Sunday, October 31, 2021

"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"(மாற்கு.12:31)

"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"
(மாற்கு.12:31)


"உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக" 


என்று  சொன்ன நம் ஆண்டவர் உன் மீது அன்பு காட்டுவாயாக என்று சொல்லவில்லையே, ஏன்?

கடவுள்  நம்மை தனது சாயலாக   படைத்தார்.

தாயைத் தண்ணீர்க் கிணற்றில் பார்த்தால் மகளை வீட்டில் போல் பார்க்க வேண்டாம் என்பார்கள்.

காரணம்  தாயும் மகளும் ஒரே சாயலாக இருப்பார்கள்.

அன்பு செய்வது கடவுளுடைய சுபாவம்.

கடவுள் தன்னைத்   தானே நித்திய காலமும் அன்பு செய்கிறார்.

அவர் நம்மை தனது சாயலாக படைத்தபோது நாம் நம்மையே அன்பு செய்யக் கூடிய பண்போடு தான் படைத்தார்.

ஆக நம்மை நாமே அன்பு செய்வது  நமது இயற்கையான சுபாவம்.

ஆகவே நம்மை நாமே அன்பு செய்ய தனியாக கட்டளை தேவை இல்லை.

 நெருப்பைப் பார்த்து "ஒளி கொடு" என்று சொல்ல தேவை இல்லை. ஏனெனில் அதன் சுபாவமே ஒளியை கொடுப்பது தான்.

பிறரை அன்பு செய்யும் சுபாவமும் கடவுள் நமக்கு கொடுத்தது தான்.

 ஆனால் அது நமது சிந்தனை, சொல், செயல் சுதந்திரத்திற்கு கட்டுப்பட்டது.

பிறர் மீது எவ்வளவு அன்பு செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நமது தனிமனித சுதந்திரத்திற்கு உட்பட்டது.
 
 கடவுள் நமது சுதந்திரத்திற்குள் குறுக்கிடுவது இல்லை.

ஆனாலும் நாம்  பிறரை எப்படி அன்பு செய்ய வேண்டும் என்பதை கட்டளையாகக் கொடுத்திருக்கிறார்.

நமது சுதந்திரத்தை பயன்படுத்தி நம்மை நாம் அன்பு செய்வது போலவே மற்றவர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் கட்டளை கொடுத்திருக்கிறார். 

இந்த கட்டளையைப் பற்றி கவலைப்படாதவர்கள் கூட மற்றவர்களை அன்பு செய்யத்தான் செய்வார்கள்,

 ஆனால் அது தங்களை தாங்களே அன்பு செய்வது போல இருக்காது. 

மற்றவர்களை தங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதற்காக இருக்கும்.

நம்மிடம் உள்ள பொருட்களை நாம் விரும்புகிறோம்.

 எதற்காக?

 அவற்றை நமக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக.

 பயன்படாவிட்டால் விரும்ப மாட்டோம்.

பயன்படாத  பொருள் தொலைந்தாலும் கவலைப்பட மாட்டோம்.

முதலாளிகள் வேலைக்காரர்களை விரும்புவது எதற்காக?
:
தங்களது பயன்பாட்டிற்காக,

 பயன்படாத வேலைக்காரர்களை பணிநீக்கம் செய்து விடுவார்கள்.

 ஆனால் இறைவன் கட்டளைப்படி

முதலாளிகள்  தங்களை அன்பு செய்வது போலவே   வேலைக்காரர்களையும்
 அன்பு செய்ய வேண்டும்.

நம்மை நாமே அன்பு செய்வது போல மற்றவர்களையும் அன்பு செய்ய வேண்டுமென்றால்

 முதலில் இக்கட்டளையை நமக்கு கொடுத்த எல்லாம் வல்ல இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக, நமது முழு மனதோடு அன்பு செய்ய வேண்டும்.

கடவுளை நாம் முழுமனதோடு அன்பு செய்தால் மற்றவர்களையும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

 ஏனெனில் நம்மைப் போலவே மற்றவர்களும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்

 நம்மைப் போலவே அவர்களும் அவருடைய பிள்ளைகள்.

 நம்மை நேசிப்பது போலவே கடவுள் அவர்களையும் நேசிக்கிறார்.

கடவுளால் நேசிக்கப் 
படுகின்றவர்களை நாம் நேசிக்கா விட்டால் 

கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு முழுமையாக இருக்க முடியாது.

 கடவுள் நம்மை படைத்தவர். மனிதர்கள் அனைவரும் கடவுளுக்கும் சொந்தமானவர்கள்.

கடவுள் யார் யாரையெல்லாம் நேசிக்கிறாரோ  அவர்களையும் நாமும் நேசித்தால் தான் கடவுள் மீது நாம் கொண்டுள்ள அன்பு முழுமையாகும்.

ஒரு ஆளை நாம் நேசிக்கும்போது அவரை முழுமையாக நேசிப்போம்.

 கைகளை மட்டுமோ, கால்களை மட்டுமோ,  தலையை மட்டுமோ நேசிப்போமா?

கடவுளை முழுமையாக நேசிக்கின்றவர்கள் அவருக்கு உரியவர்கள் அனைவரையும் நேசிப்பார்கள்.

 ஆகவேதான் பிறரன்பு இறை அன்பில் அடங்கி இருக்கிறது. 

ஒன்றிலிருந்து மற்றதைப் பிரிக்க முடியாது.

 இறையன்பு உள்ளவனிடம்  பிறரன்பும் இருக்கும்.

 பிறரன்பு உள்ளவர்களிடம் 
இறையன்பும் இருக்கும்.
'
 இல்லாவிட்டால் அதன் பெயர் அன்பு அல்ல.

இறையன்பும், பிறரன்பும் நமது உயிர்.

உயிர் உள்ளவன் இயங்கிக் கொண்டேயிருப்பான்.

அன்பாகிய உயிரை கொண்டவன் எப்படி இயங்குவான்?

நம்மை அன்பு செய்யும் நாம் நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவோம்.

 நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக உழைப்போம்.

 நமக்கு தீமை தரக்கூடியவற்றை விரும்பமாட்டோம்.

 நன்மை செய்வது இயற்கை குணம்.

 அன்பு செய்யப் படுகிறவர்களுக்கு நன்மை செய்வதற்காகவே இயங்கக்கூடியது தான் அன்பு.

கடவுள் சர்வ நன்மை சொரூபமானவர்.

அவரால் படைக்கப்பட்ட நம்மால் அவருக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது.

நம்மால் முடிந்தது  நம்மை படைத்தவராக அவரை ஏற்றுக்கொண்டு,

அவரை  ஆராதித்து அவரது கட்டளைகளுக்குக்  கீழ்ப்படிந்து நடப்பதுதான். 

ஆனாலும் உண்மையான அன்பு அன்பு செய்யப்படுபவருக்கு நன்மை செய்ய வேண்டுமே?

அதற்காகத்தான் இயேசு சொல்கிறார்:

"என்னால் படைக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை எனக்கே செய்கிறீர்கள்.

 அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகளை எல்லாம் எனக்கே செய்கிறீர்கள்.

 அவர்களுக்கு  எதிராக நீங்கள் நடக்கும் போதெல்லாம் எனக்கு எதிராக நடக்கிறீர்கள்.

 ஆகவேஉங்கள் அயலானுக்கு  சேவை  செய்வதன் மூலம் எனக்கு சேவை செய்யுங்கள்.

பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் எனக்கு நன்மை செய்யுங்கள்."

 "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்." (மத்.25:40)

நமது எதிரிகளையும் படைத்தவர் கடவுளே, ஆகவே நமக்கு எதிராக வேலை செய்கின்றவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

நமக்கு தீமை செய்கின்றவர்களும் கடவுளால் படைக்கப்பட்டவர்களே.

 கடவுளால்  படைக்கப்பட்ட சூரியன்
நல்லவர்களுக்கு ஒளி தருவது தருவது போலவே,

 தீயவர்களுக்கும் ஒளி தருகிறது. 

மழை நல்லவர்கள் மேலும் பெய்கிறது கெட்டவர்கள் மேலும் பெய்கிறது.

அஃறிணைப் பொருள்களே இவ்வாறு செயல் புரியும் போது,

 நாம் கெட்டவர்களை ஒதுக்கலாமா?


நல்லவர்களோ, கெட்டவர்களோ எல்லோரையும் நாம் நேசிக்க வேண்டும்,

 எல்லோருக்கும் நன்மையே செய்ய வேண்டும்.

 பிறர்  பணிக்கு  நம்மை அர்ப்பணிப்பதன் மூலம்

இறைபணிக்கு நம்மை முழுவதும் 
அர்ப்பணிப்போம்.

லூர்து செல்வம்.

Saturday, October 30, 2021

" உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே.." (லூக். 14:8)

" உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே.." (லூக். 14:8)

குணத்தின் அடிப்படையில் மனிதர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.

1. இயல்பாகவே தாழ்ச்சி உள்ளவர்கள்.

2.இயல்பாகவே முதல் இடத்தை தேடுபவர்கள்.


இயல்பாகவே தாழ்ச்சி உள்ளவர்கள் கூட்டங்களில் முதல் இருக்கையில் அமர விரும்ப மாட்டார்கள். 

அதாவது மற்றவர்கள் முன் தங்களைப் பெரியவர்களாக நினைக்க மாட்டார்கள். 

இறைவன் முன் அவர்கள் எப்படியோ அப்படியே கூட்டங்களில் இருப்பார்கள். 

இறைவன் முன் தாங்கள் ஒன்றும் இல்லாதவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும்.

அந்த குணத்திற்கு ஏற்றபடி 
தாழ்ச்சியோடு நடந்து கொள்வார்கள்.

இயல்பாகவே முதல் இடத்தை தேடுபவர்கள் மற்றவர்களை விட தாங்கள் தான் பெரியவர்கள் என்று என்ணுவதோடு அப்படியே கூட்டங்களில் நடந்து கொள்வார்கள்.

மற்றவர்கள் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவதால் கூட்டங்களில் முதலிடத்தை தேடுவார்கள்.

இயேசு பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றிருந்தபோது

அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடங்களைத் தேர்ந்துகொள்வதைக் கண்டார்.

தாழ்ச்சியின் அவசியத்தை அவர்களுக்கு புரிகிற வகையில் இயேசு எடுத்து சொன்னார்.

"நீங்கள் நினைப்பது போல் நீங்கள் மற்றவர்களை விட பெரியவர்கள் அல்ல. 

நீங்கள் முதலிடத்தில் அமர்ந்தால் உங்களை விட பெரியவர்கள் வரும்போது உங்கள் இடத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு கடைசி  இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்.

நீங்கள் முதலிலேயே கடைசி இடத்தில் அமர்ந்து விட்டால் ஒருவேளை உங்களை அழைத்தவன் உங்களை முதல் இடத்திற்கு வரச் சொல்லலாம்.

  அப்பொழுது அது பெருமையாக இருக்கும்."

இயேசு முதலில் இருக்கையை விரும்புகிறவர்களுக்கு இந்த புத்திமதியைக் கூறுகிறார்.

"முதல் இருக்கைக்கு  ஆசைப்படுபவர்கள் கடைசி இருக்கையில் அமருங்கள்.

கடைசி இருக்கையில்   அமர்ந்தால்தான் முதல் இருக்கை கிடைக்கும்."

 இது பெருமையைத் தேடுபவர்களுக்கு இயேசு வழங்கும் புத்திமதி.

இயேசு ஒரு நல்ல ஆசிரியர்.

நல்ல ஆசிரியர் மாணவர்களின் இயல்பு அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு புத்திமதி கூறுவார்.

பெருமையை விரும்புபவர்களுக்கு அவர்கள் போக்கின்படி தாழ்ச்சியின் பெருமையை விளக்குகிறார்.

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."


''உயரவேண்டுமா? உன்னையே தாழ்த்திக் கொள்.

ஏனெனில் உன்னை நீயே உயர்த்தி கொண்டால் தாழ்த்தப் படுவாய்."

வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுகின்ற அளவிற்கு புத்தியுள்ள மாணவர்களும்,

Fail ஆகும் அளவிற்கு குறைந்த மதிப்பெண்  பெறுகின்ற மாணவர்களும் இருப்பார்கள்.

நல்ல மதிப்பெண் பெருகின்ற மாணவர்கள்  நூற்றுக்கு நூறு எடுக்க வேண்டும்.

Fail ஆகின்றவர்கள் pass பண்ண வேண்டும்.

ஆசிரியர் இரு வகையினருக்கும் ஒரே மாதிரியான புத்திமதியை கூறமாட்டார். அவரவருக்கு பொருத்தமான புத்திமதியைக் கூறுவார்.

அன்னை மரியாள் இயல்பாகவே தாழ்ச்சி உள்ளவள்.  பெருமையை விரும்பாதவள்.  

கடவுள் அவளுக்கு தனது தாயாகும் பெரிய பாக்கியத்தை கொடுத்தாலும்,

 அவள் 

'இதோ ஆண்டவரின் அடிமை, உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்,"

 என்றுதான் சொன்னாள்.

எஜமானரின் சொல்லுக்கு அடிமை கீழ்ப்படிய வேண்டும்.

"இறைவனின் தாய்" என்ற பெருமையை கடவுள் அவளுக்குக் கொடுத்தாலும் அதை அவரது அடிமை என்ற முறையிலேயே கீழ்ப்படிதலுடன்  ஏற்றுக்கொண்டாள்.

"நீ எனது அடிமை என்று ஏற்றுக் கொண்டால் உனக்கு எனது தாய் என்ற பாக்கியத்தை கொடுப்பேன்" 

என்று இறைவன் அவளுக்கு செய்தி அனுப்பவில்லை.

இறைவனின் தாய் என்ற பெருமையை கபிரியேல் தூதர் அவளுக்கு அறிவித்த பிறகுதான் 

தான் இறைவனின் அடிமை என்ற தனது இயல்பான நிலையை அவள் அறிவித்தாள்.

நன்கு படிக்கும் மாணவர்கள் 
மதிப்பெண்ணுக்காக படிக்க மாட்டார்கள்.

அவர்கள் படிப்புக்காகத்தான் மதிப்பெண் வரும்.


அதேபோல அன்னை மரியாள் இறைவனின் தாயாக வேண்டும் என்பதற்காக தன்னையே தாழ்த்த வில்லை.

அவளது தாழ்ச்சிக்காகத்தான் இறைவனின் தாயென்ற உயர்வு கிடைத்தது.

குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களுக்கு ஏதாவது ஆசையை காண்பித்துதான் அவர்களை நன்கு படிக்கும்படி செய்ய வேண்டும்.

அவர்களாக படிக்க மாட்டார்கள்.

அதேபோல்தான் ஆண்டவர்  உணவு அருந்திய பரிசேயர் தலைவன் வீட்டுக்கு வந்த மற்றவர்களிடம் தாழ்ச்சி இல்லை.

அவர்களுக்கு பெருமை கிடைக்கும் என்ற ஆசையை காண்பித்து தான் அவர்களுக்கு தாழ்ச்சியின் அவசியத்தை ஆண்டவர் போதித்தார்.

நாம் அன்னை மரியாளைப் போல இயல்பாகவே தாழ்ச்சியாக இருக்க வேண்டும். 

 பரிசேயர் தலைவன் வீட்டுக்கு சாப்பிட வந்தவர்களை போல் இருந்தால் ஆண்டவர் நம்மிடமும்,

"தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்: தன்னைத் தாழ்த்துகிறவனோ உயர்த்தப்பெறுவான்."

என்றுதான் சொல்வார்.

தாழ்ச்சி     புண்ணியங்களின் அரசி. (Queen of all the virtues)

தாழ்ச்சி   உள்ளவனால்தான்  மற்ற புண்ணியங்களையும் சம்பாதிக்க முடியும். 

லூசிபெருக்கு தாழ்ச்சி இல்லை.

தாழ்ச்சி இல்லாதவனுக்கு  அவன் கதிதான்.

நம்மிலேயே நாம் ஒன்றும் இல்லாதவர்கள்.

We are nothing by ourselves.

நம்மிடம் இருப்பதெல்லாம் இறைவன் தந்தவை.

நமது உண்மை நிலையை ஏற்றுக் கொள்வதுதான் தாழ்ச்சி.

நாம் நமது  ஒன்றும் இல்லாமையை ஏற்றுக்கொண்டால் எல்லாம் உள்ள கடவுள் தன்னையே நமக்கு அளித்து விடுவார்.

கடவுள் தான் நமக்கு எல்லாம்.

ஒரு கதை சொல்லுவார்கள்.
கற்பனை கதைதான். கதையைவிட கருத்துதான் முக்கியம். 

ஒரு நாள் திருச்சபையின் தலைவரான புனித இராயப்பர் இயேசு தனக்கு தந்த 
சாவிகளுடன் மோட்சத்தை சுற்றிப் பார்த்தார்.

மோட்சத்தின் ஒரு பகுதியில் தான்  அதுவரை பார்த்திராத சில சாதாரண மக்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

"மோட்சத்தின் சாவி என் கையில் இருக்கிறது. எனக்குத் தெரியாமல் உள்ளே எப்படி வந்தீர்கள்?''
  
" அதோ பாருங்கள்."

இராயப்பர் பார்த்தபோது மோட்சத்தின் சுவற்றில் ஒரு பெரிய ஓட்டை போட்டிருந்தது.

"அதன் வழியாக உள்ளே வந்தோம்."

"யார் அந்த ஓட்டையைப் போட்டு குறுக்கு வழியில் உங்களை உள்ளே விட்டது?" 

''நாங்கள் மிகவும் , சாதாரணமானவர்கள். எங்களை எப்படியாவது மோட்சத்திற்கு அழைத்துச்செல்ல சூசையப்பரிடம் தினம் வேண்டினோம்.

அவர்தான் இந்த ஓட்டையை போட்டு எங்களை உள்ளேன் விட்டார்."

தலைவராகிய தனக்கு தெரியாமல் எப்படி அவர்களை உள்ளே விடலாம் என்று சூசையப்பர் மீது அவருக்கு கோபம் வந்தது.

உடனே மோட்சத்தின் பொது சபையைக் கூட்டினார்.

சூசையப்பரை முன்னால்  அழைத்தார்.

அழைத்தவுடன் அவரும் முன்னால் வந்தார்.

எதுவும் விசாரிக்காமலேயே,

" திருச்சபையின் தலைவராகிய எனக்கு தெரியாமல் உங்களுக்கு வேண்டிய சாதாரண மக்களை உள்ளே விட்டிருக்கிறீர்கள். அதற்கு தண்டனையாக நீங்கள் மோட்சத்தை விட்டு வெளியேற வேண்டும்."

சூசையப்பர் மறுவார்த்தை பேசாமல் வெளியேற ஆரம்பித்தார்.

உடனே அன்னை மரியாள்,

"கொஞ்சம் நில்லுங்கள். கணவனுடன் மனைவி வருவதுதான் நியாயம். நானும் உங்களோடு வருகிறேன்."

என்று கூறி அவரோடு சென்றார்.

உடனே இயேசு எழுந்து,

"என்னை வளர்த்தவர்களுடன் நானும் போகிறேன்."

என்று கூறி அவரும் புறப்பட்டார்.

அவர் புறப்பட்ட உடனே மோட்ச வாசிகள் அனைவரும்,

"இயேசு இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை. இராயப்பரே சாவிகளை பத்திரமாக வைத்துக்கொள்ளும்."

என்று அவர்களின் பின்னால் புறப்பட்டார்கள்.

இராயப்பருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

வேகமாக ஓடி சூசையப்பரின் கையை பிடித்துக்கொண்டு,

"உள்ளே வாருங்கள். தெரியாமல் சொல்லிவிட்டேன். உங்களது தாழ்ச்சியின் முன்புதான் மோட்சமே இருக்கிறது."

இப்போதும் சூசையப்பர் மறுவார்த்தை பேசாமல் உள்ளே வந்துவிட்டார். 

அனைவரும் அவரோடு  வந்து விட்டனர்.

சூசையப்பரின் தாழ்ச்சி நமக்கும் இருக்க வேண்டும்.

லூர்து செல்வம்.

Friday, October 29, 2021

ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' (லூக்.13:24)(தொடர்ச்சி)

'ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' 
(லூக்.13:24)
(தொடர்ச்சி)

காலம் மாற மாற, விஞ்ஞானம் வளர வளர, உலகமும் மாறிக் கொண்டேயிருக்கிறது.

விஞ்ஞான வளர்ச்சியினால் நமது ஆன்மீகம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அநேகர் ஒடுக்கமான வாயில்வழியே நுழைய வருத்தப்பட்டு அகலமான பாதை வழியே நடந்து கொண்டிருந்தார்கள்.

இப்போது விஞ்ஞான வளர்ச்சி அகலமான பாதையை கவர்ச்சிகரமானதாக 
மாற்றியிருக்கிறது.

கவர்ச்சியினால் கவரப் படுவோர் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

சமூக வலை தளங்களில்  (Social media) ஒளிபரப்பப்படும் கவர்ச்சி நிகழ்ச்சிகளில் எண்ணற்றோர் தங்கள் பொன்னான நேரத்தை  வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

TV,. YouTube போன்ற புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளை சமூக வலை தளங்கள் இதற்கு பயன்படுத்தி கொண்டிருக்கின்றன.

நம்மவர்கள் சமூக வலை தளங்களில்  (Social media) ஒளிபரப்பப்படும் 
கவர்ச்சி நிகழ்ச்சிகளில் சிக்கி கெட்டுப் போகாதவாறு தடுப்பதற்காக 

நாமும் நமது ஆன்மிக நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இந்த புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

கோவில்கள் எல்லாம் அடைபட்டிருந்த கொரோனா காலத்தில் நமது திவ்ய பலி பூசையைக் கூட  YouTube மூலம்தான் பார்க்க வேண்டியிருந்தது.

ஆனால் அது எவ்வளவு தூரம் நமக்கு பயன்பட்டது  என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

முதலாவது பூசையைப் பார்க்க மட்டுமே முடிந்தது. அதில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆண்டவரை படத்தில்தான் பார்த்தோம், நாவில் வாங்க முடியவில்லை.

இரண்டாவது, திருப்பலி ஒளிபரப்பு இப்போதும் தொடர்கிறது. இயல்புநிலைக்கு திரும்பிய பின்னும் இன்னும் சிலர் YouTube ஐ விட்டு கோவிலுக்கு வராமல் இருக்கிறார்கள். இப்போது கோவிலில் பழைய கூட்டம் இல்லை.

மூன்றாவது திருப்பலி பார்ப்பதற்கென்று YouTubeக்குள் நுழைபவர்கள் அங்கு ஒளிபரப்பாகும் வேண்டாத நிகழ்ச்சிகளிலும் மாட்டிக்கொள்கிறார்கள்.

நான்காவது, தியான நிகழ்ச்சிகளுக்கு கோவிலுக்கு மட்டுமே செல்வோம். ஆனால் இப்போது அவை YouTubeலும் ஒளிபரப்பப்படுவதால் சிலர் அதுவே போதுமென்று கோவிலுக்கு செல்வதில்லை. YouTube ல் எப்படி பாவசங்கீர்த்தனம் செய்ய முடியும்?

ஐந்தாவது, பக்தி பாடல்களை கோவிலுக்கு சென்று நாம் கேட்போம், பாடுவோம்.

ஆனால் YouTube ல் கேட்க மட்டுமே முடியும். அதுமட்டுமல்ல பக்திப் பாடல்களை நடனம் ஆடிக்கொண்டே பாடும் நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. நாம் பாட்டை கேட்போமா? நடனத்தை ரசிப்போமா?

கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதை ஒடுக்கமான வாயிலுக்கும்,

YouTube ல் இறைவழிபாட்டு  நிகழ்ச்சிகளைக் காண்பதை அகலமான பாதைக்கும் ஒப்பிட தோன்றுகிறது.

ஏன்?

கோயில் இறை வழிபாட்டுக்கு மட்டுமே உரியது.  அதைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அங்கு இடமில்லை.

ஆனால் YouTube ல் வரையறுக்க முடியாத எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அங்கே இடம் உண்டு.

ஒருவர் திருப்பலி நிகழ்ச்சியை காண YouTubeற்குள்  போகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

சாலை வழியே செல்லும்போது கண்டகண்ட நிகழ்ச்சிகளெல்லாம் கண்ணில் படுவது போல,

திருப்பலி நிகழ்ச்சிக்குள் நுழையும் முன்னாலே நான் காண தேவையற்ற அல்லது காண கூடாத நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்கள்    கண்ணில்  தோன்றும்.  

திருப்பலியை பார்த்துக் கொண்டிருக்கும் போதும் அவை தோன்றி மறையும்.

 அவற்றைத் தடுக்க முடியாது, ஏனெனில் அது பொது இடம். 

திருப்பலி காண்போர் அது முடிந்தவுடன் அல்லது முடிவதற்கு  முன்னாலேயே 

மற்ற நிகழ்ச்சிகளுக்குள்  நுழைந்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் ஆபத்து இருக்கிறது.

YouTube  என்ற அகலமான பாதைக்குள் நுழைந்தோர்  அதைவிட்டு வெளியேறுவது மிகவும் கடினம்.

திருமண விழாவிற்கு அழைப்பு பெற்றோர் நேரடியாக அங்கு சென்று, மணமக்களை வாழ்த்தி விட்டு, விருந்து உண்டுவிட்டு வரவேண்டும்.

விழாவின் ஒளிபரப்பை மட்டும் பார்ப்போர் எப்படி மணமக்களை வாழ்த்த முடியும்?

விருந்தில் அமர்ந்து, இலையில் பரிமாறப்படும் உணவை  உண்டால் வயிறு நிறையும்.

மற்றவர்கள் உண்ணும் விருந்தை படத்தில் மட்டும் பார்த்தால் நமது வயிறு எப்படி நிறையும்?

Online ல் ஒளி பரப்பாகும் திருப்பலி உடல்நிலை காரணமாக கோவிலுக்கு செல்ல முடியாதவர்களுக்கு மட்டும்தான்.

 மற்றவர்களுக்கு அல்ல.

  அகலமான பாதைக்குள் நுழையாமல்,

ஒடுக்கமான வாயில் வழியே கோவிலுக்குள்  நுழைந்து  இறை  வழிபாட்டில் பங்கெடுப்பதுதான் முறையானது.

"வேளாங்கண்ணி திருவிழா நிகழ்ச்சிகள் Super!"

"கோவிலுக்குப் போயிருந்தாயா?"

"இல்லை. TV யில் பார்த்தேன்."

'மோட்சத்தையும் TV யில்  பார்த்தால் போதுமா?"

நவீன கண்டுபிடிப்புகள் உடல் ரீதியான அநேக வசதிகளை பெற்றுத் தந்துள்ளன.

 ஆனால் ஆன்மாவை அடகு வைத்துவிட்டு உடல் வசதிகளை மட்டும் அனுபவித்தால் மீட்புப் பெற முடியாது.

 அகலமான வழி சென்று வசதிகளை அனுபவிக்க விரும்பும் உடலை ஒறுத்து, அடக்கி தவம் செய்து, 

 ஆன்மா இறைவனின் கட்டளைகளுக்கு பணிந்து, 

அவர் காட்டும்  ஒடுக்கமாக வாயில் வழியே 

விண்ணகத்திற்குள் நுழைய வேண்டும்.

இதுவே இயேசுவின் விருப்பம்.

அதன்படி நடப்போம்.

 விண்ணகம் நமக்கு உறுதி.

லூர்து செல்வம்.

Thursday, October 28, 2021

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' (லூக்.13:24)

"ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள்'' 
(லூக்.13:24)

உலக அனுபவத்தில் சாலைகள் மிக அகலமானவை.

அகலமானவை என்பதற்காக அதில் மட்டும் திரிந்து கொண்டிருப்பவன் ஒருநாளும் வீட்டுக்குப் போக முடியாது. Bus stand க்கு வேண்டுமானால் போகலாம்.

வீட்டின் நுழைவாயில் ஒடுக்கமானது.
 
ஒடுக்கமானதானாலும் அதன் வழியே நுழைபவன்தான் வீட்டிற்குள் நுழைய முடியும்.

நாம் வாழ வேண்டியது வீட்டில் தான், சாலைகளில் அல்ல.

ஒடுக்கமானது என்பதற்காக அதன் வழியே நுழைய விரும்பாதவன் வீட்டிற்குள் போக முடியாது.

விண்ணகப் பாதையில் பயணம் செய்வோர் இரண்டு வகையான வாழ்க்கை முறைகளை சந்திக்க நேரிடும்.

ஒன்று சாலைகளைப் போல அகலமானது.சுதந்திரமாக இஷ்டம் போல் வாழ அனுமதிப்பது. உலக சிற்றின்பங்கள் நிறைந்தது. 

எப்படி அகலமான சாலைகள் மட்டும் திரிபவன் வீட்டிற்குள் செல்ல முடியாதோ,

அப்படியே இஷ்டம் போல் வாழ விரும்புகிறவன் விண்ணக வீட்டிற்குள் நுழைய முடியாது.

இன்னொன்று கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட, கஷ்டங்கள் நிறைந்த, இஷ்டம் போல் வாழ முடியாத ஆன்மீக வாழ்க்கை.

இதை வாழ்பவர்கள் மட்டுமே விண்ணகம் செல்ல முடியும்.

இப்படி வாழ வேண்டும் என்று சொல்பவர் நமது விண்ணக பாதையின் ஒரே வழிகாட்டியான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

அவர் வெறுமனே வழிகாட்டி மட்டுமல்ல, நம்முடன் நடந்து வருபவர்.

நாம் எப்படி நடக்க வேண்டும் என்று நடந்து காட்டியவர்.

அவரது வார்த்தை மட்டுமல்ல, வாழ்க்கையே நமக்கு வழிகாட்டி தான்.

நித்திய காலமாக விண்ணகத்தில் வாழ்ந்துவரும் அவர்,

 துவக்கமும் முடிவும் உள்ள மண்ணக வாழ்வு வாழ உலகிற்கு வந்ததே நம்மை விண்ணகத்திற்கு வழிகாட்டி அழைத்து செல்வதற்காக தான்.

"ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றவர்கள்: ஏனெனில், கடவுளின் அரசு உங்களதே."
(லூக்.6:20)

என்று சொல்ல மட்டும் செய்யவில்லை.

அவரே ஏழையாகப் பிறந்தார், ஏழையாக வாழ்ந்தார், ஏழையாக மரித்தார்.

நம்மை மட்டும் அவர் சிலுவையை சுமக்க சொல்லவில்லை,

நமக்கு முன்மாதிரிகையாக அவரே சிலுவையைச் சுமந்தார் சிலுவையிலேயே இறந்தார்.

"நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர், ஏனெனில், விண்ணரசு அவர்களதே."
(மத். 5:10)

என்று சொல்ல மட்டும் செய்யவில்லை,

 தன் வாழ்நாள் முழுவதும் துன்பங்களையே அனுபவித்தார்.

ஆக ஆன்மீக வாழ்வு கிறிஸ்துவைப் போல்

ஒடுக்கமான வாயில்வழியே செல்வதுதான்.

அகலமான பாதையில் இஷ்டப்படி நடப்பது அல்ல.

 அகலமான பாதை உலகின் வழி வாழ்வதைக் குறிக்கிறது.

ஒடுக்கமான வாயில் விண்ணுலகின் வழி வாழ்வதைக் குறிக்கிறது.

உலகின் வழி வாழ்வது கட்டுப்பாடு இல்லாமல் இஷ்டம் போல் வாழ்வது,

விண்ணுலகின் வழி வாழ்வது இறைவனின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வது.

உலகின் வழி வாழ்பவன் மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட உலகின் வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பான்.

விண்ணுலகின் வழி வாழ்பவன் 
விண்ணுலக வாழ்வுக்கென்றே  படைக்கப்பட்ட  ஆன்மாவின் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பான்.

மீட்பின் பாதையில் ஆன்மாவும், சரீரமும் சேர்ந்தே பயணிக்கின்றன.

ஆன்மா விண்ணக வாழ்வைத் தேடுகிறது.  சரீரம் உலக வசதிகளை தேடுகிறது.

ஆன்மாவின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் தான் மீட்பு.

சரீரத்தின் தேவைகள் மட்டும் நிறைவேற்றப்பட்டால் மீட்பு இல்லை.

சரீரம் இஷ்டம்போல் வாழ உதவும் அகலமான பாதையை தேடுகிறது.

ஆன்மா மீட்பு பெற தேவையான ஒடுக்கமான வாயிலைத் தேடுகிறது.

உடலுக்கும், ஆன்மாவிற்கும் இடையில் நடைபெறும் இந்த போராட்டமே நமது வாழ்க்கை. 

ஒவ்வொரு வினாடியும் ஆன்மாவும், உடலும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன.

போராட்டத்தில் ஆன்மா வெற்றி பெற வேண்டும். ஆன்மாவின் வெற்றிதான் அதன் வளர்ச்சி.

ஆன்மா வெற்றி பெற வேண்டும் என்றால் உடலின் ஆசைகள் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட வேண்டும். இதற்கு பெயர் தான் தவம்.

ஆன்மாவின் வெற்றிக்கு செபம் உதவும்.

செபமும், தவமும் சேர்ந்துதான் நமக்கு மீட்பைப் பெற்றுத் தருகின்றன.

ஆன்மா அதிகாலையிலேயே நம்மை எழுப்பி செபம் சொல்ல தூண்டுகிறது.

உடல் இன்னும் கொஞ்சம் தூங்க ஆசைப்படுகிறது.

உடலின் ஆசையை அடக்கி,

 அதாவது ஒரு தவ முயற்சி செய்து,

எழுந்து தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே செபம் செய்து நமது நாளை ஆரம்பிக்க வேண்டும்.

நாள் முழுவதுமே ஆன்ம, சரீர போராட்டம் தொடரும்.

ஒவ்வொரு போராட்டத்திலும் ஆன்மா வெற்றி பெறவேண்டும்.

அதற்கு உதவியாக காலையிலேயே நமது அன்றைய செயல்களையெல்லாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட வேண்டும்.

இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டால் ஒவ்வொரு செயலிலும் இறைவன் ஆன்மாவிற்கு தனது அருள் வரத்தால் உதவி செய்து கொண்டிருப்பார்.

நமது ஒவ்வொரு செயலையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்க வேண்டும்.

உணவு உடல் ருசியைத் தேடும்.
தேவைக்கு அதிகமாகவே சாப்பிடத் தூண்டும்.

உடலின் இந்த ஆசைக்கு போசனப் பிரியம் என்று பெயர். ஏழு தலையான பாவங்களில் ஒன்று.

ஆனால் நாம் உடலில் அந்த ஆசையை அடக்கி, பசிக்காக, அளவோடு, உணவைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறி உண்ண வேண்டும்.

அனேகர்  ருசியாக உண்ண வேண்டும் என்ற ஆசையில் விதவிதமான, உடம்புக்கு கேடு தரக்கூடிய உணவு வகைகளை உண்கிறார்கள்.

உடல் கடவுள் நமக்கு தந்த பரிசு.
 அதற்கு கேடு எதுவும் ஏற்படாமல் பேணி காக்க வேண்டியது நமது கடமை.

மது போன்ற போதை தரும் உணவு வகைகளை உட்கொள்வதால் நாம் உடலை மட்டுமல்ல ஆன்மாவையும் கெடுத்துக் கொள்கிறோம்.

உடல் அழியக்கூடிய பொருளாக இருக்கலாம், ஆனால் அதன் அழிவுக்கு நாம் காரணமாக இருக்கக்கூடாது.

"நான் பசியாய் இருந்தேன் எனக்கு உணவு தந்தாய்"

என்ற இயேசுவின் வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இயன்ற போதெல்லாம் ஏழைகளுக்கு உணவிட வேண்டும்.

ஏழைகளுக்கு கொடுக்கும் போது இறைவனுக்கு கொடுக்கிறோம்.

இறைவன் தரும் அருள் உடை அணிந்து அவர் முன்  பரிசுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டியது ஆன்மா. 

ஆனால் சிலர் ஆன்மீக அழகைப் பற்றி கவலைப்படாமல் அழியக்கூடிய உடல் அழகைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு ஆன்மா எவ்வளவு அசுத்தமாக இருந்தாலும் சரி,

 ஆடம்பர உடை அணிந்து உடல் அழகாக காட்சியளிக்க வேண்டும்.

மானம் காக்க எளிமையான சுத்தமான உடை அணிய வேண்டும்.

ஆண்டவர் விரும்புவது நாம் பாவமாசின்றி வாழ்வதையே. 

ஆண்டவரது விருப்பத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் நமது வாழ்வின் குறிக்கோள், ஆடம்பர உடை அணிந்து உலகை கவர்வது அல்ல.

கிறிஸ்மஸ் விழாவின்போது லட்சக்கணக்கில் செலவழித்து வாங்கிய உடையணிந்து கோவிலுக்கு வருகின்றவர்கள்

 மாட்டுத் தொழுவில் ஏழ்மையில் பிறந்திருக்கும் இயேசு பாலனை தங்கள் உடையால் மகிழ்விக்க இயலாது.

 அந்த பணத்தை ஏழைகளுக்கு இலவசமாக உடை வாங்க கொடுத்திருந்தால் இயேசு பாலன் மகிழ்ச்சி அடைவார்.

கோவிலுக்கு வரும் போது ஒழுக்கமான (decent ) உடை அணிந்து வரவேண்டும்.

Fashion என்ற பெயரில் ஒழுக்கமில்லாத (Indecent)உடை அணிந்து வருவோர் மற்றவர்களது பார்வையைக் கெடுத்த குற்றத்திற்கும் . கடவுளிடம் கணக்கு கொடுக்க வேண்டும்.


ஊண், உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகள்.

அப்படியிருக்க, உண்பதும், உடுப்பதும் குற்றமா?

உண்பதும், உடுப்பதும் குற்றமல்ல, ஆனால் ஆன்மாவின் மீட்பை பற்றி கவலைப் படாமல், உடலின் ஆசைகளை மட்டுக்கு மீறி திருப்திப் படுத்த முயல்வதுதான் குற்றம்.

மீட்புப் பெற செபமும், தவமும் அவசியம். 

ஆன்மா இறைவனோடு இணைந்து இருக்கும் நிலையே செபம்.

ஆன்மா இறைவனோடு இணைந்திருக்க வேண்டுமானால், உடல் தவ நிலையில் இருக்கவேண்டும்.

அதற்கு உடல் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Tuesday, October 26, 2021

" கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்"(லூக்.13: 19)

" கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்"
(லூக்.13: 19)

இயேசு கடவுளின் அரசை ஒரு கடுகு மணிக்கு ஒப்பிடுகிறார்.

விதைகளிலே மிகச் சிறியது கடுகு மணிதான். ஆனால் அதற்குள் 20 அடி வளரக்கூடிய மரம் ஒன்று இருக்கிறது.

 கடுகு மணியை தோட்டத்தில் ஊன்றி வைத்தால், அது முளைத்து

வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குமளவிற்கு பெரிய மரமாக வளரும்.

ஒரு வார்த்தையை சொன்ன உடனே அது குறிக்கும் பொருளோ, செயலோ தமது மனக் கண் முன் வரவேண்டும்.

யானை என்று சொன்னவுடனே துதிக்கை உள்ள பெரிய விலங்கு நினைவுக்கு வருகிறது.

மரம் என்று சொன்னவுடனே கிளைகளும், இலைகளும், பூக்களும், காய்களும், கனிகளும் உள்ள தாவரம் நினைவுக்கு வருகிறது.

அதேபோல் கடவுளின் அரசு என்று சொன்ன உடனே நமது நினைவுக்கு வருவது எது?

அன்பு மயமானவர் கடவுள்.

தனது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் அன்பை வெளியிட்டுக் கொண்டிருப்பவர் கடவுள்.

அவரது அன்பு செயலில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அரசுதான் கடவுளின் அரசு.

நமது ஆண்டவராகிய இயேசு எப்படி தனது வாழ்வாலும், பாடுகளாலும், சிலுவை மரணத்தினாலும் மனுக்குலம் மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் என்று நமக்குத் தெரியும்.

அவருடைய அரசில் வாழும் நாமும் நமது சிந்தனையிலும், சொல்லிலும் செயலிலும் இறை அரசை வாழ வேண்டும்.

நமக்குள்  இருக்கும் இறை அன்பையும், பிறரன்பையும்  நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் வாழும்போது நாம் இறையரசைச் சேர்ந்தவர்கள். 

கடவுளின் அரசு என்று சொன்ன உடனேயே நமக்கு நினைவுக்கு வர வேண்டியது அன்பு மயமான வாழ்க்கை.

கடவுள் தன்னுடைய அன்பினால் உலகை படைத்து பராமரித்து வருகிறார்.

அவரது உலகில் வாழும் நாம் அவரது அன்பை வாழ வேண்டும்.

நமது புனிதர்களின் வாழ்வு நமக்கு முன்மாதிரிகை.

அனேக புனிதர்கள் இயேசுவுக்காக தங்களது உயிரை தியாகம் செய்யும் அளவிற்கு செயலில் இறங்கினார்கள்.

அனேகர் இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதற்காகவே  தங்கள் வாழ்நாள் முழுவதையும்  செலவழித்தார்கள்.

அனேகர் தங்களது செபத்தினாலும், தவத்தினாலும்  உலகம் மனம் திரும்ப உழைத்தார்கள்.

நமது பாப்பரசரசரும், ஆயர்களும், குருக்களும் இரவு பகலாய் நற்செய்தி பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாம் என்ன செய்கிறோம்?

புனிதர்களின் ஒவ்வொரு செயலிலும் கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

புனிதர்கள் செய்த அளவிற்கு பெரிய பெரிய செயல்களையெல்லாம் சாதாரணமான நம்மால் செய்ய முடியுமா என்று கேட்கிறீர்களா?

புனித சவேரியாரைப் போலவும்,  புனித அருளானந்தரைப் போலவும் நம்மால் நாடுகள் கடந்து உழைக்க முடியுமா என்று கேட்கிறீர்களா?

கவலையே வேண்டாம்.

நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்காகத்தான் இயேசு கடவுளின் அரசை கடுகு மணிக்கு ஒப்பிட்டார்.

பெரிய பெரிய செயல்களில் மட்டுமல்ல, கடுகு மணிக்கு சமமான சிறிய சிறிய செயல்களிலும் கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.


நமது ஒவ்வொரு சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் 

அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும்,

அதில் கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

நமது அயலானைச் சந்திக்கும்போது நாம் மனம் நிறைந்து சொல்லும்

"உங்களுக்கு சமாதானம்.''

"Praised be Our Lord."

போன்ற மிகச் சிறிய வாழ்த்துக்களில்  கூட கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

இயேசு சமாதானத்தின் தேவன்.

சமாதானத்தை நமக்கு அளிக்கவே அவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார்.

"உங்களுக்கு சமாதானம்.'' என்று நாம் கூறும் ஒவ்வொரு நேரமும் கிறிஸ்துவின் முழுமையான சமாதானத்தை நமது அயலானுக்கு  அளிக்கிறோம்.

அதாவது கிறிஸ்துவின் அரசை முழுமையாக அளிக்கிறோம்.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு அயலானிடமும் கிறிஸ்துவின் சமாதானத்தை அளித்துக்கொண்டிருந்தால்,

அதாவது கடவுளின் அரசை  அளித்துக்கொண்டிருந்தால்,

நாம் செய்வதும் புனித சவேரியார் செய்த அளவிற்கு சமமான நற்செய்திப் பணி தான்!

யார் யாருக்கெல்லாம் கிறிஸ்துவின் சமாதானத்தை அளிக்கின்றோமோ,

அவர்களுக்கெல்லாம் கிறிஸ்துவின் அரசைத்தான் அளிக்கின்றோம்.

அதுமட்டுமல்ல அவர்களோடு இறை அன்பிலும், பிறரன்பிலும் 
 நிலைத்திருப்போம்.


 "என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.10:42)

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவற்றை இயேசுவின்  புகழுக்காக நடத்திக் கொண்டிருக்கும் நமது துறவிகளுக்கு மட்டுமல்ல, 

இயேசுவின் சீடன் என்பதற்காக ஒரு சிறுவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனுக்கும் நித்திய கைம்மாறு கிடைக்கும்.

நமது கன்னியர் உடல் பொருள் ஆவி அத்தனையும் அர்ப்பணித்து நடத்திவரும் மருத்துவமனையில் மட்டுமல்ல,

இயேசுவின் மகிமைக்காக கொடுக்கப்படும் ஒரு கிண்ணம் தண்ணீரிலும்  கடவுளின் அரசு முழுமையாக இருக்கிறது.

ஒரு கடுகுமணிக்குள் ஒரு பெரிய மரமே இருப்பதுபோல்,

ஒவ்வொரு சிறிய நற்செயலிலும் இறையரசு முழுமையாக இருக்கிறது.

சிறுசிறு துளிகள் ஒன்று சேர்ந்தது தான் மிகப்பெரிய கடல்.

Little drops of of water make a mighty ocean.

சிறுசிறு நற்செயல்கள் சேர்ந்ததுதான் ஒரு பெரிய வாழ்க்கை.

10,000 ரூபாய் காணிக்கை போடும் ஒரு பெரிய பணக்காரனுக்கு கிடைக்கும் அதே கைம்மாறு 

பத்து பைசா தர்மம்  செய்யும் ஏழைக்கும் கிடைக்கும்.

பத்து ஆண்டுகள் தேவ சாஸ்திரம் படித்துவிட்டு வந்து ஒரு குருவானவர் கொடுக்கும் அதே கடவுளின் அரசை,

எழுதப் படிக்கவே தெரியாத ஒரு சாதாரண கிறிஸ்தவனும் தன்னுடைய  சிறுசிறு நற்செயல்களால் கொடுக்கிறான்.

கடுகு மணி அளவிலான சிறிய சிறிய நற்செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டேயிருப்போம்.

இறையரசை எல்லோருக்கும் கொடுத்துக் 
கொண்டேயிருப்போம்.

லூர்து செல்வம்.

Sunday, October 24, 2021

"வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.( லூக்.13:14)

"வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
( லூக்.13:14)

ஒரு ஓய்வுநாளில் இயேசு செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்

பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த ஒரு பெண்ணை அவர் ஓய்வு நாளில் குணமாக்கினார்.

இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி,

 "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.

சட்டத்தின் நோக்கத்தை விட, எழுத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ஆசாமிகளில் ஒருவன் அந்த செபக் கூடத் தலைவன்.

ஓய்வுநாளில் வேலை செய்ய கூடாது என்பது சட்டம்.

அதை இறை பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது சட்டத்தின் நோக்கம்.

அன்று என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு யூத குருக்கள் ஒரு பட்டியல் வைத்திருந்தார்கள்.

அவர்களுடைய பட்டியலின்படி ஓய்வுநாளில் குணப்படுத்துவது சட்டப்படி குற்றம்.

ஆனால் இயேசு ஓய்வு நாளிலும் நோயாளிகளை குணமாக்கினார்.

எழுத்துப்படி பார்த்தால் அவர்கள் வைத்திருந்த பட்டியலின் அடிப்படையில் அவர்களுக்கு அது ஒரு குற்றம்.

ஆனால் நோயாளியை குணமாக்குவது நாம் இறைவனுக்கு செய்யும் சேவை. ஏனெனில் அவன் இறைவனின் பிள்ளை.

சட்டத்தின் நோக்கப்படி பார்த்தால் இறைவனுக்கு செய்யப்படும் சேவை குற்றமற்றது.

இயேசு இறைமகன் என்ற விசுவாசம் நமக்கு இருக்கிறது. ஆனால் யூத மத குருக்களிடம்  இல்லை.

ஆகவே அவர்கள் அவரை சாதாரண மனிதன் போலவே மதிப்பீடு  செய்தார்கள்.

இயேசு ஓய்வு நாள்களில் அயலானுக்கு உதவி செய்வதில் தவறு இல்லை என்பதை சுட்டிக் காண்பித்தார்.

 சட்டத்தின் நோக்கத்தைவிட  எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவன் இறைவனை விட சட்டத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறான்.

நம்மை விக்கிரக ஆராதனைக்காரர்கள் என்று குற்றம் சாட்டி விட்டு நம்மை விட்டு   பிரிந்து சென்ற பிரிவினை சகோதரர்கள்

தங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டும் பைபிள் வசனம்: 


''நாமே உன் கடவுள்.

நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.


4 மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான

 ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

5 அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."
(யாத்.20:2-4)

அவர்கள் பிடித்துக் கொண்டிருக்கும் எழுத்துக்கள்:

" உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்."


நோக்கத்தை குறிக்கும் வசன வார்த்தைகள்:

''நாமே உன் கடவுள்.

நமக்கு முன்பாக வேறே தேவர்களை நீ கொண்டிராதிருப்பாயாக.

ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்.

அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்."

அதாவது :

"நான் மட்டுமே நீ வணங்கி தொழவேண்டிய கடவுள்.

வணங்கி தொழுவதற்காக
உருவத்தையேனும், விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம்."

அதாவது,

"என்னை வணங்கி தொழுவதற்கு பதிலாக, வணங்கவோ,  தொழவோ உருவத்தையோ விக்கிரகத்தையோ உண்டாக்க வேண்டாம்."

அதாவது,

எனக்கு பதிலாக விக்கிரகத்தை வணங்க வேண்டாம்.

அதாவது,

என்னை உனது கடவுளாக ஏற்றுக் கொள்வதற்குப் பதில் விக்கிரகத்தை கடவுளாக ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

"உண்மையான கடவுளை தொழுவதற்குப் பதில்,
தொழுவதற்குக்கென்று விக்கிரகத்தை உண்டாக்க வேண்டாம்." என்பதுதான் வசனங்களின் உண்மையான பொருள்.

"(எந்த நோக்கத்திற்காகவும்)  சுரு சுரூபத்தை உண்டாக்கக் கூடாது."
என்பது பொருளல்ல.

உண்மையான கடவுளை விட்டுவிட்டு ஒரு சிலையை கடவுள் என்று நினைத்து தொழுவதுதான் விக்கிரக ஆராதனை.

நாம் வைத்திருப்பது சுரூபங்கள், சிலைகள் அல்ல.

நாம் இயேசுவை கடவுளாக ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவரது சுருபத்தைக் கடவுளாக ஏற்றுக்கொள்ளவில்லை.

நமது பிள்ளையின் புகைப்படத்தை நமது பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறோமா?

புகைப்படம் புகைப்படம் தான்.

 பிள்ளை ஆகாது.

 அதுபோலவே சுரூபம் சுரூபம்தான், இயேசு ஆகாது.

நாம் புனிதர்களை வணங்குகிறோம், அவர்களுடைய சுருபங்களை அல்ல.

 இது நமக்கு தெரியும்.

நாம் சு௹பத்தை  இயேசுவாகவோ, புனிதராகவோ ஏற்றுக்கொள்வது போல் பேசுகின்றார்கள்.

சுரூபங்கள்  அடையாளங்கள் மட்டுமே.

உண்மை தெரியாமலா பேசுகிறார்கள்?

உண்மை தெரிந்தும் நம் மேல் குற்றம் சாட்டுவதற்காகவே அவ்வாறு பேசுகிறார்கள்.

தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பது தான் உலக மகா நடிப்பு!

ஒவ்வொரு பைபிள் வசனமும் எழுத்துக்களால் ஆனது, பொருளுடையது.

வசனத்தை வாசிக்கும் போது நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது பொருளையே, எழுத்துக்களை அல்ல.

எழுத்துக்கள் பொருள் ஏறிவந்த வாகனமே.

நமது நண்பர் காரில் ஏறி வந்தால் நாம் உபசரிக்க வேண்டியது நண்பரையே,  காரை அல்ல.


" கடவுள் தாம் ஏழாம் நாளிற்கு முன் செய்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு ஏழாம் நாள் ஓய்வு எடுத்தார்."

"வாரத்தின் ஏழாம் நாள் இறைவனுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட நாள். ஓய்வுநாளை இறைவனுக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும்." என்பது மட்டுமே இந்த வசனத்தின் பொருள்.

கடவுள் ஓய்வு எடுத்தார் என்பது பொருளல்ல. ஏனெனில் கடவுளால் ஓய்வு எடுக்க முடியாது.

இறைவனுடைய சட்டங்களையோ, 
இறை வாக்கையோ இறைவனுடைய கண் நோக்கிலிருந்து  பார்க்க வேண்டுமே தவிர,

 நமது மொழி அகராதியின் கண் 
நோக்கிலிருந்து அல்ல..

இறைவனுடைய பண்புகளுக்கு எதிராக அவரது சட்டங்களுக்கு பொருள் கொள்ளக்கூடாது.

இறைவனும் தன்னுடைய அன்பு கண்ணால்தான் எல்லாவற்றையும் நோக்குகிறார்.

நாமும் அப்படியே செய்வோம்.

லூர்து செல்வம்.

" அவன், "ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்."(லூக். 13:8)

" அவன், "ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்."
(லூக். 13:8)

இயேசு,

"மனந்திரும்பாவிடில், நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்"
என்ற வாக்கியத்தோடு  ஒரு உவமையை ஆரம்பித்துச் சொன்னார்:

ஒரு தோட்ட உரிமையாளர் தன்னுடைய அத்திமரம் வெகு வெகு நாட்களாக பழங்கள் தராததால் அதை வெட்டி விடும்படி தன்னுடைய பணியாளுக்குச் சொல்லுகிறார்.

பணியாளோ,

"ஐயா, இந்த ஆண்டும் இருக்கட்டும். சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

காய்த்தால் சரி, இல்லாவிட்டால் வெட்டிவிடலாம்" என்றார்."

இந்த உவமை மூலம் இயேசு நமக்கு என்ன பாடம் கற்பிக்க விரும்புகிறார் என்பதைப் பற்றி தியானிப்போம்.

வெகுநாட்களாக காய்க்காதிருக்கும் அத்தி மரத்தால் எந்த பயனும் இல்லை என்று அதை வெட்டி விட சொல்கிறார் தோட்டத்தின் உரிமையாளர்.

ஆனால் தோட்டத்தில் வேலை செய்பவர்,

" மரத்திற்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் கொடுப்போம்.

அக்காலத்தில் மரத்தைக் சுற்றிலும் கொத்தி எருப்போடுவேன்.

அதன் பின்னும் அது காய்க்காவிட்டால் வெட்டி விடலாம்." என்கிறார்.

மனிதன் தன்னுடைய கட்டளைகளுக்கு கீழ்படிந்து தனக்கு ஏற்றவனாக நடப்பான் என்ற 

எதிர்பார்ப்புடன்தான் இறைவன் மனிதனைப் படைத்தார்.

 ஆனால் முதல் மனிதனே அவருடைய எதிர்பார்ப்புக்கு எதிராக நடந்து கொண்டான்.

கடவுள் நினைத்திருந்தால் அவனோடு மனிதகுலத்திற்கு அன்றே முடிவு கட்டியிருக்கலாம்.

ஆனால் அவர் மனிதன் திருந்தி வாழ காலம் கொடுத்தார்.

அந்த காலகட்டத்தில் தனது ஒரே மகனை மனிதனாக பிறக்கச் செய்து மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து

அவனை நல்வழிப் படுத்த ஏற்பாடு செய்தார்.

அதனால் மனித குலத்தின் ஒருசாரார் திருந்தி வாழ்ந்தாலும்

 மற்றொரு சாரார் இன்னும் பாவ நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் கடவுள் இன்னும் மனித குலத்தை அழிக்கவில்லை.

தொடர்ந்து காலம் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

இக்கால முடிவுக்குள் மனிதகுலம் திருந்த வேண்டும்.

திருந்தா விட்டால் அது அதற்கு உரிய  பயனை அனுபவிக்கும்.

 மனுக்குலம் முழுவதும் நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.

 ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமது கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறோம்.


ஆகவே மொத்த மனுக்குலத்தையும்  ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி செய்வோம்.

நாம் முதல் பாவம் செய்த நாளை நினைத்துப் பார்ப்போம்.

நமது வாழ்வின் முடிவு நம்முடைய கையில் இல்லை, இறைவனது கையில்தான் இருக்கிறது, அவர் நினைத்த அன்று பிறந்தோம், அவர் நினைக்கிற அன்று இறப்போம்.

Suppose நாம் முதல் பாவம் செய்த அன்றே இறந்திருந்தால், நாம் நித்தியத்துக்கும் விண்ணகத்தை இழந்திருப்போம்.

அன்று இறக்காமல் நாம் தொடர்ந்து உயிர் வாழக் காரணம் நாம் அல்ல,

 கடவுள் நாம் பாவத்திற்கு மனம் வருந்தி திருந்தி வாழ காலம் தந்து நம்மை வாழ வைத்தார்.

அன்று நாம் பாவ சங்கீர்த்தனம் செய்து நாம் செய்த பாவத்திற்கு மன்னிப்பு பெற்று விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம்.

தொடர்ந்து  கிடைத்த காலத்தை பரிசுத்தமாய் வாழ பயன்படுத்திக் கொண்டோமா? 

பாவம் செய்ய பயன்படுத்துகிறோமா? நினைத்துப் பார்ப்போம். 

பரிசுத்தமாய் வாழ பயன்படுத்திக் 
கொண்டால், மிகவும் சந்தோஷம்.

பாவம் செய்ய பயன்படுத்தி கொண்டிருந்தால், உவமையில் வருகின்ற அத்திமரத்தின் கதைதான் நமக்கும்.


 அதைச் சுற்றி கொத்திக் கொடுத்து உரம் போட்டு வருவதுபோல ஆன்மிக விசயத்திலும் நம்மை கவனித்துக்கொண்டு வருகிறார் இயேசு.

செபம், தவம், தர்மம் போன்ற பக்தி முயற்சிகளால் நம்மைச் சுற்றி கொத்தி, அவருடைய அருள் வரங்கள், திவ்ய நற்கருணை  ஆகிய உரம் இட்டு  நம்மை கவனித்துக் கொண்டு வருகிறார்.

ஒவ்வொரு நாளும் பலமுறை தந்தையை நோக்கி,

" எங்களுக்கு அன்றன்றுள்ள உணவை இன்று தாரும்"

 என்று இயேசு கேட்கச் சொல்லியிருக்கிறார்.

நாம் உணவு என்றால் நமது உடம்புக்கு தேவையான உணவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நாம் உணவு என்று சொல்லும்போது நமது ஆன்மீக வளர்ச்சிக்கு தேவையான எல்லா தேவைகளையும் குறிக்கும்.

இறைவனை  நோக்கி நாம் செய்கின்ற செபம்,
செபம் சொல்ல ஆர்வம், நேரம்,
 நற்செயல்கள் செய்வதற்காக ஆர்வம், அருள்,
ஆன்மீக உணவாகிய திவ்ய நற்கருணை

இன்னும் ஆன்மிக வளர்ச்சிக்கு தேவையான அத்தனையும் 
அன்றாட உணவில் அடங்கும்.

உதாரணத்திற்கு,

"எங்களுக்கு அன்றன்றுள்ள உணவை இன்று தாரும்."

என்பதில்,

"எங்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான செப ஆர்வத்தைத்
தாரும்."

"நாங்கள் தினமும் உம்மை திவ்ய நற்கருணையில்  உணவாக உண்ணும் வரத்தைத் தாரும்." 


''எங்களது தினசரி ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான அருள் வரங்களை நிறையத் தாரும்." 

போன்ற செபங்களும் அடங்கும்.

காய்க்காத அத்தி மரமாக இருந்த நமக்கு இவ்வளவு உணவை ஆண்டவர் தரும்போது தொடர்ந்து காய்க்காமல் இருக்க முடியுமா?

ஆனால் ஆண்டவர் தரும் இந்த உணவை தகுதியான முறையில் நாம் உண்ண வேண்டும். 

அப்போதுதான் பலன் கிடைக்கும்'

ஏனோ தானோ என்று செபித்துவிட்டு,

தகுந்த தயாரிப்பு இன்றி நற்கருணையை உண்டுவிட்டு,

நல்ல செயல்களை ஆண்டவரது மகிமைக்காக செய்யாமல் நமது பெருமைக்காக செய்துவிட்டு 

ஆன்மீகத்தில் வளர்ச்சியை காணோமே என்று சொல்லக்கூடாது.

ஆண்டவர் ஏற்படுத்திய திரு அருள் சாதனங்களை தகுந்த வகையில் பெற்றுக் கொண்டே வந்தாலே ஆன்மீகத்தில் வேகமாக வளர்வோம்.

நமது ஆன்மீகமாகிய அத்திமரம் பூத்து, காய்த்து, பழுத்து குலுங்கும்.

நம் ஆண்டவர் பழங்களை உண்டு மகிழ்வார்.

லூர்து செல்வம்.

Friday, October 22, 2021

" உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்."(லூக்.12:58)

" உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்."
(லூக்.12:58)

உலக வழக்கில் நமது எதிரி  அவனுக்கு எதிராக நாம் செய்த குற்றத்திற்காக நம்மை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றால்,

நீதிமன்றத்திற்கு போகும் முன்னாலேயே அவனோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

சமாதானம் செய்து கொண்டால் நீதிபதியின் விசாரணையின்போ து நமக்கு கிடைக்கக்கூடிய தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இல்லாவிட்டால் விசாரணையின்போது கிடைக்கும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்.

இந்த ஒப்புமையிலிருந்து ஒரு ஆன்மீக பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

பின்வரும் இறைவசனம் அதையே கூறுகிறது:

"நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். 

இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும்.

 சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்."

இந்த இறை வாக்கில் "நீ" பாவத்தால் நிறைந்த நம்மை குறிக்கிறது.

"'எதிரி" பாவத்தின் எதிரியாகிய இறைவாக்கை குறிக்கிறது.

நாம் பாவிகள்.

நமது பாவங்களோடு நமது வாழ்வில் இறைவனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஒவ்வொரு நாளும் வாசிக்கும் இறை வசனமும் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இறை வசனம் நமது பாவங்களுக்கு எதிரானது.

அது நமது பாவங்களை சுட்டிக் காண்பித்து

 நாம் திருந்தும்படி நமக்கு அறிவுரை கூறிக் கொண்டே நம்மோடு பயணிக்கிறது.

அதன் அறிவுரையை கேட்டு நாம் பாவத்திற்காக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கேட்டு நம்மை நாமே திருத்திக் கொள்ள வேண்டும்

 திருத்திக் கொள்ளத் தவறினால் 
வாழ்வின் இறுதியில் இறைவனின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்.

பாவத்திற்குரிய பலனை அனுபவிக்க நேரிடும்.

இதைத்தான் இந்த வசனம் நமக்கு கூறுகிறது.

பைபிள் வசனம் நமக்கு எதிரி அல்ல,

 நமது பாவத்துக்கு எதிரி, 

பாவம் நமக்கு எதிரி,

 எதிரிக்கு எதிரி நண்பன்"


ஆகவே பைபிள் வசனம்   நமக்கு நண்பன்.

நமது உலக வாழ்க்கையின் போது பைபிள் வசனங்களோடு சமாதானமாக வாழ வேண்டும். 

அதாவது பைபிள் வசனங்களை தந்த இறைவனோடு சமாதானமாக வாழ வேண்டும்.

தட்டில் உணவு இருந்தால் மட்டும் வயிறு நிறையாது,

 உணவை நாம் உண்டால் மட்டுமே வயிறு நிறையும்,

அதேபோல்தான் வீட்டில் பைபிள் இருந்தால் மட்டும் போதாது,

 அதை தினமும் வாசிக்க வேண்டும்,

 வாசித்தால் மட்டும் போதாது,

 அதன்படி வாழ வேண்டும்.

சிலர் நண்பர்கள் சொற் கேட்டு அதன்படி நடந்து பயன் அடைவார்கள்.

சிதர் நண்பர்களை தாங்கள் சொன்னபடி நடக்க வைப்பார்கள்.

அதேபோல் சிலர் பைபிள் வசனங்கள் காட்டுகிற வழி நடந்து பயன அடைவார்கள்.

சிலர் பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பப்படி பொருள் கொடுத்து

 அவற்றின்படி நடப்பதாக கூறிக்கொண்டு தங்கள் விருப்பம் போல் நடப்பார்கள்.

பைபிள் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு, அதை கையில் வைத்துக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள். 

நாம் தாய்த் திருச்சபையின் வழி நடத்துதலின் படி பைபிள் வசனங்களுக்குப் பணிந்து நடப்போம்.

லூர்து செல்வம்.

Thursday, October 21, 2021

"எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்."(லூக்.12:48)

"எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்."
(லூக்.12:48)

உலக அனுபவத்தில் 

அதிகம், குறைவு, 
பெரிய, சிறிய,

போன்ற அளவுகளின் அடிப்படையில் மனிதர்களையும் பொருட்களையும் மதிப்பீடு செய்கின்றோம்.

இறைவன் அளவு இல்லாதவர்.

நமது அனுபவத்தில் அளவில்லாமை கிடையாது.
ஏனெனில் நாம் அளவுள்ளவர்கள்.

இயேசு அளவில்லாத கடவுள்.

 ஆனாலும் அளவுள்ள மனிதனாகப் பிறந்திருப்பதால் 

நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் பயன்படுத்தும் வார்த்தைகளையே அவரும் பயன்படுத்துகிறார்.

நாம் எங்கு பிறக்க வேண்டும், யாருக்கு பிறக்க வேண்டும், எப்போது பிறக்க வேண்டும், என்பதையெல்லாம் நாம் தீர்மானிப்பதில்லை.

 இறைவன் மட்டுமே தீர்மானிக்கிறார்.

ஜனநாயக நாட்டில் பிறக்க வேண்டுமா, சர்வாதிகார நாட்டில் பிறக்க வேண்டுமா,

 ஏழைப் பெற்றோருக்கு பிறக்க வேண்டுமா, பணக்கார பெற்றோருக்கு பிறக்க வேண்டுமா என்பதையும்,

எந்த நூற்றாண்டில், எந்த ஆண்டில், எந்த நாளில், எந்த நேரம் பிறக்க வேண்டும்  என்பதையும்
தீர்மானிக்கிறவர் அவரே.

ஒருவன் பிறக்கும்போதே ஏழையாக பிறக்கிறான்,

இன்னொருவன் பணக்காரராகப் பிறக்கிறான்.

ஏழையாகப் பிறந்தாலும், பணக்காரனாக பிறந்தாலும் இறைவனுக்கு கணக்கு கொடுக்கவேண்டிய விஷயத்தில் இருவரும் ஒன்றுதான்.

அதாவது அவனுக்கு கொடுக்கப்பட்டதின் அடிப்படையில் கணக்கு கொடுக்க வேண்டும்,

பள்ளிக்கூடத்தில் வகுப்புகளில் மாணவர்களை நான்கு தரங்களாக பிரித்து வைத்திருப்பார்கள்.

மிக நன்றாகப் படிப்பவர்கள்,
 நன்றாகப் படிப்பவர்கள்,
 சுமாராக படித்தவர்கள்,
படிப்பே வராதவர்கள்.

ஆசிரியர் ஒருவர் தான்.

தனிக்கவனம் (Individual attention) செலுத்துவதற்காக இந்தப் பிரிவு.

ஆனால் தேர்வுத் தாள்களை மதிப்பீடு செய்வது ஒரே மாதிரி தான்.

ஆனால் இறைவன் அப்படி அல்ல.

ஒவ்வொருவருக்கும் திறமைகளை கொடுப்பவர் அவர்தான்.

 ஆகவே அவரவருக்கு கொடுக்கப்பட்ட திறமைகளின் அடிப்படையில் அவருடைய எதிர்பார்ப்பு இருக்கும்.

படிப்பே வராதவர்கள் என்று நாம் கருதுபவர்கள் கூட இறைவன் முன்னால் அவர்களால் இயன்ற அளவு உழைத்தால்

 அவர்களுடைய உழைப்புக்கு ஏற்ற படி வெற்றியும் இருக்கும்.


 உதாரணத்திற்கு அவர்கள் 34 மதிப்பெண்கள் எடுத்தாலும் வெற்றிதான்.

இறைவன் கணக்கில் எடுத்துக் கொள்வது தான் கொடுத்த திறமையையும் மாணவர்களுடைய உழைப்பையும்தான்.

ஆன்மீகத்தில் நம்மால் இயன்ற அளவு பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

ஏழையாக பிறந்தவன் அவனால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.

செல்வந்தனாக பிறந்தவன் அவனால் இயன்ற உதவி செய்ய வேண்டும்.

வசதி உள்ளவன் வசதி இல்லாதவன் அளவிற்கு உதவிகள் செய்துவிட்டு

 மீதியை எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைத்தால் அவன் கடவுள் முன் கணக்குக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில்  அன்றன்று பிறப்பவர்களுக்கு அன்றன்றைய தேவைகளை பூர்த்தி செய்பவர் இறைவனே.


''அன்றன்று உணவு எங்களுக்கு இன்று தாரும்" என்றுதான் கர்த்தர் ஜெபிக்கச் சொன்னார். 

"எங்கள் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்துத் தாரும் " என்று ஜெபிக்க சொல்லவில்லை.

உலக நோக்கில் எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது சரியாக இருக்கலாம்.

ஆனால் தன்னுடைய பிறனுக்கு உதவ வேண்டியதை கொடுத்து உதவாமல் 

அதை தன்னுடைய எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது இறைவன் முன் சரி அல்ல.

 ஏழைகள் அவர்களால்  இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

 வசதியுள்ளவர்கள் அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்


"எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்
எவனிடம் அதிகம் ஒப்படைத்தார்களோ அவனிடம் இன்னும் அதிகமாய்க் கேட்பார்கள்."

ஆகவே ஏழைகள் வசதி உள்ளவர்களின் அளவிற்கு உதவி செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம்,

 தங்களால் இயன்ற அளவு உதவி செய்வதே போதுமானது.

நம்மிடமிருந்து சிலரை ஆண்டவர் தன்னுடைய விசேஷமாக ஊழியத்திற்காக அழைக்கிறார்.

அதற்கு ஏற்றபடி அவர்களை தயார் செய்கிறார்.

சாதாரண, படிப்பறிவில்லாத மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதைவிட அவர்களிடமிருந்துதான் அதிகமாக இறைவன் எதிர்பார்ப்பார். 

பைபிளை வாசிக்கவே தெரியாதவர்கள் அவர்களுடைய பங்கு குருவானவர் காட்டுகின்ற வழியில் முழுமையாக நடந்தாலே போதுமானது.


"முழுமையாக" முக்கியம். அதாவது அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு.

அழைக்கப்பட்டவர்கள் அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்க வேண்டும்.

உலக நோக்கில் இருவருடைய உழைப்பிலும் வித்தியாசம் இருப்பதுபோல் தோன்றும்,

ஆனால் அவரவர்கள்  அவரவர்களால் இயன்ற அளவு உழைக்க வேண்டும் என்று தான் இறைவன் எதிர்பார்க்கிறார்.

விண்ணகத்தில் அவரவர் அளவிற்கு ஏற்றபடி பேரின்பம் பரிபூரணமாக இருக்கும்.

அழைக்கப்பட்டவர்கள் தங்களுடைய உழைப்பினால் பெரிய பாத்திரங்களாக மாறி விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

சாதாரண மக்கள் தங்களுடைய உழைப்பிற்கு ஏற்றபடி சிறிய பாத்திரங்களாக மாறிவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.


மோட்சத்தில் இரண்டு வகைப் பாத்திரங்களும் பேரின்பத்தால் நிறைந்திருக்கும்.

நிறைவில் குறைவு இருக்காது.

 அவரவர்களுக்கு  இறைவன்  கொடுத்திருக்கும் வரங்களை முழுமையாகப்  பயன்படுத்துவோம்.

அதுவே இறைவனை முழுமையாக திருப்திப்படுத்தும்.

லூர்து செல்வம்.

Tuesday, October 19, 2021

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."(லூக்.12:51)

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(லூக்.12:51)

நாம் செய்த பாவத்தினால் இறைவனுக்கும் நமக்கும் இடையே இருந்த சமாதான உறவு கெட்டுப் போய்விட்டது என்றும்,

அதை மீட்டுத் தரவே இறைமகன் மனித உரு எடுத்து நம்மிடையே வந்தார் என்றும் நமக்குத் தெரியும். 

இயேசு மனிதனாய் பிறந்த அன்று வானவர்கள், 

"மண்ணுலகில் நல்மனதோருக்கு சமாதானம் உண்டாவதாக" என்று பாடினார்களே!

இயேசு தனது சீடர்களை  போதிக்க அனுப்பும்போது, அவர்கள் சென்ற வீட்டினரை 

"உங்களுக்குச் சமாதானம் " என்று வாழ்த்த சொன்னாரே!  

அவர் சமாதானத்தின் தேவன் என்று நம் அனைவருக்கும் தெரியுமே!

அவர் ஏன்,

"    நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.." என்று சொல்கிறார்?

அவர் சமாதானத்தை அளிக்கவே வந்தார்.

அதற்கு மனிதர் எப்படி எதிர்வினை (React) ஆற்றுகிறார்கள் என்ற நிதர்சனமான உண்மையை சொல்கிறார்.

அவர் நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அவர் சொன்னது உண்மையாயிற்று.

நற்செய்தி அறிவிப்பதற்கு முன்னால் யூத மதத்தவர் மத அனுசாரத்தைப் பொறுத்தமட்டில் யூத மத குருக்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். 

ஆனால் அவர் நற்செய்தி அறிவித்த பின்

 அவர்களிடையே இயேசுவின் நற்செய்தியை

 ஏற்றுக்கொண்டவர்கள் ஏற்றுக்கொள்ளாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன.

சாதாரண மக்கள் அவரது நற்செய்தியை மனதார ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் அதுவரை அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், மறைநூல் அறிஞர்கள், மதகுருக்கள் ஆகியோர் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.

சாதாரண மக்கள் இயேசுவை பின்பற்றினார்கள்.

ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அதுவரை தங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தவர்கள் அனைவரும் இயேசுவின் பின்னால் போய் விடுவார்களோ என பயந்து

 இயேசுவையே சிலுவையில் 
அறைந்து கொன்று விட்டார்கள்!

ஏற்றுக்கொண்டோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டார்கள்,

 ஏற்றுக்கொள்ளாதோர் இன்றுவரை யூத மதத்தவர்களாகவே இருக்கிறார்கள்.

நற்செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள்?

அவர்கள் நற்செய்தி படி வாழ்பவர்கள், 

அதன்படி வாழாதவர்கள்  என இரண்டு 
பிரிவினராய் இருக்கிறார்கள்.

அதாவது நற்செய்தியை வாழ்க்கையாக ஏற்றுக் கொள்பவர்கள்,

 கொள்கை அளவில் மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள்.


வாழ்க்கையாக ஏற்றுக் கொள்பவர்கள் கிறிஸ்தவர்களாக வாழ்வார்கள்.

கொள்கை அளவில் மட்டும் ஏற்றுக் கொள்பவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் மட்டும் வாழ்வார்கள்.

நாம் பாவ நிலையில் இருந்தபோது இறைவனோடு சமாதானம் அற்ற நிலையில் இருந்தோம்.

ஞானஸ்நானம் பெற்றபோது பாவ நிலையிலிருந்து விடுதலை பெற்று, இறைவனோடு சமாதானம் ஆகிவிட்டோம்.

ஞானஸ்நானம் பெற்றவுடன் இறைவனோடு சமாதானம் உள்ள 
கிறிஸ்தவர்களாக மாறினோம்.

ஞானஸ்நானம் பெற்ற நிலையில் தொடர்ந்து இருக்கிறோமா?

அதாவது பாவமே செய்யாமல் இருக்கிறோமா?

அப்படியே பாவம் செய்துவிட்டாலும்  அதிலிருந்து விடுதலை பெற பாவசங்கீர்த்தனம் எனும் திரு அருள் சாதனத்தைப் பயன்படுத்துகிறோமா?

ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் நாம் எல்லோரும் ஒரே மாதிரி இருந்தோம், அதாவது, எல்லோரும் பாவ நிலையில் இருந்தோம்.


 ஞானஸ்நானம்  பெற்ற பின் 

பாவம் இல்லாதவர்கள்,

 பாவம் உள்ளவர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிந்திருக்கிறோம்.

இதைத்தான் இயேசு 

"பிரிவினை உண்டாக்கவே வந்தேன்." என்று குறிப்பிடுகிறார்.


பள்ளிக்கூடம் வருவதற்கு முன்னால் ஒரு ஊர் முழுவதும் படிக்காதவர்கள் மட்டும் இருந்தார்கள்.

பள்ளிக்கூடம் வந்தபின் படித்தோர், படியாதோர் என இரு பிரிவு மக்கள் வாழ்ந்தார்கள்.

இப்பிரிவுக்கு காரணம் பள்ளிக்கூடம் அல்ல, அதில் படிக்காதவர்கள்.

அதுபோல்தான் நம்மிடையே பாவம் உள்ளவர்களும், இல்லாதவர்களும்  இருப்பதற்கு இயேசு காரணம் அல்ல, நாம்தான் காரணம்.

ஆனாலும் இயேசு நமது பழியை தன் மேல் போட்டுக்கொள்கிறார்.

நமது பாவங்களுக்கு பரிகாரமாக நாம் நமது ரத்தத்தை சிந்த வேண்டியிருக்க,

நமது பாவங்களை எல்லாம் அவரே சுமந்து சிலுவையில் அவரது ரத்தத்தை சிந்தி பரிகாரம் செய்தாரே.

"நான் பெற வேண்டிய ஞானஸ்நானம் ஒன்று உண்டு. அது நிறைவேறுமளவும் நான் எவ்வளவோ ஏக்கமாயிருக்கிறேன்."

இங்கு இயேசு குறிப்பிட்டது நமது பாவங்களுக்கு பரிகாரமாக அவர் சிலுவையில் படவிருந்த ரத்தக் குளிப்பையே. 

நமது பாவங்களை கழுவ இயேசு தன் ரத்தத்தாலே தன்னையே கழுவிக்கொண்டார்.

தனது ரத்தத்தால் கழுவுவதற்காகத் தான் நமது பாவங்களை கல்வாரி வரை சுமந்து சென்றார்.

நமக்கும் அவருக்கும் இடையில் சமாதான உறவை ஏற்படுத்துவதற்காகவே இயேசு தன் இரத்தத்தால் குளித்தார்.

நாம் சிலுவையைச் சுமக்கவே பயப்படுகிறோம்.

சமாதானம் என்றால் சண்டை போடாமல் இருத்தல் என்று பொருள் அல்ல.

 விரோதிகள் கூட  அடுத்த சண்டைக்குப் தயாரிக்கும்போது சண்டை போடாமல் தான் இருப்பார்கள்.

சமாதானம் என்றால் ஒருவருக்கொருவர் இனிய உறவோடு இருப்பது.

திருப்பலியின்போது குருவானவர் "ஒருவருக்கொருவர் 
 சமாதானத்தை அறிவித்துக் கொள்வோம்' என்று சொல்லும் போது அருகில் இருப்பவரைப் பார்த்து தலை ஆட்டிக் கொள்கிறோம்.

நாம் யாரோடு நல்ல உறவில் இல்லாமல் இருக்கிறோமோ அவரிடம் சென்று சமாதானம் என்று சொல்ல வேண்டும்.

ஆனால் நாம் கோவிலில்கூட அவரோடு உட்காருவது இல்லை.

 சமாதானம் செய்யப்படவேண்டிய ஆளோடுதான் கோவிலில் அமர வேண்டும்.

அவரைப்பார்த்து புன்சிரிப்போடு சமாதானம் சொல்ல வேண்டும்.

''நான் பிரிவினையை ஏற்படுத்த வந்தேன்"  

என்று இயேசு சொல்வது நம்மிடையே சமாதான உணர்வை தூண்டுவதற்காகத்தான்.

எல்லோரும் இயேசுவின் சமாதானத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Monday, October 18, 2021

"அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள். " (லூக். 10:2)

"அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள். " (லூக். 10:2)

இயேசு 72 சீடர்களை நற்செய்தி அறிவிக்க அனுப்பும்போது அவர்களிடம் கூறிய வார்த்தைகள் இவை:

இவ்வார்த்தைகளை வாசிக்கும்போது நமது உள்ளத்தில் ஒரு கேள்வி எழும

அறுவடையின் ஆண்டவரே நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துதான்.

அவர்தான் 72 பேரை நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார்.

ஏன்

" வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்று சொல்கிறார்?

அதாவது 

ஏன் அறுவடைக்கு ஆட்களை அனுப்பும்படி தன்னையே மன்றாடச் சொல்லி அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்?

நற்செய்தி அறிவிப்பதற்காக அனுப்பப்படுகிறவர்கள் நற்செய்தியின் ஆண்டவரோடு எப்போதும் செபத்தொடர்பில் இருக்க வேண்டும் என்பது அவரின் ஆசை.

அவர் 72 பேரை முதலில் அனுப்பினாலும் அனுப்பப்பட்டவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் இருந்தே,

"நற்செய்தி  அறிவிக்கப்பட வேண்டிய இடங்கள் ஏராளம் உள்ளன. அனுப்பப்பட்ட 72 பேர் போதாது.
இன்னும்  ஆட்களை அனுப்பும் ஆண்டவரே."

என்று அவரோடு செபத் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆண்டவரது வார்த்தைகள் இப்போது நமக்கும் பொருந்தும்.

இயேசு ஆரம்பத்தில் 12 பேரைத்தான் ஆயர்களாக தேர்ந்தெடுத்தார்.

உலகம் முழுமையும் கணக்கு பார்க்கும்போது 12 பேர் போதாது.

ஒவ்வொருவராக உலகம் முழுவதும் பரவி நற்செய்தி அறிவித்த பன்னிருவரும் 

ஆண்டவரோடு அவர்களுக்கு இருந்த செப உதவியுடன் புதிய ஆயர்களை நியமித்துக் கொண்டார்கள்,

புதிய ஆயர்கள் நற்செய்தி அறிவிப்பதில் தங்களுக்கு உதவியாக இருக்கும்படி  குருக்களை நியமித்துக் கொண்டார்கள்,

 உலக மக்கள் தொகையை முழுவதும் கணக்கில் எடுத்துக்கொண்டால் அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்க குருக்கள் போதாது. 
 

நற்செய்திப் பணியிலேயே இரண்டு விதமான பணிகள் அடங்கியுள்ளன.

1.நற்செய்தியை அறியாதவர்களுக்கு அதை அறிவித்தல்.

2.நற்செய்தி அறிவிக்கப்பட்டவர்களின் ஆன்மீக வாழ்வின் வளர்ச்சியில் உறுதுணையாக இருத்தல். 

அவர்களுக்காக தேவ திரவிய அனுமானங்களை நிறைவேற்றவேண்டும்,

 அவர்களின் ஆன்மீக வழிகாட்டியாக செயலாற்ற வேண்டும்.

மொத்தமாக கவனிப்பதோடு ஒவ்வொரு ஆன்மாவையும் தனித்தனியே கவனிக்க வேண்டும். 

ஏனெனில் ஒவ்வொருவரின் ஆன்மீக தேவைகள் வித்தியாசமானவையாய் இருக்கும்.

இரண்டு விதமான நற்செய்திப் பணிகளையும் செவ்வனே நிறைவேற்ற குருக்களின் எண்ணிக்கை பற்றாது.

நற்செய்திப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க
வேண்டும் என்று நற்செய்தியின் ஆண்டவரை வேண்டும் கடமை ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இருக்கிறது.

அதிகமான குருக்கள் தேவை என்ற விசயம் நாம் சொல்லாமலேயே ஆண்டவருக்குத் தெரியாதா என்று கேட்கலாம்.

நிச்சயமாக தெரியும்.

ஆனாலும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னோடு செபத் தொடர்பில் இருக்க வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்.

நாம் நமது உறவினர்களோடும்,  நண்பர்களோடும் தொடர்பில் இருக்க வேண்டும் என்று விரும்புவதுபோல் ஆண்டவரும் விரும்புகிறார்.

அனேக சமயங்களில் ஆண்டவரோடு தொடர்பில் இருக்க வேண்டும்  என்பதை நாம் மறக்கும் போது 

அதை நமக்கு ஞாபகப் 
படுத்துவதற்காகவே நோய் நொடிகளை வர விடுகிறார்.

நோய் நொடிகள், கஷ்டங்கள் ஏற்படும் போது மட்டுமல்ல 

எல்லா காலங்களிலும் நாம் ஆண்டவரோடு செபத் தொடர்பில் இருக்க வேண்டும்.

குருக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டுவதில் சுயநலம் கூட இருக்கிறது.

நமது ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது குருக்களே.

போதுமான குருக்கள் இருந்தால்தான் நமது ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய தேவைப்படும் போதெல்லாம்  அவர்களை அணுகமுடியும்.

நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் தான்,

 சுகம் இல்லாதவர்கள் தேவைப்படும்போது எளிதில் மருத்துவ உதவி பெற முடியும்.

குருக்கள் தான் நமது ஆன்மீக மருத்துவர்கள்.

நமது பாவ நோயைக் குணமாக்கி, தேவத்திரவிய அனுமானங்கள் மூலம் நமக்கு ஆண்டவரின் அருள் வரங்களை பெற்றுத்தர வல்லவர்கள் அவர்களே.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடமை இருக்கிறது.

அக்கடமையையும் நிறைவேற்றுவோம்.

குருக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி ஆண்டவரை வேண்டுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 17, 2021

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்."(மாற்கு, 10:44)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் எல்லாருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்."(மாற்கு, 10:44)

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் இருவர், யாகப்பரும், அருளப்பரும், இயேசுவின் அரசில் மிக உயர்ந்த இரண்டு பதவிகளை அவர்களுக்கு கொடுக்கும்படி கேட்கிறார்கள்.

இயேசு அவர்களிடம்,

"நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. "
என்கிறார்.

உண்மையிலேயே அவர்கள் கேட்பது என்னவென்று அவர்களுக்கே தெரியாது.

இயேசு இவ்வுலகில் ஒரு சுதந்திர யூத சாம்ராஜ்யத்தை அமைக்கப்போகிறார் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கலாம்.

உண்மையிலேயே மெசியா அதைத்தான் செய்யப்போகிறார் என்று அனேக யூதர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இயேசு அமைக்கவிருந்தது  யூதர்களின் அரசியல் சார்ந்த அரசை அல்ல.

 இவ்வுலகில் ஆன்மீகம் சார்ந்த  துன்பங்களில் அரசையும்,

மறு உலகில் நித்தின்ப பேரின்பத்தின் அரசையும்.

துன்பங்களில் அரசின் வழியாகத்தான் பேரின்ப அரசுக்குள் போக முடியும்.

' அதனால்தான்  என்னுடைய துன்பங்களில் உங்களால் பங்கு கொள்ள முடியுமா என்று கேட்கிறார்,

இவ்வுலகில் இயேசுவின் துன்பங்களில் பங்கு கொண்டால்தான் மறுவுலகில் அவர்கள் விண்ணக சாம்ராச்சியத்திகுள் நுழைய முடியும்.

  அவர்கள்  துன்பங்களில் பங்கு கொள்ள சம்மதித்து விட்டார்கள்.

ஆனால் இயேசு,

"எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று."
என்றார்.

வேண்டியவர்களுக்கு விருப்பமான எதையும் கொடுக்க வல்லவர் கடவுள் ஒருவரே.

 பிதாவோடும், தூய ஆவியோடும்  ஒரே கடவுளாய் இருப்பவர்தான் இயேசு.

அவர் ஏன்,

"எனது வலப்பக்கமோ இடப்பக்கமோ அமர அருள்வது என்னுடையதன்று."
என்றார்?

யாராவது கேட்கக்கூடாத கேள்விகள் கேட்டால், அதற்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றால் 

இயேசு இப்படி ஒரு பதிலைக் கூறுவது வழக்கம். 

ஒரு முறை "உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்" என்று சீடர்கள் தனியாகக் கேட்டனர் .

அப்போது இயேசு,

"அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது:

 தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் 

மகனுக்குங்கூடத் தெரியாது.'' 

என்றார்.

தந்தைக்குத் தெரிந்தது மகனுக்கு தெரியாமல் இருக்க முடியாது ஏனெனில் இருவரும் ஒரே கடவுள்.

அப்படியானால்

"மகனுக்குங்கூடத் தெரியாது."

என்று ஏன் சொல்லுகிறார்?

அலுவலக பொறுப்பாளரிடம் அலுவலகத்தை பற்றி சொல்ல கூடாத ரகசியத்தை கேட்டால்
,
அவர்

" எனக்குத் தெரியாது" என்றுதான் சொல்வார்.

அதாவது 

"நான் சொல்லக்கூடாது. ஆகவே அந்த கேள்வியை 'கேட்காதீர்கள்" என்று அர்த்தம்

இங்கும் தாழ்ச்சியைப் போதிக்கும் ஆண்டவரிடம் போய் உயர்ந்த பதவி கேட்டால் அவர் என்ன பதில் சொல்வார்?

"அதைக் கொடுப்பது என்னுடையதன்று."

அதாவது 

"இதுபோன்ற எனது விருப்பத்திற்கு விரோதமான விண்ணப்பங்களை 
கொடுக்கக் கூடாது"

இயேசுவின் எண்ணப்படி  வேலை ஏவுகிற முதலாளியை விட ஏவிய வேலையை செய்கிற பணியாளன் உயர்ந்தவன்.

வாழ்க்கையில் உயர்ந்தவன் ஆக வேண்டுமா? ஊழியராக இருக்க வேண்டும்.

இயேசுவின் அகராதியில்,

தாழ்மை = மேன்மை.

யாகப்பரும், அருளப்பரும் இயேசுவின் ஆட்சியில் உயர்ந்த பதவி கேட்டார்கள்.

 இவ்வுலகில் இயேசு துன்பங்களின் ஆட்சியை நிறுவினார்.

 தனது சிலுவையை சுமந்து கொண்டிருப்பவன்தான் அவரது ஆட்சியில் குடிமகனாக இருக்க முடியும். 

உயர்ந்த பதவி வேண்டுமென்றால்,

 அதன் பொருள்,

 சுமப்பதற்கு கனமான சிலுவை வேண்டும் என்பது தான்.

 அதனால் தான் இயேசு அவர்களிடம்,

"நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா? நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்களும் பெற முடியுமா?"

கிண்ணம் ஞானஸ்நானம் ஆகிய வார்த்தைகள் இயேசு படவிருக்கும் பாடுகளை குறிக்கின்றன.

அவரது வலப்பக்கமும் இடப்பக்கமும் அமர வேண்டும் என்றால்,

அதாவது இயேசுவின் அரசில் முக்கிய பதவி வேண்டுமென்றால்,
 அவரோடு பாடுகள் படவேண்டும்

பதவியே பாடுகளாகத்தான் இருக்கும்.

மிகப்பெரிய பதவி என்றால் மிக அதிகமான பாடுகள்.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான துன்பங்களை இயேசுவுக்காக தாங்கிக் கொள்கிறோமோ, 

அவ்வளவுக்கு அவ்வளவு அவரோடு நெருங்கியவர்கள்.

இயேசு கேட்ட கேள்விக்கு அவர்கள் முடியும் என்று சொல்லிவிட்டார்கள்.

''உங்களுக்குள் எவன் பெரியவனாய் இருக்க விரும்புகிறானோ, அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.''

"மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

எப்படி பணியாளனாய் இருக்க வேண்டும் என்பதையும் இயேசுவே சொல்லிவிட்டார்.

உயிரையும் அவருக்காக தியாகம் செய்யும் அளவிற்கு பணியாளனாய் இருக்க வேண்டும்.

யாகப்பருக்கும் அருளப்பருக்கும் இயேசு அளித்த பதிலில் இருந்து பின்வரும் ஆன்மீக பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்:

1. சர்வ வல்லவராகிய கடவுள் தன்னால் படைக்கப்பட்ட மக்களுக்கு ஊழியம் செய்வதற்காகவே, 

அதுவும், தனது உயிரையும் கொடுத்து ஊழியம் செய்வதற்காகவே, மனிதனாகப் பிறந்தார்.

நாமும் இறைவனுக்கும் அயலானுக்கும் ஊழியம்  செய்வதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறோம். 

ஆகவே ஊழிய வாழ்வுக்காகவே நம்மை அர்ப்பணிப்போம்,

2. நாம் பிறர் ஊழியத்தில் துன்பப்படுவதற்காகவே உலகில் தனது சாம்ராச்சியமாகிய திருச்சபையை இயேசு நிறுவினார்.

ஆகவே பிறருக்காக துன்ப படுவத்திலேயே இன்பம் காண்போம். 

இயேசுவின் சீடர்கள் என்ற முறையில் உலகில் சிலுவையை சுமப்பது ஒன்றே நமது கடமை.

 நமது கடமையை ஒழுங்காகச் செய்வோம்.

3.ஒருவன் எந்த அளவிற்கு பெரியவன் என்பது அவன் எந்த அளவிற்கு தாழ்ச்சியான பணியாளனாய்  இருக்கிறான் என்பதை பொறுத்தது.

ஆகவே பணி புரிந்து  ஆன்மீகத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்

Friday, October 15, 2021

"அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்." (லூக்.12:12)

"அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்." (லூக்.12:12)

 "செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது,

' எப்படிப் பதில் சொல்வது, 

என்ன பதில் அளிப்பது, 

என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்.

12 ஏனெனில், அவ்வேளையில் என்ன சொல்ல வேண்டுமென்று
-
 பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குக் கற்பிப்பார்."

இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு கூறிய வார்த்தைகள் இவை.

அவர்கள் நற்செய்தி அறிவிக்கிற காலத்தில் அக்காலத்திய மன்னர்கள் அவர்களை கைது செய்து கேள்விகள் கேட்கும்போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இயேசு அவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.

தான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அவரே நடந்து காண்பித்தார்.

யூதமத குருக்கள் அவரை கைது செய்து பிலாத்துவின் முன்னும் ஏரோதுவின் முன்னும் நிறுத்தியபோது அவர் நடந்துகொண்ட விதம் அப்போஸ்தலர்களுக்கு ஒரு முன்மாதிரிகை.

அவர்கள் படுத்திய அவமானங்களை பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்.

சில கேள்விகளுக்கு பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்.

சில கேள்விகளுக்கு பொறுமையாக சுருக்கமாக, பதில் சொன்னார்.

அவரை அடிக்கும் போதும், உதைக்கும் போதும்,
அவர்மேல் தூங்கும் போதும்,
சிலுவையில் அறையும் போதும் தடுக்கவே இல்லை.

அதுபோலவே அப்போஸ்தலர்களும் நடந்து கொள்ள வேண்டும் இன்று இயேசு விரும்பினார்.

இதே புத்திமதி அப்போஸ்தலர் களுக்கு நேர்ந்தது போல் நமக்கும் நேர்ந்தால் பொருந்தும்.

ஆனால் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் அப்போஸ்தலர்களுக்கு நேர்ந்தது போல் நேரும் என கூற முடியாது.

நாம் நல்ல கிறிஸ்தவர்களாக வாழும்போது நம்மை ஆள்பவர்கள் நம்மைக் கைது செய்து இப்படி நடத்துவார்களா என்று நமக்குத் தெரியாது.

அப்படியானால் இந்த இறைவாக்கு நமது சாதாரண வாழ்வில் பயன்படாதா?

பயன்படும்.

இது போல நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் எல்லோருக்குமே கிடைக்கும்.

அரசு நம்மை கைது செய்துதான் நாம் இப்படி நடந்துகொள்ள சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

எப்படி நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களை கொடுக்க அரசுதான் தேவை என்ற அவசியம் இல்லை.

நமது உறவினர்களும், நமக்கு தெரிந்தவர்களும்,

சுருக்கமாக 

 நம்மை.அடுத்திருப்பவர்களே போதும்.

யாரையும் தீர்ப்பிடவோ, யாரைப்பற்றியும் கெடுத்து பேசவோ 
யாருக்கும் அதிகாரம் இல்லை.

ஆனாலும் இல்லாத அதிகாரத்தை எடுத்து பயன்படுத்துவோர் நாட்டில் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் நடந்து கொள்வதற்கு இயேசுவின் புத்திமதி உதவியாக இருக்கும்.

யாரும் யார் முன்னாலும் அவமானப்பட விரும்ப மாட்டார்கள்.

நாம் செய்யாததை மற்றவர்களிடம் சொல்லி நம்மை அவமானப்படுத்துவோர் நம்மிடையே இருக்கிறார்கள்.

அப்படி அவமானப்பட நேரும்போது அதையே பதிலுக்கு பதில் செய்யாமல் நாம் பொறுமையுடன் தாங்கிக் கொள்ளும் போது இயேசுவையே பின்பற்றுகிறோம்.


கேரளாவில் நடந்த மரியா குட்டி கொலை வழக்கில் சங். சுவாமி பெனடிக்ட் ஓனாம்குலம்
(Rev. Fr. Benedict Onamkulam)

 தனக்கு நீதிமன்றத்தில் மரணத் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் கூட 

பாவ சங்கீர்த்தன ரகசியத்தை  வெளியிடாமல் காப்பாற்றி , 

அதனால் ஏற்பட்ட  அவமானத்தைத் 
தாங்கிக்கொண்டார். 

நேரடி சாட்சிகள் இல்லாததால் மேல் முறையீட்டின் போது அவர் விடுவிக்கப்பட்டாலும் 

அதற்குப்பின் அவரது  வாழ்நாள் முழுவதுமே பாவசங்கீர்த்தனம் ரகசியத்தை வெளியிடவில்லை.

நீதிமன்றத்தில் அவர் விடுவிக்கப்பட்டாலும் அதற்குப் பின்னும் அவரை கொலைகாரர் என்று எண்ணிக்கொண்டு அவரது உறவினர்கள் கூட அவரை ஒதுக்கி விட்டார்கள்.

34 ஆண்டு அவமான வாழ்க்கைக்கு பின்னால் மரியா குட்டியின் மரணத்திற்கு காரணமாக இருந்த டாக்டரின் மனைவி 

தனது கணவர் தனது பாவத்தை சுவாமியிடம் பாவசங்கீர்த்தனத்தில் வெளியிட்டுவிட்ட படியால்தான்

 சுவாமி அந்த ரகசியத்தை வெளியிடாமல் 

நீதிமன்ற தீர்ப்பையும் 

மக்கள் கொடுத்த அவமானத்தையும் தாங்கிக் கொண்டார் என்று 

பொதுவில்  ஒப்புக்கொண்டாள்.

டாக்டரின் மனைவி அவரது கணவர் பாவசங்கீர்த்தனம் செய்த விஷயத்தை உலகிற்கு அவளாக அறிவித்த பின்புதான்

 அதைப்பற்றிய உண்மை உலகத்திற்கு தெரியும்.

அதுவரை உலகம் சுவாமியை குற்றவாளி என்றே நினைத்துக் கொண்டிருந்தது.

ஆண்டவருக்காக அவமானங்களை தாங்கிக் கொள்கிறவர்கள் புனிதர்கள்.


பிரர் நம்மை கெடுத்துப் பேசும் போதுதான் அவமானம் ஏற்பட வேண்டிய அவசியமில்லை.

சில சமயங்களில் நாமே நமது அவமானத்திற்கு காரணம் ஆகிவிடுவோம்.

நமது அறிவு குறைவின் காரணமாக நமக்கு நமது வாழ்வின் முயற்சிகளில் தோல்வி ஏற்படும் போது 

வெற்றி பெற்றோர் முன்னிலையில் நிற்க அவமானமாக இருக்கும்.

ஏனெனில் வெற்றி பெற்றோர் நமது தோல்வியை சுட்டி காண்பித்துக் கொண்டேயிருப்பர் 

தோல்வி என்பது நாம் நினைப்பது போல அவமானப்பட வேண்டிய காரியம் அல்ல.

உண்மையில் நமது வாழ்வில் தோல்விகள் என்பது கிடையாது.

இதைப் புரிந்து கொண்டால் தோல்வி என்று நாம் கருதுகிற நிகழ்வைப் பற்றி கவலைப்படவே மாட்டோம்.

பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்ல.

பள்ளிக்கூட படிப்பை நிறுத்திவிட்டு வேறு பணிகளில் இறங்கவேண்டும் என்பதற்கு அது ஒரு கைகாட்டி மட்டுமே.

வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்திற்குப் போனவர்கள் அல்ல.

பள்ளி படிப்பில் தோல்வி அடைந்தவர்கள் விஞ்ஞானிகளால் கூட மாறியிருக்கிறார்கள்.

விவசாய தொழிலில் வெற்றி பெறுவதற்கு பள்ளிப்படிப்பு தேவையில்லை.

கையெழுத்துப் போட கூட தெரியாதவர்கள் வியாபாரத்திலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள்.

 என்னிடம்  பயின்ற ஒரு மாணவன் தேர்வுகளில் தோல்வி அறிந்துகொண்டேன் இருந்தான்.

நான் உண்மையிலேயே எரிச்சலுடன்,

"நீ பள்ளிக்கு வருவதை விட கடை ஒன்றில் வேலைக்கு நின்றால் சம்பளமாவது கிடைக்கும்" என்றேன்.

அவன் மறுநாள் முதல் பள்ளிக்கு வரவில்லை.

பல ஆண்டுகள் கழித்து அவனைச் சந்திக்க நேர்ந்தது.

அவனாகவே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"சார், பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பள்ளிக்கு வர வேண்டாம். ஏதாவது கடைக்கு வேலைக்கு போ என்று சொன்ன மாணவன் நான் தான்."

"எனக்கு ஞாபகம் இருக்கிறது.
இப்பொழுது எந்த கடையில் வேலைக்கு இருக்கிறாய்?"

"நீங்கள் சொன்ன ஆண்டு ஒரு கடையில் கையாள் வேலைக்குச் சேர்ந்தேன். 

தினம் 100 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். 

கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து மறு ஆண்டு அந்தப் பணத்தில் சிறியதாக ஒரு பெட்டிக்கடை ஆரம்பித்தேன். 

ஒரு ஆண்டு காலத்தில் அது பெரிய பல சரக்குக் கடை ஆகியது. 

இப்போது எனது கடையில் 10 பேர் வேலைக்கு நிற்கிறார்கள்.

அதோடு வட்டி வரவு செலவில் நல்ல வருமானம்.

பள்ளிக்கூட படிப்பை நிறுத்திவிட்டு கடை வேலைக்கு போகச் சொன்ன உங்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்."

"ரொம்ப சந்தோசம். படிப்பு மட்டும் நம்மை காப்பாற்றும் என்று எண்ணத் தேவையில்லை. யார் யாருக்கு என்ன வேலையில் ஆர்வம் அதிகமோ அந்த வேலையை செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும்."

படிக்கின்ற காலத்தில் படிப்பை நிறுத்திவிட்டு கடை வேலைக்கு போகச் சொன்னதை அவன் அவமானமாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆசிரியர் காட்டும் பாதையாக எடுத்துக் கொண்டான்.

வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் இறைவன் சித்தமே என்று எடுத்துக்கொண்டு

 வாழ்க்கைப் பாதையில் அவரை நினைத்துக்கொண்டு நடை போடுவதே உண்மையான ஆன்மீகம்.

எல்லாவற்றிலும் இறைவனை நினைத்துக்கொண்டு நடக்கின்றவர்களுககுக்  கிடைப்பதெல்லாம் வெற்றியே.    

லூர்து செல்வம்.

வில்லன்கள் கற்பிக்கும் பாடம்.

வில்லன்கள் கற்பிக்கும் பாடம்.

ஒருமுறை குடிகாரன் ஒருவன் அளவுக்கு மீறி குடித்து விட்டு தரையில் உருண்டு கொண்டிருந்தான்.

இரக்கப்பட்டு அவனை பார்க்க சென்றவர்களுக்கு அவன் கூறிய ஒரே புத்திமதி,

"என்னைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அளவுக்கு மீறி குடித்தால் என் கதிதான் உங்களுக்கும்."

நல்லவர்களிடமிருந்து  மட்டுமல்ல கெட்டவர்களிடமிருந்தும் நாம் பாடம் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கு

 இந்த குடிகாரன் மட்டுமல்ல 

நம் ஆண்டவரின் மரணத்திற்கு காரணமான பரிசேயர்களும், சதுசேயர்களும்,  மறைநூல் அறிஞர்களும் கூட நல்ல உதாரணம்.

பரிசேயர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய  பாடங்கள் நிறைய இருக்கின்றன.

இயேசு பலமுறை தொடர்ந்து அவர்களுடைய பாவங்களை சுட்டிக் காண்பித்து கொண்டேயிருந்தார்.

அவர்களோ மனம் திரும்புவதற்குப் பதில் தங்களது தவறுகளைச் சுட்டிக் காண்பித்து, தங்களைத் திருத்த விரும்பியவரையே கொல்ல விரும்புகிறார்கள்.

நாம் தவறாக நடக்கும் போது நமக்கு புத்திமதி சொல்கின்றவர்கள் விசயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம்?

பரிசேயர்கள் போல நடந்து கொள்கின்றோமா?

இயேசு அவர்களுக்கு புத்திமதிதான் சொன்னார்.

ஆனால் அவர்களோ இயேசுவுக்கு விரோதமாக நடந்து கொண்டார்கள்.

புத்திமதி சொன்னவருக்கு எதிராக நடந்து கொள்பவர்கள் தங்களிடம் எந்த குறையும் இல்லை என்று நினைத்துக் கொள்வது வழக்கம்.

 தங்கள் குறைகளை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக புத்திமதி சொல்லுபவர் மேலே கோபம் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

நம்மிடம் இந்த குணம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் என்ற முறையில் நமக்கு புத்திமதி சொல்கிறவர்கள் இயேசுவின் இடத்தில் இருந்து நம்மை வழிநடத்தும் பங்கு குருக்கள் தான்.

நமது குற்றம் குறைகளை சுட்டிக் காண்பித்து சரியான பாதையில் 
நடக்கும்படி நமக்கு வழிகாட்டும் கடமை அவர்களுக்கு உண்டு.

இது இயேசு அவர்களுக்கு அளித்த கடமை.

ஒவ்வொரு ஞாயிறும் நாம் திருப்பலிக்கு செல்லும்போதும் பிரசங்க நேரத்தில் குருவானவர்  நம்முடைய குறைகளை சுற்றிக் காண்பித்து, அவற்றை நாம் திருத்திக் கொள்ளும் வழி புத்திமதியும் கூறுவார்.

அவர் கூறும் புத்திமதியை நாம் தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றோமா, 

அல்லது அவரைப் பற்றி தவறாக பேசி பொதுமக்களிடையே அவரது பெயரை கெடுக்க முயல்கின்றோமா?

 தங்கள் பங்கு குருவானவரைப் பற்றி பொதுமக்களிடையே தவறாக பேசுபவர்களை  நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

இவர்கள் பரிசேயர்கள்  ரகத்தை சேர்ந்தவர்கள். 

நம்மிடம் திருந்த வேண்டிய  குணம் இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் கண்டித்தவற்காக அவரை குறை சொல்லிக்கொண்டு திரியும் மாணவர்களால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

தங்களைத் திருத்த முயலும் பெற்றோரை குறை சொல்லிக்கொண்டு திரியும் பிள்ளைகளாலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

அதே போல் தான் தங்களுக்கு புத்திமதி கூறும் பங்குக் குருவை குறை சொல்லிக்கொண்டு திரியும் கிறிஸ்தவர்களாலும் ஆன்மீக வாழ்வில் முன்னேற முடியாது.

பரிசேயர்கள் இயேசுவின் மீது குற்றம் சாட்டுவதற்கு அவர்களது சம்ய சட்டங்களையே பயன்படுத்தி கொண்டார்கள்.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை இயேசுவின் முன்னால் நிறுத்தி,

"இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.

இயேசு இரக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பது அவர்களுக்கு தெரியும்.

 அவரிடம் குற்றம் கண்டு பிடிப்பதற்காகவே இந்த கேள்வியை கேட்டார்கள்.

கொல்லக்கூடாது என்று சொன்னால் அவர் சட்டத்தை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டலாம்.

கொல்லுங்கள் என்று சொன்னால் 
அவருக்கு இரக்கம் இல்லை என்று குற்றம் சாட்டலாம்.

ஆனால் இயேசுவோ அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக,

"உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.

அவர்களுள் பாவம் இல்லாதவன் யாருமே இல்லை என்பது அவருக்கு தெரியும். 

இயேசு  இரக்கத்திற்கு பாதகம் இல்லாமல் சட்டத்தைப் பின்பற்றினார்.

இறைவன் அளவற்ற விதமாய் அன்புள்ளவர், நீதியுள்ளவர்.

பாவம் செய்தவர்கள் நாம்.

நீதியின்படி நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை இறைவனின் அளவற்ற அன்பின் காரணமாக அவரே செய்து நம்மை மீட்டார்.

நீதிக்கு பாதகமில்லாமல் அன்பு செய்கிறார்.

நாம் படும் துன்பங்களுக்கு பாவ பரிகாரப் பலனைப் பெற்றுத் தந்தது இயேசு செய்த பாவப் பரிகாரம் தான்.

பரிசேயர்கள் சட்டத்தின் எழுத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

ஆனால் இயேசு சட்டத்தில் இருக்க வேண்டிய அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இயேசுவும் இரண்டு கட்டளைகளை கொடுத்தார். ஆனால் அவை இரண்டும் அன்பின் கட்டளைகள்.

இறைவனை அன்பு செய்யுங்கள்.

உங்கள் அயலானையும் அன்பு செய்யுங்கள்.

இயேசுவின் கட்டளைகள் 100% அன்பால் ஆனவை.

நாம் அன்பு செய்யவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

அன்பின் பிள்ளைகள்தான் இரக்கமும் மன்னிப்பும்.

பரிசேயர்கள் எதற்கெடுத்தாலும் சட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

 அவர்களிடம் கொஞ்சமாவது அன்பு இருந்திருந்தால் இயேசுவை பாடுகள் படுத்தி கொல்ல வேண்டும் என்று எண்ணியிருப்பார்களா?

இந்த விசயத்தில் பரிசேயர்கள் நமக்கு கற்றுத் தரும் பாடம்:

"எங்களைப்போல் சட்டத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.

 அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

 குற்றம் செய்தவர்களை அன்பால் திருத்துங்கள்.

 எங்களிடம் வெறுப்பு இருந்தது.

 ஆகவே குற்றமே செய்யாத இயேசுவைக் கொலை செய்தோம்.

அன்பின் காரணமாக அவர் எங்களையே மன்னித்தார்.

இயேசுவிடமிருந்து உங்களைத் துன்புறுத்துபவர்களையும் மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்."

இயேசுவை கொல்வதில் 
பரிசேயர்களுக்கு துணை நின்றவர்கள் மறைநூல் அறிஞர்கள்.

அதாவது ஆதியாகமம் முதல் பழைய ஏற்பாட்டின் கடைசி நூல் வரை அனைத்து நூல்களையும் கற்றுத் தேர்ந்து, கரைத்துக் குடித்தவர்கள்.

பழைய ஏற்பாட்டு நூல்களில்தான் இயேசுவின் வருகை பற்றி முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரைப் பற்றி இறைவாக்கினர் கூறிய அனைத்தையும் அவர்கள் கற்றுத் தேர்ந்தவர்கள்தான்.

ஆனால் என்ன பயன்?

மறை நூல்களைக் கற்றுத்தேர்ந்த மறைநூல் அறிஞர்களுக்கு நூல்கள் முன்னறிவித்த இயேசுவை அடையாளம் காண முடியவில்லை.

மறை நூல் அறிவால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

ஏன்?

 மறைநூலில்உள்ள செய்திகளுக்கு எப்படி அர்த்தம் கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுக்காமல்,

 தங்கள் இஷ்டப்படி பொருள் கொடுத்தது தான் காரணம். 

அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன?

Cover to Cover மறை நூலை வாசித்தால் மட்டும் போதாது.

இன்றைய காலகட்டத்தில் மறை நூலுக்கு உண்மையான பொருள் கொடுக்கக்கூடிய உரிமை உள்ளது இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை மட்டுமே.

மறை நூலை மட்டும் எடுத்துக்கொண்டு கத்தோலிக்க திருச்சபையை விட்டு வெளியேறியவர்கள்

 மறை  நூல் செய்திகளுக்கு தங்கள் இஷ்டம் போல் பொருள் கொடுக்கும்போது 

அவர்கள் பரிசேயர்கள் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்களை விட மோசமானவர்கள் ஆகிவிடுகிறார்கள். 

பரிசேயர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்,

 இவர்களும் அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதில் உள்ள பரிதாபம் என்னவென்றால் 

கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்களும் திருச்சபையை விட்டு வெளியேறியவர்களின் நற்செய்தி கூட்டங்களுக்கு சென்று

 அவர்கள் கூறுவதை நம்புவதுதான்.

நமக்கு நற்செய்தியை பற்றி விளக்கம் கூற கத்தோலிக்க திருச்சபையில் குருக்கள் இருக்கிறார்கள்.

நாம் நாட வேண்டியது அவர்களை மட்டும்தான், திருச்சபையை விட்டு வெளியேறிவர்களை அல்ல.

நம்மவர்கள் பரிசேயர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான பாடம் இது.

கத்தோலிக்க குருக்களின் உதவியோடு மறைநூலை வாசிப்போம்.

நித்திய காலமும் பயன் பெறுவோம்.


லூர்து செல்வம்.

Thursday, October 14, 2021

"அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கும்படி சூழ்ச்சியாகக் கேள்விகள் பல கேட்கலாயினர்."(லூக்.11:54)

"அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கும்படி சூழ்ச்சியாகக் கேள்விகள் பல கேட்கலாயினர்."
(லூக்.11:54)

கதாநாயகனிடமிருந்து மட்டுமல்ல வில்லனிடமிருந்து கூட நாம் பாடங்களை கற்றுக்கொள்ளலாம்.

வாழ்க்கையில் எப்படி செயல்பட வேண்டும் என்ற பாடத்தை கதாநாயகனிடமிருந்து கற்றுக்கொண்டால்,

எப்படி செயல்படக்கூடாது என்பதை வில்லனிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

எப்படி செயல்படக்கூடாது என்பதை
என்பதை கற்றுக்கொண்டாலே

எப்படி செயல்பட வேண்டும் என்பதும் புரியும்.

கிறிஸ்துவின் உலக வாழ்வில் கதாநாயகன் அவரே.

அவரது வில்லன்களாக செயல்படுபவர்கள் பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் வல்லுனர்களும்.


சாதாரண மக்கள் இயேசுவின் நற்செய்தியை கேட்பதற்கு என்று அவரை பின் தொடர்ந்து சென்ற போதெல்லாம்,

பரிசேயர்களும், சதுசேயர்களும், மறைநூல் வல்லுனர்களும் அவரது பேச்சில் குறை கண்டு பிடிப்பதற்காகவே அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

அவர்களது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் தீயவர்களாக இருந்தாலும்

 தீமையில் இருந்தும் நன்மையை வரவழைக்கக் கூடிய இறைவன் இயேசு,

அவர்களது செயல்களை உலக மக்களின் மீட்புக்காக பயன்படுத்திக் கொண்டார்.

பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மரணம் அடைந்து  அடைந்து பாவிகளை மீட்பதற்காக இயேசு உலகிற்கு வந்தார்.

ஒருவகையில் இயேசு பாடுகள் படவும், சிலுவையில் அறையப்படவும், மரணிக்கவும் உதவியவர்கள் இந்த வில்லன்கள் தான்!

ஆக பரிசேயர்களிடமிருந்து மிக முக்கியமான ஒரு பாடத்தை கற்றுக்கொள்கிறோம்.

தீமையால் நன்மையை வெல்ல முடியாது.

அது தன்னை அறியாமலேயே இறுதியில் நன்மை வெற்றி பெற உதவிகரமாகவே இருக்கும்.


"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக். 23:34)

இவ்வார்த்தைகளை சொன்னவர் இறைமகன், இயேசு கிறிஸ்து.

இயேசு  வெறுமனே ஒப்புக்காக வார்த்தைகளை சொல்லியிருக்க மாட்டார்.

இந்த செபத்தைச் சொன்ன இறைமகனும் தந்தையும் ஒரே கடவுள்தான்.

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே 
தேவசுபாவம் என்று நமக்குத் தெரியும்.

ஆக இயேசு தன்னை கொன்றவர்களை மன்னிக்கும்படி விரும்பியது தந்தையின் விருப்பமும்தான்.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும் அவரது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருபவை.

அவர் மனிதர் அனைவரின் மீட்புக்காகவும்தான் மரித்தார்.

அவரைக் கொன்றவர்களும் அனைவரில் அடங்குவர்.  

ஆகவே இயேசுவின் விசேசமாக அருள் வளர்த்தால் 

அவர்கள் தாங்கள் மரணிக்கும் முன் 

தங்களது சகல பாவங்களுக்காகவும் மனஸ்தாபப்பட்டு 

மன்னிப்பு பெற்றிருப்பார்கள் என்றும் நம்பலாம்.

மற்றவர்களை தீர்ப்பிட  தமக்கு அதிகாரம் இல்லை. ஆனால் மற்றவர்களைப் பற்றி நல்லதாக நினைப்பது தவறு இல்லை.

நாமும் நமது பாவங்களால் இயேசுவின் மரணத்திற்குக் காரணமானவர்களே.

நாமும் ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் பாவசங்கீர்த்தனம் மூலம் மன்னிப்பு பெற்றுக் கொண்டு தானே இருக்கிறோம்!


ஆதாம் செய்த பாவம் இறைமகனேயே  உலக மீட்பராக உலகத்திற்கு வர செய்ததால்

 அந்தப் பாவத்தையே தாய்த் திருச்சபை தனது ஈஸ்டர் வழிபாட்டின்போது பாக்கியமான பாவம் என்று அழைக்கிறது.


"ஓ ஆதாமின் பாவமே!
உன்னை அழிக்க கிறிஸ்துவின் மரணம் திண்ணமாய்த் தேவைப்பட்டது!
இத்துணை மாண்புமிக்க மீட்பரை அடையப் பேறுபெற்றதால்
பாக்கியமான குற்றமே!"

பாவம்  ஒரு தீமை. 

ஆனாலும் அதன் விளைவாகத்தான் நாம் இன்று இறை மகனையே உணவாக உட்கொண்டுக் கொண்டிருக்கிறோம்!

தீமையிலிருந்தும் நன்மையை வரவழைக்க இறைவனால் முடியும்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Wednesday, October 13, 2021

"உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்." (லூக்.12: 4)

"உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்."    (லூக்.12: 4)

கடவுள் மனிதனைப் படைக்கும் போது முழு மனச் சுதந்திரத்தோடு படைத்தார்.

அதாவது எதை நினைக்க, வேண்டும் எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க அவனுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருந்தார்.

ஆனால் அதோடுகூட அவன் அனுசரிக்க வேண்டிய கட்டளைகளையும் கொடுத்திருந்தார்.

அவற்றை அனுசரிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க  அவனுக்கு முழு சுதந்திரம்  இருந்தது.


முழு சுதந்திரத்தோடு கட்டளைகளை 
அனுசரிப்பவனுக்கு அவரோடு இணைந்து வாழும் நித்திய வாழ்வு உண்டு.

அனுசரியாகதவனுக்கு நித்திய ஆன்மீக மரணம்.

 மனிதன் தனது முழு சுதந்திரத்தை பயன்படுத்தி நித்திய வாழ்வை ஈட்டிக் கொள்ள வேண்டும்.

ஆனால் மனிதன் இறைவனது கட்டளைக்குப் பணிந்து நடப்பதை சாத்தானின் ஆலோசனையை கேட்டு
 கைவிட்டு விட்டான்.

அதாவது தன்னை படைத்த இறைவனின் சொல்லை கேளாமல்,

எதிரியான சாத்தானின் சொல்லை கேட்டு நடந்தான்.

அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து சாத்தான் மனிதர்களுடைய சுதந்திரத்தை சோதிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

இன்றும் மனிதனுடைய மனதில் 
சாத்தானுக்குக் கீழ்ப்படிவதா, கடவுளுக்குக் கீழ்ப்படிவதா என்ற எண்ணங்களுக்கு இடையில் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த  எண்ணங்களில் எதை ஏற்றுக்கொள்வது என்று தீர்மானிக்க வேண்டியது நாம்தான்.

இதற்கு ஆலோசனையாகத்தான் இயேசு

 "உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்."

சாத்தான் தனது வேலையை நேரடியாக செய்யாமல் ஏற்கனவே தன் கையில் போட்டுக் கொண்ட மனிதர்களின் மூலமாக செய்கிறான்.

இறைவன் நமது உள்ளங்களில் நேரடியாகவும், வெளியில் அவரது பிரதிநிதிகள் மூலமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நாம் சாத்தானின் ஆட்களின் சொல்லை கேட்கவேண்டுமா?

இறைவனின் சொல்லை கேட்க வேண்டுமா? 

இயேசு சொல்கிறார்,

'உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களின் சொல்லை கேட்கவேண்டாம்.

கொன்றபின் நரகத்தில் வீழ்த்த வல்லவரது சொல்லையே கேளுங்கள்.

சாத்தானின் ஆட்கள்,

"கடவுளின் கட்டளையை கடைப்பிடித்தால் உன்னை கொன்று போடுவோம்"

என்று பயம் காட்டினாலும் அவர்களுக்கு பயப்பட வேண்டாம்.

ஏனெனில்  அவர்களுக்கு உங்கள் மரணத்திற்கு பின் உங்கள் மேல் எந்த அதிகாரமும் இல்லை.

ஆனால் மரணத்திற்கு பின் உங்களுக்கு விண்ணக வாழ்வையோ, நரக வாழ்வையோ தரவல்லவர் இறைவன் மட்டுமே."

ஆகவே அவருக்கு மட்டுமே பயப்பட வேண்டும், அவரது சொல்லை மட்டும் கேட்க வேண்டும். 

நாம் இயேசுவின் சொல்லுக்கு மட்டும் கட்டுப்படுவோம்.

திங்கள் கிழமை அரசு பொதுத்தேர்வு ஆரம்பிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை காலையில் திருப்பலிக்கு புறப்பட்டு கொண்டிருக்கிறோம்.

அப்போது சாத்தான் நமது காதுக்குள் ஊதுகிறது,

"நாளைக்கு பொதுத்தேர்வு.
 இன்று முழுவதும் உட்கார்ந்து படித்தால்தான் தேர்வை நன்கு எழுத முடியும். 
திருப்பலிக்குச் சென்றால் படிக்க நேரம் இருக்காது.
தேர்வை சரியாக எழுத முடியாது.
ஆகவே திருப்பலிக்குச் செல்லாமல் உட்கார்ந்து படி."

அப்போது ஆண்டவர் சொல்கிறார்,

"ஞாயிற்றுக்கிழமை கடன் பூசை. 
பூசைக்கு செல்லா விட்டால் பாவம்.
பாவத்திற்கு தண்டனை கொடுக்கக் கூடியவன் நான் மட்டுமே. ஆகவே நான் சொல்கிறேன், திருப்பலிக்குப் போய்விட்டு வந்து படி. தேர்வு நேரத்தில் நான் உனக்கு உதவியாக இருப்பேன்."

நாம் ஆண்டவர் சொற்படிதான் நடக்க வேண்டும்.

கத்தோலிக்க திருமறையைச் சேராத ஒரு பணக்கார வீட்டுப் பெண் உன்னை காதலிக்கிறது.

சாத்தான் காதுக்குள் ஊதுகிறது,

"அவளது காதலை ஏற்றுக் கொண்டு, அவளையே திருமணம் செய்துகொள். பணம் ஏராளமாகக் கிடைக்கும். வசதியாக வாழலாம். அவள் எந்த மதத்தைச் சேர்ந்தவளாய் இருந்தால் என்ன. வசதியான வாழ்க்கை தேடிவரும்போது  யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?"


அப்போது ஆண்டவர் சொல்கிறார்,

"வசதியான வாழ்க்கை தேடி வருகிறது என்று நமது திருமறையில் சேராத பெண்ணை நீ  திருமணம் செய்து கொண்டால் உனது ஆன்மீக வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். உனது வாழ்க்கையும் கெடும், பிள்ளைகளின் வாழ்க்கையும் கெடும். இவ்வுலக வாழ்க்கையை விட மறுவுலக வாழ்க்கையே முக்கியமானது. நமது திருமறையை  சேராத இந்த பெண் வேண்டாம். பக்தியுள்ள கத்தோலிக்க பெண் வரும்போது திருமணம் செய்து கொள்."

ஆண்டவருக்கு நமது ஆன்மாவும் மறுவுலக வாழ்வும்தான் முக்கியம்.
நமது ஆன்மீக வாழ்வுக்கு பணமும் வசதியான வாழ்வும் முக்கியமல்ல.
 
 மறுஉலக வாழ்க்கையை விலையாகக் கொடுத்து   இவ்வுலக வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்?

சாத்தான் நம்மை சோதிக்கும் போது நிரந்தரமற்ற இந்த உலகத்தை நிரந்தரமானது போல் காண்பிக்கும்.

ஆண்டவர் நம்மை அழைக்கும்போது   இவ்வுலகின் நிலையற்ற தன்மையை சுட்டி காண்பித்து,

 மறுஉலக நிலைவாழ்வையும்  ஞாபகப்படுத்துவார்.

சாத்தான் இவ்வுலகின் சிற்றின்பத்தை காட்டி  பாவம் செய்ய சோதிப்பான்.

ஆண்டவர் இவ்வுலகில் நாம் சுமக்க வேண்டிய சிலுவைகளைக் காண்பித்து, அவற்றை சுமந்தால் தான் மறுவுலக பேரானந்தஸம் கிட்டும்  என்பார்,

சாத்தானுக்கு நம்மை சோதிக்க மட்டுமே அதிகாரம் உண்டு. அதற்குமேல் அதற்கு நம் மேல் எந்த அதிகாரம் இல்லை.

ஆண்டவரால் நம்மை விசுவாசத்தில் ஆழப் படுத்த முடியும். பசாசின் சோதனைகளில் வெல்வதற்கு தேவையான அருள் வங்களை அவரால் மட்டுமே தரமுடியும். அவருக்கு நம்மேல் சர்வ அதிகாரம் உண்டு.

 அவரது  சொற்படி நடந்தால் நமக்கு வாழ்வு தரவும், எதிராக நடந்தால் நித்திய வாழ்வை மறுக்கவும் அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. 

நம்மை சோதிப்பதைத் தவிர நம்மேல் வேறு எந்த அதிகாரமும் இல்லாத சாத்தானுக்கு நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

 நம்மேல் சர்வ அதிகாரமும் உள்ள இறைவனுக்கே அஞ்சி நடப்போம்.

லூர்து செல்வம்.