Friday, August 21, 2020

கர்த்தர் கற்பித்த செபம் கற்பிக்கும் பாடம்.

http://lrdselvam.blogspot.com/2020/08/blog-post_21.html


கர்த்தர் கற்பித்த செபம் கற்பிக்கும் பாடம்.

***************************************


இறைமகன் இயேசு ஒரு நல்ல ஆசிரியர்.


ஆசு + இரியர் = ஆசிரியர்

குற்றத்தை நீக்குபவர்.


உலக ரீதியான ஆசிரியருக்கு குற்றம் அற்ற கல்வியைக் கற்பிப்பதும்,


குற்றமற்ற மாணவனை உருவாக்குவதும் கடமை..


மாண் + அவன் = மாணவன்


மாண் =  சிறந்த. 


மாணவன் = சிறந்தவன்.


ஆக, ஆசிரியர் என்றாலே தன் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டவரை சிறந்தவர் ஆக்குபவர்தான்.


நமது ஆன்மீக ஆசிரியராகிய இறை மகன் இயேசு மனிதனாகப் பிறந்ததே நமது பாவங்களை நீக்கி நம்மை பரிசுத்தராக மாற்றுவதற்காகததான். .


அவர் அறிவித்த நற்செய்தி நம்மில் இரண்டு வகையில் செயல்படுகிறது.


முதலாவது விண்ணகம் செல்ல வழியாகச் செயல்படுகிறது.


 "நானே வழி" என்றார் இயேசு. 


அவரது நற்செய்தி வழியாக


 வழியாகிய இயேசுவே நமக்குள் வருகிறார். 


அவர் வழியாக விண்ணோக்கிப் பயணிக்கிறோம்.


நமது ஆன்மீகப் பயணத்தில்


 துவக்கமும் அவர்தான், (starting point)


வழியும் அவர்தான், (track)


நோக்கமும அவர்தான். (finishing point)


இரண்டாவது,


நமது விண்ணகப் பயணத்தின் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான பாடமாகவும் செயல் படுகிறது.


நமது இறையாசிரியர் நற்செய்தி வழியாகப் பாடம் நடத்துகிறார்.


பாடத்தில் விசய ஞானமும் இருக்கிறது. கற்றதை எப்படிச் செயல் படுத்துவது  என்பதற்கான அறிவுரையும் இருக்கிறது.


நற்செய்தியை உள்வாங்கியவர்கள் அறிவோடு ஆற்றலும் பெறுகிறார்கள்.


இயேசுவாகிய வழியைப் பற்றிய அறிவும், அவ்வழியே பயணிப்பதற்கான ஆற்றலையும் பெறுகிறார்கள்.


இவ்விரண்டையும் தருவது இயேசுவின் நற்செய்திதான், அதாவது இயேசுவேதான்.


"உண்மையும் நானே, வழியும் நானே."


நாம் அறியவேண்டிய உண்மையும் இயேசு தான். உண்மை காட்டும் வழியும் இயேசுதான்.


இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்த செபமும் ஒரு நற்செய்திதான்.


செபத்தின் இயல்பே நம்மையும் இறைவனையும் இணைப்பதுதான்.


அதாவது செபத்தின் வழியே இறைவனோடு இணைகிறோம்.


கர்த்தர் கற்பித்த செபம் நாம் தந்தையோடு இணைய வழியையும் காண்பிக்கிறது, 


அவ்வழியே எப்படிச் செல்வது என்ற பாடத்தையும் சொல்லித்தருகிறது.


"பரலோகத்தில்  இருக்கிற எங்கள்  பிதாவே! "



இயேசு இறைமகன். 


தன் தந்தையை "எங்கள் தந்தையே" என்று அழைக்கச் சொல்கிறார்.


'எங்கள்' மனுக்குலம் முழுவதையும் குறிக்கும்   பிரதிப் பெயர்ச்சொல்.

( pronoun)


நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட முறையில் நமக்காக செபிக்கவில்லை.


"என் தந்தையே" என்று இயேசு சொல்லித்தரவில்லை. 


ஆகவே மனுக்குலம் முழுவதுக்குமாக செபிக்கிறோம்.


சாதி, இன, மத, மொழி, இட, கொள்கை வேறுபாடு இன்றி அனைவருக்காகவும் செபிக்கிறோம்.


கடவுளை நம்பாதவர்களும் தந்தையின்  பிள்ளைகளே. நமது செபத்தில் அவர்களும் அடங்குவார்கள்.


நம்மை வெறுப்பவர்களும் நமது செபத்தில் அடங்குவார்கள்.


"எங்கள்'' என்ற சொல்லின் பொருள் உணர்ந்து செபித்தால், 


மற்றவர்கள் மீது நமக்கு ஏதாவது கோப தாபம். வெறுப்பு இருந்தாலும் மறைந்துவிடும்,


 

'நம்மைப்போல் பிறரையும் நேசிக்க வேண்டும்' 


என்ற இயேசுவின் கட்டளையை நிறைவேற்றி விட்டுதான்


 தந்தை இறைவனிடம் நமது மன்றாட்டுகளைச் சமர்ப்பிக்கின்றோம்.


இயேசு தந்தையின் முன் நாம் ஏழு மன்றாட்டுகளை சமர்ப்பிக்கும்படி கற்பிக்கிறார்.


இந்த ஏழில் ஆறு  முழுக்க முழுக்க நமது ஆன்மீகம் சம்பந்தப்பட்டவை.   


 ஒன்றே ஒன்றுதான் உணவு போன்ற நமது தேவைகள் சம்பந்தப்பட்டது.


ஆன்மீகம் சம்பந்தப்பட்டவற்றில்


 மூன்று இறைவன் சம்பந்தப்பட்டவை.


மூன்று நமது ஆன்மா சம்பந்தப்பட்டவை.


ஒவ்வொரு மன்றாட்டாகப் பார்த்து, அதில் அடங்கியுள்ள வழியையும், பாடத்தையும் பார்ப்போம்.



முதல் மன்றாட்டு:


1.உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்

படுவதாக.


அர்ச்சித்தல் என்றால் தூய தாக்குதல், பரிசுத்தப்படுத்துதல் என்று பொருள்.


'இறைவன்' என்பதே அவர் பெயர் தான். பெயரை அதற்கு உரியவரிடமிருந்து பிரிக்க முடியாது.


மரியே வாழ்க என்று சொன்னால் அந்த பெயருக்கு உரியவர் வாழ்க என்பதுதான் பொருள்.


இறைவன் தூயவர், பரிசுந்தர்.



இறைவன் இயல்பிலேயே பரிசுத்தர்.


 அவரை யாரும் பரிசுத்தர் ஆக்கவில்லை,   ஆக்கவும் முடியாது.


 ஒளிக்கு யாராவது ஒளி கொடுக்க முடியுமா?


 அவர் அளவில்லாத விதமாய் பரிசுத்தர். 


அளவில்லாத பரிசுத்தத்தை  அதிக பரிசுத்தம் ஆக்க முடியாது.


ஆனால்,  உம்முடைய நாமம்  அர்ச்சிக்கப்படுவதாக என்று செபிக்கிறோம்..


அதாவது உமது பெயர் புனிதமாக்கப் படுவதாக என்று செபிக்கிறோம்.


ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை,


"வாழ்க" என்று வாழ்த்துவது நமது பழக்கம்.


 நாம் வாழ்த்துவதால் அவர்  வாழவில்லை.


 ஆனாலும் நாம் அப்படி வாழ்த்தும்போது, 


அவர் வாழ்வதால் நாம் மகிழ்கிறோம் என்பதை  அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தெரிவிப்பதால் என்ன பயன்?


அவருக்கும் நமக்கும் உள்ள உறவு நெருக்கம் ஆகிறது.


பெரியவர்களை வாழ்த்துவது நாம் அவர்களோடு நெருங்க ஆசிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்ளத்தான்.


நாம் நண்பர்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு  Good Morning ம் நமது நட்பை வலுப்படுத்துகிறது.


அதேபோல்தான்,


 இறைத் தந்தையுடன் நாம் கொண்டுள்ள உறவை 


 அதிகப்படுத்த, '


வலுப்படுத்த, 


நெருக்கமானது ஆக்க, 


நாம் விரும்புகிறோம்


 என்பதை தந்தையிடம் தெரிவித்துக் கொள்ளவே நாம் அவரை நோக்கி வாழ்த்துகிறோம்.


நமது வாழ்த்து அவரை புனிதமாக்காது, அவர ஏற்கனவே புனிதர்.


அவரை வாழ்த்துவதற்காகவே "உம்முடைய நாமம்  அர்ச்சிக்கப்படுவதாக"


 என்று சொல்லுகிறோம்.


இறைவனை வாழ்த்துவது நாம் அவரோடு நெருக்கமாக வழி.


இறைவனோடு நெருங்க வேண்டுமென்றால் 


அவரை வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது 


இயேசு நமக்கு கற்றுத்தரும் பாடம்.


"தந்தையே நீர் வாழ்க."


"இயேசு நாமம் வாழ்க"


"தூய ஆவியானவரே வாழ்க."


"Praised be Our Lord."


இவை எல்லாம் நம்மில்  இறை உறவு வளர நாம் செய்யத்தக்க மன வல்லப செபங்கள்.



"அருள் நிறை மரியே வாழ்க."


என்பது நம் தாயோடு நம் உறவு வளர சொல்லத்தக்க மன வல்லப செபம். .


 


இரண்டாவது மன்றாட்டு:


2. உம்முடைய  ராஜ்ஜியம்  வருக, 


நாம் வாழும் பிரபஞ்சத்திற்கு அரசரே நமது தந்தைதான். ஏனெனில் அதை படைத்தவர் அவர்தான்.


நம்மை படைத்தவரும் அவர்தான்,


 அவரை ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் எல்லோரும் அவரது அரசில்தான் இருக்கிறோம்.


உலக அரசிலும்  மன்னனை பிடிக்காதவர்கள் இருப்பதில்லையா? அதேபோல்தான்.


 நாம் அவரை ஏற்றுக்கொண்டால் நிலையான விண்ணக அரசுக்குத்  தகுதி உள்ளவர்களாவோம். 


அரசர்தான் மக்களுக்கு கட்டளைகள் கொடுக்க முடியும்,


 இறைவன் நமக்கு 10 கட்டளைகள் கொடுத்திருப்பதில் இருந்தே அவர்தான் நமது அரசர் என்பதைத் தெரிந்து  கொள்கிறோம்.


கட்டளைகளை அனுசரித்தால் நிலைவாழ்வு, அனுசரிக்காவிட்டால் நிலையான பிரிவு. (நரகம்)


உலகம் முழுமைக்கும் இறைவன் தான் அரசர்.


ஆயினும் யார் இறைவனை அரசராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களது இதயத்தில்தான் இறையரசு இருக்கிறது.


தந்தையை நோக்கி 


"உம்முடைய  ராஜ்ஜியம்  வருக,"


என்று நான் சொல்லும்போது,


" தந்தையே, நாங்கள் உமது அரசை எங்கள் இதயத்தில்  ஏற்றுக் கொள்கிறோம், 


உமது கட்டளைகளின்படி நடப்போம், உமது  நிலையான அரசுக்குள் எங்களை ஏற்றுக்கொள்ளும்"

 என்று சொல்லுகிறோம்.


தந்தையின் அரசை இதயத்தில்  ஏற்றுக் கொள்வது மட்டும்தான் நிலையான அரசுக்கான வழி.


நிலை அரசை அடைய வேண்டுமென்றால் தந்தையின் அரசை ஏற்றுக்கொண்டு அவரது கட்டளைகளின் படி நடக்க வேண்டும் என்பது இயேசு நமக்கு கற்பிக்கும் பாடம்.


மூன்றாவது மன்றாட்டு:


3."உம்முடைய சித்தம்  பரலோகத்தில்  செய்யப்படுவது  போல  பூலோகத்திலும்  செய்யப்படுவதாக."


சித்தம் என்றால் விருப்பம்.


நம்மைப் பொருத்தமட்டில் தந்தையின் 

 விருப்பம் என்ன என்பதை அவர் நமக்குக் கொடுத்துள்ள கட்டளைகள் மூலம் தெரிவித்திருக்கிறார்.


 நாம் எல்லாவற்றிற்கும் மேலாக  இறைவனை நேசிக்க வேண்டும்,


நம்மை நாம் நேசிப்பது போல் நமது அயலானையும் நேசிக்க வேண்டும்    என்பது நமது தந்தையின் விருப்பம்.


பரலோகத்தில் வாழும் சம்மனசுகளும், புனிதர்களும்   நிரந்தரமாக செய்து கொண்டிருக்கும் ஒரே பணி அன்பு செய்வது மட்டும்தான்.


இடைவிடாமல் அன்பு செய்வதன் மூலம் விண்ணுலக வாசிகள் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்,


என்று பூலோக வாசிகள் அனைவரும் இறைவனையும்,     ஒருவரை ஒருவரையும் அன்பு செய்கிறார்களோ 


அன்றுதான் அவர்கள் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள்.


இன்றைய மனிதன் தன்னைத் தானே அன்பு செய்து, தனக்காகவே

 வாழ்ந்து கொண்டிருக்கிறான்,


 இந்நிலை மாறி இறைவனையும் பிறரையும் அன்பு செய்து இறைவனுக்காக வாழும் நிலை வரவேண்டும்.


 அந்நிலை வர அருள்வரம் பொழியும் படி தந்தையை வேண்டுகிறோம்.


சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும்   இறைவனையும் பிறரையும் அன்பு செய்வது மட்டுமே விண்ணரசு அடைய வழி.


அன்பு மட்டுமே விண்ணுலகம் செல்ல வழி என்ற பாடத்தை இயேசு இம் மன்றாட்டின் மூலம்  கற்பிக்கிறார்.


நான்காவது மன்றாட்டு :


4. எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும்.


வினாடிகளை நிமிடத்தின் கணம் (Set) என்பார்கள்.


மணியை நிமிடங்களின் கணம்  என்பார்கள்.


நாளை மணிகளின் கணம்  என்பார்கள்.


ஆண்டை நாட்களின் கணம்  என்பார்கள்.


ஒரு வினாடியில் அந்த வினாடியை மட்டுமே வாழ முடியும்,


அடுத்த வினாடியை வாழ முடியாது.


இது நிமிடத்துக்கும், மணிக்கும், நாளுக்கும் பொருந்தும்.


ஒரு நாளில் அடுத்த நாளை வாழ முடியாது.


மறுநாள் வருமா வராதா என்பதே  நமக்குத் தெரியாது.


அந்தந்த நாளை அன்றன்றுதான் வாழ வேண்டும்.


இறைவன் நம்மை ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும் நம்மைப் பராமரித்து வருகிறார்.


நமது பிள்ளையை வெளியூருக்கு அனுப்பும்போது,


"பத்திரமாய் போய், வா "


என்று சொல்லி அனுப்புகிறோம்.


உடன் போவதில்லை.


ஆனால் கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.


அன்றன்றைய தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்து வருகிறார்.


அன்றன்றைய தேவைகளை அன்றன்றுதான் பயன்படுத்த முடியும்.


நாளைய தேவைகளை இன்று பயன்படுத்த முடியாது.


உலக நியதிப்படி பல ஆண்டுகளுக்கான  தேவைகளை இன்றே சேமித்து வைத்துக் கொள்கிறோம்.


ஆனால் இறைவன் நியதிப்படி நம்மிடம் சுய முயற்சியோடு ஆழமான விசுவாசம் இருந்தால் 


அன்றன்றய தேவைகளை  அன்றன்றே  இறைவன் பூர்த்தி செய்வார்.


தேவைக்குப் போக மீதி இருப்பவற்றை தேவையுள்ள அயலானோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.


அதனால்தான் இயேசு, 


"எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும்."


என்று சொல்லித்தந்தார்.


"ஒரு மாதத்திற்கான உணவை இன்று தாரும்" என்று கேட்கவில்லை


"இன்றைக்கு தேவையான உணவை இன்று தாரும்" என்றுதான் கேட்கிறோம். 


அதாவது,


"தந்தையே,


 எனது முயற்சியின் விளைவாக என்னிடம் இம்மாதம் முழுவதற்கும் போதுமான உணவு இருக்கிறது,


 ஆனால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் சாப்பிட முடியும்.


  என் தேவைக்குப்  போக மீதி இருப்பதை  தேவைப்படும் அயலானுக்குக் கொடுத்து உதவுகிறேன்.


 இப்போது வேறு யாருக்கும் தேவை ஏதும் இல்லாவிட்டாலும், எப்போது தேவை இருக்கிறதோ அப்போது கொடுத்து உதவுவேன்.


 எனது அன்றன்றைய தேவைகளை நீர் அன்றன்று பூர்த்தி  செய்வீர் என்று உறுதியாக விசுவசிக்கிறேன்."


நாம் நமது எதிர்காலத்துக்கு மட்டுமல்லாமல் நம்முடைய  சந்ததியாருடைய எதிர்காலத்திற்கும் சேமிக்க விரும்புகிறோம்.


இது  உலகியல் மதிப்பீடு, 


கிறிஸ்தவ மதிப்பீடு அல்ல.


அயலானுக்கு உதவி வாழ்வதே விண்ணகம் செல்லும் வழி.


விண்ணகம் செல்ல வேண்டுமென்றால், 


எல்லாவற்றையும் நமக்கே சேமித்து வைத்துக்கொள்ளாமல், 


நமது  அயலானுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்று இயேசு பாடம் கற்பிக்கிறார்.


குறைவான விசுவாசம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கடினமான பாடம்,


 ஆழமான விசுவாசம் உள்ளவர்களுக்கு மிக எளிதான பாடம்,



ஐந்தாவது மன்றாட்டு:


5. எங்களுக்கு தீமை  செய்பவர்களை  நாங்கள்  பொறுப்பது போல  எங்கள் பாவங்களைப்  பொறுத்தருளும்,  


மன்னிப்பதற்கென்றே  இயேசு மனிதனாகப் பிறந்தார்.


நாம் அனைவரும் பாவிகள்.


 நம் எல்லோருக்கும் மன்னிப்புத் தேவைப்படுகிறது.


 கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு  கேட்கும் முன் 


நாம் நமக்குத் தீமை செய்த மற்றவர்களை   மன்னிக்க வேண்டும்,


 நம்மால் மன்னிக்க முடியாவிட்டால் இறைவனிடம் மன்னிப்பு கேட்க நமக்கு தகுதி இல்லை.


நமது பாவங்களுக்கு இறைவனிடமிருந்து மன்னிப்பு பெறுவது ஒன்றுதான் விண்ணகம் செல்ல வழி.


நாம் மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் நமது அயலானை நாம் மன்னிக்க வேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்றுத் தருகிறார்.



ஆறாவது மன்றாட்டு:


6.எங்களைச் சோதனையில்   விழவிடாதேயும்.


சோதனைக் காரன் என்று ஒருவன் இருக்கிறான். அவன்  வேலையே சோதிப்பதுதான்.


 அவனது சோதனையின் விளைவாகத்தான் நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.


 அவன் இன்றும் கர்ஜிக்கும் சிங்கம் போல் யாரை விழுங்கலாம்  என்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான்.


 ஆகவே அவன் நம்மையும் சோதிப்பான்.


 இயேசுவின் பொதுவாழ்வு ஆரம்பிக்குமுன் அவரையே சோதித்தான்.


 அவர் கடவுள்.


 நமக்கும் சோதனைகள் வரும் என்று நமக்கு பாடம் கற்பிக்கவே தன்னைச் சோதிக்க அவனுக்கு அனுமதி கொடுத்தார்.


 நாம் அவனைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை,


 ஏனென்றால் கடவுள் நம்மோடிருக்கிறார்.


சோதனைகளை வென்று நமது ஆன்மாவைப் பரிசுத்தமாகக் காப்பாற்றிக் கொள்வதுதான் விண்ணுலகில் நுழைய வழி.



சோதனைகளை வெல்ல தந்தையின் உதவியை கேட்க வேண்டும் எந்த பாடத்தை இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.


ஏழாவது மன்றாட்டு :


 7. தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்.. 


   நமது ஆன்மிகப் பயணத்தில் பாவம் ஒன்றுதான் தீமை. பாவம் ஒன்றுதான் நம்மை இறை உறவிலிருந்து  பிரிக்கும்.


ஞானஸ்நானத்தின்போது நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தை மாசுபடாமல் பாதுகாத்துப் பயணித்தால்தான்  விண்ணகம் செல்லமுடியும்.


துன்பங்களாலோ, , துயரங்களாலோ , நோய் நொடிகளாலோ  மரணத்தாலோ  நம்மை இறைவனிடமிருந்து  பிரிக்க முடியாது.


பாவத்தால் மட்டுமே அது முடியும்.


 பாவம் எதுவும் செய்யாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வது ஒன்றுதான் விண்ணகம் செல்ல வழி,


நான் பலகீனமானவர்கள். இறைவன் உதவி இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது.


ஆகவே நம்மை பாவத்தில் விழாமல் பாதுகாக்கும்படி தந்தையின் உதவியை தேடுகிறோம்.


நாம் நமது தந்தையைச் சார்ந்து வாழ்வதே தந்தைக்கும் பெருமை.


தந்தையின் அருள் உதவி இருந்தால் மட்டுமே பாவத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற பாடத்தை  இயேசு நமக்கும் கற்பிக்கிறார்.


கர்த்தர் கற்பித்த செபம் தந்தை இறைவனுக்கும், அவரை அடையத் தேவையான ஆன்மீக பரிசுத்தத் தனத்திற்கும் அதிக முக்கியதுவம் கொடுக்கிறது.


இறைவனைப் புகழ்கிறோம்.


அவரை அடையத் தேவையான பரிசுத்தத் தனத்தை நமக்குத் தந்தருள அவரை வேண்டுகிறோம்.


நமது தேவைகளை பொருத்தமட்டில் அன்றாடத் தேவையில்லை  அன்றன்றைக்கு தந்தை பூர்த்தி செய்வார் எங்க உறுதியான விசுவாசத்தை தந்தைக்கு தெரியப்படுத்துகிறோம்.


மிக முக்கியமான அம்சம், நாம் ஒவ்வொருவரும் மனுக் குலத்தின் சார்பாக நமது மன்றாட்டுக்களை சமர்ப்பிக்கிறோம்.


இயேசு தன்னையே தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது,


மனுக்குலம் முழுவதின்  மீட்புக்காகத்தான்.


ஆகவேதான் மனுக்குலம் முழுவதற்குமாகத்தான் செபிக்க நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.


மனுக்குலம் முழுவதும் மனம் திரும்பி இயேசுவின் வழிக்கு வர வேண்டும்.


மனிதர் எல்லோரும் மீட்கப்பட வேண்டும். 


அதுவே  தந்தையின் சித்தம்.


தந்தையின் சித்தம் நிறைவேற  பாடுபடுவோம்.


ஆழமான விசுவாசத்தோடு தந்தையிடம் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிப்போம்.


விண்ணகத்தில் தந்தையோடு இணைவோம்.


லூர்து செல்வம்

No comments:

Post a Comment