Sunday, October 10, 2021

"அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது." (மாற்கு, 10:22)

"அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது." 
(மாற்கு, 10:22)

ஒரு செல்வந்தன்  ஓடிவந்து இயேசு முன் முழந்தாளிட்டு, 

"நல்ல போதகரே, நான் முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.

அவர் மறுமொழியாக கட்டளைகளை கடைப்பிடித்தால் முடிவில்லா வாழ்வு பெறலாம் என்றார்.

அவன் தனது சிறுவயது முதல் கட்டளைகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதாக கூறினான்.


இயேசு அவனிடம்,

 "உனக்கு ஒன்று குறைவாயிருக்கிறது. 

போய் உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு.

 வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். 

பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.


அவன் இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். 

ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.

 விண்ணகம் செல்வதற்கு அடிப்படைத் தகுதி பாவம் இல்லாதிருக்க வேண்டும்.

கட்டளைகளை ஒழுங்காக
 கடைப்பிடிப்பவர்களிடம் பாவம் இருக்காது.

ஆகவே விண்ணகம் செல்ல கட்டளைகளை கடைபிடித்தல் போதுமானது.

ஆனால் இயேசு நாம் நமது விண்ணக தந்தை நிறைவு உள்ளவராய் இருப்பது போல நாமும் நிறைவு உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தமிழில் தாயைப் போல் பிள்ளை என்ற ஒரு பழமொழி உண்டு.

அதேபோன்று ஆன்மிகத்தில் நம்மைப் படைத்தவரைப் போல 
நாம் இருக்க வேண்டும் படைத்தவர் ஆசைப்படுகிறார்,

Be perfect as your heavenly Father is perfect.

" வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்." (மத் 5:48)

மோட்சத்திற்கு போனால் போதும் என்று எண்ணினால் கட்டளைகளை அனுசரித்தாலே போதும்.

தன்னையே நமக்காக பலியாக்கிய இயேசுவின் ஆசையை திருப்திபடுத்த வேண்டும் என்றால் நாம் நிறைவு உள்ளவர்களாக மாற வேண்டும்.

சில மாணவர்கள் pass செய்தால் போதும் என்று 
35 மதிப்பெண்களையே 
குறிக்கோளாக வைத்து படிப்பாளர்கள்.

ஆனால் தங்களை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிற அப்பாவை திருப்திப்படுத்த ஆசைப்படும் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை குறிக்கோளாக வைத்து படிப்பாளர்கள்.

நாம் விண்ணகத்துக்காக மட்டுமல்ல, நம்மை படைத்த கடவுளுக்காகவும் வாழ வேண்டும்.

ஆன்மீகத்தில் நிறைவு உள்ளவர்களாக ஆக வேண்டுமென்றால் லௌகீகத்தில் வெறுமையானவர்களாக மாற வேண்டும்.

அருள் செல்வம் நிறைய வேண்டுமென்றால் பொருள் செல்வத்தின் மீது பற்று இருக்கக்கூடாது.

பணக்காரன் என்றால் பணத்தின் மீது முழுமையான பற்று உள்ளவர் என்பது பொருள்.

பணத்தின் மீது  முழுமையான பற்று உள்ளவர்களுக்கு கடவுளின் அரசின் மீது  கொஞ்சம் கூட பற்று இருக்காது.

கடவுளின் அரசின் மீது   முழுமையான பற்று உள்ளவர்களுக்கு பணத்தின் மீது கொஞ்சம் கூட பற்று இருக்காது.

எப்படி ஒளியும் இருளும் சேர்ந்து இருக்க முடியாதோ, அப்படியே அருட்பற்றும், பொருள் பற்றும்
சேர்ந்து இருக்க முடியாது.

உலகமே ஒரு பொருள் தான். அப்படியானால் பொருள் இல்லாமல் உலகில் வாழ முடியாது.

அப்படியானால் உலகில வாழும் யாருக்கும் அருளே கிடைக்காதா?

பொருள் வேறு, பொருள் பற்று வேறு. 

பொருள் சடப்பொருளாலான உலகம்.

உலகம் என்று சொல்லும்போது உலகத்தில் வாழ பயன்படும் பணத்தை குறிக்கிறோம்.

உலகத்தில் வாழ பணம் தேவைதான். ஆனால் பணப் பற்று தேவை இல்லை.

உலகில் வாழும் ஆன்மீகவாதிகளுக்கு பணப்பற்றே இருக்கக் கூடாது.

பணம் இருக்கலாம். ஆனால் பண பற்று இருக்கக்கூடாது. அது எப்படி?

பற்று என்றால் ஆசை.

பாவூர் சத்திரத்திலிருந்து தென்காசிக்குச் செல்ல அரசுப் பேருந்தைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயணம் செய்யும் பேருந்தின் மீது நமக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா?

பேருந்தில் ஏதாவது பழுது ஏற்பட்டால் அதற்காக உட்கார்ந்து அழுவோமா? 

நமது பயணம் தடைபட்டதற்காக வருந்துவோமேயொழிய பேருந்து பழுதுபட்டதற்காக வருந்த மாட்டோம்.

ஆனால் வீட்டில் நமது உறவினர் ஒருவருக்கு சுகமில்லை என்றால் வருந்தவோம், ஏனெனில் அவர் மீது நமக்கு ஆசை இருக்கிறது, அதாவது, பற்று இருக்கிறது.

பேருந்தை பயணத்திற்கு பயன்படுத்துவது போல பணத்தை செலவிற்கு பயன்படுத்த வேண்டும்.

பேருந்தின் மீது நமக்கு எந்தப் பற்றும் இல்லாதது போல, பணத்தின் மீதும் நமக்கு எந்தப் பற்றும் இருக்கக் கூடாது.

எதன் மீது பற்று இல்லையோ அது தொலைந்தாலும் வருத்தப்பட மாட்டோம்.

பணத்தை உள்ளடக்கிய பொருள்களை நாம் உலகில் வாழ பயன்படுத்த வேண்டும்,

 ஆனால் அவற்றின் மீது  பற்று வைக்கக் கூடாது.

தான் குடியிருக்கும் வீடு உட்பட எல்லாப் பொருள்களும் நம் கையை விட்டுப் போனாலும்,

 அதற்காக வருந்தாதவன்தான் உண்மையிலேயே பற்று அற்றவன்.

தான் வைத்திருக்கும் பொருட்கள் மீது பற்று வைத்திருப்பவன் அவற்றை விட்டு பிரிய விரும்ப மாட்டான்.

நாம் சாக விரும்பவில்லை.

ஏன்?

நாம் வாழும் இந்த உலகத்தின் மீது பற்று இருக்கிறது.

உலகத்தின் மீது பற்று இல்லாமல்

 இறைவன் மீது மட்டும் பற்று வைத்திருப்பவன் எந்த வினாடியும் சாக தயாராக இருப்பான்.

ஏனெனில் மரணம் அவனை அவன் பற்று வைத்திருக்கும் இறைவனோடு இணைக்கிறது.

உலகத்தின் மீது அளவுக்கு மிஞ்சி பற்று வைத்திருப்பவன் விண்ணகமே கிடைத்தாலும் விரும்பமாட்டான்.


அதனால்தான் ஆண்டவர் 

" கடவுளின் அரசில் செல்வமுடையவர்

 (செல்வத்தின் மீது பற்று வைத்திருப்பவர்) 

நுழைவது எவ்வளவோ அரிது! " என்றார்.

உலகில் பிறந்துவிட்டோம். இறைவன் அழைக்கும் வரை  அதில் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.


உலகப் பொருட்களை நாம் வாழும்போது வாழ்வதற்காக பயன்படுத்துவதற்காக மட்டுமே தந்துள்ளார்.

சொந்தம் கொண்டாடுவதற்காக அல்ல.

இறைவன் காட்டிய வழியில் அவற்றைப் பயன்படுத்துவோம்.

தான தருமம் செய்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்ற நற்செயல்களுக்காக அவற்றைப் பயன்படுத்தினால்,

நற்செயல்களுக்கு பிரதிபலனாக ஆண்டவருடைய அருள் கிடைக்கும்.

நற்செயல்கள் மூலம் உலகப் பொருளை இறைவனது அருளாக மாற்றி விடலாம். 

இறை அருள் நம்மை விண்ணக பாதையில் வழி நடத்துவதோடு நம்மோடேயே விண்ணகத்துக்கும் வரும்.

நிரந்தரமற்ற உலகப் பொருளை நற்செயல்கள் மூலம் அருளாக மாற்றி விண்ணகத்தில் நித்திய காலமும் நம்முடைய வைத்துக்கொள்வோம்.

அருளாக மாற்றுவதற்காகத்தான் ஆண்டவர் பொருளை தந்திருக்கிறார்.

பொருள்மீது உள்ள பற்றை அருளுக்கு மாற்றுவோம்.

 நித்தியமும் பயன்பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment