Sunday, March 19, 2023

சாத்தானின் தலையை நசுக்கிய பெண்.

சாத்தானின் தலையை நசுக்கிய பெண்.

"தாத்தா, நமது பிரிவினை சகோதரர்கள் அன்னை மரியாளை ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறார்களேயொழிய இறைவனின் தாயாகப் பார்ப்பதில்லை.

அதனால்தான் இறைவனின் தாய்க்கு நாம் கொடுக்கும் மரியாதையை கொடுக்க மறுக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் செயலுக்கு இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது அன்னையை நோக்கி கூறிய வார்த்தைகளைக் காரணமாகக் காண்பிக்கின்றார்கள்,"

"'எந்த வார்த்தைகளை?"

"இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அன்னை மரியாள் சிலுவை அடியில் நின்று கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அருளப்பரும் நின்று கொண்டிருந்தார்.


இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு, 

தம் தாயை நோக்கி, "பெண்ணே, இதோ! உம் மகன்" என்றார்
(Woman, behold your son.” )

இயேசு ஏன் தனது தாயை , "பெண்ணே," என்று சொன்னார்?"

"'இயேசு சொன்ன அதே வார்த்தையைத் தான் அவரது விண்ணக தந்தையும் சொன்னார் என்பது உனக்குத் தெரியுமா?"

"எப்போது?"

"'ஆதாமும் ஏவாளும் முதல் முதல் வாழ்ந்த இன்ப வனத்தில் வைத்து.

தந்தை இறைவன் நமது முதல் தாயை பாவத்தில் விழ வைத்த சாத்தானை நோக்கி,


"உனக்கும் பெண்ணுக்கும், 

உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே 

பகையை உண்டாக்குவோம்:

 அவள் உன் தலையை நசுக்குவாள்:

 நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்" என்றார். 

யார் யாருக்கு எல்லாம் பகையை உண்டாக்குவோம் என்று தந்தை சொல்கிறார்?"


"உனக்கும் பெண்ணுக்கும் 

அதாவது சாத்தானுக்கும், இயேசுவின் தாய்க்கும்.


அடுத்து,


"உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே "


அதாவது சாத்தானின் வித்தாகிய பாவத்திற்கும், அன்னை மரியாளின் வித்தாகிய இயேசுவுக்கும்,'' இடையே
பகையை உண்டாக்குவோம் என்று தந்தை சொல்கிறார்."

"'இப்போது கொஞ்சம் கூர்ந்து கவனி.

கடவுள் முதலில் மனிதனை
ஆணும், பெண்ணுமாகப் படைத்தார்."

யாரும் யாருமாகப் படைத்தார்?"

"ஆணும், பெண்ணுமாகப் படைத்தார்."

"'உன் பெயர் என்ன?"

"இப்போது எதற்கு என் பெயரை கேட்கிறீர்கள்? அதற்கும் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்?"

"'கேட்டதற்குப் பதில் சொல்."

"டேவிட்"

"உனது அம்மா உன்னை பெற்றார்களா அல்லது டேவிட்டைப் பெற்றார்களா?"

"இரண்டும் ஒன்றுதானே, தாத்தா."

"'உனக்கு எப்போது டேவிட் என்று பெயரிட்டார்கள்?"

"பிறந்த பிறகு."

"'அதாவது பிறக்கும் போது உனக்கு பெயரே இல்லை.

நீ குழந்தையாக பிறந்தாய். அவ்வளவுதான்."

"புரிவது போல் தோன்றுகிறது, ஆனால் முழுவதும் புரியவில்லை."

"'கடவுள் மனிதனைப் படைத்த பின் பெண்ணைப் படைத்தார்.

"கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, 
அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே,
 மனிதன் உயிருள்ளவன் ஆனான்.

ஆண்டவராகிய கடவுள் ஆதியிலே ஓர் இன்ப வனத்தை நட்டிருந்தார். 

தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்."
(ஆதி.2:7,8)

பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்
(ஆதி.2:22)

கடவுள் மனிதனைப் படைக்கும் போது பாவ, மாசு மறு இன்றி படைத்தார்.

அதேபோல பெண்ணைப் படைக்கும்போதும் பாவ, மாசு மறு இன்றி படைத்தார்.

தான் படைத்த பெண் பாவம் செய்ய காரணமாக இருந்த சாத்தானின் தலையை நசுக்க,

 இன்னொரு பெண்ணைப் படைக்க கடவுள் ஆதியிலிருந்தே திட்டமிட்டார்.

அந்தப் பெண்தான் இயேசுவின் தாயாகிய மரியாள்.

"உனக்கும் பெண்ணுக்கும் பகையை உண்டாக்குவோம்:

அவள் உன் தலையை நசுக்குவாள்:

நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய்.

(அதாவது, உனது முயற்சி முயற்சியாகவே இருக்கும்,
வெற்றி கிட்டாது.)

அன்னை மரியாளை பாவத்தில் வீழ்த்த சாத்தானால் என்றுமே முடியாது.

சாத்தானால் பாவத்தில் வீழ்த்தப்பட்ட ஆதாம் ஏவாளின் பாவம் சென்மப் பாவமாக அவர்களுடைய  சந்ததியினரிடையே தொடரும்.

ஆனால் அன்னை மரியாள் மட்டும் தந்தை இறைவனின் விசேஷ வரத்தினால் சென்ப பாவ மாசு இன்றி உற்பவித்தாள்.

"அவள் உன் தலையை நசுக்குவாள்." என்று கூறியது தந்தை இறைவன்.

அவரது வாக்கு பொய்க்குமா?

மரியாளின் மாசற்ற தன்மையை மறுப்பவர்கள் கடவுளை பொய்யர் என்று கூறுகிறார்கள்,

 அதாவது,

 அவர்களுடைய கூற்று தேவதூசணம், மிகப்பெரிய பாவம்.

இப்போது சொல்லு இயேசு மரியாளை 'பெண்ணே' என்று என்ன பொருளில் கூறினார்?"

"சாத்தானின் தலையை நசுக்கிய பெண்ணே" என்ற பொருளில்தான் கூறினார்.

இப்போது எனது பெயரைக் கேட்டதன் பொருள் புரிகிறது.

நான் குழந்தையாக பிறந்தது போல,

 மரியாள் பெண்ணாக பிறந்தார்.
அதாவது சாத்தானின் தலையை நசுக்கிய பெண்ணாக பிறந்தார்.

பிறந்த பின்பு தான் அவரது பெற்றோர் அவருக்கு மரியாள் என்று பெயரிட்டார்கள்.

இயேசு உற்பவித்த பின்பு தான் அவர் அவரின் தாயானாள்.

அவரின் தாயாக ஆவதற்கு முன்பே கடவுளின் விசேச அருளால் சாத்தானை வென்றுவிட்டாள். 

உற்பவிக்கும் போது மரியாளை அருளால் நிரப்பியது அவள் வயிற்றில் மனிதனாய் உற்பவிக்கவிருந்த இறைமகன்தான்."

"அதாவது, தனது சிலுவை மரணத்தின் பயனை முன்கூட்டியே தன் அன்னைக்கு அளித்தார்.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் புரியாமல் இருக்கிறதே!"

"' என்ன புரியவில்லை."

"தான் இறக்கும் தருவாயில் அருளப்பரிடம் தன் அன்னை ஒப்புவிக்கும்போது ஏன் "பெண்ணே" என்று அழைக்க வேண்டும்? தாயே என்று அழைத்திருக்கலாமே!"

"'இயேசுவின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் ஒரு பொருள் இருக்கும்.

தனது திருச்சபையை உலகெங்கும் பரப்பும் பொறுப்பை யார் வசம் இயேசு ஒப்படைத்தார்?"

"தனது சீடர்கள் வசம்."

"'இயேசுவின் சிலுவை அடியில் எத்தனை சீடர்கள் நின்றார்கள்?"

"அருளப்பர் மட்டுமே." 

"'இயேசு தனது அன்னையைத் திருச்சபையின் அன்னையாக திருச்சபைக்கு ஒப்படைக்கிறார்.

திருச்சபை சார்பாக அங்கு நின்றது அருளப்பர் மட்டுமே.

தனது அன்னையை அருளப்பருக்கு மட்டுமல்ல

 எல்லா சீடர்களுக்கும்,  

அவர்களால் மனம்திருப்ப படப்போகிற எல்லா மக்களுக்கும் 

அதாவது அனைத்து திருச்சபைக்கும் அன்னையாக நியமிக்கிறார்."

"என் கேள்வி அது அல்ல. ஏன் பெண்ணே என்றார்?"

"'திருச்சபையின் நோக்கம் என்ன? எதற்காக அதை உலகெங்கும் பரப்ப சொன்னார்?"

"மனித குலத்தை பாவத்திலிருந்து மீட்பதற்காக."

"'அதையே வேறு விதமாகச் சொல்லு.''

''சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து மனித குலத்தை மீட்பதற்காக."

"'Correct. அதற்காகத்தான் முற்றிலும் இறைவனின் அடிமையாக வாழ்ந்த,

சாத்தானின் அடிமையாக வாழ்ந்திராத, 

அதாவது சாத்தானின் தலையை நசுக்கிய 

தனது அன்னையின் வசம் தான் நிறுவிய திருச்சபையை ஒப்படைக்கிறார்.

அன்னை மரியாளுக்கு மனித குலத்தின் ஆன்மீக வரலாறு தெரியும்.

அதன் அடிப்படையில் தான் இயேசு தன் அன்னையை "பெண்ணே'' என்று அழைத்தார்.

"உலக மீட்பராகிய எனது தாயே, 

சிலுவை மரணத்தால் நான் ஈட்டிய மீட்பை உற்பவித்த நாளிலிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள்.

சாத்தானின் தலையை நசுக்கி விட்ட,

பாவ மாசற்ற உங்கள் வசம் என் திருச்சபையை ஒப்படைக்கிறேன். 

நீங்கள் பாவ மாசு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பது போல,

உங்களிடம் நான் ஒப்படைத்திருக்கும் எனது பிள்ளைகளும்

பாவம் இல்லாமல் வாழ அவர்களை வழிநடத்துங்கள்.

எனது தாயாகிய நீங்கள் எனது ஞான உடலாகிய திருச்சபைக்கும் தாய்."

இவ்வளவு பொருள் "பெண்ணே" என்று அழைத்ததில் அடங்கியிருக்கிறது."

" அடேங்கப்பா! இதெல்லாம் மாதாவுக்குப் புரிந்திருக்குமா?"

"'டேய் பொடியா, முப்பது ஆண்டுகள் மரியாளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் இறைமகன் என்பதை மறந்து விடாதே.

நம்முடனேயே தனது பண்புகளைப் பகிர்ந்து கொண்ட கடவுள்,

தனது அன்னையுடன் தனது ஞானத்தைப் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டாரா?

அவள் ஞானம் நிறைந்த கன்னிகை."

"சாத்தானின் தலையை நசுக்கிய அன்னையே,

உமது பிள்ளைகளாகிய எங்களையும் சாத்தானிடமிருந்து காப்பாற்றும்."

லூர்து செல்வம்.

.

No comments:

Post a Comment