Monday, October 31, 2022

"ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.''(பிலிப்.2:2)

"ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.''
(பிலிப்.2:2)

கோடிக்கணக்கான சதுர மைல்கள் பரந்த விண்வெளியில்

கோடிக்கணக்கான  மைல்கள் இடைவெளியோடு,

பரந்து கிடக்கும் எண்ண முடியாத நட்சத்திரங்களும், அவற்றின் கோள்களும் தங்கள் தங்கள் பாதையில், ஒன்றோடு ஒன்று மோதாமல், வலம் வருவதற்குக் காரணம்

அவற்றைப் படைத்த இறைவன் படைத்த ஈர்ப்பு விசை (gravitational force)   என்னும் இயற்கை விதிதான்.

அதே போல் தான் உலகில் வாழும் கோடிக்கணக்கான  மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளாமல்,

 உறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக இறைவன் கொடுத்த ஈர்ப்பு விசை தான் அன்பு.

அன்பு மயமான இறைவன் தனது பரிசுத்தமான அன்பை தான் படைத்த மனிதர்களோடு பகிர்ந்து கொண்டார்.

ஆனால் மனிதன் 

தான் செய்த பாவத்தினால்

 இறைவன் பகிர்ந்து கொண்ட அன்பைக் கழங்கப் படுத்தி,

அன்புக்கு எதிர்ப் பண்பான வெறுப்பு உணர்வையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.

விளைவு?

இறைவனோடு உள்ள உறவை இழந்தான்.

சக மனிதர்களோடு சமாதானத்தை இழந்தான்.

ஒற்றுமையோடு வாழ வேண்டிய உலகைச் சண்டைக் காடாக மாற்றினான்.

பரிசுத்தமாய் வாழ வேண்டிய உலகைப் பாவக் காடாக மாற்றினான்.

பாவத்திலிருந்து மனிதனை மீட்டு, மீண்டும் அன்பின் ஆட்சியைக் கொண்டு வரவே,

இறைமகன் மனுமகனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலி கொடுத்தார்.

இறைவன் கொடுத்த அன்பினால் மனிதன் 

அவரோடும், சக மனிதர்களோடும் உறவோடு வாழ வேண்டும் என்பதுதான்  

அவருடைய ஆசை.

இறைவனின் இந்த ஆசையைத்தான் புனித சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய மடலில்

"ஒரே அன்பும். ஒரே உள்ளமும், ஒரே மனமும் கொண்டிருங்கள்.''

என்ற வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த வார்த்தைகள் பிலிப்பியருக்கு மட்டுமல்ல, நமக்கும் சேர்த்துதான் கூறப்பட்டன.

வித்தியாசமான நாடுகளில்,

 வித்தியாசமான சூழ்நிலைகளில்,

வித்தியாசமான கலாச்சாரங்களில்,

வித்தியாசமான குணநலன்களோடு மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தாலும்

அவர்களை இறைவனால் படைக்கப்பட்ட ஒரே மனித குலமாக இணைக்க வேண்டியது

அவர்கள் உள்ளத்தில் இருக்க வேண்டிய ஒரே அன்புதான்.

இறைவன் அவர்களோடு பகிர்ந்து கொண்ட அன்புதான்

அவர்களை இறைவனோடும், ஒருவர் ஒருவரோடும் இணைக்க வேண்டும்.

இதைத்தான் இயேசுவும்

"எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசியுங்கள்,

உங்களை நீங்கள் நேசிப்பது போல உங்களது அயலானையும் நேசியுங்கள்."

 என்ற கட்டளைகள் மூலம் நமக்குச் சொன்னார்.

நாம் இயேசுவின் அன்போடு,  ஒருவர் ஒருவருடன் பரிவுடனும், இரக்கத்துடனும் வாழ வேண்டும்.

பரிவும், இரக்கமும் இறையன்பின் பிள்ளைகள்.

மனிதர்கள் கோடிக் கணக்காக வாழ்ந்தாலும் அன்பினால் அவர்கள் ஒரு மனத்தினராய் வாழ வேண்டும்.

அதாவது அனைவரது மனத்திலும் இறைவன் அருளிய ஒரே அன்புதான் இருக்க வேண்டும்.

அன்புதான் அவர்களை ஒரே மனுக்குலமாக வாழ வைக்கும்.

அன்பினால் இணைக்கப் பட்ட மனுக் குலத்தில் சண்டை, சச்சரவுகளுக்கு இடமில்லை.

பரிவும், இரக்கமும் உள்ள உள்ளங்களில் 

சண்டை, சச்சரவுகளுக்குக் காரணமான வெறுப்பு உணர்வே தோன்றாது.


அன்புள்ள மனங்கள் என்றோடொன்று போட்டி போடாது.

 அன்புள்ள மனங்களில், வீண் பெருமைக்கும் இடம் இல்லை.

அன்பு தாழ்ச்சி உள்ளது.

மற்றவர்களை உயர்ந்தவராகக் கருதும்.

அன்பு உள்ளவர்கள் தங்கள் நலத்தை விட  பிறர் நலத்தையே
அதிகமாக விருப்புவார்கள்.

இயேசுவில் இருந்த மனநிலையே நம்மிடமும் இருக்க வேண்டும்.

சர்வ வல்லமை உள்ள இறைமகன் நம் மீது கொண்ட அன்பினால் 

நம் நிலைக்கு இறங்கி வந்துதானே 

நம்மை அவர் நிலைக்கு உயர்த்தினார்.

அவர் பரிசுத்தர்.

நாம் பாவிகள்.

பாவத்திலிருந்து நம்மை மீட்டு பரிசுத்தர்களாக மாற்றிக் கொண்டிருப்பவர் அவர் தானே. 

மண்ணில் வாழும் நம்மை விண்ணில் வாழ வைக்கத்தானே 

விண்ணின் மன்னர் மண்ணில் மனிதனாகப் பிறந்தார்.

கிறிஸ்தவர் என்றாலே கிறிஸ்துவாக வாழ்பவர்கள்தானே.

கிறிஸ்து நமக்காக வாழ்வது போல நாமும் அனைவருக்காகவும் வாழ்வோம்.

அதற்கு நம் மனதில் இருக்க வேண்டியது கிறிஸ்துவின் சுயநலம் இல்லாத அன்பு.

ஆளுக்கொரு மனம் இருந்தாலும் 
இயேசுவின் அன்பினால் ஒரே மனத்தவராய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 30, 2022

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்." (லூக்.16:8)

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தம்போன்றவர்களிடத்தில் மிக்க விவேகமுள்ளவர்களாய் இருக்கின்றனர்."
(லூக்.16:8)

பணி நீக்கம் செய்யப் பட்ட கண்காணிப்பாளன் தனது பிழைப்புக்கு வழி செய்யும் வகையில் 

முதலாளியிடம் கடன் வாங்கியவர்களின் கடன் கணக்கை மாற்றி எழுத வைக்கிறான்.

ஆன்மீகப் பார்வையில் அவன் செய்தது தவறு.

ஆனால் உலகப் பார்வையில் அவன் விவேகமானவன்.

இரண்டும் எதிர் எதிர் பார்வைகள்.

உலகப் பார்வையில் இலஞ்சம்u வாங்குபவன் பிழைக்கத் தெரிந்தவன். வாங்காதவன் பிழைக்கத் தெரியாதவன்.

ஆன்மீகப் பார்வையில் இலஞ்சம் வாங்குவது பாவம், வாங்காதது புண்ணியம்.

உலகின் மக்கள் உலக ரீதியில் விவேகிகளாய் இருக்கிறார்கள்.

ஆனால் ஒளியின் மக்களுக்கு, ஆன்மீக ரீதியில் விவேவிகளாக இருக்கத் தெரியவில்லை.

உலகில் நமது ஆன்மாவைத் தவிர நமது உடல் உட்பட மற்ற எல்லாம் அழியக்கூடிய லௌகீகப் பொருட்கள் தான்.

லௌகீகச் செல்வத்தை இயேசு அநீத செல்வம் என்கிறார்.

ஏனெனில் அது நாம் செய்யும் அநேக பாவங்களுக்குக் காரணமாகவும், உதவியாகவும் இருக்கிறது.

பணம் நம்மிடம் இருப்பதால்தானே இலஞ்சம் கொடுக்கிறோம்.

பண ஆசையால்தானே திருடுகிறோம்.

 "அநீத செல்வத்தைக் கொண்டு

நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள். 

அது உங்களைக் கைவிடும்பொழுது, 

இவர்கள் உங்களை முடிவில்லாக் கூடாரங்களில் ஏற்றுக்கொள்வார்கள்."
என்று ஆண்டவர் சொல்கிறார்.

அந்த  செல்வம் நம்மைக் கைவிடும்.

 ஆனால் நாம்  சம்பாதித்த நண்பர்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள்.

அவர் நண்பர்கள் என்று சொல்வது உலகைச் சார்ந்த நண்பர்களை அல்ல.

முடிவில்லாக் கூடாரங்களில், அதாவது, மோட்சத்தில் வாழும் நண்பர்களை.

மோட்சத்தில் வாழும் அனைவரும் நமது நண்பர்கள்தான்.

நாம் புண்ணியம் செய்யும்போது மோட்சத்தில் வாழும் அனைத்து புண்ணியவான்களும் நமது நண்பர்கள் ஆகி விடுகிறார்கள்.

அநீத செல்வத்தைக்கொண்டு எப்படி புண்ணியம் செய்வது?

அநீத செல்வத்தை இலஞ்சமாகக் கொடுக்கும் போது நாம் பாவம். செய்கிறோம்.

அதே செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து உதவும்போது நாம் புண்ணியம் செய்கிறோம்.

செல்வத்தைப் பிறரன்பு பணிகளுக்காகப் பயன் படுத்தும் போது நாம் இறைவனோடும், மோட்ச வாசிகளோடும் உறவில் நெருக்கம் ஆகிறோம்.

நமது உலக செல்வத்தை பிறரன்புப் பணிகளுக்காகச் செலவு செய்யும்போது

புனித அந்தோனியார் மோட்சத்தில் வாழும் நமது நண்பர், .

ஒரு வேலை கிடைக்க உதவ வேண்டும் என்று அந்தோனியாரிடம் வேண்டி விட்டு,

நமது செல்வத்தை இலஞ்சமாகக் கொடுத்து வேலை வாங்கிவிட்டு,

வேலை கிடைத்ததற்கு அந்தோனியாருக்கு நன்றி சொல்ல உவரிக்குச் சென்றால்,

அது அவரைக் கேலி செய்வதற்குச் சமம்.

"அந்தோனியாரே, மூன்று இலட்சம் லஞ்சம் கொடுத்து ஒரு வேலை வாங்கியிருக்கிறேன், உமக்கு நன்றி" என்று சொன்னால்,

''உனது பாவத்திற்கு நான் துணை நிற்கவில்லை. எனக்கு எதற்கு நன்றி?

நீ நன்றி சொல்ல வேண்டிய ஆள் யாரும் மோட்சத்தில் இல்லை.

இலஞ்சம் கொடுக்க உன்னைத் தூண்டியவன் சாத்தான்.

பாவத்திற்கு நன்றி சொல்ல பரலோக வாசிகளைத் தேடி வராதே" என்பார்.

நம்முடைய செல்வத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விட்டு,

"அந்தோனியாரே, எனக்காக வேண்டிக் கொள்ளும்." என்று செபிக்க வேண்டும்.

நமது செபம் கேட்கப்படும்.

விண்ணகப் பாதையில் நடக்க விரும்புகிறவர்கள் தங்கள் செல்வத்தை அயலானுக்கு உதவ பயன் படுத்த வேண்டும்.

வெற்றிகரமாக நடக்க விண்ணக நண்பர்கள் உதவுவார்கள்.

நாம் ஒளியின் மக்கள்

விவேகமாக செயல்படுவோம்.

உலக செல்வங்களைக் கொண்டு விண்ணகத்தில் நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வோம்.

நாம் அங்கேதான் நாம் சம்பாதித்த நண்பர்களுடன் இறைவனோடு நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, October 29, 2022

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்."(லூக்.19:5)

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்."
(லூக்.19:5)

சக்கேயுவுக்கு இயேசுவைப் பார்க்க ஆசை. 

ஆனால் அவன் குள்ளனாக இருந்ததால் கூட்டத்தோடு சென்று கொண்டிருந்த அவரைத் 

தரையில் நின்று பார்க்க இயலவில்லை.

ஆகவே அவர் செல்லக் கூடிய வழியில் நிறை ஒரு அத்திமரத்தின் மேல் ஏறிக்கொண்டான்.

இயேசு அந்த இடத்திற்கு வந்தபோது, ஏறெடுத்து அவனை நோக்கி, 

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா. இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

தனது ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்பவர் இயேசு.

அன்று சக்கேயுவின் வீட்டில் தங்கவேண்டும் என்பது அவர் திட்டம்.

அதன்படிதான் மரத்தின் மேலிருந்த சக்கேயுவை ஏறெடுத்துப் பார்த்து,

"சக்கேயுவே, விரைவாய் இறங்கி வா.
 இன்று உன் வீட்டில் நான் தங்கவேண்டும்" என்றார்.

"பாவியோடு தங்குவதற்குப் போயிருக்கிறாரே" என்று முணுமுணுத்தவர்களைப் பற்றி அவர் கவலைப் படவில்லை.

ஏனெனில் அவர் உலகத்துக்கு வந்ததே பாவிகளைத் தேடித்தானே.

அவர் மரத்தின் மேல் இருந்தவனைப் பார்த்து தான்

" விரைவாய் இறங்கி வா." என்றார்.

"விரைவாய் இறங்கி வா" என்ற வார்த்தைகளைத் தியானித்த போது அவற்றுக்குள் ஆன்மீக ரீதியான ஏதோ ஒரு பொருள் புதைந்து இருப்பது போல் மனதில் தோன்றுகின்றது.

அந்த நேரத்தில் அவனை மரத்திலிருந்துதான் இறங்கச் சொன்னார்.

ஆனால் அதனுள் புதைந்து இருந்த ஆன்மீகத்தைக் கண்டு பிடித்து விட்டவன் போல சக்கேயு வாழ்க்கையிலேயே இறங்கி வந்து விட்டான்.

அவன் பெரிய பணக்காரன்.

பணக்காரப் புத்தியிலிருந்து இறங்கி வந்து விட்டான்.

வீட்டிற்குச் சென்றவுடன் ஆண்டவரை நோக்கி,

"ஆண்டவரே, 

இதோ! என் உடைமையில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன்.

 எவனையாவது ஏமாற்றி எதையாவது கவர்ந்திருந்தால்,

 நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று சொன்னான்.

விருப்பத்தின் பேரில்தான் பணத்தைச் சேர்த்திருப்பான்.

ஆனால் ஆண்டவரைப் பார்த்தவுடன் அதை இழக்கத் துணிந்து விட்டான்.

ஆண்டவரும்,
" இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று.

 இவனும் ஆபிரகாமின் மகன்தானே.

இழந்துபோனதைத் தேடி மீட்கவே மனுமகன் வந்துள்ளார்" என்றார்.

தேடிய பணத்தால் ஆன்மீக வாழ்வை இழந்திருந்தவன்,

பணத்தை இழந்து,   இழந்ததை இயேசுவின் அருளால் மீட்டுக் கொண்டான்.

ஆண்டவரும்,

"இன்று இவ்வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று." என்றார்.



 அதே வார்த்தைகளை இயேசு நம்மை நோக்கியும் கூறுவதாக எண்ணி அவற்றைத் தியானித்துப் பார்த்தால்

அவற்றிலுள்ள ஆன்மீக அர்த்தம் நமக்குப் புரியும்.

சக்கேயு இயேசுவைப் பார்க்க ஆசைப் பட்டது போல

நாமும் அவருக்கு சேவை ஆசைப்படுவதாக நினைத்துக் கொள்வோம்.

 இயேசு நம்மைப் பார்த்து,

 ''உனது சேவையின் போது நானும் உன்னோடு தங்க வேண்டும்.

நான் உன்னோடு தங்க வேண்டும் என்றால் நீ இறங்கி வந்து தாழ்ச்சியுடன் பணி புரிய வேண்டும்.

சர்வ வல்லப கடவுளாகிய நான் பூமியில் வாழும் உன்னை மீட்க விண்ணிலிருந்து இறங்கி வந்ததை ஞாபகத்தில் வைத்துக் கொள்.

தாழ்ச்சியின் இருப்பிடத்திற்கு இறங்கி வந்து உன் பணியை ஆரம்பி.

நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்.''
என்று கூறுவார்.

ஆண்டவருக்காக பணி புரிய ஆசிக்கும் நாம் சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல.

நாம் யார் மத்தியில்  பணிபுரிகிறோம் என்பதுதான் முக்கியம்.

அவர்கள் நிலைக்கு நாம் இறங்க வேண்டும்.

மனிதருக்கு நற்செய்தியை அறிவிக்க

 இறைமகன் மனிதர் நிலைக்கு இறங்கி வந்து,

மனிதரோடு மனிதராக வாழ்ந்தார்.

"இறைமகன் என்று தன்னைக் கூறிக் கொண்டு, பாவிகளோடு உண்கிறாரே." என்று அவரைப் புரிந்து கொள்ளாதோர் முணுமுணுத்திருக்கலாம்.

உலகத்துக்கே உரிமையாளரான அவர், ஏழையாய்ப் பிறந்து,

ஏழைகளோடு ஏழையாய்த் தானே வாழ்ந்தார்.

'மனுமகனுக்கு தலை சாய்க்கக் கூட இடமில்லை" என்று தன்னைப் பற்றி கூறும் அளவிற்கு அவர் ஏழையாய் வாழ்ந்தார்.

நாம் பிறந்து வளர்ந்த சமூக அந்தஸ்து எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்,

இறைப் பணி ஆற்ற வேண்டு மென்றால், இறங்கி வர வேண்டும்.

Fr. ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி 
(Fr. Stan Swamy) என்ற சேசு சபைக் குரு பழங்குடியினர் உரிமைகள் உரிமைகளுக்காக போராடியபோது

அவர்களோடு அவராகத்தானே வாழ்ந்தார்.

நாமும் மக்களோடு மக்களாக வாழ்ந்தால்தான் அவர்களுக்கு இயேசுவை அறிவிக்க முடியும்.

விலை உயர்ந்த காரில் ஏறி, ஏழையின் வீட்டிற்குப் போனால் அவன் நம்மில் ஏழையாய் வாழ்ந்த இயேசுவைக் காணமாட்டான்.

காரின் உரிமையாளரைத்தான் காண்பான்.

நித்திய காலமாய்த் திட்டம் போட்டே

 மாடடைக் குடிலில் பிறந்த இயேசுவின் பிறந்த நாளை

 இலட்சக் கணக்காய்ச் செலவழித்து கொண்டாடும் நம் உள்ளத்தில் 

ஏழை மகன் இயேசு எப்படிப் பிறப்பார்?

சிந்திப்போம்.

இயேசுவுக்குப் பணிபுரிய வேண்டுமா?

இறங்கி வருவோம்.

லூர்து செல்வம்.

Friday, October 28, 2022

"அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்"(லூக்.15:21)

"அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்"
(லூக்.15:21)

இயேசு கூறிய ஊதாரிப் பிள்ளையின் உவமை கடவுளுக்கும், பாவிக்கும் இருக்கும் உறவை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது.

தன் தந்தையின் சொத்தில் தனது பங்கைப் பெற்றுக் கொண்ட மைந்தன் அதை ஊதாரித் தனமாக செலவழித்து விட்டு,

வாழ வழி இல்லாமல் போகவே, வேறு வழியின்றி, மனம் மனந்திரும்பி, தன் தந்தையிடம் திரும்புகிறான்.

தந்தையும் அவனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார்.

மனம் திரும்பும் பாவிக்கு இருக்க வேண்டிய மன நிலையை இயேசு தத்ரூபமாகக் காட்டுகிறார்.


"அப்பா, வானகத்திற்கு எதிராகவும், உமக்கு முன்பாகவும் குற்றம்செய்தேன். இனிமேல் உம்முடைய மகன் என்று எண்ணப்பட நான் தகுதியற்றவன்."

"தந்தையே உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்."

மனம் திரும்புவதற்கான முதல் படி செய்த பாவத்தை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வது தான்.

செய்த பாவத்தை ஏற்றுக்  கொண்டு, மன்னிப்புக் கேட்கும்போது கடவுள் மன்னிக்கிறார்.

பாவம் என்று தெரிந்து செய்வதுதான் பாவம்.

தெரிந்து செய்தும் அதற்குரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் தட்டிக் கழிப்பவர்களால் 
 
 பாவத்திற்காக வருத்தப் படவும் முடியாது, மன்னிப்புக் கேட்கவும் முடியாது.

உவமையில் வரும் ஊதாரி மைந்தன் தான் செய்வது தந்தைக்கு எதிரான செயல் என்பது தெரிந்துதான்  ஊதாரித் தனமாக வாழ்ந்தான்.

ஆனால் அதன் விளைவை அனுபவிக்க ஆரம்பித்தவுடன் தனது தந்தைக்கு எதிராக பாவம் செய்ததற்காக வருத்தப் பட ஆரம்பித்தான்.

நாம் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும்

செய்த பாவங்களுக்காக வருத்தப்பட்டு கடவுளிடம் மன்னிப்புக் கேட்டால் கடவுள் நமது பாவங்களை மன்னித்து,

நம்மைத் தனது பிள்ளையாக ஏற்றுக் கொள்வார் என்ற உண்மையை நமக்குப் போதிப்பது தான் 

ஆண்டவர் இவ்வுவமையைச் சொன்னதின் நோக்கம்.   

கடவுள் அளவற்ற இரக்கமும், மன்னிக்கும் சுபாவமும் உடையவர் என்பதை உணர்ந்து

நாம் எவ்வளவு பெரிய பாவிகளாய் இருந்தாலும் மனம் திரும்பி அவரிடம் வரவேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

ஊதாரி மைந்தன் பாவத்தின் விளைவை அனுபவிக்க ஆரம்பித்தவுடன் மனம் வருந்தினான்.

ஆனால் பாவிகள் பாவத்தின் விளைவை அனுபவிக்கும் வரை காத்திருக்கக் கூடாது.

ஏனெனில் பாவத்தின் முழுமையான விளைவை அவர்களது மரணத்திற்குப் பின்தான் அனுபவித்த நேரிடும்.

அப்போது மனம் திரும்ப முடியாது.

பாவத்தின் விளைவு நரகம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதை உணர்ந்து இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே மனம் திரும்ப வேண்டும்.

இன்றைய பாவிகளில் அநேகர் மனம் திரும்பாமைக்குக் காரணம் ஒன்றல்ல, பல.

1. பாவத்தின் விளைவு நரகம் என்பது தெரிந்திருந்தும், அதை உணராமலிருப்பதுதான் முக்கிய காரணம்.

புத்திக்குத் தெரிந்திருப்பது இருதயத்தைத் தொடவில்லை.
இருதயப்பூர்வமாக அறிந்திருப்பது தான் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உண்மையைத்  தியானிக்கும் போதுதான் அது  இருதயத்தைத் தொடும்.

பாவத்தின் விளைவை உணர்ந்து அது வருமுன்பே பாவத்திலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. பாவத்தின் பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதற்குப் பதில் சமூகத்தின் மேலும், சூழ்நிலை மேலும் பழிபோடுபவர்கள் மனம் திரும்புவது கடினம்.

ஞாயிற்றுக்கிழமையில் கட்டாயம் திருப்பலியில் கலந்து கொள்ள வேண்டும்.

வராதவர்கள் சொல்லும் சாக்குப் போக்குகளை எழுத கடைகளிலுள்ள அனைத்து நோட்டுக்களும் போதாது.

"வருடக் கணக்காக பாவ சங்கீர்த்தனமே செய்யாமல். பூசைக்குப் போகும் போதெல்லாம் நற்கருணை வாங்குகிறாயே, தப்பாகப் படவில்லை?"

"நான் மட்டுமா வாங்குகிறேன். எல்லோரும்தான் வாங்குகிறார்கள்."

ஒருவர் செய்கின்ற செயலுக்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்,

செயலுக்குப் பொறுப்பு செய்கின்றவர்தான்.

ஏவாள் தனது பாவத்துக்கு சாத்தானைக் காரணமாகக் காட்டினாள்,

ஆனால் பாதிக்கப்பட்டது ஏவாளின் வம்சம் தானே.

ஆகவே நமது பாவத்திற்கான பொறுப்பை நாமே ஏற்று

தந்தையிடம் திரும்ப வேண்டும்.

3. ஊதாரிப் பிள்ளையின் உவமையை வாசித்துவிட்டு, 

"நாம் எப்போது மனம் திரும்பினாலும் கடவுள் ஏற்றுக் கொள்வார், 

ஆகவே ஊதாரிப் பிள்ளையைப் போல நாமும் பாவம் செய்வோம்,

முடியாத போது தந்தையிடம் வருவோம்.''

என்று எண்ணிக் கொண்டு பாவ வாழ்க்கையில் இறங்கி விடக் கூடாது.

அப்படி எண்ணுபவர்களுக்காகத் தான் ஆண்டவர்,

"நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."

என்று  கூறியுள்ளார்.

நாம் எப்போதும் பாவமின்றி இருக்க வேண்டும்.

ஊதாரி மகனைப் போல ஊர் சுற்றப் போகாமல்    தந்தையுடனே இருக்க வேண்டும்.

ஊதாரிப் பிள்ளைகளாக வாழாமல் உத்தம பிள்ளைகளாக வாழ்வோம்.


லூர்து செல்வம்.

Thursday, October 27, 2022

மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"(லூக்.15:7)

"மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்"
(லூக்.15:7)


பள்ளிக் கூடத்துக்கு வரும் மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள்.

 உண்மையிலேயே படிப்பில் அக்கறை உள்ள மாணவர்களும் இருப்பார்கள்.

'ஏண்டா வந்தோமோ' என்று எண்ணிக் கொண்டிருக்கும் மாணவர்களும் இருப்பார்கள்.

தேர்வில் முதல் தரமான மதிப்பெண் வாங்கும் மாணவர்களும் இருப்பார்கள்.

35 மதிப்பெண்களுக்குக் குறைவாக வாங்குவது தான் தங்கள் வாழ்வின் குறிக்கோள் என்பது போல் படிக்கும் மாணவர்களும் இருப்பார்கள்.

உண்மையிலேயே படிப்பில் அக்கறை உள்ள, முதல் தரமான மதிப்பெண் பெறக்கூடிய மாணவர்களை விட,

மிகக் குறைவான மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவர்கள் மேல்தான் ஆசிரியருக்கு அதிக அக்கறை இருக்கும்.

மருத்துவமனையில் செத்துக் கொண்டிருக்கும் நோயாளிகளைப் பிழைக்க வைப்பதில் மருத்துவர் அதிக அக்கறை செலுத்துவது போல,

தோல்வி மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவர்களை வெற்றி பெற வைப்பதுதான் ஆசிரியரின் குறிக்கோளாக இருக்கும்.

 பாட நேரத்திலும் ஆசிரியர் அவர்களைத்தான் அதிகம் கவனிப்பார்.

ஆசிரியருக்கு தேர்வில் 85 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவன் 98 மதிப்பெண்கள் எடுக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியை விட,

வழக்கமாக பத்து மதிப்பெண்களுக்கு குறைவாக வாங்கும் மாணவன் 35 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால்
ஏற்படும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும்.

தோல்வியே அடைந்து கொண்டிருப்பவர்களை வெற்றி பெற வைப்பதே ஆசிரியரின் முக்கிய பணி.

வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் வெற்றி பெற வேண்டும்.

 இது உலகியல் அனுபவம்.

ஆன்மீக உலகிலும் பரிசுத்தவான்களும் இருப்பார்கள்.

பாவத்தை மட்டும் விலக்கி வாழ்பவர்களும் இருப்பார்கள்.

பாவிகளும் இருப்பார்கள்.

பாவம் செய்வதையே தொழிலாக கொண்டவர்களும் இருப்பார்கள்.

பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தவர் இயேசு.

பாவிகளை மனம் திருப்புவதற்காகவே,

அவர்களது பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு,

சிலுவையில் தன்னையே பலியாக ஒப்புக் கொடுத்தவர் இயேசு.

பாவிகளை மனம் திருப்பவே
தனது சீடர்களை உலகெங்கும்  அனுப்பியவர் இயேசு.

அவர் கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்படுத்தியதே அந்த நோக்கத்தோடு தான்.

 அவர் ஏற்படுத்திய தேவத் திரவிய அனுமானங்களின் நோக்கமும் பாவிகளை மனம் திருப்பி,

அவர்களை பரிசுத்தவான்களாக மாற்றுவது தான்.

பாவமே செய்யாமல் பரிசுத்தவான்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களால் அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட,

மனம் திரும்பும் பாவிகளால் அதிக மகிழ்ச்சி ஏற்படும். 

இதைத்தான் ஆண்டவர்,

"அவ்வாறே, மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணுற்றொன்பது நீதிமான்களைக் குறித்து வானத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைவிட, 

மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்றார்.

ஆகவே திருச்சபை பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

புனித ஜான் மரிய வியான்னி குருமடத்தில் படிக்கும்போது பாடங்களில் வெற்றி பெறவில்லை.

அவர் சொன்ன செபமாலையைப் பார்த்துதான் அவருக்கு குருப் பட்டம் கொடுத்தார்கள்.

அவர் குருவானவர் ஆனபின் அவர் செய்த முக்கிய பணி

இலட்சக் கணக்கான மக்களுக்கு பாவ சங்கீர்த்தனம் கொடுத்தது தான்.

இயேசுவின் சீடர்களாகிய நாம் இயேசுவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் பாவ சங்கீர்த்தனம் மூலம் நமது பாவங்களுக்கு மன்னிப்புப் பெற வேண்டும்.

பாவ சங்கீர்த்தனத்தின் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு உணர்த்தி

 அவர்களுக்கு பாவ மன்னிப்பு பெற வழிகாட்டினாலும் இயேசு மகிழ்ச்சி அடைவார்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள்

விளையாட்டுப் போட்டிகள்,
பேச்சுப் போட்டிகள்,
எழுத்துப் போட்டிகள்,
நடிப்புப் போட்டிகள்

ஆகியவற்றில் வெற்றி பெற்று, சான்றிதழ்களை வாங்கிக் குவிக்கலாம்.

ஆனால் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் அவற்றுக்கு மதிப்பு உண்டு.

தேர்வில் வெற்றி பெறாவிட்டால் மற்ற எல்லா சான்றிதழ்களும் குப்பைத் தொட்டிக்குதான் போகும்.

ஆன்மீக வாழ்விலும் அப்படித்தான்.

ஆயிரம் திறமைகளில் பெயர் வாங்கியிருந்தாலும்,

பாவமன்னிப்பு ஒன்றினால் தான் அவற்றுக்கு இயேசுவின் முன் மதிப்பு உண்டு.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

மனம் திரும்புவோம்.

பாவங்களுக்கு மன்னிப்புப் பெறுவோம்.

இயேசுவையும், விண்ணக வாசிகளையும் மகிழ்ச்சிப் படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 26, 2022

இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.(தொடர்ச்சி)


இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.
(தொடர்ச்சி) 

நம்மைப் படைப்பதற்கு முன் 
இறைவன் உலகத்தைப் படைத்து
 
அதன் பொருட்களை நமக்குத் தந்திருப்பது 

அவற்றை அவர் பணியிலும், பிறர் அன்புப் பணியிலும் பயன்படுத்துவதற்காக,

அவற்றின் மீது பற்று வைத்து 
அவற்றை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக அல்ல.

பணத்தின் மீது பற்று வைத்திருப்பவன், அதை ஈட்டுவதிலே குறியாக இருப்பான்,

பயன் படுத்துவதில் அல்ல.

ஆயிரக் கணக்கில் ஈட்டுபவன், இலட்சாதிபதியாக மாற விரும்புவான்.

பின் கோடீஸ்வரனாக மாற விரும்புவான்.

எவ்வளவு ஈட்டினாலும் திருப்தியே இருக்காது.

ஆனால் பணத்தின் மீது பற்று இல்லாதவன் தன்னிடம் உள்ள பணத்தை இறைவன் விருப்பப்படி பயன் படுத்துவதில் குறியாக இருப்பான்.

பணத்தின் மீது பற்று இல்லாதவனிடம் உள்ள பணம். அவனுடைய உடைமை அல்ல.

அன்புப் பணிகளில் பயன் படுத்துவதற்காக அவனிடம் ஒப்புவிக்கப்பட்ட பணம்.

அவன் நிர்வாகி மட்டுமே, உடைமையாளன் அல்ல.

அவன்தான் இயேசுவின் சீடனாக இருக்கத் தகுதியானவன்.

குருவைப் போல சீடனும் பணிபுரிய வேண்டும்.

இயேசுவைப் பின்பற்ற தகுதி உள்ள சீடன் அவரைப் போலவே பணிபுரிவான்.

நமது துறவிகள் 
பள்ளிக்கூடங்கள், 
கல்லூரிகள், 
 மருத்துவ மனைகள்,
 முதியோர் இல்லங்கள்,
 அனாதைக் குழந்தைகளைப் பாதுகாக்கும் இல்லங்கள் 
போன்றவற்றை நடத்துவது

 தங்களது சொந்த பணத்திலிருந்தும் அல்ல,

தங்கள் வருமானத்திற்காகவும் அல்ல.

பொது மக்களின் பணத்தை அவர்களின் நலனுக்காகவே 

எந்தவித பற்றுக்கும் இடம் கொடாமல் 

இறையன்பினாலும், பிறர் அன்பினாலும் உந்தப்பட்டு
பயன் படுத்துகிறார்கள்.

அவர்களை வழி நடத்துவது இறைப் பற்று மட்டுமே,

சுய பற்றும், சுய நலமும் அல்ல.

இறைவனுக்குச் சொந்தமான படைப்பைக் கொண்டு அவர்கள் செய்யும் சேவை

இறைவனது மகிமைக்காக மட்டுமே.

நாம் அனைவருமே இறைவனது மகிமைக்காக மட்டுமே பணி புரிய வேண்டும்.

இங்கே ஒரு முக்கியமான உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

கடவுள் இயல்பிலேயே அளவற்றவர், மாறாதவர்.

அளவற்ற அன்பு,
அளவற்ற வல்லமை.
அளவற்ற ஞானம்,
அளவற்ற மகிமை

உள்ளவர் கடவுள்.

அவர் தனது சகல பண்புகளிலும் நிறைவானவர். (Perfect)

தண்ணீர் நிறைந்த ஒரு பாத்திரத்தில் மேலும் தண்ணீரை ஊற்றினால் அது ஊற்றியவரிடமே திரும்பி வரும்.

அதுபோல் மகிமையே உருவான கடவுளுக்கு 'அதி மிக மகிமை' சேர்க்க நாம் உழைத்தால்

நமது உழைப்பின் பலனை நித்திய பேரின்ப வாழ்வாக இறைவன் நமக்கே தந்து விடுவார்.

அவரது மகிமை எப்போதும் நிறைவாகவே இருக்கும்.

அவரது மகிமைக்காக நாம் செய்யும் பணி நமது நித்திய பேரின்பத்தின் அளவை அதிகரிக்கும்.

இறைவன் மகிமைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு நற்செயலாலும் பயன் பெறப் போவது நாம்தான்.

"சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

"வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக."

"எனக்கே செய்தீர்கள்.
அரசு உங்களுக்கு  உரிமையாகுக"

இயேசுவுக்காக நாம் செய்கிற ஒவ்வொரு நற்செயலுக்காகவும் 
மோட்சத்தில் பயன் பெறப்போவது நாம்தான்.

இயேசு நம்மைப் படைத்தது நமது நன்மைக்காக, அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக.

இயேசு மனிதனாய்ப் பிறந்து பாடுபட்டு மரித்தார்.

பாவத்திலிருந்து விடுதலை பெற்றது  நாம்.


இயேசுவின் அன்பின் தன்மையைப் பாருங்கள்:

அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது நன்மைக்காக.

அவருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது நன்மைக்காக.

இயேசுவின் அன்பு தன்னலம் அற்றது.

நாம் இறைப்பணி ஆற்றும் போது நமது ஆன்மீக நலன் அதிகரிக்கும்.

நமக்கும்  கடவுளுக்கும் உள்ள உறவின் நெருக்கம் அதிகம் ஆகும்.

சேவை செய்யும் நமது  நித்திய பேரின்பத்தின் அளவு அதிகமாகும்.

நாம் கடவுளுக்குச் செய்யும் சேவையால் பயன்பெறப் போவது நாம் தான்.

நாம் பயன் பெறுவதற்காகத்தான் கடவுள் நம்மைப் படைத்தார்.

கடவுள் மாறாதவர்.

நமது இறையன்பு பணியினால் பயன் பெறப்போவது நாம் தான்.

உலகப் பொருட்கள் மீது நமக்கு உள்ள பற்று குறையக் குறைய 

'இறைவன் மீது நமக்கு உள்ள பற்று அதிகமாகிக் கொண்டே வரும்.

நமது விண்கை சன்மானத்தின் அளவும் அதிகமாகிக் கொண்டே வரும்.

இயேசு முழு உலகத்தின் உரிமையாளர்.

அவர் அவரது நற்செய்திப் பணிக்காகவே அதைப் பயன் படுத்தினார்.

மாடடைக் குகையை மீட்பராகப் பிறக்கப் பயன் படுத்தினார்.

நசரேத் வீட்டை பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்கப் பயன் படுத்தினார்.

நாட்டை நற்செய்தி அறிவிக்கப் பயன் படுத்தினார்.

சிலுவை ஒரு மரம். அதை தான் மக்களுக்காகத் தன்னையே பலியாக்கப் பயன் படுத்தினார்.

இப்போது உலகை தான் ஏற்படுத்திய திருச்சபை பரவி வளரப் பயன் படுத்துகிறார்.

அவருடைய சீடர்களாகிய நாமும் அவரைப் போலவே உலகை நற்செய்திக் களமாகவே பயன் படுத்த வேண்டும்.

யோபு கடவுள் கொடுத்ததை அவரே எடுத்துக்கொண்ட போது அவருக்கு நன்றி செலுத்தினார்.

இயேசுவின் சீடர்களாகிய நாமும்
உலகில் எதை இழந்தாலும் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

ஏனெனில் உலகில் நமது இழப்பு விண்ணுலகில் நமது வரவு ஆகும்.

இயேசுவின் அறிவுரைப்படி நாமும்

நமது உடைமைகளையெல்லாம் துறப்போம். 

இயேசுவின் சீடர்களாக மாறுவோம்.

அவருக்குப் பணி புரிய மட்டுமே வாழ்வோம்.

 கடவுளை மட்டும் கட்டிப் பிடித்துக் கொள்வோம், அவரது படைப்புகளை அல்ல.

கடவுளை மட்டும் கட்டிப் பிடித்து வாழ்பவர்கள் விண்ணக பேரின்பத்தை

மண்ணகத்திலேயே சுவைக்க (pretaste) ஆரம்பித்து விடுவார்கள்.

லூர்து செல்வம்.

Tuesday, October 25, 2022

இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.

.இயேசுவின் சீடனாக இருக்க வேண்டிய தகுதிகள்.

இயேசு தனது சீடனாக இருக்க விரும்புகிறவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் இரண்டினைக் குறிப்பிடுகிரார.

1.தன் சிலுவையைச் சுமந்துகொண்டு அவரைப் பின்செல்ல வேண்டும்.

2.தன் உடைமையெல்லாம் துறக்க 
வேண்டும்.


"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக்.14:27)

"தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக்.14:33)

ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு. இடையேயும்,

நண்பர்களுக்கு இடையேயும்,

குரு, சீடர்களுக்கு இடையேயும் 

சில பொதுவான பண்புகள் இருக்கும்.

தாயைப் போல பிள்ளை,

உன் நண்பன் யாரென்று சொல்,
நீ எப்படிப்பட்டவன் என்று சொல்லிவிடுகிறேன்.

குருவைப் போல் சீடன் 

ஆகிய கூற்றுக்களுக்கு அந்த
பொதுவான பண்புகளே காரணம்.

இயேசுவின் தந்தையே நமக்கும் தந்தை.

இந்த குடும்ப உறவு நீடிக்க வேண்டுமென்றால் நாம் இயேசுவைப் போல் மாற வேண்டும்.

"உங்களை நான் இனி ஊழியர் என்று சொல்லேன்: ஏனெனில், தலைவன் செய்வது இன்னது என்று ஊழியனுக்குத் தெரியாது.

 ஆனால் உங்களை நண்பர்கள் என்றேன்."

இயேசுவின் இந்த கூற்றுப்படி அவருடைய ஊழியர்களாகிய நாம் அவருடைய நண்பர்கள் தான்.

அவருடனான நட்பு அவர் நமக்குத் தந்திருக்கும் அன்பளிப்பு.

அவருடனான நமது நட்பு நீடிக்க வேண்டுமென்றால் நாம் அவரைப் போல் மாற வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்கள். அவருடைய பண்புகளை நாமும் கொண்டிருந்தால்தான் நமது சீடத்துவம் நீடிக்கும்.

நாம் பின்பற்ற வேண்டிய இயேசுவின் பண்புகள் நிறைய இருக்கின்றன.

  அவற்றில் இரண்டை இயேசு
 குறிப்பிடுகிறார்.

சிலுவையை சுமந்து அதில் தன்னை தானே பலியாக்குவதற்காகத் தான் 
இயேசு மனிதனாகப் பிறந்தார்.

இயேசுவையும் சிலுவையையும் பிரிக்க முடியாது.

நாம் இயேசுவோடு ஒன்றித்து விட்டால் நம்மையும், சிலுவையையும் பிரிக்க முடியாது.

சிலுவையை விட்டு நம்மை பிரித்து விட்டால் நாம் இயேசுவின் சீடர்கள் அல்ல.

அதனால் தான் இயேசு சொல்கிறார்,

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்செல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''

சிலுவை என்ற வார்த்தை நாம் அனுபவிக்கும் துன்பங்களைக் குறிக்கிறது.

புவியிலுள்ள அனைத்து உயிர்வாழ் இனத்திற்கும் துன்பங்கள் உண்டு. ஆனால் அவை அனைத்தும் சிலுவைகள் அல்ல.

இயேசுவுக்காக, 

இயேசு எதற்காக சிலுவையை சுமந்தாரோ, அதற்காக, 

நம்மால் ஏற்றுக் கொள்ளப்படும் துன்பங்கள் தான் சிலுவைகள்.

இயேசுவுக்காக நமது சிலுவைகளை சுமந்து அவரை பின்பற்றினால் தான் நாம் அவரது சீடர்களாக இருக்க முடியும்.

இயேசுவின் தாயிலிருந்து இன்று வரை வாழ்ந்த அனைத்து புனிதர்களும் இயேசுவைப்போல் சிலுவையை சுமந்து அவரை பின்பற்றியவர்கள் தான்.

சில புனிதர்கள் இயேசுவின் ஐந்து காயங்களை கூட வரமாக பெற்று அதன் வேதனைகளை அனுபவித்தவர்கள்.

நமது வாழ்வில் நமக்கு துன்பங்கள் வரும்போது அவற்றிலிருந்து விடுதலை பெற இயேசுவிடம் கேட்பதற்கு பதில்,

அவற்றைச் சுமக்க போதிய சக்தியை தரும்படி அவரிடம் மன்றாட வேண்டும்.

துன்பங்கள் வருவது இயல்பு, 
அவற்றை சிலுவைகளாக மாற்றுவது நமது கிறிஸ்தவ வாழ்வு.

கிறிஸ்தவன் என்றால் இயேசுவுக்காக சிலுவையை சுமப்பவன் என்று தான் பொருள்.

அந்த பொருளில் நாம் இயேசுவுக்கு பிரியமான கிறிஸ்தவர்களாக,

 அதாவது அவருடைய சீடர்களாக,

 வாழ வேண்டும்.

மற்றவர்கள் நம்மை துன்பப்படுத்தும் போது அவர்களை இயேசுவுக்காக நான் சிலுவையை சுமக்க உதவும் நண்பர்கள் என்று ஏற்றுக் கொள்வோம்.

எப்படி இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் அறைந்து அவரை நமது இரட்சகராக மாற்றினார்களோ,

அப்படியே கிறிஸ்தவத்தின் எதிரிகளும் நம்மை கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வேத சாட்சிகளாக மாற்றுகிறார்கள்.

இயேசு எப்படி தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தாரோ,

அதேபோல நாமும் நம்மை துன்பப்படுத்தும் கிறிஸ்தவத்தின் எதிரிகளை மனமார மன்னிக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் இயேசுவின் உண்மையான சீடர்கள்.

அன்னை மரியாள் இயேசுவைப் பெற்றது, சிலுவைக்காகத்தான்.

எப்படி தாயையும், மகனையும் பிரிக்க முடியாதோ,

அப்படியே, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.

அப்படியே இயேசுவின் உண்மையான சீடர்களையும் சிலுவையிலிருந்து பிரிக்க முடியாது.


இயேசு கடவுள். தன்னிலே நிறைவானவர். நாம் வாழும் பிரபஞ்சமும், நாமும் படைக்கப் படுவதற்கு முன்பேயே,

நித்திய காலத்திலிருந்தே அவர் நிறைவாக இருக்கிறார்.

அவரது அனைத்து படைப்புகளும் அவருக்கு உரியவை. ஆனால் அவர் அவற்றுக்கு அப்பாற்பட்டவர்.

அவரது படைப்புகள் தாங்கள் இருப்பதற்கு (To exist) அவரை சார்ந்துள்ளன.

ஆனால் அவர் எந்த படைப்பையும் சார்ந்திருக்கவில்லை.

அவருடைய படைப்புகளை எல்லாம் அவர் அழித்து விட்டாலும் அவரது நிறைவுக்கு எந்த குறைவும் ஏற்படாது.

நம்முடைய Bank balance காலியாகி விட்டால் நாம் empty ஆகிவிடுவோம். ஏனெனில் நமது வசதியான வாழ்வுக்கு அதைச் சார்ந்திருக்கிறோம்.

இந்த விஷயத்தில் நாம் எப்படி இயேசுவைப் போல் மாறுவது?

இயேசு இயல்பிலேயே (By nature) நிறைவானவர், எந்த பொருள் மேலும் சார்ந்திராதவர்.

நாம் இயல்பிலேயே சார்ந்து. வாழ்பவர்கள்.

நம்மால் கடவுளைப் போல் நிறைவானவர்களாக மாறவே முடியாது.

We can never become perfect.

ஆனாலும் இயேசு நம்மை நோக்கி,

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
( மத். 5:48)

48Therefore, be perfect, even as your heavenly Father is perfect.

என்கிறார்.

"நானும் தந்தையும் ஒன்றே." என்று இயேசுவே கூறுவதால்,

தந்தையைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருப்பதும்,

அவரைப் போல் நிறைவுள்ளவர்களாய் இருப்பதும் ஒன்றுதான்.

ஆனால் சுயமாக வாழும் இயேசுவைப் போல்,

சார்ந்திருக்கும் நம்மால் எப்படி மாற முடியும்?

அதற்கும் இயேசுவே வழி சொல்கிறார்.

''தன் உடைமையெல்லாம் துறக்காவிடில் உங்களுள் எவனும் என் சீடனாயிருக்க முடியாது.''

நமது உடைமையெல்லாம் துறப்பது ஏன்று தான் அதற்கு வழி

"Blessed are the poor in spirit, for theirs is the kingdom of heaven."

எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே. (மத். 5:3)

இறைமகனாகிய இயேசு படைக்கப் பட்ட பொருட்களுக்கு அப்பாற்பட்டவர்.

ஆனால் நாமே படைக்கப்பட்ட பொருள்தான்.

நம்மால் எப்படி அவற்றை சாராமல் வாழ முடியும்?

அவற்றையெல்லாம் துறந்தால், இழந்தால், விட்டு விட்டால் 

அவற்றைச் சாராமல் நம்மால் வாழ முடியும்.

நம்மிடம் உள்ள படைக்கப்பட்ட பொருள்களை எல்லாம் எப்படி இழப்பது?

நமது உடலே படைக்கப்பட்ட பொருள்தான். அதை இழந்து விட்டால் நம்மால் உலகில் வாழ முடியாதே.

ஆனால் ஆண்டவர் சொன்னபடி எளிய மனத்தோராய் வாழ்ந்தால் முடியும்.

எளிய மனத்தோர் என்றால் மனதில் தங்கள்  உடல் உட்பட எந்த உலகப் பொருள் மீதும் பற்று இல்லாமல் வாழ்வோர்.

பற்று இல்லாமல் வாழ்வது என்றால்?

நம்மிடம் விலை உயர்ந்த பேனா ஒன்று இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

ஒரு நாள் எதிர் பாராமல் அது தொலைந்து விட்டது.

பேனா தொலைந்தது பற்றி நமக்கு வருத்தம் ஏற்பட்டால், நாம் அதன் மீது பற்று உள்ளவர்கள்.

அதைப் பற்றி கவலையே படாவிட்டால் நாம் அதன் மீது பற்று இல்லாதவர்கள்.

மதுரையிலிருந்து தென்காசி வரை இரயிலில் பயணிக்கிறோம்.

நாம் தென்காசியில் இறங்கியவுடன் இரயில் போய்விடுகின்றது.

அதற்காக வருத்தப் படுகிறோமா?

இல்லை.

ஏன்?

ஏனென்றால் நமக்கு அதன் மீது பற்று இல்லை.

நாம் அதைப் பயணத்திற்குப் பயன்படுத்தினோம்.

அவ்வளவுதான்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, October 24, 2022

"எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர்"(லூக்.14:18)

"எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர்"
(லூக்.14:18)

சாக்குப் போக்குச் சொல்வதில் வல்லவர்கள் நம் நாட்டில் உள்ளவர்கள்.

அது அவர்களுக்கு ஒரு கலை.

",இன்று ஞாயிற்றுக் கிழமை என்று ஞாபகத்தில் இருக்கிறதா?''

''ஞாபகத்திலா? இன்று ஞாயிற்றுக் கிழமை என்று எனக்கு போன மாதமே தெரியும்.''

",போன மாதமேவா?"

"நாளை திங்கட்கிழமை அரசுப் பொதுத் தேர்வு என்று போன மாதமே அறிவித்து விட்டார்களே!

திங்களுக்கு முந்திய நாள் ஞாயிறுதானே!"

", மணி ஏழரை ஆகிறது, இன்னும் பூசைக்குப் புறப்படவில்லை?"

''எட்டு மணிக்கு Tution. சீக்கிரம் கிழம்ப வேண்டும்."

" ஹலோ! இன்று ஞாயிற்றுக் கிழமை.

 இன்று திருப்பலியில் பங்கெடுக்க வேண்டியது நமது முதற் கடமை."

"அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சுவாமியார் போன வார பிரசங்கத்தில் சொன்னது மறந்து போச்சா?

நாள் இப்போது மாணவன். தேர்வுக்குத் தயாரிக்க வேண்டியது என் கடமை.

அதற்காகத்தான் tution."

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்.

 தந்தையையோ, தாயையோ, மகனையோ, மகளையோ நேசிக்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

ஆனால் நேசிக்க முதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கடவுளுக்குதான்.

ஞாயிற்றுக் கிழமை அன்று மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது திருப்பலிக்குதான்.

ஆன்மீக வாழ்வுக்கு உயிரும், உணவும் கொடுப்பது திருப்பலி தான்.''

ஆனால் சாக்குப் போக்கு சொல்பவனுக்கு எதையும் புரிய வைக்க முடியாது.

கடமையைச் செய்யாதிருப்பவர்கள் தங்க"ளை நியாயப் படுத்த சாக்குப் போக்குகளைப் பயன் படுத்துகிறார்கள்.

அம்மா: செபம் சொல்லும்போது தூங்கக் கூடாது.

பையன்: அதாவது தூக்கம் வரும்போது செபம் சொல்லக் கூடாது. இப்போ தூக்கம் வருது. நாளைக்கு செபம் சொல்கிறேன்."


''பிரசங்கம் ஆரம்பிக்கப் போகுது. நீ எங்கே போகிறாய்?"

"பிரசங்க நேரத்ல தூங்கக் கூடாதுன்னு சாமியாரே சொல்லியிருக்கார். வெராண்டாவுக்குப் போனால்தான் தூக்கம் வராது."


"பாவ சங்கீர்த்தனம் செய்யும் பழக்கம் உண்டா?"

"நான் செய்த பாவங்கள் எல்லாம் தான் கடவுளுக்குத் தெரியுமே.

கடவுளிடம நான் செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்பேன். அவரும் மன்னித்து விடுவார்."

இந்த நபர் கடவுள் கொடுத்த கட்டளையை நிறைவேற்றாமல் இருப்பதற்கு சாக்குப் போக்கு சொல்ல கடவுளையே துணைக்கு அழைக்கிறார்.

நமது பாவங்களுக்காக பரிகாரம் செய்து அவற்றை மன்னிப்பதற்கு இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்: "

இந்த வார்த்தைகள் மூலம் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவ திரவிய அனுமானத்தை ஏற்படுத்தி,

நமது பாவங்களை மன்னிக்கும்  அதிகாரத்தை தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கும், அவர்களது வாரிசுகளான குருக்களுக்கும் கொடுத்தார்.

நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்பு பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த தேவத் திரவிய அனுமானத்தை இயேசு ஏற்படுத்தினார்.

இயேசுவை ஏற்றுக்கொள்வோர் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாவ சங்கீர்த்தனம் செய்ய மறுப்போர் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவை  முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் முழுமையான கிறிஸ்தவர்கள் அல்ல.

சாவான பாவத்தோடு திருப்பலிக்குச் சென்று,

பாவ சங்கீர்த்தனம் செய்யாமல், 

பாவத்தோடு திருப்பலியில் கலந்து,

பாவத்தோடு திவ்ய நற்கருணை அருந்தி,

பாவத்தோடு வீடு திரும்புவது

சகதியோடு குளிக்கச் சென்று, அதிக
சகதியோடு வீட்டுக்குத் திரும்புவதற்குச் சமம்.

சாவான பாவத்தோடு நற்கருணை அருந்துவது இன்னொரு பாவம்.

பாவசங்கீர்த்தன விஷயத்தில் சாக்குப் போக்குச் சொல்வது,

மருத்துவர் கொடுத்த மருந்தைச் சாப்பிடாமலிருக்க சாக்குப் போக்குச் சொல்வதற்குச் சமம்.

வியாதி குணமாகாது.

எட்டு மணி பூசைக்கு சரியாக எட்டு மணிக்கு வந்துவிட்டு, பாவசங்கீர்த்தனம் செய்ய நேரம் கிடைக்கவில்லை என்று சொல்வது சாக்கு போக்கு,

தியேட்டரில் 10 மணிக் காட்சிக்கு 
6 மணிக்கே வந்து நிற்கத் தெரியும்.

8 மணி பூசைக்கு 7.30 மணிக்கு வரத் தெரியாது.

ஆன்மீக காரியங்களில் சாக்குப் போக்கு சொல்வது ஆன்மாவுக்குக் கெடுதி என்பதை உணர்வோம்.

ஆண்டவர் அழைக்கும் போது சாக்குப் போக்கு சொல்பவர்களால் விண்ணக விருந்தைச் சுவைக்க முடியாது.

சாக்குப் போக்குச் சொல்வதைத் தவிர்ப்போம்.

இயேசுவின் சொற்படி நடப்போம்.

என்றென்றும் அவரோடு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 23, 2022

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."(லூக்.18:14)

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
(லூக்.18:14)

"தாத்தா, ஒரு சந்தேகம்.

இயேசு, "தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."

என்கிறார்.

நாம்  நம்மைத்  தாழ்த்த ஆசைப்பட வேண்டும் என்று இயேசு ஆசைப் படுகிறாரா?

உயர்த்த ஆசைப்பட பட வேண்டும் என்று  ஆசைப் படுகிறாரா?"

"ஏன் இந்த சந்தேகம்?"

"தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்." என்று இயேசு சொல்வதில்,

முதலில் நாம் நம்மை தாழ்த்த வேண்டும் என்று சொல்வது போல் இருக்கிறது.  தாழ்ச்சியைத்தான் புண்ணியங்களின் அரசி என்று சொல்கிறோம்.

அடுத்து 'உயர்த்தப்பெறுவான்' என்கிறோம். 

அதாவது,

நம்மை நாமே தாழ்த்துவதே உயர்த்தப்படுவதற்குத்தான்.

இப்போது சொல்லுங்கள்,

நம்மை நாமே தாழ்த்த ஆசைப்பட வேண்டுமா?

உயர்த்தப்பட ஆசைப்பட வேண்டுமா?"

", ஆசிரியர் சொல்கிறார்,

'நன்கு படிப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.'

நன்கு படிக்க ஆசைப்பட வேண்டுமா?"

வெற்றி பெற ஆசைப்பட வேண்டுமா?"

"இரண்டுக்கும்தான்.

வெற்றி பெற ஆசைப்பட்டால்தானே நன்கு படிக்கத் தோன்றும்."

", இப்போ சொல்லு,


நம்மை நாமே தாழ்த்த ஆசைப்பட வேண்டுமா?

உயர்த்தப்பட ஆசைப்பட வேண்டுமா?"

"இரண்டுக்கும்தான்.

ஆனால் அதே இயேசு சொல்கிறார்,

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்." என்று.

அப்படியானால் உயர்த்த ஆசைப் படக்கூடாது என்று தானே அர்த்தம்.

அது தான் புரியவில்லை."

",விண்ணகத்தில் உயர்ந்த நிலையை அடைய ஆசைப்பட வேண்டும்.

இவ்வுலகில் நம்மை நாமே உயர்த்த ஆசை படக்கூடாது.

இவ்வுலகில் தன்னைத்தானே உயர்த்துபவன் மறுவுலகில் தாழ்த்தப்படுவான்.

இவ்வுலகில் தன்னைத்தானே தாழ்த்துபவன் மறு உலகில் உயர்த்தப்படுவான்.

அன்னை மரியாள் இவ்வுலகில் தன்னை அடிமை நிலைக்கு தாழ்த்தினாள்.

மறு உலகில், அதாவது, மோட்சத்தில் விண்ணக அரசி நிலைக்கு உயர்த்தப்பட்டாள்.

இவ்வுலகில் கடவுள் முன் தங்களைத் தாங்களே தாழ்த்தி, 

இறைவனை மட்டும் நம்பி வாழ்பவர்கள் தான் 

மறு உலகில் மோட்சம் ஆகிய உயர்ந்த நிலையை அடைவர்.

இவ்வுலகில் கடவுளைப் பற்றி கவலைப்படாமல்,  தாங்கள் உயர்ந்தவர்கள் என்று எண்ணி தங்கள் திறமையை மட்டும் நம்பி வாழ்பவர்கள் 

மறு உலகில் நரகம் ஆகிய தாழ்ந்த நிலையை அடைவர்."

"ஏன் அப்படி?"

'', நாம் ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுளால் படைக்கப் பட்டோம்.

ஆகவே நாம் இயல்பிலேயே ஒன்றுமில்லாதவர்கள் தான்.

இதை நாம் உணர்ந்து வாழ்ந்தால், 

அதாவது நாம் தாழ்ந்தவர்கள் என்று எண்ணி வாழ்ந்தால்,

அதாவது தாழ்ச்சியோடு வாழ்ந்தால் 

முழுக்க முழுக்க இறைவனை மட்டும் நம்பி வாழ்வோம்.

இறைவனோடு முழுமையான உறவு நிலையில் வாழ்வோம்.

கடவுள் அவரை மட்டும் நம்பி வாழும் நம்மை மோட்ச நிலைக்கு உயர்த்துவார்.

 ஒன்றுமில்லாமையிலிருந்து கடவுளால் படைக்கப் பட்டவர்கள் என்பதை உணராமல்,

தங்கள் திறமையை மட்டும் நம்பி வாழ்பவர்கள் கடவுளைத் தேட மாட்டார்கள்.

இறை உறவுக்கு எதிரான செயல்களை,

அதாவது பாவங்களைச் செய்து வாழ்வார்கள்.

தங்களைத் தாங்களே உயர்த்தி வாழ்பவர்களால்,

அதாவது, பாவ நிலையில் வாழ்பவர்களால்,

 மறு உலகில் மோட்ச நிலையை அடைய முடியாது.

Lucifer தனது தற்பெருமையினால்தான் சாத்தானாக மாறினான்.

Lucifer ஐப் போல தற்பெருமையுடன் வாழவேண்டுமா?

அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியுடன் வாழவேண்டுமா?"

"விண்ணக நிலையை, அதாவது மோட்ச நிலையை அடைய வேண்டுமென்றால்

அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியுடன் வாழவேண்டும்."

", அப்படியானால் என்ன ஆசையோடு உலகில் வாழ வேண்டும்?"

"விண்ணக நிலைக்கு உயர்த்தப் படவேண்டும் என்ற ஆசையோடு தான்,  தாழ்ச்சியோடு உலகில் வாழ வேண்டும்.

இவ்வுலகில் தாழ்ச்சியோடு வாழ்ந்தால்,  மறுவுலகில் கடவுள் நம்மை உயர்த்துவார்."

", இறைமகன் இயேசு மனித நிலைக்குத் தன்னைத் தாழ்த்தியதே

நம்மை மோட்ச நிலைக்கு உயர்த்துவதற்காகத் தான்."

"இயேசுவுக்கு நன்றி."

லூர்து செல்வம்.

Thursday, October 20, 2022

கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)



"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார்." (ஆதி. 1:27)

"தாத்தா, இப்போது நான் உங்களிடம் கேட்கப் போகும் கேள்வி மிகவும் முக்கியமானது."

", ஏன் முக்கியமானது."

"ஏனென்றால் இது கடவுளையும், அவரால் அவரது சாயலில் படைக்கப் பட்ட மனிதனையும் பற்றியது.''

", சரி, கேள்."

"கடவுள் மனிதனைப் படைக்கு முன்,

"நமது சாயலாகவும் பாவனையாகவும் மனிதனைப் படைப்போமாக: 

அவன் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், மிருகங்களையும், பூமி முழுவதையும், பூமியின் மீது அசைவன ஊர்வன யாவற்றையும் ஆளக்கடவன்" என்றார்.

சாயலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் அசலைப் (original) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடவுள் எப்படி இருப்பார் என்று ஆதியாகமத்தில் முதல் அதிகாரத்தில் குறிப்பிடப் படவில்லை.

இறைமகன் மனிதனாகப் பிறந்த பின்புதான் பரிசுத்த தமதிரித்துவத்தைப் பற்றிய இரகசியம் இயேசுவால் வெளிப்படுத்தப் பட்டது. (Revealed)

மனிதன் எவ்வாறு கடவுளின் சாயலில்,

 அதாவது, பரிசுத்த தமதிரித்துவத்தின்  சாயலில் படைக்கப்பட்டான் 

என்பதைக் கொஞ்சம் விளக்குகிறீர்களா?"

", அருளப்பர் நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் முதல் வசனத்தை வாசி."

"ஆதியிலே வார்த்தை இருந்தார்:

 அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார், 

அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்."

", இதில் வார்த்தை (Word)  என்று குறிப்பிடப்படுபவர் யார்?"

"இயேசு."

", கடவுள் என்று குறிப்பிடப்படுபவர் ?"

"தந்தையும், (அவ்வார்த்தை கடவுளோடு இருந்தார்,)   

 மகனும். (அவ்வார்த்தை கடவுளாயும் இருந்தார்.)"

", ஆக தந்தையும் கடவுள், மகனும் கடவுள்.

மகன் கடவுளோடு, கடவுளாக இருக்கிறார். ஆக, தந்தையும் மகனும் ஒரே கடவுள்."

"தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் ஒரே கடவுளாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்.

மூவரும் ஒருவர் என்ற பரிசுத்த தமதிரித்துவத்தின் சாயலில் மனிதன் எப்படிப் படைக்கப் பட்டான் என்பதை மட்டும் சொல்லுங்கள்."

", பேரப்புள்ள, டிக்கட் எடுத்தவுடன் ஊருக்குப் போய் விட முடியாது.

பயணம் செய்ய வேண்டும்.

பயணம் முடியுமுன்னே ஊரைக் காட்டுங்கள் என்று சொல்லக் கூடாது."

"சரி, பயணம் செய்வோம்."

", மகனை எந்த வார்த்தையால் அருளப்பர் குறிப்பிடுகிறார்?"

"வார்த்தை."

", தெரிந்ததிலிருந்து தெரியாததுக்குப் பயணிப்போம்.

 வார்த்தை எங்கே பிறக்கிறது?"

"சிந்தனையில்."

", மகன் வார்த்தை என்றால் தந்தை யார்?"

"சிந்தனை"

",சிந்தனையிலிருந்தும், வார்த்தையிலிருந்தும் புறப்படுவது எது?"

"செயல்."

", இப்போ கவனி.

செயல் தூய ஆவி

தந்தை சிந்திக்கிறார்.
மகன் பிறக்கிறார்.
தூய ஆவி செயல்புரிகிறார்.

மீட்பின் வரலாற்றில் பரிசுத்த தம திரித்துவம் எவ்வாறு செயல்படுகிறது என்று கூறு பார்ப்போம்."

"தந்தையிடமிருக்கும் வார்த்தை நம்மை மீட்பதற்காக மனுவுருவானார்.
  
தனது மீட்புப் பணியை தூய ஆவியின் மூலம் செயல் படுத்திக் கொண்டிருக்கிறார்.

தந்தை படைத்தார்.
மகன் மீட்டார்.
தூய ஆவி ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
மூவரும் ஒரே கடவுள்

ஆகவே இப்படியும் சொல்லலாம்.

கடவுள் படைத்தார்.
கடவுள் மீட்டார்.
கடவுள் ஒவ்வொரு ஆன்மாவிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மனித உரு எடுத்தது மகன் மட்டுமே."

",பரிசுத்த தம திருத்துவத்தைப் பற்றிய இந்த உண்மையிலிருந்து உனது கேள்விக்குரிய பதிலைக் கண்டுபிடி பார்ப்போம்."

"மூன்று ஆட்கள் ஒரே  கடவுள்.

மூன்று தத்துவங்கள் ஒரு மனிதன்.

மனிதன் சிந்திக்கிறான்.

சிந்தனையிலிருந்து பிறப்பது வார்த்தை.

வார்த்தைதான் சிந்தனையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறது.

சிந்தனையிலிருந்தும், வார்த்தையிலிருந்தும் (சொல்லிலிருந்தும்) வருவது தான் செயல்.

சிந்தனையும், சொல்லும், செயலும் ஒன்றுபோல் இருந்தால்தான் உண்மையான மனிதன்.

உண்மையான மனிதன் நினைப்பதைச்  சொல்வான்.

சொல்வதைச் செய்வான்.

உள்ளொன்றை நினைத்து, புறமொன்றைப் பேசி, இன்னொன்றைச் செய்பவன் உண்மையான மனிதன் அல்ல. 

நமது சிந்தனை தந்தையின் சாயல்.
சொல் மகனின் சாயல்.
செயல்  தூய ஆவியின் சாயல்.


தந்தை, மகன், தூய ஆகிய மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே வல்லமை, ஒரே தேவ சுபாவம் இருப்பதால் மூவரும் ஒரே கடவுள்.

மனிதனை கடவுள் தன் சாயலில் படைத்ததன் காரணமே மனிதனின் சிந்தனையில் தான் எந்நாளும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

கடவுளின் சாயலை மனிதன் உணர்ந்து அதை எப்போதும் தன்னில் காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப் பட்டால்

அவனது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கடவுள் மட்டுமே இருக்க வேண்டும்.

அதாவது கடவுளையே எப்போதும், நினைக்க வேண்டும்,  அவரைப் பற்றி மட்டும் பேச வேண்டும், அவரது மகிமைக்காகவே செயல் புரிய வேண்டும்.

அதாவது கடவுளுக்காகவே வாழ வேண்டும்.

கடவுளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவன் மட்டுமே கடவுளின் சாயலில் வாழ்கிறான்.

உலகுக்காக மட்டும் வாழ்பவன் கடவுள் கொடுத்த சாயலை இழந்து  விடுகிறான்.

சரியா, தாத்தா?"

"Super சரி. சிந்தனையிலும்,  சொல்விலும், செயலிலும் கடவுளுக்காக வாழ்கிறோமா  என்பதை சிந்தித்துப் பார்ப்போம்."

 லூர்து செல்வம்.

"நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு."(லூக்.14:13)

"நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு."
(லூக்.14:13)

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டை விருந்து என்று அழைப்பதில்லை.

ஏதாவது விழாவின் போது நமது மகிழ்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டு நமக்குப் பிரியமானவர்களுக்குக் கொடுக்கும் உணவுதான் விருந்து.

கோவில் திருவிழா,  
திருமண விழா,
புதுமனைப் புகு விழா 
போன்ற விழாக்களின் போது

 நமக்கு உறவாக அல்லது நட்பாக இருப்பவர்களை மட்டும்தான் விருந்துக்கு அழைப்போம்.

இப்போது கேள்வி: நமக்கு உறவாக அல்லது நட்பாக இருப்பவர்கள் யார்?

ஆன்மீக ரீதியாக இறைவன் மட்டும்தான் நமக்கு மிக நெருங்கிய உறவு.

ஆகவே இறைவனைக் கட்டாயம் நாம் அளிக்கும் விருந்துக்கு அழைக்க வேண்டும்.


பொதுத் தீர்வையின் போது இறைவன் இயேசு

"ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்."

என்று சொல்லிவிட்டு

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்."

இயேசு குறிப்பிடும் அவரது சின்னஞ் சிறிய என் சகோதரர்கள் யார்?

பசியாய் இருப்பவர்கள்.
தாகமாய் இருப்பவர்கள்.
அன்னியனாய் இருப்பவர்கள்.
ஆடையின்றி இருப்பவர்கள்.
நோயுற்றிருப்பவர்கள்.
சிறையில் இருப்பவர்கள்.

சுருக்கமாக, இயலாத ஏழைகள்.

சுயமாக இயலாதிருக்கும் ஏழைகள்தான் அவரது சின்னஞ் சிறிய சகோதரர்கள்.

தலைப்பு வசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரும் இயலாதிருக்கும் ஏழைகள்தான்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் இறை மகன் இயேசுவுக்கு சகோதர உறவுள்ளவர்கள்.

ஆக, நாம் கொடுக்கும் விருந்து களுக்கு அழைக்கப்பட வேண்டியவர்கள் 

இறைமகன் இயேசுவும், 

அவருடன் சகோதர உறவுள்ள இயலாத ஏழைகளும் தான்.

இறைமகன் எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.

நாம் அழைக்க வேண்டியது இயலாத ஏழைகளைத்தான்.

இது இயேசு நமக்குத் தந்திருக்கும் அன்புக் கட்டளை.

இப்போது ஒரு கேள்வி எழும்: 
படைக்கப் பட்ட அனைவரும் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள்தானே,

இறைமகனுக்கு சகோதார்கள் தானே.

அவர்களையும் விருந்துக்கு அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

நம் நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, 
செல்வரான அண்டை வீட்டாரையோ

விருந்துக்கு அழைத்தால் அவர்கள் பதிலுக்கு நம்மையும் அவர்கள் கொடுக்கும் விருந்துக்கு அழைத்து விடுவார்கள்.

ஆனால் நம்மைத் திரும்ப அழைக்க இயலாத ஏழைகளை அழைத்தால்,

அதற்கான பேறு, சன்மானம், விண்ணகத்தில் இறைவனிடமிருந்து மட்டுமே கிடைக்கும்.

அது அழியாத, என்றும் நம்மோடிருக்கும் 

இறைவனோடு நாம் வாழும் பேரின்பமாகிய சன்மானம்.

நமது உலக உறவினர்களிடமிருந்து பெறும் சன்மானம் அழிந்து விடும்.

நாம் அழியாத சன்மானத்தைப் பெற வேண்டுமென்று இயேசு விரும்புவதால்தான்

பதிலுக்குப் பதில் செய்ய இயலாதவர்களை விருந்துக்கு அழைக்கும்படி இயேசு கூறுகிறார்.

இயேசுவுக்கு நம் மீது அளவு கடந்த அன்பு இருப்பதால்தான்

 நமக்கு விண்ணக சன்மானம் கிடைக்கும் செயல்களைச் செய்யும்படி

அவர் நம்மை அறிவுருத்துகிறார்.

நாம் எதைச் செய்தாலும் இயேசுவின் அறிவுரைக்குக் கட்டுப் பட்டு செய்வோம்.

நாம் நிரந்தரமாக வாழ வேண்டியது அவருடன்தான்.

இப்போது ஒரு நண்பர் கேட்கிறார்,

"அப்படியானால் நண்பர்களையும் சகோதரர்களையும் விருந்துக்கு அழைக்கவே கூடாதா?"

"பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை."

என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் இயேசுவும், அவரது தாயும் அருளப்பரை விடக் குறைந்தவர்களா?

இயேசுவும் பெண்ணிடம் தான் பிறந்தார்.

அன்னை மரியாளும் பெண்ணிடம் தான் பிறந்தார்.

பின் ஏன் இயேசு அப்படிச் சொன்னார்?

அருளப்பரின் பெருமையை வலியுறுத்துவதற்காக அப்படிச் சொன்னார்.

வகுப்பில் மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே நுழைந்த ஆசிரியர்,

"அமைதி. மூச்சு விடக் கூடாது." என்கிறார்.

"அதெப்படி சார், மூச்சுவிடாமல் அமைதியாக இருக்க முடியும்?"

என்று கேட்பதுபோல் இருக்கிறது,

"நண்பர்களையும் சகோதரர்களையும் விருந்துக்கு அழைக்கவே கூடாதா என்று கேட்பது.

அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே ஆசிரியர் மாணவர்களை மூச்சு விடக் கூடாது என்கிறார்.

அருளப்பரின் பெருமையை வலியுறுத்தவே

"பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை." என்கிறார்.

அது போல,

ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் போன்றோரை மறந்து விடக் கூடாது,

அவர்களுக்கு தான் உதவிகள் செய்வதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே,

இயேசு உறவினர்களை விருந்துக்கு அழைக்காமல் அவர்களை அழைக்க வேண்டும் என்கிறார்.

அனைவரையும் நேசிப்போம்,

சுயமாக எதுவும் செய்ய இயலாதவர்களை அதிகம் நேசிப்போம்.

நாமும் கூட கடவுள் உதவியின்றி ஒன்றும் செய்ய இயலாதவர்கள் தான்.

ஆகவேதான் இறைவன் நம்மை அதிகம் நேசிக்கிறார்.

லூர்து செல்வம்.

Wednesday, October 19, 2022

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."(லூக்.13:24)

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்."
(லூக்.13:24) 


ஆன்மீகமும், லௌகீகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்பதற்கு அவை பயன்படுத்தும் நடை பாதைகளே சான்று


நமது உலக போக்கு வரத்து நாகரீகத்தின் ஆரம்பக் கட்டத்தில் ஒற்றையடிப் பாதை என்று ஒன்று இருந்தது.

ஒரு நேரத்தில் ஒரு ஆள்தான் நடக்க முடியும். அதுவும் கவனவுடன் பாதையைப் பார்த்து தான் நடக்க முடியும்.

இருபக்கமும் பாதம் பதிக்க முடியாத அளவுக்கு முட்செடிகளோ, கற்களோ கிடக்கலாம்.

அடுத்து வண்டிப் பாதைகள் வந்தன. கொஞ்சம் சுதந்தரமாக நடக்கலாம்.

பின் மண் பாதைகள் கல் பாதைகளாக(metal roads) மாறின.

பின் தார் ரோடுகள் வந்தன.

அப்புறம் இரு வழிச் சாலைகள், நான்கு வழிச் சாலைகள், எட்டு வழிச் சாலைகள்  

என்று போக்கு வரத்து நாகரீகம் முன்னேறிக் கொண்டே போகிறது.

ஒற்றையடிப் பாதையில் அங்குமிங்கும் பார்க்காமல் கஷ்டப் பட்டு நடந்த மனிதன்,

அகலமான சாலைகளில் சுதந்திரமாக, ஆடிப் பாடி கூட  நடக்கிறான்.

உலகியலில் இது முன்னேற்றம்.


ஆனால் ஆன்மவியலில் (Spirituality) முன்னேற்றம் எதிர் மாறானது.

ஆரம்பத்தில், ஆன்மீகத்தில் மனிதன் அதிக அக்கரை காட்டாத காலத்தில் 

மனிதன் இஷ்டப்படி நடந்தான்.

அவன் நடந்ததெல்லாம் பாதைதான்.

சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கட்டுப்பாடு இல்லாமல் நடந்தான்.

தான் நடப்பது பாவ வழியா, சரியான வழியா என்பது பற்றி அவன் கவலைப் பட்டதேயில்லை.

ஆனால் ஆன்மா பாவமின்றி வாழ வேண்டும் என்ற கட்டுப் பாடுகளை ஏற்றுக் கொண்டபின்

இஷ்டப்படி நடப்பதை விட்டுவிட்டு ஒற்றையடிப் பாதையில், அதாவது ஒடுக்கமான பாதையில் நடக்க வேண்டும் என்ற விதியை ஏற்றுக் கொண்டான்.

நேராக நடக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே நடந்தால் பாவச் சோதனைகளில் விழ நேரிடும்.

சிந்தனையில் இறைவன், சொல்லில் இறைவன், செயலில் இறைவன் என்று ஆன்மீகம் வளர வளர,

பாதையின் ஒடுக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது. 

ஒடுக்தமான பாதை வழியே நடக்கும் ஆன்மீகவாதி இறைவனையும், இறையன்பையும் பற்றி மட்டுமே சிந்தித்தான், அதாவது தியானித்தான்.

சிந்தனை தியானமாகி விட்டது.

இறைவனைப் பற்றியும், இறையன்மைப் பற்றி மட்டுமே பேசினான்.

இந்த பேச்சு நற்செயல் அறிவித்தல் ஆகிவிட்டது.

இறையன்புப் பணி மட்டுமே செயலாக, வாழ்க்கையாக மாறிவிட்டது.

இதுவரைப் பார்த்தது ஆன்மீக வாதியின் நடை முறையில் ஏற்பட்ட முன்னேற்றம்.

ஆன்மீகத்தில் ஒடுக்கமான பாதை
மோட்சத்தை நோக்கியும்,

இஷ்டப்படி நடக்கும் அகலமான பாதை அதற்கு எதிர்த்திசையிலும் செல்கின்றன.

ஒடுக்கமான பாதைக்கு வராமல் இன்னும் இஷ்டப்படி, அகன்ற வழியில் நடக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

அவர்களைப் பார்த்துதான் ஆண்டவர் சொல்கிறார்,

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்." என்று.

பாதையும் ஒடுக்கமாக இருக்க வேண்டும், 

விண்ணகத்திற்குள் நுழையும் வாயிலும் ஒடுக்கமாக இருக்க வேண்டும்.

செபமாலையை ஒழுங்காகச் சொல்பவர்களுக்கு ஒடுக்கமான பாதை வழியே எப்படிச் செல்வது என்பது புரியும்.

செபமாலைக்கும், ஒடுக்கமான பாதைக்கும் என்ன சம்பந்தம்?

செபமாலை செபிப்பதே ஒரு ஆன்மீகப் பயணம்தான்.

ஒடுக்கமான வழியே செல்லும் ஆன்மீகப் பயணம்.

தியானிக்க வேண்டிய விசுவாச பிரமாணமும், தேவ இரகசியங்களும், சொல்ல வேண்டிய கர்த்தர் கற்பித்த செபமும், மங்கள வார்த்தை செபமும்தான் நம் ஆன்மீகப் பயணப் பாதை.

இது ஒற்றையடிப் பாதையாகையால் பாதையில் மட்டும் கண் இருக்க வேண்டும்.

இருபக்கமும் சோதனை முட்கள் குவிந்து கிடக்கும்.

மலர்ப் பூங்கா வழியே செல்லும்போது மலர்களை மட்டும் இரசிப்போம்.

அதுபோல 

முதலில் விசுவாசப் பிரமாணத்தின் வழியே செல்லும் போது, 

விசுவாச சத்தியங்கள் மீது மட்டும் கண்ணும், கருத்தும் இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியின் தேவ இரகசியங்களுக்குள் நுழைவோம்.

முதல் தேவ இரகசியம்.

கபிரியேல் சம்மனசு மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்கிறார்.

நம் கண்ணில் பட வேண்டியது கபிரியேல் தூதரும், மரியாளும்.

காதில் விழ வேண்டியத தூதரின் வாழ்த்துரையும், மரியாளின் அர்ப்பண வார்த்தைகளும்.

" அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்ற வாழ்த்துரையையும்,

"இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" என்ற அர்ப்பண வார்த்தைகளையும் காதில் வாங்க வேண்டும்.

இறைமகன் நமக்காக மனுவுரு எடுத்ததைத் தியானிக்க வேண்டும்.

இந்த தியானத்தின் போது சம்பந்தம் இல்லாத எதுவும் கண்ணில் படக்கூடாது,

காதில் விழக் கூடாது,

மனதில் படக் கூடாது.

இது ஒடுக்கமான பாதை.

.தியானித்தபின் கர்த்தர் கற்பித்த செபத்தையும், மங்கள வார்த்தை
செபத்தையும் பொருள் உணர்ந்து கூற வேண்டும்.

இரண்டாம் தேவ இரகசியத்தில் கண்ணில் பட வேண்டியது அன்னை மரியாளும், எரிசபெத்தம்மாளும்.

காதில் விழ வேண்டியது அவர்களுடைய வாழ்த்துரைகள்.

மனதில் பட வேண்டியது குழந்தை இயேசுவும், குழந்தை அருளப்பர் துள்ளியதும்.


மூன்றாம் தேவ இரகசியத்தில் கண்ணில் பட வேண்டியது மாட்டுக் குடிலில் சூசையப்பரும், மாதாவும், தீவனத் தொட்டியில் படுத்திருக்கும் குழந்தை இயேசுவும்.

காதில் விழ வேண்டியது குழந்தை யின் அழுகை.

செய்ய வேண்டியது குழந்தையை நோக்கி ஒரு சின்ன செபம்.

"பாலா, அழவேண்டாம். நான் இனி பாவங்கள் செய்ய மாட்டேன்."

நான்காவது தேவ இரகசியத்தில் 

கண்ணில் பட வேண்டியது ஆலயத்துக்குள் சூசையப்பரும், மாதாவும், குழந்தை இயேசுவும், சிமியோனும், அன்னாவும்.

காதில் விழ வேண்டியது சிமியோனின் வார்த்தைகள்.


ஐந்தாம் தேவ இரகசியத்தில் கண்ணில் பட வேண்டியது சூசையப்பர், மாதா, 
12 வயது இயேசு.


சூசையப்பரும், மாதாவும் இயேசுவைத் தேடிக் கொண்டு ஆலயத்துக்கு வருகிறார்கள்.

இயேசு போதகர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.

தியானிக்க வேண்டிய வார்த்தைகள்:

"மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே."

" என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா?"

கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் போது நம் மனதிலும், கண் முன்னும் விண்ணகத் தந்தை மட்டும் இருக்க வேண்டும்.

மங்கள வார்த்தை செபம் சொல்லும் போது நம் மனதிலும், கண் முன்னும் அன்னை மரியாள் மட்டும் இருக்க வேண்டும்.

வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடாமல், தியானிக்க வேண்டியதை மட்டும் தியானித்து தினமும் செபமாலை செய்தால்

ஆன்மீகத்தில் ஒடுக்கமான வழியே இறைவனை மட்டும் சிந்தித்து பயணம் செய்ய சிறந்த பயிற்சி கிடைக்கும்.

ஒடுக்கமான வழி என்றாலே ஆண்டவரை பற்றியும், அவருக்கு பிடித்தமானதைப் பற்றியும் தியானித்துக் கொண்டு,

அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவித்துக் கொண்டு,

அவருக்காக மட்டும்  வாழ்வதுதான்.

ஒடுக்கமான வழியே பயணித்து,
ஒடுக்கமான வாயில் வழியே நுழைந்து மோட்சத்திற்குள் செல்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, October 18, 2022

"அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும்." (லூக்.13:21)

"அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும்."
(லூக்.13:21)

இயேசு இறையரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்.

புளிப்பு மாவை எந்த மாவோடு சேர்த்தாலும் அதைப் புளிப்பாக்கிவிடும்.

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்.5:48)
என்பது இயேசுவின் ஆசை.


இறையரசை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்களில்,

அது புளிப்பு மாவாக செயல்பட்டு இயேசுவின் ஆசையை நிறைவேற்றும்.

இறையரசு நிறைவுள்ளது. அதை ஏற்றுக்கொள்பவர்களையும் தன்னைப் போல் மாற்றும்.

யார் இறையரசை ஏற்று கொள்கிறார்களோ அவர்கள்   

அன்பு, இரக்கம், பரிவு, நீதி போன்ற இறைப் பண்புகளை ஏற்றுக்கொண்டு 

  அவற்றில் வளர ஆரம்பிப்பார்கள்.

உண்மையான அன்பு உள்ளவர்கள் 
யார் மேல் அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை போலவே மாறி விடுவார்கள்.

கிறிஸ்துவை ஏற்றுக் கொள்பவர்கள் மறு கிறிஸ்துவாக மாறிவிடுவார்கள்.

இறையரசை ஏற்றுக் கொள்பவர்களும் புளிப்பு மாவாக மாறி விடுவார்கள்.

இறையரசைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அங்கு இருப்பவர்களை இறையரசுக்குள் கொண்டுவந்து விடுவார்கள்.

யார் இறையரசை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்குள் இறையரசு உள்ளது.

அதை மற்றவர்களுக்கும் அளிப்பது அவர்களுடைய கடமை.

இயேசு போதித்த நற்செய்தியே இறையரசு பற்றியது தானே.

"அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்."

"விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவித்ததுதான் நற்செய்தி.

விண்ணரசு என்றாலே இறைவனது அரசு தானே.

இயேசு இறைவன். தனது அரசை நமக்குத் தருவதற்கும், நம்மை அதற்குள் அழைப்பதற்குமே அவர் நற்செய்தியை அறிவித்தார்.

 நற்செய்தியை வாழ்பவர்கள் இறையரசின் உறுப்பினர்களாக,

 அதாவது இறை இயேசுவின் சீடர்களாக, 

வாழ்கிறார்கள். 

நற்செய்தியை அறிவிப்பவர்கள் இறையரசை அறிவிக்கிறார்கள்.

புளிப்புமாவு எப்படி தான் சேர்ந்த மாவு முழுவதையும் புளிக்க வைக்கிறதோ,

அதேபோல,

யாரெல்லாம் நற்செய்தியை வாழ்ந்து, அறிவிக்கிறார்களோ
அவர்கள் அறிவிக்கப் பட்டவர்களையும்

நற்செய்தியை வாழ்ந்து, அறிவிக்க வைக்கிறார்கள்.

நாம் உண்மையிலேயே நற்செய்தியை வாழ்ந்து அறிவித்தால், 

 யாருக்கு  அறிவிக்கிறோமோ அவர்களும் அதை வாழ்ந்து  அறிவிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

நற்செய்தியை வாழும் ஒருவர் நற்செய்தியை அறியாத மக்களிடையே சென்று வாழ ஆரம்பித்தால்,

அவர்களும் அவரது முன்மாதிரிகையைப் பின்பற்றி அவர்களைப் போல் வாழ ஆரம்பித்து விடுவார்கள்.

 நற்செய்தியை உலகெங்கும் பரப்பும் விசயத்தில்

 நாம் புளிப்புமாவு போல் செயல்பட வேண்டும் என்பது ஆண்டவருடைய ஆசை.

முதலில் நாம் புளிப்புமாவாக மாற வேண்டும்.

அதாவது நாம் நற்செய்தியை அறிந்து, அதை வாழ வேண்டும்.

அதாவது இயேசுவின் சீடர்களாக மாற வேண்டும்.

நாம் இயேசுவின் சீடர்களாக வாழ்ந்தால் நமது சீடத்துவ பணியால் நம்மைச் சுற்றி வாழ்வோர் ஈர்க்கப்பட்டு நம்மைப் போல் மாறுவார்கள்.

நாம் நம் மனதை நோகச் செய்பவர்களை மன்னிப்பவர்களாக செயல்பட்டால்

 நம்மால் மன்னிக்கப் பட்டவர்கள் நம்மைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.

நாம் நம்மைப் பகைப்பவர்களை நேசித்தால் அவர்களும் முதலில் நம்மை நேசிப்பார்கள்,

பின் அவர்களது மற்ற பகைவர்களை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

நாம் தேவைப்படுபவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தால் நம்மைக் கவனிப்பவர்கள் அதையே செய்வார்கள்.

நமது ஒவ்வொரு குணமும்,

அது நல்ல குணமாக இருந்தாலும் சரி, கெட்ட குணமாக இருந்தாலும் சரி,

 நம்மோடு வாழ்பவர்களைத் தொற்றிக் கொள்ளும்.

ரோஜா மலரின் வாசம் அருகில் வருவோர்களுடைய மூக்கிற்குள் நுழைவது போல,

சாணத்தின் நாற்றமும் நுழையும்.

நாம் நமது கிறிஸ்தவ சமயத்தை உலகெங்கும் பரப்ப வேண்டுமென்றால் 

முதலில் நாம் நல்ல கிறிஸ்தவர்களாக மாறி கடவுளுக்காக வாழ வேண்டும்.

வாயினால் போதிப்பதை விட வாழ்க்கையால் போதிப்பதே அதிக பலன் தரும். 

33ஆண்டுகள் வாழ்ந்து போதித்த இயேசு 3 ஆண்டுகள் மட்டுமே வாயினால் போதித்தார்.

30 ஆண்டுகள் தனது தாய்க்கும், வளர்த்த தந்தைக்கும் கீழ்ப்படிந்து வாழ்ந்து கீழ்ப்படிதலின் மகத்துவத்தைப் போதித்தார்.

நாம் நம் தாய்த் திருச்சபைக்கு கீழ்ப்படிந்து நடந்தாலே போதும்,

நற்செய்தியை வாழ்ந்து அறிவிப்பவர்களாக மாறிவிடுவோம்.

யூதாஸ் தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்தும்

 இயேசு அவன் மீது Suspension, dismissal போன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நமது பணி நிர்வாகங்களுக்கு இயேசு ஒரு 'வாழ்ந்து காட்டிய' முன்னுதாரணம்.

இயேசு வாழ்ந்து போதித்தது போல நாமும் வாழ்ந்து போதிப்போம்.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்து 
நல்ல கிறிஸ்தவர்களை உறுவாக்குவோம்.

வாழ்வோம், வாழவைப்போம்.

இறையரசைப் போல் புளிப்பு மாவாக செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்"(லூக்13:9)

"காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்"
(லூக்13:9)

இயேசு கூறிய அத்திமர உவமையில், 

 மூன்று ஆண்டுகளாக காய்க்காத அத்திமரத்தை வெட்டிவிட வேண்டும் என்று அதன் உரிமையாளர் கூறுகிறார்.

தோட்டத்தைக் கவனிப்பவர்,

"ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

 காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றான்.

.இந்த உவமையை வாசிக்கும் போது நமது மனதில் என்ன தோன்றுகிறது?

சொன்னவர் பாவிகளை மீட்க வந்த நமது ஆண்டவராகிய இயேசு.

பாவிகளை மீட்பதற்கும் இந்த உவமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று தியானிப்போம்.

சென்மப் பாவத்தோடு உற்பவித்து பிறந்த நாம் அனைவரும் பாவிகள் தான். 

நம்மை பாவத்திலிருந்து மீட்பதற்காகத்தான் இறை மகன் 
மனிதனாய்ப் பிறந்தார்.

கத்தோலிக்க திருச்சபையைக் கூட பாவிகளின் கூடாரம் என்று தான் அழைக்கிறோம்.

நோயாளிகள் நோயிலிருந்து குணம் பெற மருத்துவமனையில் இருப்பது போல,

பாவிகளாகிய நாம் பாவத்திலிருந்து குணம் பெற  கத்தோலிக்க திருச்சபையில் இருக்கிறோம்.

பாவிகளாகிய நாம் எதற்காக இவ்வுலகில் வாழ்கிறோம்?

படித்து பட்டம் பெறுவதற்காக மாணவர்கள் பள்ளிக் கூடத்திற்குப் போவது போல,

 நோயாளிகள் நோயிலிருந்து குணம் பெற மருத்துவ மனைக்குப் 
போவது போல,

பாவத்திலிருந்து மீட்கப் பட்டு, பரிசுத்தர்கள் ஆகி நிலை வாழ்வு பெறுவதற்கு நம்மை தயாரிப்பதற்காக  நாம் இப்பூமியில் வாழ்கிறோம்.

அத்தி மரத்திற்கு பூத்து, காய்த்து, பழுக்க போதிய கால அவகாசம் கொடுக்கப் பட்டது.

ஆனால் அது தான் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை.

ஆகவேதான் அதன் உரிமையாளர் அதை வெட்ட வேண்டும் என்கிறார்.

ஆனாலும் அதைக் கவனிப்பவர் அதற்கு இன்னும் ஒரு ஆண்டு 
கால அவகாசம் கொடுப்போம் என்கிறார்.

நமது வாழ்க்கையின் கால அளவைத் தீர்மானிப்பவர் நமது உரிமையாளராகிய கடவுள்.

அந்த கால அளவுக்குள் நாம்     பரிசுத்தர்களாக மாற வேண்டும்.

அத்திமரத்தைக் கவனிப்பவர் 
சுற்றிலும் கொத்தி எருப்போடுவது போல,

நமது ஆன்மீக வாழ்வைக் கவனிக்கும் நமது ஆண்டவர் நமது ஆன்மீக நலனுக்காக அருள் வரங்களை அள்ளித் தரும் தேவத்தரவிய அனுமானங்களைத் தந்திருக்கிறார்.

அவற்றைப் பயன்படுத்தி நாம் பாவத்திலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தர்களாய் வாழவேண்டும்.

சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற ஞானஸ்நானம்,

வாழும்போது நாம் செய்த பாவத்திலிருந்து விடுதலை பெற பாவ சங்கீர்த்தனம்,

ஆன்மீக வாழ்வில் உறுதியாக இருக்க உதவும் பரிசுத்த ஆவியின் அருள் வரங்களை அள்ளித்தர உறுதிப் பூசுதல்,

நமது பாவங்களை மன்னித்து, 
திருப்பலி நிறைவேற்றி,
 நமக்கு ஆண்டவரையே ஆன்மீக உணவாகத்தந்து,
நம்மை ஆன்மீக வாழ்வில் வழிநடத்தும் குருக்களை உருவாக்க குருத்துவம்,

ஆண்டவர் தன்னையே நமக்கு உணவாகத் தர திவ்ய நற்கருணை,

திருமண வாழ்வை ஆசீர்வதிக்க மெய் விவாகம்,

நமது இவ்வுலக வாழ்வில் நாம் விண்ணகம் செல்ல நம்மைத் தயாரிக்க அவஸ்தைப் பூசுதல்

ஆகியவை இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவத்திரவிய அனுமானங்கள்.

இவற்றைப் பயன் படுத்தி நாம் பரிசுத்தத் தனத்தில் வளர வேண்டும்.

இதற்காகத்தான் நமக்கு வாழ் நாளாகிய கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.

இவற்றைப் பயன் படுத்துகிறோமா?

நாம் குழந்தைகளாய் இருக்கும் போது ஞானஸ்நானம் கொடுத்து விட்டார்கள்.

ஆகவே சென்மப் பாவத்திலிருந்து விடுதலை பெற்று விட்டோம்.

நாம் செய்கிற பாவங்களுக்கு மன்னிப்புப் பெற ஆண்டவர் தந்திருக்கும் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானத்தை ஒழுங்காகப் பயன்படுத்துகிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

பழைய காலத்தைச் சுட்டிக்காட்டினால் முன்னேற விரும்பாத பழைமை விரும்பி என்று சொல்வார்கள்.

சொல்லிவிட்டுப் போகட்டும்.

சுட்டிக் காண்பிக்க வேண்டியதை சுட்டிக் காண்பித்துதான் ஆக வேண்டும்.

நான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்த காலத்தில்:

வல்லத்திலிருந்து நெல்லையப்புரம் வரை ஒரே பங்கு, ஒரே பங்குத் தந்தை.

ஞாயிற்றுக் கிழமை பூசையாக
 இருந்தாலும் சரி, மற்ற நாட்கள் 
பூசையாக  இருந்தாலும் சரி

பூசைக்கு முன் எல்லோரும் பாவசங்கீர்த்தனம் செய்து விடுவார்கள்.

பாவசங்கீர்த்தனம் செய்தவர்கள் மட்டும்தான் திவ்ய நற்கருணை உட்கொள்வார்கள்.

7.30க்கு பூசை என்றால் சுவாமியார் 6.30 க்கே பாவசங்கீர்த்தனத் தொட்டியில் இருப்பார்.

மக்கள் Qவில் நின்று ஒவ்வொருவராக பாவசங்கீர்த்தனம் செய்வார்கள்.

அன்றைய நாளையும், இன்றைய 
நாளையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,

 இன்றைக்கு நாட்டில் பாவம் செய்வது மிகவும் குறைந்து விட்டது போல தெரிகிறது.

மருத்துவ மனைக்கு யாரும் வராவிட்டால் யாருக்கும் நோய் இல்லை என்றுதானே அர்த்தம்.

நமது ஆண்டவர் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியதே நாம் அதைப் பயன்படுத்தி பரிசுத்தர்கள் ஆக வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆண்டவர் நமக்குத் தந்துள்ள கால அவகாசத்தை அவர் எதிர்பார்க்கிறபடி பயன்படுத்தி மீட்பு பெறுவோம்.

"இந்த ஆண்டும் இருக்கட்டும்.

 சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

 காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்"

என்ற வசனங்கள் நமக்குத் தூண்டுகோலாய் இருக்கட்டும்.

நாம் காய்க்கும் அத்திமரங்களாக மாறுவோம்.

அதுதான் நம் ஆண்டவரின் ஆசை.

லூர்து செல்வம்.

Monday, October 17, 2022

"இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."(லூக்.12:40)

"இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(லூக்.12:40) 

பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு தேர்வு வைக்கும் போது தேர்வு கால அட்டவணையை முன்கூட்டியே கொடுத்து விடுவது வழக்கம்.

கால அட்டவணையை மனதில் வைத்துக் கொண்டு மாணவர்கள் தேர்வுக்குத் தங்களைத் தயாரிப்பது வழக்கம்.

  தேர்வுக்கு முந்திய நாள்வரை சும்மா இருந்து விட்டு, 

முந்திய நாளில் அனைத்துப் பாடங்களையும் திருப்பிப் பார்த்து விட்டு,

நல்ல முறையில் தேர்வு எழுதிவிடும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

தேர்வு கால அட்டவணை கொடுக்கப் படாமல், ஆண்டின் எந்த நாளிலும் முன் அறிவிப்பின்றி தேர்வு நடைபெறும்,

அதுவே ஆண்டிறுதித் தேர்வாக கருதப்படும் என்று விதி இருந்தால் 

யாராவது தேர்வுக்கு முந்திய நாள் வரை படிக்காமல் இருப்பார்களா?

தேர்வுக்கு முந்திய நாள் எதுவென்றே யாருக்கும் தெரியாது!

ஆகவே, மாணவர்கள் அன்றன்றய பாடத்தை அன்றன்றே படித்து முடித்து விடுவார்கள்.

எப்போதும் இறுதித் தேர்வுக்குத் தயாராக இருப்பார்கள்.

நன்கு தேர்வு எழுதி வெற்றியும் பெறுவார்கள்.

ஆன்மீக வாழ்வில் நமது மரணத்தைத்தான் மனுமகன் வரும் நாள் என்று குறிப்பிடுகின்றோம்.

அதுதான் மனுமகன் இயேசு நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்லும் நேரம்.

மரணம் வரும்போது நமது ஆன்மா பாவ மாசின்றி பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் விண்ணகத்துக்குள் நுழைய முடியும்.

மரணம் வரும் நாளை முன் கூட்டியே அறிவித்துவிட்டால்

அதற்கு முந்திய நாள் வரை இஷ்டம்போல் வாழ்ந்துவிட்டு,

மரண நாளன்றுவிண்ணகம் செல்ல ஆன்மாவைத் தயாரிக்கலாம் என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் நமது வாழ்நாள் எல்லாம் ஒவ்வொரு நாளும்,
 ஒவ்வொரு மணியும்,
 ஒவ்வொரு நிமிடமும், 
ஒவ்வொரு வினாடியும் 
நாம் பாவமாசின்றி பரிசுத்தமாக வாழ வேண்டும் என்பதுதான் நமது ஆண்டவரின் விருப்பம்.

ஆகவேதான் நமது மரண நேரத்தை நமக்கு முன்னறிவிக்க வில்லை.

நம் வாழ்நாளின் எந்த விநாடியும் நமக்கு மரணம் வரலாம்.

இந்த விநாடி வாழ்வோர் அடுத்த விநாடி வாழ்வார் என்பது உறுதி இல்லை.

ஆகவே நாம் ஒவ்வொரு விநாடியும் ஆண்டவரின் வருகைக்குத் தயாராக இருக்க வேண்டும்.

அதாவது, ஒவ்வொரு விநாடியும் பாவமாசு இல்லாதிருக்க வேண்டும்.

மனித பலகீனத்தால் பாவத்தில் விழ நேரிட்டால் உடனடியாகப் பாவத்திற்காக உத்தம மனஸ்தாபப்பட்டு பாவ மன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

பாவசங்கீர்த்தனமும் செய்து கொள்ள வேண்டும்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்வது ஆன்மாவுக்கு நல்லது.

"மோட்சத்திற்குத்தானே போக வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் தவ முயற்சிகள் செய்து வாழ்வதை விட

வாழ்நாளில் எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு,

மரணத்துக்கு முந்திய நாள் பாவ சங்கீர்த்தனம் செய்து,

மறுநாள் மோட்சத்திற்குப் போய் விடலாமே!"

என்று நினைப்பவர்களைப் பார்த்துதான் ஆண்டவர் சொல்கிறார்:

"எப்போதும், ஒவ்வொரு விநாடியும்
ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."

எப்போதும் தயாராக இருப்போம்.

இப்போது, அடுத்த விநாடி கூட ஆண்டவர் வரலாம்.

லூர்து செல்வம்.

.

Sunday, October 16, 2022

"அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?"(லூக்.12:20)

"அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?"(லூக்.12:20)

உலகப் பொருள்களின் மீது பற்று வைத்திருப்பவர்களைப் பற்றி இயேசு கூறிய உவமையில்:

பணக்காரன் ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்ததால் விளைச்சலை சேமித்து வைக்க போதுமான இடமில்லாததால் 

ஏற்கனவே உள்ள களஞ்சியங்களை இடித்து விட்டு, மிகப்பெரியதாகக் கட்டி,

விளைச்சலை எல்லாம் அதில் சேமித்து வைத்துப் பல ஆண்டுகள் பயன்படுத்துவேன் என்று பெருமையாகக் கூறிக்கொள்கிறான்.

அப்போது கடவுள் அவனை நோக்கி,

"அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?" என்கிறார்.

அதாவது அவன் சேமித்து வைப்பதில் ஒரு தானியத்தைக் கூட அவனால் பயன்படுத்த முடியாது,

யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதுவும் அவனுக்குத் தெரியாது.

இந்த உவமை கற்பிக்கும் பாடம் என்ன?

ஒருவனிடம் எவ்வளவு பொருள் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு எவ்வளவு தேவை இருக்கிறதோ அவ்வளவுதான் அவனால் செலவழிக்க முடியும்.

தேவைக்கு அதிகமாக இருப்பதை அவனால் பயன் படுத்த முடியாது.

பயன் படுத்த முடியாததை சேமித்து வைத்து என்ன பயன்?

ஒருவன் தன்னிடம் உள்ளதைத் தானும் பயன்படுத்தாமல்,

சேமித்து மட்டும் வைத்துவிட்டு இறந்துவிட்டால்,

அவன் பயன்படுத்தாததை வேறு யாரோ தான் பயன்படுத்தப் போகிறார்கள்.

அதனால் அவனுக்கு எந்த பயனும் இல்லை.

ஆனால் உண்மையான பிறர் அன்புடன் நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து பயன்படுத்தினால் அதனால் மற்றவர்களும் பயன்படுவார்கள் நாமும் ஆன்மீக ரீதியாக பயன் பெறுவோம்.

நமது செயல்படுத்தப்பட்ட பிறர் அன்புக்கு விண்ணகத்தில் நமக்கு சன்மானம் கிடைக்கும்.

அந்த சன்மானம் நமக்கு நித்திய காலமும் பேரின்பப் பயனைத் தந்து கொண்டேயிருக்கும்.

நமக்கு கடவுள் பொருட்களை தந்திருப்பது அவற்றை மற்றவர்களோடு பிறர் அன்போடு பகிர்ந்து பயன்படுத்துவதற்காகத்தான்.

நம்மை போல மற்றவர்களும் கடவுளுடைய பிள்ளைகள் தான்.

உலகில் உள்ள எல்லா பொருள்களும் அவருடைய எல்லா பிள்ளைகளும் பயன்படுத்துவதற்காகத்தான்.

பிறர் அன்பு என்ற ஆசீர்வாதத்தை கடவுள் நமக்கு தந்திருப்பது நம்மிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து பயன்படுத்துவதற்காகத்தான்.

இப்பொழுது ஒரு கேள்வி எழும்.

ஒருவன் தனக்கு கிடைத்த பொருளை எல்லாம் மற்றவர்களோடு பகிர்ந்து விட வேண்டுமா?

 அல்லது தனது எதிர் காலத்திற்கு என்று கொஞ்சம் வங்கியில் போட்டு சேமித்து வைக்கலாமா?

இது கொஞ்சம் சிக்கலான கேள்வி.

 பிரான்சிஸ்கன் மூன்றாம் சபையைச் சார்ந்த, பரதேசி பீற்றர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட 

கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் தனது ஒவ்வொரு மாத சம்பளத்தையும் 

அந்தந்த மாதமே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வார்.

 தனக்கென்று ஒரு பைசா கூட சேமித்து வைத்ததில்லை.
 
அவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் முழு நேர சீடன்.

கிறிஸ்துவின் போதனையை அப்படியே பின்பற்றியவர்.

எல்லோரும் அவரைப் போல் வாழ வேண்டுமா,

அல்லது தங்களுக்கென்றும், தங்கள் குடும்பத்திற்கென்றும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை வங்கியில் சேமித்து வைக்கலாமா?

சேமித்து வைப்பது அவர்கள் நேர்மையாக சம்பாதித்த சொந்த பணம்.

நேர்மையாக சம்பாதித்ததில் மிச்சம் பிடித்து சேமித்து வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனாலும் ஆன்மீக பார்வையில் அது நமது விசுவாச பற்றாக்குறையையே காண்பிக்கின்றது.

சம்பாத்தியத்தை சேமிப்பதற்கும் விசுவாச பற்றாக்குறைக்கும் என்ன சம்பந்தம்?

நமது ஆண்டவர்

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்."

என்றுதான் விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்கச் சொன்னார்.

அதாவது நமது அன்றாட தேவைகளைத்தான் பூர்த்தி செய்யும்படி தந்தையிடம் விசுவாசத்தோடு கேட்க வேண்டும்.

அதாவது நமது அன்றாட தேவைகளை தந்தை பூர்த்தி செய்வார் என்று உறுதியாக விசுவசிக்க வேண்டும்.

நாளைய தேவையைப் பற்றி இன்று தந்தையிடம் கேட்கவில்லை.

அதை நாளைக்கு தான் கேட்போம்.

நாளைய தேவை நாளைக்கு பூர்த்தி செய்யப்படும்.

நாளைய தேவைகளுக்கு நாம் இன்றே சேமித்து வைத்தால்

நமக்கு நமது சேமிப்பின் மீது உள்ள நம்பிக்கை தந்தையின் மீது இல்லை என்பதுதானே பொருள்.

நமது அன்றன்றய தேவைகளை கடவுள் அன்றன்று கட்டாயம் பூர்த்தி செய்வார் என்று தந்தையை விசுவசித்தால்

நாம் ஏன் சேமிக்கிறோம்?

நாம் நமது அம்மாவிடம் காலையில் காலைச் சாப்பாட்டைக் கேட்டு பெற்றபின்
அதில் இரவு சாப்பாட்டுக்காக மிச்சம் பிடிப்போமா?

ஆகவேதான், தந்தையிடம் நமது அன்றாட உணவைக் கேட்டுவிட்டு,

 நாளைய உணவுக்கு நாமே சேமித்தால் அது நமது விசுவாசமின்மையைக் காட்டுகிறது என்கிறேன்.

நமது பெரும்பாலான செபங்கள் கேட்கப் படாமைக்குக் காரணம் நமது விசுவாசப் பற்றாக்குறைதான்.

உலகம் பொருட்களை நம்புவதை விட, அவற்றை படைத்த கடவுளை அதிகம் நம்புவோம்.

இயேசுவின் விருப்பப்படி நம்மிடம் இருப்பதை பகிர்ந்துண்டு வாழ்வோம்.

பேரின்ப நிலை வாழ்வைப் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, October 15, 2022

அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?"(லூக்.12:14)

"அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?"
(லூக்.12:14)

நற்செய்தி போதித்துக் கொண்டிருந்த இயேசுவிடம் ஒரு நபர் தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்கும் படி கேட்கிறார்.

அவரைப் பார்த்து இயேசு,

"அன்பனே, நியாயம் தீர்க்கவோ பாகம்பிரிக்கவோ என்னை ஏற்படுத்தியவர் யார்?"

என்று கேட்கிறார்.

கேட்கிறவர் யார்?

கடவுள். ஆன்மாவையும், அது வாழும் உடலையும், அது சார்ந்த உலகையும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் படைத்தவர்.

தனது நற்செய்தியைக் கேட்க வந்தவர்களுடைய உடல் சார்ந்த நோய்களையும் குணமாக்கியவர்.

அவர் ஏன் சொத்துப் பிரிவினை சம்பந்தமான உதவியைக் கேட்கும்போது இவ்வாறு பதில் கூறினார்?

நமக்காகத்தான். நாம் எப்படிப் பட்ட உதவிகளை அவரிடம் கேட்க வேண்டும் என்பது சம்பந்தமாக அறிவுரை கூறுவதற்காகத்தான்.

"எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். 

ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும்

 செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது."

உலகப் பொருட்களின் மீது ஆசைப் பட வேண்டாம். நமது ஆசைப்படி எவ்வளவு பொருள் கிடைத்தாலும் அது நமது ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படாது.

இறைவன் அருள், உலகப் பொருள் ஆகிய இரண்டில் ஒன்றின் மீதுதான் ஆசை இருக்க முடியும்.

இரண்டின் மீதும் இருக்க முடியாது.

அருள் மீது ஆசை உள்ளவன் பொருள் மீது ஆசை வைக்க மாட்டான்,

பொருளை அதை அனுபவிப்பதற்காக ஈட்ட மாட்டான்.

இறை அருளை ஈட்டுவதற்காக தன்னிடம் உள்ள பொருளைப் பயன் படுத்துவான்.

பணம் இருந்தால் அதைத் தர்மம் செய்து இறை அருளை ஈட்டுவான்.

பொருள் மீது ஆசை உள்ளவன் அருளைப் பற்றி கவலைப் பட மாட்டான்.

பொருளை ஈட்டுவது ஒன்றே அவன் குறிக்கோளாக இருக்கும்.

பொருளாசையால்
 நமக்குத் தீமை மட்டும்தான் ஏற்படும்.

பொருளாசை மிகுந்தவன் அதை ஈட்டுவதற்காக எந்த பாவத்தையும் செய்ய தயங்க மாட்டான்.

பொய், களவு, இலஞ்சம் போன்ற பாவங்கள் அவன் வாழ்வில் சர்வ சாதாரணமாக இருக்கும்.

அருள் அற்ற வாழ்வில் நல்லது நடக்க வாய்ப்பில்லை.

கையில் ஒரு பைசா கூட இல்லாதவன் அருள் வாழ்வில் செல்வந்தனாக வாழலாம்,

ஆனால் கோடிக்கணக்கில் பணமும் அதன் மீது பற்றும் உள்ளவன் அருள் வாழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

நாம் பொருள் மீது ஆசை வைக்கக் கூடாது என்பதற்கு முன் மாதிரியாகத்தான் நம் ஆண்டவரே

 ஏழையாகப் பிறந்து, 

ஏழையாக வாழ்ந்து, 

ஏழையாக மரித்தார்.

அவருடைய சீடர்களாகிய நமக்கும் பொருள் மீது பற்று இருக்கக் கூடாது.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவரிடம் ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அருள் வரங்களை மட்டும் கேட்க வேண்டும்.

அருளை ஈட்டத் தேவையான பொருளை மட்டும் கேட்கலாம்.

நாம் செபிக்கும்போது இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Friday, October 14, 2022

"ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்." (லூக்.12:6)

"ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்." (லூக்.12:6)

விண்ணகத் தந்தையின் பிள்ளைகளாகிய நாம் பாவம் தவிர வேறு எதற்கும் அஞ்ச  வேண்டாம்.

தாயின் மடியிலோ, இடுப்பிலோ அமர்ந்திருக்கும் குழந்தை எதற்காவது பயப்படுகிறதா?

உலகத் தாயைப் பொறுத்த மட்டில் அவள் பயத்துக்கு அப்பாற்பட்டவள் அல்ல.

"என் பிள்ளையை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறேனோ?" என்று பயம் கூட அவளிடம் இருக்கலாம்.

ஆனால் அவள் பிள்ளை அவளோடு இருக்கும்போது எதற்கும் பயப்படாது.

இது குழந்தையின் மன நிலை.

நமது விண்ணகத் தந்தைக்கு நாம் குழந்தைகள்தான்.

 அவர் சர்வ வல்லவர்.

சர்வத்தையும் படைத்தவர் அவரே.

 அவரால் முடியாதது எதுவும் இல்லை.

 பிரபஞ்சத்தில் அவரால் படைக்கப்பட்ட உயிரற்ற பொருட்களையும்,

ஊர்வன, நடப்பன, பறப்பன, போன்ற மிருகங்களையும்

ஒவ்வொரு வினாடியும் பராமரித்து வரும் கடவுள்,

முடிவற்ற காலம் தன்னோடு பேரின்பத்தில் வாழ்வதற்கென்றே,

தன் சாயலில்  படைத்த மனிதனை 
பராமரிக்காமலிருப்பாரா?

நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவருக்கு தெரியும்.

மிருகங்களை விட நாம் மேலானவர்கள்.

"படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக.'' இது தமிழ் மொழி.

அனைத்து பொருட்களையும் நமக்காகப் படைத்தார்.

நம்மை தனக்காகப் படைத்தார்.

அவருக்காகவே படைத்து, அவருடைய பாதுகாப்பிலேயே நம்மை வைத்திருக்கும் போது 

நம்மைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? 

செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான். 

படைத்தவர் பராமரிப்பார்.

 ஆகவே, நம்மை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு,

படைத்தவருக்காக வாழ்வதில் மட்டும் கவனத்தை செலுத்துவோம்.

நம்மை முழுவதும் இறைவனது பராமரிப்பில் விட்டுவிட்டு,

நமக்காக அல்லாமல்,

இறைவனுக்காக மட்டும் வாழ்வோம்.

நமது சிந்தனை, சொல்,
 செயல் அனைத்தும் இறைவனுக்காகவே இருக்க வேண்டும்.

இறைவனை எப்படி திருப்திப் படுத்துவது என்பது பற்றியே நமது சிந்தனை இருக்க வேண்டும்.

இறைவனை மகிமைப்படுத்துவதற்காகவே நாம் செயல் புரிய வேண்டும்.

நாம் பயன்படுத்தும் கார் நாம் ஓட்டும் இடத்திற்கெல்லாம்  செல்கிறது.

இறைவனால் பயன்படுத்தப்படும்  நாம் அவர் சொன்னதையெல்லாம் செய்ய வேண்டும்.

நம்மை தனது விருப்பப்படி பயன்படுத்த அவருக்கு முழு உரிமை உண்டு.

புனித பிரான்சிஸ் அசிசியாரை ஏழ்மையை வாழ்ந்து போதிக்கவும்,

ஐந்து காய வேதனையை அனுபவிக்கவும் பயன்படுத்தினார்.

புனித அல்போன்சாளை உடல் நோயால் அவதிப்படவும், அந்த அவதியை தனக்கு ஒப்புக்கொடுக்கவும் பயன்படுத்தினார்.

புனித கல்கத்தா தெரெசாளை தொழு  நோயாளிகளுக்கு சேவை செய்ய பயன்படுத்தினார்.

புனித சவேரியாரை உலகெங்கும் பயணம் செய்து நற்செய்தியை அறிவிக்க பயன்படுத்தினார்.

 புனித அந்தோனியாரை புதுமைகள்  செய்து தன்னை மகிமைப் படுத்த பயன்படுத்தினார்.

செருப்பைக் காலில் போடவும், தொப்பியைத் தலையில் வைக்கவும் பயன்படுத்துகிறோம்.

"எனக்குத் தலை வேண்டும்" என்று செருப்பு கேட்டால் கொடுப்போமா?

நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும்.

அதன்படிதான் நாம் செயல்புரிய வேண்டும், நமது விருப்பப்படி அல்ல.

இறைவன் விருப்பமே நமது விருப்பமாக இருக்க வேண்டும்.

குருவிகளுக்கு கால்கள் இருக்கின்றன.

 ஆனாலும் அவை பறந்தே பயணிக்கின்றன.

 எனெனில் அதுவே அவற்றைப் படைத்தவரின் விருப்பம்.

நாம் குருவிகளை விட எவ்வளவோ மேலானவர்கள்.

நாமும் விண்ணகத் தந்தையின் விருப்பப் படியே செயல் புரிவோம்.

"உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!"

என்று விண்ணகத் தந்தையை நோக்கி செபிக்க நம் ஆண்டவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டியவர்கள் நாம்தான்.

இதுதான் இயேசுவின் விருப்பம்.

இயேசு விரும்புகிறபடி வாழ்வோம்.

லூர்து செல்வம்.