Friday, July 31, 2020

"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத்.13:58)

"அவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை." (மத்.13:58)
**************************************

நடந்த நிகழ்ச்சி:

ஒரு முறை வங்கியில் பணம் எடுக்கச் சென்றவன், Withdrawl Slip ஐ நிரப்பிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, benchல் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு இளைஞர் என்னிடம் வந்து, நிரப்பப்படாத ஒரு Withdrawl Slip ஐக் கொடுத்து,

"சார், பணம் எடுக்க வேண்டும். கொஞ்சம் நிரப்பிக் கொடுங்களேன்."

"உட்காருங்கள். எவ்வளவு எடுக்க வேண்டும்?*

"பத்தாயிரம்."

கையில் பேனாவை எடுத்துக் கொண்டு,

* Account number சொல்லுங்க."

"தெரியாது. நான் பள்ளியில் படிக்க வில்லை."

"Bank passbook ஐ கொடுங்க."

"என்னிடம் இல்லை."

"passbook இருந்தால்தான் நம்பர் எழுத முடியும்."

"அப்படீன்னா என்ன சார்?"

"உங்களுக்கு இந்த Bank ல Account இருக்கா?"

"அப்படீன்னா?"

"நீங்க இந்த Bank ல பணம் போட்டிருக்கீங்களா? அதாவது,
இந்த Bank ல உங்க பணம் இருக்கா?"

"இல்ல சார்."

"உங்களுக்கு Bank ல Account ம் இருந்து அதில் பணமும் இருந்தால்தான் எடுக்க முடியும்."

"அப்படியா, சார். எல்லாரும் பணம் வாங்கறாங்களே, நாமும் வாங்கலாம்னு பார்த்தேன்."

அந்த இளைஞர் கொஞ்ச நேரம் நின்று விட்டு, பிறகு போய்விட்டார்.

நாமும் இதே மாதிரிதான் சில சமயங்களில் நடந்து கொள்கிறோம்.

கடவுளிடம் Account ஏதும் திறக்காமலேயே எதையாவது கேட்போம்,

கேட்டது கிடைக்காவிட்டால்,
"கடவுளுக்கு என்மேல் இரக்கமே இல்லை.. நான் என்ன கேட்டாலும் தரவே மாட்டேங்கிறார்." என்று அவரைக் குறை சொல்வோம்.

நாம் கேளாமலேயே கடவுள் நம்மைப் படைத்து விட்டார்.
நாம் கேளாமலேயே நம்மைப் பராமரித்து வருகிறார்.

ஆனால் நாம் நம்மைப் படைத்தவரைப் பற்றி கவலைப் படாமல்,

அவர் தந்த  திறமைகளை
நம்முடையவை என நினைத்துக் கொண்டு வாழ்கிறோம்.

எப்போதாவது நமது  திறமைகளால் முடியாவிட்டால், அப்போதுதான் கடவுள் ஞாபகம் வருகிறது.

வேண்டியதைக் கேட்கிறோம்.

நாம் கேட்பது கிடைப்பதற்கு நமக்கு  கடவுள் மேல்

விசுவாசம் இருக்க வேண்டும்.

நம்பிக்கை இருக்க வேண்டும்.

பக்தி இருக்க வேண்டும்.

இந்த மூன்றும் நம்மிடம் வர வேண்டும் என்பதற்காகவே, அவை நம்மிடம் வருமட்டும் கடவுள் நமது வேண்டுதலைக் கேளாதது மாதிரி இருப்பார்.

முதலில் நாம் கடவுளிடம்
நமக்கு விசுவாசம், நம்பிக்கை, பக்தி
ஆகியவற்றைத் தரும்படி கேட்க வேண்டும்.

அவற்றைத் தந்த பின்  மற்றவற்றைக் கேட்க வேண்டும்.

இயேசு தனது பொதுப்பணியை ஆரம்பித்த பின்

அவரைப்பற்றிய பேச்சு சீரியாநாடு முழுவதும் பரவியது.

பல்வேறு நோய் நோக்காட்டினால் வருந்தும் பிணியாளர் அனைவரையும்,

பேய்பிடித்தோரையும் பைத்தியக்காரரையும் திமிர்வாதக்காரரையும் அவரிடம் கொண்டுவந்தனர்.

அவர் அவர்களைக் குணப்படுத்தினார்.

கலிலேயா, தெக்கப்போலி, யெருசலேம், யூதேயா, யோர்தானுக்கு அக்கரைப் பகுதியாகிய இடங்களிலிருந்து, மக்கள் கூட்டங் கூட்டமாய் அவரைப் பின்தொடர்ந்தனர்.

ஆனால் அவர் சொந்த ஊருக்கு
வந்தபோது

அங்கு உள்ளவர்களிடம் விசுவாசமில்லாமையால் அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

மற்ற இடங்களில் புதுமைகள் செய்து ஏராளமான நோயாளிகளைக் குணமாக்கியர்,
அதை அந்த அளவுக்கு ஏன் சொந்த ஊரில் செய்யவில்லை?

ஏனெனில் அவர்கள் இயேசுவைத்
தச்சனின் மகனாகவும், மரியாளின் மகனாகவும்தான் பார்த்தார்களேயொழிய,

இறைமகனாகப் பார்க்கவில்லை.

அவர்களிடம் விசுவாசம் இல்லை. ஆகவே இயேசு அவர்களிடம்    புதுமைகள் செய்யவில்லை.

எங்கிருந்தோ ஒரு குரல் வருகிறது,

நம்மிடம் விசுவாசம் இருக்கிறதே, நாம் கேட்பதும் சில சமயங்களில் கிடைப்பதில்லையே, ஏன்?

ஒரு பிச்சைக்காரன் கேட்டான்,

"இந்த லாட்ஜ் இவ்வளவு பெரியதாக இருக்கிறதே, இங்கே யார்
தங்குவார்கள்?"

"இது பணக்காரர்கள் தங்குமிடம்."

"பணக்காரர்கள்னா"

"பணம் வைத்திரும்பவர்கள்."

அதைக் கேட்டவுடன் அவன்
லாட்ஜ்குச் சென்று,

Receptionist டிடம்,

"சார், ஒரு ரூம் வேண்டும்,"

"உனக்கா?"

"ஆமா."

"பணம் இருக்கா?"

"இருக்கு, சார், இன்றைக்குப் பிரிந்த 100 ரூபாய் இருக்கு, சார்."

"ரூம் வாடகை ஒரு நாளைக்கு ஏழாயிரம்  ரூபாய்."

"ஏழாயிரமா? பணம் வைத்திருப்பவர்கள் தங்கலாம்னு சொன்னாங்க. 100 ரூபாய் பணம் இல்லையா?"

"பணம்தான். 10 பைசாவும் பணம் தான். அது எதுக்காகும்?"

அந்த ஆளிடம் இருந்த பணத்தின் அளவுக்கும்,

நம்மிடம் இருக்கும் விசுவாசத்தின் அளவுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

நம்மிடம் என்று சொல்லும்போது எல்லோரையும் சொல்லவில்லை.

நம்மிடம் ஆழமான விசுவாசம் உள்ள ஆட்களும் இருக்கிறார்கள்.

ஆழமான விசுவாசம் கடவுள் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதோடு,

அவரே நமக்கு எல்லாம்,

நாம் முழுவதும் அவருக்கே என்று முழுமையாக ஏற்றுக் கொள்ளும்.

நமக்கு ஆழமான விசுவாசம் இருந்தால்

கடவுளுக்காக நமது உடல், பொருள், ஆவி, உடமைகள், உலகம், சொந்தங்கள் எல்லாவற்றையும்

இழக்கத் தயாராக இருப்போம்.
(சொல்லளவில் மட்டும் அல்ல, செயலளவிலும்)

நமக்கு ஆழமான விசுவாசம் இருந்தால்

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் கடவுளே திட்டமிட்டு செயல்படுத்துகிறார் என்றும்,

நமது வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் நமது ஆன்மீக நலனுக்காகவே நடைபெறுகிறது எனவும் ஏற்றுக்கொள்வோம்.

நமக்கு என்ன நடந்தாலும், அது கடவுளாலேயே நடைபெறுகிறது என்பதால் அதை முழு மனதோடு நன்றியுடன் ஏற்றுக் கொள்வோம்.

நமக்கு வியாதியோ, வருத்தமோ எது வந்தாலும் நாம் அஞ்சமாட்டோம், ஏனெனில்  நம்மைப் படைத்த கடவுள் நம்முடனேதான்  இருக்கிறார்.

இந்த அஞ்சாமையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எப்போதும் கடவுள் கையில் இருக்கிறோம். கடவுள் நித்தியர். ஆகவே நித்திய காலமும் அவர் கையில்தான் இருப்போம்.

எதுவும் நம்மை இயேசுவிடமிருந்து பிரிக்க முடியாது.

"ஏனெனில்,

சாவோ, வாழ்வோ,

வானதூதரோ தலைமை ஏற்பவரோ,

நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ,


39 வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ,

வேறெந்தப் படைப்புப் பொருளோ,

நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்து

நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு."


(உரோமை .8:38, 39)

இந்த வேதவாக்கின்படி

"சாவோ, வாழ்வோ நம்மை இயேசுவிலிருந்து பிரிக்க முடியாது."

இருந்தாலும், இறந்தாலும் நாம் இயேசுவின் கையில்தான் இருப்போம்.

நம்மை இயேசுவின் கையிலிருந்து பிரிக்க முடியாத நோயைக் கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும்?

இந்த அளவுக்கு நமது விசுவாசம் இருந்தால் நமது நம்பிக்கையும் ஆழமாகத்தான் இருக்கும்.

ஏனெனில் விசுவாசத்திடமிருந்து பிறப்பதுதான் நம்பிக்கை.

நமது செபத்துக்கு விசுவாசம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு நம்பிக்கையும் முக்கியம்.

முழுமையான விசுவாசி ஆண்டவரிடம் ஏதாவது விண்ணப்பம் வைக்கும்போது,

நாம் கேட்பது நமது விண்ணகப் பயணத்தில் நமக்கு உதவியாக இருக்குமானால்

கடவுள் கட்டாயமாகத் தருவார் என்று
உறுதியாக நம்புவான்.

தான் கேட்பது தரப்படாவிட்டால் தான் கேட்டது தனக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதை முழு மனதோடு ஏற்றுக் கொள்வான்.

இததகைய விசுவாசமும், நம்பிக்கையும் உள்ளவனிடம் உள்ள இறையன்பும் மிக ஆழமாக இருக்கும்.

எப்போவோ வாசித்தது, இதைச் சொன்ன புனிதர் பெயர்
ஞாபகமில்லை.

அவர் தனது செபத்தில்,

"ஆண்டவரே,

நீர் என் கடவுள் என்பதற்காக மட்டும் உம்மை அன்பு செய்கிறேன்.

பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செய்கிறேன்.

நித்திய காலமும் உமது திருமுக தரிசனத்தை எனக்குத் தராவிட்டாலும்,

உம்மை அன்பு செய்துகொண்டுதான்
இருப்பேன்."

இந்த அன்புக்குப் பெயர்தான்

"நிபந்தனை அற்ற அன்பு."
(unconditional love)

ஆனால் இயேசு இத்தகைய அன்புக்கு நித்திய பேரின்பத்தைப் பரிசாக அளிப்பார்.

புனித பிரான்சீஸ் அசிசியாரது அன்புக்குப் பரிசாக இயேசு தனது ஐந்து காயங்களையே கொடுத்தார்.

அதாவது தான் அனுபவித்த வேதனையைத் தன் பக்தனோடு பகிர்ந்து கொண்டார்.

அன்பிற்காக வேதனையையும் உளமாற ஏற்றுக் கொள்ளும்
அன்புதான் உண்மையான அன்பு, கிறிஸ்தவ அன்பு.

நம்மேல் கொண்ட அன்பின் காரணமாக இயேசு எவ்வளவு வேதனைகளை ஏற்றுக் கொண்டார் என்று நமக்குத் தெரியும்.

ஆண்டவரின் வேதனையில் பங்கு பெறுபவன், அவரது நித்திய பேரின்பத்திலும் பங்கு பெறுவான்.

இயேசுவின் சொந்த ஊர்க்காரர்களிடம் விசுவாசமில்லாமையால்

அவர் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

நாம் புதுமைகளை எதிர்பார்த்து அல்ல, இயேசு நம் ஆண்டவர் என்பதற்காக அவரை அன்பு செய்வோம்.

அவரது அன்புக் கரங்களில் பத்திரமாக இருப்போம்.

லூர்து செல்வம்.



Thursday, July 30, 2020

"மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்." (மத்.13:47)

"மேலும் விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லாவகை மீன்களையும் வாரிவரும் வலைக்கு ஒப்பாகும்." (மத்.13:47) 
**************************************

இயேசு விண்ணரசை மீன்பிடிப்பதற்காகக் கடலில் வீசப்படும் வலைக்கு ஒப்பிடுகிறார்.

மீனவர்களின் நிரந்தர வேலையே மீன் பிடிப்பதுதான்.

அவர்களுடைய வாழ்க்கை ஆதாரமே அது தான்.

மீன்பிடிக்க வலையை வீசும்போது
எவ்வளவு மீன்கள் அகப்படும், நிறையவா அல்லது குறையவா என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாது.

வலை கிழியக் கூடிய அளவுக்கு அதிகமும் அகப்படலாம்,

ஒரு மீன் கூட அகப்படாமலும் போகலாம்.

அகப்பட்ட மீக்களைக்  கரைக்குக் கொண்டுபோகும்போதுதான் 
மீன்களின் அளவும், தன்மையும் தெரியும்.

சிறிய மீன்களும் இருக்கலாம், பெரிய மீன்களும் இருக்கலாம், சாப்பிடக் கூடாதவையும் இருக்கலாம்.

நல்ல மீன்களை மட்டும் பிரித்து எடுத்து வியாபாரத்துக்க்குக் கொண்டு போவார்கள்.

ஆகாதவற்றைத் தூரக் கொட்டிவிடுவார்கள்.

இந்த உவமானப்படி, விண்ணரசின் அரசராகிய  இயேசுவே. மூன்று ஆண்டுகள் வலையை வீசிக்கொண்டுதான் இருந்தார்.

பலவகை மீன்கள் நிறைய அகப்பட்டன.

இராயப்பர் போன்ற நல்ல மீன்களும் அகப்பட்டன, யூதாஸ்
 போன்ற மோசமான மீன்களும்கூட அகப்பட்டன.

ஆனாலும் யூதாஸை மோசமான மீன் என்று அழைக்க நமக்கு உரிமை இல்லை.

ஏனெனில் காட்டிக் கொடுத்த அவனை இயேசுவே, "நண்பனே" என்றுதான் அழைத்தார்.

அவனையும் இயேசு அவ்வளவு நேசித்தார்

இயேசுவால் யாரையும் வெறுக்க முடியாது.

By nature, Love Cannot hate!

இயேசு வீசியது அன்புவலை.

சாதாரணமாக உலக மீனவர்கள் தேடுவது வியாபாரத்துக்கு ஏற்ற நல்ல மீன்களைத்தான். 

ஆகாத மீன்களை கஸ்டப்பட்டு இழுத்து வந்து தூரப் போடவேண்டியிருக்கும்.

அதற்காக நல்ல மீன்கள் அகப்படும் இடத்தைத்தான் தேடிப்போவார்கள்.

நமது ஆன்மீக மீனவராகிய இயேசு வித்தியாசமானவர்.

அவர் பாவி மீன்களைத்தான் தேடிப்போவார்.

பாவிகளைத் தேடிப் பிடித்து அவர்களின் பாவங்களை மன்னித்து பரிசுத்தமாக்குவார்.

"மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது"
(மத் 4:17)

மத்தேயுவின் நற்செய்திட்படி இயேசு 
"மனந்திரும்புங்கள்" என்ற வார்த்தையுடன்தான் நற்செய்தியை  அறிவிக்கத் தொடங்குகிறார்.

அதாவது, பணி வாழ்வில் இயேசுவின் வாயிலிருந்து வந்த முதல் முதல் இறைவார்த்தை,

"மனந்திரும்புங்கள்" என்பது தான்.

மனந்திரும்பவேண்டியது பாவிகள் தானே!

"நீதிமான்களை அன்று, மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" 
(லூக்.5:32)

அவரது மீனவ சாம்ராஜ்யத்தின் குடிமக்களாய நாமும் மீனவர்கள்தான்.

ஆன்மீக ரீதியாக நமது வாழ்க்கையே அன்பு வலை வீசி மனித மீன்களை நமது அரசருக்காகப் பிடிப்பதுதான்.

வலை வீசுவது எப்படி?

எல்லா விசயத்திலும்  நமது ஆண்டவர்தான் நமது முன்மாதிரிகை.

அவர் செய்தது போல் நாமும் செய்தால் போதும்.

அவர் வாழ்ந்து காட்டினார். அவர் போதிப்பதைக் கேட்டவர்கள் அவரது வார்த்தைகளைக் கேட்டது மட்டுமல்ல, அவரது வாழ்க்கையைக் கண்கூடாகப் பார்த்தார்கள்.

அவரது போதனையும் வார்த்தையும் ஒத்துப் போனது.

நம்மில் சிலரைப் போல அரண்மனை போல வீட்டில் சகல வசதிகளையும் அனுபவித்துக் கொண்டு,

வெளியே போய்  ''எளிய மனத்தோர் பேறு பெற்றோர்" என்று போதிக்க வில்லை.

அவரே ஏழையாக வாழ்ந்தார், போதித்தார்.

யாரையாவது பழி வாங்கிவிட்டு மன்னிப்புப் பற்றி பேசவில்லை.

எவ்வளவு பெரிய பாவியையும்,
"உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன, சமாதானமாய்ப் போ" என்று சொல்லி அனுப்பினார்.

சுகமில்லாமல் தேடிவந்தவர்களுக்கும் பாவமன்னிப்பு கொடுத்து விட்டு, அப்புறம் வியாதியைக் குணமாக்கினார்.

இறுதி வேளையில் சிலுவையில் தொங்கும் போது தன்னைப் பாடுபடுத்தி கொன்றவர்களையே மன்னித்தார்.

நாமும் கிறிஸ்தவ பண்புகளுடன் வாழ்வதுதான் மிகப் பெரிய வலை.

அதோடு வாய்மொழியாக நற்செய்தியை அறிவிப்பதோடு, நமது நற்செயல்களால் வலையை விரித்து வீச வேண்டும்.

மீன்கள் நம்மைப் பார்த்துதான் வலைக்குள் வரும்.

இந்த உவமைப்படி நமது வலைக்குள் அகப்பபடும் மீன்கள் நல்லவையா, கெட்டவையா என்று நினைப்பதோ, தீர்மானிப்பதோ நமது வேலை இல்லை.

பிடித்து இயேசுவிடம் ஒப்படைப்பது மட்டுமே நமது பொறுப்பு.

இறையரசை பரப்புவது நமது பணி.
இறையரசை ஏற்றுக்கொள்பவர்கள்

 இயேசுவைக் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள்.

யாரையும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று கூற நமக்கு உரிமை இல்லை.

யாருடைய உள்ளமும் நமக்குத் தெரியாது.

இயேசுவுக்கு எல்லாம் தெரியும்.



இயேசுவின் போதனையைக் கேட்டவர்களில் பல தரப்பட்ட மக்கள் இருந்திருப்பார்கள் - 

பயிர்த்தொழில் புரிவோர், ஆடு மேய்ப்போர், மீன்பிடிப்போர் etc. போன்றோர்.

எல்லா மக்களுடைய வாழ்க்கையிலிருந்தும் உவமைகள் எடுத்திருப்பார்.

எல்லா உவமைகளும் அவர் எந்த நோக்கத்திற்காக மனுவுரு எடுத்தாரோ அதை மையமாகக் கொண்டிருக்கும்.  

மனிதனைப் பாவத்திலிருந்து மீட்டு, விண்ணகம் அழைத்துச் செல்வது தான் அவர் மனுவுரு எடுத்ததன்  நோக்கம்.

வலைவீசி மீன்பிடிக்கும் உவமையின் இறுதியில்

 வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, 

கரையில் அமர்ந்து, 

நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு

 தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.

இவ்வாறே உலகமுடிவிலும் நடக்கும். வானதூதர் சென்று

 தீயோரை நீதிமான்களிடையே இருந்து பிரித்து,

 தீச்சூளையில் தள்ளுவர்.. அங்கே புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்" என்றார்.
என்று இயேசு கூறுகிறார்.

இயேசுவின் பண்புகளை வைத்துதான் அவரது வார்த்தைகளுக்குப் பொருள் காண வேண்டும்.

ஒரு ஆசிரியர் மாணவர்களிடம்,

"நடக்கவிருக்கும் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்குத் தண்டனை கிடைக்கும்" என்று சொன்னால்.

அதன் பொருள்,"நன்கு படித்து, நன்கு தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண் பெறுங்கள் என்பதுதான்.

அதை மீறி நன்கு படியாதவர்களுக்கு  ஆசிரியர் தண்டனை கொடுக்கத் தேவை இல்லை. அவர்கள் தேர்வில் fail ஆவதே அவர்களுக்கு அவர்களாகவே தேடிக்கொண்ட தண்டனை.

இயேசு மனிதர்களிடம் பேசும்போது மனித அனுபவங்களை மையமாக வைத்தே பேசுவார்.

அப்போதுதான் அவர்களுக்குப் புரியும்.

மனித அனுபவத்தில் எந்தக் குற்றவாளியாவது, நீதிபதியிடம் சென்று, "நான் குற்றவாளி, நானாக ஜெயிலுக்குப் போகிறேன்." என்று சொல்லி விட்டுப் போவானா?

நீதிபதிதான் தீர்ப்பிடுகிறார்.

உலக அனுபவப்படி சொன்னால்தான் மக்களுக்குப் புரியும்.

ஆகவேதான்

"தீச்சூளையில் தள்ளுவர்." என்று இயேசு சொல்கிறார்.

உண்மையில் "தீர்ப்பிட அல்ல, 
மீட்கவே வந்த இயேசு" யாரையும் தீர்ப்பிடமாட்டார்.

பாவம் செய்தவர்கள்  தங்களுக்குத் தாங்களே தீர்ப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இறந்த நொடியிலேயே 

ஆண்டவரோடு  அவரது அன்பில் பயணித்த ஆன்மா விண்ணகம் சென்று அவரோடு இணைந்துவிடும்.

ஆண்டவரை வேண்டாமென்று சாத்தானோடு பயணித்த ஆன்மா யாரும் தள்ளாமலேயே அதுவாகவே நரகத்திற்குச் சென்றுவிடும்.

ஆண்டவர் எந்த ஆன்மாவையும் வேண்டாமென்று சொல்ல மாட்டார்.

கெட்ட  ஆன்மாதான் ஆண்டவரை வேண்டாமென்று கூறிச் சென்று விடுகிறது.

உலக முடிவில் இறுதி நாளிலும் இதுதான் நடக்கும்.

கடவுளை இழப்பதால் கிடைக்கும் வேதனை மிகப் பெரிது. அதை அனுவவிக்கும்போதுதான் தெரியும்.

கடவுளை அடைபவர்கள் அனுபவிக்க விருக்கும் பேரின்பத்தின் அளவு அனுபவிக்கும்போது தான் தெரியும்.

அன்பு  வலை விரிப்போம்.

ஆள் பிடிப்வோம்.

ஆண்டவரின் அரசை அகலப்படுத்துவோம்.

மோட்ச பேரின்பத்தின் அளவைக் கூட்டுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, July 29, 2020

"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன்." (அரு. 11:15)

"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன்." (அரு. 11:15)
**************************************

நான் ஆசிரியர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்:

எங்கள் தலைமை ஆசிரியர் சுவாமியவர்கள், 

எங்கள் psychology ஆசிரியரும் அவர்தான்,

"நாளை உங்களுக்கு outing. எங்கே வேண்டுமென்றாலும் போகலாம். காலை உணவு உண்டபின் போகலாம். சாயங்காலம் 5 மணிக்கு Hostel ல் இருக்க வேண்டும். Attendance எடுக்கப்படும்." என்றார்.

எல்லா மாணவர்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.

காலை உணவு முடிந்தவுடன் எல்லோருக்கும் மதிய உணவிற்கான பொட்டலம் கொடுக்கப்பட்டது.

எல்லா மாணவர்களும் நல்லா dress பண்ணிக் கொண்டு, தனித்தனியாகவோ, group group ஆகவோ, அவரவர் திட்டப்படி புறப்பட்டோம்.

Gate ல் H.M சுவாமி நின்று கொண்டிருந்தார்கள். எல்லோரையும் Gate ல் நிறுத்தினார்கள்.

ஏதோ புதிதாக  Instruction தரப்போகிறார்கள்போல் என்று எண்ணிக்கொண்டு எல்லோரும் நின்றோம்.

சுவாமியவர்கள் இரண்டே வார்த்தைகள்தான் சொன்னார்.

Outing Cancelled!

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தோம். ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு வித உணர்ச்சி.

அமைதியாகத் திரும்பினோம்.

மறுநாள் psychology வகுப்பின் போது சுவாமியவர்கள் கேட்டார்கள்,

"நேற்று outing Cancelled பற்றி என்ன நினைக்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள்.

நான் சொன்னேன்:

"outing அறிவித்தவர்களுக்கு Cancel செய்யவும் உரிமை இருக்கிறது.
நாங்கள் மாணவர்கள். கீழ்ப்படிய கடமை இருக்கிறது." என்றேன்.

எல்லோருடைய பதில்களையும் இரசித்த சுவாமியவர்கள்,

"எதிர் பாராத நிகழ்வுகளுக்கு நீங்கள் எப்படி react பண்ணுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே
Cancel செய்வதற்கென்றே outing ஏற்பாடு செய்தேன். கவலைப்பட வேண்டாம். அடுத்த வாரம் இதே நாள் outing, 
Cancel செய்யமாட்டேன்."

சுவாமியவர்கள் சொன்னதை மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

ஒரு பையன் மட்டும் சொன்னான்,

"கடவுள் திட்டம் எப்படியோ!"

ஒரு முறை ஒரு பிறவிக் குருடன் பற்றி சீடர்கள்

"இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? 

இவன் செய்த பாவமா? 

இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று  அவரை வினவினர்.

 இயேசு,

 "இவன் செய்த பாவமும் அன்று,

 இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. 

கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.''

இயேசு அவனைக் குணப்படுத்தினால் இயேசுவின் மாட்சி அவனில் வெளிப்படும்.

இயேசு கடவுள் என்ற உண்மையும் வெளிப்படும்.

அதற்காகவே அவர் திட்டப்படிதான் அவன் குருடனாகப் பிறந்தான்.

பிரபஞ்சத்தில் நடைபெறும் எல்லா செயல்களும், பாவம் தவிர, இறைவன் திட்டப்படியே நடக்கின்றன.

கடவுளுடைய திட்டத்தில் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் உண்டு.

இலாசர் நோயுற்றிருந்தான். அவன் இயேசுவின் மேல் மிகுந்த பக்தி உள்ளவன். 

நோயுற்றிருந்த விபரத்தை அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி,

 "ஆண்டவரே, இதோ! நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்"

 என்று தெரிவித்தார்கள்.

ஆனால் இயேசு அவனைக் குணமாக்கவில்லை.

இயேசுவோ,

"இப்பிணி சாவில்வந்து முடியாது,

 கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று: 

இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது"

 என்றார்.

இயேசுவுக்குத் தெரியும் இலாசர் இறந்து விடுவான் என்று.

அவரின் திட்டமே அது தானே.

ஆனால் அவர், " இப்பிணி சாவில்வந்து முடியாது"

ஏன் அப்படிச் சொன்னார்?

இலாசர் சுகமில்லாதிருக்க வேண்டும்,

அவன் சாக வேண்டும்.

இயேசு அவனை உயிர்ப்பிக்க வேண்டும்.

இது அவருடைய நித்திய காலத் திட்டம்.

ஆகவேதான்

"சாவில்வந்து முடியாது" என்றார், 

   சாவுக்குப் பின்னும் தொடர வேண்டிய நிகழ்ச்சி உள்ளது என்பதை உணர்த்தவே இவ்வாறு சொன்னார்.

இரண்டு நாள் கழித்துதான் இலாசரைப் பார்க்கப் புறப்படுகிறார்.

அப்போதும்

"நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்"

என்றுதான் சொல்கிறார்.

 இறந்தவனைத் 'தூங்குகிறான்' என்றார்.

"இயேசு அழுதார் என்று பைபிளில் இருக்கிறது, சிரித்தார்  என்று இல்லை" என்பார்கள்.


ஆனால் 'இறந்தவனைத்' 'தூங்குகிறான்' என்று அவர் சொல்வதில் அவருடைய நகைச் சுவை உணர்வு தெரிகிறது!


அடுத்து,


"உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, 

நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். 

வாருங்கள், அவனிடம் செல்வோம்" 

என்று தெளிவாகச் சொன்னார்.

இயேசு தெளிவாகச் சொல்கிறார்,


"நான் அங்கு இல்லாமற்போனது

உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டே!"

இப்போது கடவுளின் திட்டம் தெளிவாகத் தெரிகிறது .

கடவுள் என்ன செய்தாலும்  அது நமக்கு விசுவாசத்தைத் தரும் பொருட்டும்,

நமது விசுவாசத்தை ஆழப்படுத்துவதற்காகவும்தான் என்று.

இலாசருடைய மரணத்திலிருந்தும், உயிர் பெற்றதிலிருந்தும் இயேசு தான் சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று  தெளிவு படுத்தியிருக்கிறார்.

அதே சமயம் இயேசு கல்லறையை நெருங்கும்போது

'மனம் குமுறிக் கலங்கி   கண்ணீர் விட்டு' அழுதது

அவர் மெய்யாகவே மனிதனாகவும் இருக்கிறார்  என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 

The Lazer incident proves that Jesus is fully God and fully Man.

இலாசருடைய வாழ்க்கையில் மட்டுமல்ல, 

 நமது  வாழ்க்கையிலும் இறைவனின் திட்டம் செயலில் இருப்பதை அறியலாம்.

நமது வாழ்க்கையில்  நாம் ஒரு திட்டம் போட்டு அது நடக்காவிட்டால் அதற்காக வருத்தப்படக்கூடாது.

இறைவன் நமது நன்மையை மையமாக வைத்து திட்டமிட்டிருப்பார். அதை நிறை வேற்றுவதற்காக நமது திட்டத்தை நிறுத்திவைத்திருப்பார்.

ஆகவே நாம் நினைத்தது நடந்தாலும் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும்.

நடக்காவிட்டாலும் நன்றி கூறவேண்டும்.

ஒரு முக்கியமான அடிப்படை உண்மையை ஞாபகத்தில் வைத்திருந்தால்தான் இறைவனின் நித்திய திட்டம் புரியும்.

நமக்குத் தெரியும் இறைவன் நம்மைப் படைத்தது நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்விற்காக அல்ல 

நிரந்தரமான மறுவுலக வாழ்வுக்காக.

இவ்வுலக சிற்றின்பத்திற்காக அல்ல, 

மறுவுலக பேரின்பத்திற்காக.

நிரந்தர மறுவுலக வாழ்வும், நித்திய பேரின்பமும் நமது ஆன்மாவை மையமாகக் கொண்டவை.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வர திட்டம் தீட்டுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

நமது திட்டம் எதை மையமாகக் கொண்டிருக்கும் ?

இந்தியாவில் வந்து இறங்குவதை.

Suppose. இந்தியாவுக்குக் கொண்டு வர நிறைய பொருட்கள் வாங்கி வைத்திருக்கிறோம்.

அப்பொருட்களை கொண்டுவருவதாக இருந்தால் flight ல் ஏற முடியாது என்ற நிலைமை வந்தால்,

இந்திய வருகைக்காக நமது பொருட்களைத் தியாகம் செய்வோமா? 

அல்லது,

பொருட்களுக்காக இந்திய வருகையைத் தியாகம் செய்வோமா? 

விண்ணக வாழ்வுக்காக நம்மைப் படைத்த இறைவன் எதை மையமாகக் கொண்டு திட்டம் தீட்டுவார்? 

விண்ணக வாழ்வையா? அல்லது மண்ணக வாழ்வையா?

ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறேன். 

வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

ஆனால் இறைவன் திட்டம் வேறு மாதிரி இருக்கிறது.

வேலை கிடைக்கவில்லை.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?

இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

இந்த வேலை கிடைத்தால் அது எனது மீட்புப் பயணத்தில் இடைஞ்சலாக இருக்கக்கூடும்.

அது கடவுளுக்குத் தெரியும்.

ஆக இறைவனுடைய நித்திய திட்டம்

 நம்மை எந்த நோக்கத்திற்காகப் படைத்தாரோ 

அந்த நோக்கத்தை அடைவதையே மையமாகக் கொண்டிருக்கும்.

இவ்வுலகில் துன்பங்களை அனுபவித்தால்தான் நமது ஆன்மா பரிசுத்தமாகும் என்பது இறைவனது சிததமானால்

அவர் நமக்குத் துன்பங்களை அனுமதிப்பார்.

என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.

சிறு குழந்தைக்குத் தன் மேல் உள்ள 
அக்கரையை விட, தாய்க்குக் குழந்தை மீது உள்ள அக்கரை அதிகம்.

அதேபோல்,

நாம் நம் மீது கொண்டிருக்கும் அக்கரையை விட 

இறைவன் நம் மீது 
கொண்டுள்ள அக்கரை அதிகம்.

ஏனெனில் அவர் நம்மைப் படைத்தவர்.

அவருதவியின்றி நம்மால் நல்லது எதுவும்  செய்ய முடியாது என்று. அவருக்குத் தெரியும்.

ஒவ்வொரு வினாடியும் அவர் நம்மைப் பராமரித்து வருகிறார்.

ஒரு தாயின் மகன் வெளிநாட்டில் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.

நல்ல வருமானம்தான்.

ஆனால்  அந்நியப் படையெடுப்பின் காரணமாக அந்நாட்டில் வாழ்வோருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் தாய் என்ன செய்வாள்?

தன் மகனை "வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விடு" என்று சொல்லிவிடுவாள். 

ஏனெனில் தாய்க்கு மகனின் சம்பளத்தை விட மகன்தான்
முக்கியம்.

அவ்வாறேதான் நம் விண்ணகத் தந்தையும்,

அவருக்கு நமது உடல் நலனை விட ஆன்ம நலன்தான் முக்கியம்.

நம் நிரந்தர வீடு விண்ணகம்தான்.

ஆகவே இவ்வுலகில் தொடர்ந்து வாழ்வது நமது ஆன்ம நலனுக்குக் கேடு விளைவிக்கும் என அவருக்குத் தெரிந்தால்,

நமது ஆன்ம நலன் கருதி,

 அவர் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துக் கொள்வார்.

நம் விண்ணகத் தந்தை என்ன செய்தாலும் நம் நலன் கருதியே செய்வார்.

இதை உணர்ந்து, இறைவன் திட்டத்திற்குப் பணிந்து,

என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, July 28, 2020

"உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்:"(எரேமி.14:22)

"உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்:"
(எரேமி.14:22)
***********************************

"நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்."
(மத்.18:3)

குழந்தைக்கும், பெரியவர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது.

பெரியவர்கள் உலகத்திற்குள் நுழைந்துவிட்டதால் பல தரப்பட்டவர்களைச் சந்திக்கிறார்கள்.

பல வித சந்தர்ப்பங்களைச் சந்திக்கின்றார்கள்.

பல வித கருத்துக்களைச் சந்திக்கின்றார்கள்.

பல வித தத்துவங்களைச் சந்திக்கின்றார்கள்.

ஆனால் யாரை,  எதை நம்பி வாழ்க்கைக்குள் நுழைவது என்று தெரியாமல் தருமாடுகிறார்கள்.

ஒவ்வொரு இடமாகச் சந்தித்துத் தோல்வி அடையும்போது வாழ்க்கையில் விரக்தியும் அடைகிறார்கள். 

இன்றைக்கு இருக்கிற சமுதாயச் சூழ்நிலையில் யாரையும் யாரும் நம்பத் தயாரக இல்லை.

ஆகவே மக்கள் மனதில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

ஆனால்,

குழந்தையைப் பொறுத்த மட்டில் அதன் உலகமே அப்பாவும், அம்மாவும் தான்

பிறந்த நாளிலிருந்து அதன் குழந்தைப் பருவத்தைக் கடக்கும் வரை அதன் பெற்றோரை மட்டுமே நம்பியிருக்கிறது.

நம்பியிருக்கிறது மட்டுமல்ல நம்புகிறது.

இரண்டு சொற்களுக்கும் பொருள் வேறுபாடு இருக்கிறது.

நம்பியிருக்கிறது என்றால் சார்ந்திருக்கிறது.

நம்புகிறது என்றால் கேட்டது கிடைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

பெற்றோர் மட்டில் உள்ள அதன் நம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது.

அதனால்தான் பெற்றோரால் குழந்தையைத் தங்கள் விருப்பம் போல் வளர்க்க முடிகிறது. 

இறைவன் முன்னால் நாம் எல்லோரும் குழந்தைகள்தான்.

இறைவன் நமது தந்தை என்பதையும் நாம் அவரது குழந்தைகள் என்பதையும் நாம் மனமார ஏற்றுக் கொண்டால்

நம்பிக்கை இயல்பாக வந்துவிடும்.

நமது கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையே

விசுவாசம் - இறைவனைத் தந்தை என்று ஏற்றுக் கொள்ளுதல்.

நம்பிக்கை - அவர் தந்தைக்குரிய பாசத்தோடு நம்மைப் பராமரித்து வழி நடத்தி, நமக்கு பேரின்ப நிலை வாழ்வைத் தருவார் என்பதில் உறுதி.

தேவ சிநேகம் - இறைவனை முழு
இருதயத்தோடு பிள்ளைக்குரிய நெருக்கத்தோடு நேசித்தல்.

இந்த  மூன்று தேவ சம்பந்தமான 
புண்ணியங்களும் இருந்தால்தான் நாம் கிறிஸ்தவர்கள்.

ஆழமான விசுவாசம் இருந்தால் உறுதியான நம்பிக்கை தானே வரும்.

நண்பர் ஒருவரிடம் ஒரு உதவி கேட்கப் போகிறோம்.

 போகும்போதே, 

'உதவி செய்வாரோ, செய்ய மாட்டாரோ'

 என்று சந்தேகப் பட்டுக் கொண்டே போனால் என்ன அர்த்தம்?

நட்பு நெருக்கமானது இல்லை என்று அர்த்தம்.

கடவுளிடம் ஒரு உதவி கேட்டு செபிக்கிறோம்.

நமது செபம் உறுதியாகக்
கேட்கப்படும் என்ற நம்பிக்கை வர வேண்டும் என்றால்,

1. இறைவன் நமது அன்புத் தந்தை என்ற விசுவாசம் ஆழமாக இருக்க வேண்டும்.

2. நமது மீட்பு ஒன்றுதான் அவரது ஏகக் குறிக்கோள், அவர் நமக்காக என்ன செய்தாலும் நமது  மீட்புக்காகத்தான் என்பதை விசுவசிக்க வேண்டும்.

3. நமது மீட்புக்குப் பாதகமான எதையாவது நாம் நமது அறியாமையால் கேட்டால்

நமது நன்மை கருதி அதைத் தரமாட்டார், அதற்குப் பதிலாக நமது மீட்புக்குப் பயன் படக்கூடியதைத்தான் தருவார் என்ற விசுவாசமும் இருக்க வேண்டும்.


ஆழமான விசுவாசத்தோடு நாம் கடவுளிடம் எதைக் கேட்டாலும்,

அது நமக்குப் பயன் தருமானால் உறுதியாகத் தருவார் என்று நம்ப வேண்டும்.

"நம்புங்கள். செபியுங்கள். நல்லது நடக்கும்." என்ற ஒரு பாடல் வரி உண்டு.

நம்பிக்கையோடு நாம் செபித்தால் நமக்கு என்ன நடந்தாலும் அது நன்மைக்காத்தான் - என்பது இவ்வரியின் பொருள்.

கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.

 நமது நன்மைக்காகத்தான் அவர் நம்மைப் படைத்தார்.

நமக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும்.

ஆகவே நமக்கு நலன் தருவதை மட்டும்தான் நமக்குத் தருவார்.

நமது அறிவு அளவு உள்ளது.

நாம் விரும்புவது நமக்கு நன்மை தருமா அல்லது தீமையில் முடியுமா என்று நமக்கே தெரியாது.

ஆனால் கடவுளுக்குத் தெரியும்.

அவர் நம் மீது உண்மையான அன்புடைய நல்ல தந்தை.

ஆகவே நாம் விரும்புவது 
நமக்கு நன்மை தருவதாக இருந்தால் மட்டுமே தருவார்.

நமது பையன் நம்மிடம் வந்து,

"விளையாட ஒரு பாம்புப் பிடித்துத் தாருங்கள்"

என்று கேட்டால் கொடுப்போமா?

அளவுள்ள அறிவுள்ள நாமே நமது மகன் கேடு செய்வதைக் கேட்டால் கொடுக்க மறுக்கிறோமே,

அளவில்லா ஞானமும், நம்மீது அளவில்லா அன்பும் கொண்ட கடவுள் நமக்குக் கேடு விளைவிப் பதைக் கேட்டால் தருவாரா?

அநேக சமயங்களில் இதை உணர்ந்து கொள்வதில்லை.

நாம் சொல்வது:

ஆண்டவரே, உம்மை விசுவசிக்கிறோம்.

உம்மை நம்புகிறோம்.

உம்மை நேசிக்கிறோம்.

நாங்கள் கேட்பதைத் தாரும்.

இதிலே வேடிக்கை என்னவென்றால் 

நாம் கடவுளை நேசிப்பதும், நம்புவதும், நேசிப்பதும்

அவர் நாம் கேட்பதைத் தருவதற்காகத்தான்.

இதை நாம் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

ஆனால் நடைமுறையில் அதைக் காட்டுகிறோம்.

எப்படி?

வேலைக்கு விண்ணப்பித்து விட்டு, அந்த வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.

நேர்ச்சை எல்லாம் வைக்கிறோம்.

ஆனால் நமக்கு வேலை கிடைக்கவில்லை.

அவ்வளவுதான், நமது நம்பிக்கை தளர ஆரம்பிக்கிறது.

நமது சிந்தனை, சொல் , செயலில் தளர்வு பிரதிபலிக்கிறது.

சில சமயங்களில் கட்சி மாறிவிடுகிறோம்.

எப்படி?

திருச்சபையைச் சேராத ஒருவர் கையில் பைபிளை வைத்துக் கொண்டு கூட்டங்கள் நடத்திக் கொண்டிருப்பார்.

"அவரிடம் போனால் கேட்டது கிடைக்கும்" என்று யாராவது காதில் ஊதுவார்கள்.

உடனே அங்கே ஓடிவிடுவோம்.

அங்கேயும் கிடைக்காவிட்டால் அடுத்த போதகரிடம்.

இப்படியே ஓடிக் கொண்டிருப்போம்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

நாம் கிறிஸ்தவர் என்ற பெயரில் வாழ்ந்தாலும்,

நமது வாழ்வில் கிறிஸ்து மையமாக இருப்பதில்லை. நம்மையே மையமாக வைத்து வாழ்கிறோம்.

கிறிஸ்து நாம் கேட்பதைத் தருவதற்காக.

ஆனால் கிறிஸ்தவ வாழ்வில் மையமாக இருக்க வேண்டியது கிறிஸ்து.

கிறிஸ்து நமக்காகத் தன்னையே பலியாக்கினார்.

நாம் கிறிஸ்துவுக்காக பலியாக வேண்டும்.

"இதோ ஆண்டவருடைய அடிமை."

நம் விண்ணகத் தாயின் இந்த வார்த்தைகள் நம் வாழ்வாக வேண்டும்.

Total Surrender!

முழுமையான அர்ப்பணிப்பு.

அர்ப்பண உணர்வோடு விசுவசிக்க வேண்டும்.

அர்ப்பண உணர்வோடு நம்ப வேண்டும்.

அர்ப்பண உணர்வோடு நேசிக்க வேண்டும்.

"கேளுங்கள்" என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.

ஆகவே ஆசைப்படுவதைக் கேட்கலாம்.

கேட்டது கிடைக்கும் என்று நம்ப வேண்டும்.

எப்படி நம்ப வேண்டும்?

"ஆண்டவரே, எனது விண்ணப்பத்தை உம்மிடம் ஒப்படைத்து விட்டேன்.

நான் கேட்பது நான் ஆசைப்படுவது  தான்.

ஆனால் அது எனக்கு நன்மை தரக்கூடியதா என்று எனக்குத் தெரியாது.

உமக்குத் தெரியும்.

நான் கேட்பதை எனது ஆன்மீக வாழ்வுக்கு நன்மை தரக்கூடிய விதமாகத் தருவீர் என உறுதியாக நம்புகிறேன்.

என் நம்பிக்கையையும் உமக்கே அர்ப்பணித்து விட்டேன். 

உமது சித்தம் போல் எனக்கு ஆகட்டும்."

நாம் கேட்காமலேயே நமக்கு என்ன வேண்டுமென்று அவருக்குத் தெரியும்.

நமக்கு நன்மை பயக்கக்கூடியதைத் தருவார் என உறுதியாக நம்புவோம். 

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்."

என்பதுதான் நமது செபமாக இருக்க வேண்டும்.

நமது செபம் உறுதியாகக் கேட்கப்படும்.

லூர்து செல்வம்.


Monday, July 27, 2020

விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத். 13:33,

''விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்." (மத். 13:33,
**************************************

ஒரு புள்ளிவிபரப்படி புதிய ஏற்பாட்டில் 122 தடவைகள் இறையரசைப் பற்றி குறிக்கப்பட்டிருக்கிறது.

Kingdom of God” occurs 122 times in the New Testament.

இயேசுவே கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்கவே தான் அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்.

"நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன். "
(லூக்.4:43)

இறையாட்சியின் ஒவ்வொரு தன்மையையும் விபரிக்க இயேசு ஒரு உவமையைக் கூறுகிறார்.

27ம் தேதி வாசகக் குறிப்புப் படி இயேசு விண்ணரசை புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார்.

பாலைத் தயிராக மாற்ற ஏற்கனவே புளிப்பாக இருக்கும் உறைமோரை ஊற்றுவார்கள்.


அதேபோல ஏற்கனவே புளிப்பாக இருக்கும் மாவில்

சிறிதளவு புளியாத மாவோடு கலந்தால் அதுவும் புளிப்பு ஆகிவிடும்.

உறைமோருக்கும், புளிப்பு மாவுக்கும் உள்ள விசேச குணம் என்னவென்றால்,

இரண்டும் தான் சேரும் பொருட்களைத் தன் நிலைக்கு மாற்றிவிடுகின்றன.

அதேபோல், நாம் எங்கு சென்றாலும்  நமது  தொடர்புக்குள் வருவோரை நம்மைப் போல மாற்றும் சக்தி நமக்கு வேண்டும்

காற்று எங்கும் இருக்கிறது. 
அது நமக்குப் பயன்பட வேண்டுமென்றால் நாம் அதைச் சுவாசிக்க வேண்டும்.

இறையரசு எங்கும் இருக்கிறது.

இறைவன் தான் படைத்த எல்லா மனிதர் உள்ளத்திலும் இருக்கிறார்.

அவர் இருப்பதை உணர்ந்து, அவரைத் தங்கள் அரசராக ஏற்றுக் கொள்பவர்கள் இறையரசை ஏற்றுக் கொள்கிறார்கள்.

இறைவனை அரசராக உளமாற, முழு இருதயத்தோடு ஏற்றுக்கொள்பவர்கள்,

இறைவனுடைய பண்புகளையும் தங்கள் பண்புகளாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

தண்ணீரில் இறங்குபவர்கள் நனையாமல் இருக்கமுடியாது.

நெருப்பைத் தொடுபவர்கள் அதன்  வெப்பத்தை உணராமல் இருக்க முடியாது.

அதேபோல்தான் அன்பு மயமான இறைவனோடு  உளமார இணைந்தவர்கள்,

அன்பு என்ற பண்போடு இணையாமல் இருக்கமுடியாது.

அன்போடு அதிலிருந்து பிரிக்க முடியாத இரக்கம், கனிவு, மன்னிக்கும் தன்மை, பொறுமை போன்ற பண்புகளும் அவர்களைப் பற்றிக்கொள்ளும்.

அன்பு என்பது வெறும் உணர்வு மட்டும் அல்ல.

 இது ஒரு சக்தி. ஈர்ப்பு சக்தி. தன் தொடர்பு எல்கைக்குள் வருவோர் அனைவரையும் இழுக்கும்.

 அன்பு தான் புறப்படும் இடத்திலிருந்து தனியே போகாது.

 இனிய சொற்கள், பயன் தரும் நற்செயல்களோடு சென்று, தொடர்புடைய அனைவரையும் கவரும்.

 கவர்வது மட்டும் அல்ல, அவர்களையும் பற்றிக் கொள்ளும்.

அதனால் அன்பைப் பற்று என்றும் அழைக்கிறோம்.


இறையன்புள்ளவன் எங்கு சென்றாலும் அவனோடு தொடர்பு உடையோர் அனைவரையும் அன்புள்ளவர்களாகவும், நற்செயல் புரிபவர்களாகவும் மாற்றிவிடுவான்.

 இவனது ஈர்ப்பின் காரணமாக ஈர்க்கப்பட்டோர் அவனைப்போல் மாறி விடுவர். 

அதாவது அவர்களும் தங்களுக்குள்ளும் அவனுடைய அன்புக்குக் காரணமான  இறைவன் இருப்பதை உணர்ந்து கொள்வர்.

 அவர்களும் இறைவனை அரசராக ஏற்றுக் கொள்வர். 

ஒரே வரியில் சொல்வதானால் இறையரசுக்கு உரியவன் சென்ற இடமெல்லாம் இறையரசைப் பரப்புவான். 

எரியும் மெழுகுதிரியை எங்கு எடுத்துச் சென்றாலும்,

எவ்வளவு இருட்டான இடத்திற்கு எடுத்துச் சென்றாலும்,

அது இருளை நீக்கி ஒளியைப் பரப்பும். அது அதன் இயல்பு.

எப்படி புளிக்கும் மாவு தன்னோடு தொடர்பு உள்ள அனைத்து மாவையும் புளிப்பாக்குகிறதோ,

 அதேபோல இறையரசின் உண்மைக் குடிமகன் தன்னோடு தொடர்புடைய அனைவரையும்  இறையரசின் குடிமக்களாக மாற்றி விடுவான்.

நாம் ஞானஸ்நானம் பெற்ற நாளிலிருந்து இறையரசின்
குடிமக்களாக இருந்திருக்கிறோம்.

நமது அரசரின் எதிர்பார்ப்புப்படி நாம் 'புளிக்கும் மாவு' போல் இருந்திருந்தால் இதற்குள் இந்தியா ஒரு கிறிஸ்தவ நாடாக மாறியிருக்கும்.

இந்தியர் அனைவருமே கிறிஸ்தவர்களாக மாறியிருப்பர்.

ஆனால் மாறவில்லை.

ஏன் மாறவில்லை?

நாம் இயேசுவின் எதிர்பார்ப்புப்படி இல்லை.

நம்மிடம் அன்பு இருக்கிறது.

தம்ளர் நிறைய தண்ணீர் இருக்கிறது.

ஆறு நிறையவும் தண்ணீர் இருக்கிறது.

ஆற்றுத் தண்ணீருக்கு அகப்பட்டவனை இழுத்துச் செல்லும்  சத்தி உள்ளது.

தம்ளர் தண்ணீருக்கு?

ஆற்றுத் தண்ணீரும், தம்ளர் தண்ணீரும் ஒரே குணமுள்ள தண்ணீர்தான்.

ஆனால் அததன் அளவைப் பொறுத்து சக்தியில மாறுபடுகின்றன.

நமது அன்பு தம்ளர் தண்ணீர் மாதிரி தான். இருக்கும் இடம் விட்டு ஒரு பக்கமும் போகாது.

அன்னைத் தெரெசாவிடமும் அன்பு இருந்தது. காட்டாற்று வெள்ளம் போல சக்தி வாய்ந்ததாக இருந்தது.

அவள் செய்த அன்புச் செயல்களுக்குக் கணக்கே இல்லை.

அவளது உண்மையான அன்பை அனுபவித்தவர்கள் அவளுக்குள் இருந்து இயேசு செயலாற்றுவதை உணர்ந்தனர்.

ஒரு முறை தெருவில் கவனிப்பாரற்று சாகக் கிடந்த ஒரு குஷ்டரோகியைத் தூக்கி, 

இல்லத்திற்குக் கொண்டு வந்து,

 அவனது புண்களைக் கழுவி,
மருந்திட்டு, 

தனது இறையன்பை அனுபவித்துக் கொண்டே சாகவிட்டாள். 

தன்னை அன்பு செய்ய யாரும் இல்லையே என்ற எண்ணத்தில் சாகக் கிடந்தவனுக்கு


'நேசிக்க இயேசு இருக்கிறார்' என்று உணர்த்தி, இறையரசின் அன்புக் குடிமகனாக புன்முறுவலோடு 
 சாகவிட்டாள்.

இயேசு குறிப்பிட்ட புளிக்கும் மாவிற்கு அன்னைத் தெரெசா சரியான எடுத்துக் காட்டு.

எல்லாரும் அன்னைத் தெரெசாவைப் போல இருக்க ஆசைப்படலாம்.

ஆசைப்பட வேண்டும்.

அவர்கள் அளவுக்கு நம்மால் இருக்க முடியா விட்டாலும் நம்மால் இயன்ற அளவு இருக்க முயலலாம்.

மற்றவர்களிடம் பேசும்போது அன்புடன் பேசுதல்,

மற்றவர்கள் கஷ்டப்படும்போது ஆறுதல் சொல்லுதல்,

ஏதாவது உதவி தேவைப் படும்போது நம்மால் இயன்ற உதவி செய்தல்,

புறணி பேசாதிருத்தல்,

திறமைகளைப் பாராட்டுதல்,

இறையரசைப் பற்றி பேசுதல்

போன்ற காரியங்களைச் செய்தாலே உறவு வளரும்.

எதிர்மறை நினைவுகளை அகற்றி நேர்மறையாகச் சிந்திக்க ஆரம்பித்தால்,

நமது பேச்சும், செயலும் நேர்மறையாக மாறிவிடும்.

பிறரை நேர் மறையாக அணுகும்போது, உறவு வளரும்.


நமது உறவின் ஆழத்தைப் பொறுத்து நமது சிந்தனை, சொல், செயல்கள் அவர்களது வாழ்க்கை முறையையே மாற்றம்.

நமது உறவின் மையம் இயேசுவின் அன்பாக மட்டும் இருந்தால் அவர்களும் இயேசுவின் அன்பால் ஈர்க்கப்படுவர்.


அவர்களும் இயேசுவின் சீடர்களாக மாறி, இறையரசை ஏற்றுக்கொள்ளவர்.

இயேசு விரும்பியபடி புளிப்பு மாவாக மாற்றுவோம்,

உலகையே மாற்றுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, July 26, 2020

"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும்." (மத்.13:44)

"விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும்." (மத்.13:44)
**************************************

விண்ணரசு ( The kingdom of heaven)   எங்கே இருக்கிறது?

நமது மொழியில் 'அரசு' என்று சொன்னவுடனே நமது நினைவுக்கு வருவது ஒரு புவியியல் பிரிவு (geographical territory), அங்கே வாழும் மக்கள், மக்களை ஆளும்  அரசாங்கம்.

ஆனால் விண்ணகம் ஒரு புவியியல் பிரிவு அல்ல.

ஆகவே விண்ணகம் மண்ணில் இல்லை.

நமது மொழியில் 'விண்வெளி' என்று சொன்னவுடனே ஆகாயத்தைப் பார்ப்போம்.

ஆனால் விண்ணகம் அங்கும் இல்லை.

விண்ணகம் மண்வெளியிலும் இல்லை, விண் வெளியிலும் இல்லை.

ஆனால் எங்கும் இருக்கிறது.

அது எப்படி?

விண்ணகம் இறைவன் வாழும் இடம்.

இறைவன் எங்கே இருக்கிறார்?

எங்கும் இருக்கிறார். இறைவன் எங்கும் இருப்பதால், அவர் வாழும்
விண்ணகமும் எங்கும் இருக்கிறது.

கடவுள் பூவுலகில் இருக்கிறாரா?
இருக்கிறார்.

விண்வெளியில் இருக்கிறாரா?
இருக்கிறார்.

அப்படியானால் விண்ணகம்?

பூமியில் இருக்கிறது, ஆனால் புவியியல் பகுதி அல்ல.

விண்வெளியிலும் இருக்கிறது, ஆனால் விண்வெளிப் பகுதி அல்ல.

குழப்பமாக இருக்கிறதா?

ஆனால் குழப்பத்துக்குக் காரணம் நான் அல்ல.

நமது மொழிதான் காரணம்.

உருவமே இல்லாத ஆவிப் பொருளையும், உருவம் உள்ள சடப் பொருளையும் விளக்க நம்மிடம் ஒரு மொழிதான் இருக்கிறது.

வேறு வழி இல்லாமல் ஆன்மீகத்தையும், வௌகீகத்தையும் விளக்க ஒரே மொழியைப் பயன்படுத்துகிறோம்.

புரிந்து கொள்ளக்கூடிய விதமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பூமியும், விண்வெளியிலுள்ள கிரகங்களும் சடப்பொருட்கள். ஆகவே வெளியை ( Space) அடைத்துக்கொண்டிருக்கின்றன.

ஆனால் விண்ணகம் ஒரு ஆன்மீக நிலை. ஆன்மீகத்துக்கு இடம் தேவை இல்லை. 

அங்கு வாழும் இறைவன் ஆவி. ஆகவே சடப் பொருளைப்போல இடத்தை அடைத்துக் கொண்டிருக்க வில்லை. 

ஆனால் இடத்தையும், அதில் உள்ள சடப்பொருட்களையும் தன் வல்லமையால் படைத்தவர் அவரே.

 ஆகவே தன் வல்லமையால் எங்கும் இருக்கிறார்.


இயேசு விண்ணரசை ஒரு புதையலுக்கு ஒப்பிடுகிறார்.

புதையல் என்றாலே மறைந்திருப்பதுதான்.

கண்ணுக்குத் தெரியும்படி நமது மேசையில் மீது இருப்பது எதையும் புதையல் என்று சொல்லமாட்டோம்.

ஆன்மீகம் ஒரு மறைபொருள், உண்மையிலேயே இருக்கும் பொருள்.

நமது உடலில் ஆன்மா இருக்கிறது. நாம்தான் ஆன்மா. 
 
நமது உடலிலுள்ள ஊனக் கண்ணால் நமது ஆன்மாவைப் பார்க்க முடியாது.

ஏனெனில் நமது ஆன்மா ஆவி, உடலில் உள்ள கண் சடப்பொருள்.

சடப் பொருளால் ஆவிப் பொருளைப் பார்க்க இயலாது.

ஒரு மனிதனின் உடலில் ஆன்மா இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

கண்ணால் பார்க்க முடியாத 
ஆன்மாதான் கண்ணால் பார்க்க முடிகின்ற உடலை இயக்குகிறது.

உடல் இயங்கிக் கொண்டிருந்தால் ஆன்மா இருக்கிறது என்று அர்த்தம்.

உடல் இயக்கத்தை இழந்து விட்டது என்றால், ஆன்மா பிரிந்துவிட்டது என்று அர்த்தம்.

கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை எப்படி அறிந்து கொள்கிறோம்?

கடவுள் ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகைப் படைத்தார்.

தனது வல்லமையால் கடவுள் எங்கும் இருக்கிறார்.

அவர் எங்கும் இருப்பதால்தான் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொரு அணுவும் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

அவரின்றி அணுவும் அசையாது.

அவர் நினைத்தால் இப்பிரபஞ்சத்தை  ஒன்றுமில்லாமல் ஆக்கி விடலாம்.

ஆனாலும் அவர் இருப்பார்.

அவர் நித்தியர்.

ஆக, இறையரசு எங்கும் இருக்கிறது.

நமக்கு உள்ளும் இருக்கிறது.

The Kingdom of God resides in the heart of man.

Our heart is the temple of the Holy Spirit.

நமக்குள் இருக்கும் இறையரசை உணராதவர்களுக்கு அது புதையல்.

தன் உள்ளத்தில் இருக்கும்  புதையலை உணராத ஒருவன் தன் இஸ்டம் போல் வாழ்ந்து கொண்டிருப்பான்.

ஆனால் நற்செய்தி அறிவிப்பவர் மூலம் அவனுக்கு உண்மை தெரிய வந்தால், இறையரசில் வாழ்வதற்காக எந்த தியாகத்தையும் செய்யத்துணிவான்.


 தனக்குள்ளதை எல்லாம் 
இழந்தால்தான் இறையரசில் வாழ முடியுமென்றாலும்,

 அதை எல்லாம் இழக்கத் தயாராக இருப்பான்.

நாம் வருடக்கணக்காய்த் தினமும் பைபிள் வாசிக்கிறோம்.

நமது இருதயத்தில் மறைந்திருந்த புதையலை வெகு காலத்திற்கு முன்பே எடுத்துவிட்டோம். 

அதாவது, பைபிள் வசனத்தின் மூலமும், ஞாயிற்றுக்கிழமை பிரசங்கங்கள் மூலம் இறையரசு நமக்குள் இருக்கிறது என்ற உண்மையை அறிந்திருக்கிறோம்.

நமது அரசர் இயேசு நமது இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பது நமக்குத் தெரியும்.

சமீபத்தில் நமது நாட்டில் Clean India movement என்ற இயக்கத்தை இந்திய அரசு ஆரம்பித்திருக்கிறது.

நமது விண்ணரசைப் பொறுத்தமட்டில் 2020 ஆண்டுகளுக்கு முன்பே 

நமது இதய அரசர் இயேசு இந்த இயக்கத்தை தன் இரத்தத்தைச் சிந்தி ஆரம்பித்து வைத்துவிட்டார்.

நமது அரசு ஆன்மீக அரசாகையால் அதன் குடிமக்களின் ஆன்மா சுத்தமாக இருந்தால்தான் அரசு சுத்தமாக இருக்கும்.

நமது ஆன்மாக்களில் பாவ அழுக்கு நிறைந்திருந்தமையால்,

 அவ்வழுக்கை இயேசு அவரது சொந்த இரத்தத்தினாலேயே கழுவி சுத்தப்படுத்தினார்.

அதன் காரணத்தால் அவர் தன் மன்னுயிரையே இழக்க வேண்டியிருந்தது.

தன் உயிரைக் கொடுத்து நம்மைச் சுத்தப் படுத்தினார்.

அனைத்துக் குடிமக்களின் முதல் வேலை அவரவர் ஆன்மாவை பாவ மாசின்றி சுத்தமாக வைத்திருப்பது  தான்.

அதற்காகத்தான் ஞானஸ்நானம்.

ஞானஸ்நானம் பெற்று நம் ஆன்மா பரிசுத்தம் ஆனபின்புதான் நாம் அவரது அரசின் குடிமக்கள் ஆனோம்.

ஏனெனில் பாவ அழுக்குள்ள சிம்மாசனத்தில் நம் அரசரால் உட்கார முடியாது.

அடுத்து சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவை தாழ்ச்சி, பொறுமை, கற்பு, தாராள குணம், மட்டசனம், பிறர் அன்பு, சுறுசுறுப்பு போன்ற புண்ணியங்களால்.அலங்கரிக்க வேண்டும்.

அரசெங்கும் நற்செயல் பூங்காக்கள் நிறைய அமைத்திட வேண்டும்.

நற்செயல் மரங்களுக்கு அன்பு என் நீர் பாய்ச்சி வளர்க்க வேண்டும்.

நமது அரசர் பரிசுத்தமாய் இருப்பது போல, அரசு முழுவதும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். 


இப்பணிகளைச் செவ்வனே செய்ய வேண்டிய அருள்வரங்களை அள்ளித்தர 

ஏழு தேவத் திரவிய அனுமானங்களை ஏற்பாடு செய்ததோடு, 

அவைகளை நிறைவேற்ற ஏராளமான குருத்துவப் பணியாளர்களையும் 

இயேசுவே நியமித்திருக்கிறார்.
 

அரசு என்று ஒன்று இருந்தாலே அதற்கு எதிரி ஒருவன் இருப்பான்.

நமது ஆன்மீக அரசின் எதிரி சாத்தான்.

நமது அரசரின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முயற்சிப்பதே அவன் வேலை.

அவனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டியது நமது கடமை.

அதற்காக நமது சர்வ வல்லப அரசர் தமது அருள் வரங்களால் நம்மை நிரப்பியிருக்கிறார்.

அவற்றின் உதவியோடு நாம் சாத்தானை வென்று கொண்டிருக்கிறோம்.

இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

விண்ணரசு மக்களின் இதயத்தில் இருக்கும் ஆன்மீக அரசு.

ஆகவே அதை உலகோர் தங்கள் ஊனக்கண்களால் பார்க்க முடியாது.

ஆயினும் நமது ஆன்மாதான் நம்மை இயக்கிக் கொண்டிருப்பதால், 

நமது நடவடிக்கைகளிலிருந்து நாம் இயேசுவின் அரசைச் சேர்ந்தவர்கள் என்று மக்கள் புரிந்து கொள்வர்.

"நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
(அரு.13:35)


விண்ணரசின் இயக்கத்துக்கு ஒரே காரணம் இறையன்புதான். 

இறையன்பு இருக்கும் இடத்தில் இயல்பாக பிறரன்பும் இருக்கும்.

ஆகவே நமது பிறரன்பு செயல்களே நம்மிடம் இறையன்பு இருக்கிறது என்பதையும்,

நாம் இறையரசின் மக்கள் என்பதையும் வெளிக் காட்டிக் கொண்டிருக்கும்.

நாம் இறையரசைச் சார்ந்தவர்கள் என்பதற்கு வெளி அடையாளம் நாம் சேர்ந்திருக்கும், 

நமது அரசரால் நிறுவப்பட்ட,
கத்தோலிக்கத் திருச்சபை.

நமது ஆன்மீகப் பரிசுத்தத் தனத்தை வளர்க்க, 

இயேசு ஏற்படுத்தியுள்ள ஏழு தேவ திரவிய அனுமானங்களை நம்மில் நிறைவேற்றும் குருக்கள்

 திருச்சபையில்தான் இருக்கிறார்கள்.

இறையரசின் குடிமக்கள் அனைவரும் கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களே.

இறையரசின் மக்களாகிய நமக்கு உலகில் முக்கிய கடமை ஒன்று இருக்கிறது.

உலக மக்கள் அனைவர் இதயத்திலும் புதையலாக மறைந்து இருக்கும் விண்ணரசைப் பற்றி அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது நமது கடமை.

உலக மக்கள் அனைவரும்  இயேசுவின் விண்ணரசுக்குள் வர வேண்டும்.

உலகோர் அனைவரும் இயேசுவின் நித்திய பேரின்ப சாம்ராஜ்யத்துக்குள் வரவேண்டும்.

நமது இதய அரசரின் ஆசை இதுதான்.

நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

Saturday, July 25, 2020

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."(மத். 20:27)

"எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."
(மத். 20:27)
**************************************

"என் மக்கள் இவ்விருவரும் உம் அரசில், 

ஒருவன் உமது வலப்பக்கமும்,

 மற்றவன் உமது இடப்பக்கமும் அமரச் செய்வீர் 

என வாக்களியும்" என்றாள்". 

இந்த உறுதிமொழியை இயேசுவிடம் கேட்டவள் அருளப்பர், வியாகப்பர் ஆகியோருடைய தாய்.

இயேசு எதற்காக உலகிற்கு வந்தார் என்ற விபரம் அந்த அம்மாவிற்குத் தெரியவில்லை என்று தெரிகிறது.

வலது பக்கமும், இடது பக்கமும் அமர்வது என்பது முக்கிய பதவி வகிப்பது.

இயேசு மெசியா என்ற விபரம் சீடர்களுக்குத் தெரியும்.

ஆனால் மெசியாவைப் பற்றி உண்மையில்லாத ஒரு கருத்து மக்களிடையே நிலவியிருந்தது.

மெசியா யூதர்களை உரோமையர்களின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டு, 

அவர்களுக்கென்று தனி அரசு அமைப்பார் மக்கள் எண்ணிக்கொண்டிருந்தனர்.

ஆகவேதான் அவருடைய அரசில் தன் மக்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்க வேண்டுமென்று அந்த அம்மா கேட்டார்கள்.

ஆனால், இயேசு பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்பதற்காக

 பாடுபட்டு, மரிப்பதற்காகவே பிறந்திருக்கிறார் என்ற உண்மை அவளுக்குத் தெரியாது.

தெரிந்திருந்தால் பதவி  கேட்டு விண்ணப்பித்திருக்க  மாட்டாள்.

இயேசு உண்மையிலேயே அரசர் தான். ஆனால் அவருடைய அரசு இவ்வுலகைச் சார்ந்தது அல்ல.

மறுவுலகைச் சார்ந்தது.

அவருடைய அரசு லௌகீக அரசு அல்ல. ஆன்மீக அரசு.

இவ்வுலக அரசில் உயர்ந்தவன் என்பதற்கும், 

மறுவுலக ஆன்மீக அரசில் உயர்ந்தவன் என்பதற்கும், 

பாரதூர வித்தியாசம் இருக்கிறது.

ஒப்புமைக்காக மரத்தை எடுத்துக் கொள்வோம்.

ருசியுள்ள பழங்களைத் தரக்கூடிய ஒரு பெரிய மரம்.

அதன் முக்கிய பகுதி அடிப்பகுதியா, உச்சிப் பகுதியா?

அடிப்பகுதியால் உச்சிப் பகுதி வாழ்கிறதா?

அல்லது

உச்சிப் பகுதியால் அடிப்பகுதி வாழ்கிறதா?

நமது பார்வைக்கு உச்சிப் பகுதி அழகானதாகவும், பயன் தருவது போலவும் தோன்றலாம்.

அடியிலுள்ள வேர்ப்பகுதி கண்ணுக்கே தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் வேரில்லாவிட்டால் மரத்தால் நிற்கவும் முடியாது, பழங்கள் தரவும் முடியாது.

உச்சிப் பகுதியை வெட்டிவிட்டால் மரம் திரும்பவும் தளிர்க்கும்.

ஆனால் வேரை வெட்டிவிட்டால் அப்புறம் மரமே இல்லை.

ஆன்மீக அரசில் ஊழியனாய் இருப்பவன்தான் முதல்வன்.

இயேசு நம்மைப் படைத்த கடவுள்.
அவர்தான் நமது அரசர்.
அவர் தான் நமது தலைவர்.

''மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."

படைத்தவராகிய அவரே தன்னால் படைக்கப் பட்டவர்களுக்கு 'பணிவிடை புரியவும்,'

அவர்களது 'மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்.'

அவர் நமக்குக் கூறும் அறிவுரை :

"எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.

 எவன் உங்களுக்குள் முதல்வனாய் இருக்க விரும்புகிறானோ அவன் உங்கள் ஊழியனாய் இருக்கட்டும்."

 உலகத் தலைவர்கள் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்வார்கள், அதைத் தலைவனின் கடமை என்று எண்ணிக் கொண்டு.

ஆனால் அவர்கள் உபதேசத்தில் ஒன்றையாவது அவர்கள் கடைப் பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் இயேசு அப்படி அல்ல.

அவர் செய்யும் ஒவ்வொரு உபதேசத்தையும் அவரே அவரது வாழ்வில் கடைப்பிடித்தார். 

சர்வத்தையும் படைத்ததால் சர்வத்திற்கும் அதிபதியான அவர் 

தாழ்ச்சியைப் பற்றியும், பிறருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் போதிக்கு முன்,

சர்வவல்லபராகிய அவர் பலகீனங்கள் நிறைந்த  மனித உரு எடுத்து, 

அவரால் படைக்கப்பட்ட மனிதர்களாகிய அன்னை மரியாளுக்கும், சூசைப்பருக்கும் 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.

அவரது பணிவாழ்விலும் எல்லோருக்கும் பணி செய்துதான் வாழ்ந்தார்.

கடைசி இரவு உணவு அன்று சீடர்களுடைய பாதங்களைக் கழுவும் அளவிற்குத் தன்னையே தாழ்த்திக் கொண்டார்.

இயேசுவின் சீடர்கள் நாம்.

இயேசு இயல்பிலேயே உயர்ந்தவர். அவர் தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டார்.

நாம் இயல்பிலேயே ஒன்றுமில்லாதவர்கள்.

அதற்குக் கீழே தாழ்த்துவதற்கு  நம்மிடம் ஒன்றுமே இல்லை.

நமது இயல்பான நிலையை ஏற்றுக் கொள்வதுதான் நமக்குத் தாழ்ச்சி.

நமது இயல்பான நிலையை ஏற்றுக் கொண்டால், நாம் எதற்காகப் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

அதை ஏற்றுக் கொண்டால் நம்மைப் படைத்தவர்  தந்த கட்டளைகளையும் ஏற்றுக் கொள்வோம்.  


கட்டளைகளையும் ஏற்றுக் கொண்டால் அவற்றின்படி

இறைவனை முழு இருதயத்தோடு நேசிப்போம்.

நமது அயலானையும் நேசிப்போம்.

அயலானை நேசிப்பதில்தான் அயலானுக்கு ஊழியம் செய்வது அடங்கியிருக்கிறது.

இப்போ ஒன்று புரிந்திருக்கும்.

கிறிஸ்தவன் என்றாலே இறைவனுக்காக பிறருக்குச் சேவை செய்பவன் என்றுதான் பொருள்.

சேவை செய்தல் என்றால் என்ன?

உலகியல் பற்றி பேசுவதற்கும், ஆன்மீகம் பற்றி பேசுவதற்கும் நம்மிடம் ஒரு மொழிதான் இருக்கிறது.

ஒரு வார்த்தைக்கு உலகியலில் ஒரு பொருள் இருந்தால்,

அதே வார்த்தைக்கு ஆன்மீகத்தில் வித்தியாசமான பொருள் இருக்கும்.

உதாரணத்திற்கு,

மீட்பு என்ற வார்த்தை உலகியலில் 

ஒருவனை ஏதாவது ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றுவது என்று பொருள்படும்.

 உ . ம்: தண்ணீருக்குள் விழுந்தவனை மீட்கிறோம். வியாதியிலிருந்து மீட்கிறோம்.


ஆனால் ஆன்மீகத்தில்

 பாவத்திலிருந்து கிடைக்கும் விடுதலையைத் தான் மீட்பு என்கிறோம்.

அதேபோல் அன்பு என்ற வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

உலகியலில் இருவர் அல்லது பலருக்கு இடையே உள்ள ரீதியாக ஏற்படும் ஈர்ப்பை அன்பு என்கிறோம்.
கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்களுக்கு இடையே கூட அன்பு இருக்கலாம்.


ஆனால் ஆன்மீகத்தில் அன்பு இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய பண்பு. 

இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள ஈர்ப்பு, 

இறைவனுக்காக நம் அயலான் மீது ஏற்படும் ஈர்ப்பு. 

இந்த தெய்வீகப் பண்புதான் அன்பு.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஞான உபதேசத்தில் இந்த அன்பு தேவ சிநேகம் (Charity) என்று குறிக்கப்பட்டிருக்கும்.

தேவசிநேகத்தில இறையன்பும், பிறரன்பும் அடக்கம்.

ஆன்மீகத்தில் அன்பு என்றாலே கடவுளைத்தான் குறிக்கும்.

God is Love.

நமக்கும் நம் அயலானுக்கும் இருக்கும் அன்பு கடவுளை மையமாகக் கொண்டது.

கடவுளுடைய பிள்ளை என்ற அடிப்படையில் மற்றவர்களை நேசிப்பதுதான் உண்மையான ஆன்மீக அன்பு. இயேசு குறிப்பிடும் அன்பு ஆன்மீக அன்புதான்.

வெறுமனே உடன்பிறந்தவன் என்பதற்காகவோ, நண்பன் என்பதற்காக மட்டும் நேசித்தால் அது உலகியல் அன்பு.


அதேபோல, சேவை என்ற வார்த்தைக்கும் உலகியலில் பொருள் வேறு, ஆன்மீகத்தில் பொருள் வேறு.

உலகியலில்:

ஒருவருக்கோ, அல்லது பலருக்கோ பிரதிபலன் எதிர்பாராமல் செய்யும் உதவியை சேவை (Service) 
என்போம்.

பிரதிபலனாக சம்பளத்தை எதிர்பார்த்தால் அது வேலை. (job)
வேலையைக் கூட சேவை உணர்வோடு செய்யலாம்.

தனிநபரும் சேவை செய்யலாம்.
சேவை மையங்களும் சேவை செய்யலாம்.

உலகியல் சேவையின் மையம் மனிதம் அல்லது மனிதாபிமானம்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் சேவை செய்கின்றனர், மனிதாபிமான அடிப்படையில்.


ஆன்மீகத்தில்:

ஆன்மீகத்திலும் சேவை பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செய்வது தான். ஆனால் சேவையின் மையம் அல்லது நோக்கம் கடவுள், கடவுள் மட்டும்தான். (God centred)

 மனிதன் என்பதற்காக அல்ல,

 கடவுளின் பிள்ளை, கடவுளில் நமது சகோதரன் என்பதற்காக,

 கடவுளின் மகிமைக்காக செய்யப்படுவதுதான் 

ஆன்மீக சேவை அல்லது இறை ஊழியம்.

இயேசு கடவுள்.

 அவர் மனிதனாய்ப் பிறந்து,

 நற்செய்தியைப் போதித்தலாகிய ஊழியம் செய்து, 

நமது மீட்பிற்காகத் தன் உயிரைப் பலியாக்கியது பிரதிபலன் எதிர்பார்த்து அல்ல.

அவர் கடவுள். நிறைவானவர். அவருக்கு எந்தப் பலனும் தேவை இல்லை.

நமது மீட்பிற்காக தன் உயிரைப் பலியாக்கினார்.

நம்மை மீட்டு அவரோடு சேர்த்துக் கொள்வதற்காகவே உயிரை விட்டார்.

இயேசு மனிதருக்கு ஊழியம் செய்தது, அவரது தெய்வீக அன்பை நம்மோடு பகிர்ந்து கொள்வதற்காக மட்டும்தான்.


இயேசு எந்த நோக்கத்திற்காக ஊழியம் செய்தாரோ அதே நோத்கத்திற்காக மட்டும் ஊழியம் செய்ய வேண்டும்.

நாம் உதவியை மனிதனுக்குதான் செய்கிறோம். ஆனால் இறைவனது பிள்ளை என்பதற்காக, இறைவனது மகிமைக்காகச் செய்கிறோம்.

இறைவார்த்தையை அறிவிப்பதையும் அவருக்காகவே செய்கிறோம். 

இயேசுவின் பிரதிநிதிகளாகிய நமது ஞான மேய்ப்பர்கள்

இயேசுவைப் போலவே,

நம்மை இறைவன் பாதம் சேர்ப்பதற்காகவே,

தன்னலம் கருதாமல் இறை ஊழியம் செய்கிறார்கள்.

புனித சவேரியார், புனித அருளானந்தர், வீரமாமுனிவர் போன்ற எண்ணிக்கையற்ற மறைப் பணியாளர்களை இயக்கியது இறையன்பு மட்டும்தான், தன்னலம் அல்ல.

நாம் எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதற்கு best sample புனித கல்கத்தா தெரசா!

தாய் தன் பிள்ளைகளுக்குப் பணிவிடை செய்வது போல

இறையன்பால் உந்தப்பட்டு,

 ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தாயன்புடன் பணிவிடை செய்ததால்

 அன்னை தெரெசா என்று அழைக்கப் பட்டாள்.

 நாமும் இயேசுவுக்காக இறைப் பணி செய்வோம், 

இறைவனோடு இணைவோம்.

லூர்து செல்வம்.

 
.

Friday, July 24, 2020

வார்த்தையைக் கேட்டும் பயனற்றுப் போகிறவன்.

வார்த்தையைக் கேட்டும் பயனற்றுப் போகிறவன்.
************************************
"முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில்,

 வார்த்தையைக் கேட்டு,

 இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை  நெரிக்க, 

பயனற்றுப் போகிறவனே." (மத்.13:22)

இறை வார்த்தை உயிருள்ளது.
உயிர் கொடுக்கக் கூடியது. 
"உண்டாகுக" என்ற ஒரே வார்த்தை இப்பிரஞ்சத்தையே உருவாக்கியது.


இயேசு இறைவார்த்தையை ஒரு  விதைக்கு ஒப்பிடுகிறார்.

விதைக்கும் உயிர் இருக்கிறது.

உயிர் இருப்பதால்தான் அது நிலத்தில் விழுந்தவுடன் முளைத்து தாவரம் ஆகிறது.

நிலத்தில் விழுந்த எல்லா விதைகளுமே முளைக்கின்றன.

ஆனால் முளைத்த எல்லாமே  வளர்ந்து பலன் தருவதில்லை.

சில வளர்வதேயில்லை.

எல்லா உயிர்ப்பிராணிகளுடையவும், தாவரங்களுடையவும் வளர்ச்சியை  அவை வாழும் சூழ்நிலைப் பாதிக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.


இயேசு விதைவிதைப்பவன் உவமையில்
முட்செடிகள் நடுவில் விழுந்த விதைகளைப் பற்றி பேசுகிறார்.

".சில முட்செடிகள் நடுவில் விழுந்தன. முட்செடிகள் அவற்றை நெரித்துவிட்டன."

தரையில் விழுந்ததால் அவை முளைத்திருக்கும். ஆனால் அவை வளர விடாமல் முட்செடிகள் அமுக்கிப்போட்டன. 



மனித மனத்தில் குடியிருக்கும் இவ்வுலகக் கவலையும், செல்வமாயையும் இயேசு

 முட்செடிகளுக்கு ஒப்பிடுகிறார்.

கரும்பலகை முழுவதும் ஏதாவது எழுதியிருந்தால் அதன்மேல் எதுவும் எழுத முடியாது.  

ஏற்கனவே எழுதப்பட்டதை அழித்தால்தான் புதிதாக எழுத முடியும்.

விளையாட்டில் மட்டும் ஆர்வம் உள்ளவனுக்கு

 படிப்பில் ஆர்வம் இருப்பதில்லை.

இறைவார்த்தை விண்ணுலகிற்கு வழிகாட்டக் கூடியது.

ஒருவனது மனத்தில் மண்ணுலகைப் பற்றிய கவலையும், பண ஆசையும் நிறைந்திருந்தால் அங்கே ஆன்மீகத்துக்கு இடமில்லை.

இறைவன் முதலில் உலகைப் படைத்துவிட்டு மனிதனைப் படைத்தது மனிதன் வாழ உலகம் உதவியாக இருப்பதற்காகத்தான்.

அதாவது உலகை மனிதனுக்காகப் படைத்தார், மனிதனை உலகிற்காகப் படைக்கவில்லை.

அதேபோல் தாயின் வயிற்றில் குழந்தை கருவுற்றவுடன் ஆன்மாவைப் படைத்து உடலோடு சேர்த்தார்.

ஆன்மா படைக்கப் பட்டது விண்ணுலக வாழ்வுக்காக, மண்ணுலக வாழ்வுக்காக அல்ல.

மண்ணுலகின் வழியே ஆன்மா செய்ய வேண்டிய விண் நோக்கிய பயணத்தில் அதற்கு  உதவியாக இருப்பதற்காகத்தான் உடல் படைக்கப் பட்டது.

ஆன்மாவிற்காகத்தான் உடல் படைக்கப்பட்டது.

உடலுக்காக ஆன்மா படைக்கப் படவில்லை. 

ஆன்மா மண்ணுலகு வழியே பயணிப்பது உடலின் உதவியால் விண்ணகத்தில் அனுபவிப்பதற்கு வேண்டிய பலன்களைச் சம்பாதிப்பதற்காகத்தான்

 தன் மண்ணுலகப் பயணம் முடிந்தவுடன்

ஆன்மா உடலை மண்ணில் விட்டுவிட்டு தான் விண்ணகம் செல்லும்.

அதன் விண்ணகப் பயணம் வெற்றிகரமாக அமைய 

 அதற்கு உதவியாக இருப்பதற்காகத்தான் அதற்கு இறைவார்த்தை  அருளப்படுகிறது.

ஆனால், ஆன்மா தான் படைக்கப் பட்டதின் நோக்கத்தை மறந்து,

மண்ணக வாழ்வையே நிலையானது என்று எண்ணி 

மண்ணைப் பற்றிய கவலைகளோடு வாழ்ந்ததென்றால் இறை வார்த்தை அதன் காதில் விழாது.

உலகம் பணத்திற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறது.

உலகவாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பணத்தைத் தேடியலைகிறார்கள்.

இவர்கள் கோவிலுக்கு வந்தாலும் உலக சம்பந்தப்பட்ட, வேலை, வருமானம், கடன் போன்ற பணம் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களைத்தான் இறைவன் முன் வைப்பார்கள்.

இறைவார்த்தை சம்பந்தமான பிரசங்கம் இவர்கள் காதில் ஒலிக்காது.


இவர்கள் காதில் விழும் இறை வார்த்தையை அவர்கள் மனதில் நிறைந்துள்ள இவ்வுலகக் கவலையும், செல்வமாயையும், இவர்களது கருத்தில் ஏறாதபடி அழுக்கிவிடும்.

இறைவார்த்தை நமக்கு பலன் தர வேண்டுமென்றால்,

1. நாம் விண்ணகம் 
செல்வதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உறுதியான உணர்வு நம்மிடம்  இருக்க வேண்டும்.

2. நாம் உலகில் இருந்தாலும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல உறுதியான உணர்வும் இருக்க வேண்டும்.

3. உலகப் பொருட்கள் மீது, குறிப்பாக பணத்தின் மீது பற்று அற்றவர்களாக இருக்க வேண்டும்.

4. இறைவார்த்தை நமது ஆன்மீக உணவும், உயிரும் என்ற உணர்வும் இருக்க வேண்டும். அதைக் கேட்க மனதில் ஆவல் இருக்க வேண்டும்.

பக்குவப்பட்டிருக்கிற நிலத்தில் விழுகிற விதைதான் முளைத்து, வளர்ந்து பலன் தரும்.

அதேபோல் நமது மனது இறை வார்த்தையை ஏற்க பக்குவமாக, தயார் நிலையில் இருந்தால்தான் அது நமக்கு ஆன்மீகப் பலன் தரும்.

காலையில் பைபிள் வாசிக்க வேண்டும் என்ற பழக்கத்தின் அடிப்படையில் இல்லாமல்,

இறைவார்த்தையை வாசித்து. அன்று அதை வாழ வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் பைபிள் வாசிக்க வேண்டும்.

'சாப்பிட வேண்டுமே' என்று சாப்பிடுபவன் அவசரமாகச் சாப்பிட்டு விடுவான், ருசித்துச் சாப்பிட மாட்டான்.

ருசிக்காகச் சாப்பிடுபவன் மெதுவாக வாயில் நன்கு மென்று, நாவில் படரவிட்டு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவான்.

இறைவார்த்தையை ருசித்து வாசிக்க வேண்டும்.

ஆண்டவர் எவ்வளவு  இனிமையானவர் என்று ருசித்துப் பார்க்க வேண்டும்.

We must taste and see how Sweet the Lord Is!

வேலைக்குப் போகிற அவசரத்தில் வேகமாகப் பைபிள் வாசித்தால் ஆண்டவரை ருசிக்க முடியாது!

ஞாயிறு திருப்பலியில் பிரசங்கம் ஆரம்பித்தவுடனேயே சிலர் Watch ஐப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

சாமியார் பிரசங்கத்தை நீட்டிவிட்டால் கடையில் mutton fresh ஆக கிடைக்காதே என்ற கவலை அவர்களுக்கு!

பிரசங்க நேரத்தில் மனதில் வேறு எண்ணங்கள் இருந்தால், சாமியார் அளிக்கும் இறைவார்த்தை காதிலே விழாது!

வார்த்தையானவரின் வார்த்தைகள்தான் நமது ஆன்மீக வாழ்விற்கு உயிர்.

இறைவார்த்தை நமது ஆன்மாவுக்கு இரைவார்த்தை என்பதை உணர்ந்து கேட்போம்!

வார்த்தையின் நாயகனோடு என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Thursday, July 23, 2020

."நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."(அரு.15: 4)

."நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."
(அரு.15: 4)
************************************

"செடி வளர என்ன வேண்டும்?"

"தண்ணீர் வேண்டும்."

"அப்புறம்?"

"உரம் வேண்டும்."

"அப்பறம்?"

"ஆக்ஸிஜன் வேண்டும்."

"அப்புறம்?"

"சூரிய ஒளி வேண்டும்."

"அப்புறம்?"

"இவ்வளவும் போதும், சார்."

"ஒரு   மேஜையை வெயிலில் போட்டு, அதன் மேல் ஒரு  செடியைப் போட்டுத் தண்ணீர் ஊற்றினேன், உரம் போட்டேன், ஆனால் அது  வளர வில்லை."

"சார், மேஜை மேல போட்டா எப்படி வளரும்? அது பூமியில் வேரூன்றி நிற்க வேண்டும்."

"Correct. எந்த தாவரமும் பூமியில வேர் ஊன்றி நின்றால்தான் வளரும்.

பூமியை விட்டு வெளியே வந்து விட்ட தாவரம் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் பட்டு தான் போகும்."

"சார், இது ஞானோபதேச வகுப்பு. நீங்க தோட்ட வேலைப் பாடம் நடத்திக் கிட்டிருக்கீங்க?"


"நானே உண்மையான திராட்சைக்கொடி: என் தந்தையே பயிரிடுபவர்."னு சொன்னது யாரு?"

"நம் ஆண்டவராகிய இயேசு,"

"அப்போ ஆண்டவர் தோட்ட வேலைப் பாடமா நடத்தினார்?"

"இல்லை, சார். ஞான உபதேச பாடம் தான், சார்.

நாம் இயேசுவோடு இணைந்திருந்தால்தான் பலன் தர முடியும் என்பத விளக்க

 தன்னைத் திராட்சைக் கொடிக்கும், நம்மை அதன் கிளைகளுக்கும் ஒப்பிடுகிறார்."

"very good. பூமியோடு இணைந்துள்ள தாவரம்தான் வளரும்.

கொடியோடு இணைந்த கிளைதான் பலன் தரும்.

"கிளையானது திராட்சைக் கொடியில் நிலைத்திருந்தாலன்றி, தானாகக் கனி தரமுடியாது. 

அவ்வாறே, நீங்களும் என்னில் நிலைத்திருந்தாலன்றி, கனி தர முடியாது." (அரு.15:4)

இதில் இன்னொரு நயமும் இருக்கிறது.

இயேசு திராட்சைக் கொடி. நாம் அக்கொடியின் கிளைகள்.

கொடியின் பண்பு தான் கிளைக்கும் இருக்கும்.

கொடி உண்ணும் உணவையே கிளையும் உண்ணும்.

அப்படியானால்
இயேசுவின் பண்புகள்தான் நமக்கும் இருக்க வேண்டும்.

தன்னலம் அற்ற அன்பு, இரக்கம், உதவும் குணம், மன்னிக்கும் குணம் இவையெல்லாம் தெய்வீகப் பண்புகள்.

இவை எல்லாம் நம்மிடமும் இருந்தால்தான் நாம் கொடியின் கிளை.

அடுத்து இயேசுவின் அருள்தான் நமது ஆன்மாவுக்கு உணவாக இருக்க வேண்டும்.
   
அதையும் மிஞ்சி இயேசு தன்னையே நமக்கு உணவாகக் கொடுத்திருக்கிறார்.

நமது ஆன்மாவில் ஓடுவது இயேசுவின் இரத்தம்.

அதுமல்ல இயேசுவே நமது உயிர்.

உயிர்தான் உடலை இயக்கும். உயிர் பிரிந்து விட்டால் உடல் இயக்கமற்றது ஆகிவிடும்.

அதே போல நமது ஆன்மாவை இயக்குபவர் இயேசுவே.

பாவத்தால் நாம் இயேசுவை இழந்துவிட்டால் நமது ஆன்மா 
இயக்கமற்றது ஆகிவிடும்.

ஒருவன்

பசியாய் இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு கொடுக்கிறான். 

தாகமாய் இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணீர் கொடுக்கிறான். 

அன்னியனாய் இருப்பவர்களை வரவேற்கிறான். 

 ஆடையின்றி இருப்பவர்களை  உடுத்துகிறான். 

 நோயுற்றோரைப்  பார்க்க செல்கிறான்.

. சிறையில் இருப்பவர்களைக்  காணச் செல்கிறான்.  

ஏழைகளுக்குத் தர்மம் செய்கிறான்.

மாணவர்களை இலவசமாகப் படிக்க வைக்கிறான்.

இந்த செயல்கள் எல்லாம் நற்செயல்களா?"

"தெரியாது சார்."

"ஏன் தெரியாது?"

"அவன் இயேசுவோடு இணைந்திருந்தானா இல்லையா என்று நீங்கள் சொல்லவே இல்லையே!"

.." அதை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அது அவனுக்கு மட்டும் தான் தெரியும்."

.."ஏன் அவனுக்கு மட்டும் தான் தெரியும்?"

"அது அவனுடைய ஆன்மாவின் நிலை. ஆன்மா ஆவி. நம் கண்ணுக்குத் தெரியாது."

.."சரி. அவனுடைய ஆன்மா எப்படி இருந்தால் அவனுடைய செயல் நற்செயல்?"

"அவனுடைய ஆன்மா சாவான பாவம் இல்லாமல், அதாவது, தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருக்க வேண்டும். (State of Sanctifying grace)

அப்போதுதான் அது இறைவனோடு உறவு நிலையில் இருக்கும்.

அடுத்து அவன் செய்கிற செயலை இறைவனது மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

சுய மகிமைக்காகச் செய்தால் நற்செயலுக்கு உரிய பலன் கிடைக்காது."

..."Correct. ஆண்டவர் சொல்கிறார்.

"நான் உங்களில் நிலைத்திருப்பதுபோல நீங்களும் என்னில் நிலைத்திருங்கள்."

இரு உள்ளங்களுக்கு இடையே உறவை உருவாக்குவது அன்பு.
 
இறைவனுக்கும் நமக்கும் இடையே உறவை ஏற்படுத்தும் அன்பை தேவ சிநேகம் (Charity) என்போம்.

இறைவனும் நாமும் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்.

இறைவன் மாறாதவர், ஆகவே அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு ஒருபோதும் மாறாது.

நாம் பரிசுத்த நிலையில் இருந்தாலும், பாவ நிலையில் இருந்தாலும் இறைவன் நம்மீது கொண்டுள்ள அன்பு  மாறாது.

ஆனால் நாம் சாவான பாவம் செய்யும் போது 

இறைவன் மீது அதுவரை  நாம் கொண்டிருந்த அன்பை இழக்கிறோம், அதோடு உறவையும் இழக்கிறோம்.

இறை உறவற்ற நிலையில் நம்மால் நற்செயல் எதுவும் செய்ய முடியாது.

இழந்த உறவை மீண்டும் பெற பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பாவமன்னிப்புடன் பாவத்தினால் இழந்த இறை உறவை மீண்டும் பெறுகிறோம்.

அதன்பின், இறைவன் தன் அன்புடன் நம்மில் நிலைத்திருப்பதுபோல,

 நாமும் அன்புடன் இறைவனில் நிலைத்திருக்க வேண்டும்.

இறைவனோடு நாம் கொண்டுள்ள நிலையான உறவுதான். நம்மை நிலை வாழ்விற்கு அழைத்துச் 
செல்லும்."

"கிறிஸ்துவோடு அன்புறவில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?"

.."தோட்ட வேலை ஒப்புமையையே எடுத்துக் கொள்வோம். 

விபசாயி முதலில் கல், முள் போன்ற வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்தி தோட்டத்தைச் சுத்தம் செய்கிறான்.

அப்புறம் நிலத்தை உழுது பக்குவப்படுத்துகிறான்.

'தோட்டம் சுத்தம் ஆகிவிட்டது. இது போதும்' என்று அதோடு நிறுத்தி விடுவானா?"

"நிறுத்திவிட மாட்டான். நிறுத்தி விட்டால் தோட்டம் சுத்தமாக இருக்கும். ஆனால் வருமானம் ஒன்றும் வராதே!

வருமானம் தரக்கூடிய ஏதாவது பயிரைப் பயிர் செய்வான்.

 அப்போதுதான் வேண்டாத களை ஏதும் முளைக்காது, வருமானமும் வரும். உழைப்புக்குப் பலன் கிடைக்கும்."

..." அதேபோல்தான், பாவமன்னிப்பு பெற்று ஆன்மாவைச் சுத்தம் செய்தால் மட்டும் போதாது.

விண்ணகம் சென்ற பின் அனுபவிக்க ஏதாவது சம்பாதிக்க வேண்டாமா?

விண்ணகம் செல்லும் எல்லோருக்கும் பேரின்பம் உண்டு.

ஆயினும் அதன் அளவு நாம் இவ்வுலகில் செய்யும் நற்செயல்களின் அளவைப் பொறுத்து அமையும்.

அதற்காக நற்செயல்கள் என்னும் பயிர் செய்து, விண்ணகத்தில் பலன் சேர்க்க வேண்டும்.

இப்பலன் விண்ணகப் பேரின்பத்தை அதிகரிக்கும்.

இறைவனுக்காக செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் விண்ணகத்தில் பலன் சேரும்.


"என் சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்."
(மத் 10:42)

மேலும் நற்செயல்களால் நாம் பெறும் இறையருள் பாவச் சோதனைகளுக்குள் நாம் விழாதபடி நம்மைக் காக்கும்.

ஆன்மாவை பாவ அழுக்கு இன்றி வைத்திருந்தால் மட்டும் போதாது.

அதை புண்ணியங்கள் என்ற மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

இயேசுவாகிய திராட்சைக் கொடியில் கிளைகளாக இணைந்திருக்கும் நாம்

 புண்ணியங்களாகிய நற்கனிகள் நிறைய தர வேண்டும்.

இயேசுவைப் பிரிந்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

கிறிஸ்தவன் என்ற பெயரில் பெயரளவில் வாழ்ந்தால் மட்டும் போதாது.

கிறிஸ்து + அவனாக

 (கிறிஸ்துவோடு இணைந்தவனாக)

 கிறிஸ்துவின் பண்புகளை நாமும் பெற்று மறு கிறிஸ்துவாக வாழவேண்டும்.

கிறிஸ்து பணி வாழ்வின்போது சென்றவிடமெல்லாம் நன்மைகளே செய்தார்.

நாமும் கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்போம்.

நம் அன்புச் செயல்களால் நம் ஆன்மாவை விண்ணக  வாழ்விற்கு அழைத்துச் செல்வோம்.

நிலைத்திருப்போம் இறையன்பில்.
நிலைவாழ்வில் இணைந்திடுவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, July 22, 2020

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."(மத். 28:20)

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்."
(மத். 28:20)
************************************

மனிதராய்ப் பிறந்த எல்லோருக்கும் உள்ள  முக்கிய திறமைகள்: சிந்தனை, சொல், செயல்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி.

சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்று திறமைகளையும் தனி மனிதனாக, தனக்குத் தானே யாராலும் பயன்படுத்த முடியாது.

இறைவன் அன்பு, இரக்கம், சுதந்திரம் போன்ற தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டது போலவே,

தனது பகிர்ந்தளிக்கும் பண்பையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

பகிர்வு என்பது சமூகத்தில்தான் முடியும்.

நாம் சிந்திக்கும் எண்ணங்களை நமக்கு வேண்டியவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சொற்களைப் பயன்படுத்துகிறோம்.

சமூகம் இல்லாமல் நமக்கு செயல்களும் இல்லை.

இறைவன் நம்மை சமூகமாகப் படைத்ததே அன்பைப் பரிமாறிக் கொள்வதற்காகத்தான்.

சமூகம் சுமூகமாக இயங்க  அதற்கென்று சில ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

கருத்துக்களைப் பரிமாறி கொள்வதானாலும்

 பொருட்களைப் பரிமாறி கொள்வதானாலும் சில ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மீறினால் சமூகம் சுமூகமாக இயங்காது.

சமூகத்தில் அதிகாரப்பூர்வமான அமைப்பு ஒன்றும், சாதாரண அமைப்பு ஒன்றும் இருக்கின்றன.

நாட்டை எடுத்துக்கொண்டால் அரசாங்கம் அதிகாரபூர்வமான அமைப்பு.
 மக்கள் சாதாரணமான அமைப்பு.

அந்தந்த அமைப்பிலுள்ளோர் அவரவர் கடமைகளைச் செவ்வனே செய்ய வேண்டும்.

ஒருவர் கடமைகளை மற்றவர் செய்தால் நாட்டில் குழப்பம் ஏற்படும்.

வரி வசூலிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

அரசுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லி சாதாரண குடிமகன் வரி வசூலில் இறங்கலாமா?

மருத்துவ துறையின் சான்றிதழ் பெற்ற டாக்டர் பொது மக்களுக்கு மருத்துவம் பார்க்கலாம்.

 மருத்துவ கல்லூரியில் படிக்காத ஒருவர்,

 "எனக்கு நோயும் தெரியும், மருந்தும் தெரியும், ஊசி போடவும் தெரியும் என்று கூறி மருத்துவமனை நடத்தலாமா?

எனக்கு எழுதவும், வாசிக்கவும் தெரியும். எனக்கு தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எழுத வாசிக்க சொல்லிக் கொடுப்பதில் தவறு இல்லை.

 எனக்கு எழுத வாசிக்க தெரியும் என்பதற்காக அரசின் அனுமதி இன்றி பள்ளிக்கூடம் நடத்தலாமா?

ஒருவர் தனக்குச் சட்டம் தெரியும் என்பதற்காக தானே வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்லலாமா?

உலகியல் வழக்கில் உள்ள இந்த விதி முறைகள் ஆன்மீக அமைப்புகளுக்கும் பொருந்தும்.

இயேசு விண்ணகம் எய்து முன் சீடர்களை நோக்கி,

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள்." என்றார்.


அப்போஸ்தலர்கள் இயேசு ஏற்படுத்திய திருச்சபையின் அதிகாரப்பூர்வமான நற்செய்தி போதகர்கள். 

அவர்கள் காலத்திற்குப் பிறகு 
அவர்களால் அதிகாரப்பூர்வமாக
நியமிக்கப்பட்ட ஆயர்கள், 

அவர்களால் அதிகாரப்பூர்வமாக
நியமிக்கப்பட்ட குருக்கள் ஆகியோர் 

இராயப்பரின் வாரிசான பாப்பரசரின் கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வமான நற்செய்தி போதகர்கள். 

திருச்சபையின் ஆளுமை சம்மந்தப்பட்ட சட்டங்களை இயற்றவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும்
அவர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் உண்டு.

நான்கு நற்செய்தியாளர்களும்,
திருமடல் எழுதியவர்களும் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்கள்.

பழைய ஏற்பாட்டு நூல்களையும் கத்தோலிக்கத் திருச்சபை ஏற்றுக் கொண்டது.

ஆகவே பைபிளுக்கு அதிகாரப்பூர்வமான விளக்கம் கொடுக்க கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

அப்போஸ்தலர்களின் அதிகாரப் பூர்வமான வாரிசுகளுக்குதான் 

அதிகாரப் பூர்வமாக நற்செய்தியைப் போதிக்க அதிகாரம் உண்டு என்றால்,

விசுவாசிகளுக்கு (Laity) நற்செய்தியை அறிவிக்கக் கடமை இல்லையா?

விசுவாசிகளுக்கும் (Laity) நற்செய்தியை அறிவிக்கக் கடமை உண்டு.

கத்தோலிக்கத் திருச்சபையினுள்  உள்ள இரண்டு அமைப்புகள்:

பணிக்குருத்துவம்.

பொதுக் குருத்துவம்.

இரண்டு அமைப்பினருமே கிறிஸ்துவின் குருத்துவத்தில்
பங்கு பெறுகிறார்கள்.

பணிக்குருத்துவத்தினர் கிறிஸ்துவின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகள். 
 
அவர்களுக்கு மட்டும்தான் நற்செய்தியைப் போதிக்கும் அதிகாரம் இருக்கிறது.

 அவர்கள்தான்    அதிகாரப்பூர்வமான போதகர்கள். (Preachers)

And he said to them: “Go forth to the whole world and preach the Gospel to every creature.

"ஏனெனில், அவர் மறைநூல் அறிஞர்போலன்றி, அதிகாரமுள்ளவராகப் போதித்து வந்தார்." (மத். 7:29 )

அந்த போதிக்கும் அதிகாரத்தைத் தான் இயேசு அப்போஸ்தலர்களுக்கு வழங்கினார்.

குருவானவர் திருப்பலியின் பிரசங்க நேரத்தில் நற்செய்தியை போதிக்கிறார்.

பொதுக்குருத்துவத்தினர், அதாவது, விசுவாசிகள் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும்.

ஆனால் கோவிலில்  பிரசங்க மேடை (pulpit) மேல் ஏறி போதிக்க அதிகாரம் இல்லை.

இயேசுவால் நேரடியாக நியமிக்கப்பட்ட  அப்போஸ்தலர்களுடைய வாரிசுகள்  மட்டும் தான் அதிகாரத்தோடு  போதிக்கலாம். 

அப்படிப் போதிப்பவர்கள் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனையைத்தான் போதிக்க வேண்டும்.

திருச்சபையின் அதிகாரப்பூர்வமான போதனைக்கு மாறாக போதித்தால் அது போதகம் அல்ல, பேதகம்.

தற்காலத்தில் ஆயிரக்கணக்கானோர்,

இராயப்பரின் தலைமையை ஏற்காதவர்கள்,

 அப்போஸ்தலர்களின்
நேரடி வாரிசுகளாகவும் இல்லாதவர்கள்,

போதனா அதிகாரமே 
இல்லாதவர்கள்

ஆளுக்கொரு பைபிளை மட்டும் எடுத்துக் கொண்டு போதித்துக் கொண்டு திரிவதைப் பார்க்கிறோம்.

இவர்கள் போதிக்கும் அதிகாரத்தைத் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்டார்கள்.

இதில் மிகவும் கவலைக்குரிய விசயம்,

கத்தோலிக்க திருச்சபையின் விசுவாசிகள் கூட கூட்டங்கூட்டமாக அவர்கள் பின்னே போவதுதான்!

நம்மவர்களில் அநேகர் 'சுகமளிக்கும் கூட்டங்கள்' என்ற பெயரில் யார் கூட்டம் போட்டாலும் போய்விடுவார்கள்.

நமது கோவிலுக்கும் வருவார்கள்.

அவர்களுக்குப் புத்திமதி சொல்லப்போனால்.

"நம்மிடமும் பைபிள் இருக்கிறது, 

அவர்களிடமும் பைபிள் இருக்கிறது,


நாமும் இயேசுவைப் பின்பற்றுகிறோம்,

அவர்களும் இயேசுவைத்தான்
.பின்பற்றுகிறார்கள்"

என்று கூறி நமது வாயை அடைப்பார்கள்.

கடவுள் தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

நமது திருச்சபையின்  பொதுக்குருத்துவத்தினருக்கும்

நற்செய்தியை மற்றவர்கட்கு அறிவிக்க கடமை உண்டு.
(போதிக்க அல்ல)

திருச்சபையின் போதனையிலிருந்து கற்றவற்றை நாம் கடைப்பிடிப்பதோடு,
மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்

நமது அறிவித்தல் திருச்சபையின் போதனைக்கு மாறாக இருந்து விடக்கூடாது.

நற்செய்தியின்படியிலான நமது  வாழ்வே ஒரு நற்செய்தி அறிவிப்பாக இருக்க வேண்டும்.

அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன் பைபிள் கையினாலேயே எழுதப்பட்டதால்  எண்ணிக்கை குறைவு.

ஆகவே கோவிலில் மட்டும் ஒரு பைபிள் இருக்கும். பங்குக் குரு அதை வாசித்து, மக்களுக்குப் போதிப்பார்.

மக்கள் போதனைப் படி வாழ்ந்தனர்.

ஆனால் இப்பொழுது ஆளுக்கொரு பைபிள் இருக்கிறது.

பைபிள் இறைவனின் வார்த்தை. அது எல்லோரிடமும் இருப்பது மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்.

தினமும் பைபிள் வாசிக்கும் பழக்கம் மக்களிடையே இருக்கிறது.

அதுவும் மகிழ்ச்சி தரக்கூடிய விசயம்தான்.

கவலைக்குரிய  விசயம், பைபிளுக்கும் நம் வாழ்வுக்கும் சம்பந்தம் இல்லாதிருப்பதுதான்.

அதைவிட கவலைக்குரிய விசயம் பைபிள் வசனங்களுக்கு அவரவர் இஸ்டப்படி விளக்கம் கொடுத்துக் கொள்வது.

உதாரணத்துக்கு:


"ஏனெனில், திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே 

மனிதன் விசுவாசத்தினாலே

 இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்படுகின்றான் என்பது என் கருத்து."
(உரோமை, 3:28)

என்ற வசனத்தை வாசித்துவிட்டு

"மீட்பு பெற விசுவாசம் மட்டும் போதும், நற்செயல்கள் தேவை இல்லை" என்று தாய் வீட்டை விட்டு விட்டு தனிக்குடித்தனம் சென்றோர் கூறுகின்றார்கள்.

ஆனால் அந்த வசனத்தை எழுதிய அதே சின்னப்பர் தான்


"அவரோ ஒவ்வொருவனுக்கும் அவனவன் செயல்களுக்கேற்பக் கைம்மாறு தருவார்.

7 நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு முடிவில்லாத வாழ்வை வழங்குவார்."
(உரோமை, 2:6.7)

என்றும் எழுதியுள்ளார்.

இறைவன் யாருக்கு 
முடிவில்லாத வாழ்வை வழங்குவார்.?

"நற்செயல் செய்வதில் உறுதி தளராமல், மகிமையும், மாண்பும் அழியாமையும் தேடுவோர்க்கு."

இரண்டாவது அதிகாரம், 6, 7 வசனங்களில் நற்செயல் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் சின்னப்பர், 3:28ல் அதை மறுப்பாரா?

இறைவார்த்தை ஒன்றுக் கொன்று முரண்படுமா?

அப்படியானால்


"திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே" 

என்பதன் விளக்கம் என்ன?

சின்னப்பர் குறிப்பிடுவது பழைய ஏற்பாட்டின் திருச்சட்டம்.

"திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும்." (3:19)

சின்னப்பர் புறஜாதியாரின் (gentiles) அப்போஸ்தலர்.

யூதர்களுடைய திருச்சட்டம் விருத்த சேதனத்தை வலியுறுத்துகிறது.

புறஜாதியினர் யூதர்களுடைய திருச்சட்டப் படியிலான விருத்த சேதனத்தை  செய்யத் தேவை இல்லை என்பது சின்னப்பருடைய கருத்து.

யூதர்களுடைய திருச்சட்டம் யூதர் அல்லாதோரை எப்படிக் கட்டுப்படுத்தும்?

ஆகவேதான்

திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும்.

திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே

மீட்பு அடையலாம் என்று சின்னப்பர் சொல்கிறார்.

மீட்பு பெறத் தேவையானது 

கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம், அவர் வலியுறுத்தும் நற்செயல்கள்.

( மத். 25:34-45 வாசித்தால் இது புரியும்)

பைபிள் வசனங்களுக்கு இஸ்டம் போல் பொருள் கொடுப்பதால்தான்

இன்று 48,000 பிரிவினை சபைகள் தோன்றியிருக்கின்றன!

நாம் கத்தோலிக்கர்.

கத்தோலிக்க திருச்சபையின் போதனைக்கு உட்பட்டு,

நற்செய்தியை வாழ்வோம்,

மற்றவர்களுக்கும்  அறிவிப்போம்.

லூர்து செல்வம்.

Tuesday, July 21, 2020

ஆண்டவரிடம் ஒரு கேள்வி.(தொடர்ச்சி)

ஆண்டவரிடம் ஒரு கேள்வி.
(தொடர்ச்சி)
************************************

எனது தேவசுபாவத்தில் பாவப் பரிகாரமாக துன்பப்பட முடியாது.

ஆகவேதான் மனிதனாய்ப் பிறந்தேன்.

அதாவது, உனது பாவத்திற்குப் பரிகாரமாகத்  துன்பப்படுவதற்காகவே
மனுவுரு எடுத்தேன்.

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பிறப்பு முதல் இறப்புவரை கஸ்டமான வாழ்க்கையே வாழ்ந்தேன்.

எனக்குத் தாயாக வசதியுள்ள ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க என்னால் முடிவும்.

ஆனால், ஒரு ஏழைக் கன்னியிடமிருந்துதான் பிறந்தேன்.

என்னை வளர்ப்பதற்கு ஒரு ஏழைத் தச்சனைத் தேர்ந்தெடுத்தேன்.

இந்த பிரபஞ்சமே எனது படைப்பு.  ஆனால் பிறக்கச்  சத்திரத்தில் கூட இடம் கிடைக்காமல், மாட்டுத் தொழுவில் பிறந்தேன். 

மாட்டுச் சாண வாசனையில்,

தீவனத் தொட்டியில்,

மார்கழிக் குளிரில் என் உடல் நடுங்கப் படுத்திருந்தேன்.

ஏரோது மன்னன் என்னைக் கொலை செய்யத் தேடினான்.

'உண்டாகுக' என்ற ஒரே வார்த்தையால் உலகைப் படைத்தவன் நான்.

'அழிக' என்று நினைத்தாலே ஏரோது அழிந்திருப்பான்.

ஆனால் அதைச் செய்யவில்லை.

எகிப்துக்கு ஓடினேன், என்னைப் பெற்ற தாயையும் வளர்த்த தகப்பனையும் கஸ்டப்படுத்திக் கொண்டு.

நசரேத்துக்குத் திரும்பிய பின், பெற்றதாய்க்கும், வளர்த்த தகப்பனுக்கும் கீழ்ப்படிந்து நடந்தேன்.

உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் உணவளிக்கும் நான்,

30 வயது வரை தச்சுத் தொழில் செய்துதான் பிழைத்தேன்.

3 ஆண்டு பொது வாழ்வில் சென்றவிடமெல்லாம் நன்மைகளே செய்தேன்.

ஏழைகளோடு வாழ்க்தேன்,

என்னை, ''இதோ! போசனப் பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன் " என்று சொன்னார்கள். .

என்னைக் கொல்லவே வழிதேடினார்கள்.

தேவனாகிய என்னையே தேவ தூஷணம் சொல்வதாகக் கூறினார்கள்.

குறித்த காலம் வந்தவுடன் என்னால் படைக்கப் பட்டவர்களே என்னைக் கைது செய்து கொண்டு போனார்கள்.

குற்றவாளியை விசாரிப்பதைப் போல் கடவுளாகிய என்னையே விசாரித்தார்கள்.

கற்றூணில் கட்டி வைத்து  அடித்தார்கள்.

முள்ளால் முடி பின்னி என் தலையில் வைத்து அடித்தார்கள்.

முடியின் முட்கள் மண்டை ஓட்டில் துளை இட்டு, மூளை வரை இறங்கியதால் தலையிலிருந்து இரத்தம் அருவி போல் கொட்டியது.

எவ்வளவு வேதனை இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்!

என் மேல் காரித் துப்பினார்கள். செருப்புக் காலால் என்னை உதைத்தார்கள்.

மிகப் பாரமான சிலுவையை என் மேல் சுமத்தினார்கள்.

சுமக்க முடியாமல் சுமந்து,

நடக்க முடியாமல் நடந்தேன், நடந்த இடமெல்லாம் இரத்தத்தைச் சிந்திக்கொண்டு.

சுமக்க முடியாமல் மூன்று முறை கீழே விழுந்தேன்.

மாட்டைச் சாட்டையால் அடித்து எழுப்புவதுபோல் என்னை காலால் உதைத்து எழுப்பினார்கள்.

கல்வாரி மலைக்குச் சென்றவுடன் நான் சுமந்து சென்ற சிலுவையிலேயே என்னை ஆணிகளால் அறைந்தார்கள்.

ஆணிகள் எனது கைகளையும், பாதங்களையும் துழைத்து, சிலுவை மரத்தையும் துழைக்கும் வரை அறைந்தார்கள்.

அப்போது நான் பட்ட வேதனையை விபரிக்க வார்த்தைகளே கிடையாது.

ஆணிகள் அந்தப் பக்கம் சென்றவுடன் சிலுவையை மாற்றிப் போட்டு ஆணிகள் வளையும் வரை அடித்தார்கள்.

குப்புறக் கிடந்த என் மேல் பாரச் சிலுவை அழுத்தியது.

என் உடல் வேதனையால் துடித்தது.

பின் சிலுவையை இரண்டு கள்வர்களின் சிலுவைகளுக்கு நடுவே நட்டார்கள்.

கடவுளாகிய நான்  திருடர்களோடு சிலுவையில் தொங்கினேன்.

தாங்கமுடியாத வேதனை மட்டுமல்ல , அவமானம்!

என் உயிரைத் தந்தையிடம் ஒப்படைக்கும் வரை வேதனை, அவமானம்!

மனித குல மீட்பிற்காக இரத்தம் எல்லாம் சிந்தியாயிற்று.

நான் இறந்த பின்னும் மிச்சமிருந்த ஒன்றிரண்டு துளி இரத்தத்தையும் என் விலாவில் ஈட்டிகொண்டு குத்தி வெளியேற்றி விட்டார்கள்.

எல்லா வேதனைகளையும்
பொறுத்துக் கொண்டேன்.

யாருக்காக?

உனக்காக. மனித குலத்திற்காக.

எதற்காக?

மனிதன் செய்த பாவங்களுக்காக!

துன்பப்படவே முடியாத நான் துன்பப்படுவதற்காகவே மனிதனாய்ப் பிறந்தேன்.

சாகவே முடியாத நான் சாவதற்காகவே மனிதனாய்ப் பிறந்தேன்.

துன்பத்தையும், சாவையும் எதற்காக நான்  தேர்ந்தெடுத்தேன்?

உன்மேல், மனுக்குலத்தின் மேல், கொண்டுள்ள அளவு கடந்த அன்பின் காரணமாக மட்டும்தான்.

உன்னை நேசித்தேன், ஆகவே துன்பத்தை நானே  ஏற்றுக் கொண்டேன்.

நீ எனது சீடன்.

நீ கேட்கிறாய்,

"உம்மை நேசிக்கும் எங்களுக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறீர்?"
என்று!

மனிதர்களை  நேசித்த ஒரே காரணத்திற்காக வேதனைகளை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட என்னைப் பார்த்து கேட்கிறாய்

"உம்மை நேசிக்கும் எங்களுக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறீர்?"
என்று!

நீ செய்த பாவத்திற்காக நான் பரிகாரம் செய்ய துன்பங்களை அனுபவித்தேன்,

நீ செய்த பாவத்திற்காக நீ பரிகாரம் செய்ய நீ துன்பங்களை அனுபவிக்கக்கூடாதா?"

"மன்னியுங்கள், ஆண்டவரே, யோசிக்காமல் கேட்ட  கேள்விக்காக மன்னியுங்கள்.

உலகக் கண்ணோடு பார்க்காமல், விசுவாசக்  கண்ணோடு பார்த்திருந்தால்

துன்பங்களைப் பற்றிய உண்மையைப் புரிந்து கொண்டிருந்திருப்பேன்.

ஆண்டவரே, உலகம் சிலுவையை குற்றவாளிகளின் தண்டனைச் சின்னமாகப் பார்த்தது.

ஆண்டவரே, நீர் அதைப் பாவிகளின் மீட்புச் சின்னமாக மாற்றி விட்டீர்.

பாவத்தின் விளைவாகிய துன்பத்தை பாவப் பரிகாரமாக மாற்றிவிட்டீர்.

பாவப் பரிகாரம் மன்னிப்பைப் பெற்றுத்தரும்,

மன்னிப்பு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும்.

ஆகவே துன்பங்களை விண்ணக வாழ்விற்கான வழியாக மாற்றி விட்டீர்.

நன்றி. ஆண்டவரே, நன்றி."

"இப்போ என் கேள்விக்குப் பதில் சொல்.

உலகோர்  பேரிடராக நினைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

"ஆண்டவரே, மனதில் பட்டதைச் சொல்லவா?"

"உன் அடிமனம் வரை அறிந்தவர் நான்.  சொல்லு."

"நீர் அனுப்பியுள்ள இந்தத் துன்பம்

கெட்டுக் கொண்டிருக்கும் உலகைத்

திருத்துவதற்காக நீர் எடுத்துள்ள நடவடிக்கை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனாலும் உம்மை விசுவசிப்பவர்கள்

மீட்பிற்காக நீர் ஏற்படுத்தியுள்ள தேவத் திரவிய அனுமானங்களைப் பெற முடிய வில்லையே

என்ற கவலைதான் எங்களை வாட்டுகிறது.

ஆகவே கொரோனாவை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் உம்மை வேண்டுவதில் தவறு இல்லை என்று எண்ணுகிறேன்."

"தன்னுடைய பிள்ளையைப் பலியிடும்படி நான் அபிரகாமைக்  கேட்ட போது அவர் முழு மனதோடு கீழ்ப்படிந்தது பற்றி என்ன நினைக்கிறாய்?"

"அவர் மகன் வழியே ஒரு பெரிய சந்ததியைத் தருவதாக ஏற்கனவே வாக்களித்திருந்தீர்.

நீர் கொடுத்த வாக்கை மீற மாட்டீர் என்று அபிரகாம் உறுதியாக விசுவதித்தார்.

அவரது விசுவாசம் அவரைக் கீழ்ப்படிய வைத்தது."

" அந்த விசுவாசம் உங்கள் அனைவருக்கும் வேண்டும்.

"நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

என்று உங்களுக்கு வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன்.

நான் உங்களோடு இருக்கும்போது நீங்கள்
ஏன் பயப்ட வேண்டும்?"

"எங்கள் மேல் அளவிடமுடியாத
அன்பு நிறைந்த,

சர்வ வல்லப கடவுளாகிய உம் மடியில் இருக்கிறோம். ஆகவே எதற்கும் பயப்பட மாட்டோம்.

துன்பங்கள் எங்களை விண்ணகத்திற்கு ஏற்றிச் செல்ல நீர் ஏற்பாடு செய்துள்ள விண்கப்பல்கள்.

அவற்றில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்கிறோம்.

நன்றி, ஆண்டவரே, நன்றி."

லூர்து செல்வம்.