்றார்." 

தனது வாழ்க்கையின் கஷ்டங்களை எடுத்துக் கூறி,

''நீர் அவற்றைத் தாங்குவது கடினம், ஆகவே என்னுடன் வரவேண்டாம். உமது குடும்ப வாழ்க்கையில் நான் சொல்வதை அனுசரியும்."

என்ற பொருள் பட அவ்வாறு கூறினார்.

மற்றொருவரை இயேசு தன்னுடன் வரும்படி கூறினார்.

அவர், "ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும்" என்றார். 

இயேசு அவரிடம் , 

"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார். 

இயேசுவின் வார்த்தைகளைத் தியானித்தால் நாம் அறிய வரும் செய்திகள்,

நமது ஆன்மீக வாழ்க்கைக்கான இறைவனின் அழைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. நாம் பிறந்து வளரும் குடும்பத்தில் இருந்து கொண்டே இயேசுவின் நற்செய்தியை வாழ்வது, வாழ்க்கையின் மூலம் போதிப்பது.

2. குடும்பத்தையும், சொந்த பந்தங்களையும், உடைமைகளையும் துறந்து,
100 சதவீதம் நம்மை நற்செய்திப் பரப்புப்‌ பணிக்காக அர்ப்பணித்து வாழ்வது.

வழக்கமாக நாம் இரண்டாவது அழைப்பைத் தேவ அழைத்தல் என்போம்.

ஆனால் உண்மையில் இரண்டுமே தேவ அழைத்தல் தான்.

நாம் ஒன்றுமில்லாமையாக இருக்கும் போது அவரை நேசித்து அவருக்குப் பணி புரிய நம்மை அழைத்தார், அதாவது, நம்மைப் படைத்தார்.

குடும்பத்தில் தான் நம்மைப் படைத்தார்.

குடும்பத்தில் இருந்து கொண்டே அவருக்குப் பணி புரிவது முதல் அழைப்பு.

குடும்பத்தைத் துறந்து வாழும் அர்ப்பண வாழ்வு இரண்டாவது அழைப்பு.

இரண்டாவது அழைப்பில் சிலர் துறவிகளாக மட்டும் வாழ அழைக்கப் படுகின்றார்கள்.

துறவற சகோதரர்கள், துறவற சகோதரிகள் இவ்வகையினர்.

சிலர் துறவற வாழ்வோடு குருத்துவ வாழ்வும் வாழ அழைக்கப் படுகின்றார்கள்.

நமது குருக்கள், ஆயர்கள், பாப்பரசர் இவ்வகையினர்.

குடும்ப வாழ்வு, துறவற வாழ்வு இவற்றில் எது சிறந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஏனெனில் இரண்டுமே இறைவனுடைய அழைப்பு தான்.

திருக்குடும்ப உறுப்பினர்களில் மூவருமே துறவிகள் தான்.

குடும்பத்தில் இருந்துதான் துறவிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

துறவறம் நாற்று என்றால் குடும்பம் நாற்றங்கால்.

குடும்பம் சிறந்ததாக இருந்தால்தான் அதிலிருந்து எடுக்கப் படும் துறவிகளும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.

மரத்தின் தன்மையைப் பொறுத்து தான் கனிகளின் தன்மை அமையும்.

குடும்ப வாழ்வு.
----------------------------

குடும்பத்தினர் எப்படி வாழ வேண்டும்?

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ வேண்டும்.

திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.

திருமணத்தின் நோக்கம் வெறும் சிற்றின்ப வாழ்க்கை மட்டும் வாழ்வது அல்ல,

நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக மக்களைப் பெற்று, அதற்காகவே அவர்களை வளர்ப்பது தான் திருமண வாழ்வின் நோக்கம்.

திருமண வாழ்வுக்கான பிள்ளைகளையும்,

துறவற வாழ்வுக்கான பிள்ளைகளையும்

பெற்றோர்தான் பெற்று வளர்க்கிறார்கள்.

பெற்றோரின் முன்மாதிரிகையான கிறிஸ்தவ வாழ்க்கை எதிர்கால நல்ல குடும்பங்களுக்கும், நல்ல துறவிகளுக்கும் பிறப்பிடமாக அமைய வேண்டும்.

தங்கள் பிள்ளைகளைத் துறவற வாழ்க்கைக்கு அனுப்பிய பின் அவர்களைப் பரிபூரணமான துறவற வாழ்க்கை வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும்.

அதற்கு குடும்பத்தினர் சிறிதளவு கூட இடையூறாக இருக்கக் கூடாது.

அவர்களிடமிருந்து ஆன்மீக உதவியைத் தவிர வேறு எந்த வித உதவியையும் எதிர்பார்க்கக் கூடாது.

துறவற வாழ்க்கை.
---------------------------------

துறவிகள் முற்றிலும் தங்கள் சபைக்குச் சொந்தமானவர்கள்.

குருக்கள் முற்றிலும் அவர்கள் பணிபுரியும் மேற்றிராசனத்துக்குச் சொந்தமானவர்கள்.

"நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்"

என்ற இயேசுவின் வார்த்தைகள் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

அவர்கள் பிறந்து வளர்ந்த
குடும்பத்தை முற்றிலும் துறந்து வந்ததை மறந்து விடக்கூடாது.

குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டியது அவர்களுடைய செப உதவியை மட்டும் தான்.

இயேசுவே அதற்கு முன்மாதிரிகை.

அவரது 33 ஆண்டுகள் வாழ்க்கையில் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.

3 ஆண்டுகள் முற்றிலும் பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்து விட்டார்.

பொது வாழ்வின் போது இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்த அவர், குடும்ப வாழ்வின் போது இறந்த சூசையப்பருக்கு உயிர் கொடுக்கவில்லை.

பொது வாழ்வின் போது அப்பங்களைப் பலுகச் செய்து மக்களுக்கு உணவளித்த அவர் 

குடும்பத்தில் தச்சு வேலை செய்துதான் பெற்றோருக்கு உணவளித்தார்.

பொது வாழ்வின் போது பொது மக்கள் தான் அவரைக் கவனித்துக் கொண்டார்கள்.

பரிசேயர்கள் கூட அவருக்கு உணவு அளித்திருக்கிறார்கள்.

இலாசர் குடும்பத்தினர் உணவு அளித்திருக்கிறார்கள்.

மேலும் "பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 

ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்."
(லூக்கா.8:3)

இயேசுவுக்காக அர்ப்பணித்து வாழும் குருக்களைக் கவனிக்க வேண்டியவர்கள் பொது மக்களாகிய நாம் தான், அவர்களுடைய குடும்பத்தினர் அல்ல.

நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே தேவ அழைத்ததினால் தான்.

எந்த வாழ்வுக்கு அழைக்கப் பட்டாலும் அதை இறைவன் விருப்பம் போல் சிறப்பாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, June 29, 2024

"ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்."(மாற்கு.5:28)

"ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்."
(மாற்கு.5:28)

 பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் குணமாக விரும்புகிறார்.


அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடி வருகிறார்.


இயேசு தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவரது மகளைக் குணமாக்கப் போய்க்கொண்டிருக்கிறார்.

பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இரத்தப் போக்குள்ள பெண் தன்னைக் குணமாக்கும் படி இயேசுவிடம் கேட்கவில்லை.

 அவருடைய ஆடையைத் தொட்டாலே குணம் கிடைக்கும் என்று அப்பெண் உறுதியாக நம்புகிறாள்.

இயேசுவுக்குப் பின்னால் வந்து அவருடைய மேலுடைத்‌ தொடுகிறாள்.

பூரணக்‌ குணமடைகிறாள்.

அவளுடைய நம்பிக்கையின் ஆழத்தைப் பாருங்கள்.

தனக்குச் சுகமில்லை என்று இயேசுவிடம் அவள் சொல்லவில்லை.

தான் சொல்லாமலேயே அவருக்குத் தெரியும் என்று உறுதியாக நம்புகிறாள்.

கடவுளுக்கு மட்டும் நாம் சொல்லாமலேயே நம்மைப் பற்றித் தெரியும்.

ஆகவே இயேசு கடவுள் என்று உறுதியாக நம்புகிறாள்.

குணமாக்குபவர் அவர்தான்.

ஆகவே அவருடைய ஆடையைத் தொடப்போவதும் அவருக்குத் தெரியும்.

ஆகவே அவரிடம் சொல்லாமலே அவருடைய மேலாடையைத் தொடுகிறாள்.

அவளது ஆழமான நம்பிக்கை அவளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.

மேலாடையைத் தொட்டுக் குணமான பெண்ணிடமிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நமது அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வதை விட மற்றவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்வது எளிது.

இயேசு கடவுள் என்று நம்புகிறோம்.

கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புகிறோமா?

நமது ஆன்மீக வாழ்வுக்கு என்னவெல்லாம் தேவை என்று கடவுளுக்குத் தெரியும் என்று நம்புகிறோமா?

நாம் கேளாமலேயேயே நம்மைப் படைத்த கடவுள் நமக்கு தேவையானவற்றை நாம் கேளாமலேயே தருவார் என்று நம்புகிறோமா?

நாம் கடவுளின் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருந்தால் நமக்கு தேவையானவற்றைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நம்புகிறோமா?

கடவுளுடைய விருப்பப்படி வாழ்வது ஒன்றுதான் நமது வாழ்க்கையின் நோக்கம் என்று நம்புகிறோமா?

கடவுளை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு செய்து அவருக்காகவே வாழ்ந்து வந்தால் நமக்குத் தேவையானவற்றை அவரே நாம் கேளாமல் தருவார் என்று நம்புகிறோமா?

இந்த கேள்விகளுக்கு நம்புகிறோம் என்று பதில் வந்தால் நாம் நம்மைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லையே!!

நாம் நாம் நம்மைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தால் நமக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்.

சுகமில்லாத பெண்மணி இயேசுவின் மேலாடையை மட்டுமே தொட்டாள்.

 அவள் குணமடைந்தாள்.

நாம் இயேசுவையே நாவால் வாங்கி உட்கொள்கிறோம்.

திவ்ய நற்கருணை உட்கொள்ளும்போது நாமும் இயேசுவும் ஒரே உடலாக இணைந்து விடுகிறோம்.

திவ்ய நற்கருணை நமக்கு விருந்து மட்டுமல்ல, 

மருந்தும் கூட.

திவ்ய நற்கருணையை அருந்தும் நாம் நமது உடலால் அவர் உடலைத் தொடுவதால்

நம்மைப் பற்றி கவலைப்படாமல் அவருக்காகவே வாழ்வோம்.

நாம் நோய்கள் என்று கருதுபவற்றைப் புனிதர்கள் நோய்களாகவே கருதவில்லை.

 அருள் ஈட்டித்தரும் சிலுவைகளாகவே கருதினார்கள்.

உடலில் வரும் நோய்களால் ஏற்படும் துன்பங்களை இறைவனுக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுத்துவிட்டு

 அவைகளுக்கு ஈடாக நித்திய பேரின்பத்தை பெற்றுக் கொண்டார்கள்.

நாமும் அப்படியே செய்யலாமே!

லூர்து செல்வம்.

Friday, June 28, 2024

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு.16:18)

"எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு.16:18)

இயேசு " நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று தனது சீடர்களைக் கேட்டபோது. 

 சீமோன் பேதுரு 

, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று கூறினார். 

அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

நான் உனக்குக் கூறுகிறேன்; 

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."

இப்போது மட்டுமல்ல.

முதன் முதல் அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துச் சென்றபோது 

 இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து, "நீ யோவானின் மகன் சீமோன். இனி "கேபா" எனப்படுவாய் என்றார். 

"கேபா" என்றால் "பாறை" என்று அருளப்பர் எழுதுகிறார். 
(அரு.1:42)

இயேசு சீமோனுக்குப் பாறை என்று பெயரிட்டுருப்பதும்,

அந்தப் பாறையின்மேல்தான்,

அதாவது சீமோனின் தலைமையில் தான் தனது திருச்சபையை நிறுவப் போவதாகச் சொன்னதும்

பைபிளில் இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டிருந்தும்

பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வாழும் நமது பிரிவினை‌‌ சபையினர் இராயப்பரின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.

வசனத்திற்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுக்கிறார்கள்.

"பாறை" இயேசுவைக் குறிக்கும் என்கிறார்கள்.

"கேபா எனப்படுவாய்." சீமோனைப் பார்த்து சொல்லப் பட்ட வார்த்தைகள் எப்படி இயேசுவைக் குறிக்கும்?

இயேசுவின் வார்த்தைகளை பன்னிரு சீடர்களும் எப்படிப் புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் இராயப்பரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள்.

இராயப்பர் எங்கு ஆயராக இருந்தாரோ (உரோமாபுரி) அதையே கிறிஸ்தவத்தின் தலை நகராக ஏற்றுக் கொண்டார்கள்.

இயேசுவின் திருச்சபை 'அப்போஸ்தலிக்கத் திருச்சபை.

இயேசுவால் நிறுவப்பட்டு அப்போஸ்தலர்கள் வழியாக நமக்கு வந்திருக்கும் திருச்சபை.

இயேசு நற்செய்தியை அறிவித்தார்.

நற்செய்தி நூல்கள் இயேசுவைப் பற்றியவை.

ஆகவே அவர் கையில் நற்செய்தி நூல்கள் இல்லை.

பைபிளை நமக்குத் தந்தது "அப்போஸ்தலிக்க கத்தோலிக்கத் திருச்சபை,"

பிரிவினை சபைகள் அல்ல.

 இயேசுவின் கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள்

எதற்காக கத்தோலிக்கத் திருச்சபை தந்த பைபிளை மட்டும் கையில் எடுத்துச் செல்ல வேண்டும்?

குடும்பத்தை விட்டு வெளியேறிய மகன் பெற்றோரிடமிருந்து பெற்ற வாயை அவர்களைத் திட்ட பயன்படுத்துவது போல,

கையை அவர்களை அடிக்கப் பயன்படுத்துவது போல

கத்தோலிக்கத் திருச்சபையின் பைபிளைக் கையில் வைத்துக் கொண்டு

அதைக் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராகப் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களின் நோக்கம் கத்தோலிக்கர்களைத் தங்களை நோக்கி ஈர்ப்பது தான்.

இதில் வருந்தக்கூடிய விசயம் என்னவென்றால் நம்மவர்கள் அவர்களுடைய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து,

அவர்கள் நடத்தும் சுகமளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்வதுதான்.

நம்மவர்கள் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலியில் கலந்து விட்டு,   

மாலையில் பிரிவினை சபையாரின் கூட்டங்களுக்குப் போகும் நம்மவர்கள் சிந்திக்க வேண்டும்.

கேட்டால் அவர்களும் இயேசுவைத்தானே வழிபடுகிறார்கள் என்பார்கள்.

அவர்கள் வழிபடுவது நமது இயேசுவை அல்ல.

மக்களுக்கு பாவமன்னிப்புத் தருவதற்காக உலகிற்கு வந்தவர் நம் இயேசு.

அதற்காகத் தான் தனது சீடர்களுக்குப் பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, பாவசங்கீர்த்தனம் என்னும் திரு அருட்சாதனத்தை நிறுவினார்.

நமது ஆன்மீக உணவாகிய தேவ நற்கருணையை நிறுவியவர் நம் இயேசு.

புனித வியாழனன்று திருப்பலி நிறைவேற்றி, உலகம் முடியுமட்டும் திருப்பலி நிறைவேற்ற குருத்துவத்தை நிறுவியவர் நம் இயேசு.

எங்கே பாவசங்கீர்த்தனம் இருக்கிறதோ,

எங்கே திருப்பலி நிறைவேற்றும் குருக்கள் இருக்கிறார்களோ,

எங்கே திவ்ய நற்கருணை இருக்கிறதோ

அங்கு மட்டும் தான் இறைமகன் இயேசு இருக்கிறார்.


பிரிவினை சகோதரர்களிடையே பாவசங்கீர்த்தனம் இல்லை, திருப்பலி இல்லை,
திவ்ய நற்கருணை இல்லை.

ஆகவே அவர்கள் வழிபடுவது இறைமகன் இயேசுவை அல்ல.

இயேசு என்னும் பெயரை வைத்திருப்பவர்கள் எல்லாம் இறைமகன் இயேசு ஆகிவிட முடியாது.

அவர்கள் இறைமகன் இயேசுவையும், அவரது நற்செய்தியையும் வியாபாரப் பொருளாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் வியாபாரத்தில் நாம் பங்கு பெறலாமா?

அவர்கள் நடத்தும் வியாபாரக் கூட்டங்களுக்கு நம்மவர்கள் போகக்கூடாது.

ஆனால் நாம் அவர்களை வெறுக்கக் கூடாது.

விண்ணகத் தந்தையில் அவர்களும் நம்முடைய சகோதரர்கள்.

விண்ணகத் தந்தை அவர்களையும் நேசிக்கிறார்.

நாமும் அவர்களை நேசிக்க வேண்டும்.

அவர்கள் மனம் திரும்பி இறைமகன் இயேசுவிடம் திரும்பி வர அவர்களுக்காக தந்தையிடம் வேண்ட வேண்டும்.

நம்மைப் பகைப்பவர்களையும் நேசிப்பது தான் உண்மையான கிறிஸ்தவ அன்பு.

லூர்து செல்வம்.

Wednesday, June 26, 2024

"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்."(மத்தேயு.8:2)

"அப்பொழுது தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார்."
(மத்தேயு.8:2)


தொழுநோயாளியின் செபத்திலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 இயேசுவினால் அவனது வியாதியைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவரைத் தேடி வந்திருக்கிறான்.

ஆனால் "என்னைக் குணமாக்கும்" என்று அவன் வேண்டவில்லை.

"நீர் விரும்பினால் 

எனது நோயை நீக்க உம்மால் முடியும்."
என்றுதான் செபித்தான்.


இயேசுவின் வல்லமையில் அவனுக்கு நம்பிக்கை இருக்கிறது. ("உம்மால் முடியும்.")

ஆனால் அவருடைய வல்லமையைப் பயன்படுத்துவதும், பயன்படுத்தாதிருப்பதும் அவர் விருப்பம்.

யாராலும் கட்டாயப் படுத்தப் பட்டு அவர் பிரபஞ்சத்தைப் படைக்கவில்லை.

நம்மைப் படைக்க வேண்டும் என்று நாம் அவரிடம் கேட்கவில்லை.

அவர் விரும்பினார், பிரபஞ்சத்தைப் படைத்தார்

அவர் விரும்பினார்,
நம்மைப் படைத்தார்.

ஒன்றுமில்லாமையிலிருந்து படைக்கப் பட்ட நமக்கு சுயமாக ஒன்றுமில்லை.

நம்மிடம் இருப்பதெல்லாம் அவர் விரும்பித் தந்தது, நாம் விரும்பிக் கேட்டது அல்ல.

என்னை இந்தியாவில் படையுங்கள் என்று நான் அவரைக் கேட்கவில்லை.

எனது பெற்றோரை நான் தேர்ந்தெடுக்கவில்லை.

நான் பிறக்க வேண்டிய காலத்தையும், நேரத்தையும் நான் தேர்ந்தெடுக்கவில்லை.

நான் இறக்க வேண்டிய நாளையும்  தேர்வு செய்ய என்னால் முடியாது.

பாவம் தவிர மற்ற எல்லாம் அவர் விருப்பப்படி தான் நடந்தது, நடக்கிறது, நடக்கும்.

நாம் எதையாவது விரும்பினால், அதை அவரும் விரும்பினால் அது நடக்கும்.

நாம் மன மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமென்றால் அவர் விரும்புவதை நாமும் விரும்ப வேண்டும்.

ஆனால் அவர் என்ன விரும்புகிறார் என்று நமக்குத் தெரியாது.

ஆகவே நாமே முழு மனதுடன் நம்மை அவரது விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும்.

அப்போ நாம் எதையும் விரும்பக் கூடாதா?

விரும்பலாம்.

"ஆண்டவரே, நான் தேர்வு எழுதியிருக்கிறேன்.

முதல் தரமான மதிப்பெண் பெற்று வெற்றி பெற விரும்புகிறேன்.

ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உமது விருப்பப்படியே நடக்கட்டும்."

நம்மை அவரது விருப்பத்துக்கு உட்படுத்தி விட்டால்

தேர்வு முடிவு எப்படி வந்தாலும் கவலைப் பட மாட்டோம்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

"ஆண்டவரே, வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.

வேலை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஆனாலும் உமது விருப்பப்படியே நடக்கட்டும்."

இந்த மனநிலையோடு செபித்தால் வேலை கிடைத்தாலும் நன்றி கூறுவோம்,

கிடைக்காவிட்டாலும் நன்றி கூறுவோம்.

"கேளுங்கள் தரப்படும்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே நாம் விரும்புவதைக் கேட்போம்.

நமக்கு எதிர் காலம் தெரியாது.

நாம் இப்போது விரும்புவது எதிர்காலத்தில் நன்மை பயக்குமா பயக்காதா என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

" ஆண்டவரே, நான் விரும்புவது உமது விருப்பத்துக்கு உட்பட்டிருந்தால் நான் கேட்டதைத் தாரும்.

இல்லாவிட்டால் நீர் விரும்புவதைத் தாரும்."

என்று செபித்தால் என்ன கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைவோம்.

எதுவுமே கிடைக்காவிட்டாலும் நமது மகிழ்ச்சி குறையாமல் இருக்கும்.

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்."

ஒரு நோய் வருகிறது.
மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறோம்.

சுகம் கிடைத்தாலும் இறைவனுக்கு நன்றி.

மரணம் வந்தாலும் இறைவனுக்கு நன்றி.


 தொழுநோயாளர் இயேசு பணிந்து, "ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்" என்றார். 


இயேசு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு,

 "நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!" என்று சொன்னார். 

உடனே அவரது தொழுநோய் நீங்கியது. 


நாமும் இறைவனை வேண்டும்போது,  

" தந்தையே, நான் கேட்பது உமக்கு விருப்பமானால் அதைத் தாரும்.

அது உமக்கு விருப்பம் இல்லாவிட்டால்

உமக்கு விருப்பமானதைத் தாரும்.

எதைத் தந்தாலும் உமக்கு நன்றி."

நமது விருப்பத்தை இறைவனுடைய விருப்பத்துக்கு விட்டு விடுவோம்.

"இறைவா, உமது விருப்பம் எதுவாக இருந்தாலும் அது என்னில் நிறைவேறட்டும்."

லூர்து செல்வம்.