Sunday, March 12, 2023

மீட்பின் திட்டம்,

மீட்பின் திட்டம்,

"தாத்தா, கடவுள் சர்வ வல்லவர் தானே!"

"'சர்வ வல்லவர் மட்டுமல்ல. அவருடைய எல்லா பண்புகளிலும் அளவில்லாதவர்.

அளவற்ற அன்பு,

அளவற்ற நீதி

 அளவற்ற ஞானம்,

 அளவற்ற சுதந்திரம்.

உள்ளவர் கடவுள்."

"Thank you, தாத்தா. அவருடைய அளவற்ற சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்.

அவர் நித்தியராகையால் அவரது பண்புகளும் நித்தியமானவை.

அதாவது அவரது எல்லா பண்புகளும் ஆரம்பமே இல்லாத காலத்திலிருந்தே அவரிடம் உள்ளன. 

அவர் நித்திய காலத்திலிருந்து தனது திட்டங்களைத் தீட்டுகிறார்.

உலகத்தைப் படைக்க வேண்டும், அதில் தனது சாயலில் மனிதனைப் படைக்க வேண்டும் என்பது அவரது நித்திய காலத் திட்டம்.

அவரால் படைக்கப்படவிருக்கும் மனிதன் பாவம் செய்வான் என்பது அவருக்கு நித்திய காலமாகவே தெரியும்.

மனிதனை அவனுடைய பாவத்திலிருந்து மீட்க வேண்டும் என்பதும் அவரது நித்திய காலத் திட்டமே.

இங்கேதான் நான் கேட்க வேண்டிய கேள்வி நுழைகிறது."

"கேள்."

"இப்படித்தான் திட்டம் போட வேண்டும் என்று அவரை யாரும் கட்டாயப்படுத்த முடியாதல்லவா?"

"' முடியாது.

ஆனால் அவரைக் கட்டாயப்படுத்த நித்திய காலமாக அவரோடு யாரும் இல்லையே?

அவர் மட்டும்தான் நித்தியர்."

"அது தெரியும். அவர் எப்படி வேண்டுமானாலும் அவரது விருப்பப்படி திட்டங்கள் தீட்டியிருக்கலாம்.

மனிதனை பாவத்திலிருந்து மீட்க 

அவரே மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு,  சிலுவையில்  மரிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லையே.

துவக்கமும், முடிவும் இல்லாத கடவுள் ஏன் துவக்கமும் முடிவும் உள்ள மனிதனாகப் பிறக்க ஆசைப்பட வேண்டும்?

அளவற்ற வல்லமை உள்ள கடவுள் ஏன் மனித பலகீனங்களை ஏற்றுக்கொள்ள ஆசைப்பட வேண்டும்?

துன்பமே பட முடியாத கடவுள் ஏன் வேதனைகள் நிறைந்த பாடுகள் பட ஆசைப்பட வேண்டும்?

"உண்டாகுக" என்று சொன்னவுடன் உலகம் உண்டாயிற்று.

"மன்னித்தேன்" என்று சொன்னால் போதுமே, பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்குமே!

எதற்காக மனிதனால் அடிபட்டு, மிதிபட்டு, கொல்லப்பட்டு 

பாவப் பரிகாரம் செய்ய ஆசைப்பட வேண்டும்?

அதுதான் எனக்கு விளங்கவில்லை."

"'தம்பி, அவரது சுதந்திரமான செயல்பாட்டைக் கேள்வி கேட்க நமக்கு எந்த உரிமையும் இல்லை."

"தாத்தா நான் கடவுளிடம் கேள்வி கேட்கவில்லை.

கேட்க ஆசைப்பட்டாலும் என்னால் முடியாது.

நான் கேள்வி கேட்பது உங்களிடம்.

உங்களாலும் கடவுள் ஏன் அப்படி திட்டமிட்டார்  என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.

பதில் சொல்ல முடியாவிட்டாலும் உங்களது கருத்துக்களைக் கூறலாம்."

"'இறைவனது சுதந்திரமான செயல்பாடு பற்றி கேள்வி கேட்க நமக்கு உரிமை இல்லை என்று நீயே கூறிவிட்டாய்.

இறைவன் தன்னைப் பற்றி என்ன வெளிப்படுத்துகிறாரோ அதைப்பற்றி மட்டும்தான் நம்மால் அறிய முடியும்.

அவர் வெளிப்படுத்தாததைப் பற்றி நாம் எப்படி கருத்து கூற முடியும்?"

"தாத்தா, நான் ஒரு ஒப்புமை கூறுகிறேன்.

ஒரு பையன் ஒரு பெண்ணை அவனாகவே காதலித்து, கல்யாணம் செய்கிறான்.

அவன் ஏன் காதலித்தான் என்பது யாருக்கும் தெரியாது.

அவனாகவே சொன்னால்தான் தெரியும்.

அவன் சொல்லாவிட்டாலும் ஊரில் அவனுக்கு தெரிந்தவர்கள் தங்கள் கருத்துக்களை ஒருவரோடு ஒருவர் பரிமாறி கொள்கிறார்கள் அல்லவா?

அதேபோல உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்."

"'உனது நண்பர்களில் யாருக்காவது பிறந்தநாள் பரிசு வாங்கி கொடுத்திருக்கிறாயா?"

"கொடுத்திருக்கிறேன்."

"'எந்த அடிப்படையில் பரிசு வாங்குவாய்?" 


"எனது நண்பனாகையால் அவனது ரசனைகள் எனக்குப் புரியும்.

அதன் அடிப்படையில் வாங்குவேன்."

"'நம்மைப் படைத்த கடவுளுக்கு நமது ரசனைகள் புரியுமா? புரியாதா?"

"கட்டாயம் புரியும். ஏனென்றால் அவர் நம்மை அவருடைய சாயலில் படைத்து,

 அவருடைய பண்புகளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

 என்னென்ன பண்பு உள்ளவர்களுக்கு என்னென்ன ரசனை உண்டு என்பது அவருக்குத் தெரியும்."

"'அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள   பண்புகளில் ஒன்றைக் கூறுங்கள்? "

"அன்பு. அவர் அன்பு மயமானவர். 
நம்மை அவரது சாயலில் படைக்கத் திட்டமிடும்போது 

அவருடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டார்."

"'ஒவ்வொரு பண்புக்கும் ஒரு குணம் இருக்கும்.

அப்படியானால் கடவுளுடைய அன்புக்கும் ஒரு குணம்  இருக்கும்.

அது என்ன குணம் என்று நீ நினைக்கிறாய்?"

"தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு எவனிடமும் இல்லை."
(அரு.15:13)

என்று இயேசுவே கூறியிருக்கிறார்."

"'அதாவது,
தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுக்க விருப்பம் இல்லாத அன்பு அன்பே இல்லை.

நம்மோடு கடவுள் தனது அன்பை பகிர்ந்து கொண்ட போது அன்புடன் அதனுடைய குணத்தையும் சேர்த்து தான் பகிர்ந்து கொண்டார்.

ஆகவே கடவுளுடைய சாயலைக் கொண்டுள்ள அனைத்து மனிதர்களுக்கும் இந்த குணம் கட்டாயம் இருக்கும்.

அதனால்தான் நமது பெற்றோர் நமக்காகவே வாழ்கிறார்கள்,

நமக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

தன் நண்பன் ஏதாவது ஒரு ஆபத்தில் மாட்டிக் கொள்ளும்போது 

அவனைக் கைவிட்டு விட்டு வந்துவிடும் நபரை நண்பன் என்று அழைக்க முடியாது.

அன்பின் இந்தப் பண்பைக் கூறிய இயேசு இறைமகன்.

இயேசுவே கூறுகிறார்,

"தம் மகனில் விசுவாசங் கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

கடவுள் அன்பு மயமானவராக இருப்பதால்  அதற்கு இணங்க மனிதனுக்காக தனது உயிரையே கொடுத்து அவனை மீட்க விரும்பினார்.

ஆனால் கடவுளால் தனது உயிரைக் கொடுக்க முடியாது.

ஆகவே உயிரைக் கொடுக்க முடியாத தேவ சுபாவத்தோடு,

உயிரைக் கொடுக்க முடியக் கூடிய மனித சுபாவத்தையும் சேர்த்துக் கொண்டார்.

அப்படி சேர்த்துக் கொண்டபின்

உலக வாழ்க்கையின் போது

கடவுளால் கஷ்டப்பட முடியும், மனித சுபாவத்தில்.

கடவுளால் அழ முடியும், மனித சுபாவத்தில்.

கடவுளால் மரணம் அடைய முடியும், மனித பாவத்தில்.

கடவுளின் அன்பு தான் அவரை மனிதனாகப் பிறந்து பாடுபட்டு மரிக்கத் தூண்டியது."

"தாத்தா, நான் உங்கள் கருத்துக்களைத் தான் கேட்டேன்.

நீங்கள் கடவுள் கூறியதைக் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்."

"'தாத்தா உன் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்கிறேன் என்று வைத்துக்கொள்.

தருவாயா? தர மாட்டாயா?"

"கட்டாயம் தருவேன்."

"'எந்தத் தண்ணீரை?" 

"தினமும் அம்மா காலையில் நல்ல தண்ணீர் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து விடுவார்கள்."

"'நான் தண்ணீர் கேட்டது உன்னிடம்.

 நீ அம்மா எடுத்து வந்த தண்ணீரை தருகிறாய்."

"நான் அம்மாவோடு தானே இருக்கிறேன்."

"'கரெக்ட். நீ கேட்டது என்னுடைய கருத்துக்களைத் தான்.

ஆனால் நான் கடவுளோடு தானே இருக்கிறேன்.

அவருடைய கருத்துக்கள் தான் என்னுடைய கருத்துக்கள்."

"சரி. கடவுள் நினைத்திருந்தால் மனிதனாக பிறக்காமலேயே ஒரே வார்த்தையில் மனித பாவங்கள் அனைத்தையும் மன்னித்திருக்கலாம்.

ஆனால் கடவுள் தனது அன்பின் தன்மையை நமக்கு வெளிப்படுத்த திட்டமிட்டார்.

தனது அன்பின் ஆழத்தை நமக்கு தெரியப்படுத்தவே அவர் தன்னுடைய அன்பினால் உந்தப்பட்டு மனிதனாகப் பிறந்தார்.

இதுதான் உங்கள் கருத்து, சரியா?"

"'சரி. ஆனால் நாம் அதைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.

தனது சாயலில் நம்மைப் படைத்த கடவுளைத் திருப்தி படுத்த 

அவரது சாயல் நமது வாழ்விலும் பிரதிபலிக்கும்படி வாழ வேண்டும்.

வாழ்கிறோமா?

அன்பினால் உந்தப்பட்டு வாழ்ந்த இயேசுவைப் போல்

 நாமும் அன்பினால் உந்தப்பட்டு வாழ்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்."

(தொடரும்)

லூர்து செல்வம்,

No comments:

Post a Comment