Monday, March 27, 2023

பட்டிமன்றமும், பைபிளும்.



பட்டிமன்றமும், பைபிளும்.

பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

விவாதத்திற்கான தலைப்பு:
கடவுள் இருக்கிறாரா?

இருக்கிறார் என்று ஒரு அணியும்,
இல்லை என்று ஒரு அணியும் பேச வேண்டும்.

என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

"கடவுள் இல்லை" அணியை சேர்ந்த ஒருவர் கையில் பைபிளுடன் மைக் முன்வந்து நின்று, எதிர் அணியினரை ஏளனமாகப் பார்த்தார்.

''கடவுள் இருக்கிறார்' அணியினர் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பைபிள்  வைத்திருக்கிறார்கள்.

எதற்காக என்று தெரியவில்லை.

பைபிளை வாசிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு கடவுள் இல்லை என்ற உண்மை புரிந்திருக்கும்.

பைபிள் கடவுள் இல்லை என்று சொல்கிறது என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

என்னை நம்ப வேண்டாம். பைபிளை நம்புங்கள்.

பழைய ஏற்பாட்டில் தாவீது அரசர் தனது திருப்பாடல்களில் "கடவுள் இல்லை'' என்று தெளிவாக சொல்கிறார்.

சந்தேகம் இருந்தால் பைபிளை திறந்து,  "திருப்பாடல்கள்14:1,  53:1" வசனங்களை வாசித்து பாருங்கள்.

இரண்டு வசனங்களும், "கடவுள் இல்லை" என்ற வார்த்தைகளோடு ஆரம்பிக்கின்றன.

புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவே 

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான்."

என்று கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் அவர் ஆண்டவர் இல்லை என்று தானே அர்த்தம்.''

இன்னும் என்னவெல்லாமோ பேசி விட்டு அமர்ந்தார்.

எதிரணியில் ஒருவர் கையில் பைபிளுடன் மைக் முன்வந்து நின்றார்.

"எனக்கு முன் பேசிய நண்பர் தான் ஒரு அறிவிலி, 

பச்சையாகச் சொன்னால்,

 முட்டாள் என்பதை  எல்லோருக்கும் தெரியப்படுத்துவதற்காகவே பட்டிமன்றத்தில் கலந்து கொண்டார் என்று நினைக்கிறேன்.


 அவர் கூறியபடியே திரு பாடல் வசனங்கள் "கடவுள் இல்லை" என்று தான் ஆரம்பிக்கின்றன.

ஒருவன் மாட்டின் வாலை மட்டும் பார்த்துவிட்டு,

 "எங்கள் தோட்டத்தில் ஒரு மாடு நிற்கிறது.

 அதற்கு வால் மட்டுமே இருக்கிறது. உடலின் வேறு உறுப்புக்கள் எதுவும் இல்லை." 

என்று  சொன்னால் அவனை குருடன் என்று அழைப்பதா விழிகண்குருடன் என்று அழைப்பதா?

.‛கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்; என்ற திருப்பாடல்கள் வசனத்தில் நண்பருக்கு முதல் இரண்டு வார்த்தைகள் மட்டுமே தெரிகின்றன.

அதை பார்த்தவுடன் கண்கள் குருடாகி விடுகின்றன.

கடவுள் இல்லை’ என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர்.

ஆனால் நண்பர் ஒரு பெரிய அறிவிலி. அதனால் தான் சப்தமாகச் சொல்லிவிட்டார்.

இயேசு கடவுள். 

"என்னை நோக்கி, "ஆண்டவரே, ஆண்டவரே" என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். 

வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான்."

வானகத்திலுள்ள தந்தையும், இயேசுவும் ஒரே கடவுள்தான்.

தந்தையின் விருப்பம் தான் இயேசுவின் விருப்பம்.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுகிறவன் இயேசுவின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான்.

 ஏனென்றால் இரண்டும் ஒரே விருப்பமே.

இறை அரசுக்குள் நுழைய வேண்டுமென்றால் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல் வெறுமனே அவரை "இறைவா இறைவா" என்று அழைத்து என்ன பயன்?


தன்னை ஆண்டவரே என்று அழைக்க வேண்டாம் என்று இயேசு சொல்லவில்லை.

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால்

 மகனை "ஆண்டவரே ஆண்டவரே" என்று அழைத்துப் பயனில்லை.

இதை உணராமல் நண்பர் இயேசு ஆண்டவரே இல்லை என்கிறார்.

இப்போது அவரிடம் ஏன் என்று கேட்டால் அவர் என்ன சொல்வார்?

"நான் ஏற்கனவே என்னை அறிவிலி என்று நிரூபித்து விட்டேன்.

அறிவிலியிடம் எதிர்பார்க்க கூடாததை ஏன் எதிர்பார்க்கிறீர்கள் என்று நம்மிடம் கேட்பார்.

ஆகவே அவரை இதோடு விட்டு விடுவோம்."

பைபிளை வாசிப்பவர்கள் இருவகை.

ஒரு வகையினர் இறைவாவாக்கை வாசித்து அதன்படி வாழ வேண்டும் என்பதற்காக பைபிளை வாசிப்பார்கள்.

இன்னொரு வகையினர் தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று முதலில் தாங்களே தீர்மானித்து விடுவார்கள். 

பிறகு தங்களது தீர்மானத்திற்கு ஆதரவாக பைபிளில் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவார்கள்.

பைபிள் வசனங்களுக்கு தங்களது தீர்மானத்திற்கு ஏற்ற அர்த்தத்தை அவர்களே கொடுத்துக் கொள்வார்கள்.

அவர்கள் தேடுவது இறைவாக்கை அல்ல, தங்களது வாக்கை.

சமீபத்தில்  திருப்பூர் சாலமோனின் காணொளி ஒன்று WhatsApp message ஆக வந்திருந்தது.

சாலமோனுக்கு கத்தோலிக்க விசுவாசம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

அன்னை மரியாள் பக்தியை விரும்பாதவர் என்றும் அனைவருக்கும் தெரியும்.

அவர் எதற்காக அன்னை மரியாளைப் பற்றி காணொளி தயாரிக்கிறார்?

அன்னை மரியாளின் பெருமையைக் குறைப்பதாக நினைத்துக் கொண்டு,

 அதுவும் இயேசுவின் உதவியோடு.

அன்னை மரியாளைப் பற்றிக் குறைவான மதிப்பீடு கொண்டிருக்கும் அவர்,

 அவருடைய மதிப்பீட்டுக்கு பைபிளின் உதவியைத் தேடுகிறார்.

லூக்காஸ் நற்செய்தி 11ம் அதிகாரம் 27ம் வசனத்தில்,

இயேசு போதித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு பெண் இயேசுவைப் பார்த்து,

 "உம்மைத் தாங்கிய வயிறும், நீர் பாலுண்ட உறுப்புகளும் பேறுபெற்றவையே" 
என்று குரலெடுத்துக் கூறினாள்.

அதற்கு இயேசு,

 "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.
(லூக். 11:28)

அவர்கள் மரியாளை விட பேறுபெற்றவர்களாம்.

தன் தாயை விடப் பேறுபெற்றவர்கள் என்ற அர்த்தத்தில் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை

ஏனெனில் அன்னை மரியாள் தனது வாழ்வின்  ஆரம்பம் முதல், இறுதிவரை கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்ததனால்தான் பேறுபெற்றவள்.

கத்தோலிக்கர்களாகிய நாம் அன்னை மரியாள் கடவுளின் தாய் என்பதால் மற்றப் புனிதர்களுக்குக் கொடுக்கும் வணக்கத்தைவிட அதிக வணக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அது நண்பருக்குப் பொறுக்கவில்லை.

இயேசு கூறும் வார்த்தைகளின் பொருளைப் புரிந்து கொள்ளாமல்

அன்னை மரியாளை விடப் அதிகம்  பேறுபெற்றவர்களும் இருக்க முடியும் என்ற பொருளில் இயேசு கூறுவதாக மக்கள் நினைக்க வேண்டும் என்று காணொளி வெளியிட்டிருக்கிறார்.

உண்மையில் இயேசு  என்ன பொருளில் கூறினார்?

அனைவரும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, 

அதைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்ற பொருளில்தான் இயேசு அவ்வாறு கூறினார்.

அன்னை மரியாள் அதைத்தான் செய்து கொண்டிருந்தாள்.

மரியாளின் பக்தர்கள் அவளைப் பாக்கியவதி என்று சொன்னால் மட்டும் போதாது.

அவளைப் போலவே வாழ வேண்டும்.

தாயைப் போல வாழ்பவர்தான் பிள்ளை.

இன்னொரு சூழ்நிலையிலும் இயேசு இதே போல் சொன்னார்.


ஒரு நாள் இயேசு போதித்துத் கொண்டிருந்தபோது,

 ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.

 இதைத் தம்மிடம் கூறியவனுக்கு அவர் மறுமொழியாக: "யார் என் தாய்? யார் என் சகோதரர்?" என்று சொல்லி,

 தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, "இதோ, என் தாயும் என் சகோதரரும்.

 வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்."
(மத்.12:46-50)

இந்த வசனத்தையும் நமது பிரிவினை சகோதரர்கள் இயேசுவின் அன்னைக்கு எதிராக பேச பயன்படுத்திக் கொள்வார்கள்.

இயேசு தனது தாயை மறுப்பதற்காக இப்படிச் சொல்ல வில்லை.

அவரது தந்தையின் விருப்பப்படி நடக்கிறவர்கள் அனைவரும் அவருக்குத் தாய் போன்றவர்கள் தான் என்று சொல்வதற்காகவே

அப்படிச் சொன்னார்.

எப்போது ஒருவன் தனது தந்தைக்கு பெருமை சேர்ப்பான்?

அவன் தனது தந்தையைப் போலவே வாழும் போது.

அவன் வாழ்வதை பார்த்தவர்கள் 
அவன் இன்னாருடைய மகன் என்று கூற வேண்டும்.

இயேசு எந்த சூழ்நிலையிலும் 
தனது தாயைப் பற்றி குறைத்து பேசவில்லை.

விண்ணகத் தந்தையின் விருப்பப்படி நடப்பதன் பெருமையை நமக்கு உணர்த்துகிறார்.


இயேசு அன்னை மரியாளின் மகன் மட்டுமல்ல, அவளைப் படைத்த கடவுளும் அவர்தான்.

சென்பப் பாவ மாசு இன்றி அவளைப் படைத்தவர் அவர்தான்.

அவளைத் தனது அருளால் நிரப்பியவர் அவர்தான்.

வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி வாழ வரம் கொடுத்தவர் அவர்தான்.

அன்னை மரியாள் தனது முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினாள்.

நூற்றுக்கு நூறு அர்ப்பண வாழ்வு வாழ்ந்த தன் அன்னையை எப்படி அவர் குறை சொல்லுவார்?

எந்தவித காரணமும் இன்றி மரியாளைப் பிடிக்காத பிரிவினை சகோதரர்கள் 

அவளை குறை சொல்வதற்காகவே

 இறைவாக்கிற்கு  தங்கள் இஷ்டத்திற்கு   பொருளைக் கொடுக்கின்றார்கள். 

அன்னை மரியாள் என்றும் அருள் நிறைந்தவள்.

"அருள் நிறைந்த அன்னையே வாழ்க." 

லூர்து செல்வம்.

.

No comments:

Post a Comment