Tuesday, March 21, 2023

"இரசம் தீர்ந்துவிட்டது"


"இரசம் தீர்ந்துவிட்டது"


"தாத்தா, சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசு தனது அன்னையை ஏன் "பெண்ணே" என்று அழைத்தார் என்பதற்கான விளக்கத்தை நேற்று நான் உங்களிடம் கேட்டேன்.".

"'இன்று கானாவூர் திருமணத்தின் போது இயேசு தன் அன்னையை ஏன் அவ்வாறு அழைத்தார் என்று கேட்கப் போகிறாய். சரியா?"

"அப்போ இரவு முழுவதும் தூங்காமல் அதைப்பற்றி தான் நினைத்து கொண்டிருந்தீர்களோ?"

"'உண்மைதான். "எனது பேரன் கேட்டால் நான் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லித் தாருங்கள், அம்மா." என்று அம்மாவிடம் தான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இருவருமே மனதில் தோன்றுகிற கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.


நான்கு நற்செய்தியாளர்களில்
கானாவூர்த் திருமணத்தைப் பற்றி யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்கள்?"

"அருளப்பர் மட்டுமே எழுதியிருக்கிறார்."

"'அவர் நற்செய்தி நூலை எழுதியதன் நோக்கம் என்ன?"

"அதை அவரே கூறியிருக்கிறாரே.

"இயேசு கடவுளின் மகனாகிய மெசியா என்று நீங்கள் விசுவசிக்கும்படியும், 

விசுவசித்து அவர் பெயரால் வாழ்வு பெறும்படியும் இந்நூலிலுள்ளவை எழுதப்பெற்றுள்ளன."(அரு.20:31)

"'அப்படியானால் அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்தும் அதையே காண்பித்துக் கொண்டிருக்கும்.

கானாவூர் திருமணத்தைப் பற்றி அவர் எழுதியதன் நோக்கம் அதுவாகத்தான் இருக்கும்."

"அதாவது திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இயேசுதான்
மெசியா என்று அந்த நிகழ்ச்சியை வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் விசுவசிக்க வேண்டும்.

அப்படியானால் திருமணம் நடைபெற்றது, 

அன்னை மரியாள் அங்கே இருந்தது, 

இயேசுவும் அவரது சீடர்களும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டது,

இரசம் பற்றாக்குறை ஆனது,

அன்னை மரியாள் இயேசுவிடம் அதைப் பற்றி சொன்னது,

இயேசு அவளுக்குச் சொன்ன பதில்,

தண்ணீர் ரசமாக மாற்றப்பட்டது 

ஆகிய அனைத்தும்

 இயேசுவை மெசியா என்று நாம் விசுவசிப்பதற்காக இறைவனால் தீட்டப்பட்ட நித்திய காலத்திட்டங்கள்.

சரியா, தாத்தா?"

"'இவற்றை மனதில் வைத்துக் கொண்டுதான் கானாவூர்த் திருமண பற்றிய ஒவ்வொரு உண்மையையும் நாம் அணுக வேண்டும்.

திருமணத்தின் பெண்ணும், மாப்பிள்ளையும் மாதாவுக்கு இரத்த உறவினர்களாகத்தான் 
இருந்திருக்க வேண்டும்.

ஆகவே தான் அன்னை மரியாள் முதலிலேயே திருமண வீட்டிற்கு வந்து விட்டாள்.

உறவினர் என்பதால்தான் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த இயேசுவையும் அவருடைய சீடர்களையும் திருமணத்திற்கு அழைத்திருக்க வேண்டும்.

அங்கு நிகழும் நிகழ்ச்சிகள் மூலம் இயேசுதான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெசியாவாகிய இறைமகன் என்பதை எல்லோரும் உணர வேண்டும்."

"இறைவன் திட்டப்படி திராட்சை ரசம் பற்றாக் குறை ஆகிவிட்டது,

மரியாள் தன் மகனிடம்,

"இரசம் தீர்ந்துவிட்டது" என்று மட்டும் கூறுகிறாள்.

அதற்கு இயேசு, "பெண்ணே! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்.

இந்த வசனத்தில் வரும் "பெண்ணே" என்ற வார்த்தைதான் அநேகருடைய மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

 இயேசு ஏன் உறவினர்களுடைய திருமண வீட்டில் வைத்து தன் தாயை "பெண்ணே" என்று அழைத்தார்?

"இதற்கான பதில் இயேசு இறைமகன் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும்.

அன்னை மரியாள்தான் மனுக் குலத்தின் முதல் பெண்ணை ஏமாற்றிய சாத்தானின் தலையை நசுக்குவதற்காக,

 தந்தை இறைவனின் திட்டப்படி பிறந்த பெண்.

இது மரியாளுக்குத் தெரியும். 

 இயேசு பிறந்து 2000 ஆண்டுகளுக்கு பிறகு நற்செய்தி நூலை வாசிக்கும் நமக்குத் தெரிய வேண்டாமா?

 மரியாளைப் பொறுத்தமட்டில் இயேசு அவளது மகன்.

30 ஆண்டுகளாக அவளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்த போது அவளை எப்படி அழைத்திருப்பார் என்று நமக்குத் தெரியாது.

ஆனால் அவளுக்குத் தெரியும்.

தன்மகன் ஏன் தன்னை "பெண்ணே" என்று ஏன் அழைத்தார் என்று அவளுக்குத் தெரியும்.

ஆனால் திருமண வீட்டிற்கு வந்திருக்கும் மற்றவர்களுக்கு?"

"'திருமண வீட்டில் இயேசுவோடு இருந்தவர்கள் அவருடைய சீடர்கள்.

அவர் தான் மெசியா என்று அவர்கள் விசுவசித்தார்கள்.

அவர் மேல் அவர்கள் கொண்ட விசுவாசத்தை இயேசுவின் வார்த்தைகள் உறுதிப்படுத்தியிருக்கும்.

கானாவூர் திருமணம் பற்றிய நிகழ்ச்சியை எழுதிய அருளப்பர்,

அதாவது, 'இயேசுவின் தாயை தனது தாயாக ஏற்றுக் கொண்ட அருளப்பர்,

அன்னையின் மீது மிகுந்த பாசம் உள்ள அருளப்பர்,

இயேசுவை இறைமகன் என்று மக்கள் ஏற்றுக் கொள்வதற்காக எழுதப்பட்ட நற்செய்தி நூலில்,

அவரை மனு மகனாகப் பெற்ற அன்னையின் பெருமையைப் பற்றி எழுத வேண்டாமா?

அதற்காகத்தான் இயேசுவின் பொது வாழ்வின் ஆரம்பத்தில் நடந்த கானாவூர் திருமணத்தில்

 மாதாவின் வேண்டுதலால்

 இறைமகன் தண்ணீரைத் திராட்சை ரசமாக்கிய நிகழ்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இயேசு தண்ணீரைத் திராட்சை ரசமாக்கியது,

அவரது நேரம் வந்தபோது திராட்சை ரசத்தை அவரது இரத்தமாக்கி,

சீடர்களுக்குச் சாப்பிடக் கொடுத்ததற்கு முன் அடையாளம்.

"எனது நேரம்'' என்று இயேசு
குறிப்பிட்டது அவருடைய பாடுகளுக்கான நேரத்தைத் தான்.

அவரது பாடுகள் புனித வியாழன் அன்று ஆரம்பித்து விட்டன.

புனித வியாழன் அன்று திராட்சை ரசத்தை தனது ரத்தமாக மாற்றி தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

புனித வெள்ளியன்று அவர் சிந்தியது அவரது உடலில் ஓடிய இரத்தத்தை.

புனித வியாழன் அன்று தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தது அதே இரத்தத்தைத் தான்.

திராட்சை ரசத்தைத்தான் தனது சொந்த இரத்தமாக மாற்றி சீடர்களுக்கு உணவாகக் கொடுத்தார்.

தண்ணீரை ரசமாக மாற்றியது இயேசுதான்.

ரசத்தை ரத்தமாகவே மாற்றியதும் இயேசு தான்.

முதல் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது அன்னை மரியாள்.

அன்னையின் வேண்டுதலால்தான் தண்ணீரை இயேசு ரசமாக்கினார் என்று குறிப்பிட்டதன் மூலம்

அவரது பாடுகளிலும், மரணத்திலும் அன்னை மரியாளுக்கு இருந்த பங்கை அருளப்பர் நமக்குத் தெளிவு படுத்துகிறார்."

"வேறொரு முக்கியமான உண்மையை நமக்கு வெளிப்படுத்தவே அருளப்பர் கானாவூர் திருமணம் பற்றிய நிகழ்ச்சியை எழுதியிருப்பார் என்று எண்ணுகிறேன்."


"'என்ன உண்மை?"

''அன்னை மரியாள் " ரசம் தீர்ந்து விட்டது" என்று கூறியபோது இயேசு கூறிய பதிலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால்

இயேசு தாய் சொன்னதை செய்ய மாட்டாரோ என்பது போல் நமக்குத் தோன்றும்.

ஆனால் மரியாளுக்கு அப்படித் தோன்றவில்லை.

அவள் பணியாட்களிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றாள்.

இயேசுவும் கற்சாடிகளைத் தண்ணீரால் நிரப்பச் சொல்லி,

தண்ணீரை ரசமாக்கிவிட்டார்.

இப்போது ஒரு உண்மை தெரிகிறது.

மரியாளின் வேண்டுதலால் ஆகாதது எதுவுமில்லை.

தாய் சொன்னதை மகன் கட்டாயம் செய்வார்.

இயேசு தனது ரத்தத்தை சிந்தி நமக்காக ஈட்டிய மீட்பை நாம் அடைய

பாடுகளின் போது அவரோடு இருந்த அவரது தாயின் மன்றாட்டு நமக்கு உதவும்

என்ற உண்மை கானாவூர்த் திருமண நிகழ்ச்சி மூலம் நமக்குத் தெரிகிறது.

மீட்பர் உலகிற்கு வந்தது அவரது தாயின் வழியே.

அதே தாயின் வழியே நாம் மீட்பரை அடையலாம்."

சாத்தானின் தலையை நசுக்கிய அன்னையே,

சாத்தானின் பிடியில் நாங்கள் விழாமல்,

உமது திருமகனின் பாதம் அடைய 

எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment