Tuesday, March 28, 2023

"யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்." (யாத்.20:4)

யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.


"ஹலோ, மிஸ்டர், பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டா?"

'"பழக்கம்னா?"

"வழக்கம்."

"'இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்."

"பதில் சொல்லுங்க.
பைபிள் வாசிக்கும் வழக்கம் உண்டா?"

"'உங்களுக்கு மூச்சு விடும் வழக்கம் உண்டா?"

"இது என்ன சார் கேள்வி? 
மூச்சு விடுவது, வாழ்க்கை, வழக்கமல்ல."

"'பைபிளும் அப்படித்தான், சார். தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாகக் கேள்விக்கு வாருங்கள்."

"யாத்திராகமம், 20ஆம் அதிகாரம்
நான்காம் வசனத்தை வாசியுங்கள்."

"'மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்."

"வசனத்தின் பொருள் புரிகிறதா?"

"'புரிகிறது."

"புரிந்தும் நீங்கள், கத்தோலிக்கர்கள், ஏன் விக்கிரகங்களைச் செய்து கோவிலில் வைத்திருக்கிறீர்கள்?"

"'எங்கள் கோவில்களில் விக்கிரகங்களைச் செய்து வைத்திருப்பதாக உங்களுக்கு சொன்னது யார்?"

"நானே பார்த்திருக்கிறேனே."

"'அப்போ உங்கள் கண்களில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

என்னை நான்காவது வசனத்தை வாசிக்க சொன்னீர்களே, நீங்கள் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது வசனங்களை வாசியுங்கள்." 

"எகிப்து நாட்டிலிருந்தும் அடிமை வாழ்வினின்றும் உன்னை விடுவித்த ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.

நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக''

"அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."

"'போதும். எந்த பொருளையும் அரைகுறையாக பார்த்துவிட்டு அதைப் பற்றி விமர்சனம் சொல்லலாமா?

உதாரணத்திற்கு நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து 

"உங்கள் மேசைக்கு கால்களே இல்லை"  
என்று சொன்னால் நான் உங்களை என்ன சொல்வேன்?"

"குருடன் என்பீர்கள்."

"'இப்போதும் அதையேதான் சொல்கிறேன்.

ஒரே உண்மை தான் நான்கு வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

நான்கு வசனங்களையும் ஒரே நேரத்தில் வாசித்தால் தான் முழு உண்மை தெரியும்.

ஒரு வசனத்தை மட்டும் வாசித்தால் முழு உண்மை தெரியாது.

நான்கு வசனங்களிலும் அடங்கியுள்ள ஒரு உண்மையை சொல்கிறேன்.

கடவுள் சொல்கிறார்.

"நானே உன் கடவுள்.

என்னை தவிர வேறு கடவுள்கள் உனக்கு இல்லை.

ஏதாவது ஒரு விக்கிரகத்தைச் செய்து, 

எனக்கு கொடுக்க வேண்டிய ஆராதனையை அதற்கு கொடுக்காதே''

இது யாத்திராகமம், 20:2,3,4,5 வசனங்களில் அடங்கியுள்ள முழுமையான உண்மை.

நம்மைப் படைத்த கடவுளை மட்டுமே நாம் ஆராதிக்க வேண்டும்.

அவருக்கு பதிலாக வேறொரு பொருளை கடவுளாக நினைத்து ஆராதிக்க கூடாது.

இப்பொழுது விக்கிரகம் என்ற வார்த்தைக்கு பொருள் கூறுங்கள் பார்ப்போம்."

"உண்மையான கடவுளுக்கு கொடுக்க வேண்டிய ஆராதனையை கொடுப்பதற்காக நாமே உண்டாக்கிய பொருள் தான் விக்கிரகம்."

"'பாவூர்சத்திரத்தில் காமராஜருடைய சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது.

 அது விக்கிரகமா?"

"இல்லை. காமராஜருடைய ஞாபகமாக வைக்கப்பட்டிருக்கிறது.

கடவுளுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனையைக் கொடுப்பதற்காக அல்ல."

"'உங்களுடைய வீட்டில் உங்களின் தாத்தாவின் புகைப்படம் ப்ரேம் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

அது விக்கிரகமா?"

"இல்லை, அது எங்களின் தாத்தாவின் ஞாபகமாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது."

"'எங்கள் கோவில்களில் புனிதர்களின் ஞாபகமாக வைக்கப்பட்டிருக்கும் சுரூபங்களை நீங்கள் ஏன் விக்கிரகம் என்று அழைக்கிறீர்கள்?"

"அதை விக்கிரகம் என்று நான் அழைத்தது தப்புதான். ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் அவற்றுக்கு நீங்கள் மாலை போடுகிறீர்கள்.

வணக்கம் செலுத்துகிறீர்கள்.

அவற்றுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள்.

இதெல்லாம் தப்பு இல்லையா?"

"உங்கள் வீட்டில் வைத்திருக்கும் உங்களது தாத்தாவின் புகைப்படத்திற்கு இதையெல்லாம் நீங்கள் செய்வதில்லையா?

ஆராதனை இறைவனுக்கு மட்டுமே.

திவ்ய நற்கருணை மெய்யாகவே இறைவன்.

திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறோம்.

புனிதர்களுக்கு வணக்கம் மட்டுமே செலுத்தலாம்.

புனிதர்களின் சுருபங்களுக்கு வணக்கம் செலுத்துவதில்லை.

அவற்றைப் பார்த்து, அவை ஞாபகப்படுத்தும் புனிதர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

அந்தோனியார் சுரூபத்துக்கு மாலை போடும்போது அது ஞாபகப்படுத்தும் அந்தோனியாருக்கே மாலை போடுகிறோம்."

"சுருபம்தான் அந்தோனியார் என்று நினைத்து வணங்கினால்?" 

"'பாவம்.

ஆனால் சுரூபம், சுரூபம் மட்டுமே,
புனிதர் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும். 

நாங்கள் வணக்கம் செலுத்துவது சுருபங்களால் ஞாபகப்படுத்தப்படும் புனிதர்களுக்கே.

அநேகர் தங்களது phone களில் தங்களுக்கு விருப்பமானவர்களுடைய புகைப்படங்களை வைத்திருப்பார்கள்.

அவை புகைப்படங்கள்தான், ஆட்கள் அல்ல, என்று அவர்களுக்குத் தெரியும்.

அதேபோல் தான் எங்கள் கோவில்களில் நாங்கள் வைத்திருக்கும் சுருபங்கள்
 சுருபங்கள்தான் என்று எங்களுக்குத் தெரியும்.

எங்களுக்குத் தெரியும் என்பது உங்களுக்கும் தெரியும்.

ஆனால் கத்தோலிக்கர்களைக் குறை சொல்லிக் கொண்டிருப்பதில் உங்களுக்கு ஒரு ஆனந்தம்."

"ஆனால், இப்பொழுது எனக்குப் புரிகிறது.''

"'என்ன புரிகிறது?"

"கடவுளுக்கு மட்டுமே உரிய ஆராதனையை அவரால் படைக்கப் பட்ட. பொருட்களின் உருவங்களுக்கு கொடுப்பது மட்டுமே விக்கிரக ஆராதனை.

நீங்கள் கோவிலில் வைத்திருக்கும் சுரூபங்கள் அவற்றை ஆராதிப்பதற்காக அல்ல.

அவை ஞாபகப்படுத்தும் புனிதர்களை வணங்குவதற்காக மட்டுமே.

நீங்கள் திவ்ய நற்கருணையை ஆராதிக்கிறீர்கள்.

புனிதர்களை வணங்குகிறீர்கள்.

போதுமா?"

"'சகல புனிதர்களே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."

லூர்து செல்வம்..

No comments:

Post a Comment