Saturday, March 18, 2023

"செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை"(அரு. 19:15)

"செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை"
(அரு. 19:15)


 "தாத்தா, யூத சமய தலைமைக்குருக்கள் தங்களது சமயத்துக்கு விசுவாசமானவர்களா,

 அல்லது,

 தங்களை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த மன்னனுக்கு விசுவாசமானவர்களா?"

"'அவர்கள் யாருக்கும் விசுவாசமானவர்கள் அல்ல.


தாங்கள் வகித்த பதவியை
தங்களது சுயநலத்திற்காக
 பயன்படுத்திக் கொண்டவர்கள்.

அவர்கள் தலைமைக் குருக்களாக வாழ்ந்தபோது
 
திருச்சட்டத்தின் பெயரால் சாதாரண மக்களை அடிமைப் படுத்தி தாங்கள் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள்.

மக்கள் அனைவரும் இயேசுவின் பக்கம் சேர்ந்து விட்டால் தங்களது ஆடம்பர வாழ்க்கை பறி போய்விடுமோ  என்ற பயத்தில் தான் அவர்கள் இயேசுவைக் கொல்லவே தீர்மானித்தார்கள்.

பிலாத்து இயேசுவுக்கு மரணத் தீர்ப்பிடுவதற்காகத்தான் அவனிடம் தாங்கள் செசாரின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை இயேசு வாழ்ந்து காண்பித்தார்.

நாம் எப்படி வாழ கூடாது என்பதை தலைமை குருக்கள் வாழ்ந்து காண்பித்தார்கள்."

"ஆக அவர்களும் நமக்கு ஆசிரியர்கள் தான்.

தாத்தா, நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று யூத மதத் தலைவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் என்பதை பற்றி கொஞ்சம் பார்ப்போமா?"

"'இயேசு நற்செய்தி அறிவிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே 

பரிசேயர்கள், மறை நூல் அறிஞர்கள், தலைமைக் குருக்கள் ஆகிய யூத மத தலைவர்கள்

இயேசுவுக்கு எதிராக கிழம்பி விட்டார்கள்.

அதன் விளைவு தான் இயேசுவின் கைது, 
விசாரணை, 
மரணத் தீர்ப்பு, 
சிலுவை மரணம்.

அவர்கள் நமக்கு கற்பிக்கும் முதல் பாடம் நாம் முழுக்க முழுக்க இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான்."

"வகுப்பில் பாடங்களைச் சரியாகக் கவனிக்காமலும்,
பாடங்களைப் படிக்காமலும்,
தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களைப் பார்த்து,

மற்ற மாணவர்கள் பாடங்களைக் கவனித்து படிக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.

அதே போல் தான் இதுவும்.

சாதாரண மக்கள் இயேசுவைப் பின் சென்று, அவரது நற்செய்தியைக் கேட்டு நடந்தது போல, நாமும் நடக்க வேண்டும்."

"'யூத மத தலைவர்கள் சட்டம் கற்றவர்கள்.

ஆனால் சட்டத்தின் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தார்கள், 

ஆனால் எந்த நோக்கத்திற்காக சட்டம் இயற்றப்பட்டதோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

'ஓய்வு நாளில் கடின வேலை செய்யக்கூடாது,

இறைவன் பணிக்காக அதை அர்ப்பணிக்க வேண்டும்'

என்பது சட்டம்.

அவர்கள் ஓய்வு நாளில் வேலை செய்யக்கூடாது என்பதை மட்டுமே அனுசரித்தார்கள்.

பிறர் நலப் பணி செய்யும்போது  இறைபணிதான்  செய்கிறோம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.  

ஆகவே தான் ஓய்வு நாளில் இயேசு நோயாளிகளைக் குணமாக்குவதை அவர்கள் எதிர்த்தார்கள்.

நாம் எப்போது யூத மத தலைவர்களைப் போல் ஓய்வு நாளில் நடந்து கொள்கிறோம் என்பதைப் பற்றி சொல் பார்ப்போம்."

"ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது திருச்சபையின் சட்டம்.

அதன் நோக்கம் என்ன?

இயேசு எந்த நோக்கத்தோடு தன்னைத்தானே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தாரோ,

அதே நோக்கத்தோடு தான் நாம் ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை ஒப்புக்கொடுக்க வேண்டும்.

கல்வாரி மலையில் எந்த இயேசு பலியானாரோ அதே இயேசுவைத்தான் நாமும் திருப்பலியில் ஒப்புக்கொள்கிறோம்.

நாம் பாவ மன்னிப்பு பெறுதல்,

அதனால் இறைவனோடும் நமது அயலானோடும் சமாதான வாழ்வு வாழ்தல்,

பலிப் பொருளை உணவாக உண்ணுதல்

ஆகிய திருப்பலியின் நோக்கங்களை எந்த அளவு நாம் நிறைவேற்றுகிறோம் என்பதை பற்றி நாம் நம்மை தானே பரிசோதனை செய்தால்,

இயேசு எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் நிறைவேற்றவில்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.

திருப்பலியின் ஆரம்பத்தில் மக்களோடு மக்களாக பாவங்களை மன்னிக்கும் படி இறைவனிடம் வேண்டுகிறோம்.

ஆனால் நம்மில் எத்தனை பேர் திருப்பலி ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே நமது ஆன்மாவைப் பரிசோதனை செய்து தேவைப்பட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோம்?

நம்மில் எத்தனை பேர் திருப்பலியின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை 

 திருப்பலியில் கலந்து கொள்கிறோம்?

சமாதான மன்றாட்டின் போது நமக்கு அருகில் இருப்பவர்களோடு சமாதானம் செய்து கொள்கிறோம்.

ஆனால் உண்மையிலேயே நாம் யாரோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டுமோ அவர்களோடு செய்து கொள்கிறோமா?

சில கணவன் மனைவியர் குடும்ப காரணங்களுக்காக வீட்டில் சண்டை போடுவார்கள்.

அதே சண்டையோடு கோவிலுக்கும் வருவார்கள்.

சமாதானத்தின் தேவனை பலியாக ஒப்புக்கொடுத்து, அவரையே உணவாக உண்பார்கள்.

பூசை முடிந்து வீட்டுக்கு போய் வழக்கம்போல் சண்டை போடுவார்கள்.

தாங்கள் செய்வது இயேசுவுக்கு பிடிக்காது என்று அவர்கள் மனதில் படுவதில்லை.

அதாவது திருப்பலியால் அவர்கள் வாழ்வில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை.

நம்மில் எத்தனை பேர் ஓய்வு நாளில் திருப்பலி முடிந்த பின் நாம் சமாதானம் செய்ய வேண்டிய அயலானின் வீட்டுக்குப் போகிறோம்?

திரும்பலி, 
அடுத்து வீட்டில் தூக்கம்,
அடுத்து மதிய உணவு,
அடுத்து TV ,
நேரம் கிடைக்கும் போது அரட்டை,
இரவில் தூக்கம் 

என்று Time Table போட்டு அதன்படி நடக்கும் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு வீட்டில் ஒரு சிறு பையன் அப்பாவிடம்,

"அப்பா, Sunday என்றாலே சண்டை போடுவதற்கு உரிய நாளா?" என்று கேட்டானாம்.

ஓய்வு நாளை இப்படி அனுசரிப்பவர்கள் 

யூத மத தலைவர்களின் சீடர்கள்,

இயேசுவின் சீடர்கள் அல்ல."

"'பிலாத்து இயேசுவை விசாரிதித்துக் கொண்டிருந்தபோது

யூத மத தலைமைக் குருக்கள் 

"செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை"

என்றார்கள்.

நாமும் எப்போதாவது அப்படி நடந்து கொள்கிறோமா?"


"தாத்தா, ஒரே நேரத்தில் செல்வத்துக்கும், இறைவனுக்கும் சேவை செய்ய முடியாது என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

நம்மில் எத்தனை பேர் நாங்கள் இறைவனுக்கு மட்டுமே சேவை செய்கிறோம்,

கொஞ்சம் கூட செல்வத்துக்காக உழைப்பதில்லை 

என்று மனதைத் தொட்டு சொல்ல முடியும்?

"கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."
(மத். 6:33)

உலக காரியங்களை முற்றிலும் இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு,

ஆன்மீக வாழ்வை மட்டும் வாழ்கிறோமா என்று நாமே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

100% அப்படி வாழ்பவர்கள் எங்காவது துறவற மடங்களில் இருப்பார்கள்."

"'ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் 
நாமும் யூத மத தலைமை குருக்களைப் போல் தான் வாழ்வது போல் தெரிகிறது.

இயேசுவின் சிலுவை மரணத்திற்கு காரணம் நாம் தான் என்பதும் புரிகிறது.

மனம் திரும்புவோம். 

இயேசுவுக்காக மட்டுமே வாழ்வோம்.

நம்மை அவர் அரசாள வேண்டும்.

அவர் மட்டுமே அரசாள வேண்டும்.

இயேசுவே நமது அரசர்,

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment