Thursday, March 16, 2023

மரித்தவுடனே விண்ணக வாழ்வு.

மரித்தவுடனே விண்ணக வாழ்வு.

"தாத்தா, இயேசு கி.பி.33, ஏப்ரல் 3ஆம் தேதி, வெள்ளிக் கிழமை மாலை 3 மணிக்கு மனித குல மீட்புக்காக தன்னையே சிலுவையில் பலி கொடுத்தார்.

 மரித்த வினாடியே மனித குலத்திற்கு மீட்பு கிடைத்திருக்க வேண்டும் அல்லவா?"

"'உறுதியாக.   "தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்"

என்று சொன்ன வினாடியே மனித குலம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டது.

அவரது ஆன்மா இவ்வுலக வாழ்வை விட்டு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தவுடனே,

அதுவரைப் பாதாளத்தில் விண்ணக வாழ்வுக்காகக் காத்துக் கொண்டிருந்த பரிசுத்தர்கள்  அனைவரும் அவரோடு விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்கள்."

"அதாவது இயேசுவின் வளர்ப்பு தந்தை சூசையப்பரும் அந்த வினாடி தான் விண்ணக வாழ்வுக்குள் நுழைந்தார்.

 அந்த வினாடியிலிருந்து தான் விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் திரியேக கடவுளை நேருக்கு நேர் பார்த்து பேரின்ப வாழ்வு வாழ ஆரம்பித்தார்கள்.

அந்த வகையில் பார்த்தால் அவர்களை விட நாம் தான் பாக்கியசாலிகள்.

நாம் உத்தரிக்கிற ஸ்தலத்தில் செய்ய வேண்டிய உத்தரிப்பை இவ்வுலகிலேயே செய்து முடித்து விட்டால்

இறந்த வினாடியே விண்ணகம் சென்று விடலாமே!

உத்தரிப்பு முழுவதையும் இவ்வுலகிலேயே செய்து முடிப்பது தான் கஷ்டம்."

"'கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நீ நினைக்கிற அளவுக்கு அது அவ்வளவு கஷ்டமில்லை.

நம் வாழ்நாளில் நாம் சந்திக்கும் எல்லா கஷ்டங்களையும்

 நாம் செய்கிற பாவங்களுக்குப் பரிகாரமாக 

கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருந்தால் 

உத்தரிப்பும் நடந்து கொண்டேயிருக்கும்.

புனிதர்கள் அப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள்."

"ஆனால் நாம் தான் கஷ்டப்பட சம்மதிக்க மாட்டோமே!

ஒரு சிறு தலைவலி வந்தால் கூட உடனே மாத்திரையைப் போட்டு விடுவோமே!

நமக்கு வரும் நோய் நொடிகள் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்யும் ஆசீர்வாதங்கள் என்று நாமே சொல்கிறோம்.

ஆனால் அந்த ஆசீர்வாதத்தை நாம் தான் ஏற்றுக் கொள்வதில்லையே!"

"'ஆனால் இயேசு தனது வாழ்நாளில் சந்தித்த ஒவ்வொரு கஷ்டத்தையும் அனைத்து மனுக்குல மக்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

அதனால் தான் அனைத்து மக்களுக்கும் மீட்புக் கிடைத்தது.

அதை ஏற்றுக் கொள்பவர்கள் அதற்குரிய பயனை அனுபவிப்பார்கள்.

ஏற்றுக்கொள்ளாதவர்களின் இழப்புக்கு அவர்கள் தான் பொறுப்பு.

பரிமாறப்பட்ட உணவை உண்பவர்களுக்கு வயிறு நிறையும்.

உண்ண விருப்பம் இல்லாதவர்கள் பட்டினி கிடக்க வேண்டியது தான்."

"சில பிரிவினை சபையினர் இயேசு நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்துவிட்டார், 

நாம் எத்தனை பாவங்கள் செய்தாலும் 

இயேசுவை விசுவசித்தால் போதும்,

நேராக விண்ணகம் சென்று விடலாம் என்று நம்புகிறார்கள்."

"'இது "நான் பரீட்சைக்கு fees கட்டிவிட்டேன், ஆகவே பரீட்சை எழுதாமலேயே வெற்றி அடைந்து விடுவேன்" என்று சொல்வது போலிருக்கிறது.''

"சாதாரண மக்களும் செய்யக்கூடிய சிறு சிறு பரிகாரச் செயல்களைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா?"

"'ஏன் கொஞ்சம் பார்க்க வேண்டும்? இயன்ற அளவு பார்ப்போமே.

 சிறு சிறு பரிகாரச் செயல்கள், அதாவது சிறுவர்களும் செய்யக் கூடியவை.

நான் ஒன்று கூறுவேன், அடுத்து நீ ஒன்று கூற வேண்டும். அப்படியே தொடர்ந்து."

"சரி தாத்தா. ஆரம்பியுங்கள்."

"'காலையில் 5.30க்கு எழ வேண்டும். இன்னும் தூங்க வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அந்த ஆசையை அடக்கி, தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே  எழுந்து உட்கார்வோம்."

"உடனே அம்மாவிடம் Tea கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது.
ஆசையை அடக்கி காலை செபம் சொல்லிவிட்டு, பல் தேய்த்து விட்டு Tea கேட்போம்."

"'பகலில் நாம் சந்திக்கவிருக்கும் கஷ்டங்களை எல்லாம் காலையிலேயே கடவுளுக்குப் பாவப் பரிகாரமாக ஒப்புக் கொடுப்போம்."

"காலை உணவு எப்படி இருந்தாலும் குறை சொல்லாமல் சாப்பிடுவோம்."

"'பள்ளிக்கூடத்தில் யாரிடமும் யாரைப் பற்றியும் குறை கூற மாட்டோம்."

"ஆசிரியர் தரும் அடிகளை பாவ பரிகாரமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடுப்போம்.''

"'திருப்பலியின் போது கண்களை பீடத்திலேயே வைத்திருப்போம்."

"வழிபாட்டு நேரத்தில் பராக்குக்கு இடம் கொடுக்க மாட்டோம்."

"'திருப்பலியை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுப்போம்."

"கோவிலுக்குப் போகும் போது Cell phone ஐக் கொண்டு போக மாட்டோம்."

"'இவை ஒவ்வொன்றும் ஒரு தவ முயற்சி. நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவற்றை ஆண்டவருக்கு ஒப்பு கொடுக்கலாம்.

தினமும் இப்படி  ஆயிரக்கணக்கான தவ முயற்சிகள் செய்யலாம்.

நமது உத்தரிக்கிற ஸ்தல வேதனையை அவை குறைக்கும்.

துறவிகளைப் போல கடினமான தவ முயற்சிகளைச் செய்ய சாதாரண மக்களால்  முடியாமலிருக்கலாம்.

ஆனால் சிறு சிறு தவ முயற்சிகளை சிறுவர்களும் செய்யலாம்.

துறவற சபையினர் கற்பு, கீழ்ப்படிதல், தரித்திரம் ஆகிய வார்த்தைப் பாடுகளைக் கொடுத்து,

வாழ்நாள் முழுவதும் பரிகார வாழ்வு வாழ்கிறார்கள்.

 அத்தகைய வாழ்க்கை இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவரும் அப்படித்தான் வாழ்ந்தார்.

எல்லா மக்களாலும் அத்தகைய வாழ்வு வாழ்வது முடியாது.

முடியாதவர்கள் தங்களால் இயன்ற தவ முயற்சிகளைச் செய்து பாவப் பரிகாரமாக இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

யார் யாருக்கு எவ்வளவு முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும்.

நம்மால் இயன்ற பாவப் பரிகாரச் செயல்கள் செய்யும்போது நமது பாவங்களின் எண்ணிக்கை குறையும்.

ஆண்டவரிடமிருந்து அருள் வரத்து அதிகமாகும்.

இறைவனோடு நமது உறவும் நெருக்கமாகும்.

நாம் மரணமடையும்போது பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றால்,

பாவங்களை அகற்றுவோம் பரிகாரத்தை அதிகரிப்போம்.

பரிசுத்தமாய் வாழ்ந்து,
பரிசுத்தமாய் இறைவனடி சேர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment