Sunday, March 5, 2023

இயேசு ஒப்புக்கொடுத்த பரிகாரப் பலி.

இயேசு ஒப்புக்கொடுத்த பரிகாரப் பலி.


"தாத்தா, இயேசு நாம் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரம் செய்து,

நமக்கு பாவ மன்னிப்புத் தந்து,

பாவத்திலிருந்து நம்மை மீட்பதற்காகத்தானே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார்.

மனிதன் தனது ஐம்பொறிகளால் விதவிதமான பாவங்கள் செய்து வருகின்றானே,

அவை ஒவ்வொன்றுக்கும் இயேசு பரிகாரம் செய்தாரா?"

"'ஏன் இந்த திடீர் சந்தேகம்?"

"இது திடீர் சந்தேகம் அல்ல. பல நாட்கள் மனதுக்குள் இருந்த சந்தேகம் இன்று வெளி வருகிறது."

"'மனிதன் தனது சிந்தனை, சொல், செயல்களால் பாவங்கள் செய்து கொண்டு வருகிறான்.

சிந்தனை நமது உள்ளத்தைச் சார்ந்தது.

சொற்களும் செயல்களும் ஐம்பொறிகளைச் சார்ந்தன.

சிந்தனையால் மனிதன் செய்கின்ற மிகப்பெரிய பாவம் என்ன என்று சொல் பார்ப்போம்."

"எல்லா பாவங்களும் சிந்தனையிலிருந்து தான் புறப்படுகின்றன. 

மிகப்பெரிய பாவம் என்று கேட்கிறீர்கள்.

இறைவனது சித்தம் எது என்று தெரிந்தும் அதை தன் சிந்தனையால் ஏற்க மறுப்பது தான் மிகப்பெரிய பாவம்."

"'கடவுள் சர்வ வல்லவர். மனிதன் மிகவும் பலகீனமானவன். 

பலகீனமான மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வதற்காகத்தான்,

பாவம் தவிர மற்ற எல்லா மனித பலகீனங்களையும் அவர் மனம் உவந்து ஏற்றுக் கொண்டார்.

 நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தினால் நாம் இயல்பிலேயே பலகீனமானவர்களாகப் பிறந்தோம்.

ஆனால் இயேசு மனித பலகீனங்களை அவராக ஏற்றுக்கொண்டு பிறந்தார்.

இயேசு ஏன் பிறந்தார்?"


"நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய."

"'அவர் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்பது யாருடைய சித்தம்?"

"தந்தையின் சித்தம்."

"'தந்தை கடவுள். மகனும், பரிசுத்த ஆவியும் தந்தையுடன் ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை.

அப்படியானால் தந்தையின் சித்தம் தான் மகனின் சித்தமும்.

தந்தையின் சித்தத்தை,

அதாவது ஒரே கடவுளின் சித்தத்தை,

நிறைவேற்றுவதற்காக உலகிற்கு வந்த இயேசு,

ஏன்  கெத்சமனி தோட்டத்தில்,

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்"

என்று வேண்டினார்?"

"படப் போகும் பாடுகளின் தாங்க முடியாத வேதனைகளை எண்ணியதால் ஏற்பட்ட பயத்தால் அவ்வாறு வேண்டினார்."

"'இயேசு கடவுள்,
 அவரால் பயப்பட முடியுமா?"

"பயம் என்ற மனித பலகீனத்தை ஏற்றுக் கொண்டுதான் அவர் மனிதனாகப் பிறந்தார்.

எந்தத் துன்பகலத்தை அனுபவிப்பதற்காக உலகிற்கு வந்தாரோ,

அதையே அகற்றும்படி கேட்கும் அளவிற்கு அவர் மனதில் அளவு கடந்த பயம் ஏற்பட்டது.

இந்த பயம் அவராகவே நாம் நமது சிந்தனையில் இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொள்ளாமை என்ற பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்கு என்று அவராகவே ஏற்றுக் கொண்ட பயம்."

"'அதன் காரணமாகத்தான் அவரது உடலில் இரத்த வியர்வை கொட்டியது.

கெத்சமனி தோட்டத்தில் அவர் இரத்த வியர்வை வியர்க்கும் அளவுக்கு அவர் பயத்தை அனுபவித்தது

 சிந்தனையால் இறைவன் சித்தத்துக்கு எதிராக நாம் செய்யும் எல்லாவிதமான பாவங்களுக்கும் பரிகாரமாகத்தான்.

சிந்தனையால் நாம் செய்ய விரும்பும் பாவங்களைச் செய்ய நமது உடல் ஒத்துழைக்கிறது.

அதனால் தான் அத்தகைய பாவங்களுக்குப் பரிகாரமாக மனதில் பயத்தையும், உடலில் இரத்த வியர்வையையும் இயேசு
ஏற்றுக் கொண்டார்.  

இறைவன் சித்தத்திற்கு எதிராக நமக்கு சோதனைகள் வரும்போது,

"எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்று நாம் செபிக்க வேண்டும் என்பதையும் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

என்ன நேர்ந்தாலும் இறைவன் சித்தத்தை நிறைவேற்றுவது மட்டுமே நமது கடமை."

"பாடுகள் படும்போதும் போதனை!"

"'இயேசு பாவப் பரிகாரம் செய்து கொண்டிருந்த போது மூன்று சீடர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள்,

இன்று நாம் செய்வது போல.

ஆகவே தான் விழித்திருந்து செபம் செய்யுங்கள் என்று தாய் திருச்சபை நமக்கு அறிவுரை கூறுகிறது.

இரத்த வியர்வை சிந்தியதை அடுத்து வரும் ஒவ்வொரு நிகழ்வும் நாம் செய்யும் ஒவ்வொரு விதமான பாவங்களுக்கும் பரிகாரமாகத்தான்.

அடுத்து அவரது எதிரிகள் அவரைக் கைது செய்தார்கள்.

கைது செய்தார்கள் என்று சொல்வதை விட கைது செய்ய தன்னையே கையளித்தார் என்று சொல்வது தான் பொருந்தும்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment