Thursday, October 17, 2024

"நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். (லூக்கா நற்செய்தி 12:8)

 "நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். 
(லூக்கா நற்செய்தி 12:8)

இயேசுவை அறிதல்,‌ வாழ்தல், அறிவித்தல்- மூன்றும் சேர்ந்தது தான் கிறிஸ்தவ வாழ்வு.

நற்செய்தி வழியாக இயேசுவை அறிய வேண்டும்,

நற்செய்தியை வாழ்வது மூலமாக இயேசுவை வாழ வேண்டும்,

நற்செய்தியை அறிவித்தல் மூலமாக இயேசுவை அறிவிக்க வேண்டும்.‌

உலக மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இயேசுவை மீட்பர் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வெறுமனே சொல்லால் ஏற்றுக் கொண்டால் மட்டும் போதாது,

வாழ்க்கையாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி நாம் ஏற்றுக் கொண்டால் இயேசுவும் மோட்சத்தில் கடவுளின் சம்மனசுக்கள் முன்னால் நம்மை அவருடைய சீடர்களாக ஏற்றுக் கொள்வார்.

சுருக்கமாகச் சொல்வதானால் 

 மக்கள் முன்னால் இயேசுவை ஏற்றுக் கொள்பவர்ளை அவர் தனது சம்மனசுக்களின் முன்னால் ஏற்றுக் கொள்வார்.

வசனத்தின் அடிப்படையில் நமது வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரித்து தியானிப்போம்.

1. ஏற்றுக் கொள்ளுதல்.

2. கொடுத்தல்.

3. ஏற்றுக் கொள்ளப் படுதல்.

1.ஏற்றுக் கொள்ளுதல்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் எங்கு இருந்தோம்?

எங்குமே இல்லை.

நாமே இல்லை.
We were nothing.

இல்லாத நம்மை இருப்பவர்கள் ஆக்கியவர் கடவுள்.

முதலில் நம்மை ஆக்கியவரை நாம் ஆக்கியவராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர்தான் நமக்கு எல்லாம்.
அவரின்றி நாம் இல்லை.

நாம் நமக்குச் சொந்தமில்லை, நம்மைப் படைத்தவருக்குச் சொந்தம்.

இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவர் நமக்குச் சொந்தம், நாம் அவருக்குச் சொந்தம்.

அவருக்குச் சொந்தமான நம்மை அவரிடமிருந்து பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை. பிரிந்து வர நமக்கே உரிமை இல்லை.

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் அவருக்காக வாழ வேண்டும், அவருக்காக மட்டுமே வாழ வேண்டும்.

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே

எல்லாம் உமக்காக.

எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்,

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்,

எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும்,

உந்தன் அதிமிக மகிமைக்கே."

இந்த உண்மையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அவருக்குச் சொந்தமான நாம் அவருக்காக வாழ வேண்டும் என்றால் அதோடு இணைந்திருக்கும் மற்றொன்று உண்மையையும் புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் என்ற வார்த்தையால் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் குறிக்கிறோம்,

கர்த்தர் கற்பித்த செபத்தில் 
"எங்கள் தந்தையே" என்பது போல.

படைக்கப்பட்ட அனைவரும் அவருக்குச் சொந்தம்.

இப்போது சொல்லாமலே புரியும், 

அவரை நேசிக்க வேண்டும் என்று சொல்லும் போது அவருக்குச் சொந்தமான அனைவரையும் நேசிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

கடவுளை நேசிக்கும் போது நம்மையும்,(ஒவ்வொருவரும் அவரவரையும்), நமது பிறரையும் நேசிக்க வேண்டும்.

நான் என்னை நேசிப்பது போல என் அயலானையும் நேசிக்க வேண்டும்.

அப்படியே ஒவ்வொருவரும்.

இறையன்பும் பிறரன்பும் பிரிக்க முடியாதவை.

இறைவனை நேசிப்பவன் நிச்சயம் பிறரையும் நேசிப்பான்.

பிறரை நேசிக்காதவன் இறைவனையும் நேசிக்கவில்லை.

நாம் கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

ஒரு ஏழை அவசரமான மருத்துவச் செலவுக்காகக் கொஞ்சம் பணம் கேட்கிறான்.

நம்மிடம் காணிக்கை போடுவதற்காகப் பணம் இருக்கிறது.

அவனிடம் கொடுத்து விட்டால் காணிக்கை போட முடியாது.

உண்மையில் ஏழையின் மூலம் பண உதவி கேட்பவர் கடவுள் தான்.

ஏழைக்கு உதவாமல் பணத்தைக் காணிக்கைப் பெட்டியில் போட்டால் அதைக் கடவுள் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

தீர்ப்பு நாளில் நம்மைப் பார்த்து,

"நான் மருத்துவச் செலவுக்குப் பணம் கேட்டேன், நீ தரவில்லை"

என்பார்.

இறைவனுக்காகப் பிறருக்குச் செய்யும் பணி இறைப்பணி.

இறைவனைத் தந்தையாகவும், பிறரைச் சகோதரர்களாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2. கொடுத்தல்.

ஏற்றுக் கொள்வதோடு நெருங்கிய தொடர்புடையது கொடுத்தல்.

ஏற்றுக் கொள்ளாமல் கொடுக்க முடியாது.

ஏற்றுக் கொள்வதே வாழ்ந்து கொடுப்பதற்காகத்தான்.

நாம் ஏற்றுக் கொண்ட இயேசுவையும், அவருடைய நற்செய்தியையும்‌ அது வரை ஏற்றுக்கொண்டிராத மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இயேசுவை அறியாதவர்களும் அவரை அறிந்து ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.

வார்த்தையினாலும், நமது முன்மாதிரிகையான வாழ்க்கையினாலும் இதைச் செய்ய வேண்டும்.

3. ஏற்றுக் கொள்ளப் படுதல்.

இவ்வுலக வாழ்வின் போது நமது முழுநேர வேலையே நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வதும், அவரை மற்றவர்களுக்குக் கொடுப்பதும்தான்.

இவ்வேலையைச் சிறப்பாகச் செய்தால் இவ்வுலக வாழ்க்கையின் முடிவில் இறைமகன் இயேசு மோட்சவாசிகளின் முன்பாக நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்குள் ஏற்றுக் கொள்வார்.

இயேசுவை ஏற்றுக் கொள்வோம்.

அவரை அனைவருக்கும் கொடுப்போம்.

அவரோடு நிலைவாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 16, 2024

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். (திருப்பாடல்கள்.145:10)

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 
(திருப்பாடல்கள்.145:10)

இவை இன்று பாட வேண்டிய திருப்பாடல் வரிகள்.

நன்றி உணர்வோடு பாட வேண்டிய வரிகள்.

உருவாக்கப்பட்ட அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனது வல்லமையால் உருவாக்கப்பட்டன.

இறைவன் ஆறாம் நாளில் மனிதனைப் படைக்குமுன் அவனது பயன்பாட்டுக்காக உலகம் உள்ளிட்ட முழு பிரபஞ்சத்தைப் படைத்தார்.

படைப்புகள் அனைத்தும் படைத்தவரின் வல்லமையையும், படைப்புக்குக் காரணமான அன்பையும் பிரதிபலிக்கின்றன.

விழா நாட்களில் நமக்கு வரும் பரிசுகளின் தன்மையை பரிசு அளித்தவரின் தன்மையைத் தீர்மானிக்கிறோம் அல்லவா,

அதைப் போல படைப்புகளின் தன்மையை வைத்து, படைத்தவரின் தன்மையைத் தீர்மானிக்கலாம்.

நாம் தொட்டு உணரக்கூடிய நமது உடலின் அற்புதமான அமைப்பை வைத்தும்,

உடலின் பொறிகள் ஐந்தாயினும் அவை இணைந்து இசைந்து செயல்படும் விதத்தை வைத்தும்

அதைப் படைத்தவரின் அளவிட முடியாத ஞானத்தை யூகித்துக் கொள்ளலாம்.

மனிதன் வாழும் பிரபஞ்சத்தின் உறுப்புகளான சூரிய சந்திர நட்சத்திரங்களுக்கு மனிதனுக்குரிய புத்தி அறிவு இல்லாவிட்டாலும்,

கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கை விதிகளையும்,

அவற்றின்படி அணுபிசகாமல் கோடிக்கணக்கான ஆண்டுகளாக அவை இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் 

எல்லாம் வல்ல இறைவனின் எல்லையற்ற ஞானம் அவற்றில் பிரதிபலிப்பதைக் காணலாம்.

இயைற்கை விதிகள்படி இயங்கிக் கொண்டிருப்பதன் மூலம் தங்கள் நன்றி உணர்வைக் கடவுளுக்குக் காட்டுகின்றன.

அவை அறிவற்ற சடப்பொருட்கள்.

அவற்றால் விதிகளை மீற முடியாது என்பது உண்மைதான்.

ஆனால் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாமே,

அவை இயற்கை விதிகளின்படி இயங்குவது போல நாம் இறைவனின் சித்தப்படி வாழ வேண்டுமென்று!

இறைவனின் சித்தப்படி வாழ்வதன் மூலம் நாம் நம்மைப் படைத்தவருக்கு நமது நன்றி உணர்வைத் தெரிவிக்க வேண்டும்.

உள்ளத்திலிருந்து எழும் வார்த்தைகளால் அவரைப் போற்றுவதோடு நமது நற்செயல்களால் நமது நன்றியை வெளிப்படுத்த வேண்டும்.

இயற்கையின் ஒவ்வொரு செயலிலும் இறைவனின் மகிமையைக் காணலாம்.

 இறைவனை அன்பு செய்யும்  நாம் அவரைப் போற்றி மகிமைப் படுத்த வேண்டும்.

 இறைவனை நேசிப்பவர்கள் யாருடைய அறிவுரையும் இன்றியே அவரைப் போற்றுவார்கள்.

 தங்கள் வாழ்வில் அவர் செய்து கொண்டு வருகிற நன்மைகளுக்காக அவரைப் புகழ்வார்கள்.

நம்மைப் படைக்குமுன் இயற்கையைப் படைத்ததே அவர் நமக்குச் செய்த முதல் நன்மை.

இங்கு ஒரு முக்கியமான உண்மையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

நமது நண்பர் நம்மீது கொண்ட அன்பின் காரணமாக நமக்குத் தரும் பரிசுப் பொருளை 

அவர் முன்னாலேயே போட்டு உடைத்தால் அவருக்கு எப்படி இருக்கும்?

ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

கடவுள் நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கும் நமது தந்தை.

நம்மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக நாம் பயன்படுத்துவதற்காக அவர் நமக்குத் தந்துள்ள அன்புப் பரிசு தான் நாம் வாழும் உலகம்.

மலைகளும், காடுகளும் , குன்றுகளும், ஆறுகளும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகள் ஓடும் சமவெளிகளும்,  தண்ணீர் தேங்கி நிற்கும் ஊருணிகளும், குளங்களும், குட்டைகளும், ஏரிகளும் உலகை அழகுபடுத்தும் இயைற்கை வளங்கள்.

இயற்கை உலகில் வாழும் நமக்குத் தந்த அன்புப் பரிசு.

நாம் பயன்படுத்துவதற்காகத் தந்த அன்புப் பரிசு.

இந்த பரிசைப் பயன்படுத்துகிறோமா?

அல்லது பாழ் படுத்தி அழிக்கிறோமா?

இயற்கையைப் பயன்படுத்தி வாழ்வதற்குப் பதில் அழித்து வாழ்கிறோம்.

காடுகள் மலைகளின் வளம்.
பருவக்காற்றுகளைத் தடுத்து மழை பெய்யக் காரணமாக இருப்பவை மலைக்காடுகள்.

மரங்களை வெட்டாமல் இயற்கை வளத்தை அனுபவிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும்.ண

மனிதன் இயற்கைக் காடுகளை அழித்து செயற்கையாக தோட்டங்கள் போட்டான்.

இதுதான் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட அழிவுக்குக் காரணம்.


அநேக இடங்களில் பருவ மழை ஒழுங்காகப் பெய்யாமைக்குக்
காடுகள் அழிப்புதான்.

இயற்கையை அழிக்கும் மனிதன் அதனாலே அழிவான்.

இயல்பிலேயே இயற்கை சுத்தமானது.

இயற்கையாக உள்ள சுத்தமான காற்றைச் சுவாசித்துதான் உயிர் வாழ்கிறோம்.

மனிதனால் மாசு படுத்தப்பட்ட காற்றைச் சுவாசிப்பதுதான் நமது அநேக நோய்களுக்குக் காரணம்.

கண்ட இடங்களில் குப்பைகளைக் கொட்டுதல், வாகனங்களிலிருந்தும், தொழிற்சாலை களிலிருந்தும் வரும் புகை, சாக்கடைகள் ஆகியவற்றால் காற்று மாசுபடுகிறது.

அனைத்து வீடுகளிலும் நாம் அமைத்திருக்கும் septic tanks நிலத்தடிநீர் மாசுபடக் காரணமாக உள்ளன.

இயற்கையை நாம் மாசுபடுத்தினால் அது நம்மை மாசுபடுத்தும்.

இயற்கை அழகை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எப்படிப் பரிசுப் பொருளைப் பார்த்தவுடன் கொடுத்தவர் ஞாபகத்துக்கு வருகிறாரோ  

 அதுபோல இயற்கையைப் பார்த்தவுடன் அதைப் படைத்த இறைவன் ஞாபகத்துக்கு வரவேண்டும்.

இயற்கையைப் படைத்த இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

எப்போதாவது நாம் சுவாசிக்கும் காற்றைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

இறைவன் படைத்த இயற்கையினால்தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் உயிர் வாழும் ஒவ்வொரு வினாடியும் கடவுளுக்கு நன்றி கூற வேண்டும்.

"ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவற்றுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்,

 உம்முடைய அன்பர்களாகிய நாங்கள் உம்மைப் போற்றிப்
புகழ்கின்றோம்."

என்று இறைவனை நன்றியோடு பாடித் துதிப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, October 15, 2024

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். (லூக்கா நற்செய்தி 11:52)

"ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு! ஏனெனில் அறிவுக் களஞ்சியத்தின் திறவுகோலை நீங்கள் எடுத்துக்கொண்டீர்கள். நீங்களும் நுழைவதில்லை; நுழைவோரையும் தடுக்கிறீர்கள்" என்றார். 
(லூக்கா நற்செய்தி 11:52)

அறிவுக் களஞ்சியம் என்றால் என்ன?

இறைவனைப் பற்றிய அறிவைத் தருகின்ற திருவிவிலியம்.

இறைவன் தீர்க்கக் தரிசிகளின் மூலமாக நமக்கு அறிவித்த நற்செய்திகள் திருவிவிலியத்தில் அடங்கியுள்ளன.

திருவிவிலியம் இறைவனது வார்த்தை.


திருவிவிலியம் நம் வாழ்வின் அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தரும் ஒரு அறிவுக் களஞ்சியம் போன்றது.

நாம் மீட்புப் பெற திருவிவிலிய அறிவு இன்றியமையாதது.

திறவுகோல்?

வீட்டிற்குள் செல்ல வேண்டுமென்றால் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டும்.

கதவைத் திறக்க திறவுகோல் வேண்டும்.

இயேசுவின் காலத்தில் திருவிவிலியம் திருச்சட்ட அறிஞர்கள் கையில் இருந்தது.

அதைத் திறக்க வேண்டிய திறவுகோல் அவர்கள் தான்.

இறைவார்த்தைக்கு அவர்களும் சரியான விளக்கத்தைக் காண்பதுமில்லை, (நீங்களும் நுழைவதில்லை.)

சாதாரண மக்களை சரியான விளக்கத்தைக் அறிய 
விடுவதுமில்லை. (நுழைவோரையும் தடுக்கிறீர்கள்.)

அதை வாசித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.

மக்களுக்கு சுயமாக எதுவும் தெரியாதாகையால் அவர்கள் கொடுத்ததுதான் விளக்கம்.

அவர்கள் சரியான விளக்கத்தைக் கொடுப்பதுமில்லை,

சாதாரண மக்களைச் சரியான விளக்கத்தைப் பெற விடுவதுமில்லை.

அவர்கள் தங்கள் கடமையைச் செய்யாததால்தான்

இயேசு, "திருச்சட்ட அறிஞரே, உங்களுக்குக் கேடு!"

என்று கூறுகிறார்.

ஏன்"நீங்களும் நுழைவதில்லை."
என்கிறார்?

திருச்சட்டங்கள் எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டனவோ அதைப் பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை.

சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அதற்கும் விருப்பம் போல் பொருள் கொடுத்தார்கள்.

ஓய்வு நாளில் வேலை செய்யக் கூடாது என்பது சட்டம்.

ஒரு முறை சீடர்கள் வயல்வெளியில் கதிர்களைக் கொய்து கசக்கியதையே செய்யக்கூடாத வேலை என்றார்கள்.

இயேசு ஓய்வு நாளில் குணமாக்கியதையே ஓய்வு நாளில் செய்யக்கூடாதது என்றார்கள்.

ஓய்வு நாளின் கடவுளையே ஓய்வு நாள் கடமையை மீறுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.

திருச்சட்ட அறிவைக் கொண்டு மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்றார்கள்.

 இறைவனின்  இரக்கத்தை விட சட்டங்களை மிகவும் முக்கியமாகக் கருதினார்கள்.

இரக்கத்தின் காரணமாக இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார்.

அதைத் தவறு என்றார்கள்.

இந்தக் கால நிலைமையின் அடிப்படையில் இந்த வசனத்தைக் தியானிப்போம்.

மீட்படைய பைபிள் அத்தியாவசியமானது இப்போதும் அனைவரும் நம்புகிறோம்.

ஆனால் நாம் பைபிளை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

பைபிளைச் சரியாகப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்,

தவறாகப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

விண்ணுலக வாழ்வை அடைய 
பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

இவ்வுலகில் வசதியாக வாழப் 
பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

அருளை ஈட்டப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

பொருளை ஈட்டப் பயன் படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள்.

இறைச்செய்தியை அறிவதற்காக இதுதான் பைபிள் என்று உலகுக்குத் தொகுத்துக் கொடுத்தது இறைமகன் இயேசு நிறுவிய கத்தோலிக்கத் திருச்சபை.

அது கொடுத்த பைபிளுக்கு மொத்தம் 73 புத்தகங்கள்.

பழைய ஏற்பாடு 46.
புதிய ஏற்பாடு.    27.

துவக்கத்திலிருந்தே பைபிள் செய்திகளை மக்களுக்குப் போதித்து அவற்றுக்கு உரிய விளக்கத்தைக் கொடுத்து வந்தது கத்தோலிக்கத் திருச்சபைதான்.

பதினாறாம் நூற்றாண்டு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

தாய்த் திருச்சபையின் பைபிள் போதனையைக் கேட்டு மக்கள் அதன்படி வாழ்ந்து வந்தனர்.

பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் என்று தங்களையே அழைத்துக் கொண்ட சிலர் 

கத்தோலிக்க பைபிளிலிருந்து தங்களுக்கு விருப்பமில்லாத ஏழு புத்தகங்களை நீக்கி விட்டு,

 அதற்குப் பைபிள் என்ற பெயரை வைத்துக் கொண்டு,

 பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுத்து போதிக்க ஆரம்பித்தார்கள்.

 அவர்கள் வைத்திருந்தது  உண்மையான பைபிள் அல்ல,

வசனங்களுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் உண்மையான விளக்கமும் அல்ல.

அவர்கள் பைபிளை சரியாகப் பயன்படுத்தவில்லை.

ஒரு மாணவன் வீட்டுப் பாடமாக ஔவையார் எழுதிய ஆத்திச்சூடியைப் பாராப் பாடமாக படித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய அம்மா அவனுடைய ஆத்திச்சூடி அறிவைச் சோதிக்க விரும்பி,

"ராஜா, ஊக்கமது கைவிடேல் என்ற பாட்டுக்கு அர்த்தம் சொல்லு."

பையன் பதம் பிரித்து பொருள் சொன்னான்,

"ஊக்கம் = ஊக்கம் தரக்கூடிய,
மது = மதுவை,
கைவிடேல்= விட்டு விடாதே.

மது அருந்தும் பழக்கத்தை விட்டு விடாதே, ஏனெனில் மது அருந்தினால் ஊக்கம் கிடைக்கும்."

பைபிள் வசனங்களுக்கு இதைப் போல் சொன்னால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் சிலர் பைபிள் வசனங்களுக்கு தப்பும் தவறுமாய் விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு  வசனங்களுக்கு விருப்பம் போல் பொருள் சொலலும் பிரிவினை சபைகள் ஏறத்தாழ 45000 உள்ளன.

இவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

இவர்கள் ஏற்றுக் கொள்வது ஏழு புத்தகங்கள் இல்லாத பைபிளை.

இவர்களில் பலர் காணிக்கை வசூலுக்காக மட்டுமே பைபிள் போதகம் செய்கிறார்கள்.

இவர்களுக்கு பைபிள் ஒரு வியாபாரப் பொருள்.

இவர்கள் பைபிள் பணி புரிவது அருள் ஈட்ட அல்ல, பொருள் ஈட்ட.

இயேசு சட்ட நூல் அறிஞர்கள் செய்ய தவற்றினைக் சுட்டிக் காண்பித்தது நாம் அப்படிப் பட்ட தவறுகளைச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான்.

பைபிளை வாசிக்கும் போது

 வசனங்களின் உண்மையான பொருளை

பைபிளைத் தந்த கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி புரிந்து கொண்டு 

அதன்படி வாழ்வோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைப்படி வாழ்வோம்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் பைபிள் வாசகங்களுக்கு குருவானவர் கொடுக்கும் விளக்கத்தைக் கூர்ந்து கவனிப்போம்.

இறைவாக்கு நமது வாழ்வாகட்டும்.

லூர்து செல்வம்.

Monday, October 14, 2024

"ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. "(லூக்கா நற்செய்தி 11:43)

 "ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. "
(லூக்கா நற்செய்தி 11:43)

இயேசு அன்றைய பரிசேயர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டுவதன் நாம் எப்படி குறைகள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த விரும்புகிறார்.

பரிசேயர்கள் ஆலயத்தில் முதன்மையான இருக்கைகளில் அமர விரும்பினார்கள்.

வெளியிடங்களில் மக்கள் தங்களை வணங்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

கோவிலில் எல்லா இருக்கைகளும் மக்கள் அமர்வதற்காகத்தான் போடப் பட்டுள்ளன.

முதல் வரிசையில் யாரும் அமரக்கூடாது என்று இயேசு சொல்லவில்லை.

ஒரு செயல் சரியானதா, தவறானதா என்று தீர்மானிப்பது செய்பவரின் நோக்கம் தான்.

கோவிலுக்கு நன்கொடை கொடுப்பது சரியா? தவறா?

இறையன்பின் அடிப்படையில் கொடுத்தால் அது நற்செயல்.
அதற்கு விண்ணகத்தில் பலன் உண்டு.

ஆனால் சுய விளம்பரத்துக்க்கக் கொடுத்தால் 
அது நற்செயல் அல்ல, 
அதற்கு விண்ணகத்தில் என்ன பலனும் இல்லை.

கடவுளுக்கு நமது செயல்களின் அந்தரங்க நோக்கம் தெரியும்.

பரிசேயர்கள் மற்றவர்கள் தங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக முதல் இருக்கைகளைத் தேடினார்கள்.

அது தவறு.

சுத்தமான உடை அணிந்து கோவிலுக்கு வருவது சரி.

மற்றவர்கள் தங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான உடை அணிந்து கோவிலுக்கு வருவது தவறு.

அவர்கள் தங்களது தவற்றின் மூலம் மற்றவர்களைப் பாவத்தில் விழ வைக்கிறார்கள்.

நாம் மற்றவர்களை வணங்க வேண்டும்.

வணங்கும் போது மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம்.

நாம் தாழ்ச்சி என்னும் புண்ணியத்தில் வளர்கிறோம்.

மற்றவர்கள் வணங்குவதை நட்பின் அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறோம்.

வணங்குவதும், வணக்கத்தை ஏற்றுக் கொள்வதும் சரி.

ஆனால் நாம் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற தற்பெருமை உணர்வுடன் பிறரின் வணக்கத்தை எதிர் பார்ப்பது தவறு.

இதைச் சுட்டிக்காட்டவே இயேசு பரிசேயர்களைப் பார்த்து,

" நீங்கள் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்கள்." என்கிறார்.

பரிசேயர்கள் மக்களுக்கு முன்னால் தங்களை புனிதர்களாக காட்டிக்கொள்ள விரும்பினர்.

மக்களின் பாராட்டை பெற ஆசைப்பட்டனர். சந்தை வெளிகளில் நடந்து செல்லும் போது, மக்கள் தங்களை வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

அன்றைய பரிசேயர்களைப் போல இன்றும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை நமது அனுபவத்தில் அறிகிறோம்.

நாம் அப்படிப் பட்டவர்களாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

 தங்களை நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ள, சமூக வலைதளங்களில் தங்களது நல்ல செயல்களை பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

தாங்கள் தாராள குணம் உள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ள கோயில்களுக்கு நிறைய நன்கொடைகள் தருபவர்களும் 
இருக்கிறார்கள்.

 உள்ளத்தில் பக்குவம் இல்லாதவர்கள்தான் இப்படிச் செய்வார்கள்.

நாம் நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நமது விசுவாசம் நமது நற்செயல்களில்தான் வெளிப்பட வேண்டும்.

செயல்கள் இல்லாத விசுவாசம் செத்த விசுவாசம் என்று இறைவாக்கு கூறுகிறது.

நமது செயல்கள் விசுவாசத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும், தற்பெருமையின் பிள்ளைகளாக அல்ல.

நாம்  மற்றவர்களை விட மேலானவர்கள் என்று உள்ளத்தில் நினைப்பதே தவறு.

அப்படி நினைப்பது நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குகிறது.

நல்லவர்கள் தாழ்ச்சியின் பிள்ளைகள்.

சிந்தனையிலும், சொல்லிலும், 
செயலிலும் 
பரிசுத்தர்களாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 13, 2024

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். (லூக்கா நற்செய்தி 11:41)

உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும். 
(லூக்கா நற்செய்தி 11:41)

பரிசேயர்கள் காரண காரிய தொடர்பு இல்லாமல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

அவர்கள் சாப்பிடுமுன் கை கழுவ வேண்டும். இது ஒரு சடங்கு.

காரணம், சுத்தமாக்குதல்.
காரியம், கை கழுவுதல்.

மனிதனுக்கு வெளியில் தெரியக்கூடிய உடல்‌ மட்டுமல்ல,

ஊனக்கண்ணால் பார்க்க முடியாத ஆன்மாவும் இருக்கிறது.

சாப்பிடுமுன் கை கழுவுவது வெளிப்புற சுத்தத்திற்காக.

மனிதன் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் 

உட்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும், வெளிப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும்.

வெளிப்புற சுத்தத்தை நோக்கமாகக் கொண்டு கை கழுவுவது போல, 

உட்புறச் சுத்தத்திற்காகவும் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும்.

ஆனால் அவர்கள் ஆன்மாவின் சுத்தத்துக்காக எதுவும் செய்யவில்லை.

ஆகையால்தான் அவர்கள் காரண காரியத் தொடர்பின்றி சடங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்றேன்.

இறை வசனத்தைத் தியானிப்போம்.

"உட்புறத்தில் உள்ளவற்றைத் தர்மமாகக் கொடுங்கள்."

உட்புறம் என்றால் என்ன?

உட்புறம் மனிதனின் உள்ளத்தை குறிக்கிறது. 

நமது ஐம்புலன்கள் நமது வெளிபுறத்தை உருவாக்குவது போல


நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், மற்றும் நோக்கங்கள் ஆகியவை நம்முடைய உட்புறத்தை உருவாக்குகின்றன.

உருவம் இல்லாத கருத்துகளாகிய (Concepts) எண்ணங்கள், உணர்வுகள்,  நோக்கங்கள் ஆகியவற்றின் உறைவிடம் நமது உள்ளம்.

மனிதன் பரிசுத்தமானவனாக இருக்க வேண்டுமென்றால் அவனது உள்ளம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

வெளிப்புற சுத்தம் மட்டும் அவனைப் பரிசுத்தமானவனாக மாற்றாது.

தர்மம் என்றால் என்ன?

நம்மிடம் உள்ளவற்றைத் தாராளமாக பகிர்ந்து கொள்வதுதான் தர்மம்.

பணத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தர்மம் அல்ல.

மற்றவர்களுக்கு உதவுவதற்காக  நம்முடைய நேரத்தையும் திறமைகளையும் பகிர்ந்து கொள்வதும் தர்மம் தான்.

இவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் 

நமது எண்ணங்களும், உணர்வுகளும்,  நோக்கங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

முதலாவது பகிர்ந்து கொள்ள எண்ண வேண்டும், அதாவது, விரும்ப வேண்டும்.

பகிர்ந்து கொள்வதன் நோக்கம் நல்லதாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு உதவுவது நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியான உணர்வுகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நமது உட்புறம் பரிசுத்தமானதாக இருந்தால் நமது பகிர்வு மற்றவர்களையும் பரிசுத்தமானவர்களாக மாற்றும்.

நமது நேரத்தையும், திறமைகளையும் மற்றவர்களை 
பரிசுத்தமானவர்களாக மாற்றுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

"அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் தூய்மையாயிருக்கும்."

நமது தூய்மையான எண்ணங்களையும், உணர்வுகளையும், நல்ல நோக்கத்தோடு மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது 

நமது உள்ளும் புறமும் மட்டுமல்ல, மற்றவர்களுடைய உள்ளும் புறமும் தூய்மையாகும்

ஆனால் நமது உள்ளத்தில் உள்ள எண்ணங்களும், உணர்வுகளும், நோக்கங்களும் பாவகரமானவைகளாக இருந்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நம்மைப் போல ஆக்கி விடுவோம்.

ஆகவே நமது வெளிப்புறத்தை மட்டுமல்ல, உட்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பரிசேயர்கள் பல வெளிப்புறச் சடங்குகளை கடைபிடித்தாலும், 

அவர்களின் உள்ளம் தூய்மையாக இல்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.

வெளிப்புறச் சுத்திகரிப்பை விட உட்புறச் சுத்திகரிப்பே முக்கியம்.


நாம் வெளியில் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும், நம் உள்ளத்தில் பொறாமை, கோபம், பொய் பேசுதல் போன்ற பாவங்கள் இருந்தால், நாம் உண்மையிலேயே தூய்மையானவர்களாக இருக்க முடியாது.

உள்ளத்தைத் தூய்மைப்படுத்துதல் மிகவும் முக்கியம்.

தர்மம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்: 

நாம் தர்மம் செய்யும் போது, நம் உள்ளத்தில் உள்ள சுயநலம், பொறாமை போன்ற குணங்கள் குறையும். 

அதற்கு பதிலாக, நம் உள்ளத்தில் கருணை, அன்பு, மற்றும் இரக்கம் போன்ற நல்ல குணங்கள் வளரும்.

 உள்ளம் தூய்மையானவர்கள், தூய்மையான வாழ்க்கையை வாழ்வார்கள்.

 அவர்கள் மற்றவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவார்கள், 

சமூகத்திற்கு நன்மை செய்வார்கள், 

மேலும் கடவுளுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் 
 நமக்கு  வெளிப்புறச் சுத்திகரிப்பை விட உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதே முக்கியம்.

  தர்மம் செய்வதன் மூலம் நாம் நம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி,

 ஒரு தூய்மையான வாழ்க்கையை வாழ்வோம்.

"தர்மம் தலை காக்கும்."

லூர்து செல்வம்.

Saturday, October 12, 2024

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். (லூக்கா நற்செய்தி 11:30)

யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். 
(லூக்கா நற்செய்தி 11:30)


இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இயேசுவின் போதனையை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள், ஏற்றுக் கொள்ளாதவர்களும் இருந்தார்கள்.

ஏற்றுக் கொள்ளாதவர்கள் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் தான் சரியான போதகர் என்று நிரூபிக்க அடையாளம் காட்ட வேண்டும் என்று கேட்டார்கள்.

இயேசு பழைய ஏற்பாட்டுத் தீர்க்கத்தரிசி யோனாவைத் தனக்கு அடையாளமாகக் கோடுக்கிறார்.

யோனா கடலுக்குள்  எறியப்பட்ட போது ஒரு பெரிய மீன் அவரை விழுங்கி விட்டது.


 யோனா மூன்று நாள் அல்லும் பகலும் அந்த மீன் வயிற்றில் இருந்தார். 


மூன்றாவது நாள் மீன் அவரைக் கரையில் கக்கி விட்டது.

" யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார்."

என்று இயேசு கூறுகிறார்.

மூன்றாம் நாள் கக்கப்பட்ட யோனாவின் போதனையை நம்பி‌ நினிவே நகர மக்கள் மனம் திரும்பினார்கள்.

யோனாவை அடையாளமாகக் காட்டியதன் மூலம் இயேசு தனது மரணத்தையும், அடக்கத்தையும், மூன்றாம் நாள் உயிர்க்கப் போவதையும் முன்னறிவிக்கிறார்.

இயேசு போதிக்கும் போது நம்பாதவர்கள் அவரது உயிர்ப்பைப் பார்த்த பிறகாவது அவருடைய வார்த்தைகளை ஏற்று மனம் திரும்ப வேண்டும்.

யோனா நினிவே நகர மக்களை மனம் மாறச் செய்தார்.

இயேசுவும் மக்கள் மனம் மாறவே போதிக்கிறார்.

இயேசுவின் போதனையை மக்கள் ஏற்றுக் கொண்டு, மனம் திரும்பி, இறை அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நினிவே நகர மக்கள் யோனாவின் வார்த்தைகளை நம்பி,

 சாக்கு உடை உடுத்தித் தவம் செய்ததோடு 

தங்களை மன்னிக்கும்படி கடவுளை நோக்கி மன்றாடினார்கள். 

தம் தீய வழிகளையும், தாம் செய்துவந்த கொடுஞ்செயல்களையும் விட்டொழித்தார்கள்.

கடவுளும் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

இயேசுவின் போதனையைக் கேட்பவர்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.

கடவுள் இரக்கமுள்ளவர்.

நாம் பாவம் செய்தாலும் மனம் திரும்பி மன்னிப்புக் கேட்க கால அவகாசம் கொடுக்கிறார்.

அதை‌ மனம் திரும்பவும் மன்னிப்புக் கேட்கவும் பாவப் பரிகாரம் செய்யவும் நாம் பயன்படுத்த வேண்டும்.

கால அவகாசம் கொடுத்ததற்காக நன்றி கூற வேண்டும் 

பாவ வாழ்க்கையை விட்டதோடு நின்று விடாமல் புண்ணிய வாழ்வில் வளர வேண்டும்.

நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து,
நம்மை மன்னிக்க
 மனிதனாகப் பிறந்த இயேசு நமக்கு எல்லா வகையிலும் முன்மாதிரிகையாக வாழ்ந்தார்.

 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 
(மத்தேயு நற்செய்தி 5:3)
என்று நமக்குப் போதித்த இயேசு,

நமக்கு முன்மாதிரிகையாக அவரே ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து,
ஏழையாக மரித்தார்.

பகைவர்களை நேசியுங்கள் என்று போதித்த இயேசு 
தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும் மன்னித்து நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.

உலக இறுதியில் மரித்தோர் அனைவரும் உயிர்ப்பர் என்பதை நாம் நம்பும் பொருட்டு அவரே மரித்த‌ மூன்றாம் நாள் உயிர்த்தார்.

அவர் உயிர்த்தது அவர் இறைவன் என்பதற்கு ஆதாரம்.

உலகைச் சார்ந்ததாகிய நமது உடல் (Material body)விண்ணகம் செல்வதற்காக ஆன்மீக உடலாக 
(Spiritual body) மாறி உயிர்க்கும்.

ஆகவே நமது உடலுக்கு உரிய மரியாதையைக் கொடுப்போம்.

அதைப் பாவம் செய்யப் பயன்படுத்தாமல் புண்ணிய வாழ்வு வாழப் பயன்படுத்துவோம்.

இயேசு தனது பரிசுத்தமான உடலை நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யப் பயன்படுத்தினார்.

தவ முயற்சிகள் செய்வதன் மூலம் நாமும் நமது உடலைப் பாவப்பரிகாரம் செய்யப் பயன்படுத்துவோம்.

தன்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஆன்மாவுக்கு அது செய்யும் நன்றிக் கடனாக இருக்கட்டும்.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து விண்ணகம் சென்றது போல 

நமது உடலும் உலக இறுதி நாளில் உயிர்த்து விண்ணகம் செல்ல அதை வாழ்த்துவோம்.

லூர்து செல்வம்.

Friday, October 11, 2024

இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். (மாற்கு நற்செய்தி 10:30)

 இம்மையில் நூறு மடங்காக 
வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். 
(மாற்கு நற்செய்தி 10:30)


இராயப்பர் இயேசுவிடம் "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார். 
(மாற்கு நற்செய்தி 10:28)

"எங்களுக்கு என்ன கிடைக்கும்?" என்று கேட்காமல் கேட்கிறார்.

 இயேசு மறுமொழியாக, "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 

இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்." என்று கூறுகிறார்.
(மாற்கு நற்செய்தி 10:29,30)

இயேசு கடவுள், நமது ஆன்மீக மீட்பர்.

ஆன்மீக மீட்பரைப் பின் பற்றுவதற்காக சீடர்கள் உலகைச் சார்ந்த அனைத்தையும் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.

அதற்குப் பிரதிபலனாக  விட்டு வந்த லௌகீக வசதிகளுக்கு ஈடாக, அவற்றை விட மேலான ஆன்மீக பிரதிபலன்களைத் தருவதாக இயேசு வாக்களிக்கிறார்.

விட்டு விட்டு வந்தது லௌகீகம். பிரதிபலன் ஆன்மீகம்.

விட்டு விட்டு வந்தது உலகின் ஒரு பகுதியைத்தான்.

பிரதிபலனாகக் கிடைத்திருப்பது ஆன்மீகப் பணிக்காக முழு உலகமும்.

(உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள்.)

விட்டு விட்டு வந்தது ஒரு வீடு.
பிரதிபலனாகக் கிடைத்திருப்பது நற்செய்தியை அறிவிக்க உலகிலுள்ள அனைத்து வீடுகளும்.

"நூறு மடங்காக" முழுமையைக் குறிக்கும்.

இனி உலகிலுள்ள அனைவரும் அவர்களுடைய சகோதர, சகோதரிகள்தான்.

உலகிலுள்ள அத்தனை தாய்மாரும் அவர்களுடைய 
தாய்மார்தான்.

அனைத்து நிலபுலன்களும் ஆன்மீக ரீதியாக அவர்களுடையவைதான்.

இயேசு தான் செய்ய வந்த பணியைத் தொடர்வதற்காக உலகம் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்து விட்டார்.

விட்டு விட்டு வந்தது லௌகீக உறவு.

இனி கிடைக்கப் போவது உலகோர் அனைவருடனும் ஆன்மீக உறவு.

அன்று இயேசு தன்னுடைய சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் அவர்களுடைய வாரிசுகளாகிய நமது குருக்களுக்கும் பொருந்தும்.

நமது குருக்கள் வானத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வரவில்லை.

நமது குடும்பங்களிலிருந்துதான் வருகிறார்கள்.

நமது குடும்பங்கள் தான் குருத்துவத்துக்கான நாற்றங்கால்.

நமது குடும்பம் லௌகீக அமைப்பா? ஆன்மீக அமைப்பா?

முழுக்க முழுக்க ஆன்மீக அமைப்பு.

திருமணம் ஒரு தேவத்திரவிய அனுமானம்.

அது வரை தனித்தனியாக வாழ்ந்து வந்த ஆணும், பெண்ணுமாகிய இருவர் 

இறைவனால் ஈருயிர் ஓருடலாக இறைவனின் சாயலில் இணைக்கப் படுகிறார்கள்.

எப்படி கத்தோலிக்கத் திருச்சபை இயேசுவால் நிறுவப்பட்ட ஆன்மீக அமைப்போ

அதேபோல் கத்தோலிக்கக் குடும்பமும் இயேசுவால் நிறுவப்பட்ட ஆன்மீக அமைப்பு.

ஒரு வகையில் குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை.

குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணம் கணவனும் மனைவியும் தாங்கள் தங்கள் ஆன்மீகக் கடமைகளை மறந்து உலகியல் ரீதியாக வாழ்வதுதான்.

இதற்கு அடிப்படைக் காரணம் நாம் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யும் போது அன்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட பணம் உட்பட்ட உலக உடமைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதுதான்.

குடும்பங்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து முழுக்க முழுக்க ஆன்மீக ரீதியாக வாழ ஆரம்பித்தால் பிரச்சினைகள் வராது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆன்மீக ரீதியில் வளர்க்க ஆரம்பித்தால் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குருக்கள் வர ஆரம்பிப்பார்கள்.

அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் என்ற குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து வந்தவர்கள் 

உலகமே குடும்பம் என்ற பெரிய வட்டத்துக்குள் வந்து விடுகிறார்கள்.

உலகமே ஒரு குடும்பம் என்ற ஆன்மீக சிந்தனை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் அனைத்து கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களையும் குருக்கள் என்று தான் அழைக்கிறது.

கிறிஸ்துவின் பணிகளான பாவப் பரிகாரப் பலி, திவ்ய நற்கருணை, திரு விருந்து, பாவமன்னிப்பு, அதிகாரப் பூர்வமாக நற்செய்தியை அறிவித்து விளக்குதல் ஆகிய பணிகளைச் செய்பவர்கள் பணிக் குருத்துவத்தினர்.

பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் இதில் அடங்குவர்.

மற்றவர்கள் அனைவரும் பொதுக் குருத்துவத்தினர்.

குருக்கள் குடும்பத்திலிருந்து வந்தாலும் முழுக்க முழுக்க உலகக் குடும்பத்துக்கு உரியவர்கள்.

அவர்களுடைய பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் உலகக் குடும்பத்தில் அடங்குவர்.

அந்த வகையில் அனைவருக்கும் செய்வது போல அவர்களுக்கும் ஆன்மீகம் சார்ந்த அனைத்து உதவிகளையும் செய்வர்.

பணம் போன்ற உலகைச் சார்ந்த உதவிகளைச் செய்ய மாட்டார்கள்.

ஏனெனில் இரத்த உறவைத் துறந்துதான் முழுக்க முழுக்க ஆன்மீகப் பணிக்கு வந்திருக்கிறார்கள்.

உலகைச் சார்ந்த உதவிகளைச் செய்தால் அவர்கள் உறவுகளை முற்றிலும் துறக்கவில்லை என்றாகிவிடும்.

முற்றிலும் துறந்த துறவிகளின் குடும்பத்தினருக்கு இறைவனின் ஆசீர்வாதம் அபரிமிதமாகக் கிடைக்கும்.

விண்ணகத்தில் அவர்களுக்கு அளவு கடந்த செல்வம் சேர்ந்திருக்கும்.

உலகச் செல்வம் அழியக்கூடியது, விண்ணகச் செல்வம் என்றும் நிலைத்திருக்கும்.

"இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்."

இறைவனுக்காக உறவுகளைத் துறந்தவர்களில் வாழ்க்கையில் இன்னல்கள், துன்பங்கள் மிகுந்திருக்கும்.

ஆனால் மறுவுலகில் நிலை வாழ்வு பேரின்பம் நிறைந்ததாக இருக்கும்.

அழியும் செல்வத்தை இழப்போம், அழியாச் செல்வத்தை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.