Monday, August 31, 2020

பைபிள் வழி நிலை வாழ்வு.

http://lrdselvam.blogspot.com/2020/08/blog-post_31.html

பைபிள் வழி நிலை வாழ்வு.
****************************************

ஒரே புகை வண்டியில் அருகருகே அமர்ந்து 

ஒரு கத்தோலிக்க குருவானவரும்,

 கடவுள் நம்பிக்கை இல்லாத  ஒரு  விண் வெளிப் பயணியும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

குருவானவர் அமைதியாக பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார்.

பயணியின் கண்கள் குருவானவரது முகத்திலேயே பயணித்துக் கொண்டிருந்தன.

வெகுநேரம் கழித்து,

"Hello!"

"Yes"

"உங்களோடு இரண்டு வார்த்தை பேசலாமா?"

"தாராளமாக."

"எனது விண்வெளிப் பயணத்தின் போது விண்வெளியில் வெகுதூரம் பலமுறை பயணித்திருக்கிறேன்

 ஆனால் ஒரு போதும் எங்கும் கடவுளைக் காணவில்லை. 

கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்கிறீர்கள்,

 ஆனால் நான் அவரைப் பூமியிலும் காணவில்லை, விண்வெளியிலும் காணவில்லை.

 என் கண்களுக்கு புலப்படாமல் அப்படி அவர் எங்கேதான் இருக்கிறார்?"

"கடவுள் எங்கும் இருக்கிறார். அவரைப் பைபிள் வழியாகப் பார்த்தால்  மட்டுமே தெரிவார்".

"கொஞ்சம் பைபிளைத் தாருங்கள்."

குருவானவர் கொடுத்தார்.

பயணி பைபிளை கண்ணுக்கு முன் வைத்துக்கொண்டு, உற்று நோக்கினார்.

"ஒரு புத்தகம் மட்டுமே தெரிகிறது.
 கடவுள் தெரியவில்லை."

"உங்கள் எண்ணங்கள் எங்கு இருக்கின்றன?"

"எனது மனதில்."

"உங்களது மனது எங்கே இருக்கிறது?"

"எனக்குள்."

"நான் உங்களைப் பார்க்கிறேன், ஆனால் உங்களுக்குள் இருக்கும் மனது எனக்குத் தெரியவில்லையே!"

"தெரியாது. எனெனில் மனது ஊனக் கண்களுக்குத் தெரியாது.

 உங்களுக்கும்தான் மனது இருக்கிறது.  எனக்கும் தெரியவில்லை."

"அதாவது ஊனக் கண்களுக்குத் தெரியாதது எல்லாம் இல்லை என்று அர்த்தம் இல்லை. சரியா?"

"நீங்கள் பேசுகிறீர்கள்.

 உங்களது எண்ணங்களை வெளியிடுகிறீர்கள்.

 எண்ணங்கள்  மனதில்தான் இருக்கின்றன.

 ஆகவே நீங்கள் வெளியிடும் எண்ணங்களை வைத்து 

அவை இருந்து புறப்படுகிற மனது

 இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

 எனது புத்தியின் மூலமாக."

" காரணமில்லாமல் காரியமில்லை என்பது புத்திக்குத் தெரியும்.

பிரபஞ்சத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

 அது இல்லாமல் பிரபஞ்சம் தோன்றியிருக்க முடியாது என்று புத்திக்கு தெரிந்திருக்க வேண்டுமே!

அந்தக் காரணத்தைத்தான் கடவுள் என்கிறோம்."

காரணமில்லாமல் காரியமில்லை, அப்படியானால் கடவுளுக்கும் ஒரு காரணம் வேண்டுமே, அது யார்?"


"நாம் பயணம் செய்யும் இந்த புகைவண்டிக்கு எத்தனை பெட்டிகள்?

"12 பெட்டிகள் இருக்கலாம்."

"அப்படியே வைத்துக் கொள்வோம். 12வது பெட்டியை எந்தப் பெட்டியோடு கோர்த்திருக்கிறார்கள்?"

"11வது பெட்டியோடு."

"அதாவது 12-ஆவது பெட்டியை இழுப்பது 11ஆவது பெட்டி. சரியா?"

"சரி."

"அப்படியே ஒவ்வொரு பெட்டியையும் இழுப்பது அதற்கு முந்திய பெட்டி. சரியா?"

"சரி."

"இரண்டாவது பெட்டியை இழுப்பது முதல் பெட்டி. முதல் பெட்டியை இழுப்பது எது?"

"எஞ்சின். உண்மையில் எல்லா பெட்டிகளையும் இழுப்பது எஞ்சின்தான்."

"எஞ்சினை இழுப்பது?"

"எஞ்சினை எதுவும் இழுக்கவில்லை. அதுதான் எல்லா பெட்டிகளையும், இழுத்துக்கொண்டு போகிறது."

"இப்போ புத்தியில் ஒன்று பட வேண்டுமே!
 
பெட்டிகள் எதுவும் தாமாகவே அசைய முடியாது.

ஒவ்வொரு பெட்டியின் அசைவிற்கும் காரணம் அதற்கு முந்திய பெட்டி,

 ஆனாலும் எல்லாப் பெட்டிகளின் அசைவுக்கும் ஆதி காரணம் எஞ்சின்.

ஆதி காரணத்துக்கு, அதாவது, முதல்
காரணத்துக்கு, இன்னொரு காரணம் இருக்க முடியாது. 

ஆதி காரணமாகிய எஞ்சின் தானாக இயங்குகிறது.

அது இயங்குவதால் தான் மற்ற பெட்டிகள்  இயங்குகின்றன.

கடவுள் படைப்புகள் அனைத்திற்கும் ஆதி காரணர்.

 அவள் தாமாகவே இருக்கிறார் அவருக்கு காரணம் இருக்க முடியாது.

கடவுள் நமக்குப் புத்தியைக் கொடுத்திருப்பதே அதன்மூலம் தன்னைப்  பார்ப்பதற்காகத்தான்."

"அப்படியானால் பைபிள் எதற்கு?"

"ஒருநாள்.உங்கள் அறையைப்     பூட்டி விட்டு வெளியூருக்குச் சென்று விட்டீர்கள்.

நீங்கள் வந்து கதவைத் திறந்து பார்க்கும்போது மேஜையின் மேல் ஒரு அழகான செல்போன் இருக்கிறது

உங்கள் புத்தியில் என்ன படும்?"

''யாரோ கதவைத்திறந்து உள்ளே வந்து மேஜையின் மேல் செல்போனை வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்."

"யாரோ என்றால்?"

"போனை  மேஜை மீது ஒரு ஆள்தான்  வைத்திருக்க வேண்டும். 

 ஆனால் அந்த ஆள் கருப்பா சிவப்பா, நெட்டையா குட்டையா, தடியா பொடியா என்று அவரைப்பற்றிய விபரம் எதுவும் தெரியாது..

அவராக வந்து சொன்னால்தான் உண்டு."

"Correct. பிரபஞ்சத்தை படைத்தவர் கடவுள் என்று மட்டும் நமது புத்தி சொல்லும்.

 ஆனால் அவர் எப்படிப்பட்டவர் அவரது பண்புகள் எப்படிப்பட்டவை

 என்று கடவுளாகவே நமக்கு வெளிப்படுத்தினால் தான் உண்டு

பைபிள் மூலமாக கடவுள் தன்னையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

 பைபிள் இறைவனின் வார்த்தை,

 ஆகவே கடவுளைப்பற்றி அறியவேண்டுமானால்

 விண்வெளிக்குப் போக வேண்டாம்.

 பைபிளுக்குள் போனால் போதும்.

 புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்."

"அதாவது என்னை பைபிள்  வாசிக்க சொல்லுகிறீர்கள்."

"Correct."

எதற்காக பைபிள்  வாசிக்கிறோம்?

நம்மைப் படைத்த இறைவனைப் பற்றி அறிய,


இறைவனைப் பற்றி அறிய மட்டும்தான் பைபிள் வாசிக்கிறோம்.

பைபிள் ஒரு அறிவியல் நூல் அல்ல.

உலக வரலாற்று  நூல் அல்ல.

புவியியல் நூல் அல்ல.

மருத்துவ நூல் அல்ல.

சிலர் பைபிளை வாசித்து விட்டு

" இது அறிவியலுக்கு முரண்பாடாக இருக்கிறதே" என்பார்கள்.


நண்பர் ஒருவர் ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தை வாசித்து விட்டு 

"பிரபஞசம் உண்டானது பற்றி பைபிள் கூறும் கருத்துக்களும் அறிவியல் கூறும் கருத்துக்களும் ஒத்துப் போகவில்லையே."

 என்று குறைபட்டுக் கொண்டார். .

இப்படி குறைபட்டுக் கொள்வது

ஒரு சினிமா பைத்தியம் பள்ளிக்கூடத்தை சுற்றிப் பார்த்துவிட்டு,

" இது சினிமா தியேட்டர் மாதிரி இல்லையே"

 என்று சொல்வது போல் இருக்கிறது.


அறிவியல் கடவுளால் படைக்கப்பட்ட ஜடப் பொருளைப் (matter) பற்றியது.

பைபிள் உருவமற்ற, ஆவியாகிய (Spirit) இறைவனைப் பற்றியது.

இறைவன் தான் எல்லா படைப்புகளுக்கும்  ஆதி காரணர் என்ற உண்மையை பைபிள் மூலம் வெளிப்படுத்துகிறார்.

அது அறிவியல் பாடம் அல்ல.

இறைவார்த்தையை வாசித்தால் மட்டும் போதாது. அதைச் சரியாக புரிந்து கொள்ளவும்  வேண்டும்.

 பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்ற அறிவியல் செய்தியை
பைபிளில் தேடுவது

 சமையலறைக்குப் போய் ஆட்டுக் குட்டியைத்   தேடுவதற்குச் சமம்.

இறைவனுடைய அன்பு,  இரக்கம், கனிவு, நீதி, சர்வவல்லமை, ஞானம் போன்ற பண்புகள்

அளவற்ற அன்பின் காரணமாக அவர் மனிதனை படைத்ததிலும்,

அவன் பாவம் செய்தபோது
அவன் மீது இரங்கி, 
அவன் செய்ய வேண்டிய பாவப்
பரிகாரத்தை அவரே செய்வதற்காக.
மனிதனாய் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில்   தன்னையே பரியாக்கியதிலும் 

வெளிப்பட்டதை அறிய  பைபிள் வாசிக்க வேண்டும்.

நாம் மீட்புப் பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு விளக்குவது இறைவார்த்தை.

பைபிள் நமது இரட்சண்யத்தின் பாதை.

விண்ணகம் செல்ல வழிகாட்டுவது பைபிள்,

இறைவார்த்தை ஆன்மீக வாழ்விற்கான உணவு,

இவ்வுலக வாழ்விற்கான உணவு அல்ல.

இது நமது ஆன்மாவின் இரட்சணிய வரலாறு

உலக வரலாறு அல்ல.

கிறிஸ்து  அகுஸ்துஸ் செசார் மன்னன் ரோமையை ஆண்டு கொண்டிருந்தபோது பிறந்த ஒரு வரலாற்று மனிதர். 

கடவுள் உண்மையாகவே மனிதனாய் பிறந்தார்.

ஆனால் அவர் மனிதனாகப் பிறந்தது உலக வரலாற்றை படைப்பதற்காக அல்ல

 ஆன்மீக, இரட்சண்ய வரலாற்றைப் படைப்பதற்காக.

அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இவ்வுலகில் நாம் எப்படி ஆன்மீக வாழ்வை வாழ வேண்டும் என்பதற்கான வழி காட்டக் கூடியது.

அவர் வாழ்ந்து  பாடுபட்டு  மரித்தது நமது ஆன்மீக விடுதலைக்காக,

 அரசியல் விடுதலைக்காக அல்ல.

அவரது நற்செய்தி நமது அருளாதார வாழ்வுக்காக 

பொருளாதார வாழ்வுக்காக அல்ல.

நாம் பைபிள் வாசிப்பது பட்டிமன்றத்தில் பேசுவதற்காக அல்ல 

Quiz programme ல் கலந்து கொள்வதற்காக அல்ல,

வசனங்களை எடுத்துக்கொண்டு சண்டை போடுவதற்காக அல்ல,

வாழ்ந்து மீட்பு அடைவதற்காக,

அறிவியல் மூலம் இறைவனை காண புத்தி மட்டும் போதும்.

ஆனால் பைபிள் மூலம் இறைவனை காண புத்தியோடு விசுவாசமும் வேண்டும்.

புத்தியை  விசுவாசம்தான் மிக முக்கியம்.

புத்தி அறிவை மட்டுமே கொடுக்கும்,

 விசுவாசம் தான் இறைவன் மீது அன்பை கொடுக்கும்.

அறிவினால் மட்டும் இரட்சண்யம் கிடைக்காது.

விசுவாசம் இருந்தால் தான் இரட்சண்யம் கிடைக்கும்.

புத்தி மட்டும் உள்ளவனுக்கு சந்தேகங்கள் நிறைய வரும்.

 கேள்வி கேட்டே நேரத்தை வீணாக்குவான். 

 விசுவாசம் உள்ளவனுக்கு சந்தேகமே வராது.

ஆழ்ந்த விசுவாசத்தோடு இறைவார்த்தையை வாசிப்போம்,

வாசித்ததைத் தியானிப்போம்.

தியானித்ததை வாழ்வோம்.

பைபிள் வழியே நிலை வாழ்வுக்குள் புகுவோம்.

லூர்து செல்வம்

Sunday, August 30, 2020

இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.

இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.
*****************************************

தமிழில் உள்ளத்தில் இருப்பது உண்மை..(உள் + மெய்)
.
உள்ளத்தில் இருப்பதை அப்படியே சொன்னால் அது வாய்மை. (வாய்+மெய்)


மனதில் உள்ளதை உள்ளபடியே பேசுகின்றவனை உண்மை பேசுகிறான் என்போம்.

பார்த்ததை பார்த்தபடியே பேசுகிறவன்  உண்மை பேசுகிறானா?

அவனுடைய மனதில் பட்டதை சொல்வதால் அவன் அளவில் அவன் உண்மையை பேசுகிறான்.

ஆனால் பார்க்கப்பட்ட பொருளின் அடிப்படையில் அவனது கூற்று உண்மையா? உண்மை இல்லையா?

பார்க்கப்பட்ட பொருளின் வெளிப்புறத்தைதான் அவனால் பார்க்க முடியும்,

அவன் சொன்னது உண்மையாய் இருக்கலாம்.

 அவனது கூற்று உண்மையாய் இருக்கவேண்டிய அவசியமில்லை.

 

"நான் இரவில் அந்த வழியே வரும்போது வழியில் ஒரு பாம்பைப் பார்த்தேன்."

ஆனால் இரவில் கயிறு கூட பாம்பு போல் தெரியும். ஆகவே அவனது கூற்று தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உலகில் வாழும் நாம் இந்த உலகத்தைப் பற்றியும் அது இருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றியும் அறிய விரும்புகிறோம்.

விஞ்ஞானிகள் பூமியைப் பற்றியும்,

அதில் வளரும் தாவரங்கள் பற்றியும்,

 உயிரினங்களைப் பற்றியும்

 அறிவியல் முறையில் ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

அறிவியல் ஆராய்ச்சிகளினால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் மனிதனின் வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை செய்திருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளின் வழியாக 

மனிதனின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் நன்மைகளை விட தீமைகளை அதிகம் விளைவித்திருக்கின்றன  என்பது யாவரும் அறிந்த உண்மை.

காரணம்?

விஞ்ஞானிகளின் அரைகுறை ஆராய்ச்சி.

விஞ்ஞானிகள் முழுமையான ஆராய்ச்சி செய்திருந்தால்

 இன்று உலகை வாட்டிக் கொண்டிருக்கும் தீமைகளான  
அணு ஆயுதங்கள்,
சமாதானமின்மை,  
யுத்தத்தினால் ஏற்படும் அழிவு 
மனித உடலில் ஏற்படும் அநேக நோய்கள்  ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.

எப்படி அரைகுறை ஆராய்ச்சி?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்  ஆகிய ஐந்தும் உயிர் இல்லாத சடப் பொருள்கள்.

தாவரங்கள், பிராணிகள் உயிர்  உள்ள
சடப் பொருள்கள்.

மனிதனுக்கு ஆன்மாவும் இருக்கிறது.

உயிருள்ளவை தாமே இயங்கும் வளரும் இனப்பெருக்கம் செய்யும்.

உயிரற்றவை தாமாக இயங்காது வளர்ச்சி அடையாது இனப்பெருக்கம் செய்யாது.

ஆனாலும் உயிருள்ள சடப் பொருள்களும் உயிரற்ற சடப் பொருள்களால் ஆனவைதான்.
உயிர் சடப்பொருள் இல்லாத extra.

ஒரு மிருகத்தை வெட்டி ஆராய்ந்து பார்த்தால் அங்கே நிலத்திலுள்ள கனிமங்கள் இருக்கும்,

 நீர் இருக்கும்,

 காற்று இருக்கும். 

ஆனால் வெட்டிய உடனே உயிர் பிரிந்து விடும்.

விஞ்ஞானிகளால் கனிமங்களையும் தண்ணீரையும் , காற்றையும் ஆராய்ச்சி செய்ய முடியும். ஆனால் உயிரை ஆராய்ச்சி  செய்ய முடியாது.

 உயிர் வாழ்வன பற்றி விஞ்ஞானிகள் செய்யும் எந்த ஆராய்ச்சியும் முழுமையான ஆராய்ச்சியாக இருக்க முடியாது.

நமது பூமி மட்டுமல்ல

  பிரபஞ்சத்தில் உள்ள எல்லா விண்மீன்களும் கோள்களும் 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்  ஆகிய ஐந்தும் உயிர் இல்லாத சடப் பொருள்களால் ஆனவைதான்.

உயிருள்ள பொருள்  தானே இயங்கும்,

 உயிரில்லாத பொருள்   தானே இயங்க முடியாது.

அப்படியானால் பிரபஞ்சத்தில் உள்ள விண்மீன்களும்,  கோள்களும் 
தாங்களாகவே இயங்க முடியாது.

 அவற்றால் இனப்பெருக்கம் செய்யவும் முடியாது.

ஆனாலும் அவையெல்லாம் இயற்கையின் மாறாத விதிகளுக்கு கட்டுப்பட்டு 

ஒழுங்காக 

கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயங்கிக் கொண்டே இருக்கின்றன.

விஞ்ஞானிகள் பிரபஞ்சம் தோன்றி 
13.8 billion ஆண்டுகள் ஆகின்றன என்று கூறுகிறார்கள்.

இத்தனை ஆண்டுகளாக பிரபஞ்சம் இயற்கை விதிகளக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் தான் இவர்களால் இதை கண்டுபிடிக்க முடிந்தது.

பிரபஞ்சத்திற்கு உயிர் இல்லை.

 ஆனாலும் அது இயற்கை விதிகளுக்கு கட்டப்பட்டு இயங்குகிறது.


விஞ்ஞானிகள் தங்களது சிந்தனா சக்தியைச் சரியாக பயன்படுத்தியிருந்தால் 
ஒரு உண்மையைக் கண்டுபிடித்திருப்பார்கள்.

 பிரபஞ்சத்தை அதற்கு வெளியே இருந்து ஒரு சக்தி இயக்கிக் கொண்டிருக்கிறது.

பில்லியன் கணக்கான ஒளி ஆண்டுகள் தூரம் பரவிக்கிடக்கும் இப்பிரபஞ்சத்தை 

இயக்க வேண்டிய வேண்டுமானால்

 அந்த சக்திக்கு அளவு கடந்த சக்தி இருக்க வேண்டும்,

 இயற்கையின் விதிகளை (laws of nature) அந்த சக்தி தான் வகுத்திருக்க வேண்டும்,

 பிரபஞ்சத்தையே அந்த சக்திதான் படைத்திருக்க வேண்டும்.

பிரபஞ்சம் தானாகத் தோன்றியிருக்க முடியாது.

சாதாரண புத்தியுள்ள மனிதருக்கு கூட தெரியும் கடவுள்தான் பிரபஞ்சத்தையும் அதிலுள்ள அனைத்து உயிர்வாழ் பிராணிகளையும் படைத்தவர் என்று.

பிரபஞ்சம் உருவம் உள்ளது,

 காலத்திற்கும் (time) இடத்திற்கும் (Space)  உட்பட்டது.

அதாவது அதற்கு துவக்கமும் உண்டு முடிவும் உண்டு.

அது இடத்தை அடைத்துக்கொள்ளும்.
(It occupies space)

ஆகவே அதைப் படைத்து,

 இயக்கும் கடவுள் 

உருவமற்றவர் ஆகவும், 

காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர் ஆகவும், 

துவக்கமும், முடிவும் இல்லாதவராகவும்,

சர்வ வல்லவராகவும் இருக்க வேண்டும்.

அறிவியல் மட்டும்தான்  உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் 

கடவுளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால்தான் 

அவர்களுடைய ஆராய்ச்சி அரைகுறை ஆகிறது.

சடப் பொருள்களின் அமைப்பு

 (பௌதிகம், ரசாயனம், தாவரவியல், உடலியல்) 

பற்றிய அவர்களுடைய ஆராய்ச்சி உண்மையாய் இருக்கலாம்.

 ஆனால் அவற்றின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியில் உண்மை இல்லை.

கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானிகளுக்கு ஒழுக்க நெறிகள் (Moral laws) பற்றி கவலை இல்லை. 

 ஆகவேதான் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் மனிதனுடைய  அழிவுக்கு  காரணமாக இருக்கின்றன.

உலகப் போரின்போது அணு குண்டுகளால் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை மனித இனம் மறக்காது.

கொரோனாவுக்குப் பயப்படும் அரசுகள் ஏன் அணுகுண்டுகளை வைத்திருக்கின்றன?

இரண்டாம் உலகப் போரில் மட்டும் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டிருக்கின்றனர்.

Over 60 million people died in World War II.

20ம் நூற்றாண்டில் மட்டும் போர்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 108 million!

இப்போது சொல்லுங்கள் அதிகமான மனித இன அழிவிற்கு காரணமானவர்கள்

அணு ஆயுதங்களைக் கண்டு பிடித்த விஞ்ஞானிகளா, ஆயுதங்களை வைத்திருக்கும் அரசுகளா, கொரோனாவா?

மனிதன் சடப் பொருளாகிய உடலும் ஆவிப் பொருளாகிய ஆன்மாவும் சேர்ந்தவன்.

ஆன்மாதான் உடலை  இயக்குகிறது.

ஆன்மாதான் சிந்திக்கிறது.

உடலை ஆள்வது ஆன்மாவின் எண்ணங்கள் தான்.

எண்ணங்களுக்கு உருவம் இல்லை.

உருவமில்லாத எண்ணங்களால் தான் உருவமுள்ள உடல் இயங்குகிறது.

இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும்.

உருவம் உள்ள பிரபஞ்சத்தை 
உருவம் இல்லாத கடவுள் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆதிகாரணராகிய அவர் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவுக்கும் காரணமாக இருக்கிறார்.

அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கடவுள் நம்பிக்கை இருந்தால்தான்

 தங்களது  ஆராய்ச்சியால்

 கடவுளுடைய பிள்ளைகளுக்கு

 எந்தவித ஆபத்தும் இல்லாதபடி பார்த்துக்கொள்வார்கள். 

மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்.

"நானே உண்மை" (I am the Truth.) என்றார் நம் ஆண்டவர்.

உண்மை மயமான இறைவனை நம்புபவர்களால்தான்   

அவரது படைப்பு பற்றிய முழு உண்மையையும் அறிய முடியும்.

இறை நம்பிக்கை இல்லாதவர்கள்  அரைகுறை உண்மையைத்தான் கண்டுபிடிக்க முடியும்.

பொய்யை விட அரைகுறை உண்மை அதிக ஆபத்தானது,

 இறை நம்பிக்கை இல்லாத அறிவியலில் முழு உண்மை இருக்க முடியாது.

இறைவனை நம்புங்கள். அப்புறம் ஆராய்ச்சி செய்யுங்கள்.

லூர்து செல்வம்.

Saturday, August 29, 2020

நம்மையே இறைவனுக்குக் கொடுப்பதே உண்மையான செபம்.

நம்மையே இறைவனுக்குக் கொடுப்பதே உண்மையான செபம்.
*************************************
செபம் என்று சொன்னாலே நமக்கு நினைவுக்கு வருவது

"கேளுங்கள், கொடுக்கப்படும்"

என்ற நமது ஆண்டவரின் வார்த்தைகள் தான்.

Bank என்று சொன்னவுடன் Loan வாங்குவது நினைவுக்கு வருவது போல.

காரணம், நமக்கு கொடுப்பதில் உள்ள ஆர்வத்தை விட,  பெறுவதில் அதிக ஆர்வம் இருப்பது தான்.

இறைவன் தன் சாயலில் நம்மைப் படைத்ததன் நோக்கம் நாம் பண்புகளில் அவரைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அவர் அன்பு மயமானவர். அன்பின் ஒரு முக்கிய குணம் தன்னிடம் இருப்பதை அன்பு செய்யப்படுபவர்களுக்குக் கொடுப்பது.

தன்னைத் தருவதற்காகவே அவர் நம்மைப் படைத்தார்.

நமக்கு உடலையும், ஆன்மாவையும், அது செய்ய வேண்டிய அன்பையும் தந்தவர் அவர்.

தனது அன்பின் மூலம் தன்னையே நமக்குத் தந்தார்.

அதேபோல நாமும் நம்மையே அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

அன்பின் குணமே அது தானே.

நம்மையே இறைவனுக்கு முழுவதும் கொடுக்கும்போது நான் அவரோடு ஒன்றிக்கிறோம்.

இறைவனோடு நாம் ஒன்றிப்பது தான் செபம்.

இறைவனோடு ஒன்றித்து வாழ்வதுதான் செப வாழ்வு.

செபத்தில் கேட்பதற்கும் இடம் இருக்கிறது.

இறைவனிடம் அன்பைக்  கேட்க வேண்டும்,

அருளைக் கேட்கவேண்டும்,

அவரோடு நாம் எப்போதும்  ஒன்றித்திருக்க  உதவ வரம் கேட்க வேண்டும்.

இறைவனோடு ஒன்றித்திருக்க நமக்கு உதவுவதற்காகதான்

தினமும் சொல்லக்கூடிய சில செபங்களை திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது.

  '
திருச்சிலுவை அடையாளம், விசுவாசப்பிரமாணம்,
கர்த்தர் கற்பித்த செபம்,
மங்கள வார்த்தை செபம்,
செபமாலை.

நம்மைப் படைத்த தந்தையையும், இரட்சித்த இறை மகனையும், அர்ச்சிக்கின்ற பரிசுத்த ஆவியையும் மனதில் நினைத்து
திருச்சிலுவை அடையாளம் வரைகிறோம்.

இந்த செபத்தினால் பரிசுத்த தம திரித்துவத்தோடு ஒன்றிக்கிறோம்.

குறிப்பாக நமக்காக சிலுவையில் மரித்த இயேசுவோடு ஒன்றிக்கிறோம்.

ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் போதும்,

மற்ற செபங்களைச் சொல்லும் முன்னும்,

ஏதாவது வேலையை ஆரம்பிக்கும் முன்னும்

திருச்சிலுவை அடையாளம் வரைவதால்

நாம் வாழும் நாளையும்,
நாம் செபங்களையும் வேலைகளையும் தமதிரித்துவத்தோடு ஒன்றிக்கிறோம்.

தமதிரித்துவத்தோடு ஒன்றித்து ஒரு வேலையை ஆரம்பித்தால்

அந்த வேலை முழுவதும் தமதிரித்துவ தேவன் நமமோடிருப்பார்.

விசுவாசப்பிரமாணம் சொல்லும் போது ஒவ்வொரு விசுவாச சத்தியத்தையும் மனதில் தியானிக்க வேண்டும்.

இது நமது விசுவாசம் வளர உதவியாக இருக்கும்.

அதேபோன்றுதான் மற்ற செபங்களை சொல்லும் போதும்

மனப்பாடம் ஒப்பிப்பது போல சொல்லாமல்

சொல்லும் வார்த்தைகளை மனதில் இருத்தி தியான உணர்வோடு சொல்ல வேண்டும்.

நாம் எதை சொல்லுகிறோமோ அதில் நமது மனம் இருக்க வேண்டும்.

நாம் சொல்வதில் நமது மனம் ஒன்றித்திருப்பதைவிட கேட்பதில் அதிகம்  ஒன்றித்திருக்கும்.

நமக்குப் பிடித்தமான பேச்சாளர்கள் பேசும்போது நாம் அவர்களுடைய பேச்சில் ஒன்றித்துக் கேட்கிறோம் அல்லவா?

தியானப் பிரசங்கங்களின்போது குருவானவர்  நமக்கு தரும் இறை
வார்த்தைகளில் ஒன்றித்து

கேட்கும் அனுபவம் நம் எல்லோருக்கும் இருக்கும்.

படித்துக்கொண்டு இருந்த காலங்களில்

மூன்று நாள் தியானம் இருக்கும்.

மூன்றாவது நாள் காலையில் சுவாமியார் நரகத்தைப் பற்றி தியானம் கொடுப்பார்.

பிற்பகலில் எல்லா மாணவர்களும் பாவ சங்கீர்த்தனம் செய்ய வரிசையில் நிற்பார்கள்.

நரகத்தினுடைய effect!

சுவாமியார் பேசும்போது இந்த effect இருக்கிறதே,  நம் ஆண்டவரே நம்மோடு பேசினால் எப்படி இருக்கும்?

அவருடைய மூன்று ஆண்டு நற்செய்தி வாழ்வின்போது அவர் சொல்வதைக் கேட்க எப்போதும் ஆயிரக்கணக்கானோர் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருப்பர்.

அதே ஆண்டவர் இப்போதும் நம்மோடு
நற்செய்தி வாசிக்கும்போது பேசுகிறார்.

வாசிப்பது நாமாக இருந்தாலும் பேசுபவர் அவரே.

நமது சிந்தனை எங்கு இருக்கிறதோ அங்கேதான் நாம் இருக்கிறோம்.

நற்செய்தி வாசிக்கும்போது நமது சிந்தனை இயேசுவின் வார்த்தைகளில் மட்டும் இருக்க வேண்டும்.

வாசிக்க ஆரம்பிக்கு முன்  இயேசுவையே நமது மனக்கண் முன் கொண்டு வர வேண்டும்.

இயேசுவோடு தான் உரையாடப் போகிறோம்.

உரையாடலில் கருத்துப் பரிமாற்றம் இருக்க வேண்டும்.

சொற்பொழிவின் போது சொற்பொழிவு ஆற்றுபவர் மட்டும் பேசுகிறார். நாம் அமைதியாக கேட்கிறோம்.

உரையாடலில் இருவருடைய கருத்துக்களும் இடம் மாறிக்கொள்ளும்.

இயேசுவோடு உரையாடும்போது  அவருடைய  எண்ணங்கள் நம்மிடம் வரும், நம்முடைய எண்ணங்கள் அவரிடம் செல்ல வேண்டும்.

Our Conversation with Jesus must be a two way process.

இயேசுவோடு கருத்து பரிமாறும்போது நமது உள்ளம் இயேசுவின் உள்ளத்தோடு ஒன்றிக்கும்.

.வாசிப்பு Reading

தியானம் Reflection

எதிர் விளைவு Reaction

ஒன்றிப்பு   .union

நமது உள்ளம் இயேசுவோடு முற்றிலுமாக ஒன்றிக்க  நான்கு படிகள் ஏறவேண்டும்.

முதல்படி வாசிப்பு:

இயேசுவின் வாயிலிருந்து வந்த நற்செய்தியை வாசிக்க வேண்டும்.

கதை வாசிப்பதற்கும்  

நற்செய்தியை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

தண்ணீர் குடிப்பதற்கும்
juice குடிப்பதற்கும் இடையில் உள்ள
வித்தியாசம்.

தண்ணீரை வாய்க்குள் ஊற்றி விழுங்கி விடுவோம்.

juice ஐ Sip செய்து நாவில் படரவிட்டு ருசியை முழுவதும் அனுபவித்து கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவோம்.

அதேபோல் கதையை வேகமாக வாசிப்போம்.

இயேசுவின் வார்த்தைகளை நிறுத்தி மெதுவாக மனது முழுவதும் படரவிட்டு வாசிக்க வேண்டும்.

அப்போதுதான் இறைவார்த்தை மனதில் ஆழ பதியும்.

நான் இறை வார்த்தையை வாசிக்கும் போது நம்மிடம் இயேசு பேசுகிறார்.

அவர் பேசுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

நிறுத்தி வாசித்தால்தான் கூர்ந்து கவனிக்க முடியும்.

ஒரே வசனத்தைத் திரும்ப திரும்ப வாசிக்கலாம்.

பாட்டு இனிமையாய் இருந்தால் திரும்ப திரும்ப படிப்பதில்லை?

தியானம் Reflection

தியானம் என்றால் ஆழ்ந்த சிந்தனை.

நாம் வாசிக்கும் ஒவ்வொரு வார்த்தையின் மேலும் நமது சிந்தனை பதியவேண்டும்.

சிந்திக்கும் போது நாம் வாசிக்கும் வசனத்தின் பொருளும் நமது மனதில் பதியும்.

இயேசு நமக்கு என்ன கருத்தை சொல்ல விரும்புகிறாரோ அதுதான் வசனத்தின் பொருள்.

உதாரணத்திற்கு:

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது."

இந்த வசனத்தை சிந்தனையோடு வாசிக்கும்போது நமது மனதுக்கு தோன்றும் பொருள்:

"இந்த உலகத்தின் செல்வங்கள் மீது பற்று இல்லாதவர்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

'ஏனெனில் அவர்கள் விண்ணரசில் நுழைந்து இறைவனோடு ஒன்றிப்பார்கள்.'

பொருளுணர்ந்து வாசிக்கும்போது நமக்குள் ஏற்படுவது

எதிர் விளைவு Reaction:

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு.

Every action has a reaction.

எதிர் விளைவை ஏற்படுத்தினால்தான் செயல் அதன் பயனை அடைகிறது.

செயலினால் ஏற்பட்ட எதிர் விளைவு
செயலாக மாறி அடுத்த எதிர்விளைவை ஏற்படுத்தும்..

இப்படியே சங்கிலித் தொடர் போல செயலும் எதிர் விளைவும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நமது வாழ்வின் ஒவ்வொரு செயலும்
ஏதாவது ஒரு செயலில் எதிர்விளைவாக தான் இருக்கும்.

நாம் வாசிக்கும் இறைவசனம் நம் மனதில் ஏதாவது ஒரு எதிர்விளைவை ஏற்படுத்த வேண்டும்.

ஏற்படுத்தினால்தான் அந்த வசனத்தை நாம் சிந்தனையோடு வாசித்திருக்கிறோம்.

எந்த எதிர் விளைவையும் ஏற்படுத்தாத விட்டால் நாம் வாசித்தாலும் வாசிக்கவில்லை என்று ஆகிவிடும்.

சாப்பிட்டும் பசி ஆறாவிட்டால் சாப்பிட்டு என்ன பயன்?

மருந்து குணமாக்கா விட்டால் மருந்தினால் என்ன பயன்?

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர்" என்று வாசிக்கும்போது

"நான் எளிய மனத்தினனா?

நான் உலக பொருட்கள் மீது பற்று வைத்திருக்கிறேனா?

அந்தப் பற்று எனது இறையன்புக்கு இடையூறாக இருக்கிறதா?

அந்தப் பற்றைக் கைவிட நான் என்ன செய்ய வேண்டும்?"

என்பன போன்ற வினாக்கள் நம் மததில் எழவேண்டும்.

அவற்றிற்கான பதிலையும் நாம் காண வேண்டும்.

அந்தப் பதில் அது சம்பந்தமான நமது அடுத்த  செயலுக்குக் காரணமாக இருக்கும்.

அந்த வசனத்தின் இன்னொரு எதிர்விளைவு,

இயேசு எந்த அளவுக்கு எளிய மனத்தினராக வாழ்ந்தார் என்று தியானிக்கத் தூண்டும்.

இயேசு பிறந்த நேரத்திலிருந்து அவர் கல்லறையில் அடக்கம் பண்ணப்படும் வரை அவரது வாழ்வை ஒரு தடவை நோக்குவோம்.

ஏழையாகப் பிறந்து, ஏழையாக வாழ்ந்து, ஏழையாக மரித்தவர் நம் ஆண்டவர்.

30 வயது வரை உழைத்துச் சாப்பிட்டார்.

மூன்று ஆண்டுகள் நற்செய்தி போதக காலத்தில் மற்றவர்கள் கொடுத்ததை சாப்பிட்டார்.

பாடுகளுக்கு முந்திய நாள் தன்னையே தன் சீடர்களுக்கு, யூதாஸ் உட்பட, உணவாகக் கொடுத்து விட்டார்.

பாடுகளின் போது தனது ரத்தத்தை எல்லாம் சிந்தி விட்டார்.

சிலுவையில் தொங்கும்போது அவரிடம், அவரது உடை உட்பட, ஒன்றுமே இல்லை.

கல்லறைக்குச் செல்லுமுன் அவர் அடைக்கலம் புகுந்த ஒரே இடம் அவரது தாயின் மடி.

இது அவர் நமக்கு கற்பிக்கும் பாடம்.

"பிள்ளைகளே,

எதை மறந்தாலும் என் தாயின் மடியை மறக்காதீர்கள்.

நான் பிறந்தவுடன் இருந்த இடமும் அதுதான்,

இறந்த பின் இருந்த இடமும் அதுதான்.

நீங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டிய இடமும் அதுதான்"

என்ற உருக்கமான பாடத்தை நமக்குக் கற்பிக்கிறார்.

ஒரு இறை வசனம் நம்மில்  ஏற்படுத்தும்  எதிர் விளைவுகள் நமது  வாழ்க்கையே மாற்றி அமைக்க போதுமானவை,

அதாவது,

ஒழுங்காக வாசித்து, ஒழுங்காக தியானித்தால்.

ஒன்றிப்பு   .union:

வசனத்தைச் சரியாக முறையில் வாசித்து,

ஒழுங்கான முறையில் தியானித்து,

சரியாக எதிர் விளைவுகளை சந்தித்தால்

அடுத்து வருவது முழுமையான  ஒன்றிப்பு. (perfect union)

முழுமையான ஒன்றிப்பின்போது வார்த்தைகளே தேவையில்லை.

இறைவன் நமக்குள்ளும்,
நாம் இறைவனுக்குள்ளும் இருக்கும் முழுமையாக ஒன்றிப்பு நிலை.

இந்நிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

இறைவன் நம்முள் இருக்கும் உணர்வு மட்டும் இருக்கும்.

வேறு எதுவும்,

நம்மை சுற்றியுள்ள உலகம் உட்பட,

நமக்குத் தெரியாது.

இங்கு உரையாடல் இருக்காது,
உறவு மட்டுமே இருக்கும்.

இயேசுவின் பண்புகளை முற்றிலும் கிரகித்து அவராகவே நாம் மாறிக்கொண்டிருப்போம்.

ப்போது வாழ்வது நாம் அல்ல, இயேசுவே நம்மில் வாழ்கிறார்.

இதுதான் முழுமையான செபம்.

விண்ணுலக வாழ்வின் முன் ருசிப்பு.

Pretaste of our life In Heaven.

இயேசுவை ருசித்து செபிப்போம்.
அவரே நம் உணவு.

லூர்து செல்வம்.

Friday, August 28, 2020

".இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்." (மத்.25:29)



".இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்."  (மத்.25:29)
*****************************************
இயேசு கூறிய தாலந்துகள் உவமையில் எசமானர் ஒருவர் தனது ஊழியர் மூவருக்கு வெவ்வேறு எண்ணிக்கையில் தாலந்துகளைக் கொடுத்து விட்டு வெளியூர் சென்று விடுகிறார்.

அவர் தாலந்துகளைக் கொடுத்தது அவற்றை ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக.

எசமானர் வெளியூரிலிருந்து திரும்பியவுடன் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவரிடம் வருகிறார்கள்.

முதல் இருவர் தாலந்துகளைப் பயன்படுத்தி அவற்றை இரட்டிப்பு மடங்கு ஆக்கியிருந்தனர். 

அவர்களுக்கு அவர் சன்மானம் அளிக்கிறார்.

மூன்றாமவர் அவருக்குக் கொடுக்கப்பட்டதைப் பயன்படுத்தவேயில்லை.
அவனுக்குத் தண்டனை அளிக்கப் படுகிறது.

இயேசு சொல்லும் ஒவ்வொரு உவமையிலும் ஒரு மையக்கருத்து இருக்கும். 

அதுதான் அந்த உவமையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இந்த உவமையின் மையக்கருத்து:

 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட  தாலந்துகளை இலாபகரமாகப் பயன்படுத்துவோர் சன்மானம் பெறுவர்.

பயன்படுத்தாதோர் தண்டனை பெறுவர்.

இறைவன் நம்மைப் படைக்கும்போது பொம்மைகளைப் போல் படைக்கவில்லை.

இயங்கக்கூடிய ஆன்மாவோடும், இயக்கப் படக்கூடிய உடலோடும் இயக்கத்திற்கு பயன்படக்கூடிய திறமைகளுடன்தான்  படைத்தார்.

நாம் ஒரு வாகனத்தை இயக்கும் போது அது முன்னேறிச் செல்ல  வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இயக்குவோம்.

முன்னேறாமல் நின்ற இடத்திலேயே நிற்குமானால் அது பயன்படாத வாகனம்.

அதேபோல்தான் நாம் இயங்குவதும் முன்னேறுவதற்காக, வளர்ச்சி அடைவதற்காக.

இங்கே குறிப்பிடப்படுவது ஆன்மீக முன்னேற்றமும் ஆன்மீக வளர்ச்சியும்,

 நமது ஆன்மா எந்தவித வளர்ச்சியும் இன்றி இருந்தால் அது தளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்று பொருள்.

வளர்ச்சி அடைவதற்கு பயன்படக்கூடிய சக்தியோடும் திறமைகளுடன் தான் இறைவன் நம்மைப் படைத்திருக்கிறார்.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற சக்தியையும் திறமைகளையும் பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.

அம்மா உணவு தருகிறார், உண்ண வேண்டியது நம் பொறுப்பு.

உண்ணாதிருந்தால் அம்மா உணவைத் தந்தும் நமக்குப் பயன் இல்லை.

 ஆசிரியர் பாடம் போதிக்கிறார், கேட்டு பயனடைய வேண்டியது நம் பொறுப்பு.

கற்ற பாடத்தை மனதில் பதித்து நாம் பயன்படுத்தாவிட்டால் கற்றும் பயனில்லை.

அதேபோல்தான் இறைவன் தந்த திறமைகளைப் பயன்படுத்தி நமது ஆன்மா வளர்ச்சி அடைந்தால்தான்,

 அவர் தந்த திறமைகளால் நமக்கு பயன். இன்றேல், இல்லை.

ஒரு செடியை நட்டு, உரமிட்டு, நீரூற்றி வருகிறோம். உரத்தை உண்டு, நீரை குடித்து வளர வேண்டியது செடி.

 மாதக்கணக்கில் நீர் ஊற்றியும் அது வளராமல், நட்டபடியே நின்றால் என்ன செய்வோம்?

அதை அப்புறப்படுத்திவிட்டு வேறு செடியை நடுவோம்.

நமது வாழ்வின் நோக்கத்தை அடைய நாம் பயன்படுத்த வேண்டிய திறமைகளைப் பயன்படுத்தாவிட்டால்

 அல்லது தவறாக பயன்படுத்தினால்

 நமது நோக்கத்தை அடைய முடியாது.

நமது வாழ்வில் நோக்கம் விண்ணுலகை அடைவது.

யாருமே திறமைகள் இன்றி  பிறப்பதில்லை,

 ஆனாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறமைகள் கொடுக்கப்படுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான திறமைகள், வெவ்வேறு அளவில் கொடுக்கப்படுகின்றன.

ஒரே குடும்பத்தில், 

ஒரே சூழ்நிலையில்  

பிறந்த பல பிள்ளைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறான துறைகளில்  முன்னேற்றம் அடைந்து விளங்குவது இதற்குச் சான்று.

அண்ணன் என்ஜினியர், தம்பி டாக்டர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வளர்வது 

இறைவன் அவர்களுக்கு அளித்துள்ள திறமைகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்  என்பதையே காண்பிக்கிறது.

இறைவன் தந்த திறமைகளை தவறாகப் பயன்படுத்தி தவறான துறைகளில் வளர்பவர்களும்  நிறைய பேர் உலகில் இருக்கிறார்கள்.

தங்கள் பேச்சு திறமையைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றி வாழ்பவர்கள், 

தங்கள் நிர்வாக திறமையைத் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பவர்கள்,

தங்கள் எழுத்துத் திறமையைத் 
தவறாகப் பயன்படுத்தி, அசிங்கமான புத்தகங்களை எழுதி மக்கள் மனதைப் பாழடிப்பவர்கள்

என்போர்   போன்ற பல திறமையாளர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்.

இவர்கள் இறைவன் தந்த திறமைகளை  சாத்தானுக்காகப் பயன்படுத்துபவர்கள்.

இறைவன் நம்மைத் திறமைகளோடு படைத்தது 

அவருக்கு செய்யும் பணியில் அவற்றைப் பயன் படுத்துவதற்காகத்தான்,  
அவருக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக அல்ல.

தனது சிந்தனைத் திறமையை மிகச்சரியாக பயன்படுத்தி இறையியல் வல்லுனர் ஆகியவர்
 புனித அகுஸ்தினார்.

தனது பேச்சு திறமையால் ஆயிரக்கணக்கானோருக்கு  நற்செய்தியை அறிவித்து அவர்களை இறைவன் வழிக்கு கொண்டு வந்தவர் புனித அந்தோணியார்.

 தனது செயல் திறமையால் பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்தவ மறையைப் பரப்பியவர் புனித சவேரியார்.

இப்படி ஆண்டவருக்காக தங்களுடைய திறமைகளை எல்லாம் பயன்படுத்திய புனிதர்களின்  பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாம் புனிதர்கள் மீது பக்தி வைத்திருக்கிறோம்.

நமக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவர்கள் மூலம் இறைவனை வேண்டுகிறோம்.

தப்பே இல்லை.

ஆனால் நமது வாழ்க்கையில் அவர்களைப் பின்பற்றாதது தான் தப்பு.

புனிதர்களுக்குக் கொடுத்துள்ள அதே திறமைகளைத்தான் நமக்கும் இறைவன் தந்திருக்கிறார்.

பணம் மருந்து வாங்கவும் பயன்படும், விஷம் வாங்கவும் பயன்படும்.

தங்களுடைய கால்களைத் தினமும் காலையில் திருப்பலி காண கோவிலுக்குப் போக  பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,

டாஸ்மார்க் கடைக்குப் போக  பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்,

கடவுள் நம்மை படைத்து உலகில் வாழ விட்டிருப்பது அவரை அடைவதற்கான ஆன்மீக வாழ்வு வாழ்வதற்காகத்தான்.

நமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 

உலக சம்பந்தமான காரியங்களைச் செய்வது கூட

 நமது ஆன்மீக வாழ்விற்கு உதவியாக இருப்பதற்காகத்தான்.

உலக வாழ்க்கையை ஆண்டவருக்காக வாழும்போது அங்கு பாவம் இருக்காது.

 உலகத்திற்காக வாழும்போதுதான் பாவம் உள்ளே புகுகிறது.

ஆண்டவருக்காக நாம் வாழவேண்டிய ஆன்மீக  வாழ்க்கையை வாழ்வற்காகத்தான் நமக்கு திறமைகள் தரப்பட்டிருக்கின்றன.

நம்மில்  அநேகர் செய்கின்ற தப்பு தங்களிடம் என்ன திறமைகள் இருக்கின்றன என்பதைப்பற்றி கவலைப்படாமல்,

மற்றவர்களைக் கவனித்து அவர்களைப்போல் வாழ ஆசைப்படுவதும் முயற்சி எடுப்பதும் தான்.

தவளை ஒன்று ஒருநாள் குளத்திற்கு தண்ணீர் குடிக்க வந்த ஒரு பசுவைப் பார்த்தது.

'' எப்போதாவது குளத்திற்கு தண்ணீர் குடிக்க வரும்  பசு இவ்வளவு பெரியதாய் இருக்கிறது, தண்ணீருக்குள்ளே வாழும் நான் ஏன் இவ்வளவு சிறியதாய் இருக்கிறேன்?

நானும் பசுவைப் போல் பெரியவனாய் ஆக வேண்டும்."

என்று தீர்மானித்தது.

உடலைப் பருமன் ஆக்குவதற்காக மூச்சை உள்ளே இழுத்தது. கொஞ்சம் வயிறு பெரிதாகியது. 

இன்னும் மூச்சை உள்ளே இழுத்தது. வயிறு இன்னும் கொஞ்சம் பெரிதாகியது.

தொடர்ந்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. திடீரென்று வயிறு வெடித்துச் சிதறியது. 

தவளை அளவு திறமை உள்ளவர்கள் பசுவைப் போல் ஆக நினைத்தால் விளைவு இதுதான்.

இளைஞன் ஒருவனுக்கு துறவி ஆக ஆசையாய் இருந்தது.

 துறவியர் மடம் (monastery) ஒன்றுக்கு சென்றான்.

 Superior ரிடம் சென்று,

"சுவாமி நான் துறவி  ஆக விரும்புகிறேன்"

" எதுவரை படித்திருக்கிறீர்கள்?"

"10 வரை''

" உங்களுக்கு என்னென்ன வேலைகள் தெரியும்?"

" சுவாமி,  ஜெபம் சொல்லுவேன், சமையல் வேலை, தோட்டவேலை உட்பட எல்லா வேலைகளையும் செய்வேன்."

"இந்த வேலைகள் செய்ய ஒரு ஆள் தேவைதான். 

நான்  உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிக்கொள்கிறீர்களா?"

"சுவாமி நான் வேலை கேட்டு வரவில்லை. துறவியாகி இந்த வேலைகளை ஆண்டவருக்காகச் செய்ய விரும்புகிறேன். தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்."

அவரது ஆர்வத்தை பார்த்த சுப்பீரியர் அவரை ஏற்றுக்கொண்டார்.

ஒரு ஆண்டு நவசந்நியாசம் முடித்து, இளைஞர் துறவியானார்.

எல்லா வேலைகளையும் ஆண்டவருக்காகச் செய்தார்.

.ஒரு நாள் சுப்பீரியர் அவரை அழைத்து,

"Brother, உங்களுக்கு விண்ணகத்தில் எங்களை விட இருமடங்கு பலன் கிடைக்கும்."

"எப்படி சுவாமி?"

"நாங்கள் ஆண்டவருக்காக உழைக்கிறோம்.

 நீங்கள் ஆண்டவருக்காக மட்டுமல்ல, ஆண்டவருக்காக உழைப்பவர்களுக்காகவும்  உழைக்கிறீர்கள்."

"அப்படியெல்லாம் இல்லை சுவாமி, எல்லோரும் ஆண்டவருக்காக மட்டுமே உழைக்கிறோம்."

இந்த சகோதரரிடம் சுவாமிமாரிடம் இருக்கிற அளவு திறமை இல்லை.

ஆனாலும் அவரது ஆர்வம்  திறமையை மிஞ்சி விட்டது.

ஒருவரிடம் பத்து திறமைகள் இருக்கலாம். எல்லாம் ஆண்டவர் கொடுத்தவையே. அவர்கள் பத்து திறமைகளையும் நன்று பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

 நம்மிடம் ஒரே ஒரு திறமை மட்டும் இருக்கலாம். அதற்காக நாம் வருந்தக்கூடாது, இருக்கிற திறமையை இயன்ற அளவு நன்றாக பயன்படுத்தினால் போதும்.

புனித சிறுமலர் தெரசா புனித சவேரியாரைப்போல நாடு விட்டு நாடு சென்று வேதம் போதிக்க வில்லை.

ஆனால் மடத்தில் இருந்து கொண்டே 

தனது செப வாழ்வால் சவேரியார் அளவிற்கு ஆன்மாக்களை மனம் திருப்பிக்கொண்டிருந்தாள். .

புனித சவேரியாரைப் போலவே அவளும் வேத போதக நாடுகளின் பாதுகாவலியாக தாய்த் திருச்சபையால் நியமிக்கப்பட்டாள்.

நாமும் நம்மிடம் இருக்கும் திறமையை இறைவனுக்காக நேர்மையோடு பயன்படுத்துவோம்.

பயன்படுத்தாவிட்டால் அது பயனின்றி போகும்.

பயன்படுத்துவோம் பூவுலகில்.
பலன் பெறுவோம் விண்ணுலகில்.

லூர்து செல்வம்.

Thursday, August 27, 2020

"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது."(மத். 24:42)

,http://lrdselvam.blogspot.com/2020/08/2442.html

"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், எப்போது உங்கள் ஆண்டவர் வருவார் என்று உங்களுக்குத் தெரியாது."
(மத். 24:42)
*****************************************

நம்மைப் படைத்த இறைவன் சர்வஞானம் உள்ளவர்.

நாம் காலத்திற்கு உட்பட்டவர்கள்.
அவர்  காலத்திற்கு அப்பாற்பட்டவர்.

நிகழ் காலத்தில் வாழும் நமக்கு இப்போது நடந்து கொண்டிருப்பது மட்டும்தான் தெரியும்.

கடந்த காலமும் தெரியும்.

ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது.

அடுத்த வினாடி என்ன நடக்கும் என்று இந்த வினாடி நமக்குத் தெரியாது.

கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு அதை எழுதி முடிப்பேனா என்றுகூட தெரியாது.

ஆனால் காலத்திற்கு அப்பால் வாழும் கடவுளுக்கு நமது முக்காலமும் தெரியும்.

நாம் சுதந்திரமாகத்தான் செயல்படுகிறோம். கடவுள் நமது சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.

ஆனாலும்  நாம் எப்படிச் சுதந்திரமாகச் செயல்படுவோம் என்று அவருக்குத் நித்தியமாக (from eternity) தெரியும்.

நாம் எப்படிச் சுதந்திரமாகச் செயல்படுவோம் என்று நமக்கே தெரியாது.  

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

நாம் ஒரு பணியாளை வேலையின் நிமித்தம் வெளியூருக்கு அனுப்பும்போது,

எப்போது போகவேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்போது திரும்ப வேண்டும் என்று சொல்லிதான் அனுப்வோம்.

 காலத்திற்கு அப்பால் வாழும் கடவுள் 

ஒன்றுமில்லாதிருந்த  நம்மைப் படைத்து காலத்திற்குள் அனுப்பும் போதே,

அதாவது நாம் நமது தாயின் வயிற்றில் கருத்தரிக்கும்போதே,

எவ்வளவு காலம் இவ்வுலகில் வாழ வேண்டும்,

 எப்போது காலத்தை விட்டு வெளியேறி 

காலத்திற்கு அப்பால் வாழும் அவரிடம் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு விட்டார்.

ஆனால் எப்போது நம்மை திரும்ப அழைப்பார் என்று நமக்கு வெளியிடவில்லை.

நமக்கு நாம் உற்பத்தியான நேரமும் தெரியும்,

 வாழ்ந்த நேரமும் தெரியும்.

 வாழ்கின்ற நேரமும் தெரியும்,

 எப்பொழுது கடவுளிடம் செல்வோம் என்று  தெரியாது.

தெரியக்கூடாது என்பதே கடவுளின் திட்டம்.

நாம் காலத்துக்குள் வருவது சனனம். (Conception)

 வாழ்வது வாழ்க்கை (Life)

காலத்தை விட்டு வெளியேறுவது மரணம். (death)

மரணத்தோடு நமது காலம் முடிந்து விடுகிறது. நாம் நித்தியத்திற்குள்  நுழைகிறோம்.

அங்கு காலம் இல்லை, ஆகவே முடிவும் இல்லை.

நாம் நுழையப் போகும் நித்தியம் பேரின்பமயமாக இருக்குமா,

 பெருந்துன்பமயமாக இருக்குமா என்பதை

 நமது இவ்வுலக வாழ்க்கைதான் தீர்மானிக்கும்.

இறைவனுக்காகவே வாழ்ந்து இறைவனில் மரிப்பவர்கள் நித்திய பேரின்பத்திற்குள் நுழைவார்கள்,

பாவத்திற்காகவே வாழ்ந்து 
பாவத்தில் மரிப்பவர்கள் நித்திய பெருந்துன்பத்திற்குள் நுழைவார்கள்,

பாவத்திற்காகவே வாழ்ந்தவர்களும் இறுதி நேரத்தில் இறைவன் பக்கம் திரும்பிவிட்டால் பேரின்பத்திற்குள் நுழைவார்கள்.

இறைவன் நம்மை அழைக்க வரும் நேரத்தை ஏன் நமக்கு முன் அறிவிக்கவில்லை?

நாம் மாணவர்களாக இருந்தபோது நமது அனுபவம் நமக்கு தெரியும்.

 மாணவர்களின் இருவகையுண்டு.

ஒரு வகையினர் ஆண்டு முழுவதும்  தங்களைத் தேர்வுக்குத் தயாரிப்பார்கள்.

 மற்றொரு வகையினர் ஆண்டு முழுவதும் விளையாடிவிட்டு தேர்வுக்கு முந்திய நாள் தேர்வுக்குத் தயாரிப்பார்கள். 

ஆண்டின் துவக்கத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நாட்குறிப்பேட்டில் இறுதித் தேர்வு நடைபெறும் தேதி குறிக்கப்பட்டிருக்கும்.

தேர்வு நாள் முன்கூட்டியே தெரிந்திருப்பதால் 

தேர்வுக்கு முந்திய நாள் தயாரித்தால்  போதும் என்று எண்ணி ஆண்டு முழுவதையும் வீணடிப்பார்கள்.

 ஆண்டின் எந்த நேரத்திலும் 

முன் அறிவிப்பு இன்றி 

தேர்வு நடைபெறும் 

என்ற விதி இருந்தால் 

மாணவர்கள் எப்பொழுதும் தேர்வுக்குத் தயாராக இருப்பார்கள்.

மனித வாழ்வைப் பொருத்தமட்டில் வாழ்வு எப்போது முடியும் என்று,

 கடவுளைத் தவிர, 

யாருக்கும் தெரியாது.

தாயின் வயிற்றில் இருக்கும்போது முடியுமா,

 பிறந்தவுடன் முடியுமா,

குழந்தைப் பருவத்தில் முடியுமா,

 சிறுவயதில் முடியுமா,

 இளமைப் பிராயத்தில் முடியுமா.

 வயசு ஆகி முடியுமா 

என்று நமக்குத் தெரியாது.

 ஒன்று மட்டும் தெரியும், வாழ்க்கை ஒரு நாள் முடியும்.

 அது என்று என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

ஒருவகையில் அது நமக்கு தெரியாமல் இருப்பதே நல்லது.

தெரிந்திருந்தால் நேரம் நெருங்க நெருங்க நமது நிம்மதி பறிபோய் விடும்.

ஒரு பையனுக்கு 16 வயதில் அழைப்பு வரும் என்று தெரிந்திருந்தால் அவன் பள்ளிக்கூடத்திற்கே போக மாட்டான்.

100வயதில்தான் அழைப்பு வரும் என்று தெரிந்தவன்  99 வயது வரை இஸ்டம் போல் வாழ்வான்.

அநேகருக்கு திருமணமே நடக்காது.
மாப்பிள்ளை, பெண் பார்ப்பவர்கள் வயது வரம்பை விசாரிக்க ஆரம்பிப்பார்கள்.

நமது நன்மைக்காகத்தான் இறைவன் நமது இறுதி நாளை நமக்கு அறிவிக்காமல் வைத்திருக்கிறார்.

 உலகத்தையும் காலத்தையும் விட்டு வெளியேற 

நாம் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் தயாராக இருக்க வேண்டும்.

நமது ஒவ்வொரு வினாடியும் பாவம் இன்றி  இறை உறவுடன் இருக்கவேண்டும்.

நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் 

"இந்த வினாடி நான் மரித்தால் எங்கே போவேன்?"

 என்று நமக்கு நாமே ஒரு கேள்வி கேட்டுக் கொண்டால்,

 நாம் எப்பொழுதும் தயாராக இருப்போம்.

ஒருநாள் ஆயர்  ஒருவர் தனது இல்லத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

 அவரிடம் பேசவந்த ஒரு குருவானவர் அவரை நோக்கி,

"ஆயர் அவர்களே, இன்னும் ஐந்து நிமிடங்களில் உங்களது உயிர் பிரியப்போகின்றது என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள்?"

"தொடர்ந்து தோட்டத்தில் வேலை செய்துகொண்டுதான் இருப்பேன்.

ஆண்டவர் அழைக்கும்போது எங்கிருந்தால் என்ன?

தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்,"

தயாராக இருக்க வேண்டும் என்றால், நமது ஆன்மா தேவ இஷ்டப்  பிரசாத நிலையில் இருக்க வேண்டும் என்று பொருள்.

நாம் ஞானஸ்நானம் பெற்றபோது நமது ஆன்மா பாவ நிலை நீங்கி தேவ இஷ்டப் பிரசாத நிலைக்கு வந்தது.

அந்நிலையை இழந்து  விடாமல் வாழ்நாள் முழுவதும் காப்பாற்ற வேண்டும்.

எப்போதாவது பாவத்தின் மூலம் அதை இழக்க நேரிட்டால்,

 நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து அதைத் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். 

நமது மரண நேரத்தில் நாம் தேவ இஷ்டப்  பிரசாத நிலையில் இருக்க   வேண்டியது அவசியம்.

ஆண்டவர் அழைக்க வரும் நேரம் நமக்குத் தெரியாமல் இருந்தால்தான் நாம் கவனமுடன் அந்நிலையைத் தொடர்ந்து காப்பாற்றுவோம்.

ஒரு நீர்நிலையை நீச்சலடித்து  கடந்து கொண்டிருப்பவன் தொடர்ந்து நீந்தவேண்டும்.

பாதிவழி கடந்த பின்,

"இனி கரை பக்கம் போன பின் நீந்திக் கொள்ளலாம்" என்று நீந்துவதை நிறுத்திவிடக்கூடாது. 
 
அதுபோல்தான் நாமும் வாழ்நாள் முழுவதும் இறையுறவு நிலையில் வாழவேண்டும்.

தொடர்ந்து இறையுறவு நிலையில் வாழ்ந்தால், 

நமது வாழ்க்கை இறையன்பு செயல்களாலும்,. 

பிறரன்புச் செயல்களாலும் நிறைந்திருக்கும்.

எப்பொழுதும் இறை உறவு நிலையில் இருக்க ஒரு வழி 

எப்போதும் சுறுசுறுப்பாக ஏதாவது நல்ல காரியங்களை செய்து கொண்டிருப்பதுதான்.

 ஒரு வேலையும் இல்லா விட்டால் ஞான வாசகம்,  தியானம் போன்றவற்றில் மனதை ஈடுபடுத்த வேண்டும்.

  எதுவும் செய்யாமல் சோம்பலாக இருக்க கூடாது.

 சோம்பல் சாத்தானின் பட்டறை,

Idleness is the Workshop of the devil.

மனதை எப்போதும் பயனுள்ள எண்ணங்களில்  ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் தேவையற்ற எண்ணங்கள் வராது.

இறைவன்  எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார். தியானத்தின் மூலம் அதை உணர்கிறோம்.

ஆனால் முகத்துக்கு முகம் அவரைப் பார்க்க முடியவில்லை.

காரணம் அவருக்கும் நமக்கும் இடையில் ஒரு மெல்லிய திரை இருக்கிறது.

திரை விலகிய வினாடி அவரை நேருக்கு நேர் பார்க்க ஆரம்பிப்போம்.

நாம் திரையைப் பற்றி கவலைப்படவேண்டாம், ஏனெனில் திரை இருந்தாலும், விலகினாலும் நாம் இறைவனோடுதான் இருப்போம்.

திரை இருந்தால் இவ்வுலகில் இருப்போம்,   விலகினால் விண்ணுலகில் இருப்போம்.

திரையால் நம்மைப் பிரிக்க முடியாது.

திரை எப்போ விலகும் என்று நமக்குத் தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும், ஏனெனில் திரையைப் போட்டவரே அவர்தான்.


அவர் போட்ட திரையை அவர் எப்போது வேண்டுமானாலும் 
விலக்கிக் கொள்ளட்டும்.

நாம் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வோம்.

நமது உடல் தான் கடவுள் நமக்கும் அவருக்கும் மத்தியில் போட்டிருக்கும் திரை.

திரை விலகிய பின் நாம் என்றென்றும் கடவுளோடு இருப்போம்.

லூர்து செல்வம்.

Wednesday, August 26, 2020

எல்லாம் நன்மைக்கே.


எல்லாம் நன்மைக்கே.
 **************************************


ஐந்தறிவு உள்ள பிராணிகளுக்கும், ஆறறிவு உள்ள மனிதனுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

ஆறாவது அறிவு.

மனிதன் சிந்தித்து செயல்படுகிறான்.
பிராணிகளுக்கு சிந்திக்கும் சக்தி இல்லை.

அவை இறைவனால் அளிக்கப்பட்டிருக்கும்  instinct எனப்படும் இயற்கையான உந்துவிசை, அல்லது  உள் உணர்வினால் இயக்கப்படுகின்றன.

அதனால்தான் ஒரு வகையை சேர்ந்த பிராணிகள் எல்லாம் ஒரே மாதிரியாக இயங்குகின்றன.

மனிதன் மட்டும்தான் ஆறாவது அறிவாகிய புத்தியைப் பயன்படுத்தி சிந்தனை வழியே இயங்குகிறான்.

அதனால்தான் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாதிரியாக இயங்குகிறான்.

அவனுடைய சிந்தனை, செயல் ஆகியவை காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் மாறிக்கொண்டே  இருக்கின்றன.

ஏனெனில் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறான்.

பேனா என்றால் எழுத வேண்டும். எழுதவே முடியாத ஒரு  பொருளை  பேனா என்று அழைக்க முடியாது.

 சிந்திக்கத் தெரியாதவனை,   அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தெரியாதவனை எப்படி அழைப்பது?


நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது ஆன்மீகம்.

ஆன்மீக அனுபவங்கள்.

ஆன்மாவுக்கு பயன்தரும் அனுபவங்களை ஆன்மீக அனுபவங்கள் என்கிறோம்.

இவை இறைவனைச்   சார்ந்த அனுபவங்கள்,

உலகைச் சார்ந்த அனுபவங்கள் லௌகீக அனுபவங்கள்.

லௌகீக அனுபவங்களிலிருந்தும் ஆன்மீக பாடங்கள்  கற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா உலக மக்கள் அனைவருக்கும் ஒரு லௌகீக அனுபவம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த லௌகீக அனுபவத்திலிருந்து ஆன்மீக பாடம் கற்றிருக்கிறோமா?

சிந்தித்து செயல்பட வேண்டிய விஷயம்.

கொரோனா நமது உலக அனுபவங்களுக்குள் மட்டுமல்ல ஆனமீக அனுபவங்களுக்குள்ளும் மூக்கை நுழைத்திருக்கிறது.

கொரோனாவின் காரணத்தினால் கோவில்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கின்றன.

 நம்மால் நமது ஆன்மீக வழிகாட்டிகளாகிய  குருக்களைச் சந்திக்க இயலவில்லை. 

தேவத்திரவிய அனுமானங்களைப் பெறமுடியவில்லை. 

திருப்பலியை youtube ல் தான் பார்க்க முடிகிறது.

திருவிருந்தை அருந்த முடியவில்லை. 

கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும்,

 மரித்தவர்களும் பரிசுத்த ஆவியின் ஆலயங்களே.

பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து, தொட்டு ஆறுதல் கூற முடியவில்லை.

நமது கல்லறைத் தோட்டங்கள்  ஆலயத்திற்கு அடுத்து பரிசுத்தமானவை.

ஆனாலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் ஆலயங்களுக்கு அங்கே இடமில்லை!

 அடக்கத்துக்கு குருவானவரோ, உபதேசியாரோ போக முடியாது.

இந்த அனுபவங்களிலிருந்து நாம் ஆன்மீக பாடம் கற்றுப் பயனடைய வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

எல்லாம் வல்ல இயேசு எப்போதும் நம்மோடுதான் இருக்கிறார்.

அவரால் எல்லாம் முடியும் என்று நமக்கு தெரியும்,

நாம் ஒவ்வொரு நாளையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

 அப்படியானால் நடப்பதெல்லாம் அவர் பெயராலேயே நடக்கின்றன.

தாயின் மடியில்  இருக்கும் பிள்ளை யாருக்கும் அஞ்சாது.

நாம் நமது தந்தையின் மடியில் தான் இருக்கிறோம்.

ஆகவே அச்சம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் பாடம்.

கோவிலுக்குப் போக முடியவில்லை என்பது உண்மைதான். ஆனாலும் அது தாய்த் திருச்சபையின் விருப்பம் என்பதால் ஏற்றுக் கொள்கிறோம்.

இயேசுவின் விருப்பமும் அதுதான்.

"எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்." (மத்.16:19)

கோவிலுக்குப் போக முடியாதபோது  நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தையே சுட்டிக் காண்பிக்கிறது.

"இரண்டு, மூன்று பேர் என் பெயரால் எங்கே கூடியிருப்பார்களோ, அங்கே அவர்கள் நடுவே நான் இருக்கிறேன்."
(மத். 18:20)

நிறைய பேர் கூடி இருக்கும் கோவிலில் மட்டுமல்ல,

 கொஞ்சப் பேர் இருக்கும் நமது வீட்டிலும் இயேசு இருக்கிறார்.

கோவிலில் செய்யவேண்டிய செபத்தை வீட்டிலேயும் செய்யலாம்.

ஏனெனில் நமது ஆன்மீக நன்மைக்காக 

நாம் எதை, எங்கு செய்தாலும்

 இயேசுவும் நம்முடன் இருந்துதான் செயலாற்றுகிறார்.

 நமது உள்ளமாகிய ஆலயத்தில் இயேசு எப்போதும் இருப்பதால் நாம் தனியாக இருப்பதில்லை. 

ஆக குடும்பத்தில் இருந்தாலும் சரி தனியாய் இருந்தாலும் சரி  இறைவன் நம்மோடுதான் இருக்கிறார்.

இவை எல்லாம் அறிவுபூர்வமாக நாம் அறிந்ததுதான்.

 ஆனால் அனுபவபூர்வமாக அறிந்துகொள்ள கொரோனா உதவி செய்திருக்கிறது.

எந்த சூழ்நிலையிலும் இறைவன் நம்மோடுதான் இருக்கிறார். 

நாம் அவரது பாதுகாப்பில்தான் இருக்கிறோம் என்பதை 

அனுபவப் பூர்வமாக நாம் அறிவது  அனுபவம் கற்றுத் தந்திருக்கிற பாடம்.

இறைவன் பைபிள் வழியாக மட்டுமல்ல, குருக்கள் வழியாக மட்டுமல்ல நேரடியாகவும் நம்மோடு பேசுகிறார்.

திருப்பலி காணும்போதும், பிரசங்கம் கேட்கும்போதும் நமக்கு வெளியே இருந்து இறைச் செய்தி வருவதால் 

 நமக்குள்ளிருந்து வரும் செய்தியைப் பற்றி நாம் கவலைப்படுவது இல்லை.

ஆனால் இப்போது நாம் நமக்குள் பேசும் இயேசுவுக்கு காது கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குருவானவர் சொல்வதை காது வழியாக கேட்டுக்கொண்டிருந்த நாம் இனி இயேசு கூறுவதை உள்ளத்தின் வழியே கேட்போம்.

காது வழியே செல்லும் செய்தி உள்ளத்திற்குப் போகாமல் மறு காது வழியே வெளியே வந்துவிடலாம்.

 ஆனால் உள்ளத்தில் பிறக்கும் செய்தி உள்ளத்தில் தங்கி பலன் தரும்.

Youtube வழியே வரும் இறைச் செய்தியையும்  உள்ளத்தில் பதிக்க  கற்றுக்கொள்வோம்.

உள்ளத்தில் பதியும் செய்திதான் நமது ஆன்மாவை இயக்கும்.

கொரோனா மூலம் கிடைக்கும் நேரத்தை தியானிக்கவும், இயேசுவோடு பேசவும் பயன்படுத்திக் கொள்வோம்.

கொரோனா காலம்  தரும் இன்னுமொரு முக்கியமான அனுபவம் ஒன்று இருக்கிறது.

இயேசு இராயப்பரின் மேல் கட்டிய திருச்சபையின் உறுப்பினர்கள் நாம்.

இறைவன் ஒருவர். அவரைப்பங்கு போட முடியாது.  

நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அவர் முழுமையாக இருக்கிறார்.

நமக்கு அவர் தன்னை முழுமையாகத் தந்திருக்கிறார்.

நமது ஆன்மாவும் முழுமையானது பங்கு வைக்க முடியாதது.

நமது உடலை வெட்டி கூறு போட முடியும், ஆனால் ஆன்மாவை வெட்டி கூறு போட முடியாது.

அதேபோல ஒரே திருச்சபை,
 முழுமையான ஆன்மீக அமைப்பு. அதையும் பங்கு போக முடியாது.

ஒரே திருச்சபையைப் பிரிக்க முடியாது.

சடப்பொருளைப் பிரிக்கலாம். ஆன்மீகத்தைப் பிரிக்க முடியாது.


திருச்சபையில் ஆயிரம் பேர் இருப்தாக வைத்துக் கொள்வோம். 

அதிலிருந்து 50 பேர் வெளியேறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். 

திருச்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை குறையலாம்.

ஆனால் திருச்சபை முழுமையாகத்தான் இருக்கும்.

ஒரே திருச்சபை 1000த்தில் 950 திருச்சபையாக மாறாது.

ஏனெனில் அது கிறிஸ்துவின் 
ஞானசரீம்.

கிறிஸ்துவைப் பிரிக்க முடியாது.

இயேசு ஒவ்வொரும் உறுப்பினருக்கும் முழுமையாக சொந்தம்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி நான்கு பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் அப்பாவும் முழுவதும் சொந்தம். அம்மாவும் முழுவதும் சொந்தம்.

அப்பாவின் சடப் பொருளான, சொத்தைப் பங்கு வைக்கலாம். அப்பாவைப் பங்கு வைக்க முடியாது.

'
நமக்குள் இருப்பது முழுமையான ஆன்மா,

 ஆன்மாவில் வசிப்பது முழுமையான கடவுள்

 நமக்கு சொந்தமானது முழுமையான இறைவன்.

நாம் முழுமையான திருச்சபைக்குள் இருக்கிறோம்.

ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரும் முழுத் திருச்சபையின் பலனை அனுபவிக்கிறார்.

, Every individual  member enjoys the benefits of the   whole church.

ஆகவே இக்காலகட்டத்தில் நாம் தனியாக இருக்க நேர்ந்ததே என்ற கவலை வேண்டாம்,

 முழு கிறிஸ்துவும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார்.

ஆகவே அவருடைய ஞான உடலாகிய
முழு திருச்சபையும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது

கிறிஸ்துவாகிய ஒரே ஊற்றிலிருந்து தான் அனைவரும் அருளாகிய நீரைப் பருகுகிறோம்.

இந்த உண்மையை அனுபவப் பூர்வமாக அனுபவிக்க இந்த கொரோனா  காலம் உதவி இருக்கிறது.


மற்றொரு உண்மையை அனுபவப்பூர்வமாக நாம் உணர்ந்தால் நாம் படும் கஷ்டங்களை நினைத்து சங்கடப்பட மாட்டோம்.



இயேசு தாம் யெருசலேமுக்குச் சென்று 

மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் 

பாடுகள் பல படவும்,

 கொலையுண்டு 

மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் எனத் தம் சீடருக்குக் கூறியதை

இங்கே நினைவு கூற வேண்டும்.

இயேசு பூவுலகிற்கு வந்ததே நமக்காக  பாடுபட்டு,

 சிலுவையில் மரணம்  அடைந்து  நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்வதற்காகத்தான்.

இயேசு நமக்காக பட்ட பாடுகளை நினைத்தால் நாம் பட்டுக் கொண்டிருக்கும் துன்பங்கள்  நமக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது.

நாமும் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விடாமல் 

நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை நமது பாவங்களுக்கும்

 உலகத்தினர் அனைவரின்   பாவங்களுக்கும் பரிகாரமாகத் தந்தையிடம் ஒப்படைப்போம். 

இன்ப  காலத்தில் இறைவனை மறப்பதும், துன்ப காலத்தில் அவரைத் தேடுவதும் மனித ரத்தத்தில் ஊறி விட்ட பண்பு.   

அறிவியல் வசதிகள் பெருகப் பெருக மனிதன் எல்லாவற்றையும் தன்னால் சாதிக்க முடியும் என்ற மமதையோடு இறைவனை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

உலகில் பாவங்கள் அளவுக்கு மீறி பெருகிவிட்டன. 

மனித குலத்தைப் பாவத்தின் பாதையிலிருந்து திருப்பி தன் பாதைக்கு கொண்டு வர இறைவன்  திட்டமிட்டிருக்கிறார்.


அழிவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிற மனிதகுலத்தை நிறுத்தி, யோசிக்க நேரம் கொடுத்திருக்கிறது கொரோனா,

மனிதன் பாவத்தை விட்டு விட்டு இறைவன்பால் திரும்ப வேண்டும்.

மனம் வருந்தி, திருந்தி நல்வழியில் வாழ முடிவு எடுக்க வேண்டும்.

அரசுகள் போர் ஆசையை கைவிட்டுவிட்டு சமாதானத்திற்குத் திரும்பவேண்டும்.

அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும்.

அறிவியலால் உலகைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்து

அரசுகள் இறையியலை ஏற்று ஆன்மீகப் பாதையில் விண்ணகம் நோக்கி நடைபோட வேண்டும். 

உலகம் ஆண்டவர் பக்கம் திரும்பினால் கொரோனா இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 அதுவரை, கிடைத்த விடுமுறையை முழுக்க முழுக்க ஆண்டவருக்காகவே செலவழிப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, August 25, 2020

"உட்புறத்தை முதலில் தூயதாக்கு: (மத்.23:26)

"உட்புறத்தை முதலில் தூயதாக்கு: 
(மத்.23:26)
 **************************************

ஒரு மாணவன் பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும்போது

 தான்  உணவு கொண்டு போகும் போசனக் கும்பா ( tiffin Carrier) விற்குள்

கணக்கு பாடம் பற்றிய குறிப்புகள் எழுதியிருந்த பேப்பரைப் போட்டிருந்தான்.

மறுநாள் பள்ளிக்குப் புறப்படும் போது போசனக் கும்பா உணவுடன்  ரெடியாக இருந்தது. 

அவன்  தான் அதற்குள் போட்டிருந்த பேப்பரை பற்றி மறந்து போயிருந்தான்.

பள்ளிக்கு வந்து மதிய உணவு வேளையின் போது சாப்பிடும்போதுதான் 

அவன் போட்டிருந்த பேப்பர் சோற்றோடு சோறாக கலந்து அவன் கையில் அகப்பட்டது. 

 உடனே அம்மா மேல்தான் கோபம் வந்தது, சாப்பாடு வைக்குமுன் பாத்திரத்தை தேய்த்து கழுவவில்லை என்று.

மாலையில் வீடு வந்ததும்,

"ஏம்மா, சாப்பாடு வைக்கும் முன் பாத்திரத்தைக்  கழுவும் பழக்கம் இல்லையா?"

"தேய்த்துக் கழுவினேனே. வயலுக்குப் போகிற அவசரத்தில் வெளிப்புறத்தை மட்டும் தேய்த்தேன். உட்புறத்தை நீ சாப்பிட்ட உடனே கழுவியிருப்பாயே."

" மொத்தத்தில் இன்று நான் மத்தியானம் பட்டினி."

"ஏண்டா? பாத்திரத்தில் நான் சாப்பாடு வைத்திருந்தேனே."


"சாப்பாட்டுடன் நான் வைத்திருந்த பேப்பரும் இருந்தது. பேப்பரை சாப்பிட முடியுமா?"

"ஏன்டா உனக்கு பேப்பர் வைக்க வேறு  இடம் கிடைக்கவில்லையா?  போசனக் கும்பாதான் கிடைத்ததா?"

"நீங்கள் ஏன் பாத்திரத்தின் உட்புறத்தைக் கழுவவில்லை?  அதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க."

"Sorry டா. வயலுக்குப் போகிற அவசரம்."

போசனக் கும்பாவுக்கு மட்டுமல்ல எல்லா பொருள்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் உட்புறமும் வெளிப்புறமும் உண்டு.

விற்பனைக்காகப் பொருள்களை உற்பத்தி செய்கின்றவர்கள் அவற்றின் வெளிப்புறத்தை மிக கவர்ச்சிகரமாக வைத்திருப்பார்கள்

 வெளிப்புற கவர்ச்சிக்கும் உள்புற தரத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

 இதைவிட பெரிய கொடுமை, விளம்பரப்படுத்தப்படும் பொருள்களை விட

 விளம்பர நடிகர்கள் கவர்ச்சியாய் இருப்பார்கள்.

 மக்கள் விளம்பர நடிகர்களின் கவர்ச்சியை பார்த்து பொருள்களை வாங்கி ஏமாந்து போகிறார்கள்.

பொருள்களைப் போலவே மனிதர்களிடமும்  உள்ளும் புறமும் இருக்கிறது.

நமது உடல் எல்லோருக்கும் தெரியக்கூடிய வெளிப்புறம்.

 நமது ஆன்மா  யாராலும் ஊனக் கண்ணால் பார்க்க முடியாத உட்புறம்.

நமது உடல் அழகாக இருந்தாலும், அசிங்கமாக இருந்தாலும் எல்லோருக்கும் தெரியும்.

 நமது ஆன்மா எப்படி இருந்தாலும் யாருக்கும் தெரியாது.

சிந்திப்பது ஆன்மா. சிந்தனையை மனதில் வைத்திருப்பதும் ஆன்மா.

நமது சிந்தனையை மற்றவர்களுக்கு சொல் வடிவில் வெளிப்படுத்துவதும் செயல்படுத்துவதும் உடல்.

நேசிப்பது ஆன்மா நேசத்தை சொல்லாலும் செயலாகும் வெளிப்படுத்துவது உடல். 

நமது சிந்தனை சுத்தமாக இருந்தால் சொல்லும் செயலும் சுத்தமாக இருக்கும்.

 சிந்தனையில் பாவம் இருந்தால் சொல்லிலும் செயலிலும் பாவம் இருக்கும்.

ஆன்மாவில் இறை அன்பு இருந்தால் அந்த அன்பு சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்.

ஆன்மாவில் உலகப் பொருட்களின் மீது பற்று அதிகம் இருந்தால் அந்த பற்று சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்.

நமது ஆன்மா எப்படி இருக்கிறதோ அப்படியே சொல்லும் செயலும் இருக்கும்.

நமது ஆன்மாவை பாவமாசு இன்றி  சுத்தமாக வைத்திருந்தால் நம்முடைய சொல்லும் செயலும் பாவமாசின்றி இருக்கும்.

நமது உடல் மூலம் நாம் செய்யும் எல்லா பாவச் செயல்களுக்கும் ஆன்மாதான் பொறுப்பு.


நமது உடல் மூலம் நாம் செய்யும் எல்லா நல்ல செயல்களுக்கும் ஆன்மாதான் பொறுப்பு.

நமது ஆன்மீக வாழ்வு முன்னேறுகிறதா அல்லது  பின்னேறுகிறதா என்பது

 நமது ஆன்மாவில் உதிக்கும் சிந்தனையைப்  பொறுத்தே அமைகிறது.

ஆன்மீக ரீதியான சிந்தனையை தியானம் என்கிறோம்.

 ஒவ்வொரு நாளும் காலையில் நாம் தியானத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பொறுத்து

 நமது ஆன்மீக வாழ்வின் தரம் அமைந்திருக்கும்.

 காலையில் இறைவார்த்தையைத் தியானித்து, 

அன்று முழுவதும் தியானத்தை செயலாக்க வேண்டும்.

சிந்தனையும் செயலும்  இணைவது தான் வாழ்க்கை.

Bike கிற்கு Petrol மாதிரி

ஆன்மீக வாழ்வுக்குத் தியானம்.

ஆன்மீக வாழ்வின் மிக முக்கியமான அம்சம் 

நமது சிந்தனை, சொல், செயல் மூன்றும்  ஒத்துப்போக வேண்டும் என்பதுதான்

Our thought,.word and action must tally with one another.

ஆன்மீக வாழ்வில் நேர்மை மிக முக்கியம். நேர்மையானவன் சிந்தித்ததைச் சொல்வான் சொல்வதைச் செய்வான்.

இயேசு தனது  சிந்தனையை நற்செய்தி ஆக்கினார்.

 நற்செய்தியை வாழ்ந்து காண்பித்தார்.

 அதையே நம்மிடமும் எதிர்பார்க்கிறார்.

அவர் கடிந்துகொண்டது பரிசேயருடைய வெளி வேடத்தை.


."வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு!" (மத்.23: 15)


"அவர்கள் சொல்லுகிறார்கள்: செய்வதில்லை." (மத்.23:3)

வெளி வேடக்காரர்களை ஆண்டவர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பிடுகிறார்.


"வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! 

ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்.

 அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன.

 உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும், எவ்வகை அசுத்தமும் நிறைந்துள்ளன."
(மத்.23:27)

சாதாரணமான, இயல்பான, நடிக்க தெரியாத மனிதர்களிடம் உள்ளே இருப்பது தான் வெளியே வரும்.

ஆனால் அனேக மனிதர்கள் நடிப்பதில் வல்லவர்கள்.

உள்ளொன்றை வைத்துக்கொண்டு புறமொன்றை பேசுவதிலும்,

பேசியதைச் செய்வதுபோல் நடித்துக்கொண்டே வேறொன்றைச் செய்வதிலும் வல்லவர்கள்.

அவர்களது உள்ளத்தில் நம்மீது வெறுப்பு இருக்கும். ஆனால்   வார்த்தைகளில் தேனிருக்கும். செயலில்  விஷம் இருக்கும்.

அவர்கள் கடவுளைப் பற்றியும் கவலைப்படுவதில்லை தங்களது ஆன்மாவைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. 
நிலை வாழ்வைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

உலகத்தில் செல்வ செழிப்போடும் 
 செல்வாக்குடனும் வாழ வேண்டும், 

இன்பகரமான உலக வாழ்வுமட்டுமே அவர்களது குறிக்கோள்.

அப்படிப்பட்டவர்கள் விண்ணரசுக்குள் நுழையமுடியாது.

நல்லவர்கள் போல் நடிப்பவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

 மனிதர்களுக்கு அவர்களது உட்புறம் தெரியாமலிருக்கலாம்.

 கடவுளுக்கு அவர்களது உட்புறமும் தெரியும், வெளிப்புறமும்  தெரியும். அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது.

 நமது உள்  நோக்கத்தை வைத்துதான் நமது செயலின் தரத்தை அவர் மதிப்பிடுகிறார்.

விண்ணக வாழ்வுக்குள் நுழைய ஆசைப்படும் நாம் 

முதலில் நமது உட்புறத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்

 அதாவது 
,
நமது ஆன்மாவை ஆண்டவரின் அருள் வரங்களால் நிறைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

விசுவாசம், நம்பிக்கை,  இறையன்புடன் மற்ற  புண்ணியங்களாலும்  நமது ஆன்மாவை அலங்கரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.

நமது ஆன்மாவின் பரிசுத்தத் தனத்திற்கு ஏற்ப விண்ணகத்தில் பேரின்பத்தின் அளவு இருக்கும்.

எண்ணங்கள்  தூயதானால் .
விண்ணரசு நமதாகும்.

லூர்து செல்வம்.

Monday, August 24, 2020

"போ பின்னாலே, சாத்தானே,"(மத்.16:23)

"போ பின்னாலே, சாத்தானே,"
(மத்.16:23)
**************************************
"யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன்." (மத்.16:17)

"போ பின்னாலே, சாத்தானே,"
(மத்.16:23)

17வது வசனத்தில் இயேசு இராயப்பரை

 "பேறுபெற்றவன்." 

என்று கூறுகிறார்.


23 வது வசனத்தில் அதே இயேசு. அதே இராயப்பரை

"சாத்தானே"

என்று கூறுகிறார்.


 "பேறுபெற்றவன்."  என்றால்  கடவுளால்  ஆசீர்வதிக்கப்பட்டவன்.

"சாத்தான்" கடவுளுக்கு  எதிரானவன்.

ஒரு சில நிமிடங்களில்  பேறு பெற்றவர் எப்படி சாத்தான் ஆனார்?

இயேசு அப்போஸ்தலர்களைப் பார்த்து,

''நீங்களோ நான் யார் என்று சொல்லுகிறீர்கள்?" என்று  கேட்டபோது,     

 சீமோன் இராயப்பர் மறுமொழியாக,

 "நீர் மெசியா, உயிருள்ள கடவுளின் மகன்" என்றார். அதற்கு இயேசு, 
"
"யோனாவின் மகன் சீமோனே, நீ பேறுபெற்றவன். 

ஏனெனில், இதை உனக்கு வெளிப்படுத்தியது மனித வல்லமையன்று, வானகத்திலுள்ள என் தந்தையே."

அதாவது தந்தை சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை வெளிப்படுத்தியதால் இராயப்பர் பேறுபெற்றவர்.

ஆனால், இயேசு,

''தாம் யெருசலேமுக்குச் சென்று மூப்பர், மறைநூல் அறிஞர், தலைமைக்குருக்கள் இவர்கள் கையால் பாடுகள் பல படவும்,

 கொலையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவும் வேண்டும் 

என்று  தம் சீடர்களிடம் சொன்னபோது 


இராயப்பர்,

''ஆண்டவரே, ஐயோ! இது வேண்டாம். இஃது உமக்கு நேராது" என்று அவரைக் கடிந்துகொண்டார்."


ஆண்டவர் எதற்காக மனிதனாகப் பிறந்தாரோ அதை செய்ய வேண்டாம் என்று இராயப்பர் சொன்னதால் இயேசு 

"போ பின்னாலே, சாத்தானே," என்றார்.

இயேசு மனிதரைப் பாவத்திலிருந்து மீட்கவே பாடுகள் பட்டு மரிக்க வேண்டும் எந்த திட்டத்தோடு  மனிதனாகப் பிறந்தார்.

 மனிதனுடைய பாவத்திற்கு காரணவிருந்த  சாத்தான்,

மனிதன் இரட்சிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தான்.

 ஆகவே எந்த செயலால் மனிதரை மீட்க இயேசு திட்டமிட்டிருந்தாரோ அதை வேண்டாம் என்று சொன்னதால்

 ஆண்டவர் இராயப்பரைச் சாத்தான் என்றார்.

 அதாவது சாத்தான் நினைத்ததை சொல்கிறார்  என்ற பொருளில் சொன்னார்.

தந்தை வெளிப்படுத்தியதைச் சொன்னபோது பேறுபெற்றவர் என்றார்.

சாத்தான் நினைத்ததைச் சொன்னபோது சாத்தான் என்றார்.

கடவுளுடைய கருத்துக்களுக்கு எதிரான மனிதனுடைய கருத்துகள் சாத்தானுடைய கருத்துக்களே.

இயேசு எதைச் சொன்னாலும் அது எக்காலத்திற்கும் பொருந்துவதாக தான் இருக்கும்.

ஆகவே அவர்  இராயப்பருக்குச் சொன்னதிலிருந்து நாமும்  பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 

அதற்காகத்தான் உயிருள்ள இறைவார்த்தையை வாசிக்கிறோம்.

தன்னிலே உலகம் கெட்டது அல்ல,

 ஏனெனில் அது இறைவனால் படைக்கப்பட்டது.

 தான் படைத்த யாவும் நல்லவை என்று இறைவனுக்கு தெரியும்.

ஆனாலும்,  எந்தப் பொருளை எந்த நோக்கத்திற்காக  கடவுள் படைத்தாரோ, 

அந்தப் பொருளை அந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல்

அதன் எதிர் நோக்கத்திற்காகப் நாம் பயன்படுத்தினால் 

அது கடவுளுக்கு எதிராக பாவம்.

உலகத்தில் வாழ்ந்து, அதை நமது ஆன்மீக வாழ்விற்காக பயன்படுத்தி விண்ணகம் நோக்கி நடக்க வேண்டிய நாம் 

விண்ணகத்தை மறந்து நாம் வாழும் உலகத்தையே சதம் என்று எண்ணி,  அதற்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தால்

 நாம் இறைவனை தேர்ந்தெடுப்பதற்குப் பதில்
 உலகையே தேர்ந்தெடுக்கிறோம்.

 அதாவது உலகை இறைவனின் எதிரியாக மாற்றுகிறோம்.

இறைவனின் எதிரி சாத்தான்.

சாத்தான் உலகை இறைவனுக்கு  எதிராக வேலை செய்ய பயன்படுத்திக் கொள்கிறான். 

ஆகவே உலகிற்காக உலகையே சதம் என்று எண்ணி வாழ்பவர்கள் சாத்தானின் அடிமைகள்.
'
அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள்
சாத்தானின் கருத்துக்கள்.

ஆன்மாவின் நலனுக்காக மட்டும் வாழ்பவர்கள் இறைவனைச் சேர்ந்தவர்கள்,

 உடலின் நலனுக்காக மட்டும் வாழ்பவர்கள் சாத்தானைச் சேர்ந்தவர்கள்.

 நாம் எதற்காக மட்டும் வாழ்கிறோம் என்பதை பற்றி தியானிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பள்ளிக்கூடத்திற்குப் படிப்பதற்காக மட்டும் செல்பவர்கள் அங்கு தங்களுக்குக் கிடைக்கும் வசதிகள் எல்லாவற்றையும் படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துவார்கள்.

 ஏதாவது வசதி தங்கள் படிப்பிற்கு இடையூறாக இருந்தால் அது பொருளாக இருந்தாலும் சரி, ஆளாக
இருந்தாலும் சரி அப்புறப்படுத்தி விடுவார்கள்.

ஆன்மாவும் நம்முடையது தான் உடலும் நம்முடையது தான்.

ஆன்மாவிற்காக உடல் இருக்கிறதா? உடலுக்காக ஆன்மா இருக்கிறதா?

உண்பதற்காக உயிர் வாழ்கிறோமா?
'
 அல்லது 

வாழ்வதற்காக உண்கிறோமா?

வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் வாழ்வதற்காக  உண்பான்.

உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் உண்பதற்காக வாழ்வான்.

ஆன்மீக வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்  ஆன்மா தான் முக்கியம்,  உடல் ஆன்மாவிற்கு உதவி செய்வதற்கே என்பார்கள்.

ஆன்மீகவாதிகள் ஆன்மீக நலனுக்காக தங்கள் உடலை பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆன்மாவைக் காப்பாற்றுவதற்காக உடலை இழக்கவும் தயாராக இருப்பார்கள்.

அவர்களை பொறுத்தமட்டில் மரணம் என்பது நிலை வாழ்வின் ஆரம்பம்.

உடல் நலவாதிகள் உலக 
சிற்றின்பங்களுக்காக ஆன்மாவைப்  பயன்படுத்திக் கொள்வார்கள்.

உலக சிற்றின்பங்களை அனுபவிப்பதற்காக ஆன்மா உடலை  விட்டுப் பிரிவதை, அதாவது மரணத்தை, விரும்ப மாட்டார்கள்.

நிலை வாழ்வுக்குச் சாதகமாக நம் மனதில் தோன்றும் ஆன்மீகக் கருத்துக்கள் இறைவனிடமிருந்து வருபவை.

உலக வாழ்வுக்குச் சாதகமாக நம் மனதில் தோன்றும் லௌகீகக் கருத்துக்கள் சாத்தானிடமிருந்து வருபவை.

நாம் எப்போதும் நமது ஆன்மாவைப் பற்றியும், 

இறைவனைப் பற்றியும்,

 இறைவார்த்தையை பற்றியும்,
'
 இறை வாழ்வைப் பற்றியும் தியானித்துக் கொண்டிருந்தால்

 நமது உள்ளத்தில் இறைவனின் கருத்துக்கள்   தோன்றும்.

இறைவன் நமது உள்ளத்திலிருந்து பேசுவார்.


ஆனால் எப்போதும் உலக வாழ்வைப் பற்றியும்,

 உலக இன்பங்களை பற்றியும்,
 பணத்தைப் பற்றியும்   சிந்தித்துக் கொண்டிருந்தால்

 உலக சம்பந்தமான கருத்துக்களை சாத்தான் தோற்றுவித்துக் கொண்டே இருப்பான்.

ஆன்மாவிற்கான வாழ்க்கையையே உலகத்தில்தான் வாழ வேண்டி இருக்கிறது.

உலகில் வாழ உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம், வேலைக்குப் போகிறோம், பொருள் ஈட்டுகிறோம்.

இவை எல்லாம் உலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் என்றாலும், ஆன்மாவும், உடலும் சேர்ந்துதான் இவற்றைச் செய்கின்றன.

விண்ணிற்காகப் படைக்கப்பட்ட ஆன்மா, மண்ணில் இவற்றைச் செய்தாலும், மண்ணிற்காக இவற்றைச் செய்வதில்லை.

ஒரு வேலையின் தன்மையைத் (quality) தீர்மானிப்பது வேலை அல்ல,

அது செய்யப்படுவதற்கான நோக்கம். 

இறைவனுக்காக செய்யப்படும் எல்லா செயல்களும் நற்செயல்களே.

நமது உண்ணுதல், உடுத்துதல், உறங்குதல், வேலை பார்த்தல், பொருளீட்டுதல் போன்ற எல்லா செயல்களையும்

 இறைவனது மகிமைக்காக அவருக்கே ஒப்புக்கொடுத்தால்

 அவையெல்லாம் விண்ணில் நமக்கு சன்மானம் ஈட்டித் தரவல்ல நற்செயல்களே.

இறைவனது கட்டளைகளுக்கு விரோதம்  இல்லாமல் செய்கிற எல்லா வேலைகளையும் இறைவனுக்காகவே செய்யலாம்.


உலக வாழ்வை இறைவனுக்காக எப்படி வாழ்வது  என்று தியானித்து அப்படியே வாழ வேண்டும்.

உலகப் பொருள்களை எப்படி இறைவனுக்காகப் பயன்படுத்துவது  என்று தியானித்து அப்படியே பயன்படுத்த வேண்டும்.

அப்படி செய்பவர்கள்  பேறு பெற்றவர்கள்.


இறைவனை மறந்து உலக இன்பத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்பவர்கள் இறைவனை சார்ந்தவர்கள் அல்ல.

இரலில் பயணிப்பவர்கள் ரயிலுக்காக அல்ல, இல்லம் செல்லவே பயணிக்கிறார்கள்.

உலகில் நாம் வாழ்ந்தாலும் உலகிற்காக  அல்ல இறைவனுக்காகவே வாழ்கிறோம்.

நமது எண்ணங்கள் இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.

நமது பேச்சு இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.

 நமது  செயல்  இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.

நமது வாழ்க்கை இறைவனைச் சார்ந்து இருக்கட்டும்.

"எல்லாம் உமக்காக,

இயேசுவின் திவ்ய இருதயமே,

எல்லாம் உமக்காக,"

என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப

நாம் வாழ்வதே இறைவனுக்காக.

அவர் தரவிருக்கும் நிலை வாழ்வுக்காக.

லூர்து செல்வம்.

Saturday, August 22, 2020

"ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்."(லூக்.1:37)

."ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்."
(லூக்.1:37)
***************************************

தினமும் பைபிள் வாசிக்கிறோம்..

 பக்தியுடன்தான் வாசிக்கிறோம்,

 ஒவ்வொரு வசனமாக வாசிக்கிறோம்.

 சில  வசனங்களை  மனப்பாடம் கூட செய்கிறோம்.

தேவைப்படும்போது வசனங்களை மேற்கோள் காட்டுகிறோம்.

விளக்கமும் கொடுக்கிறோம்.

இதெல்லாம் ஆசிரியர் வீட்டில் பாடங்களைத் தயாரித்து வகுப்பில் விளக்கி பாடம் நடத்துவதுபோல.

மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து, Super ஆ தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெற்று, விண்ணப்பிக்கிற வேலையையும் பெறுவார்கள்.

,அவர்கள் பெற்ற மதிப்பெண் அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கும்.

ஆனால் படித்த விஷயம் வாழ்க்கையில் எந்த சமயத்திலும் பயன்படாது.

வேண்டுமென்றால் அவர்களும் ஆசிரியர்களாக மாறி அவர்களும் பாடம் நடத்தலாம்.

இரண்டாம் உலகப் போர் பற்றி 20 வருடங்கள் பாடம் நடத்தியிருக்கிறேன்

 ஆனால் இரண்டாம் உலகப்போரின் காரணங்களோ, விளைவுகளோ என் வாழ்க்கையில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

பாடம் நடத்தியதற்கு சம்பளம் கிடைத்தது மட்டும்தான் பயன்.

அதே கதி நம் வாழ்வில்  பைபிளுக்கும் வந்து விட கூடாது.

நான் பைபிளை வாசித்து 10 பேருக்கு விளக்கிய பின்

 நான் வாசித்தது  என் வாழ்வில் எனக்குப் பயன்படாவிட்டால் நான்   வாசித்ததில் பயனில்லை.

நான் வாசித்த வசனம் எப்படி எனக்கு பயன்படாமல் போகும்?

இறைவார்த்தையில் பொருள் இருக்கிறது, உயிர் இருக்கிறது.

இறைவார்த்தையை வாசிக்கும்போது பொருளோடு உயிரையும் சேர்த்து நாம் கிரகிக்க வேண்டும்.

அநேக சமயங்களில் பொருளை எடுத்துக் கொள்கிறோம், உயிரை விட்டுவிடுகிறோம்.

இதை எப்படி கண்டுபிடிப்பது?

கபிரியேல் தூதர் மாதாவிடம் மங்கள வார்த்தை சொன்ன போது

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"" என்று சொன்னார்.

இவ்வசனத்தை நம் வாழ்நாளில் பலமுறை வாசித்திருப்போம்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

இவ்வசனத்தையும்  பலமுறை வாசித்திருப்போம்.

இவ்விரு வசனங்களையும் நம் வாழ்நாளில் நமக்கு எப்போவாவது பயன்படுத்துகிறோமா?

நாம் தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். 

நமது purse ல் 10,000 ரூபாய் இருக்கிறது.

வழியில் சைக்கிளில் ஒரு வியாபாரி ஜவுளி விற்றுக் கொண்டிருக்கிறான்.

ஒரு பெண் சேலை ஒன்றை விலை பேசிக் கொண்டிருக்கிறாள்.

நல்ல சேலை. விலை 5000 ரூபாய்.

மனைவிக்கு ஒரு சேலை வாங்கிக் கொடுக்க ஆவலாயிருக்கிறது.

"பணம் இல்லையே, என்ன செய்யலாம்? சரி, இன்னொரு நாள் பார்ப்போம்."

என்று வாங்க முடியாமைக்கு வருத்தப்பட்டு கொண்டே போகிறோம்,

 நம்மைவிட பைத்தியக்காரர்கள் உலகத்தில் இருப்பார்களா?

Purse ல் பத்தாயிரம் இருப்பது  அவசரத்தில் ஞாபகத்திற்கு வராவிட்டால் அது இருந்தும் பயனில்லை.

குடும்பத்தில் ஒரு பெரிய சிக்கல். அதை எப்படிப் பிரிப்பது என்று தெரியாமல் நாட்கணக்கில் கண்ணைக் கசக்கிக் கொண்டே அலைகிறோம்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்ற வசனத்தைப் பல முறை வாசித்திருந்தும், அது மூளைக்கு எட்டவில்லை. 

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"" என்று சொன்னார்."

என்ற வசனமும் நமது ஞாபகத்துக்கு வரவில்லை.

இரண்டு வசனங்களும் உயிரோடு நம்மில் இருந்திருந்தால் நமது குடும்பத்தில் சிக்கலே இருந்திருக்காது. வந்த உடனே ஓடி இருக்கும்.

உயிருள்ள இறைவார்த்தையும் ஆழமுள்ள விசுவாசமும் சேர்ந்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவுமே இருக்க முடியாது.

வீட்டில் அழகான, கவர்ச்சிகரமான, விலைமதிப்புள்ள T.V.ஒன்று இருக்கிறது.

 வீட்டிற்கு வருவோர்க்கெல்லாம் அதைக் காண்பித்து அதன் அருமை பெருமைகளை எல்லாம் விளக்குவோம்.

ஒரு நண்பர் சொன்னார்:

"T.V.  அழகாக இருக்கிறது. படம்  தெரியவில்லையே?"

"வீட்டில் மின்சாரம் இல்லையே!"

"அதாவது T.V க்கு உடல் இருக்கிறது, அப்போ   T.V !இருந்தும் பயனில்லை" 

இறை வார்த்தைக்கு உயிர் இருக்கிறது ஆனால் நாம் அதை கண்டுகொள்வதில்லை.

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.''
(லூக்.14:27)

இவ்வசனம் எல்லோருக்கும் தெரியும். இதன் பொருளும் பெரியும்.

நாம் எல்லோருமே கிறிஸ்துவின் சீடர்களாக  இருக்க ஆசைப்படுகிறோம்.

ஆனால் நமக்கு துன்பங்கள் வரும் பொழுது நமது உள்ளத்தில் இருக்கும் இந்த வசனம் என்ன செய்கிறது?

நமக்கு வரும் துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டால் இந்த வசனம் நம்மில் உயிருடன் இருக்கிறது.

துன்பங்கள் நம்மிடம் விருப்பமின்மை ஏற்படுத்தினால் வசனம் வெறும் வசனமாக இருக்கிறது.

மற்றவர்களுக்குத் துன்பம் வரும்போது இந்த வசனத்தை அவர்களிடம் மேற்கோள்காட்டி பேசுவோம். 

ஆனால் நமக்கே துன்பம் வரும்போது வசனத்தை  மறந்து விடுவோம்.

நோய் நொடிகள்  வரும்போது, அவை நீங்க மருத்துவம் பார்க்க வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

நோய்கள் நீங்க கடவுளிடம் வேண்ட வேண்டாம் என்று ஆண்டவர் சொல்லவில்லை.

இயேசுவே புதுமைகள் செய்து அநேக நோயாளிகளைக் குணமாக்கியிருக்கிறார்.

நாம் நோய்வாய்ப் பட்டிருக்கும்போது ஏற்படும் உடல்ரீதியான துன்பங்களை பொறுமையாக ஏற்றுக்கொண்டு,  அவற்றை ஆண்டவருக்குக் காணிக்கையாக்கினால்,

அவை இறைவன் அருளைக் கொண்டு வரும் ஆன்மீக சக்தி கொண்ட சிலுவையாக மாறிவிடுமே! 

உடல் வலிகளும் சரி, வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்களும் சரி 

வெறும் துன்பங்களாக இருப்பதும், சிலுவையாக இருப்பதும் நாம் அவற்றை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

உயிருள்ள இறைவாக்கை வெறும் வசனமாக வைத்திருக்காமல், நமது உயிரோடு கலந்த வாழ்வாக மாற்றினால்

துன்பம் ஆன்மீக வாழ்வளிக்கும் இயேசுவின் சிலுவையாக மாறி, நம்மை இயேசுவின் சீடனாக மாற்றும்.


ஒரு தந்தை ஒவ்வொரு நாள் காலையிலும் தன் பிள்ளை.களுக்கு ஒரு இறைவார்த்தையை விளக்குவது வழக்கம்.

அன்றைய வசனம் 

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்."

வசனத்தின் பொருளை விளக்கிவிட்டு தந்தை சொன்னார்,

"இந்த வசனம் இன்று மட்டுமல்ல என்றும் உங்கள் உயிராய் இருந்து செயல்பட வேண்டும்."

பிள்ளைகளில் ஒருவன் உயர்நிலைப்பள்ளி மாணவன். பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்.

அன்று மாலையில் பள்ளிக்கூடம் வந்தவன் நேரே அப்பாவிடம் சென்றான்.

"அப்பா, முதலில் ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள்."

"என்னடே விஷயம்? பள்ளியிலில் என்ன நடந்தது?"

"முதலில் ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள். அப்புறம் சொல்கிறேன்."

"ஆண்டவருக்கு நன்றி!

சரி, இப்போ சொல்லு."

பையன் முதலில் பையிலிருந்து  progress report ஐ எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.

"பையன் நல்ல மதிப்பெண் 
வாங்கியிருப்பான் போல் இருக்கிறது"

 என்று எண்ணிக்கொண்டே, 

  progress report ஐ பார்த்தவுடன் முகம் மாறிவிட்டது.

மூன்று பாடங்களுக்கு சிவப்புமையில் மார்க் பதிவாகியிருந்தது.

"ஏண்டா மூன்று பாடங்களில் பெயில் ஆகி இருக்க,  அதற்கு நன்றி சொல்ல வேண்டுமா?"

"அப்பா, என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்."

"டேய்! இறை வார்த்தையை Joke அடிக்கப் பயன்படுத்தக்கூடாது."

"Joke இல்லப்பா. உண்மையாக, மனமார சொல்லுகிறேன்.

நான் படிக்காமல் சோம்பேறியாக இருந்து தேர்வு எழுதி குறைந்த மார்க் எடுத்திருந்தால் என் தப்பு.

உங்களுக்கு தெரியும் நான் நேரத்தை வீணாக்காமல் படிக்கிறேன் என்று.


உங்களுக்கு தெரியும் கடவுள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக திறமைகளை கொடுப்பதில்லை என்று.

தாலந்து உவமையை விளக்கும்போது நீங்கள்தானே சொன்னீர்கள்.

எனக்கு அவர் தந்துள்ள திறமைகளை முற்றிலும் பயன்படுத்தி இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறேன்.

எனக்கு நன்றாகத் தெரிகிறது, எனது மேற்படிப்பு கடவுளின் சித்தம் இல்லை என்று.

 அதை ஏற்றுக்கொள்ள வேண்டியது என் கடமை.

பத்தாவது வகுப்பு முடிந்தவுடன் நான் உங்களுடன் விவசாயம் பார்க்க வந்துவிடுகிறேன்.

அதுதான் கடவுளே சித்தம் என்று நான் நம்புகிறேன்.

அதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்,

 நீங்களும் நன்றி கூறுங்கள்."

தந்தையின் முகம் மலர்ந்தது.

"இறைவார்த்தை உன் உள்ளத்தில் உயிருடன் செயல்பட்டுக் 
கொண்டிருக்கிறது.

இறைவார்த்தையில் பொருளையும் உயிரையும் ஒருங்கே ஏற்றுக் கொள்பவன் 

இறைவன் சித்தப்படியே வாழ்வான், வளர்வான்.

இறைவா உனக்கு நன்றி."

வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் இறைவனினின் சித்தமாக இருக்கும்.


நமது விசுவாசத்தின் ஆழத்தைச் சோதித்துப் பார்க்க வந்திருக்கிறது ஒரு சவால்: கொரோனாவின் ஆட்சி.

சவாலில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால்,


"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை"

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்." 

உள்ளிட்ட இறை வார்த்தைகள் நம்முடைய உள்ளத்தில் உயிரோடு இருந்து, நம்மை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

அஞ்சாமல் வெற்றிநடை போடுவோம் விண் நோக்கி.

லூர்து செல்வம்.

Friday, August 21, 2020

கர்த்தர் கற்பித்த செபம் கற்பிக்கும் பாடம். (தொடர்ச்சி)

கர்த்தர் கற்பித்த செபம் கற்பிக்கும் பாடம். (தொடர்ச்சி)
***************************************

நான்காவது மன்றாட்டு :

4. எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும்.

வினாடிகளை நிமிடத்தின் கணம் (Set) என்பார்கள்.

மணியை நிமிடங்களின் கணம்  என்பார்கள்.

நாளை மணிகளின் கணம்  என்பார்கள்.

ஆண்டை நாட்களின் கணம்  என்பார்கள்.

ஒரு வினாடியில் அந்த வினாடியை மட்டுமே வாழ முடியும்,

அடுத்த வினாடியை வாழ முடியாது.

இது நிமிடத்துக்கும், மணிக்கும், நாளுக்கும் பொருந்தும்.

ஒரு நாளில் அடுத்த நாளை வாழ முடியாது.

மறுநாள் வருமா வராதா என்பதே  நமக்குத் தெரியாது.

அந்தந்த நாளை அன்றன்றுதான் வாழ வேண்டும்.

இறைவன் நம்மை ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நாளும் நம்மைப் பராமரித்து வருகிறார்.

நமது பிள்ளையை வெளியூருக்கு அனுப்பும்போது,

"பத்திரமாய் போய், வா "

என்று சொல்லி அனுப்புகிறோம்.

உடன் போவதில்லை.

ஆனால் கடவுள் ஒவ்வொரு வினாடியும் நம்மோடு இருந்து நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

அன்றன்றைய தேவைகளை அன்றன்று பூர்த்தி செய்து வருகிறார்.

அன்றன்றைய தேவைகளை அன்றன்றுதான் பயன்படுத்த முடியும்.

நாளைய தேவைகளை இன்று பயன்படுத்த முடியாது.

உலக நியதிப்படி பல ஆண்டுகளுக்கான  தேவைகளை இன்றே சேமித்து வைத்துக் கொள்கிறோம்.

ஆனால் இறைவன் நியதிப்படி நம்மிடம் சுய முயற்சியோடு ஆழமான விசுவாசம் இருந்தால் 

அன்றன்றய தேவைகளை  அன்றன்றே  இறைவன் பூர்த்தி செய்வார்.

தேவைக்குப் போக மீதி இருப்பவற்றை தேவையுள்ள அயலானோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால்தான் இயேசு, 

"எங்கள் அனுதின உணவை  எங்களுக்கு  இன்று  அளித்தருளும்."

"ஒரு மாதத்திற்கான உணவை இன்று தாரும்" என்று கேட்கவில்லை

"இன்றைக்கு தேவையான உணவை இன்று தாரும்" என்றுதான் கேட்கிறோம். 

அதாவது,

"தந்தையே,

 எனது முயற்சியின் விளைவாக என்னிடம் இம்மாதம் முழுவதற்கும் போதுமான உணவு இருக்கிறது,

 ஆனால் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் சாப்பிட முடியும்.

  என் தேவைக்குப்  போக மீதி இருப்பதை  தேவைப்படும் அயலானுக்குக் கொடுத்து உதவுகிறேன்.

 இப்போது வேறு யாருக்கும் தேவை ஏதும் இல்லாவிட்டாலும், எப்போது தேவை இருக்கிறதோ அப்போது கொடுத்து உதவுவேன்.

 எனது அன்றன்றைய தேவைகளை நீர் அன்றன்று பூர்த்தி  செய்வீர் என்று உறுதியாக விசுவசிக்கிறேன்."

நாம் நமது எதிர்காலத்துக்கு மட்டுமல்லாமல் நம்முடைய  சந்ததியாருடைய எதிர்காலத்திற்கும் சேமிக்க விரும்புகிறோம்.

இது  உலகியல் மதிப்பீடு, 

கிறிஸ்தவ மதிப்பீடு அல்ல.

அயலானுக்கு உதவி வாழ்வதே விண்ணகம் செல்லும் வழி.

விண்ணகம் செல்ல வேண்டுமென்றால், 

எல்லாவற்றையும் நமக்கே சேமித்து வைத்துக்கொள்ளாமல், 

நமது  அயலானுக்கு நம்மாலான உதவி செய்ய வேண்டும் என்று இயேசு பாடம் கற்பிக்கிறார்.

குறைவான விசுவாசம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் கடினமான பாடம்,

 ஆழமான விசுவாசம் உள்ளவர்களுக்கு மிக எளிதான பாடம்,


ஐந்தாவது மன்றாட்டு:

5. எங்களுக்கு தீமை  செய்பவர்களை  நாங்கள்  பொறுப்பது போல  எங்கள் பாவங்களைப்  பொறுத்தருளும்,  

மன்னிப்பதற்கென்றே  இயேசு மனிதனாகப் பிறந்தார்.

நாம் அனைவரும் பாவிகள்.

 நம் எல்லோருக்கும் மன்னிப்புத் தேவைப்படுகிறது.

 கடவுளிடம் நமது பாவங்களுக்கு மன்னிப்பு  கேட்கும் முன் 

நாம் நமக்குத் தீமை செய்த மற்றவர்களை   மன்னிக்க வேண்டும்,

 நம்மால் மன்னிக்க முடியாவிட்டால் இறைவனிடம் மன்னிப்பு கேட்க நமக்கு தகுதி இல்லை.

நமது பாவங்களுக்கு இறைவனிடமிருந்து மன்னிப்பு பெறுவது ஒன்றுதான் விண்ணகம் செல்ல வழி.

நாம் மன்னிப்புப் பெற வேண்டுமென்றால் நமது அயலானை நாம் மன்னிக்க வேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்றுத் தருகிறார்.


ஆறாவது மன்றாட்டு:

6.எங்களைச் சோதனையில்   விழவிடாதேயும்.

சோதனைக் காரன் என்று ஒருவன் இருக்கிறான். அவன்  வேலையே சோதிப்பதுதான்.

 அவனது சோதனையின் விளைவாகத்தான் நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.

 அவன் இன்றும் கர்ஜிக்கும் சிங்கம் போல் யாரை விழுங்கலாம்  என்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறான்.

 ஆகவே அவன் நம்மையும் சோதிப்பான்.

 இயேசுவின் பொதுவாழ்வு ஆரம்பிக்குமுன் அவரையே சோதித்தான்.

 அவர் கடவுள்.

 நமக்கும் சோதனைகள் வரும் என்று நமக்கு பாடம் கற்பிக்கவே தன்னைச் சோதிக்க அவனுக்கு அனுமதி கொடுத்தார்.

 நாம் அவனைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை,

 ஏனென்றால் கடவுள் நம்மோடிருக்கிறார்.

சோதனைகளை வென்று நமது ஆன்மாவைப் பரிசுத்தமாகக் காப்பாற்றிக் கொள்வதுதான் விண்ணுலகில் நுழைய வழி.


சோதனைகளை வெல்ல தந்தையின் உதவியை கேட்க வேண்டும் எந்த பாடத்தை இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

ஏழாவது மன்றாட்டு :

 7. தீமைகளிலிருந்து  எங்களை  இரட்சித்தருளும்.. 

   நமது ஆன்மிகப் பயணத்தில் பாவம் ஒன்றுதான் தீமை. பாவம் ஒன்றுதான் நம்மை இறை உறவிலிருந்து  பிரிக்கும்.

ஞானஸ்நானத்தின்போது நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தை மாசுபடாமல் பாதுகாத்துப் பயணித்தால்தான்  விண்ணகம் செல்லமுடியும்.

துன்பங்களாலோ, , துயரங்களாலோ , நோய் நொடிகளாலோ  மரணத்தாலோ  நம்மை இறைவனிடமிருந்து  பிரிக்க முடியாது.

பாவத்தால் மட்டுமே அது முடியும்.

 பாவம் எதுவும் செய்யாமல் நம்மை பாதுகாத்துக்கொள்வது ஒன்றுதான் விண்ணகம் செல்ல வழி,

நான் பலகீனமானவர்கள். இறைவன் உதவி இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது.

ஆகவே நம்மை பாவத்தில் விழாமல் பாதுகாக்கும்படி தந்தையின் உதவியை தேடுகிறோம்.

நாம் நமது தந்தையைச் சார்ந்து வாழ்வதே தந்தைக்கும் பெருமை.

தந்தையின் அருள் உதவி இருந்தால் மட்டுமே பாவத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் எந்த பாடத்தை  இயேசு நமக்கும் கற்பிக்கிறார்.

கர்த்தர் கற்பித்த செபம் தந்தை இறைவனுக்கும், அவரை அடையத் தேவையான ஆன்மீக பரிசுத்தத் தனத்திற்கும் அதிக முக்கியதுவம் கொடுக்கிறது.

இறைவனைப் புகழ்கிறோம்.

அவரை அடையத் தேவையான பரிசுத்தத் தனத்தை நமக்குத் தந்தருள அவரை வேண்டுகிறோம்.

நமது தேவைகளை பொருத்தமட்டில் அன்றாடத் தேவையில்லை  அன்றன்றைக்கு தந்தை பூர்த்தி செய்வார் எங்க உறுதியான விசுவாசத்தை தந்தைக்கு தெரியப்படுத்துகிறோம்.

மிக முக்கியமான அம்சம், நாம் ஒவ்வொருவரும் மனுக் குலத்தின் சார்பாக நமது மன்றாட்டுக்களை சமர்ப்பிக்கிறோம்.

இயேசு தன்னையே தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுத்தது,

மனுக்குலம் முழுவதின்  மீட்புக்காகத்தான்.

ஆகவேதான் மனுக்குலம் முழுவதற்குமாகத்தான் செபிக்க நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

மனுக்குலம் முழுவதும் மனம் திரும்பி இயேசுவின் வழிக்கு வர வேண்டும்.

மனிதர் எல்லோரும் மீட்கப்பட வேண்டும். 

அதுவே  தந்தையின் சித்தம்.

தந்தையின் சித்தம் நிறைவேற  பாடுபடுவோம்.

ஆழமான விசுவாசத்தோடு தந்தையிடம் மன்றாட்டுக்களைச் சமர்ப்பிப்போம்.

விண்ணகத்தில் தந்தையோடு இணைவோம்.

லூர்து செல்வம்