Thursday, July 15, 2021

என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)(தொடர்ச்சி)

"என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன். என்னைவிடத் தன் மகனையோ மகளையோ அதிகம் நேசிக்கிறவனும் எனக்கு ஏற்றவன் அல்லன்." (மத்.10:37)

(தொடர்ச்சி)

",இறைவனுக்காக செய்யப்படும் அன்பே உண்மையான அன்பு."

"என்னையே நான் நேசிக்க வேண்டியது இறைவனுக்காக மட்டுமே , சரியா?"

'',கரெக்ட். நாம் இறைவனுக்காக படைக்கப்பட்டிருப்பதால் நமது வாழ்வின் ஒவ்வொரு அசைவும் இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

நாம் மூச்சு விடுவது கூட இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

இறைவனுக்காக செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும்

 அது மிகச் சிறியதாக இருந்தாலும் சரி 

மிகப் பெரியதாக இருந்தால் சரி,

 விண்ணகத்தில் சன்மானம் உண்டு.

ஆகவேதான் காலையில் எழுந்தவுடன் 

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் 

அன்றைய நாளின் நமது நடவடிக்கைகளை எல்லாம் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறோம்.

அன்பு புரியும் ஒவ்வொரு செயலின் போதும் இறைவன் நமது ஞாபகத்தில் இருக்க வேண்டும்.

அதாவது ஒவ்வொரு நாளையும் இறைவனுடைய சன்னிதானத்தில் வாழ வேண்டும்.

நமது உலகைச் சார்ந்த செயல்கள் கூட இறைவனுக்காக செய்யப்படும்போது அவை இறைவனைச் சார்ந்த ஆன்மீக செயல்களாக மாறிவிடுகின்றன.


நமது அயலானை நேசிக்க.
 வேண்டும்.

எதற்காக?

நம்மைப் படைத்த அதே தந்தையால் அவனும் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதற்காக மட்டும்.

அதாவது இறைவனுக்காக மட்டும், 
நமது பெற்றோர் உட்பட அனைவரையும் நேசிக்க வேண்டும்.

"உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக."
(மத்.22:37)

என்று இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார்.


அன்பின் நிமித்தம் நமது முழு உள்ளத்தையும், முழு ஆன்மாவையும், முழு மனத்தையும் இறைவனுக்கு கொடுத்து விட வேண்டும்.

நமது முழு அன்பையும் இறைவனுக்குக் கொடுத்து விடுகிறோம்.

 அதன்பின் அவருக்காக அவரது பிள்ளைகளையும் அன்பு செய்கிறோம்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நமது முழு அன்பையும் இறைவனுக்குக் கொடுத்து விட்டோமே. பிறகு, எந்த அன்பை வைத்து நமது அயலாரை அன்பு செய்ய? 

ஒரு சிறிய ஒப்புமை:

வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.

 நம்மிடம் ஒரு குடை இருக்கிறது.

 அதை முழுவதுமாக தந்தையிடம் கொடுத்து விடுகிறோம்.

 அப்புறம் நாமும் நமது உடன் பிறந்தோரும் அந்த குடைக்குள் சென்று விடுகிறோம்.

ஒரே குடைக்குள் குடும்பத்தினர் அனைவரும் சென்று விடுகிறோம்.

அன்பு ஒன்று தான்.

அதை முழுமையாக இறைவனிடம் கொடுத்து விடுகிறோம்.

 அப்புறம் நமது அயலானை அந்த அன்பிற்குள் கொண்டு வந்து விடுகிறோம்.

நமது இறையன்பு வட்டத்திற்குள் தான் பிறரன்பு செயல்படுகிறது.

நமது இறையன்பிற்குள்தான் 
பிறரன்பும் இருக்கிறது.  

இறையன்பை எடுத்து விட்டால் பிறர் அன்பும் இல்லை.

நமது முழுமையான இறையன்பிற்குள் பிறரன்பும் 
வந்துவிடுவதால் 

இறைவனை அன்பு செய்து கொண்டே நமது பிறரையும் அன்பு செய்ய முடிகிறது.

 அதுமட்டுமல்ல பிறருக்கு செய்வதையெல்லாம் இறைவனுக்கே செய்வதாகவும் ஆகிவிடுகிறது.

அதனால் தான் இயேசு 'எனது சகோதரருக்கு நீங்கள் செய்வதையெல்லாம் எனக்கே செய்கிறீர்கள்' என்று கூறுகிறார்.

மேலும் நமது அன்பு முழுவதையும் முழுமனதோடு இறைவனுக்கு கொடுத்துவிட்டதால் நாம் இறைவனையே எல்லாருக்கும் மேலாக அன்பு செய்கிறோம்.

மற்றவர்களை இறைவனுக்காகவே அன்பு செய்கிறோம்.

இறைவனை இறைவன் என்பதற்காக அன்பு செய்கிறோம்.

 மற்றவர்களை இறைவனது பிள்ளைகள் என்பதற்காக மட்டும் அன்பு செய்கிறோம்.

ஆகவே இறைவனைவிட அதிகமாக  வேறு யாரையும்,

 தாயையும், தந்தையையும் கூட,
 அன்பு செய்யவில்லை.

யார் மீது உள்ள அன்பும் இறைவன் மீது உள்ள அன்பிற்கு ஈடாகாது."


"கொஞ்சம் பொறுங்கள். ஒரு சிறு சந்தேகம். 

 இறை நம்பிக்கை இல்லாதவர்கள்கூட மற்றவர்களை நேசிக்கிறார்களே.

மற்றவர்களுக்கு சேவையும் செய்கிறார்களே.
  
அப்போ அது அன்பு இல்லையா?"

",அது உலக அன்பு. இறைவனது சன்மான வட்டத்திற்குள் அது வராது.

அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வங்கியில் செல்லும்.

அரசாங்கத்தால் அச்சடிக்கப்படாத
ரூபாய் நோட்டுகள் வங்கியில் செல்லாது.

அதேபோல்,

இறையன்பிலிருந்து பிறந்த 
பிறரன்பு மட்டுமே விண்ணகத்தில் செல்லும்.

இறையன்போடு சம்பந்தம் இல்லாத அன்பு விண்ணகத்தில் செல்லாது.

விண்ணகம் இறைவனுக்கும், அவரோடு சம்பந்தம் உள்ளவர்களுக்கும் மட்டுமே உரியது.

இறைவனை மறுப்பவர்களுக்கு உரியது அல்ல.

இறைவனை மறுப்பவர்கள் யாருக்கு என்ன சேவை செய்தாலும் அது இறைவனுக்கு செய்யும் சேவை ஆகாது.

வெறும் மனித சேவை மட்டுமே."

"அன்பு ஒரு பண்பு. அதை அளப்பதற்கு நம்மிடம் எந்த அளவுகோலும் இல்லை.

அப்படி இருக்கும்போது மற்றவர்களைவிட இறைவனை அதிகமாக அன்பு செய்கிறோம் என்பதை எப்படி கண்டு கொள்வது?"

",அன்பினை அளக்க இறைவனால் மட்டுமே முடியும். 

ஏனெனில் நாம் அவர் மீது நாம் கொண்டுள்ள அன்பின் அளவிற்கு ஏற்ப நமக்கு சன்மானம் தரப்போகின்றவர் அவரே.

நம்மால் அன்பினைப் பார்க்க முடியாவிட்டாலும்

 யார் மீது நாம் கொண்டுள்ள அன்பு 

யார் மீது நாம் கொண்டுள்ள அன்பை விட 

 அதிகமானது அல்லது குறைவானது என்பதை உணர முடியும்.

உதாரணத்திற்கு,

ஒரு மகன் தன் பெற்றோரை விட்டு விட்டு காதலி பின்னால் ஓட தயாராக இருந்தால் 

அவனது காதலி மேல் கொண்டுள்ள அன்பை விட பெற்றோர் மீது கொண்டுள்ள அன்பு குறைவானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒருவன் தனக்கு தேவ அழைத்தல் இருக்கிறது என்பதை உணர்ந்த பின் 

தனது பெற்றோர் அவனை தடுத்தும் கேட்காமல் அழைத்தலை ஏற்றுக் கொண்டால் அவன் தனது பெற்றோரை விட இறைவனை அதிகம் நேசிக்கிறான்.

ஆனால் பெற்றோர் தடுத்தவுடன்  
தேவ அழைத்தலைக் 
கைவிட்டானென்றால் அவன் கடவுளைவிட பெற்றோரை அதிகம் நேசிக்கிறான்.

வெகுநேரம் தூங்குவதற்காக காலைத் திருப்பலிக்குச் செல்லாவிட்டால் அவன் இறைவனை நேசிப்பதை விட தன்னையே அதிகமாக நேசிக்கிறான்.

இறைவனை எல்லோருக்கும் மேலாக நேசிப்பவன்
இறைவனுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருப்பான்.

வேதசாட்சிகள் தங்கள் உயிரை நேசிப்பதை விட இறைவனை அதிகமாக நேசித்ததால்தான் இறைவனுக்காக தங்கள் உயிரையே தியாகம் செய்தார்கள்.

நாம் உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும், எல்லா மனிதர்களையும் நேசிப்பதை விட தன்னை அதிகம் நேசிக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

ஆகவேதான் என்னைவிடத் தன் தந்தையையோ தாயையோ அதிகம் நேசிக்கிறவன் எனக்கு ஏற்றவன் அல்லன் என்று இயேசு சொல்கிறார்."

''படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவை படைத்தான் தனக்காக."

நாம் வாழ்வதும், நேசிப்பதும் இறைவனுக்காக மட்டுமே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment