Sunday, July 12, 2020

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."(மத்.10:22)

"இறுதிவரை நிலைத்துநிற்கிறவன் மீட்கப்பெறுவான்."
(மத்.10:22)
************************************

"Well Degun is half done."
என்று சொல்வார்கள்.

"நன்கு ஆரம்பித்தால் பாதி வேலை முடிஞ்சது மாதிரி."

மாதிரிதான். நன்கு ஆரம்பித்து, 
'பாதி வேலையை முடித்தாகிவிட்டது' என்று போய்ப் படுத்துக் கொண்டால்,

ஆரம்பமே முடிவாகி விடும்.

எந்த வேலையைச் செய்தாலும் உற்சாகத்துடன் ஆரம்பித்தால் மட்டும் போதாது 

இறுதிவரை அதில் நிலைத்திருக்க வேண்டும்.

Beginning -      important.

perseverance. more important.

achievement -  most important.

நமது ஆன்மீக வாழ்வை ஞான ஸ்நானத்துடன் ஆரம்பிக்கின்றோம்.

ஒவ்வொரு நாளும் வேலையை ஆரம்பிக்கு முன்னால் 

உடலில் உள்ள அழுக்குப் போகும்படி நன்கு தேய்த்து குளிக்கிறோம்.

குளிக்காமல் எங்கும் போனாலும், என்ன வேலை செய்தாலும் உடல் வீச்சம் எடுத்துக் கொண்டிருக்கும்.

ஆகவே உடலை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோம்.

உடலை விட ஆன்மாதான் முக்கியம்.

உடல் மண்ணிலிருந்து வந்தது,
மண்ணுக்குள் போகவேண்ண்டியது.

ஆன்மா விண்ணில் இருந்து வந்தது, விண்ணிற்கே போக வேண்டியது.

மண்ணுக்குள் போகவேண்டிய உடலை அக்கரைவோடு பேணும் நாம் விண்ணிற்கு உரிய ஆன்மாவை

 எவ்வளவு அக்கரைவோடு 
பேணவேண்டும்?

நமது விண்ணகப் பயணம்  பரிசுத்தத்தனத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

பரிசுத்தத்தனத்தோடு நடைபெறவேண்டும்.

பயண இறுதியில் பரிசுத்தரோடு இணைய வேண்டும்.


பயணத்தை இறைவனோடு ஆரம்பிக்கின்றோம்.


இறைவனோடு நடப்பதோடு,

இறைவனோடு விண்ணகத்திற்குள் நுழைகின்றோம்.

இறைவனோடு பயணத்தை ஆரம்பித்த பின்பு அவரோடு சண்டை போட்டுக் கொண்டே நடந்தால்,

அவரோடு விண்ணகத்திற்குள் நுழைவோமா?


இறைவனோடு சண்டை போடுவது என்பது பாவம் செய்வது.

காலையில் குளித்துவிட்டு வேலையின் போது சகதியை அள்ளி நமது மேலே போட்டுக் கொண்டே இருந்தால் வேலை எப்படி நடக்கும்?

ஞானஸ்நானத்தின்போது குருவானவர் ஒரு வெண்ணிற துணியைக் குழந்தையின் மீது போடுவார்.

ஞானஸ்நானத்தில் வெற்ற பரிசுத்தத்தனத்தை 

வாழ்நாள் முழுவதும் பாவ அழுக்குப் படாமல், பத்திரமாகப் பாதுகாத்து வாழ வேண்டும்

 என்பதற்கு அடையாளமாத்தான் வெண்ணிற ஆடை. 

இறை உறவோடு ஆரம்பித்த பயணத்தை

இறை உறவோடே தொடர வேண்டும்.

அப்போதுதான் இறுதியில் இறைவனோடு இணைய முடியும்.

நிலை வாழ்வு பெற வேண்டும் என்றால், 

பரிசுத்தத் தனத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

We must persevere in holiness to enter eternal life with God.

சாத்தானின் சோதனையால் தான் பாவம் நுழைந்தது.

ஆகவே ஞானஸ்நானத்தினால் பாவத்திலிருந்து நமக்கு விடுதலை கிடைப்பதை

 சாத்தானால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது.

ஆகவே அவன்  நம்மைத் திரும்பவும் பாவத்திற்குள் விழுத்தாட்ட  முயற்சி செய்வான்.

 அது அவன் குணம், அதை நம்மால் மாற்ற முடியாது.

 ஆனால் நாம் நம்மை இறைவனது உதவியினால் பாவத்தில் விழாமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

வாழ்நாள் முழுவதுமே நமக்கும் சாத்தானுக்கும் இடையில் சதா போராட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

சாத்தானுடைய சோதனைகள் கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

மனித குலத்தின் முதல் பாவமே 
கவர்ச்சிகரமான பழத்தைச் சாப்பிட்டதினால்தானே வந்தது!

கவர்ச்சி என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அசிங்கமான கவர்ச்சி, சினிமா போஸ்டர்களில் காணப்படுவது போன்ற கவர்ச்சி.

இத்தகைய கவர்ச்சிகளை வெல்வது எளிது, ஏனெனில், அது கவர்ச்சி என்று நமக்குத் தெரியுமாகையால நாம் முன் எச்சரிக்கையாக  அது இருக்கும் இடம் பக்கம் நாம் போகாமலேயே இருந்து கொள்ளலாம்.

இன்னொரு வகைக் கவர்ச்சி இருக்கிறது. அது விலக்கப் பட்ட கவர்ச்சி என்று நமக்குத் தெரியாது.

இங்கு சாத்தான் சம்மனசு வேசம் போட்டுக் கொள்வான். 

 நல்ல நல்ல காரியங்களாகச் செய்யத் தூண்டுவான். 

பிறருக்கு உதவி செய்வது, தர்மம் செய்வது, ஆலயங்கள் கட்ட donations தாராளமாகக் கொடுக்கச் செய்வது...

போன்ற நல்ல காரியங்களைச் செய்யச் சொல்லிவிட்டு,

ஒரு பாராட்டு விழாவிற்கு " ஏற்பாடு செய்வான்.

அங்கு வருபவர்கள் பாராட்டோ பாரட்டென்று பாராட்டுவார்கள்.

அவனைக் கடவுள் லெவலுக்கு உயர்த்தி விடுவார்கள்.

அவ்வளவுதான். சாத்தானுக்குக் கொண்டாட்டம்.

நம்ம ஆளுக்குள் தற்பெருமை (Pride) புகுந்து விடும்.

படைப்பிற்குள் புகுந்த முதல் பாவம்.

லூசிபெரைச் சாத்தானாக்கிய பாவம்.

நம்மாள் செய்த  தருமம் அந்த ஓட்டை வழியே வெளியேறிவிடும்.

நாம் மிருந்த கவனமாக இருக்க வேண்டும்.

எத்தகைய கவர்ச்சியைக் காண்பித்து சாத்தான் நம்மைத் தன் பக்கம் இழுத்தாலும் 

 நமது விழுந்த சுமாவம் (fallen nature) சாத்தான் பக்கம் சாய ஆசிக்கும்.

நாம் கஸ்டப்பட்டாவது இறைவன் பக்கம் திரும்பி சோதனையிலிருந்து தப்பிக்க

 அவருடைய அருளைக் கேட்டு மன்றாட வேண்டும்.

இப்படிப்பட்ட சமயங்களில் இறைவன் தாராளமாக அருள் வரங்களை அள்ளித்தருவார்.

நாம் இறைவன் பக்கம் திரும்பும் போதே சாத்தான் Side weak ஆகிவிடும்.

நாம் நமது செபத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

We must persevere in our prayer.

இதற்காகத்தான் கர்த்தர் கற்பித்த செபத்தில் உள்ள ஏழு மன்றாட்டுக்களில்

ஆண்டவர், தனக்கென மூன்று மன்றாட்டுக்களையும்,

நமது பாவம் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களுக்காக மூன்று மன்றாட்டுக்களையும் ஒதுக்கியுள்ளார். 

இதனால் பாவத்தை விலக்குவதும், அதிலிருந்து விடுதலை பெறுவதும் எவ்வளவு முக்கியம் என்று நமக்கு உணர்த்துகிறார்.

"எங்களைச்  சோதனையில் விழ விடாதேயும்."

"எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்தருளும்."

இதிலிருந்து நாம் பாவத்தில்  விழாமல்  பாதுகாப்பதற்கு இயேசுவுக்கு எவ்வளவு ஆர்வம் என்பது தெரிகிறது.

இந்த மன்றாட்டைச் சரியாகச் செய்யாமல் நாம் பாவம் செய்ய நேரிட்டால் 

அவரிடம் மன்னிப்புக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அவரிடம் மன்னிப்புக் கேட்கும் முன், நமது அயலானோடும் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

ஆக, இறையன்பும், பிறரன்பும் கைகோர்த்து நம்மை விண்ணகப் பாதையில் வழிநடத்த வேண்டுமென்பதையும்,

பாவம் இல்லாமல் இருந்தால்தான் நம்மால் இறைவனை மகிமைப் படுத்த முடியும் என்பதையும் 

இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

நமது தேவைகளுக்கு ஒரே ஒரு 
மன்றாட்டை ஒதுக்கியதன் மூலம்,

"மகனே, பாவத்தை விலக்கி, என்னோடு ஐக்கியமாய் இரு, 

உன் தேவைகளைப் பற்றி நீ அதிகம் கவலைப்படவேண்டாம்,

நீ என் பிள்ளை, உனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியாதா?

உனக்கு நானும் உன் அயலானும் முக்கியம்,

எனக்கு நீ முக்கியம்."

என்று இறைவன் நம் ஒவ்வொருவரையும் நோக்கிக் கூறுகிறார்.


கர்த்தர் கற்பித்த செபத்தைத் தியான உணர்வோடு,

 பக்தியோடு அடிக்கடி சொன்னாலே 

சோதனைகளை வெல்ல தேவைக்கு அதிகமான அருள்  வரம் கிடைக்கும்.

பாவங்களிலிருந்து மனிதரை மீட்கவே இயேசு மனிதனாகி, பாடுகள் பட்டு, சிலுவையில் மரணத்தைத் தழுவினார்.

ஆகவேதான் மாந்தரைப் பாவம் செய்யாமல் காப்பதிலும் அதிக ஆர்வமாய் இருக்கிறார்.

பாவங்களுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெல்ல வரம் தந்து உதவுகிறார். 

உள்ளார்ந்த விதமாக ஆன்மா சநதிக்கும் இப்போராட்டங்களைப்
போல வேறு இரண்டு வகைப் போராட்டங்களும் உண்டு.

இவை வெளியிலிருந்து வரும் போரட்டங்கள்..

சில நோய் நொடி வடிவில் வரும்.

சில நமது  அயலான் தரும் துன்பங்கள் வடிவில் வரும். 

சில வெளியுலக  சமூக வாழ்விலிருந்து வரும்.

இவை நேரடியாக நமது ஆன்மாவைப் பாவத்தில் விழ வைத்து நம்மை இறை உறவிலிருந்து பிரிக்காது.

ஆனால் நமது ஆன்மீக வாழ்வின் ஆர்வத்தைக் குறைக்கும்.  

பிறரிடமிருந்து துன்பம் வந்தால், பிறர் அன்பு குறையும்.

சிலருடைய விசுவாசத்தைக்கூட அசைத்துப் பார்க்கும்.

 அன்புள்ள கடவுள் துன்பங்களை ஏன் அனுமதிக்கிறார் என்று
 நினைக்கத் தூண்டும்.

இதனால் இறையன்பும் குறையும்.

செபம் சொல்லியும் துன்பங்கள் குறையாவிட்டால் செபத்திலும் ஆர்வம் குறையும்.


இத்தகைய உணர்வுகள் நமக்குப் போதிய விசுவாசம் இன்மையால் ஏற்படுகின்றன.

நமது விசுவாசம் ஆழமாக இருந்தால், 

அதாவது, 

கடவுள் நமது நல்ல தந்தை,

அவர் தனது அன்பின் காரணமாக, 

அவரோடு நித்திய காலம் பேரின்பமாக நாம் வாழ வேண்டும் 

என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நம்மைப் படைத்தார், 

நமக்கு என்ன நடந்தாலும் அது அவரது சித்தப்படி தான் நடக்கும்,

 அவர் நமக்கு அனுமதிக்கும் ஒவ்வொரு நிகழ்வும் நமது நிலை வாழ்வை நோக்கியே நடத்திச் செல்கிறது

என்று உறுதியாக நம்பினால்

எதுவும் தமக்குத் துன்பமாகத் தோன்றாது.

மாறாக,

இறைவனின் அருள் வரங்களை  அள்ளித் தந்து,

 நமக்கு மீட்பையும் பெற்றுத் தரும் இயேசு சுமந்த அதே சிலுவையாகத் தோன்றும்.


இயேசு தனது சிலுவையை அன்புடன் ஏற்றுக் கொண்டது போல 

நாமும் நமக்கு வரும் சிலுவையை நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்.

உடலில் தோன்றும் ஒவ்வொரு வலியும் நமக்கு இறையருள் சுரக்கும் ஊற்றாக மாறும்.

அயலானால் ஏற்படும் துன்பங்கள் நமது பிறரன்பை அதிகப்படுத்தும்.

பகைவனை நேசிக்கவும், தீங்கு செய்பவருக்கு நன்மை செய்யவும் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி கூறுவோம்.

எத்தகைய துன்பம் எங்கிருந்து வந்தாலும் நாம் நமது விசுவாச வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்.

இயேசுவின் சீடர்கள் அவரது நற்செய்தியை உலகிற்கு அறிவித்தபோது அவர்கள் சிந்திய இரத்தம்தான்

எத்தகைய எதிர்ப்புகளுக்கு 
இடையேயும் இவ்வளவு காலமாக திருச்சபையை வளர்த்து வருகிறது.

அதேபோல நமக்கு ஏற்படும் துன்பங்களை ஆண்டவருக்காக நன்றியுடன் ஏற்றுக்கொண்டால்

 நாமும் அருள்வாழ்வில் வளர்வோம்,

 நமது திருச்சபையும் வளரும்.

இறைவன் அருளோடு இறுதி வரை இறையன்பில் நிலைத்திருப்போம்.

இறுதியில்லா வாழ்வை இறைவன் நமக்கு அருள்வார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment