Wednesday, March 22, 2023

சிலுவையின் இரகசியங்கள்.

சிலுவையின் இரகசியங்கள்.

"தாத்தா, கடவுள் அளவில்லாதவர் தானே"

"'ஆமா. அதில் என்ன சந்தேகம்?"

"அளவில்லாதவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பலன் 
அளவில்லாததாகத் தானே இருக்கும்?"

"'ஆமா."

"உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது.

உங்களுடைய பென்சிலை விற்றாலும் ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும், உங்களுடைய TVயை விற்றாலும்
ஒரு இலட்சம் ரூபாய் கிடைக்கும் என்றிருந்தால் நீங்கள் எதை விற்பீர்கள்?"

"'பென்சிலைத்தான் விற்பேன்."

"இயேசு நமக்காக மனிதனாகப் பிறந்து, நமக்காக மரணம் அடைய தீர்மானித்து விட்டார்.

அவர் எத்தகைய மரணம் அடைந்தாலும் அதன் பலன் அளவில்லாததாகத் தானே இருக்கும்?

அவர் ஏன் குறைந்த வேதனை உள்ள மரணத்தைத் தேர்ந்தெடுக்காமல்

வேதனை மிகுந்த சிலுவை மரணத்தைத் 
தேர்ந்தெடுத்தார்?"

"'உன்னுடைய அப்பா உன்னுடைய அம்மாவுக்கு பிறந்தநாள் பரிசாக ஒரு சேலை எடுத்துக் கொடுக்க தீர்மானித்து விட்டார்.

சேலை எடுக்க ஜவுளிக்குப் போய்விட்டார்கள்.

எதை எடுத்தாலும் ஆயிரம் ரூபாய் என்று விளம்பரம் போட்டிருக்கிறார்கள். 

உன்னுடைய அப்பா சாதாரண நூல் சேலை எடுத்துக் கொடுப்பாரா, பட்டுச்சேலை எடுத்துக் கொடுப்பாரா?"

" பட்டுச்சேலையைத்தான் எடுத்துக் கொடுப்பார். அது தான் அதிக கவர்ச்சியாக இருக்கும்."

"'கடவுள் மனிதன்பால் கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகவே மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார். 

தனது அன்பின் அளவை மனிதனுக்கு வெளிப்படுத்தவே மிக அதிகமான வேதனை வாய்ந்த சிலுவை மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்."

"சிலுவை மரணம் மிக அதிகமான வேதனை வாய்ந்த மரணம் என்பது உண்மைதான்.

வேறு காரணங்களும் இருந்திருக்கலாம் அல்லவா?"

"'பேரப்புள்ள, கடவுள் எதைச் செய்தாலும் இதற்காகத்தான் செய்கிறேன் என்று நம்மிடம் சொல்லிவிட்டுச் செய்ய மாட்டார்.

ஆனாலும் அவரது பண்பின் அடிப்படையில் நாமாகவே சில காரணங்களை யூகித்துக் கொள்ளலாம்.

பாவத்திற்கான நரக தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்றவே இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து நமது பாவங்களை மன்னிக்கத் தீர்மானித்தார்.

இயேசு உலகில் வாழ்ந்த காலத்தில் உலக அரசு குற்றம் செய்பவர்களுக்கு அளித்து வந்த மிகப்பெரிய தண்டனை சிலுவை மரணம்.

ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய தண்டனை நரகம்.

உலக ரீதியாக மிகப்பெரிய தண்டனை சிலுவை மரணம்.

ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய தண்டனையிலிருந்து நம்மைக் காப்பாற்ற,

உலக ரீதியாக மிகப்பெரிய தண்டனையாகிய சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.

ஆன்மீக ரீதியாக நரக தண்டனை அளவிட முடியாத வேதனை வாய்ந்தது.

ஆனால் இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் கிடைக்கும் மீட்பு அளவிட  முடியாத  நித்திய பேரின்பத்தைத் தரக்கூடியது."

"தாத்தா, ஒரு காலத்தில் சிலுவை அவமானத்தின் சின்னம்.

இயேசு அதில் மரித்து மகிமை அடைந்ததால் அது மகிமையின் சின்னமாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் ஒருவனுக்கு நிறைய துன்பங்கள் வந்தால் 
அதைப் பார்ப்போர்,

"இவன் என்ன பாவம் செய்தானோ!" என்பர்.

இப்போது ஒருவனுக்கு நிறைய துன்பங்கள் வந்தால் சிலுவை பக்தர்கள்,

"நீ பாக்கியசாலி, கடவுள் எதைக் கொண்டு உலகத்தை மீட்டாரோ அதை அவரே உன்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

நீ கடவுளுக்கு மிகவும் பிரியமானவன்" என்பார்கள்.

உலகில் உள்ள எல்லா துன்பங்களையும் சிலுவைகளாக மாற்றுவதற்கே இயேசு தான் மரணமடைய சிலுவையைத் தேர்ந்தெடுத்தார்."

"'இயேசு உண்மையிலேயே அவரை மிகவும் நேசிப்பவர்களுக்கு சிலுவையைப் பரிசாகக் கொடுக்கிறார்.

 பிரான்சிஸ் அசிசி, சுவாமி பியோ போன்ற புனிதர்களுக்குத் தனது ஐந்து காயங்களையும் பரிசாகக் கொடுத்தார்.

இப்போதும் ஐந்து காய வரம் பெற்ற சிலர் உலகில் வாழ்கிறார்கள்."

"கிறிஸ்தவனுக்கு அடையாளமே 
சிலுவை அடையாளம் தான்.

கிறிஸ்தவன் ஞானஸ்நானத்தில் பெற்ற சிலுவை அடையாளத்திலிருந்தான் தனது ஆன்மீக வாழ்வை ஆரம்பிக்கிறான்.

ஆயிரக்கணக்கான சிலுவைகளின் படை சூழ ஆன்மீக வாழ்க்கையைத் தொடர்கிறான்.

சிலுவை அடையாளம் வரைந்து அவஸ்தைப் பூசுதல் பெற்ற பின் விண்ணக வாழ்வுக்குள் நுழைகிறான்.

மண்ணுக்குள் நுழையும் அவனது உடல்கூட சிலுவையைச் சுமந்து கொண்டு தான் செல்கிறது.

எங்கும் சிலுவை. எதிலும் சிலுவை.

சிலுவைதான் கிறிஸ்தவனின் வாழ்க்கை.

சிலுவையைச் சுமந்து கொண்டுதான் இயேசுவின் பின் செல்கிறோம்.

ஆண்டவர் நடந்த சிலுவைப்பாதை வழி நடப்போம்.

அதுவே விண்ணக மகிமைக்கான பாதை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment