Wednesday, March 15, 2023

பாடுகளின்போதும் இயேசு செய்த நன்மைகள்.

பாடுகளின்போதும் இயேசு செய்த நன்மைகள்.


இயேசு நல்லவர்
எப்போதும் நல்லவர்.

 பாடுகள் பட்டு கொண்டிருந்த போதும் அவரால் நன்மைகள் செய்யாமல் இருக்க முடியவில்லை.

கெத்சமனி தோட்டத்தில் அவரைத் தலைமை குருவின் ஆட்கள் கைது செய்த போது சீடர்களுள் ஒருவர் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி அவனுடைய வலக்காதைத் துண்டித்தார்.

ஆனால் இயேசு வெட்டப்பட்ட காதை திரும்பவும் அது இருந்த இடத்திலேயே ஒட்டி வைத்து விட்டார்.

அப்போதும் கைது செய்தவர்களுக்கு மனம் இளகவில்லை.

தலைமைக்குருக்கள் பிலாத்துவிடம் இயேசுவை அழைத்துச் சென்று 

அவரைப் பற்றி பல குற்றச்சாட்டுக்களைக் கூறினாலும்,

அவனால் அவரிடம் எந்தக் குற்றத்தையும் காண முடியவில்லை.

அவர்கள் "கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று சொன்னவுடன்,

கலிலேயாவை ஆண்டு வந்த ஏரோதுவிடம் அவரை அனுப்பினான்.

அவனாலும் அவரிடம் எந்தக் குற்றத்தையும் காண முடியவில்லை.

அவன் அவரை அவமானப்படுத்தி, திரும்பவும் பிலாத்துவிடமே அனுப்பிவிட்டான். 

இயேசு தான் பட்ட அவமானத்திற்குப் பதிலாக அவர்கள் இருவருக்கும் நட்பைப் பரிசாகக் கொடுத்தார்.

"அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர்."
(லூக்.23:12)

"உனக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்" என்ற அவரது போதனையைச் செயலில் காட்டினார்.

பிலாத்துவின் மனைவி 
 கிலவுதியா ப்ரோக்யூலா ஒரு ரோமானிய இளவரசி.

குற்றம் எதுவும் செய்யாத இயேசுவை பிலாத்து மரணத் தீர்ப்பிடுவதற்காக விசாரித்துக் கொண்டிருந்தபோதே 

அவர் அவனது மனைவியின் உள்ளத்தில் விசுவாச விதையை விதைத்தார்.

அவள் பிலாத்துவிடம் ஆளனுப்பி,

 "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள். (மத்.27:19)

இயேசு விதைத்த விசுவாச விதை முளைத்து பலன் தர ஆரம்பித்தது.

இயேசுவின் மரணத்திற்குப் பின் அவள் கிறிஸ்தவளாக மாறினாள்.

புனித சின்னப்பர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது அவரிடம் ஞானஸ்நானம் பெற்றாள்.


"குளிர்காலம் தொடங்குமுன் காலம் தாழ்த்தாமல் வந்து விடும். ஐபூலு, பூதே, லீனு, 'கிலவுதியாள்,' மற்றுமுள்ள சகோதரர் அனைவரும் உமக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். ஆண்டவர் உம்மோடிருப்பாராக. இறை அருள் உங்களோடிருப்பதாக.''
(2 திமோ.4:21)
என்ற இறைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது.

அவருக்கு மரணத் தீர்ப்பிட்ட பிலாத்துவையும் அவர் கைவிடவில்லை.

அவர் ரோமை அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராக மாறி வேத சாட்சியாக மரித்தார்.

பாடுகளின் போது தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் அனைவரையும் இயேசு மன்னித்து விட்டார் என்பதற்கு பிலாத்துவின் வாழ்க்கையின் இறுதி ஒரு சான்று.


"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" (மத்.27:4)

என்று இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸ் தனது பாவத்தை ஏற்றுக் கொண்டான். 

காட்டிக் கொடுப்பதற்காக அவன் பெற்ற வெள்ளி காசுகளை வீசி எறிந்து விட்டான்.

ஆனாலும் இயேசுவிடம் நேராக வராமல் தற்கொலை செய்து கொண்டான்.

அவன் தற்கொலை செய்து கொண்டது பாவம்.

ஆனாலும் அவனது கழுத்தை சுருக்கு கயிறு இறுக்கி அவனுக்கு வந்த மரணத்தின் இறுதி வினாடியில் இயேசுவின் இரக்கம் அவனது உள்ளத்தைத் தொட்டு மனதைத் திருப்பியிருக்கும் என்பது அடியேனது நம்பிக்கை.


"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்ற தன் அன்பு மகனின் மன்றாட்டை தந்தை கேட்காமல் இருந்திருப்பாரா?

அன்பின் மிகுதியால்தானே தன் மகனையே பாடுகள் பட்டு மரிக்க உலகிற்கு அனுப்பினார்!

தன்னைச் சிலுவையில் அறைந்த வீரர்களுக்கு அவர் தனது அன்னை தனக்காகத் தயாரித்த , உடைகளை எல்லாம் பரிசாகக் கொடுத்தாரே!

தங்களது நோய்கள் குணமாவதற்காக அவரது உடையை தொடுவதற்கு எத்தனை ஆயிரம் பேர் அவர் பின்னாலே சென்றார்கள்!

அந்த உடைகளை வீரர்கள் தாங்களே தங்களுக்குள் பங்கு வைத்துக் கொண்டாலும் இயேசுவின் அனுமதி இன்றி அதை செய்திருக்க முடியுமா?

அவருடைய அனுமதி இன்றி அவரை யாரும் தொட்டிருக்க முடியாது.

அவருடைய அனுமதி இன்றி யாரும் அவரைக் கைது செய்திருக்க முடியாது.

அவருடைய அனுமதி இன்றி யாரும் அவரை அடித்திருக்கவோ, அவமானப்படுத்தியிருக்கவோ முடியாது.

அவருடைய அனுமதி இன்றி யாரும் அவரைச் சிலுவையில் அறைந்திருக்க முடியாது.

எல்லா விதமான அவமானங்களுக்கும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் தன்னையே கையளித்தார்.

சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது தன்னோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த நல்ல கள்ளனை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

நூற்றுவர் தலைவன் அவரது விலாவை ஈட்டியால் குத்திய போது தனது ரத்தத்தால் குத்தியவனது கண்ணுக்குப் பார்வை அளித்து நன்மை செய்தார்.

பாடுகளின் போது அவரது உடல் அடி மேல் அடி வாங்கிக் கொண்டிருந்தாலும் 

அவரது உள்ளம் அடித்தவர்களுக்காக இரங்கிக் கொண்டிருந்தது.

இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானித்துக் கொண்டிருக்கும் நாம் இயேசுவாக வாழ உறுதியெடுப்போம்.

"உம்மை அடித்தவர்களையும் ஆசீர்வதித்துக் கொண்டிருந்த

 இரக்கம் மிகுந்த இயேசுவின் திரு இருதயமே

 எங்கள் மேல் இரக்கமாக இரும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment