Monday, July 5, 2021

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."(மத்.10:8)

"இலவசமாய்ப் பெற்றுக்கொண்டீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்."
(மத்.10:8)

இயேசு தம் சீடர் பன்னிருவரையும் போதிக்க அனுப்பும்போது,

  நோய் பிணியெல்லாம் குணப்படுத்தவும், '

அசுத்த ஆவிகளை ஓட்டவும் அவர்களுக்கு வரம் கொடுத்தார்.

இயேசு தான் தனது சொந்த வல்லமையால் செய்த புதுமைகளை அவர்களும் செய்ய 
வரம் கொடுத்தார்.

இலவசமாக பெற்ற வரத்தை இலவசமாக பயன்படுத்தும்படி அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்.

இலவசமாக பெற்றதை இலவசமாக, தாராளமாக கொடுக்க வேண்டும் என்று இயேசு சீடர்களுக்குச் சொன்ன  புத்திமதி

 அவரை பின்பற்றுகிற நம் அனைவருக்கும் அது பொருந்தும்.

நமது உடல், ஆன்மா உட்பட  நமக்கு சொந்தமானது என்று சொல்லிக் கொண்டிருக்கும் எதுவும் உண்மையில் நமக்கு சொந்தமானது அல்ல.

எல்லாம் இறைவனிடமிருந்து இலவசமாக பெற்றவை.

இறைவனிடமிருந்து நாம் பெற்றுக் கொண்டவை அனைத்தையும் இறைவனது விருப்பப்படிதான் பயன்படுத்த வேண்டும்.

நமது ஆன்மாவிற்கு அன்பு என்னும் மிக உயர்ந்த பரிசை இறைவன் தந்திருக்கிறார்.

அது நம்மை மட்டும் நாம்  நேசிப்பதற்குத் தரப்பட்டது அல்ல.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிப்பதற்காக அன்பு பயன்படுத்தப்பட வேண்டும்.

அடுத்து நமது அயலானை நேசிப்பதற்கும்,அவனுக்கு உதவிகள் செய்வதற்கும்  பயன்படுத்தப்பட வேண்டும்.

பிரதிபலன் எதிர்பார்க்காத அன்புதான் உண்மையான அன்பு.

இறைவனை அவர் நமது இறைவன், நம்மைப் படைத்தவர் என்பதற்காக மட்டும் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு செய்ய வேண்டும்.

இறைவன் நம்மை எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ அந்த நோக்கத்தை நோக்கி நம்மை அன்புடன் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

நம்மிடம் சில ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகளை நிறைவேற்றித் தரும்படி இறைவனை வேண்டுவோம்.

அந்த ஆசைகள் நமது வாழ்வின் நோக்கத்திற்கு ஏற்றவையா எதிரானவையா என்று இறைவனுக்குத் தெரியும்.


ஏற்றவையாக இருந்தால் இறைவன் அவற்றை நிறைவேற்றித் தருவார்.

எதிரானவையாக இருந்தால் அவற்றை நிறைவேற்றித் தரமாட்டார்.

நமக்கு நன்மை தரும் தனது சித்தத்தை நிறைவேற்றுவார். 

நமது ஆசைகள் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் இறைவன்மீது நமக்கு உள்ள அன்பு சிறிது கூட குறையக்கூடாது.

அதுவே பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பு.

நமது தாயின் அன்பை பற்றி நமக்கு தெரியும்.

நமது தாய் நம்மை பெற்ற ஒரே காரணத்திற்காக மட்டும் நம்மை அவளால் இயன்ற அளவு அன்பு செய்கிறாள்.

நாம் அவளுக்கு கீழ்படிந்து நடந்தாலும், கீழ்ப்படியாவிட்டாலும்,

அவளது விருப்பப்படி நடந்தாலும் நமது விருப்பப்படியே வந்தாலும்,

நாம் அவளை அன்பு செய்தாலும், செய்யாவிட்டாலும்

எந்த சூழ்நிலையிலும் நம்மீது நமது தாய்க்கு இருக்கும் அன்பு இம்மி அளவு கூட குறையாது.


நம்மை பெற்ற தாயைவிட எவ்வளவோ மேலானவர் நம்மை படைத்த இறைவன்.

நாம் அவரது விருப்பப்படி நல்லவர்களாக நடந்தாலும்,

அவருக்கு எதிராக பாவ வாழ்க்கை நடத்தினாலும்

நம்மீது அவருக்கு உள்ள அன்பு கொஞ்சமும் குறையாது.

நமது முதல் பெற்றோர் அவரது கட்டளையை மீறி பாவம் செய்தாலும் 

மனுக்குலத்தை அவர் தொடர்ந்து நேசித்ததால்தான் அதன் பாவங்களுக்குப் பரிகாரம் செய்ய மனிதனாக பிறந்து பாடுபட்டு வகித்தார்.

நாம் பாவிகளாக இருந்தாலும்,

"திருந்தி வா மகனே" என்றுதான் நம்மை அழைக்கிறார்.

அப்படிப்பட்ட  கடவுள்தான் அவரையும் நமது அயலானையும் நேசிப்பதற்காக அன்பு என்ற பரிசை இலவசமாக தந்திருக்கிறார்.


கடவுள் தந்திருக்கும் இலவச அன்பை கொண்டு அவரையே நேசிக்காதவர்கள் எப்படி அயலானை நேசிப்பார்கள்?

இறையன்பு எங்கே இருக்கிறதோ அங்குதான் பிறர் அன்பும் இருக்கும்.

இறைவனை நம்பாதவர்கள் மனிதாபிமானம் என்ற பெயரால் பிறரை நேசிப்பதாக சொல்வார்கள்.

நாம் எதையும் கிறிஸ்துவின் நோக்கில் இருந்துதான் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும்போது கடவுளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அவரால் படைக்கப்பட்டவர்களை உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாது.

கிறிஸ்துவின் நோக்கிலிருந்து பார்த்தால் 

இறைவனுக்காக,

 இறைவனின் பெயரால் 

நமது பிறருக்கு நாம் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் விண்ணகத்தில் சன்மானம் உண்டு. 

"நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதற்காக

 உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன், 

கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மார்க்.9:41)

"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் 

கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத்.10:42)

கடவுளை நம்பாதவர்களிடம் போய்,

"நீங்கள் மனிதாபிமான நம்பிக்கையால் செய்யும் உதவிகளுக்கு இவ்வுலகில் புகழ் கிடைக்கலாம்.

ஆனால் கடவுளுக்காக செய்யப்படாத என்ற உதவிக்கும் விண்ணகத்தில் சன்மானம் கிடையாது."

என்று சொன்னால் அவர்களுக்கு புரியாது.

கடவுளையும் விண்ணகத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் விண்ணக சன்மானத்தை  பற்றி ஏன் கவலை கொள்ள போகிறார்கள்?

பள்ளியில் படித்து முடித்தபின் வேலைக்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறவன் படிப்பைப் பற்றியும் தேர்வில் எடுக்க விரும்பும் மதிப்பெண்கள் பற்றியும் கவலைப் படுவான்.

வேலையைப் பற்றி எண்ணம் இல்லாதவன் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டான். நினைத்ததைச் செய்வான்.

மரணத்திற்கு பின் விண்ணகம். செல்ல விரும்புகிறவன்தான் கடவுளைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப் படுவான்.

விண்ணகத்தைப்பற்றி கவலைப்படாதவன் எதைப்பற்றியும் கவலை பட மாட்டான். இஷ்டம் போல் வாழ்வான்.

ஒரு அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனிடமிருந்து பெற்றதை இறைவனுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். 

இறைவனிடமிருந்து நாம் பெற்ற அன்பை

இறைவனை நேசிக்கவும், இறைவனுக்காக நமது அயலானை நேசிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

அன்பு செய்யும் இயல்பை இறைவனிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொண்டோம்.

ஆகவே இலவசமாக பயன்படுத்துவோம்.

கடவுள் நமக்கு விண்ணக பாக்கியத்தை இலவசமாகத் தருவார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment