Friday, December 29, 2023

பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்: ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்: கடவுள் அருளும் அவர்மீது இருந்தது." (லூக்.2:40)

''பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்: ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்: கடவுள் அருளும் அவர்மீது இருந்தது." (லூக்.2:40)

'கடவுள் மனித உறவை' மையமாக வைத்துத் தியானித்தால் சில உண்மைகள் புலனாகும்.

நித்திய காலத்திலிருந்தே சுயமாக இயங்கி வருபவர் கடவுள்.

அவர் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

 எல்லாவற்றுக்கும் ஆதி காரணர்.

தன்னுடைய பண்புகளில் அளவில்லாதவர்.

ஆகவே மாற முடியாதவர்.

வளர முடியாதவர்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் அவரைச் சார்ந்தே வாழ்கிறான்.

அவனது ஒவ்வொரு அணுவும் அவரால் தான் இயங்குகிறது.

உலகில் அவனது துவக்கத்துக்கும் முடிவுக்கும் காரணர் அவரே.

மனிதன் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிக்க 

இறைமகன் மனிதனாகப் பிறந்தார்.

கடவுள் மனிதனாக மாறவில்லை, 
மனிதனாகப் பிறந்தார்.

கன்னி மரியின் வயிற்றில் மனுவுரு எடுத்த போதும்  அவர் கடவுளாக இருந்தார்.

மனிதனாகப் பிறந்த இறைவனுக்கு இரண்டு சுபாவங்கள்,

தேவ சுபாவம், மனித சுபாவம்.

அவர் முழுமையாகக் கடவுள்,
முழுமையாக மனிதன்.

அவரிடம் கடவுளுக்குரிய தன்மைகள் அத்தனையும் முழுமையாக இருந்தன.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் அவர் மனிதனாகவும் விளங்கினார்.

மனிதனாகப் பிறந்த பின்பு தான் அவருக்கு இயேசு என்னும் பெயர் சூட்டப்பட்டது.

இறைமகன் கடவுள்.

கடவுள் மனிதனாகப் பிறந்ததால், அன்னை மரியாளை கடவுளின் தாய் என்கிறோம்.

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்,

துவக்கமும் முடிவும் உள்ள, அதாவது பிறப்பும் மரணமும் உள்ள
மனிதனாகப் பிறந்தார்.

மனித சுபாவத்தில் கடவுள் பிறந்தார், வளர்ந்தார், மரித்தார்.

கடவுள் மனிதனுக்காக மனிதனாகப் பிறந்ததோடு, அவனுக்கு முன்மாதிரியாகவும் வாழ்ந்து காட்டினார்.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் அவர் மனிதனாக வாழ்ந்ததால்,

மனிதன் பாவத்தை முழுமையாக கைவிட்டு கடவுளாகிய இயேசுவைப் போல் வாழ வேண்டும்.

"பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்: 

ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்: 

கடவுள் அருளும் அவர்மீது இருந்தது."

குழந்தையாக பிறக்கும் நாம் வளர்ந்து வலிமை பெற்றால் மட்டும் போதாது,

இயேசுவைப் போல ஞானம் உள்ளவர்களாக வளர வேண்டும்.

அவர் கடவுள், அருள் நிறைந்தவர்.

ஆன்மீக வாழ்வின் மூலம் அருள் நிறைந்த அவரிடமிருந்து அருளைப் பெற்று அதில் நாமும் வளர வேண்டும்.

ஒரே வாக்கியத்தில்,

நாம் வலிமையிலும், ஞானத்திலும், அருளிலும் வளர வேண்டும்.

யாரும் சொல்லாமலேயே நாம் சாப்பிட்டு வலிமையில் வளர்கிறோம்.

வலிமையில் மட்டும் வளர்ந்தால் நாம் மனிதர்கள் அல்ல.

ஞானத்தில் எப்படி வளர்வது?

ஞானம் என்றால் என்ன?

புத்தியால் பெற்ற அறிவை, இறைவன் சித்தத்தின்படி வாழ பயன்படுத்தத் தெரிவது ஞானம்.

இறைவன் சித்தப்படி வாழத் தனது அறிவைப் பயன்படுத்தியதால் தான் அன்னை மரியாளை ஞானம் நிறைந்த கன்னிகையே என்கிறோம்.

தினமும் பைபிளை வாசிக்கிறோம்.

இறைவனது நற்செய்தியை பற்றிய அறிவைப் பெறுகிறோம்.

பெற்ற அறிவை நமது ஆன்மீக வாழ்வில் பயன்படுத்துகிறோமா?

அல்லது வினாடி வினாக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மட்டும் பயன்படுத்துகிறோமா?

நற்செய்தியின் படி வாழத் தெரியாவிட்டால்,

அதாவது நம்மிடம் ஞானம் இல்லாவிட்டால்,

நற்செய்தியில் Phd. பட்டம் வாங்கினாலும் கூட பயனில்லை.

தூய ஆவியின் வரங்களில் முதன்மையானது ஞானம்.

அருளில் வளர்வது எப்படி?

பாவக்கறையில்லாத ஆன்மாவின் மீது இறைவன் தனது அருளைப் பொழிகிறார்.

ஜென்மப் பாவமாசு இல்லாமல் உற்பவித்த நமது அன்னையை ''அருள் நிறைந்த மரியே" என்று அழைக்கிறோம்.

பாவத்தை விலக்கினால் மட்டும் போதாது, புண்ணியத்தில் வளர வேண்டும்.

புண்ணியத்தின் அளவு அதிகரித்தால் அதற்கு ஏற்றபடி இறைவன் அருளும் நம்மில் அதிகரிக்கும்.

மனிதர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக

 இறை மகன் பாவம் தவிர மற்ற எல்லா மனிதத் தன்மைகளையும் ஏற்று மனிதனாக பிறந்தார்.


இயேசு காட்டிய வழியைப் பின்பற்றி

நமது அயலானுக்கு உதவுவதற்காக,

பாவம் தவிர வேறு எந்த நிலைக்கும் இறங்கத் தயாராக இருக்க வேண்டும்.

பட்டினியாக இருக்கும் அயலானுக்கு உதவ நாம் பட்டினியாயிருந்தால் நாம் இயேசுவுக்கு பிரியமான சீடர்களாக வாழ்வோம்.

வசதியாக வாழும் ஒருவருக்கு தேவ அழைத்தல் வந்தால் 

தனது வசதியான வாழ்க்கையை கைவிட்டுவிட்டு இறைவனது அழைத்தலை ஏற்று,

வறுமையில் வாழும் குருக்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

உடல் வலிமையில் மட்டுமல்ல, ஆன்மீக ஞானத்திலும், அருளிலும் வளர்வோம்.

இவ்வுலகில் மட்டுமல்ல நித்தியத்திற்கும் இயேசுவோடு வாழ வேண்டியவர்கள் நாம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment