Thursday, September 30, 2021

" நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், "இவ்வீட்டுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துங்கள்."(லூக். 10:5)

" நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், "இவ்வீட்டுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துங்கள்."
(லூக். 10:5)

இயேசு எழுபத்திரண்டு வீடர்களை இருவர் இருவராக நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது அவர்களுக்கு கூறிய அறிவுரை :

" நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், "இவ்வீட்டுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துங்கள்."

இந்த அறிவுரையிலேயே மிகப்பெரிய, மிக முக்கியமான நற்செய்தி அடங்கி இருக்கிறது.

 கிறிஸ்து பிறந்த அன்று விண்ணகத் தந்தை வானதூதர்கள் மூலமாக உலகத்திற்கு அளித்த முதல் நற்செய்தியும் இதுதான்.


"உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. 

உலகிலே நல்மனதோர்க்குச் சமாதானம் உண்டாகுக! " 
(லூக்.2:14)

 இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கமும் இதில் அடங்கி இருக்கிறது.

சமாதானம் என்றால் என்ன?

நல்ல உறவோடு இருக்கும் இரண்டு மனிதர்களுக்கு இடையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு உறவு கெட்டிருந்தால்,


கெட்டுப்போன உறவை சரிசெய்து திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரும்போது இருக்கும் நிலை  சமாதானம் எனப்படுகிறது. 

இறைமகன் மனிதனாக பிறந்தநாளில் விண்ணகத்திலிருந்து சமாதானத்தின் வாழ்த்து வரக் காரணம் என்ன?

இறைவன் நமது நமது முதல் பெற்றோரை படைத்தபோது இறைவனுக்கும் மனிதருக்கும் 
இடையில் உறவு நன்றாக இருந்தது.

மனிதன் பாவம் செய்து இறைவனோடு கொண்டிருந்த உறவை முறித்துக் கொண்டான்.

ஆனாலும் இறைவன் மாறாதவர்.
அவருக்கு மனிதன் மீது இருந்த அன்பிலும், உறவிலும் எந்தவித மாற்றமும் இல்லை.

மாறியது மனிதன் மட்டும் தான்.

மனிதன் இறைவனோடு கொண்டிருந்த உறவை புதுப்பிக்க வேண்டும் என்று இறைவன் எண்ணினார்.

அதற்காக அவன் தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டும்.

இறைவன் அளவில்லாதவர். மனிதன் அளவுள்ளவன்.

அளவுள்ள மனிதனால் அளவில்லாத கடளுக்கு ஏற்ற பரிகாரம் செய்ய முடியாது.

ஆகவே அளவில்லாத கடவுள் மனிதனாக பிறந்து அந்த பரிகாரத்தை செய்ய தீர்மானித்தார்.

அதற்காகவே இறைமகன் மனிதனாக பிறந்தார்.

இறை மனித உறவில் சமாதானம் ஏற்பட கடவுள் மனிதராக பிறந்ததால் அன்று விண்ணவர் சமாதானத்தின் கீதம் பாடினார்கள்.

இயேசு தனது பாடுகளின் மூலமாகவும் மரணத்தின் மூலமாகவும் நமது பாவங்களுக்கு பரிகாரம் செய்து 

நாம் இழந்த இறை உறவை மீட்டுத் தந்தார்.

அவர் மீட்டுத் தந்த சமாதானத்தை நாம் ஏற்றுக் கொள்வதோடு, அதை இழக்காமல் பாதுகாக்க வேண்டும்.

இயேசுவின் நற்செய்தியே சமாதானத்தின் செய்தி தான்.

நாம் காண்போரிடம்

' உங்களுக்குச் சமாதானம்" என்று சொல்லும்போது 

''இயேசு மீட்டுத் தந்த சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு அறிவிக்கிறோம்.

அதாவது இயேசு தந்த சமாதானத்தின் நற்செய்தியை அவர்களுக்கு கொடுக்கிறோம்.

நல்ல மனது உள்ளவர்களிடம்தான் 
சமாதானம் தங்கும்.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது நமது பாவங்கள் நீக்கப்பட்டதால் அப்போது கிறிஸ்துவின் சமாதானத்தை பெற்றுக்கொண்டோம்.

பெற்ற சமாதானத்தை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால் மறுபடி பாவம் செய்யக்கூடாது.

பாவம் செய்ய நேரிட்டால் பாவசங்கீர்த்தனம் என்னும் தேவ திரவிய அனுமானம் மூலம் பாவமன்னிப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

சமாதானத்தின் தேவனை அடிக்கடி நமது ஆன்மீக உணவாக உட்கொள்ள வேண்டும்.

நண்பர் ஒருவர்,

  "சமாதானம் வடமொழி வார்த்தை ஆயிற்றே, அதை ஏன் பயன்படுத்துகிறீர்கள்?

 அதற்கு பதிலாக அமைதி என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தலாமே"

 என்று கேட்டார்.

 வடநாட்டு கோதுமையை சாப்பிடுவது, 
மேல்நாட்டு நாகரீக உடை அணிவது, 
மேல்நாட்டு கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துவது ஆகியவற்றில் அவருக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

சமாதானம் மட்டும் பிடிக்கவில்லை.

சரி, அது அவர் இஷ்டம்.

நான் சமாதானம் என்ற வார்த்தையை விரும்புவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

அந்த வார்த்தையில் ஒரு பொருள் நயம் இருக்கிறது. 

சமம் + தானம் = சமாதானம், அதாவது சம இடம்.

கடவுள் பரிசுத்தர், மனிதனைப் படைக்கும் போது 
பரிசுத்தமானவனாக படைத்தார்.

பரிசுத்தத் தனத்திற்கும், பரிசுத்தத் தனத்திற்கும் இடையில் நல்ல சுமுகமான உறவு இருந்தது.

மனிதன் பாவம் செய்து தன்னுடைய பரிசுத்தத் தனத்தை இழந்த வினாடியே உறவு முறிந்தது.

பாவத்தில் விழுந்த மனிதனை இறைவன் அதிலிருந்து தூக்கிவிட நினைத்தார்.

விழுந்துகிடந்த மனிதனை தூக்கி விடுவதற்காக உன்னதத்தில் இருந்த கடவுள் மனித நிலைக்கு இறங்கி வந்தார்.

பாவம் தவிர, மற்ற தன்மைகளில்
மனித நிலைக்குத் தன்னை தாழ்த்தினார். 

உன்னதர் இறங்கி வந்து,
 மனிதனோடு சம நிலைக்கு வந்து அவனைப் பாவத்திலிருந்து தூக்கிவிட்டார்.

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள், பிறப்பும், இறப்பும் உள்ள மனித உரு எடுத்தார்.

கஷ்டப்பட முடியாத கடவுள் மனிதனாகி கஷ்டங்களை ஏற்றுக்கொண்டார்.

பயப்படவே முடியாத கடவுள்

 கெத்சமனி தோட்டத்தில் தான் படவிருக்கும் பாடுகளை நினைத்து,

 உடலில் இரத்த வியர்வை வியர்க்கும் அளவிற்குப் பயந்தார்.

இப்படியாக பாவம் தவிர மற்ற எல்லா பலகீனங்களிலும் மனிதனுக்கு சமமாக ஆக்கிக்கொண்டு நமக்கு தந்ததே சமாதானம்.

இதுதான் சமாதானம் என்ற வார்த்தையின் பொருள் நயம்.

மனிதனை விண்ணகத்திற்கு ஏற்றிவிட உன்னதர் மண்ணகத்திற்கு இறங்கி வந்தார்.

இப்போதுகூட அளவில்லாத சர்வவல்லமையுள்ள இயேசு,

அளவுள்ள நமது நாக்கில் உணவாக வரவேண்டும் என்பதற்காக 

அளவுள்ள அப்ப ரச குணங்களில் தனது முழு உடலோடும், ஆன்மாவோடும் இருக்கிறாரே!

இயேசுவின் சமாதானத்திலிருந்து நாம் ஒரு ஆன்மீக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லோரும் சமாதானமாய் வாழ்வோம்.

 உலகில் தங்களைக் தாங்களே பெரியவர்கள் என்று தற்பெருமையாக எண்ணுபவர்கள் யாரும் சமாதானமாக வாழ முடியாது.

தாய் கூட குழந்தையின் அளவுக்கு குனிந்தால் தானே அதை கையில் எடுக்க முடியும்!

மேடைமேல் இன்று lecture அடிக்கும் ஆசிரியர்களை விட

 மாணவர்களோடு மாணவர்களாய் உட்கார்ந்து சொல்லிக் கொடுப்பவர்கள்தான்

 அதிக வெற்றி பெறுவார்கள்.

தொழிலாளிகளோடு தொழிலாளியாகப் பழகும் முதலாளிதான் 

தொழிலாளியின் அன்பையும், உழைப்பையும் அதிகம் பெறுவான்.

நோயாளியை தொட பயப்படும் மருத்துவரால் அவனை குணமாக்க முடியாது.

தாழ்ச்சிதான் புண்ணியங்களின் அரசி

"இருதயத்தில் தாழ்ச்சியும், சாந்தமும் உள்ள இயேசுவே , எங்கள் மேல் இரக்கமாயிரும்."

லூர்து செல்வம்.

Tuesday, September 28, 2021

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."(லூக்.10:3)

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."
(லூக்.10:3)

72 சீடர்களை நற்செய்தி அறிவிக்க  அனுப்பும்போது இயேசு கூறிய வாழ்த்துச் செய்தி:

"செல்லுங்கள், ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளைப்போல் உங்களை அனுப்புகிறேன்."
(லூக்.10:3)

உலகத்தினர் யாரையாவது எந்த  பணிக்காவது அனுப்பினால்,

"செல்க, வென்று வருக" 

என்று சொல்லி வாழ்த்துவார்கள்.

ஆனால் கிறிஸ்து ,

" செல்க, ஓநாய்களால்  பலியாகுக" என்று வாழ்த்தியிருக்கிறார்.

ஓநாய்களுக்கு ஆட்டுக்குட்டிகளின் உடலை மட்டுமே சாப்பிட முடியும், ஆன்மாவை ஒன்றும் செய்யமுடியாது என்று இயேசுவுக்குத் தெரியும்.


தந்தை இறைவன் கூட மகனை உலகிற்கு அனுப்பும்போது,

"செம்மறியே, செல்க. சிலுவையில் பலியாகுக !"

என்று சொல்லிதான்  வாழ்த்தியிருப்பார்!

ஏனெனில் இயேசுவைப் பொறுத்த மட்டல் சிலுவை மரணம் தான் அவர் அடைய ஆசைப்பட்ட, அடைந்த வெற்றி.

ஒரு தமிழ் ஆசிரியர் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.

"பிறப்பு, இறப்பு, இரண்டில் எது மகிழ்ச்சி தரும் வார்த்தை?"

வரிசையாக மாணவர்கள் 'பிறப்பு'
என்று சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

 ஒரு மாணவன் மட்டும் 'இறப்பு' என்றான்.

 ஆசிரியர், "எப்படி? என்று கேட்டார்.

 " பிறப்பு உயிர்மெய்யில் (ப் + இ) ஆரம்பிக்கிறது.

இறப்பு உயிரில் ஆரம்பிக்கிறது.

இறக்கும்போது மெய்யை விட்டு உயிர பிரிகிறது.

மெய் மண்ணுக்குள் போய்விடுகிறது.

 ஆனால் உயிர் உயிரோடு
 தான் இருக்கிறது. 
 
(ப்+இ)றப்பு, இறப்பு ஆக மாறிவிடுகிறது.

உயிரோடு இருக்கும் உயிர்  இறைவனோடு இணைய விண்ணுக்குப் போகிறது.

உயிர் விண்ணுக்குப் போக காரணமாய் இருப்பது இறப்பு தானே!

ஆகவே அதுதான் மகிழ்ச்சி தரும் வார்த்தை."

  இயேசுவைப் பொறுத்தமட்டில்

 ஓநாய்கள் போல் செயல்பட்ட பரிசேயர்கள் கையால் அவர்
 பலியாக்கப்பட்டதுதான் அவருக்கு வெற்றி.

அப்போஸ்தலர்களை நற்செய்தியை அறிவிக்க அனுப்பும் போது 

 ஓநாய்கள்களாக செயல்பட்ட மன்னர்களால் அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.

இயேசு தனக்காக  அவர்கள்  உயிரை கொடுப்பதற்காகத்தான் அவர்களை அனுப்பினார்.

வேத சாட்சிகளின் இரத்தத்தால்தான் திருச்சபை வளர்ந்தது.

இயேசு என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அவர் பாடுபட்டு மரித்த சிலுவை மரம்தான்.

இயேசுவின் சீடன் என்றவுடன் ஞாபகத்திற்கு வருவது அவன் சுமந்து செல்லவேண்டிய சிலுவைதான்.

ஆனாலும் சிலுவை என்ற உடன் நமக்கு ஞாபகத்திற்கு வர வேண்டியது நித்திய பேரின்ப வாழ்வு.

ஏனெனில் இயேசு சிலுவையில் மரித்ததற்கும், நாம் சிலுவையை சுமந்துகொண்டு போவதற்கும் ஒரே காரணம் நாம் நித்திய காலம் அனுபவிக்கவிருக்கும் நித்திய பேரின்பம் தான்.

இயேசு மண்ணிற்கு வந்தது பாடுகள் பட்டு சிலுவையில் மரணமடைவதற்குத்தான்.

ஆனால் சிலுவையில் மரணமடைந்தது நம்மை நித்திய பேரின்ப வாழ்வுக்கு அழைத்துச் செல்வதற்காக தான்.

இறைவன் நாம் எப்போதும் சிலுவையை சுமந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்மை படைக்கவில்லை.

அவரை அறிந்து, நேசித்து, சேவித்து நித்திய பேரின்ப வாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே நம்மை படைத்தார்.

எப்படி பிரசவ வேதனைக்குப் பின் பிள்ளை பிறக்கிறதோ,

 அதுபோல 

சிலுவைக்குப் பின் நித்திய பேரின்ப வாழ்வு தொடர்கிறது.

இயேசுவுக்காக வேத சாட்சிகளாக மரித்த அத்தனை பேரும் இப்போது விண்ணகத்தில் அவரோடு பேரின்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது   நம்மை அனுப்பியிருப்பது ஓநாய்களுக்கு உணவாக மாறுவதற்கு அல்ல,

விண்ணகப் பேரரசைப் பரிசாகப் பெறுவதற்காகத்தான்.

நமக்கு முன் பிறந்து அவர்களது சிலுவையைச் சுமந்து மரித்த அத்தனை பேரும் நம்மை வரவேற்பதற்காக மோட்ச வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே  நம்மைக் கடிப்பதற்காக நம்மைச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும்  ஓநாய்களைப் பார்த்து  பயப்பட வேண்டாம்.

அதிகபட்சம் நமது உடலை அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்,

ஆனால் விண்ணக வாழ்விற்காக காத்துக் கொண்டிருக்கும் நமது ஆன்மாவை அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது.

நம்மால் சுமக்க முடியாத பெரிய சிலுவையை இயேசு அனுமதிக்க மாட்டார்.

வருகின்ற சிலுவையை பொறுமையுடன் ஏற்போம்.

'வரவிருக்கும் நிலை வாழ்வை நினைத்து மகிழ்ச்சி அடைவோம்.

லூர்து செல்வம்.

" வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்" (லூக். 9:59)

" வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்" என, அவன், "ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்" (லூக். 9:59)

ஒருவன் அவனாகவே இயேசுவிடம் வந்து,

 "நான் உம்மைப் பின்பற்ற வருகிறேன்" என்று சொன்னான்.

 இயேசு தனது வாழ்வின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லி அவனது விருப்பத்தை மறுத்துவிட்டார்.

ஆனால் இயேசு,

வேறொருவனை நோக்கி, "என்னைப் பின்செல்"  என்றார்.

ஆனால் அவன் உடனே வராமல் இருப்பதற்கு குடும்பத்தில் தனது கடமையை சுட்டிக் காட்டி சாக்கு போக்கு சொல்கிறான்.

"ஆண்டவரே, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர விடைகொடும்" என்றான்.

ஆனால் இயேசு,

"இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" என்றார்.

அவனது சாக்கு போக்கை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இயேசுவால் அழைக்கப்பட்டவனுக்கு அழைப்புதான் உயிர்.

அவனது குடும்பத்தில் மற்றவர்கள் அழைக்கப்படவில்லை.
ஆகவே அழைப்பு இல்லாதவர்கள்.

ஆகவே அடக்க வேலையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அழைப்பு இல்லாதவர்கள் அழைப்பு இல்லாதவர்களை கவனித்துக் கொள்வார்கள்.

 அழைக்கப்பட்டவர்கள் இறைவனது பணியை மட்டும் முழுநேர பணியாகச் செய்ய வேண்டும்.


ஆகவேதான் ஆண்டவர் சொன்னார்,

"இறந்தோர் தங்கள் இறந்தோரை அடக்கம் செய்துகொள்ளட்டும். நீ போய் கடவுளுடைய அரசை அறிவி."

தேவ அழைத்தல் பெற்றவர்கள் குடும்பத்தில் உள்ள ஆன்மீகம் சாராத கடமைகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படுகிறார்கள். 

அவர்களுக்கு இறையரசை அறிவிப்பது மட்டுமே முழுநேர வேலை.

தாங்கள் பிறந்த குடும்ப விவகாரங்களில் தலையிடுவது அல்ல.

அழைக்கப்பட்டவர்கள் 

ஆன்மீக விஷயங்களில் மற்றவர்களுக்கு  சேவை செய்வது போலவே தாங்கள் பிறந்த குடும்பத்திற்கும்  செய்வார்கள்.

ஆனால் ஆன்மீகம் சாராத பண வரவு செலவு, நிர்வாகம் போன்ற காரியங்களில் அழைக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் தலையிட மாட்டார்கள்.

தங்களது உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைப் பணிக்காக கொடுத்தவர்களால்

அவர்கள் பிறந்த குடும்பத்திற்கு நிறைந்த இறை ஆசீர் இருக்கும்.

இயேசு அவர்களுக்கு சொல்வதெல்லாம்,

'நீ போய் கடவுளுடைய அரசை அறிவி" 

என்பதை மட்டும்தான்.

அவர்கள் இறையரசை பரப்பும் பணியில் முழு நேரமும் ஈடுபடும்போது 

அவர்களை பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும்  இறைவன் கவனித்துக்கொள்வார்.

அவர்களின் ஆன்மீகம் சாராத விஷயங்களில் தலையிடாதிருப்பதே அவர்களுக்கு பெரிய ஆசீர்வாதம்.

இன்னொருவன்,

 "ஆண்டவரே, உம்மைப் பின்செல்வேன்: ஆனால் முதலில் வீட்டில் சொல்லிவிட்டுவர விடைதாரும்" என்றான்.

62 இயேசுவோ அவனை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவன் எவனும் கடவுளின் அரசிற்குத் தகுதியற்றவன்" என்றார்

இன்னொருவன் ஆண்டவரின்  அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

 ஆனால் வீட்டில் உள்ளவர்களின் அனுமதியை பெற்ற பின்பு வருவேன் என்கிறான்.

ஆனால் அப்படிப்பட்டவன் இறை அரசுக்கு தகுதி அற்றவன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

அழைத்திருப்பவர் ஆண்டவர்.
உடனே கீழ்ப்படிய வேண்டியது அழைக்கப்பட்டவனின் கடமை.

வீட்டில் உள்ளவர்களின் அனுமதியை பெற்றபின் வருவேன் என்றால் அவர்களை ஆண்டவரை விட மேலானவர்களாக கருதுகிறான் என்பது பொருள்.

இது ஆண்டவரை அவமதிப்பது போலாகும்.

இன்று வாசித்த வசனங்களில் அழைக்கப்பட்ட இருவரும் தங்கள் வீட்டில் உள்ளவர்களை காரணம் காண்பித்து தங்களுடைய அழைப்பை நிறைவேற்றுவதைத் தாமதப் படுத்துகிறார்கள்.

முதலாமவன் இறந்த தந்தையை அடக்கம் செய்துவிட்டு வருகிறேன் என்கிறான்.

 இரண்டாமவன் வீட்டில் சொல்லிவிட்டு வருகிறேன் என்கிறான்.

 இருவருமே அழைப்பை மறுக்க வில்லை,

 ஆனால் தாமதப் படுத்துகிறார்கள். அதற்கு அவரவர் குடும்பங்களையே காரணமாக காண்பிக்கிறார்கள்.

 இதிலிருந்து இயேசு ஏதோ ஒரு முக்கிய செய்தியை சொ.ல்ல விரும்புகிறார் போல் தோன்றுகிறது.

குடும்ப அமைப்பை படைத்தவர் இறைவன்.

தனது முழு நேர பணிக்கு வேண்டியவர்களை குடும்பங்களிலிருந்துதான் ஆண்டவர் அழைக்கிறார்.

அவர்கள் தங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கும், ஏற்ற பின் அதன்படி வாழ்வதற்கும்

 குடும்பங்கள் எந்த விதத்திலும் தடங்கலாக இருந்துவிடக்கூடாது.

பெற்றோர் பிள்ளைகளை வளர்க்கும்போது அவர்களை இறைப்பணிக்கு ஏற்றவர்களாக வளர்க்க வேண்டும்.

இல்லறவாழ்க்கை வழியாகவும் துறவற வாழ்க்கை வழியாகவும் இறைப்பணி செய்யலாம்.

இரண்டுவித பணிகளுக்கும் தகுதி ஒன்றே, இறையரசை அறிவிப்பதில் உள்ள ஆர்வம்.

இந்த ஆர்வத்தை ஊட்டியே பிள்ளைகளை வளர்க்க வேண்டும்.

துறவற வாழ்க்கை வழியே இறைப்பணி ஆற்ற அழைக்கப்பட்டால் பிள்ளைகள் அதை உடனே ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அழைக்கப்பட்டவர்களை உடனே அனுப்ப குடும்பத்தினருக்கு மனப்பக்குவம் இருக்க வேண்டும்.

தேவ அழைத்தலை ஏற்றுக்கொண்டவர்கள் அதன்பின் அவர்கள் பிறந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் அல்ல.

திருச்சபை என்னும் பொதுக் குடும்பத்தை சார்ந்தவர்கள். 

தேவ அழைத்தலை ஏற்றவர்கள் திருச்சபையின் அனைத்து உறுப்பினர்களுக்காகவும் உழைக்க வேண்டியவர்கள், தாங்கள் பிறந்த வீட்டிற்காக அல்ல.

அவர்களது பணி ஆன்மீகப் பணி மட்டுமே, பொருளாதார பணி அல்ல. அதாவது சம்பளத்திற்காக உழைக்கும் பணி அல்ல.

தாய்த் திருச்சபை அவர்களுக்கு அளிக்கும் பொருளாதாரம் ஆன்மீக பணிக்காக மட்டுமே பயன்படுத்த பட வேண்டும்.

அவர்கள் பிறந்த குடும்பத்தினர் அவர்களிடமிருந்து ஆன்மீக சேவையை மட்டுமே பெறலாம்.

 பொருளாதார உதவி எதையும் எதிர்பார்க்க கூடாது.

ஏனெனில் அவர்கள் உழைப்பது இறைவனுக்காக மட்டுமே.

ஆன்மாக்களை இறைவனுக்காக ஈட்டுவது மட்டுமே அவர்களுடைய பணி, பொருளை அல்ல.

தங்கள் பிள்ளைகளிடமிருந்து ஜெபம் மூலமாக ஆன்மிக உதவி எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம்.

குருக்களின் நலனுக்காக செபிக்க வேண்டியது குடும்பங்களின் கடமை.

லூர்து செல்வம்.

Monday, September 27, 2021

"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (லூக்.9:58 )

"இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை" (லூக்.9:58 )

இயேசுவின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட ஒருவன் அவரிடம் வந்து,

"நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்" என்றான்.

அப்போஸ்தலர்கள் எப்போதும் அவரோடு இருப்பதைப் பார்த்திருப்பான்.

அவனுக்கும் அதைப்போல் இருக்க ஆசை வந்திருக்கும்.

இயேசு அவனுடைய ஆசையை ஏற்றுக் கொள்ளவில்லை.

எப்போதும் அவரோடு இருப்பது எவ்வளவு கடினம் என்பதை அவனுக்குப் புரியவைப்பதற்காக இயேசு 

"நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை"  என்றார்


இந்த உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்து ஆள்பவர் அவரே.

 அனைத்தும் அவருக்கே சொந்தம்.

 ஆயினும் முழுநேரமாக இறைப்பணி ஆற்ற அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக அவரே வாழ்ந்து காண்பித்தார்.

நாசரேத்தூரில் சூசையப்பருக்கும், மரியாளுக்கும் சொந்தமாக வீடு இருந்தும்,

தான் பிறப்பதற்கு பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவைத் தேர்ந்தெடுத்தார்.

பொதுவாழ்க்கைக்கு வந்த பின் நற்செய்தி அறிவிப்பதற்காக பயணித்துக் கொண்டேயிருந்தார்.

தங்குவதற்கு சொந்தமாக ஒரு இடம் கூட இல்லை.

பகலில் நற்செய்தி அறிவித்துவிட்டு இரவில் தனிமையில் செபித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய சீடர்களும் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின் தொடர்ந்தனர்.

முழுநேர நற்செய்திப் பணியாளர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு இயேசுவும் அவரைப் பின்பற்றிய சீடர்களும் முன்னுதாரணம்.

இறை ஊழியத்திற்கென்றே தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு

இவ்வுலகப் பொருட்கள் மீது கொஞ்சம் கூட பற்று இருக்கக் கூடாது.

இறைவனை முழுமையாக சொந்தம் ஆக்கிக் கொண்டவர்களுக்கு

இறைவனைத் தவிர எந்த பொருள் மீதும் சிறிதுகூட பற்று இருக்காது.

இப்போது கேட்கலாம்:

ஞானஸ்நானம் பெற்ற எல்லோருமே இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்கள் தானே,

எந்த விதத்தில் அர்ப்பண ஊழியர்கள் சாதாரண விசுவாசிகளிடமிருந்து வித்தியாசமானவர்கள்?

உண்மைதான், 
எல்லோருமே இறைவனை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும்.

இருதயத்தை முழுமையாக இறைவனுக்கு அர்ப்பணித்த பிற்பாடு மற்ற யாருக்கும், எதற்கும் அதில் இடமில்லை.

இதுவும் எல்லோருக்கும் பொதுவானதுதான்.

ஒரு சிறிய ஒப்புமை:

இரண்டு பேருக்குக் காய்ச்சல் இருக்கிறது.

ஒருவனுக்கு 99 degree F.
அடுத்தவனுக்கு 101degree F.

இருவருக்கும் காய்ச்சல்தான். ஆனால் அளவில் வித்தியாசம் இருக்கிறது.

அதேபோல் எல்லோருமே தங்கள் வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

ஆனால் பொது நிலையினரின் அர்ப்பண அளவை விட

அழைக்கப்பட்டோரின்  அர்ப்பணத்தின் அளவு அதிகமானதாக இருக்கும்.

அழைக்கப்பட்டவர்களில் கூட

 அன்னை மரியாள் அருள் நிறைந்தவள்.

 மற்ற புனிதர்கள் அருள் மிகுந்தவர்கள்தான்.

 மிகுதி அளவிலும் ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கும்.

இறைவன் தம்மை முழுமையாக நேசிப்பதற்காக நம்மைப் படைத்து  இந்த உலகத்தில் விட்டிருக்கிறார்.

இறைவனைத்தான் முழுமையாக நேசிக்க வேண்டும். இந்த உலகத்தை அல்ல.

ஆனாலும், நாம் இந்த உலகத்தைப் பயன்படுத்த வேண்டும், நமது திருப்திக்காக அல்ல, இறைவனது மகிமைக்காக.

நாம் இந்த உலகில் வாழ்வது இதன் மீது உள்ள பற்றினால் அல்ல. இறைவனது மகிமைக்காக.

இறைவன்மீது இருக்கவேண்டிய பற்று நூறு சதவீதம் என்றால்,

உலகின் மீது இருக்கவேண்டிய பற்று 0 சதவீதம்.

முழுநேர இறை ஊழியன் முழுக்க
முழுக்க இறைவன்மீது மட்டுமே பற்று கொண்டுருக்க வேண்டும்.

 'உலக பொருட்களின் மீது பற்று இல்லாமல் அவற்றை ஆண்டவருக்காக பயன்படுத்த வேண்டும்.

வங்கி ஊழியருக்கு வங்கி பணத்தின் மீது பற்று இருக்கலாமா?

அது போல. 

உலகத்தை இறை ஊழியத்திற்காகப்  பயன்படுத்த வேண்டும், தான் அனுபவிப்பதற்காக அல்ல.

ஆனாலும் மனிதன் குறைவுள்ளவன்.

குறைவுடைமை (Imperfection) காரணமாக ஆளுக்கு ஆள் பற்று சதவீத அளவு மாறுகிறது.

உலகத்தின் மீது உள்ள பற்றின் சதவீத அளவு கூடக் கூட இறைவன்மீது உள்ள பற்றின் சதவீத அளவு குறைந்து கொண்டே வரும்.

உலகத்தின் மீது முழுமையான பற்று உள்ளவன் இறைவனை முற்றிலும் மறந்து விடுவான்.

இறைவன்மீது முழுமையான பற்று உள்ளவன் உலகத்தைப் பற்றி சிறிதுகூட கவலைப் பட மாட்டான்.
 
முழுமையான அர்ப்பண உணர்வு உள்ளவன் தன்னிடம் உள்ள உலகப் பொருள்கள் அனைத்தும் கைவிட்டு போனாலும் கவலைப்பட மாட்டான்.

இறைவனது மகிமைக்காக பயன்படுத்தவே அந்த பொருட்களை அவன் வைத்திருந்தாலும் 

இறைவன் அவற்றை முழுமையாக அவனிடமிருந்து அப்புறப்படுத்தி விட்டால் 

அந்த இழப்பையும் இறைவனுடைய  மகிமைக்காக ஏற்றுக் கொள்வான்.

தன்னை முழுவதும் இறை பணிக்காக அர்ப்பணித்தவனுக்கு இத்தகைய மனப்பக்குவம் இருக்கும்.

இயேசுவின் நற்செய்தியை கேட்டு அநேகர்  அவருடைய சீடர்களாக இருந்தாலும் 12  பேரைத்தான் முழுநேர ஊழியர்களாக தேர்ந்தெடுத்தார்.


ஒருவன் அவனாக வந்து

"நீர் எங்குச் சென்றாலும் நானும் உம்மைப் பின்செல்வேன்"

என்று சொன்னபோதும் இயேசு அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இயேசு அவனை நோக்கி, "நரிகளுக்கு வளைகள் உண்டு. மனுமகனுக்கோ தலைசாய்க்கவும் இடமில்லை"

என்று கூறி தன்னுடன் வந்தால் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை விளங்க வைத்தார்.

 தனக்காக கஷ்டங்களை அனுபவிக்க முடிந்தவர்களைத்தான் அவரது பணிக்கு அழைக்கிறார்.

அழைக்கப்பட்டவர்கள் தங்களுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்காகவே செலவழிக்கிறார்கள்.

 அவருடைய அழைப்பை ஏற்று வசதியாக வாழ்க்கையை விட்டு வந்தவர்கள் அவருக்காக வசதிகள் அற்ற, இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

அவர்களது அர்ப்பண வாழ்வின் நோக்கம்வெற்றிபெற இறைவனை வேண்டுவோம்.

வாழ்க குருத்துவம்!

லூர்து செல்வம்.

Sunday, September 26, 2021

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்." (மாற்கு9:43,44)

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு. இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்." (மாற்கு9:43,44)

"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ,

 அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்.

 உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு.

 இரண்டு கைகளோடு நரகத்திற்கு, அணையாத நெருப்பிற்குப் போவதைவிடக் 

கை ஊனாய் வாழ்வில் நுழைவது உனக்கு நலம்."

பாவம் பற்றி நம் ஆண்டவரின் அறிவுரைகள்.

1. நாம் பாவம் செய்யக் கூடாது.

2.பிறர் பாவம் செய்ய நாம் காரணமாய் இருக்கக் கூடாது.

3.நம்மை பாவம் செய்ய 
தூண்டுவோருடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது.


1. நாம் இறையன்பு, பிறரன்பு சார்ந்த கட்டளைகளைக் கண்டிப்புடன் கடைப் பிடிக்க வேண்டும்.

உடன்பாடும், எதிர்மறையும் சேர்ந்து இருக்காது.

அன்பு சார்ந்த கட்டளைகளுடன் நாம் உடன்பாட்டுடன் இருந்தால் எதிர்மறையான பாவம் நம்மை எட்டிக் கூடப் பார்க்காது.

நாம் இறைவனின் அன்பு கட்டளைகளின்படி வாழ்ந்தால், நம்மை சார்ந்து வாழ்பவர்களும் நம்மைப் பின்பற்றிக் கட்டளைகளின்படியே வாழ்வார்கள்

கட்டளைகளின்படி வாழ்பவன் தனது வாழ்க்கை மூலம் மற்றவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றான்.

வார்த்தையை விட வாழ்க்கைக்கு சக்தி அதிகம்.

இயேசு நற்செய்தியை வாழ்க்கை மூலமும், வார்த்தை மூலமும் அறிவித்தார்.

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர்"  என்ற நற்செய்தியைத் தனது ஏழ்மையான வாழ்க்கையின் மூலமும்  அறிவித்தார்.

சென்ற இடமெல்லாம் நோயாளிகளின் நோய்களை குணமாக்கும் மூலம் பிறரன்பு நற்செய்தியை அறிவித்தார்.

சிலுவையில் தொங்கும்போது தன்னை கொன்றவர்களை மன்னித்தன் மூலம்

' தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் "
 என்ற நற்செய்தியை அறிவித்தார்.

"உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.

15 மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்: மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.

16 அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக." (மத்.5:14-16)

இந்த வார்த்தைகளின் மூலம் நமது நற்செயல்கள் நிறைந்த வாழ்வு மற்றவர்களுக்கு ஒளிபோல் பயன்படவேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

2.முன்மாதிரியான வாழ்க்கையை பாராட்டும் இயேசு,

மற்றவர்களுக்கு இடறலாக வாழ்பவர்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறார்.


"என்னை விசுவசிக்கும் இச்சிறுவருள் ஒருவனுக்கு இடறலாய் இருப்பவன் எவனோ,

 அவனுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளுவது அவனுக்கு நலம்."

பிறருக்கு துர்மாதிரிகையாய் வாழ்பவன் வாழத் தகுதி அற்றவன்.

சில பெற்றோர் தங்களது பிள்ளைகளது நடத்தையைப் பற்றி குறை கூறுவதை கேட்டிருக்கிறோம்.

அவர்கள் முதலில் தங்களது நடத்தையைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

 பிள்ளைகளது வேண்டாத நடத்தைக்கு அவர்கள்தான் காரணம் என்பது புரியும்.

 தங்களிடையே ஒற்றுமை இல்லாது சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு சமாதானமான பிள்ளைகள் பிறக்காது.

பெற்றோரை போல்தான் பிள்ளைகள் இருக்கும்.

பிள்ளைகள் கெட காரணமாய் இருக்கும் பெற்றவர்களை  

அவர்களுடைய கழுத்தில் பெரிய எந்திரக்கல்லைக் கட்டிக் கடலில் தள்ளினாலும் தகும்!

3.மற்றவர்களுக்கு இடறலாக வாழ்பவர்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பது போலவே

.
தங்களுக்கு  இடறலாக இருப்பவர்களோடு தொடர்பில் இருப்பதையும் இயேசு கண்டிக்கிறார்.

சிலர் தாங்கள் பாவம் செய்ய தூண்டுபவர்களைத் தங்களது நெருங்கிய நண்பர்களாக வைத்திருப்பார்கள்.

"உன் கை உனக்கு இடறலாய் இருந்தால் அதை வெட்டிவிடு."

என்று இயேசு கூறுகிறார்.

நாம் பாவம் செய்ய தூண்டுபவர்களோடு உள்ள தொடர்பைத் துண்டித்துக் கொண்டால்தான் நாம் பாவத்தில் இருந்து தப்பிக்க முடியும்.


குடிகாரர்களோடு சேர்ந்து குடிப்பவன் அவர்களோடு சேராமல் இருந்தால்தான் குடியிலிருந்து தப்பிக்க முடியும்.

பாவம் செய்யத் தூண்டுபவன் நண்பன் மட்டுமல்ல,

  சந்தர்ப்பம், பொருட்கள், இட ங்கள், சூழ்நிலைகள் ஆகியவையும் நாம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கலாம்.
அவற்றையும் தவிர்க்க வேண்டும்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும். 

சிலருக்கு சினிமா தியேட்டர்களில் பாவம் காத்துக்கொண்டிருக்கும்.

 பொழுது போக்கிற்காக சினிமா பார்க்க செல்வார்கள். 

ஆனால் சினிமா தயாரிப்பாளர்களும், திரையிடுபவர்களும்  வியாபாரத்திற்காக செயல்படுபவர்கள்.

கீழ்த்தர ரசனைக்காக தயாரிக்கப்பட்ட படங்கள்  திரையிடப்பட்டால் வியாபாரிகளுக்கு பணம் பிரியும்.

பார்ப்பவர்கள் மனதில் பாவம் குவியும்.

Cell phoneபோன்ற சமூக தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவோர் கவனமாக இல்லாவிட்டால் பாவக் கடலில் மூழ்க நேரிடும்.

"எனது சூழ்நிலை என்னை கெடுத்து விட்டது" என்று சூழ்நிலை மீது பழியை போடுபவர்கள்

அதிலிருந்து நல்ல சூழ்நிலைக்கு மாறிக் கொள்ள வேண்டும்.

பிறருக்குத் துர்மாதிரிகையாய்  இருக்கக்கூடாது.

துர்மாதிரிகையாய் இருப்பவர்களிடம் சேரக்கூடாது.

கட்டளைகளைக் கடைப்பிடித்து நல்லவர்களாய் வாழ்வோம்.

 மற்றவர்களையும் நல்லவர்களாய் வாழவைப்போம்.

எல்லோரும் விண்ணரசை நோக்கி பயணிப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, September 25, 2021

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."(லூக்.9:23)

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்."
(லூக்.9:23)

 இயேசு முதன் முதல் சீடர்களை அழைக்கும்போது அவர் பயன்படுத்தியது இரண்டே வார்த்தைகள்,

"என்னைப் பின்செல்."

அவர்களும் மறுபேச்சின்றி தங்களுக்குரிய யாவற்றையும் விட்டுவிட்டு அவரை பின் சென்றார்கள்.

அவரைப் பின் சென்றால் தாங்கள் என்ன ஆவோம் என்று அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆனாலும் சொன்ன சொல்லுக்கு உடனே  கீழ்படிந்தார்கள்.

அக்காலத்தில் மெசியாவை பற்றி தவறான கருத்து ஒன்று நிலவி வந்தது.

அவர் யூதர்களுக்கு  
 உரோமையர்களிமிருந்து அரசியல் ரீதியான விடுதலை வாங்கித் தருவார், 

தனி யூத இராட்சியத்தை ஏற்படுத்துவார் என்று சிலர் நம்பினார்கள்.

ஒருவேளை அதில் தங்களுக்கு ஏதாவது உயர்ந்த பதவி கிடைக்கும் என்று நம்பி கூட அவரை பின்பற்றியிருக்கலாம்.

ஆனால் நாள் ஆக ஆக இயேசுவுக்கு அரசியல் ரீதியான எந்த நோக்கமும் இல்லை என்பது தெரிந்து விட்டது.

ஒரு நாள் இயேசு  அவர்களிடம் தனது வாழ்க்கையின் நோக்கத்தை கூறியதோடு 

அவர்கள் எப்படி தன்னை பின்பற்ற வேண்டும் என்பதையும் விளக்கினார்.

"மனுமகன் பாடுகள் பல படவும். மூப்பராலும் தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டு, கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று சொன்னார்."

 தான்  உலகிற்கு வந்திருப்பதன் நோக்கத்தைக் கூறினார். 

பாடுகள் பல பட வேண்டும்.

தலைமைக்குருக்களாலும் மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட வேண்டும்,

அவர்களால் கொலை செய்யப்பட வேண்டும்,

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும்

 என்று சொன்னார்.

அவர் சொன்னது அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் நற்செய்தியை போதிப்பது ஒரு நாள் கொல்லப் படுவதற்காகத்தான் என்று சொன்னால் அது அவர்களுக்கு எப்படிப் புரியும்?

இயேசு அதோடு நிற்கவில்லை.

 தன்னை பின்பற்றுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொன்னார்.


அவரைப் பின்செல்ல விரும்புகிறவர்கள்

, தங்களையே மறுக்க வேண்டும்.

 தங்கள் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு அவரைப் பின்பற்றவேண்டும்.

இதுவும் அவர்களுக்கு புரிந்திருக்காது.

தானும் கஷ்டப்பட வேண்டும்,
தன்னை பின்பற்றுகிறவர்களும் 
கஷ்டப்பட வேண்டும் என்று சொன்னால் எப்படி புரியும்.

ஆனாலும் தங்களுக்கு புரியாதது பற்றி அவர்கள் அவரிடம் விளக்கம் எதுவும் கேட்கவில்லை.

அதற்காக அப்போது அவரை விட்டு போகவும் இல்லை.

பெரிய வியாழன் இரவில் இயேசுவை அவரது விரோதிகள் கைது செய்தபோது அவரது சீடர்கள் 
 ஓடிப்போனது என்னவோ உண்மைதான்.

ஆனால் அவரைக் கைவிட்டு போகவில்லை.

அவர் மரித்து அடக்கம் செய்யப்பட்ட பின்பும் அவரைத்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இயேசு நினைத்திருந்தால் அவர்களுக்கு எல்லாவற்றையும் புரிய வைத்திருக்க முடியும்.

ஆயினும் பரிசுத்த ஆவியின் வருகை வரை அவர்களை அப்படியே விட்டுவிட்டார்.

அவர் இராயப்பர் மீது கட்டிய திருச்சபையை இயங்கப் போவது

 சீடர்களின் திறமையினால் அல்ல,

 பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான் 

என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாக இருந்திருக்க வேண்டும். 

இப்போதும் திருச்சபை இயங்கிக் கொண்டிருப்பது நம்முடைய திறமையால் அல்ல,

பரிசுத்த ஆவியின் வல்லமையால் தான்.

நாம் செயல்பட வேண்டியது அன்று இயேசு சீடர்களுக்குக் கொடுத்த அறிவுரையின்படி தான்.


நம்மை நாமே மறுக்க வேண்டும்..

தினமும் நமது சிலுவையை சுமந்து கொண்டு இயேசுவின் பின் செல்ல வேண்டும்,

இயேசுவைப் போலவே பாடுகள் பல படவேண்டும். 

நம்மை ஆள்பவர்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்,

 அவர்களால் கொலை செய்யப்பட வேண்டும்.

இவ்வளவும் நடந்தபின்பு உலக முடிவில்     உயிர்த்தெழ வேண்டும்.

கிறிஸ்தவர்கள்   என்ற முறையில்  நாம் பட்டுக் கொண்டிருக்கும் 

 அவமானங்களும், கஷ்டங்களும் இயேசுவின் விருப்பப்படிதான் நடக்கின்றன.

இயேசுவின் விருப்பப்படி நடப்பவற்றை பார்த்து உண்மையில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

இயேசுவை நமது மீட்பராக ஏற்றுக்கொள்கிறோம்.

 மீட்பின் பாதையில் நாம் அவரது 
அருள்வர உதவியால் நடக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம்.

 ஆனால் நமது மீட்பர் கொடுக்கும் 
வழிகாட்டுதலின்படி நடக்க மறுக்கிறோம்.

வழிகாட்டுபவர் காட்டும் திசைக்கு எதிர்த்திசையில் நடந்தால் எப்படி போக வேண்டிய இடத்திற்குப் போக முடியும்?

சிலுவை வரும்போது பயந்து ஓடுபவன் எப்படி தன்னை இயேசுவின் சீடன் என்று சொல்ல முடியும்?


Tailorடம் போய், 

"புதிதாக துணி வாங்கி வந்துள்ளேன். அதைக் கிழிக்காமல், ஊசி படாமல் சட்டையாய் தை"

 என்று சொன்னால் அவன் சிரிக்க மாட்டான்?


"புதிதாக தங்கம் வாங்கி வந்துள்ளேன். அதை உருக்காமல், சுத்தியால் அடிக்காமல் நகை செய் " என்று சொன்னால் ஆசாரிக்குச் சிரிப்பு வராது?

ஏர் படாமல், மண்வெட்டியால் வெட்டாமல் எப்படி விபசாயம் செய்ய முடியும்?

சைக்கிள் புதிது, மிதிக்காமல் ஓட்டு என்று சொன்னால் ஓட்டுபவன் என்ன சொல்வான்?

"சிலுவை எதையும் தராமல், மீட்பை மட்டும் தாரும்." என்று நாம் சொன்னால் இயேசு என்ன சொல்வார்?


"உங்களுக்கு மீட்பு தருவதற்காகத்தான் சிலுவையை சுமந்து அதில் மரிக்கும்படி

 நானே விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தேன்.

 உங்கள் மீட்புக்காக நீங்கள் சிலுவையைச்  சுமக்கக் கூடாதா?"
என்று கேட்பார்.

நாம் நித்திய காலம் பேரின்பத்தில் வாழ்வதற்காக கொஞ்ச நாள் சிலுவையைச் சுமக்கக் கூடாதா?

ஒரு தகப்பனார் தன் பையனுக்கு 
Admission போடுவதற்காக அவனை ஒரு பள்ளிக்கூடத்திற்கு கூட்டி வந்தார்.

தலைமை ஆசிரியரிடம்,

"சார், இவன் எங்களுக்கு ஒரே பிள்ளை. தவமிருந்து பெற்ற பிள்ளை. வீட்டில் மிக செல்லமாக வளர்க்கிறோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் யாரும் இவனை அடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்."

"இதற்கு முன் எங்கேயாவது படித்திருக்கிறானா?"

"ஆம் சார். ஆனால் பாடம் படிக்காமல் போனால் வாத்தியார் அடிக்கார்னு பள்ளிக்கு போக மாட்டேன் என்று விட்டான். அங்கிருந்து T.C வாங்கிக் கொண்டு வந்து விட்டோம்."

"T.C யைப் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்."

"இங்கே Admission?''

"இங்கே Admission போட்டால் திரும்பவும் T.C எழுத வேண்டியிருக்கும். இங்கேயும் படிக்காமல் வந்தால் வாத்தியார் அடிப்பார்."

தகப்பனார் எழுந்து போய்விட்டார்.
பையன் அதன் பிறகு படிக்கப் போகவேயில்லை.

என்ன ஆகியிருப்பான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

சிலுவையே சுமக்க முடியாது என்பவர்களுக்கும் இதே கதிதான்.

அப்போ நோய் வந்தால் குணமாக்கக் கூடாதா?

குணமாக்கலாம், ஆண்டவரே குணமாக்கியிருக்கிறாரே.

ஆன்ம வாழ்வுக்கு உடலின் உதவியும் தேவை.

உடலில் சீரான இயக்கத்தை நோய் பாதிக்கும். ஆன்மாவின் நலன் கருதி உடல் நோயைக் குணமாக்கலாம்.

ஆனால் வரும், நோயையும், அது குணமாகும் வரை அதனால் ஏற்படும் வலியையும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கலாமே!

நோய் மட்டுமா சிலுவை?

வாழ்க்கையில் எத்தனையே கஷ்டங்கள் உள்ளனவே. எல்லாம் சிலுவைகள்தான். 

எல்லாவற்றையும் ஆண்டவருக்காகப்  பொறுமையாய் தாங்கிக் கொள்ளலாமே!

நமது முயற்சிகளில் ஏற்படக்கூடிய தோல்விகள், 

உலக வாழ்வில் நாம் செய்யாத தவறுகளுக்குக் கிடைக்கும் தண்டனைகள்,

நாம் சந்திக்கும் அவமானங்கள்  

போன்ற எத்தனையோ சிலுவைகளை தினமும் சந்திக்கிறோம்.

பேருந்தில் உட்கார இடம் கிடைக்காமல் நின்றுகொண்டு பயணிப்பதே ஒரு சிலுவைதான்.

ருசி இல்லாத உணவை சாப்பிட வேண்டியிருப்பதே ஒரு சிலுவைதான்.

அநேக சமயங்களில் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் சிலுவையாகப் பயன்படுவார்கள்.

இதுபோன்ற நூற்றுக்கணக்கான சிலுவைகள் நம்மை தேடிவரும்.

அவற்றை ஆண்டவருக்காக சுமந்தாலே போதும்.

சிலுவை சிறியதோ, பெரியதோ ஆண்டவருக்காக தாங்கிக் கொண்டால் கிடைக்கும் விண்ணகப் பலன் பெரியதே.

சிலுவை இன்றி மகிமை இல்லை.
'
ஆண்டவர் சிலுவையைத் தேடி உலகிற்கு வந்தார்.

நாம் நம்மை தேடி வரும் சிலுவைகளை அனுபவித்தாலே போதும்.

விண்ணகத்தில மகிமை நமக்காக காத்திருக்கும்.

லூர்து செல்வம்.

Friday, September 24, 2021

'' ஒருநாள் இயேசு தனியே செபித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர்." (லூக்.9:18)

. '' ஒருநாள் இயேசு தனியே செபித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர்." (லூக்.9:18)


இந்த வசனத்தை வாசிக்கும் போது ஏதாவது மனதில் தோன்றுகிறதா?

வசனத்தின் முதல் பகுதியில் இயேசு தனியே செபித்துக் கொண்டிருந்தார் என்று இருக்கிறது.

இரண்டாவது பகுதியில் அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர் என்று இருக்கிறது.

வசனம் முடிந்து விடவில்லை. இவ்வாறு தொடர்கிறது.

"அவர் அவர்களை நோக்கி, "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்."

ஆக இயேசு ஒரே நேரத்தில் தனியாக செபித்துக் கொண்டிருக்கிறார், 

சீடர்களும் உடன் இருக்கிறார்கள்,

 அவர்களோடு பேசவும் செய்கிறார்.

வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இயேசு சீடர்களோடு பேசிக் கொண்டிருப்பது மட்டுமே தெரியும்.

இப்போது கேள்வி:

சீடர்களோடு பேசிக்கொண்டிருக்கும் இயேசு

 அதே நேரத்தில் எப்படி தந்தையோடு தனியே செபித்துக் கொண்டிருக்க முடியும்?

இயேசுவைப்பற்றிய இறையியல் உண்மை தெரிந்தவர்களுக்கு இந்த கேள்வி எழாது.

அந்த இறையியல் உண்மையைத் தியானிப்பதோடு நாம் அதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடத்தையும் தியானிக்க வேண்டும்.

இயேசு யார்?

இறைமகன்.

நித்திய காலமாய் 
தந்தை இறைவனோடு ஒன்றாக இருக்கும் ஒரே மகன்.

"நானும் தந்தையும் ஒன்றே."
(அரு. 10:30)

இந்த இணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. அவராலே கூட பிரிய முடியாது.

இறைமகன் மனுவுரு எடுத்தாலும்,

 மனித சுபாவத்தில் உலகத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்தாலும்

அவர் தந்தையோடு ஒன்றாகவே இருக்கிறார். 

தந்தையோடு மட்டுமல்ல பரிசுத்த ஆவியோடும் ஒன்றாகவே இருக்கிறார்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.

செபம் என்றால் என்ன?

இறைவனோடு இணைந்திருக்கும் நிலை.

இயேசு தேவ சுபாவமும், மனித சுபாவமும் உள்ள இறைமகன்.

 ஆகவே அவர் மனித சுபாவத்தில்  தனது சீடர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும்

தேவ சுபாவத்திற்கும், மனித சுபாவத்திற்கும் உரிய தேவ ஆளாகிய இறைமகன் தந்தையோடு தனியேதான் இருக்கிறார்.

பரிசுத்த தம திரித்துவத்தின் இரண்டாவது ஆளாகிய இறைமகனுக்கு 

சுபாவங்கள்  இரண்டு இருந்தாலும் ஆள் பிரிக்க முடியாத ஒரு தேவ ஆள்தான்.

ஆகவேதான் அன்னை மரியாள் இயேசுவின் மனித சுபாவத்தை பெற்றாலும், அந்த சுபாவம் பிரிக்கமுடியாத இறை மகனுக்கு உரியதாகையால் அவளை இறைவனின் தாய் என்கிறோம்.


 "இயேசு தனியே செபித்துக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய சீடரும் அவருடன் இருந்தனர்."

சீடர்களால்  தந்தை, மகனின் தனிமையில் குறுக்கிட முடியாது.

தந்தையும் மகனும் ஒன்றாக இருப்பது இயல்பு.

By nature Father and Son are one.

தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்தான்.

இப்போது யாரோ கேட்கிறார்கள், "தந்தையையும், மகனையும் பற்றி தியானிப்பதில் நமக்கு என்ன பயன்?

நமக்குதான் பயன், அவர்களுக்கு அல்ல.

நாம் கடவுளைப்பற்றி தியானிப்பதாலும்,

 அவரை நோக்கி செபிப்பதாலும் 

அவருக்கு எந்த கூடுதல் பயனும் இல்லை.


அவ நித்திய காலமும் 
நிறைவானவர்.

அவரது நிறைவைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது.

ஆனால் நாம் அளவு உள்ளவர்கள்.
நமது அளவைக் கூட்டவும் செய்யலாம், குறைக்கவும் செய்யலாம்.

ஆகவே இறைவனால் பயன் பெறுகிறவர்கள் நாம்தான்.

இறைவனைத் தியானிப்பதால் நமக்கு என்ன பயன்?

இறைவன் நம்மை அவரது சாயலில் படைத்து விட்டார்.

அவரது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 விலக்கப்பட்ட கனியைத் தின்றால் கடவுளைப் போல் ஆகி விடலாம் என்று  சாத்தான் ஏவாளிடம் கூறினான்.

 ஏவாள் சாத்தானிடம் என்ன கூறியிருக்க வேண்டும்?

"நான் ஏற்கனவே கடவுளின் சாயலில்தான் இருக்கிறேன். பழத்தைச் சாப்பிட்டால்தான்   அதற்கு பங்கம் ஏற்படும்."

ஆனால் அப்படி சொல்லாமல் ஏமாந்து போய் வாங்கி சாப்பிட்டாள்.

பாவமில்லாத சாயலை இழந்தாள்.

அதை மீட்க இறைவனே மனிதன் ஆக வேண்டியிருந்தது.

இறை மகனுக்கு மிகப் பெரிய ஆசை, நாமும் அவரது தந்தையைப் போல் ஆகிவிட வேண்டும் என்று!

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத். 5:48)


'நிறைவு' இறைவனுக்கு மட்டுமே உரிய பண்பு.

இதை படைப்புகளாகிய நாம் பெறவேண்டும் என்று இயேசு விரும்புவது அவரது தாராள குணம்.

நாம் தந்தையின் நிறைவை அடைவதற்கு ஒரு வழி இருக்கிறது.

நிறைவாக உள்ள தந்தையை நமது இதய சிம்மாசனத்தில் உட்கார வைத்து நாம் அவரோடு ஒன்றித்து விடுவதுதான்.

தந்தை இறைவன் எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.

நம்மோடு இருந்துதான் நம்மை பராமரித்து வருகிறார்.

நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவரை முழுமையான அன்புடன் ஏற்று, அவரோடு ஒன்றித்து இருப்பது.

தந்தையோடு  ஒன்றித்தால் நாம் எப்போதும் அவரது ஞாபகமாகவே இருப்போம்,

 அவர் நினைப்பதை நாமும் நினைப்போம்,

 அவர் ஆசைப்படுவதை நாமும் ஆசைப்படுவோம்,

 அவரது சித்தத்தை நிறைவேற்றுவோம்.

ஒரு குழந்தை அம்மா வீட்டில் இருக்கும்போது 

அது சுதந்திரமாக வீட்டில் விளையாடும்.

 அப்பப்போ அம்மாவை அழைக்கும்.

 அம்மா  குரல் கொடுத்தால் விளையாட்டை தொடரும்.

 அம்மாவின் குரல் கேட்காவிட்டால் அழ ஆரம்பித்துவிடும்.

 நமது விண்ணகத் தந்தையிடம் நாமும் இந்த குழந்தை போல்தான் நடந்து கொள்ள வேண்டும்.

நாம் எங்கு இருந்தாலும், என்ன செய்துகொண்டு இருந்தாலும், எப்படி இருந்தாலும் 

தந்தை நமது இதயத்தில் இருக்கிறார் எங்க உணர்வோடு இருக்க வேண்டும்.

ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் தந்தையை அழைக்க வேண்டும்.

அவர் உள்ளுணர்வுகள் (Inspirations) மூலம் நமக்குத் தனது ஆலோசனைகளை நல்குவார்.

நம்மைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும், என்ன நடந்தாலும், நாம் நம் தந்தையோடு தனியாக இருப்போம்.

என்ன பிரச்சனைகள் வந்தாலும், என்ன ஆபத்துக்கள் வந்தாலும் பயப்பட மாட்டோம்.

ஏனெனில் நமது இதயத்தில் வீற்றிருப்பவர் சர்வ வல்லவ கடவுள்.

'இயேசு இயல்பிலேயே (By nature) தந்தையோடு ஒன்றித்திருக்கிறார்.

நாம் தந்தையின் உதவியோடு அவரோடு ஒன்றித்திருக்க வேண்டும்.

பள்ளியில் மாணவர்கள் நடுவே பணிபுரிந்து கொண்டிருந்தாலும்,

அலுவலகத்தில் சக அலுவலர்களுடன் பணிபுரிந்து கொண்டிருந்தாலும்,

பயணிகளோடு பிரயாணம் செய்து கொண்டிருந்தாலும் 

நாம் இதயத் தனிமையில் தந்தையோடு பேசப் பழகிக் கொள்ள வேண்டும்.

இன்பமோ, துன்பமோ,

மகிழ்ச்சியோ, வருத்தமோ,

வெற்றியோ, தோல்வியோ

நமது ஞாபகத்தில் எழ வேண்டியது விண்ணகத் தந்தை மட்டுமே.

தந்தையோடு தனிமையில் வாழ்பவர்களுக்கு 
தனிமையே இல்லை. 

லூர்து செல்வம்.

Thursday, September 23, 2021

1.இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்க.2.நோயாளிகளைக் குணமாக்க..(தொடர்ச்சி

1.இறையரசைப்பற்றிச்   செய்தியை அறிவிக்க.
2.நோயாளிகளைக் குணமாக்க..
(தொடர்ச்சி)

இயேசுவின் சீடர்களாகிய நமக்கு அவர் தந்துள்ள மிக முக்கியமான பணி,

"இறையரசைப்பற்றிச்   செய்தியை அறிவித்தல்."

சடப்பொருளால் (Matter) ஆகிய உடலும், ஆவிபொருளால்(Spirit) ஆகிய ஆன்மாவும் சேர்ந்தவன்தான் மனிதன்.

நாம் வாழும் உலகம் ஒரு சடப்பொருள். மனிதனைப் படைப்பதற்கு முன்பே இறைவன் உலகத்தைப் படைத்துவிட்டார்.

பிறகு உலகத்திலிருந்து நமது உடலை உண்டாக்கி,    ஆன்மாவை நேரடியாகவே படைத்து, உடலோடு சேர்த்து மனிதனைப் படைத்தார்.

மனிதனின் இவ்வுலக வாழ்வின் முடிவில் உடல் மண்ணுக்கே திரும்பிவிடும்.

ஆன்மா இறைவன் வாழும் விண்ணுலகிற்குச் சென்றுவிடும்.

நமது உடல் மண்ணக அரசைச் சேர்ந்தது,

 ஆன்மா விண்ணக  அரசைச் சேர்ந்தது.

மண்ணரசு நிலையற்றது.
விண்ணரசு நிலையானது.

மனித ஆன்மா நிலையாக விண்ணரசில் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது.

விண்ணகத்தின் அரசர் இறைவன், ஆகவே அது இறையரசு எனப்படுகிறது.

நிலையற்ற இவ்வுலகில் நாம் வாழ்வதே நிலையான விண்ணரசில் வாழ்வதற்கு நம்மை நாமே தயாரித்துக் கொள்வதற்காகத்தான்.

இறைவன் மனுவுரு எடுத்ததே இறையரசை பற்றிய செய்தியை நமக்கு அறிவிக்கவும்,

 அங்கு செல்வதற்கான வாழ்க்கை நெறிமுறைகளை நமக்கு அறிவிக்கவும்தான்.

அவர் பாடுகள் பட்டு சிலுவையில் தன்னைத் தானே பலியாக்கியதும்,
நம்மை பாவத்திலிருந்து  விடுவித்து நம்மை பரிசுத்தர்களாக ஆக்குவதற்காகத்தான்.

ஏனனில் பரிசுத்தமான ஆன்மாக்கள்தான் விண்ணகம் செல்ல முடியும்.

இறையரசைப்பற்றிச்   செய்தியை உலகெங்கும் அறிவிக்கவே இயேசு அப்போஸ்தலர்களை ஏற்படுத்தினார்.

இறையரசைப்பற்றிச்   செய்தியை உலகெங்கும் அறிவிக்கும் பொறுப்பு அவருடைய அப்போஸ்தலர்களுக்கு மட்டுமல்ல,

அவருடைய சீடர்களாகிய நமக்கும் உண்டு.

இப்பொறுப்பு இயேசு நமக்குத் தந்த இரண்டாவது கட்டளையிலேயே அடங்கி இருக்கிறது.

நம்மை நாம் நேசிப்பது போலவே நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

நாம் நிலைவாழ்வு பெற நமக்கு ஆசை இருக்கிறது.

நாம் நம்மைப்போல் பிறரை நேசித்தால் மற்றவர்களும் நிலைவாழ்வு பெற நாம் ஆசைப்படுவோம்.

மற்றவர்கள் நிலைவாழ்வு பெற வேண்டுமென்றால், அவர்களுக்கும் இறையரசைப் பற்றிய செய்தி தெரிந்திருக்க வேண்டும்.

மற்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் நாம் அவர்களுக்கு இறையரசை பற்றிய செய்தியை தெரிவிக்க வேண்டும்.

எப்படி இந்த உலக அரசு நமது உடலை சார்ந்த அரசோ, 

அதேபோல இறையரசு நமது ஆன்மாவை சார்ந்த அரசு.


நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே நமது ஆன்மா நம்மிடம்தான் இருக்கிறது.

அப்படியானால் நமது ஆன்மாவை சார்ந்த அரசாகிய இறையரசு இப்போது நமக்குள்ளேயே இருக்கிறது.

"கடவுளின் அரசு இதோ! உங்களிடையே உள்ளது" 
(லூக்.17:21)

அப்படியானால் இப்பொழுதே நாம் இறை அரசில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நமது அரசர் இறைவனே.

நாம் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவர்களே.

1.எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை அன்பு செய்.

2. உன்னை நீ அன்பு செய்வது போல மற்றவர்களையும் அன்பு செய்.

இந்த இரண்டு கட்டளைகளும்தான் நாம் கீழ்ப்படிந்து நடக்க வேண்டி கட்டளைகள்.

இவ்வுலகில் இந்த இரண்டு 
கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து  நடந்தால்தான் 

விண்ணகத்தில் நிலை வாழ்வுக்குள் நுழைய முடியும்.

அன்புக் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து எப்படி வாழ்ந்தால் விண்ணகத்தில் இறை அரசுக்குள் நுழைய முடியும் என்பதைப் பற்றிய செய்திதான் ஒரே வார்த்தையில் "நற்செய்தி'' என்று அழைக்கப்படுகிறது.

ஆக உலகமெங்கும் நற்செய்தியை அறிவிப்பதுதான் நமது ஒரே பணி.

நற்செய்தியை நமது வாயினால் மட்டுமல்ல வாழ்க்கையாலும் அறிவிக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்வதானால்

 நாம் இயேசுவின் நற்செய்திப்படி வாழ வேண்டும்,

 மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.


கிறிஸ்துவின்  சீடர்கள் என்ற முறையில் அடுத்து நமது முக்கியமான பொறுப்பு:

நோயாளிகளைக் குணமாக்குதல்.

நோய்களைக் குணமாக்குவதற்கும்,

 நோயாளிகளை குணமாக்குவதற்கும் என்ன வித்தியாசம்?

ஒருவனுக்கு ஏதோ ஒரு நோய் வந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

நோய்க்கு உரிய மருந்து கொடுத்தால் நோய் குணமாகிவிடும்.

 ஆனால் திரும்பவும் அந்த நோய் வராது என்பதற்கு உத்தரவாதமில்லை.

நோய் குணமாகி விட்டது. ஆனாலும் நோயாளி குணமாகவில்லை.

ஆனால் நோய் திரும்பவும் வராத அளவிற்கு அவனது உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடிய உணவு வகைகளைக்  கொடுக்கும்போது நோயாளியைக் குணமாக்குகிறோம்.

சத்துள்ள உணவு வகைகளை உண்டு உடலில் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கினால் திரும்பவும் அந்த நோய் வராது. 

மருந்து கொடுக்கும்போது நோய் குணமாகிறது.

 சத்துள்ள உணவு கொடுக்கும்போது நோயாளி குணம் ஆகிறான்.

ஆன்மாவிற்கு வரக்கூடிய நோய் பாவம்.

பாவசங்கீர்த்தனம் செய்யும் போது பாவம் என்ற நோய் குணமாகிறது.

ஆனால் அவன் திரும்பவும் பாவத்தில் விழாமலிருக்க வேண்டுமென்றால், அவனது ஆன்மா பாவத்திற்கு எதிராக திடப்படுத்தப்பட வேண்டும்.

செபம், தவம் போன்ற பக்தி முயற்சிகளும், உறுதிப் பூசுதல், திவ்ய நற்கருணை போன்ற திரு அருட்சாதனங்களும் ஆன்மாவை பாவத்திற்கு எதிராக திடப்படுத்தும்.

பாவசங்கீர்த்தனம் பாவம் என்ற நோயை குணப்படுத்தும்.

பக்தி முயற்சிகளும், மற்ற திரு அருட்சாதனங்களும் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியைக் கொடுக்கும்.

ஈடுபாட்டோடு  திருப்பலி காண்பதாலும், 

செபக் கூட்டங்களில் கலந்து கொள்வதாலும், 

பிறர் சிநேக முயற்சிகளில் ஈடுபடுவதாலும்,

துன்பங்களை ஆண்டவருக்காக பொறுமையாக சகித்துக் கொள்வதாலும்,

ஆன்மா திடமாக வளர்ச்சி அடைகிறது.

விபசாயி நிலத்தைப் பக்குவப் படுத்தினால் மட்டும் போதாது,

அதில் பயிர் செய்ய வேண்டும்.


அதேபோல்தான் பாவத்திலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் போதாது, ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டிருப்பவர்கள்  சாத்தானின் சோதனைகளை வெல்வார்கள், பாவத்தில் விழமாட்டார்கள். 

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் 

நாம் கிறிஸ்துவில் வளரவேண்டும்.

கிறிஸ்துவில் வளர்ந்தால்தான் அவரோடு நிலை வாழ்வு வாழ முடியும்.

நாம் மட்டும் கிறிஸ்துவில் வளர்ந்தால் போதாது,

 மற்றவர்களையும் வளர வைக்கவேண்டும். கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் இது நமது கடமை.

நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வோம். மற்றவர்களையும் வாழ வைப்போம்.

எல்லோரும் நிலைவாழ்வில் இணைவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, September 22, 2021

"பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.2 இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்." (லூக்.9:1,2)

"பன்னிருவரையும் அழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் நோய்களைக் குணமாக்கவும், வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்கு அளித்தார்.

2 இறையரசைப்பற்றிச் செய்தியை அறிவிக்கவும் நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்." (லூக்.9:1,2)


இயேசு தனது சீடர்களைப் போதிக்க அனுப்பும்போது இரண்டு வல்லமைகளைக் கொடுத்தார்.

1.பேய்களையெல்லாம் அடக்க.
2. நோய்களைக் குணமாக்க.

இரண்டு பொறுப்புகளைக் கொடுத்தார்.


1.இறையரசைப்பற்றிச்   செய்தியை அறிவிக்க.
2.நோயாளிகளைக் குணமாக்க.

நாமும் இயேசுவின் சீடர்கள்தான்.
இயேசு கொடுத்த வல்லமைளும், பொறுப்புகளும் நமக்கும் பொருந்தும்.

1. சாத்தான் நமது முதல் பெற்றோரை சோதனை மூலம் பாவத்தில் விழுத்தாட்டிய நாளிலிருந்து தனது சோதனை வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது.

அவர்களைப் போலவே ஏமாந்து பாவத்தில் விழுந்து கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.

விழாமல் தப்பிப்பவர்களும் இருக்கிறார்கள்.

பசாசின் சோதனைகளில் விழாதபடி நம்மை நாம்பாதுகாத்து கொள்ள வேண்டும்.

சோதனைகளிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

1.என்ன நல்ல செயல் செய்ய வேண்டும் என்றாலும் முதல் முதலில் தேவை இறைவனின் உதவி.

சாத்தான் ஏவாளை சோதித்தபோது அவள் இறைவனின் உதவியை நாடவில்லை.

சோதித்த உடன் இறைவனின் உதவியை நாடியிருந்தால் அவள் பாவத்தில் விழுந்திருக்க மாட்டாள்.

இறைவனின் உதவி இன்றி எந்த நல்ல காரியத்தையும் நம்மால்  செய்ய இயலாது.

அதனால்தான் இயேசு நமக்கு செபம் சொல்ல கற்றுத் தந்த போது,

"எங்களை சோதனையில் விழவிடாதேயும்."

என்று தந்தையை நோக்கி செபிக்க கற்றுத் தந்திருக்கிறார்.

ஆகவே நமக்கு வரும் சோதனைகளை வெல்ல தேவையான அருள் வரங்களைத் தரும்படி இறைவனிடம் அடிக்கடி வேண்ட வேண்டும்.

2.சோதனை வரும்போது நாம் முதல் முதல்.நினைக்க வேண்டியது இறைவனைத்தான்.

இறைவனை நினைத்தவுடன் சோதனை தனது பலத்தை இழந்து விடும்.

தொடர்ந்து  செபித்தால் சோதனை காணமல் போய்விடும்.

நமது மனம் செபத்தில் ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்போது மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றாது.

3.சோதனைக்கான சந்தர்ப்பங்களை விலக்க வேண்டும்.

ஏவாள் விலக்கப்பட்ட மரத்தின் அருகே சென்றதால்தான் சாத்தான் அவளைச் சோதித்தான். 

குடியிலிருந்து விடுதலை பெற விரும்புகிறவன்  Wine shop வணக்கம் போகக்கூடாது, குடிகாரர்களோடு நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது.

சாத்தானின் பிடியிலிருந்து தப்பிக்க விரும்புவோர் சாத்தான் குடியிருக்கும் இடத்தை தேடிப் போகக் கூடாது.

நவீன கண்டுபிடிப்புகளான T.V,  Smart phone  போன்ற சமூக தொடர்பு சாதனங்கள் சாத்தானின் நிரந்தர குடியிருப்புகளாக மாறிவிட்டன.

அங்கிருந்து கொண்டு அவற்றை தேடி வரும் வாலிப உள்ளங்களை பாவக் குழிக்குள் வீழ்த்துக் கொண்டிருக்கின்றன.

அவற்றில் சில நல்ல விஷயங்களும் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

ஆகவே அவற்றை பயன்படுத்தும்போது நமது கண்களையும், கருத்துக்களையும் சாத்தான் பக்கம் திரும்பாத படி மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 


4.எப்போதும் இறைவனுடைய பிரசன்னத்தில் வாழ வேண்டும். 
இறைபிரசன்னத்தில் வாழ்ந்தால் சாத்தான் நம்மை அணுகாது.

இறைபிரசன்னத்தில் வாழ்வதென்றால் எப்போதும் இறைவன் நம்முடனே இருக்கும் உணர்வோடு வாழ வேண்டும்.

அப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு விரோதமாக நாம் எதையும் செய்ய மாட்டோம். 

5.எப்போதும் நம்மோடு இருக்கும் காவல் சம்மனசோடு செபத்தின் மூலமாக அடிக்கடி பேச வேண்டும்.

நாம் பாவ சோதனைகளில் அகப்பட்டு கொள்ளாத படிக்கு நமக்கு வேண்டிய உதவிகள் செய்ய அவரை வேண்ட வேண்டும்.

அவர நமக்காக இறைவனை வேண்டி, வேண்டிய அருள் வரங்களை பெற்றுத் தருவார்.

6.ஒவ்வொரு நாளும் படுக்க போவதற்கு முன்னால்  ஆன்மப் பரிசோதனை செய்து, அன்றைய பாவங்களுக்கு  மனஸ்தாபப்படும் பழக்கம் உள்ளவர்களையும்  சோதனைகள் ஒன்றும் செய்யாது.

7.அடிக்கடி திருப்பலியிலும்,
திருவிருந்திலும் உண்மையான ஈடுபாட்டோடு கலந்து கொள்பவர்கள் சோதனைகளை வெல்வது எளிது.

8.ஒவ்வொரு செயலையும் சிலுவை அடையாளத்தோடு துவங்குகிறவர்கள் அருகில் சாத்தான் நெருங்காது.


ஆண்டவர் தனது சீடர்களுக்கு நோய்களை குணமாக்கும் வல்லமையை கொடுத்தார்.

நாம் இப்போது ஆன்மீக தியானம் செய்து கொண்டிருப்பதால் ஆன்மீக நோய்களை பற்றிதான் பேசப்போகிறோம்.

மிக முக்கியமாக ஆன்மீக நோய் பாவம்தான். பாவத்திலிருந்து குணம் பெற நம் ஒவ்வொருவருக்கும் போதுமான வல்லமையை இறைவன் தந்திருக்கிறார்.

ஆன்ம பரிசோதனை செய்யவும்,  பாவங்களுக்காக மனஸ்தாபப் படவும், பாவசங்கீர்த்தனம் செய்யவும் நமக்கு போதுமான வல்லமையை இயேசு தந்திருக்கிறார்.


அந்த வல்லமையைப் பயன்படுத்தி, 

நாம் பாவ நோய்க்குள் விழ நேரும்போது நோயை உடனே குணப்படுத்தி விட வேண்டும்.

பாவசங்கீர்த்தனம் என்னும் வல்லமையை அடிக்கடி பயன்படுத்த தயங்க கூடாது.

அது இயேசு இலவசமாக தந்த வல்லமை.


பாவ சேற்றுக்குள் விழாதடி நம்மை காப்பாற்ற இயேசு தந்திருக்கும் ஒரு மிக முக்கியமான ஆயுதம் நம்முடைய பங்குக் குரு. 

அவரை நமது ஆன்மீக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அவரது ஆலோசனைப்படி ஆன்மீக வாழ்வை நடத்தினால் பாவ நோய்க்குள் நாம் விழாபடி நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளலாம்.

ஆன்மீகப் பாதையில் நடந்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆன்ம வழிகாட்டி கட்டாயம் தேவை.

அதற்காகவே தாய்த் திருச்சபை நமக்கு ஒரு பங்கு குருவை தந்திருக்கிறது.

அவரை வெறும் நிர்வாகியாக பயன்படுத்தாமல் நமது ஆன்மீக மருத்துவராகவும் வழிகாட்டியாகவும் பயன்படுத்திக் கொண்டால் நமது விண்ணக பயணம் வெற்றிகரமாக இருக்கும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, September 21, 2021

"நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"(மத்.9:13)

"நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
(மத்.9:13)

"ஏங்க, ஒரு சந்தேகம் கேட்கலாமா?"

"சந்தேகம் வேண்டுமா? விளக்கம் வேண்டுமா?"

"சந்தேகத்துக்கு விளக்கம்."

"சரி. கேள்."

"இயேசு எதற்காக உலகிற்கு வந்தார்?"

"பாவிகளைத் தேடித்தான்."

"அப்போ நல்லவங்க அவருக்கு வேண்டாமா?'

", யார் சொன்னா?"


"அவர்தான். நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"னு அவர்தான சொல்லியிருக்காரு!"

", ஹலோ! கொஞ்சம் கவனி.
இயேசு சொன்னது பரிசேயர்கள் கேட்ட கேள்விக்கு பதில்.

பரிசேயர்கள் என்ன கேட்டார்கள்?"

"உங்கள் போதகர் ஏன் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்கிறார்?"

"அதற்கு பதிலாகத்தான் இயேசு சொல்கிறார்,

 "நான் பாவிகளை தேடித்தான் உலகிற்கு வந்தேன். ஆகவேதான் பாவிகளோடு உண்கிறேன்."

"ஆனால் 

'நீதிமான்களை அன்று' ஏன் சொல்கிறார்? அவருக்கு நீதிமான்கள் தேவை இல்லையா?"

", இபேசுவின் முன்னால் இரண்டு வகையான மக்கள் நிற்கிறார்கள்.

1.பாவிகள் என்று கருதப்பட்ட வரிதண்டுபவர்கள்.

2.சட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பலி செலுத்துவதால் மட்டுமே தங்களை நீதிமான்கள் என்று எண்ணி கொண்டிருக்கும் இரக்கமில்லாத, வெளி வேடக் காரர்களாகிய பரிசேயர்கள்.

இயேசுவைப் பொறுத்தமட்டில் பாவிகள் எங்க வார்த்கை ஆதாம் ஏவாளின் வம்சத்தினர் அனைவருக்கும் பொருந்தும்.

மனுக் குலத்தைச் சேர்ந்த அனைவரையும் தேடியே இயேசு உலகிற்கு வந்தார்,  ஏனெனில் அனைவருமே பாவிகள்தான்.

அந்த வகையில் இயேசு  வரிதண்டுப்வர்களையும், பரிசேயர்களையும் பாவத்தில் இருந்து மீட்கவே உலகிற்கு வந்தார்.

பரிசேயர்களுடைய தவறான எண்ணத்தைச் சுட்டிக் 
காண்பிக்ககவே,

இயேசு "நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"
என்றார்.

அதாவது இயேசுவுக்கு ஏற்றவர்கள் 
தங்களை  பாவிகள் என்று ஏற்றுக் கொள்பவர்கள்தான்,

தனக்கு நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்பவன்தான் குணமாக முடியும். நோயை ஏற்றுக் கொள்ளாதவன் அதிலேதான் மடிய நேரிடும்.

அப்படிப்பட்டவர்களை மருத்துவரால் எதுவும் செய்ய இயலாது.

பாவத்திற்கான மருத்துவராகிய தன்னால் நோயை ஏற்றுக்கொண்ட பாவிகளை மட்டுமே குணமாக்க முடியும்,

 பாவ நோயை ஏற்றுக்கொள்ளாத பரிசேயர்களை அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்தவே இயேசு அப்படிச் சொன்னார்.

பரிசேயர்கள் தாங்கள் கடவுளுக்கு பலி செலுத்தியதால் மட்டுமே நீதிமான்கள் ஆகி விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சாதாரண மக்கள்மீது இரக்கப்படவில்லை.

ஆனால் கடவுள் விரும்புவது இரக்கத்தை, இரக்கம் கலவாத பலிகளை அல்ல.

பாவிகள் மீது இரக்கப்பட்டு  அவர்களை மீட்டு நிலை வாழ்வுக்கு அழைத்து செல்வதற்காக இயேசு உலகிற்கு வந்தார். அந்த நோக்கத்தோடுதான் அவர்களோடு பழகுகிறார்.

ஏழைகள் மீது இரக்கம் இல்லாமல் பலியை மட்டுமே நம்பி தங்களை நீதிமான்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களோடு உண்பதற்காக அவர் உலகிற்கு வரவில்லை.

He says He did not come to wine and dine with the self-righteous but to save sinners, make them repent and bring them to eternal life.


"பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் " என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக் கொள்ளுங்கள். 

ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்"

இயேசு வெறும் பலியை விரும்பவில்லை.

இரக்கத்தையே விரும்புகிறார்.

இயேசு மனுக்குலத்தின் மீது கொண்ட இரக்கத்தின் காரணமாகவே தன்னை சிலுவையில் பலியாக்கினார்.

நாம் இரக்க சிந்தனையோடு திருப்பலியில் கலந்து கொண்டால்தான் அதன் முழு பலனை அடைய முடியும்.

திருப்பலியில் கலந்து கொள்வதில் உள்ள ஆர்வம் நமது அயலானுக்கு இரக்கச் செயல்கள் புரிவதிலும் இருக்க வேண்டும்.

நாம் பாவிகள் என்பதை ஏற்றுக் கொள்வோம்.

மனம் வருந்தி மன்னிப்பு கேட்போம்.

இறைவன் நம்மீது இரக்கம் காட்டுவது போல நாமும் நமது அயலான் மீது இரக்கம் காட்டுவோம்.

இரக்கம் காட்டுபவர்களே இறைவனுக்கு ஏற்றவர்கள்.

நம்மைத் தேடிவந்த இறை மகனுக்கு ஏற்றபடி வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Monday, September 20, 2021

"ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."(லூக்.8:18)

"ஆகையால், நீங்கள் எத்தகைய மனநிலையில் தேவவார்த்தையைக் கேட்கிறீர்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். உள்ளவனுக்குக் கொடுக்கப்படும். இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."
(லூக்.8:18)

இயேசு விதை விதைப்பவனுடைய உவமையைக் கூறியபின் இவ்வார்த்தைகளைக் கூறுகிறார்.

விதை இயேசு அளிக்கும் நற்செய்தியை, அதாவது, இறைவாக்கைக் குறிக்கிறது.

நமது மனதில் வந்து விழும் நற்செய்தி நமது மன நிலையைப் பொறுத்து பலன் தருகிறது.

நமது மனது மக்கள் நடந்து செல்லும் பாதையை போலவோ, 

 வேரூன்ற முடியாத பாறையைப்  போலவோ, 

முட்செடிகளைப் போன்ற உலக கவலைகள் நிறைந்ததாகவோ இருந்தால் நற்செய்தி நமக்கு எந்த பலனும் தராது.

விதைப்பதற்கு என்று பக்குவப்படுத்தப்பட்ட நல்ல நிலம் போல 

நமது மனம் இருந்தால் நற்செய்தி நமது மனதில் ஒன்றுக்கு நூறாய் பலன் தரும்.

நற்செய்தி அதை அறிவிக்கும் போதகர்கள் மூலமாகவோ,

வேதாகமத்தை வாசிப்பதில் மூலமாகவோ நமது மனதில்  விழுகிறது.

இறைவன் தரும் அருள் உதவியால் நற்செய்தியை தியானிப்பவர்களுக்கு அதிகப்படியான இறையருள் வந்து சேரும்.

இறைவன் எல்லோருக்குமே அருளை இலவசமாக தருகிறார்.

கிடைத்த அருளைக் கொண்டு.      நற்செய்தியைத் தியானிக்க வேண்டும்.

தியானித்து நற்செய்தியை நமது வாழ்வாக்கும் போது இன்னும் அதிகமான இறையருள் கிடைக்கும்.

இப்படி கிடைக்கப்பட்ட இறையருளை நற்செய்தியை தியானித்து வாழ்வாக்க பயன் படுத்திக்கொண்டேயிருந்தால் நமக்கு மேலும் மேலும் அருள் வந்த வண்ணமாக இருக்கும்.

நம்மால் பயன்படுத்தப்படும் அருள் நமது மனதில் இருக்கும்போது அதன் அளவு அதன் பயன்பாட்டிற்கு ஏற்ப  அதிகரித்துக்கொண்டே செல்லும்.

 ஆனால் முதலில் கொடுக்கப் பட்ட அருளைப் பயன்படுத்தாமல் வீணடித்தால், முதலில் இருந்த சொஞ்ச அருளும் திரும்ப எடுத்துக் கொள்ளப் படும்.

அதனால்தான்

"உள்ளவனுக்கு கொடுக்கப்படும்.

 இல்லாதவனிடமிருந்து, உள்ளதாகக் கருதுவதும் எடுக்கப்படும்."

கிடைத்த அருளை பயன்படுத்தும் மனம் உள்ளவனுக்கு மேலும் மேலும் அருள் கொடுக்கப்படும்.


கிடைத்த அருளை பயன்படுத்தும் மனம் இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
.
விதை நிலத்தில் விழுந்தால் மட்டும் போதாது,

 அது வேர் விட்டு,

தளிர் விட்டு வளர வேண்டும்.

 செடியாகவோ, கொடியாகவோ, மரமாகவோ விதையின் தன்மைக்கு ஏற்ப வளர்ந்து 

பூத்து, காய்த்து, பழுத்து பலன் தரவேண்டும். 

அப்போதுதான் விதை விழுந்ததன் பலன் கிடைக்கும். 

அதேபோல,

நற்செய்தி என்ற விதையும் தளிர்த்து, 

வாழ்க்கை என்ற தாவரமாகி

 சிந்தனை ஆகிய பூ பூத்து

 சொல்லாகிய காய்த்து,

 நற்செயல்கள் ஆகிய பழங்கள் தரவேண்டும்.

நற்செய்தி என்ற விதை வாழ்க்கை என்னும் மரமாகி  நற்செயல்கள் ஆகிய பழங்கள் தர

தேவையான அருள் என்ற தண்ணீரை இறைவனிடம் கேட்டுக் கொண்டேயிருக்கவேண்டும்.

 அவரும் நம் மனதில் அருளை ஊற்றிக் கொண்டேயிருப்பார்.

நம் மனது ஒரு ஆன்மீக பழத் தோட்டமாக மாறும்.

இறைவன் தரும் அருளை , 

நமது மனதிலிருந்து  உலக ஆசை, உலக கவலைகள் ஆகிய முட்செடிகளை அப்புறப்படுத்தவும்,  

அதை நற்செய்தியாகிய விதையை விதைக்க ஏற்றபடி பக்குவப்படுத்தவும், 

அதில்  விழுந்த நற்செய்தியை தனது வாழ்வாக்கவும்  

முயல்கிறவனுக்கு,

இறைவன் தனது அருட்செல்வத்தைக் கொடுத்துக் கொண்டேயிருப்பார்.

இறைவன் தரும் அருளை வாழப் பயன்படுத்துவோம்.

அருள் செல்வந்தராக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, September 19, 2021

 "இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான்."(மாற்கு 9:37)

 "இத்தகைய குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான்."
(மாற்கு 9:37)

ஒரு முறை, இயேசு தான் பாடுகள் படப்போவது பற்றியும், மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழப்போவது பற்றியும் தனது  அப்போஸ்தலர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் சொன்னது எதுவும் அவர்களுக்குப்  புரியவில்லை. 

அவர்கள் அதற்கு விளக்கம் கேட்காமல், அதோடு சம்மந்தமில்லாத விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

"பெரியவன் யார்?" என்பதைப்பற்றி வழியில் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களிடம்,

 "ஒருவன் முதல்வனாய் இருக்க விரும்பினால் அவன் அனைவரிலும் கடையனாய் இருக்கட்டும், அனைவருக்கும் பணியாளன் ஆகட்டும்" என்றார்.

கடவுள் எந்த நோக்கத்தோடு மனிதனைப் படைத்திருக்கிறாரோ அதை நிறைவேற்றுபவனே உண்மையில் பெரியவன்.

கடவுள் மனிதனைப் படைத்ததன் நோக்கம்:

 கடவுளை அறிய   வேண்டும்.

 அவரை நேசிக்க   வேண்டும்.

  அவருக்கு சேவை செய்ய    வேண்டும்.

  இவற்றைச் செய்வதன் மூலம் நித்திய பேரின்பத்தை அடைய வேண்டும்.

பிறரன்பின் அடிப்படையில் தன் அயலானுக்கு சேவை செய்பவன் இறைவனுக்கு சேவை செய்கிறான்.

ஆகவே பிறருக்குப் பணி புரிபவனே இறைவன் முன் பெரியவன்.

அவனே இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறான்.

தனது சீடர்களுக்கு முன்மாதிரிகை காண்பிக்கவே இயேசு கடைசி இரவு உணவன்று  சீடர்களின்  பாதங்களைக் கழுவினார்.

பணிபுரிவது இறைவன் முன் மகத்தான செயல்.

இயேசு இதை வாயினால் சொல்லி விட்டு போக வில்லை. வாழ்ந்தே காண்பித்தார்.

தனது வாழ்நாளில் 30 ஆண்டுகள் தனது பெற்றோருக்கு பணிந்திருந்தார்.

கடவுளாகிய இயேசு அவரால் படைக்கப்பட்ட  மரியாளுக்கும், சூசையப்பருக்கும் கீழ்ப்படிந்து நடந்தார்.

நற்செய்தி அறிவித்த மூன்று ஆண்டுகளும் தன்னால் படைக்கப்பட்ட மக்களுக்கே பணிபுரிந்தார்.

அவர்களுக்கு உதவிகள் செய்தார்.

இயேசுவுக்கு பெரியவர்களைவிட குழந்தைகளை மிகவும் பிடிக்கும்.

குழந்தைகள் யாரையும் அதிகாரம் செய்ய மாட்டார்கள்.

குழந்தைகளால் சுயேச்சையாக வாழ முடியாது. 

அவர்கள் மற்றவர்களை சார்ந்து வாழ வேண்டியிருப்பதால் மற்றவர்களுக்கு பணிந்திருப்பார்கள்.

ஆன்மீக வாழ்வில் இறைவனுக்கு ஏற்றவர்கள் 100% இறைவனையே சார்ந்து வாழ்பவர்கள்தான்,

மிகச்சிறிய காரியத்திற்கும் இறைவனை உதவி கேட்பவர்கள் இறைவனுக்கு பிடித்தமானவர்கள்.

இறைவனை சார்ந்தே வாழ வேண்டியி
ருப்பதால் அவர்கள் இறைவனுக்கு நெருக்கமாக  வாழ்வார்கள்.

ஆகவேதான் மற்றவர்களை சார்ந்தே வாழக்கூடிய குழந்தைகளை அவருக்கு பிடிக்கும்.

அது மட்டுமல்ல அவர்களுக்கு பாவம் செய்யத் தெரியாது.

எப்படி ஒரு குழந்தை தனது தாயை பிடித்துக்கொண்டே இருப்பது தாய்க்கு பிடிக்குமோ 

அதே போல நாமும் இறைவனை பற்றி கொண்டே இருப்பது அவருக்குப் பிடிக்கும்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் இறைவனை நமது துணைக்கு அழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு சிறிய வேலையையும் மூவொரு தேவனின் பெயரால் நாம் ஆரம்பிப்பதே அவரின் உதவியைப் பெறுவதற்காகத்தான்.

பிறரைச் சார்ந்தே வாழும் குழந்தையை ஏற்றுக் கொள்பவன் அதற்கு உதவி செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறான்.

பிறருக்கு உதவி செய்யும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்பவனை இயேசுவுக்கு மிகவும் பிடிக்கும்.

"குழந்தைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்ளுகிற எவனும் என்னையே ஏற்றுக்கொள்ளுகிறான்."

விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்,

''பிறரை சார்ந்தே வாழும் ஒரு சிறு குழந்தைக்கு முழு உதவியும் செய்யும் பொறுப்பை என் பெயரால் ஏற்றுக் கொள்பவன் எவனும்

 தனக்கு முழு உதவியும் செய்யும் பொறுப்பாளராக என்னை ஏற்றுக் கொள்கிறான்."

அதாவது,

"ஒரு சிறு குழந்தைக்கு எல்லா உதவியும் செய்பவர்களுக்கு

நானும் எல்லா உதவியும் செய்வேன்."


 "என்னை ஏற்றுக்கொள்ளும் எவனும் என்னையன்று, என்னை
அனுப்பினவரையே ஏற்றுக்கொள்ளுகிறான்"

அதாவது,

"மகனை ஏற்றுக் கொள்பவன் தந்தையையும் ஏற்றுக் கொள்கிறான்."

இதில் ஒரு முக்கியமான இறையியல் உண்மை அடிப்படையாக அமைந்திருக்கிறது.

மகனும், தந்தையும் ஒரே கடவுள் தான்.

ஆகவேதான் மகனை ஏற்றுக் கொள்பவன்,  தந்தையையும் ஏற்றுக்கொள்கிறான்.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்:

பிறருக்கு பணி செய்து வாழ்பவன்தான் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.


ஒரு குழந்தை தன் பெற்றோரை முழுக்க முழுக்க சார்ந்து வாழ்வது போல நாமும் நம்மைப் படைத்த இறைவனையே முழுக்க முழுக்க சார்ந்து வாழ வேண்டும்.

ஒரு குழந்தையை நாம் ஏற்றுக்கொண்டு கவனிப்பது போல நம்மை சார்ந்தவர்களையும் நாம் கவனித்துக் கொண்டால்

இயேசுவை சார்ந்து வாழும் நம்மையும் அவர் நன்கு கவனித்துக் கொள்வார்.

ஆன்மீக வாழ்வு மற்றவர்களுக்கு பணிபுரிவதில்தான் அடங்கியிருக்கிறது.
 
பணிபுரிந்து வாழ்வோம்.
 ஆன்மீகத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்


,

Saturday, September 18, 2021

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." (லூக்.8: 8)

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." (லூக்.8: 8)

விதை விதைப்பவன் உவமையின் இறுதியில் ஆண்டவர் கூறிய வார்த்தைகள்,

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." 

இலக்கிய நயம் மிகுந்த வார்த்தைகள்.

விதைப்பவன் உவமை மூலம் ஆண்டவர் நமக்கு சொல்லும் நற்செய்தியின் வழியே நோக்கினால் இவ்வரிகளில் உள்ள இலக்கிய நயம் நமக்கு புரியும்.

உவமையில் நான்கு வகை நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன.

1.வழியோரம். 
2. பாறை.
3முட்செடிகளின் நடுவே.
4 நன்னிலம்.

இவற்றில் 'வழியோரம்' தன்மீது விதை விழும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 

காரணம் வழி நடப்பதற்கு உரியது.

ஆகவே விதையைப் பற்றிய அக்கறை அதுக்கு கொஞ்சம் கூட இல்லை. 

ஆகவேதான் அவை நடப்பவர்களால் மிதிபட்டு வானத்துப் பறவைகளால் தின்னப்பட்டன.

2. பாறையும் விதையை எதிர்பார்த்திருக்காது.

பாறையில் முளைத்த விதையால் வேர் ஊன்ற முடியாது.

பாறையில் முளைத்த விதையால் யாருக்கும் பயனில்லை. 

3.முட்செடிகளின் நடுவே உள்ள நிலம் விதை முளைப்பதற்கு ஏற்றதுதான். முட்செடிகளின் நடுவே முளைத்து வளர முடியாது.

4. நன்னிலம் விதைப்பதற்கென்றே பக்குவப்படுத்தப் பட்டிருப்பதால் முளைத்து, வளர்ந்து பலன் தரும்.

இயேசு கூட்டத்தில் நற்செய்தி விதையை விதைக்கிறார்.

கூட்டத்தில் நான்கு வகையான மக்கள் இருக்கலாம்.

முதல் வகையினர் நற்செய்தி கேட்பதற்கு என்று வந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே வேறு வேலைக்காக அங்கு வந்திருப்பார்கள். அவர்கள்  காதில் நற்செய்தி விழுந்தும் பயனில்லை.

இரண்டாவது வகையினரும் நற்செய்தி கேட்கும் நோக்கோடு வந்திருக்க மாட்டார்கள். வந்த இடத்தில் கூட்டத்தில் மாட்டிக் கொண்டிருப்பார்கள்.
அவர்கள் மனதில் நற்செய்தி வேரூன்றாது.

மூன்றாவது வகையினர் 
 நற்செய்தி கேட்க வந்திருப்பார்கள் ஆனால் பலவித கவலைகளுடன்.

கவலைகளுக்கு மத்தியில் நற்செய்தியால்  வளர முடியாது.

கவலைகள் நற்செய்தியை அமுக்கி விடும்.

நான்காவது வகையினர் வாழ்வதற்காக நற்செய்தியை கேட்பதற்கென்றே இயேசுவை தேடி வந்தவர்கள்.

இவர்களே கேட்க செவி உள்ளவர்கள். நற்செய்தியைக் கேட்பதற்கென்றே செவி உள்ளவர்கள்.

இவர்கள் கேட்கும் நற்செய்தி அவர்கள் வாழ்வில் நூறு மடங்கு பலன் கொடுக்கும். 

ஏனெனில் அவர்களுக்கு நற்செய்தியை கேட்பதற்கென்றே  செவியும் வாழ்வதற்கு வாழ்க்கையும்  இருக்கிறது.

இவர்களைத்தான் ஆண்டவர்,

"கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்." என்றார்.

ஒரு மூன்றாவது வகுப்பு மாணவி தேர்வில் 

"நமது காதுகள் எதற்கு பயன்படுகின்றன?"

என்ற கேள்விக்கு,

"கம்மல் போட!" என்று எழுதியிருந்தாள்.

காது கம்மல் போட, 
மூக்கு மூக்குத்தி போட, 
தலை பூ வைக்க, 
கால் செருப்பு போட 

என்ற பாணியில் சிந்திப்பவர்களுக்கு நற்செய்தி எப்படி பலன் தரும்!

காது நற்செய்தியை கேட்க,
 தலை இறைவனை வணங்க, கைகள் கடவுளே கும்பிட,
 கால்கள் கோவிலுக்கு போக,
 வாய் இறை புகழ்பாட 

என்ற பாணியில் சிந்திப்பவர்களுக்கு தான் நற்செய்தி பலன் கொடுக்கும்.

அவர்கள்தான் இறைவனுக்காக வாழும் ஆன்மீகவாதிகள்.

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் போது வாசகங்களும்,

 குருவானவர்  பிரசங்கத்தில் கொடுக்கும் வாசக விளக்கமும் 

யாருடைய வாழ்வில் பலன் கொடுக்கும்?

1 பூசைக்கு வந்திருப்பவர்களுள் ஒரு வகையினர் திருப்பலி மேல்   உள்ள பற்றினால் வந்திருக்க மாட்டார்கள்.

வாசிக்கப்படும் நற்செய்தியை பற்றி கவலைப்படவே மாட்டார்கள்.

2.இன்னொரு வகையினர் கடமைக்காக  வந்தவர்கள். 

நற்செய்தி இது காதில் விழும் ஆனால் பயன் இருக்காது. அவர்கள் உள்ளம் பாறையை போன்றது.


3 இன்னொரு வகையினர்
பூசை  சீக்கிரம் முடிந்து விடுமா,
 சாமியார் பிரசங்கத்தை நீட்டி விடுவாரா, 
பூசை முடிந்தவுடன் கசாப்புக் கடைக்கு போக வேண்டுமே, 
நல்ல கறி முழுவதும் விற்பனையாகும் முன்னே போக முடியுமா? 

என்ற கவலைகளுடன் பூசைக்கு வருபவர்கள். அவர்கள் காதில் விழுந்த நற்செய்தியை கவலைகள் அமுக்கி விடும் 

வாழ்வில் ஆன்மீகத்தை விட அதிகமாக உலகக் கவலைகளில் உழல்பவன் நற்செய்தியை கேட்டாலும் 

அது பலன் தராதபடி உலக கவலைகள் அதை அமுக்கி விடும்.

உலகத்தைப் பற்றி கவலைப்படாதவன்தான் ஆன்மீகத்தில் வளர முடியும்.

உலகக் கவலைகள் எதுவும் இல்லாமல்

நற்செய்தியை கேட்பதற்கென்றே காதுகளுடன் வருபவனுக்கு மட்டுமே நற்செய்தி வாசகமும், விளக்கமும் பலன் கொடுக்கும்.

நற்செய்தி வாசகங்களையும், சாமியாரின் பிரசங்கத்தையும் கேட்கச் செவியுள்ளவன் மட்டுமே கேட்டு பலன் பெறுவான்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அன்றய வாசகங்களை சாமியார் விளக்குகிறார்.அதை ஆர்வமுடன் கேட்பவர்கள் மனதில் விளக்கம் பதிந்து பலன் தரும்.

மற்ற நாட்களில்?

1.சிலர் வீட்டில் பைபிளே இருக்காது.

சிலர் வீட்டில் பைபிள் இருக்கும்.
புதுசாகவே இருக்கும். அவர்கள் விரலே பட்டிருக்காது.

2. கடமைக்காக  வாசித்துவிட்டு பைபிளை மூடும்போது வாசித்ததை மறந்து விடுவார்கள்.

அந்த வாசகம் அவர்களது வாழ்க்கையை தொடாது.

3. வாசிப்பதற்கு இஷ்டம் போல் பொருள் கொடுத்து, அதை வாதத்திற்கு  மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அவர்களது வாசிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.

ஆன்மீக காரியங்களை  விட உலக கவலைகளை தீர்ப்பதில்தான் அதிக அக்கறை காட்டுவார்கள். 

 நற்செய்தி ஆன்மீக வாழ்வுக்கு மட்டுமே பயன்படும். உலக வாழ்வுக்கு அல்ல.

4. நற்செய்தியில் ஆர்வமுள்ளவர்கள் அதை வாசித்து விளக்கத்தை தேடி பெறுவார்கள்.

வாசித்ததை வாழ்வார்கள்.


ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் கத்தோலிக்க திருச்சபையின்  நாள் குறிப்பின்படி நற்செய்தியை வாசித்து,

வாசித்த நற்செய்தியை நமது
.நமது வாழ்க்கையாக மாற்ற வேண்டும்.

அன்றன்றய நற்செய்தியை கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.

கேட்டபடி வாழட்டும்.

லூர்து செல்வம்.

Thursday, September 16, 2021

"பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்." (லூக்.8:1)

"பின்னர் கடவுளின் அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே இயேசு ஊர் ஊராய்ச் செல்லலானார். பன்னிருவரும் அவருடன் சென்றனர்." (லூக்.8:1)

இயேசுவின் நற்செய்தியால் ஈர்க்கப்பட்ட அனேக  சீடர்களுள் பன்னிரண்டு பேரை இயேசு தனது அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் விண்ணகம் எய்திய பின்  உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிப்பதற்காக அவர்களுக்கு விசேஷமான பயிற்சி அளிப்பதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்கள் மற்ற சீடர்களை விட விசேஷமான திறமை எதுவும் உள்ளவர்கள் என்று கூறிவிட முடியாது.

உண்மையில் குறைகள் நிறைய உள்ளவர்கள்.

குறைகளை நீக்கி அவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் பயிற்சி அளிப்பதற்காகத்தான் இயேசு அவர்களை தேர்ந்தெடுத்தார்.

ஆனாலும் புதுமையாய் எதுவும் செய்து அவர்களது குறைகளை நீக்க அவர் எண்ணவில்லை.

அவர் நினைத்திருந்தால் 
தனது வல்லமையால் அவர்களை நொடிப்பொழுதில் தலைசிறந்த போதகர்களாக மாற்றியிருக்க முடியும்.

ஆனால் அவர்களது மாற்றம் அவர்கள் முயற்சியால் இயல்பாக நடைபெற வேண்டும் என்று விரும்பினார்.

ஆனாலும் அவர்கள் இயேசு உலகில் இருக்கும் வரை முழுமையான மாற்றம் எதையும் அடைந்துவிடவில்லை.

அவர் பாடுகள் படுவதற்கு முந்திய நாள் இரவில் அவரை அவரது விரோதிகள் கைது செய்தபோது அவர்கள் எல்லோரும் அவரை விட்டு ஓடி விட்டார்கள் என்று நமக்கு தெரியும்.

'இராயப்பர் ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தார்.

தான் மரித்த பின் மூன்றாவது நாள்  உயிர்த்து எழுவதை அவர்களுக்குப் பல முறை அவர்கள் சொல்லியிருந்தும் அவர்கள் அதை நம்பியதாகத் தெரியவில்லை.

அவர் உயிர்த்தெழுந்து விட்டதை மரிய மதலேனாள் அவர்களிடம் சென்று அறிவித்தும் அதை நம்பாமல், அதை உறுதி செய்து கொள்வதற்காக இராயப்பரும், அருளப்பரும் அவரது கல்லறையை நோக்கி ஓடினார்கள்.

இத்தனை குறைகள் இருந்தும் இயேசு அவர்களைக் கைவிடவில்லை.

தான் பரலோகம் சென்ற பின் பரிசுத்த ஆவியானவரை அனுப்பி அவர்களைத் தைரியமுள்ள போதகர்களாக மாற்றினார்.

இன்றும் அதே பரிசுத்த ஆவியானவர் தான் திருச்சபையை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இயேசுவும் இன்றும் திருச்சபையோடு தான் இருக்கிறார்.

நாம் ஒவ்வொரு நாளும் நற்செய்தி நூலை வாசிக்கும்போது இயேசுவோடு தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

இயேசு போதிக்கும் ஒவ்வொரு நற்செய்தியும் நமது காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கிறது.

நாமும் அப்போஸ்தலர்களாக செயல்பட வேண்டும் என்ற ஆசை நம்மில் எழுந்திருக்கிறதா?

அந்த அளவுக்கு இயேசுவே நற்செய்தி நம்மை தொட்டிருக்கிறதா?

நற்செய்தியை வெறும் புத்தகமாக வாசிக்காமல், இயேசுவுடனே பயணித்து வாசித்திருந்தால், நிச்சயமாக நமது மனதைத் தொட்டிருக்கும்.

நாமும் நற்செய்தி அறிவிப்பவர்களாக மாற நமக்குள் ஆசை எழுந்திருக்கும்.

அந்த ஆசையை வெறும் ஆசை நிலையிலேயே வைத்திருக்காமல் செயலில் வெளிப்படுத்துவோம்.

நாம் நற்செய்தியை செல்லும் இடமெல்லாம்   அறிவிக்க வேண்டும் என்பதே இயேசுவின் ஆசை.

நாம் செல்லுமிடமெல்லாம் இயேசுவை அழைத்துச் செல்வோம்.

நம்மோடு இயேசுவின் நல் செய்தியையும் எடுத்துச் செல்வோம்.

பைபிள் புத்தகம் நம் கையில் இருக்கிறதோ இல்லையோ,

நற்செய்தி எப்போதும் நமது மனதில் இருக்க வேண்டும்,

எங்கு வாழ்ந்தாலும் இயேசுவின் பிரசன்னத்தில் வாழ்வோம்.

அவரது நற்செய்தி ஒவ்வொரு விநாடியும் நமது சொல்லாகவும் செயலாகவும் 
வெளிப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

செல்லும் இடமெல்லாம் பிரசங்கம் வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

ஒவ்வொரு வினாடியும் நற்செய்தியின் மதிப்பீடுகளை (Gospel Values) சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் வாழ்ந்தாலே போதும்.

நமது வாழ்வே சக்திவாய்ந்த ஒரு போதகமாக மாறிவிடும்.

நாம் போதகராக மாறாமலேயே நமது வாழ்வு போதகமாக மாறிவிடும்.

நற்செய்தியின் மதிப்பீடுகள் என்றால் என்ன?

கிறிஸ்துவின்  நற்செய்தியின் மூலம் நாம் அறியும் இறைவன்பு, பிறரன்பு சார்ந்த மதிப்பீடுகள்.

எப்படி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை பிரிக்க முடியாதோ அதே போல இறையன்பையும்,  பிறரன்பையும் பிரிக்க முடியாது.

இறையன்பு இருப்பவரிடம் உறுதியாக பிறரன்பும் இருக்கும்.

நாம் மற்றவர்களோடு பழகும் ஒவ்வொரு வினாடியும் இறையன்பும் பிறரன்பும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இல்லத்தில் ஆரம்பமாகும் இந்த வெளிப்பாடு சமூக அளவிலும், நாட்டளவிலும், உலகளவிலும் விரிந்துகொண்டே செல்லும். 

உதாரணத்திற்கு ஒரு மதிப்பீடு: 

நற்செய்தியின்படி நமது அயலானுக்கு என்ன செய்கிறோமோ அதை இறைவனுக்கே செய்கிறோம்.

இறைவனுக்கு காணிக்கை கொடுக்க விரும்புகிறோம். அதை நமது அயலானுக்குக் கொடுத்தால் போதும், இறைவனுக்கே கொடுக்கிறோம். 

தேவையில் இருக்கும் அயலானுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினால், அது கோயில் உண்டியலில் ஆயிரம் ரூபாய் காணிக்கையாகப் போட்டதற்குச் சமம்.
 
நமது குடும்ப உறுப்பினராக இருந்தாலும் சரி,.

 வெளியே உள்ள உறவினர்களாக இருந்தாலும் சரி,

நாம் வாழும் சமூகத்தில்

 அல்லது நாட்டில்

 அல்லது உலகில் வாழும் யாராக இருந்தாலும்  சரி

அவர்களுக்கு அவசரத்தில் உதவுவது இறைவனுக்கு கொடுக்கும் காணிக்கை.

ஒரே நிபந்தனை அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என்ற உணர்வோடு கொடுக்க வேண்டும்.

தேவையில் இருப்போருக்கு நம்மால் இயன்றதை கொடுப்பது நமது பழக்கம் ஆகி விட்டால் நாம் நற்செய்தியை வாழ்கிறோம்.

நம்மை பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இயேசுவை பார்ப்பார்கள்.

மற்றொரு  மதிப்பீட்டை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்:

 தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது நற்செய்தியின் மதிப்பீடு.

இல்லத்தில் நமது சகோதரனோ அல்லது சகோதரியோ நம்மை காரணமின்றி அடித்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவர்கள் தந்த அடிக்குப் பதிலாக ஏதாவது ஒரு நன்மையை அவர்களுக்கு செய்தால் நாம் நற்செய்தியை வாழ்கிறோம்.

இல்லத்திற்குள் இது எளிது.

ஆனால் சமூக அளவிலோ, நாட்டு அளவிலோ இந்த மதிப்பீட்டை செயல்படுத்துவது கடினம்.

ஆனால்  செயல்படுத்திதான் ஆக வேண்டும்.ஏனெனில் அதைததான் நாம் போதிக்கிறோம். நாம் போதிப்பதை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்?

சமீபத்தில் கிறிஸ்தவர்களுடைய உரிமைகளை அழுத்தமாக கேட்ட ஒரு குருவானவரைக் கைது செய்துவிட்டார்கள்.

கைது செய்தவர்களுடைய ஆன்ம, சரீர நலனுக்காக நாம் செபித்திருக்க வேண்டும். 

இயேசு அதைத்தான் செய்தார். அவரைக் கைது செய்து, கொன்றவர்களை மன்னிக்கும் படி தந்தையை நோக்கி செபித்தார்.

கிறிஸ்தவர்களை துன்பப்படுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஆன்ம சரீர நலத்தோடு வாழ எல்லோரும் செபிப்போம். 

மனிதர்கள் எல்லோரும் இறைவனுடைய பிள்ளைகள் என்பது நற்செய்தி மதிப்பீடு:

ஒரு தந்தையின் பிள்ளைகளிடையே சாதி வேறுபாடு இருக்க முடியாது.

அரசாங்கம் கிறிஸ்தவ மதிப்பீட்டின்படி அமைக்கப்படவில்லை.

ஆகவே அது சாதி அடிப்படையில் சலுகைகள் வழங்குகிறது.

நம்மிடையே சாதிகளே இல்லை எனும்போது அதனடிப்படையில் 
அரசிடம் சலுகைகள் கேட்பது நற்செய்தியின் மதிப்பீட்டிற்கு எதிராக செய்யும் செயல்.

 அரசின் கொள்கையால் நாம் பாதிக்கப்பட்டாலும் அதை ஆண்டவருக்காக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

வாழ்க்கையே பாதிக்கப்பட்டாலும் நற்செய்திக்காக அதை ஏற்றுக் கொள்ளும்போது  நமது வாழ்க்கையில் மூலம் நற்செய்தியைப் போதிக்கிறோம்.  

நமக்கு கெடுதல் செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்பதுவும் நற்செய்தியின் மதிப்பீடு.

கெடுதல் செய்வது 

ஆளாக இருந்தாலும், 

சமூகமாக இருந்தாலும்,

 நாடாக இருந்தாலும், உலகமாக இருந்தாலும் முழுமனதோடு மன்னிப்போம். 

நாம் செய்த பாவங்களையும் இறைவன் மன்னிப்பார்,

"மன்னியுங்கள், மன்னிக்கப்படுவீர்கள்." 

என்பது நற்செய்தியின் முக்கிய மதிப்பீடு.

அதன்படி வாழ்வோம்,
வாழ்வு அடைவோம்.

லூர்து செல்வம்.

" அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்" (லூக்.7:48)

" அவளை நோக்கி, " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்" (லூக்.7:48)

பரிசேயன் ஒருவன் இயேசுவை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தான்.

பெரும்பான்மையான பரிசேயர்கள் இயேசுவிடம் குறை காண்பதிலேயே குறியாக இருந்தார்கள்.  

இயேசுவைப் பின் சென்ற சாதாரண மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டிருந்தார்கள்.

 அதனால் இயேசு அவர்கள் மத்தியில் புதுமைகள் பல செய்து அவர்களில் நோயுற்றவர்களை குணமாக்கினார்.

அவர்மேல் விசுவாசம் கொண்டிருந்தவர்கள் அவரது நற்செய்தியை விரும்பி கேட்டார்கள்.

ஆனால் பரிசேயர்களுக்கு அவர் மேல் விசுவாசம் இல்லை.

அவர்களும் இயேசுவின் பின் சென்றார்கள், ஆனால் அவரது நற்செய்தியை கேட்பதற்காக அல்ல, அவரது பேச்சில் குறை கண்டு பிடிப்பதற்காகவே.

பரிசேயன் ஒருவன் அவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தான்.

அவன் விசுவாசம் அற்றவனாக இருந்தாலும் இயேசு அவனது அழைப்பை ஏற்று அவனது வீட்டிற்கு சென்றார்.

 இயேசு எங்கு சென்றாலும் அவர் மீது விசுவாசம் உள்ள சாதாரண மக்களும் அவரை பின் தொடர்ந்தார்கள்.

அவ்வூரில் எல்லோராலும் பாவி என்று அறியப்பட்ட ஒரு பெண்

இயேசுவின் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக 

தனது பாவங்களுக்காக வருந்தி, இனி பாவங்கள் செய்வதில்லை என்று தீர்மானித்து

 செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதற்காக இயேசுவைத் தேடி பரிசேயனது வீட்டுக்கு வந்தாள்.

வந்தவள் தனது மனஸ்தாபத்தின் அடையாளமாக

அவருடைய கால்மாட்டில் பின்புறமாக இருந்து, 

அழுதுகொண்டே அவர் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து 

அவற்றைக் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு

 அப்பாதங்களில் தைலம் பூசினாள்.


அவரை அழைத்த விசுவாசம் இல்லாத பரிசேயன் இதைக் கண்டு,

 "இவர் இறைவாக்கினராய் இருந்தால் தம்மைத்தொடும் இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார். இவளோ பாவி"

 என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அவனது நினைப்பிலிருந்தே அவனுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இல்லை என்பது  தெரிகிறது.

இயேசு அவனைப் பார்த்து,


"நான் உம் வீட்டுக்குள் வந்தபொழுது, நீர் என் பாதங்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை: 

இவளோ என் பாதங்கள்மேல் கண்ணீர் பொழிந்து அவற்றைக் கூந்தலால் துடைத்தாள்.

நீர் எனக்கு முத்தமளிக்கவில்லை: இவளோ, நான் உள்ளே வந்ததுமுதல் என் பாதங்களை முத்தம் செய்து ஓயவில்லை.


நீர் என் தலையில் எண்ணெய் பூசவில்லை: இவளோ என் பாதங்களுக்குப் பரிமளத்தைலம் பூசினாள்."

அதாவது,  இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் அவரை சரியாக உபசரிக்கவில்லை.

 ஆனால் உபசரிப்புக்காக செய்ய வேண்டிய அத்தனை செயல்களையும் அவனால் பாவி என்று கருதப்பட்ட பெண் செய்து கொண்டிருந்தாள்.

இயேசு அப்பெண்ணை நோக்கி,

 " உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.


 " பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தி அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

கடவுள் ஒருவருக்குதான் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு.

பாவியான பெண்ணுக்கு இயேசுவின் மேல் விசுவாசம் இருந்ததால் தன் பாவங்களை மன்னிக்கும் படி தனது செயல்களால் கேட்டாள்.

இயேசுவும் அவளது பாவங்களை மன்னித்தார்.

ஆனால் பந்தியில் அமர்ந்திருந்த பரிசேயர்களுக்கு அவர் கடவுள் என்ற விசுவாசம் இல்லை.

ஆகவே 

" பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?"

என்று ஒருவரை ஒருவர் வினவிக் கொண்டார்கள்.

இயேசுவோ அந்தப் பெண்ணை நோக்கி,

"உன் விசுவாசம் உன்னை மீட்டது, சமாதானமாய்ப் போ" என்றார்.

இந்நிகழ்வில் இயேசுவின் மேல் விசுவாசம் இல்லாத பரிசேயன் அவரை உணவு விருந்தால் உபசரிக்கிறான். 

ஆனால் இயேசு முழுக்க முழுக்க ஆன்மீக பணிக்காகவே உலகிற்கு வந்தவர். அதிலும் பாவிகளைத் தேடி வந்தவர்.

ஆகவே பரிசேயனின் உபசரிப்பு அவருக்கு ஏற்றதாக இல்லை. 

ஆனால் பாவியாகிய பெண் தனது கண்ணீரால் அவரை உபசரிக்கிறாள்.

கடவுளாகிய இயேசுவை பொறுத்தமட்டில் ஒரு பாவியின் கண்ணீரை விட உயர்ந்த உபசரிப்பு உலகில் எதுவுமே இல்லை.

ஏனெனில் இயேசு பாவிகளைத் தேடி வந்தது அவர்களை மனம் திருப்புவதற்காகத்தான்.

ஒரு பாவி தனது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு சிந்தும் கண்ணீர் தான் இறைவனுக்கு ஏற்ற காணிக்கை.

அப்படி சிந்தப்படும் கண்ணீர் இறைவனிடமிருந்து பாவமன்னிப்பையும், விண்ணக வாழ்வையும், நித்திய பேரின்பத்தையும் பெற்றுத் தரும். 

பரிசேயனின் உபசரிப்பையும், பாவியாகிய பெண் இந்த கண்ணீரையும் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப தியானிப்போம்.

அன்று யூத மக்களிடையே இருந்தது போலவே இன்று கிறிஸ்தவ மக்களிடையேயும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள்.

இரண்டு வகையினரிடமும் விசுவாசம் இருக்கிறது, ஆனால் வித்தியாசமான அளவில்.

ஒரு வகையினர்  உள்ளரங்க
(Internal)  விசுவாச வாழ்வை விட வெளியரங்க (External)  ஆடம்பர விசுவாச வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

இன்னொரு வகையினர் 
உள்ளரங்க விசுவாச வாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

திருச்சபையில் திருவிழாக்கள் எதற்காக கொண்டாடப்படுகின்றன?

வெளியரங்க ஆடம்பரத்திற்காகவா அல்லது உள்ளார்ந்த ஆன்மீக வளர்ச்சிக்காகவா?

கிறிஸ்மஸ் விழாவை எடுத்துக்கொள்வோம்.

ஆடம்பர வாதிகளுக்கு 

 விலைமதிப்புள்ள புதிய உடை, 
பார்த்தவர்கள் பாராட்டும்படி வீட்டை அலங்கரித்தல், 
வாழ்த்துக்கள் அனுப்புதல்,
புதிய design ல் Star தொங்கவிடல், அலங்காரமான கிறிஸ்மஸ் குடில், கிறிஸ்மஸ் முடிந்தவுடன் Cake வெட்டுதல், 
கிறிஸ்மஸ் அன்று பிரியாணி விருந்து

இவற்றுக்காக லட்சக்கணக்காய் செலவழித்தல் ஆகியவை முக்கியம்.

உள்ளார்ந்த ஆன்மீகவாதிகளுக்கு.

செய்த பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி, பாவசங்கீர்த்தனம் செய்து திருப்பலியிலும் திருவிருந்திலும் கலந்து கொள்ளுதல்.

ஏழைகளுக்கு தர்மம் கொடுத்தல்.

இவை மட்டும்தான் முக்கியம்.

இயேசு பாலன் விரும்புவது எளிமையான, பரிசுத்தமான ஆன்மீகத்தை மட்டுமே.

பங்கு கோவிலில் திருவிழா என்றால் மின்விளக்குகளால் கோவிலும் தெருவும் அலங்காரம், 
புதுமாதிரி மேளம், 
சப்பரம், 
பட்டிமன்றம்,
 பத்தாம் திருநாளில் அனைவருக்கும் மட்டன் சாப்பாடு, 
செலவுக்கு அதிக வரி ஆகியவற்றில் மட்டுமே அதிக கவனம் செலுத்துபவர்கள் ஆடம்பர வாதிகள்.

ஆன்மீகவாதிகளுக்கு பாவசங்கீர்த்தனம், திருப்பலி, திருவிருந்து இவை மட்டுமே முக்கியம்.

கிறிஸ்தவ ஆன்மீகம் என்றால் ஆன்மா பரிசுத்தத்தனத்தோடு 
விண்ணகம் நோக்கி பயணிப்பது மட்டுமே.

மனஸ்தாபக் கண்ணீர் பாவியை பரிசுத்தன் ஆக்குகிறது

கண்ணீர் விட்டு ஆன்மீகத்தை வளர்ப்போம்.

மனந்திரும்பும் ஒரு பாவியைக் குறித்து விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும் என்று இயேசு சொல்லுகிறார். 
(லூக்.15:7)

ஞாபகத்தில் கொள்வோம்:
உடலைக் கழுவ தண்ணீர்.
ஆன்மாவைக் கழுவ கண்ணீர்.

லூர்து செல்வம்.

Tuesday, September 14, 2021

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்"(அரு. 19:25)



"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்"
(அரு. 19:25)

இயேசுவின் சிலுவையருகில் நின்றுகொண்டிருந்த மூவர்:

இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியாள்.

அன்னை மரியாளின் உடன் பிறந்த சகோதரியும், யாகப்பன்,  யூதா, சீமோன் (அப்போஸ்தலர்கள்) சூசை ஆகியோருடைய தாயுமான மரியாள்.

பாவியாக இருந்து மனம் திரும்பிய 
மதலேன் மரியாள்.

இயேசு நிறுவிய முழு திருச்சபையுமே சிலுவை அடியில் நின்று கொண்டிருந்தது போல் தோன்றுகிறது.

அன்னை மரியாள் திருச்சபையின் தாய் என்ற முறையில்.

அன்னை மரியாளின் சகோதரி மூன்று அப்போஸ்தலர்களின் தாயாகையால் திருச்சபையின்  ஆயர்கள் மற்றும் குருக்களின் சார்பில்.

மதலேன் மரியாள் பாவிகளாகிய நமது சார்பில்.

அன்னை மரியாள் ஆண்டவர் அவள் வயிற்றில் உற்பத்தியான நாளிலிருந்து அவரது சிலுவைப் பாதையில் கூடவே பயணித்தாள் என்பது நமக்குத் தெரியும்.

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் திருச்சபையும் இயேசுவின் பாடுகளில் பங்கு பெற வேண்டும் என்பதற்கு அடையாளமாகவே அன்னை மரியாளின் சகோதரியும், மதலேன் மரியாளும் 

அன்னை மரியாளுடன் நின்று கொண்டிருந்தார்கள்.

இறை மகனுக்கு தேவ சுபாவத்தில் வருத்தப்படவோ, கஷ்டப்படவோ, துன்பப்படவோ முடியாது.

ஆனால் மனிதர் செய்த பாவங்களுக்குப்  பரிகாரமாக இவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே 

அதற்கான மனித பலவீனங்களை  மனமுவந்து ஏற்றுக்கொண்டு  மனிதனாக பிறந்தார். 

கெத்சமனி  தோட்டத்தில் இயேசு தான் படவிருக்கும் பாடுகளை நினைத்தவுடன் இரத்த வியர்வை வியர்த்ததலிருந்தும், 

அப்பொழுது அவர் தந்தையை நோக்கி செய்த செபத்திலிருந்தும் இதை அறிந்து கொள்கிறோம்.

இயேசு பாடுகளின்போதும் சிலுவை மரணத்தின்போதும் அனுபவித்த மன வேதனையை போலவே 

அன்னை மரியாளும் இயேசுவை கருத்தரித்த நாளிலிருந்து வாழ்நாள் முழுவதும் வியாகுலங்களை  அனுபவித்ததால்தான் அவளை வியாகுலமாதா என்கிறோம்.

இயேசுவைக் கருத்தரித்த பின் சூசையப்பரின் சந்தேகத்தால் ஏற்பட்ட வியாகுலம்,

அவருடன் நாசரேத்திலிருந்து பெத்லகேம் நகருக்கு பயணித்தபோது  பிரயாணக் களைப்பினால் ஏற்பட்ட வியாகுலம்,

'
பேறுகாலத்திற்கு இடம் கிடைக்காததால் ஏற்பட்ட வியாகுலம்,

உலகையே படைத்த இறைவனை மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் ஏற்பட்ட வியாகுலம்,

"உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" என்று சிமியோன் சொன்னபோது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவை ஏரோதுவிடமிருந்து காப்பாற்றுவதற்காக எகிப்தில் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தபோது ஏற்பட்ட வியாகுலம், 

பன்னிரண்டு வயதில் இயேசு காணாமல் போன போது ஏற்பட்ட வியாகுலம்,

சூசையப்பரின் மரணத்தின் போது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவை சொந்த ஊர் மக்களே ஏற்றுக் கொள்ளாத போது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவின் சிலுவை பாதையின்போது ஒவ்வொரு வினாடியும் ஏற்பட்ட வியாகுலம்,

பெற்று வளர்த்த மகன் சிலுவையில் அறையப்பட்டு,

 அதில் தொங்கி மரணமடைந்ததை அருகிலிருந்து பார்த்தபோது ஏற்பட்ட அளவுகடந்த வியாகுலம்,

இறந்த தன் மகனை தன் மடியில் வைத்த போது ஏற்பட்ட வியாகுலம்,

இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்த போது ஏற்பட்ட வியாகுலம்,

  எல்லா  வியாகுலங்களும் சேர்ந்து அன்னை மரியாளை வியாகுல மாதாவாகவே ஆக்கிவிட்டன.


யாருக்காக நம் அன்னை இத்தனை வியாகுலங்களை அனுபவித்தாள்? 

தன்  மகனுக்காக.

நமது மீட்பருக்காக. அதாவது நமது மீட்புக்காக.

இயேசு எவ்வாறு 
வாழ்நாள் முழுவதும் நமது மீட்புக்காக துன்பங்களையும் பாடுகளையும் இறுதியில் மரணத்தையும் ஏற்றுக் கொண்டாரோ

 அதேபோல அன்னை மரியாளும் நமது மீட்புக்காக தனது வாழ்நாள் முழுவதும் வியாகுலங்களை  ஏற்றுக் கொண்டாள்.

நமது மீட்புக்காக இயேசு பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.


அன்னை மரியாள் நமது மீட்புக்காக தனது வாழ்நாள் முழுவதும் வியாகுலங்களை  ஏற்றுக் கொண்டாள்.

நாம் நமது மீட்புக்காக நமது வாழ்நாளில் என்ன செய்கிறோம்?

இயேசுவைப்போல் சிலுவையை ஏற்றுக் கொள்கிறோமா?

அன்னை மரியாளைப் போல் வியாகுலங்கள் ஏற்றுக் கொள்கிறோமா?

அல்லது சிலுவைகள் வரும்போது அவற்றை நீக்கும்படி  இயேசுவிடமே வேண்டுகிறோமா?

அல்லது மனக்கவலைகள் வரும்போது அவற்றிலிருந்து விடுவிக்கும்படி வியாகுல மாதாவையே கேட்கிறோமா?

சிந்தித்துப் பார்ப்போம்.

பிரசவ வலியின்றி பிள்ளை பெற்ற முடியாது.

சிலுவையும், வியாகுலமும் இன்றி விண்ணகம் அடைய முடியாது.

நமக்கு சிலுவையும், வியாகுலமும் வரும்போது அவற்றிலிருந்து தப்பிக்க முயல்வதற்குப் பதிலாக 

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுப்போம்.

 அதற்கான மனப்பக்குவத்தைத் தரும்படி  வியாகுல மாதாவை நோக்கி வேண்டுவோம்.

லூர்து செல்வம்.