Tuesday, March 14, 2023

மீட்பின் திட்டம். (தொடர்ச்சி)2

மீட்பின் திட்டம். (தொடர்ச்சி)2


"'நேற்று நான் கேட்ட கேள்வி ஞாபகத்தில் இருக்கிறதா?"

"அன்பினால் உந்தப்பட்டு வாழ்ந்த இயேசுவைப் போல்

 நாமும் அன்பினால் உந்தப்பட்டு வாழ்கிறோமா?" என்று கேட்டீர்கள்.

நாமும் அன்பினால் உந்தப்பட்டு தான் வாழ்கிறோம்.

ஆனால் இயேசுவைப் போல் வாழ்கிறோம் என்று சொல்ல இயலாது."

"'நீ சொல்வதைப் பார்த்தால் 

"குடும்பத்தில் தான் வாழ்கிறோம்

 ஆனால் குடும்பமாக வாழ்கிறோம் என்று சொல்ல முடியாது"

என்று சொல்வது போல் இருக்கிறது."


"உண்மைதான், தாத்தா.

இயேசு அன்பின் நற்செய்தியைப் போதித்தது மட்டுமல்ல அதை அவரே வாழ்ந்து காட்டினார்.

"ஏழைகள் பாக்கியவான்கள்"

என்று போதித்தது மட்டுமல்ல, அவரே ஏழையாக வாழ்ந்தார்.

வேறு வழி இல்லாமல் ஏழையாக வாழ வில்லை,

சர்வத்தையும் படைத்தவர் அவர், அனைத்துக்கும் உரிமையானவர் அவர்,

அவர் நினைத்திருந்தால் 
எல்லா வாழ்க்கை வசதிகளையும் கொண்ட குடும்பத்தில்,

அனைத்து நவீன வசதிகளையும் உள்ள அரண்மனையில் பிறந்து வளர்ந்திருக்கலாம்.

அப்படி வளர்ந்திருந்தால் "ஏழைகள் பாக்கியவான்கள்" என்று அவரால் போதித்திருக்க முடியாது.

கிறிஸ்தவர்கள் என்று நம்மையே அழைத்துக் கொள்ளும் நாம்

 எந்த அளவுக்கு கிறிஸ்துவைப் போல் உலகப் பொருட்களின் மீது பற்று அற்றவர்களாக வாழ்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நித்திய காலமாக திட்டமிட்டு, மனிதனாகப் பிறப்பதற்கு ஒரு மாட்டுத் தொழுவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

அவரைப் பெற்றெடுத்த அன்னை கோவிலில் வளர்ந்த ஒரு ஏழைப் பெண்மணி

தன்னை வளர்ப்பதற்காக அவர் தேர்ந்தெடுத்த சூசையப்பர் ஒரு ஏழைத் தச்சுத் தொழிலாளி.

நம்மை இயேசு போதித்த ஏழ்மை விஷயத்தில் அவரோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போமா.

நமக்கு ஏழ்மையைப் பற்றி செயல் மூலம் போதிப்பதற்காக,

 நசரேத்தூரில் சூசையப்பருக்குச்
சொந்த வீடு இருந்தும்,

90 மைல் தொலைவில் இருந்த பெத்லகேமிற்கு,

அவரை நடத்தியே கூட்டி வந்திருக்கிறார் இயேசு.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஏழைப் பாலகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நமது 
ஆடம்பரத்தைப் பார்த்தவர்கள் 

கிறிஸ்தவர்கள் ஒரு ஏழையைப் பின்பற்றுவர்கள் என்று சொல்லவே மாட்டார்கள்.

இனிப்பே சாப்பிடாத ஒருவர் நமது வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால்

அவர் சாப்பிடுவதற்கு இனிப்புப் பண்டங்களை மட்டும் நாம் கொடுத்தால் 

அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

தன்னை அவமானப்படுத்துவதற்கு என்றே தனக்குப் பிடிக்காததைத் தந்திருப்பதாக நினைக்க மாட்டார்?

"ஏழைகள் பாக்கியவான்கள்" என்று கூறிய இயேசுவைப் பார்த்து,

"இல்லை ஆண்டவரே, ஆடம்பரமாக வாழ்பவர்கள்தான் பாக்கியவான்கள்"

என்று நாம் கூறினால் அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்?

நமது ஆடம்பரமான வாழ்க்கை மூலம் இயேசுவைப் பார்த்து அப்படித்தான் சொல்கிறோம்.

வாழ்க்கையில் ஆடம்பரத்தைக் குறைப்போம்.

எளிமையாக வாழ்ந்த இயேசுவின் சீடர்களாக நாம் வாழ நாமும் எளிமையாக வாழ்வோம்.

அப்போதுதான் நாம் இயேசுவின் சீடர்கள்."

"இயேசு மனிதனாகப் பிறந்ததன் நோக்கமே நமது பாவங்களை மன்னிப்பதுதான்.

இயேசு சென்றவிடமெல்லாம் 
நோயாளிகளுக்கு விசுவாசத்தைப் பரிசாக அளித்து,

அவர்களது பாவங்களை மன்னித்து,

நோய்களைக் குணமாக்கினார்.

சாகும் தருவாயில் கூட தனது பாடுகளுக்குக் காரணமானவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

நல்ல கள்ளன் செய்த பாவங்களை மன்னித்து அன்றே அவனை விண்ணகத்திற்கு அழைத்துச் சென்றார்.

தவக்காலத்தில் இயேசுவின் பாடுகளைப் பற்றி தியானிக்கும் நாம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறோம்.

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாம் மன்னிக்கின்றோமா?"

"'பேரப் புள்ள, "எங்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் பாவங்களை மன்னியும்."

என்றுதான் நாம் தினமும் தந்தையிடம் செபிக்கிறோம்.

அதாவது,

"எங்களுக்கு எதிராகக் குற்றம்   செய்தவர்களை நாங்கள் மன்னியாதது போல 

எங்கள் பாவங்களை 
மன்னியாதேயும்."

என்பதுதான் நமது செபத்தின் பொருள்.

குடும்பங்களிலும் சரி, சமூகத்திலும் சரி ஏற்படும் அநேக பிரச்சனைகளுக்குக் காரணம் 

நாம் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளாதது தான்.

குடும்ப அங்கத்தினர்கள், பெற்றோர்களும் சரி பிள்ளைகளும் சரி,
 குடும்ப சமாதானத்திற்கு முதல் இடம் கொடுக்க வேண்டும்.

குற்றம் குறைகளை பார்ப்பதற்கு முதலிடம் கொடுப்பதால் தான் குடும்பங்கள் உடைகின்றன.

ஒருவரையொருவர் மன்னித்து ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் அன்பு வளரும், குற்றங்கள் காணாமல் போகும்.

மன்னிப்பு இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

அன்பு இல்லாத இடத்தில் சமாதானம் இருக்காது.

பிறர் நமக்கு எதிராக செய்கிற குற்றங்களை அவர்கள் கேட்காமலேயே அவர்களை மன்னித்து ஏற்றுக் கொண்டால்

 அதே குற்றங்களை திரும்பவும் செய்ய மாட்டார்கள்.

பிறரை மன்னிக்க முடியாதவனால் கிறிஸ்தவனாக வாழ முடியாது.

உலகில் குற்றம் குறைகள் முற்றிலும் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது.

ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் 

வாழ்வில் சமாதானம் நிலவும்."

"ஒவ்வொரு இரவும் படுக்கப் போவதற்கு முன் தங்கள் குற்றங்களைத் தாங்களே பரிசோதித்துப் பார்ப்பவர்கள் 

பிறருடைய குற்றங்களை பெருசு படுத்த மாட்டார்கள்."


"'இயேசு நம் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தமையால் விண்ணில் இருந்து மண்ணுக்கு இறங்கி வந்து நமக்காக வாழ்ந்தார்.

இயேசுவின் பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அவரோடு நித்தியமாய் வாழ விண்ணுக்கு  நம்மை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் 

நாம் அவருக்காக வாழ்வோம். அவரது போதனைப்படி வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment