Friday, March 24, 2023

கிறிஸ்துவின் ஞான உடல்.

கிறிஸ்துவின் ஞான உடல்.


"ஹலோ, சார். வணக்கம்."

"'வணக்கம். உங்களை எங்கேயும் பார்த்ததாக ஞாபகம் இல்லையே."

"நான் உங்களைப் பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியதில்லை.

இன்று உங்களோடு பேசவேண்டும் போல் தோன்றியது.

நீங்கள் கத்தோலிக்கர்தானே?"

"'ஆமா. நீங்கள்?"

"CSI கிறிஸ்தவர். எதைப் பற்றி பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கவில்லையே?"

"'எதைப் பற்றி பேசவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதைப்பற்றி பேசுவோம்."

"மீட்பர் இயேசு உலகிற்கு வந்தது அவரது தாயின் வழியே என்பதை அனைத்து கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் அதே தாயின் வழியே நாம் மீட்பரை அடையலாம் என்று நீங்கள் சொல்வதை  நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.

மீட்பரைப் பெற்றவள் அன்னை மரியாள்தான்.

ஆனால் மீட்புக்கும், அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இயேசு கிறிஸ்துவை விசுவசித்தால் மீட்பு அடைவோம்.

எதற்காக மரியாள்?

இயேசு உலகுக்கு வர அவளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.

நாம் இயேசுவை ஏற்றுக் கொள்வதற்குக் கருவி எதற்கு?

மரியாள் வழியாக இயேசுவிடம் போகலாம் என்று பைபிளில் எங்கேயும் கூறப்படவில்லையே!''

"'இயேசு விண்ணகம் எய்து முன் தன் சீடர்களிடம் என்ன கூறினார்?"

" "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

 விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்."

"'இயேசு நற்செய்தியை அறிவிக்கத்தான் சொன்னார்.

எழுதி அறிவியுங்கள் என்று சொல்லவில்லை.

நற்செய்தியை எழுதியவர்கள் முதலில் போதித்தார்கள்.

அப்புறம்தான் எழுதினார்கள்.

போதித்த எல்லோருமே எழுதவில்லை. 

எழுதியவர்களும் போதித்ததை எல்லாம் எழுதவில்லை.     

முதல் முதல் எழுதப்பட்டது மாற்கு
 நற்செய்தி.

அது கி.பி.66ம் ஆண்டுக்குப் பின்தான் எழுதப்பட்டது.
(கி.பி.66-70)

மாற்கு இயேசுவின் பிறப்பு பற்றிய வரலாற்றை எழுதவில்லை,

ஆனால் போதித்திருப்பார்.

மத்தேயு நற்செய்தியும், லூக்காஸ் 
நற்செய்தியும் கி.பி.85 க்குப் பின் எழுதப்பட்டன. (கி.பி.85-90)

அருளப்பர் நற்செய்தி 
கி.பி 90க்குப்பின் எழுதப்பட்டது.
(கி.பி.90–110.)

அருளப்பரும் இயேசுவின் பிறப்பு பற்றிய வரலாற்றை எழுதவில்லை,

இயேசுவின் அப்போஸ்தலர்களில் நற்செய்தி எழுதியவர்கள் இருவர் மட்டுமே.

முதலில் போதனை, அப்புறம்தான் எழுத்து.

போதித்ததை எல்லாம் எழுதவில்லை என்பதற்கு அருளப்பருடைய வார்த்தைகளே ஆதாரம்.

"இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்."
(அரு.20: 30)

ஆகவே திருச்சபையின் போதனைக்கு பைபிள் மட்டுமே ஆதாரம் அல்ல.

பைபிளில் எழுதப்படாத 
திருச்சபையின் போதனையைத்தான் திருச்சபை பாரம்பரியம் என்று அழைக்கிறது.

பைபிளிலும், பாரம்பரியத்திலும் திருச்சபையின் போதனை இருக்கிறது.

நீங்கள் பைபிளை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்கள்.

பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆகவே திருச்சபையின் போதனையை முழுவதும் உங்களுக்குப் புரிய வைக்க யாராலும் முடியாது."

"எதன் அடிப்படையில் நீங்கள் மாதாவும் மற்ற புனிதர்களும் உங்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசுகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்?"

"'கிறிஸ்துவின் ஞான சரீரம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?"

"அதைப்பற்றி சொல்லுங்களேன்."

"'புனித சின்னப்பர் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தின் 12வது அதிகாரத்தை வாசியுங்கள்.


"உடல் ஒன்று, உறுப்புகள் பல: உடலின் உறுப்புகள் பலவகையாயினும், ஒரே உடலாய் உள்ளன: கிறிஸ்துவும் அவ்வாறே என்க."
(1கொரி12:12)


"நீங்களோ கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு."
(1கொரி12:27)

நமது உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளுக்கு உதவியாக இருக்கிறது.

காலில் முள் தைத்து விட்டால் கண் பார்க்கிறது, கை முள்ளை எடுக்கிறது.

இதே போல் நமது உடலின் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் உறுப்புகள் ஒன்றுக்கொன்று உதவுகின்றன.

அதேபோல்தான் கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும், இருக்கிறோம்.

 நாம் செபிக்கும்போது நமக்காக மட்டுமா செபிக்கிறோம்?"

"மற்றவர்களுக்காகவும் செபிக்கிறோம்."

"' திருச்சபையில் ஞானஸ்நானம் பெற்ற அனைவருமே கிறிஸ்தவர்கள் தான், இருந்தாலும், இறந்தாலும்.

ஞானஸ்தானம் பெற்று இவ்வுலகில் வாழ்பவர்களும், இறந்து மறுவுலகம் சென்று விட்டவர்களும் கிறிஸ்தவர்களே.

மறுவுலகில் உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருந்தாலும், மோட்சத்தில் இருந்தாலும் கிறிஸ்தவர்களே.

அதாவது கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்தவர்களே.

கிறிஸ்துவின் ஞான உடலைச் சேர்ந்த அனைவரும் ஒருவர் ஒருவர்க்கு உதவி செய்யலாம்."

"அதாவது, இறந்த கிறிஸ்தவர்களும் நமக்காக இறைவனிடம் செபிக்கலாம் என்கிறீர்கள், அப்படித்தானே?"

"'அப்படியே தான்."

"அதாவது மோட்சத்தில் வாழும் கிறிஸ்துவின் தாயும் நமக்காக செபிக்கலாம் என்கிறீர்கள், அப்படித்தானே?"

"'அப்படியே தான். கிறிஸ்துவின் தாய் மட்டுமல்ல, மோட்சத்தில் வாழும் மற்றவர்களும், உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாழ்பவர்களும் நமக்காக செபிக்கலாம்.

உத்தரிக்கிற ஸ்தலத்தில் வாழ்பவர்களுக்காக நாமும், மோட்சத்தில் உள்ளவர்களும் செபிக்கலாம்.

ஏனெனில் ஞானஸ்தானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் ஞான உடலில் உறுப்புகள்."

"ஆனாலும் நீங்கள் மரியாளுக்கு,

 மற்றவர்களுக்குக் கொடுப்பதை விட,

 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.

அது ஏன்?"

"'அவள் இயேசுவின் தாய் என்பதால்.

இயேசு கடவுள்.

இயேசுவின் தாய் கடவுளின் தாய்.

 மரியாள் கடவுளின் தாய் என்பதால் அவளுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

வேறு ஏதாவது கேட்க வேண்டுமா?"

"இன்றைக்கு இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். 

நாளை சந்திப்போம்.

வணக்கம்."

"'வணக்கம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment