Saturday, October 2, 2021

" இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.."(மாற்கு, 10:8)

" இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.."
(மாற்கு, 10:8)

இன்றைய குடும்பங்களில் பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் காரணமே கணவன் மனைவி ஆகிய இருவருள் யார் பெரியவர் என்ற கேள்விதான்.

யார் சொல்லை யார் கேட்க வேண்டும்?

பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும்போது யாருடைய தீர்வு இறுதியானது?

யார் கையில் வரவு செலவு இருக்க வேண்டும்?

போன்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு 

அவற்றுக்கு விடை காண முடியாமல் திண்டாடுவது தான் இன்றைய குடும்ப பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம்.

குடும்பத்தை பற்றிய இயேசுவின் வார்த்தைகளை தியானிப்பவர்கள்
மனதில் 

இத்தகைய கேள்விகளும் எழாது.

 விடை தேட வேண்டிய அவசியமும் இருக்காது.

" ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்."

கணவன், மனைவி இருவரல்ல ஒருவரே.

இயேசு கடவுள்.

 குடும்பம் என்ற அமைப்பை படைத்தவரே அவர்தான்.

 நமது முதல் பெற்றவரை அவர் படைத்த விதமே இதை விளக்கும்.

 ஆதாமை முதலில் படைத்துவிட்டு அவனுடைய விலா எலும்பை எடுத்து ஏவாளைப் படைத்தார்.

ஆதாமின் விலா எலும்பு அவனுடைய இருதயத்திற்குப் பாதுகாவல் அரணாய் இருந்தது.

ஏவாள் ஆதாமுடைய இருதயத்துக்கு அருகிலுள்ள   உள் உறுப்பு.

அவனுடைய அன்புக்கும் பாதுகாப்புக்கும் உரிய  உறுப்பு. 

வெளிப் பார்வையில் ஆதாமும், ஏவாளும் இருவராய் தோன்றினாலும், இருவரும் ஒரே உடல்தான்.

ஆதாமின் விலா எலும்புதானே ஏவாள்!

கணவனும் மனைவியும் ஒரே உடல்தான்.

 ஒரே உடலின் இரு உறுப்புகள்தான் என்ற உணர்வோடு வாழ்ந்தால் 

பெரியவர் யார், சிறியவர் யார் போன்ற கேள்விகளே எழாது.

எப்போதாவது நமது தலைக்கும், காலுக்கும் இடையில் இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளனவா?

காலுக்கு வலித்தால் தலை தானே கண்ணீர் விடுகின்றது! 

தலைக்கு வலித்தால் கைதானே மருந்தை எடுக்கிறது!

இதே போன்ற உணர்வுதான் கணவன் மனைவிக்கு இடையே இருக்க வேண்டும். 

இத்தகைய உணர்வோடு வாழும் குடும்பங்களில் தீர்வு காண முடியாத பிரச்சனைகள் ஏற்படாது.

நவீன குடும்பங்களில் ஏற்படும் பிரிவினை உணர்வுகள் இயேசுவின்  சொற்படி வாழும் குடும்பங்களில் ஏற்படாது.

ஒரு போதும் ஒரு உடலில் உள்ள இருதயம் நுரையீரலை வேண்டாம் என்று சொல்லாது.

ஒரே உடலாய் வாழும் குடும்பத்தில் கணவனுக்கு ஒரு  பிரச்சனை என்றால் அதை மனைவி தன் பிரச்சனையாகப் பார்ப்பாள். 

கணவனுக்கு எது மகிழ்ச்சியோ அது மனைவிக்கும் மகிழ்ச்சி.

பரிசேயர் இயேசுவை அணுகி, "கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?" என்று கேட்ட கேள்விக்கு பதிலாகத்தான்

இயேசு

''இருவரும் ஒரே உடலாய் இருப்பார்கள். இனி அவர்கள் இருவரல்லர், ஒரே உடல்.

9 ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்"

என்று இயேசு பதில் சொன்னார்.

திருமணத்திற்கு முன்னால் மாப்பிள்ளையும், பெண்ணும் வெவ்வேறு குடும்பங்களில், வெவ்வேறு சூழ் நிலைகளில் பிறந்து வளர்ந்தவர்கள்.

வெவ்வேறு வகையான, 

சில சமயங்களில் எதிர் எதிரான,

 குணங்களோடு,

கருத்து வேறுபாடு உள்ளவர்களாக,

 பிறந்து வளர்ந்திருக்கலாம்.

திருமணம் பற்றிய எண்ணம் எழுந்த உடனேயே,

கணவனோடு அல்லது மனைவியோடு,

 ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து,

ஓருடலாய் வாழும் மனப்பக்குவத்தை 

இறைவனிடம் செபத்தின் மூலம் கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

திருமணம் முடிந்தபின் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும்போதுதான் 

ஒருவர் ஒருவருடைய மனநிலையை புரிந்து கொள்ள முடியும்.

திருமண வாழ்வின் உயிர் அன்பு.

அன்பின் அடிப்படையில் வெவ்வேறு மனப் பக்குவங்கள் உள்ளவர்களும், 

 வேறுபாடுகளுடனும்,

 குறை நிறைகளுடனும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு வாழலாம்,

அல்லது மற்றவர்களது மனப்பக்குவத்தை போல் தங்கள் மனப்பக்குவத்தை மாற்றிக் கொள்ளலாம்..

தங்களையே மாற்றிக் கொண்டாலும் சரி,

 ஒருவரை ஒருவர் மாற்றம் இல்லாமல் ஏற்றுக் கொண்டாலும் சரி 

அன்பு மட்டும் குறையக்கூடாது.

அன்பு மாறக் கூடாது என்பதை புரிய வைக்கத் தான் 

அன்புக்கு உறைவிடமான இதயத்திற்கு பாதுகாப்பாக இருந்த விலா எலும்பிலிருந்து ஏவாளைக் கடவுள் படைத்ததாக இறைவாக்கு சொல்கிறது.

ஒரு உடலின் வெவ்வேறு உறுப்புகள் வெவ்வேறு விதமாய் செயல்பட்டாலும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொள்வது போல 

கணவனும் மனைவியும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அன்பு ஒன்றுதான் இருவரை ஓருடலாய் வாழவைக்கும்.


லூர்து செல்வம்.

1 comment:

  1. I humbly request you if possible give me your e-mail i-d. I have a big question. Thanks a lot.

    ReplyDelete