Thursday, March 23, 2023

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. (அரு.18:36)

"என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று. (அரு.18:36)

''தாத்தா, இயேசு நற்செய்திப் பணியை ஆரம்பிக்கும்போதே,

"காலம் நிறைவேறிற்று: கடவுளரசு நெருங்கிவிட்டது. மனந்திரும்பி, இந்நற்செய்தியை நம்புங்கள்" .(மாற்கு.1:15)

என்று சொல்லிதான் ஆரம்பித்தார்.

இந்த வார்த்தைகளின் மூலம் அவர் யூதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் அரசர் என்பதை நமக்குத் தெரிவிக்கிறார்.

பிலாத்து அவரிடம், "நீ யூதர்களின் அரசனோ ?" என்று கேட்கும்போது

ஏன் "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று?" என்று சொன்னார்."

"'உண்மையைத்தானே சொன்னார்.

அவர் இறைவன்.

இறையரசின் அரசர்.

 இவ்வுலகைச் சார்ந்த அரசர் அல்ல."

"தாத்தா, அவர் இறைவன்.

நாம் வாழும் இந்த உலகத்தை படைத்தவர் அவர் தானே.

அவர் படைத்த உலகிற்கு அவர் தானே அரசர்.

பிறகு ஏன் அவர் இவ்வுலகைச் சார்ந்த அரசர் அல்ல என்றார்?

நீங்கள் கட்டுகிற வீட்டுக்கு நீங்கள்தானே சொந்தக்காரர்.

அப்படியானால் அவர் படைத்த உலகத்திற்கு அவர் தானே அரசர்."

"'நீ சொல்லுவதும் முற்றிலும் சரி.
இயேசு சொல்வதும் சரி.

இந்த உலகம் அரசர் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்கிறதோ 

அந்த அர்த்தத்தில் இயேசு இந்த உலகின் அரசர் அல்ல.

உனக்குத் தெரியும், மனிதன் உடலும் ஆத்மாவும் சேர்ந்தவன் என்று.

இந்த உலகின் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட மனித உடல் இந்த உலகத்தைச் சேர்ந்தது.

மனித ஆன்மா உடலோடு சேர்ந்து வாழ்ந்தாலும் அது விண்ணுலக வாழ்விற்கென்று படைக்கப்பட்டது.

அதனால் தான் மனிதனின் மரணத்தின் போது அவனது உடலை மண்ணில் போட்டுவிட்டு ஆன்மா விண்ணுலகுக்குச் சென்று விடுகிறது.

இவ்வுலகில் மனிதனின் உடலும் வாழ்கிறது, ஆன்மாவும் வாழ்கிறது.

உடல் ஆன்மாவுக்காக வாழ வேண்டும்.

ஒருவனது உடல் 
ஆன்மாவுக்காக வாழ்ந்தால் அவன் வாழ்வது ஆன்மீக வாழ்வு.

ஆன்மா உடலுக்காக வாழ்ந்தால் 
அவன் வாழ்வது லௌகீக வாழ்வு.

நாம் ஆன்மீக வாழ்வு வாழவே கடவுள் நம்மைப் படைத்திருக்கிறார்.

ஆனால் இவ்வுலகில் வாழ்வோரில் அநேகர் ஆன்மீக வாழ்வை மறந்து, லௌகீக வாழ்வை மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஆன்மீக வாழ்வை மட்டுமே வாழ வேண்டும்.

அவர்களுடைய உடல் உலகில் வாழ்ந்தாலும் உலகிற்காக வாழக் கூடாது, 

ஆன்மாவிற்காக மட்டுமே வாழ வேண்டும்.

மனிதன் இவ்வுலகில் உலகைச் சார்ந்த இன்பங்களுக்காக மட்டும் வாழ்ந்தால் அவன் முற்றிலும் லௌகீக வாழ்வு வாழ்கிறான்.

விண்ணுலக பேரின்ப வாழ்வுக்காக மட்டும் இவ்வுலகில் வாழ்ந்தால் அவன் ஆன்மீக வாழ்வு வாழ்கிறான்.

ஆன்மீக வாழ்வு வாழ்பவனது உடல் ஆன்மாவுக்குக் கட்டுப்பட்டிருக்கும்.

லௌகீக வாழ்வு வாழ்பவனது ஆன்மா உடலுக்குக் கட்டுப்பட்டிருக்கும்.

இந்த உலகைச் சார்ந்த அரசு மனிதனுடைய லௌகீக வாழ்வின் நலனையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இறையரசு மனிதனுடைய ஆன்மீக வாழ்வின் நலனையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

இயேசு உலகுக்கு வந்தது நமது
லௌகீக வாழ்வின் நலனுக்காகவா, ஆன்மீக வாழ்வின் நலனுக்காகவா?"

"ஆன்மீக வாழ்வின் நலனுக்காக மட்டுமே இயேசு உலகுக்கு வந்தார். 

அவர் நமது ஆன்மீகத்துக்கு மட்டுமே அரசர்.

அவருடைய அரசு இறையரசு.

ஆகவே தான் இயேசு பிலாத்துவிடம் , "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று" என்று சொன்னார்."

"'இப்போது உனது கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது.

ஆனால் இது சம்பந்தமாக நீ கேட்காத கேள்விகள் நிறைய இருக்கின்றன."

"தாத்தா, கொஞ்சம் பொறுங்கள். அவற்றில் ஒன்றை இப்போது கேட்டு விடுகிறேன்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இறையரசில்தான் வாழ வேண்டும்.
 
வாழ்கிறோமா?"

"'இந்த கேள்விக்குரிய பதிலை நீயும் நானும் சொல்ல முடியாது.

உன்னைப் பற்றி உனக்குத் தெரியும்,

 என்னைப் பற்றி எனக்குத் தெரியும்.

எல்லா கிறிஸ்தவர்களையும் பற்றி நமக்கு எப்படித் தெரியும்?

அவரவர்களின் வாழ்க்கையை பற்றி அவரவர்கள் தான் பரிசோதிக்க வேண்டும்.

இப்போ நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்.

ஞானஸ்நானம் பெற்றால் மட்டும் ஒருவன் மீட்பு அடைய முடியுமா?''

"ஞானஸ்நானம் பெற்றவுடனே இறந்தால் நேரே மோட்சத்திற்கு போய்விடலாம்.

அதற்குப் பிறகு இவ்வுலகில் வாழ்ந்தால் பாவம் செய்யாமல் வாழ்ந்தால் மீட்பு அடைய முடியும்."

"'மீட்பு அடைய விசுவாசம் மட்டும்
போதுமா?"

"கையில் சாப்பாடு இருந்தால் வயிறு நிறையாது.

 சாப்பிட்டால் மட்டுமே, நிறையும். 

விசுவசித்தால் மட்டும் போதாது,
விசுவாசத்தை வாழ வேண்டும்."

"'ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போவதால் மட்டும் ஓய்வு நாள் கடமையை நிறைவேற்றுகிறோமா?"

"முழுப் பூசைக்கும் போனால் கடன் நிறைவேறும்.

உண்மையிலேயே பாவ மன்னிப்பு பெற்று,

குருவோடு இணைந்து திருப்பலியை ஒப்புப் கொடுத்து,

திருவிருந்து அருந்தி,

முழுப் பூசையும் நிறைவேறிய பின் வீட்டுக்குச் சென்று,

அன்றைய நாளை செபத்திலும், பிறருக்கு உதவி செய்வதிலும் செலவழித்தால்

ஓய்வு நாளுக்கான முழுப் பலனும் கிடைக்கும்."

,"'ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போகாமல் சொந்த வேலைக்கு போனால்?"

"அப்படிப் போகின்றவன் ஆன்மீக வாழ்வு வாழவில்லை. 

லௌகீக வாழ்வு வாழ்கிறான்.

அவன் இறையரசைச் சேர்ந்தவன் அல்ல."

"'ஞானஸ்நானம் பெற்றிருக்கிறானே!"

" கல்லூரியில் admission போடுவதால் மட்டும் Degree Certificate கிடைத்து விடுமா?"

"'ஒருவன் கோவில் கட்ட முழு தொகையையும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறான்.

மனைவியும் பிள்ளைகளும், கோவிலுக்கு போவதைத் தடுக்கவில்லை.

ஆனால் அவன் மட்டும் கோவிலுக்கும் போகவில்லை, தேவத் திரவிய அனுமானங்களையும் பெறவில்லை.

அவன் கதி?"

"அதோ கதிதான். அவரவர் சாப்பிட்டால்தான் அவரவர் வயிறு நிறையும்.''

"'இறைவன் விண்ணுலகில் வாழ்கிறார்.

இறையரசு எங்கு இருக்கும்?"

"இறைவன் எங்கும் வாழ்கிறார். நமது உள்ளங்களிலும் வாழ்கிறார்.

"விண்ணுலகில் வாழும் எங்கள் தந்தையே, உமது அரசு வருக." 

என்று இந்த உலகத்திலிருந்து தான் வேண்டுகின்றோம்.

வேண்டுகின்றவர்களுடைய உள்ளங்களில் இறையரசு இருக்கிறது.

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:" (மத்.6:33)

இவ்வுலகில் வாழும் நாம் தான் தேட வேண்டும்.

ஆகவே இவ்வுலகிலும் இறையரசு இருக்கிறது.

இறையரசு இவ்வுலக அரசை போல புவியியல் எல்கைகளுக்கு கட்டுப்பட்டது அல்ல.

எந்த புவியியல் பகுதியில் வாழ்ந்தாலும்,

எந்த உலக அரசரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தாலும்

நாம் இறைவனுக்காக வாழும்போது இறையரசில்தான் வாழ்கிறோம்."

"'துறவற மடத்தில் வாழும் ஒருவர் 
அங்குள்ள வசதிகளுக்காக மட்டும் வாழ்ந்தால்?"

"அவர் இறையரசில் வாழவில்லை."

"'அநேகர் கடவுளை வியாபார பொருளாக மாற்றி வாழ்கின்றார்கள், தெரியுமா?"

"தெரியும். பிரியும் காணிக்கைகளுக்காக மட்டும் இறைவனைப் பற்றி போதிப்பவர்கள் 

கடவுளை வியாபார பொருளாக மாற்றி வாழ்கின்றார்கள்.

ஆனால் கடவுளை அவரது மகிமைக்காக மட்டும் போதிப்பவர்கள்,

பிரியும் காணிக்கையை கடவுளுக்காக செலவழிப்பார்கள்.

சுய வசதிக்காக செலவழிக்க மாட்டார்கள்.

அவர்கள் இறையரசில் வாழ்கிறார்கள்."

"'இறையரசில் இறைவனுக்காக மட்டும் வாழ்வோம்.

நமது எல்லா நலன்களையும் அவரே கவனித்துக் கொள்வார்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment