Sunday, March 19, 2023

"பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான்."(நீதி.13:24)

"பிரம்பால் அடிக்கத் தயங்குகிறவன் தன் பிள்ளையைப் பகைக்கிறான்."
(நீதி.13:24)

''தாத்தா, நீங்கள் பணிபுரியும் காலத்தில் வகுப்புக்கு பிரம்புடன் சென்றதுண்டா?"

"'ஒரு கையில் புத்தகம், இன்னொரு கையில் பிரம்பு.

எனது 36 ஆண்டுகால தோழர்கள் இவர்கள்.

நான் பாட போதனைக்காக வகுப்பிற்குள் போகும் போது என்னோடு வந்து விடுவார்கள்.

என்னுடைய மாணவர்களோடும் மிகவும் பழக்கமானவர்கள்.

மண்வெட்டியை உபயோகிக்கத் தெரியாதவன் விவசாயி அல்ல.
 
பிரம்பை உபயோகிக்கத் தெரியாதவர் ஆசிரியர் அல்ல.

ஆசிரியரின் பிரம்பை விரும்பாத மாணவன்,

போலீசின் லத்தி சார்ஜை விரும்புகிறான்."

"உங்களது பிரம்பைப் பார்த்து மாணவர்கள்  பயப்படுவார்களா?"

"'சுகம் இல்லாத குழந்தை டாக்டரது ஊசியைப் பார்த்து பயப்படுவது போல.

ஆனாலும் அதன் அவசியம் அவர்களுக்கு புரியும்.

என்னிடம் பிரம்படி பட்டதற்காக பிற்காலத்தில் நன்றி கூறியவர்கள் ஏராளம்."

"பிள்ளையும் படிக்க வேண்டாம், பிரம்படி படவும் வேண்டாம்,
பிள்ளையென்றிருந்தால் போதும் 
பெற்றவள் நான் களிக்க "

என்று ஒரு தாய் பாடுவதை நான் கேட்டிருக்கிறேன்."

"'அம்மா நீ பாடிய பாட்டால்,
 இன்று நான் நிற்கிறேன்
தூக்குமேடையில், இப்போ
என்ன பாட்டுப் பாடப் போற?"

என்று பதிலுக்குப் பிள்ளை பாடியதைக் கேட்கவில்லை?" 

"இப்போது கேட்டு விட்டேன்.

கடவுளும் ஒரு ஆசிரியர் என்று நினைக்கிறேன்.

எப்போதும், எங்கும் கையில் பிரம்போடு தான் நிற்கிறார்.

பிரம்பு நாம் செய்த பாவங்களுக்காக நம்மைத் தண்டிப்பதற்காக அல்ல,

அவை பாவம் என்பதை உணர்த்தி நம்மை திருத்துவதற்காக.

உடலில் காய்ச்சல் இருந்தால் டாக்டர் அதை ஊசி போட்டு குணமாக்குகிறார்.

அதேபோல் தான் நமது ஆன்மாவின் பாவம் என்ற காய்ச்சல் இருக்கும்போது 

துன்பம் என்ற பிரம்பால் நம்மை திருத்தி 

பாவத்திற்காக வருத்தப்பட வைத்து நம்மை அதிலிருந்து குணமாக்குகிறார்.

துன்பம் என்ற பிரம்புக்கு இயேசு வைத்திருக்கும் பெயர் சிலுவை.

உலக ஆசிரியர் பிரம்பால் மாணவனை மட்டும் தான் அடிப்பார். 

ஆனால் இயேசு என்னும் விண்ணக ஆசிரியர் நாம் செய்த பாவங்களிலிருந்து நம்மை திருத்துவதற்காக தன்னைத்தானே முதலில் அடித்துக் கொண்டார்.

அடித்துக்கொண்டது மட்டுமல்ல,

தனது மாணவர்கள் வெற்றி பெற தன் உயிரையே கொடுத்தவர் நமது விண்ணக ஆசிரியர் இயேசு மட்டுமே.

இயேசுவுக்கு அடி கொடுத்த சிலுவை, நமது மீட்பின் ஆயுதம்.

அவர் பட்ட அடிகளை நாம் பார்க்கும் போது,

நாமும் அவரைப்போல் அடிபட ஆசைப்பட வேண்டும்.

அடிகள் நமக்கு ஆசீர்வாதங்கள்,

ஏனெனில் ஒவ்வொரு அடியும் ஒரு பாவத்திலிருந்து நமக்கு விடுதலை வாங்கித் தரும்.

அடிகள் படுவோர் பாக்கியவான்கள், 

ஏனெனில் அவர்கள் பாவங்களிலிருந்து மீட்புப் பெறுவார்கள்.


ஆகவே தான் நமக்குச் சிலுவைகள் வரும்போது அவற்றை சுமப்பதற்கு வேண்டிய சக்தியை ஆண்டவரிடம் கேட்க வேண்டுமே தவிர,

அவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டக் கூடாது."

"'அவர் கொடுத்து, நாம் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு மதிப்பெண் போட்டு வைத்திருப்பார்.

அடிகளால் நாம் பெறும் மதிப்பெண்கள் நமது இறுதி வெற்றிக்கு மிகவும் பக்கபலமாய் நிற்கும்.

இவ்வுலகில் எத்தனை அடிகள் அடித்தாலும் மறுவுலகில் தனது அரவணைப்பில் நம்மை வைத்திருக்கப் போகும் ஒரே ஆசிரியர்  நம் ஆண்டவர் மட்டும்தான்.

ஆசை தீர அடிபடுவோம் நம் ஆண்டவர் கையால்.

பேரானந்த வாழ்வுக்குள் நுழைந்திடுவோம் அதே கையால்.

அடிகளுக்கு முடிவுண்டு,
நிலை வாழ்வுக்கு முடிவில்லை."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment