Thursday, December 21, 2023

என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.(லூக்.1:47)

என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது.
(லூக்.1:47)   

அன்னை மரியாள் எலிசபெத்தம்மாளின் வீட்டில் வைத்து இறைவனைப் புகழ்ந்த போது,

"என் மீட்பராம் கடவுளை நினைந்து என் இதயம் களிகூருகின்றது" என்று பாடினாள்.

அன்னை மரியாளின் மீட்பர் யார்?

அன்னை மரியாள் உட்பட அனைத்து மனிதர்களுக்கும் மனு மகனாய்ப் பிறந்த இறைமகன் இயேசு தான் மீட்பர்.

மரியாள் இந்த பாடல் வரிகளை பாடிய போது மனித குல மீட்பர் அவளது வயிற்றில்தான் கருவுற்ற குழந்தையாக இருந்தார்.

தான் பெற விருந்த தனது மகனைப் புகழ்ந்துதான் மரியாள் இந்த பாடலைப் பாடினாள்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

நாம் அனைவரும் பாவிகள். பாவம் செய்தவர்கள். நம்மை நமது பாவத்திலிருந்து மீட்க ஒரு மீட்பர் தேவை.

ஆனால் மரியாள் ஜென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்தது மட்டுமல்ல, அவளது வாழ்நாளில் எந்த ஒரு பாவமும் செய்யவில்லை.

அருள் நிறைந்தவளாய் உற்பவித்தவள் அருள் நிறைந்தவளாய்த்தான் வாழ்ந்தாள்.

பாவம் இல்லாமல் உற்பவித்து பிறந்து வாழ்ந்த அவளுக்கு மீட்பர் எதற்கு?

நோயுற்றவர்கள் மருத்துவரை தேடிச் செல்கிறார்கள். அவர் அவர்களைப் பரிசோதித்து மருந்து கொடுத்து நோயைக் குணமாக்குகிறார்.

அதே மருத்துவர் தனது மகனுக்குத்  தடுப்பு மருந்து கொடுத்து, சத்துள்ள உணவு கொடுத்து நோய் எதுவும் வராத படிக் காப்பாற்றுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

நோய் வந்தவர்களுக்கு மட்டுமல்ல,  நோய் வராமல் அவரால் காப்பாற்றப்பட்ட அவரது மகனுக்கும் அவர்தான் மருத்துவர்.

பாவிகளாகிய நம்மை பாவத்திலிருந்து மீட்ட அதே இயேசு தான், 

 தான் பாவமே நெருங்காமல் காப்பாற்றிய தனது அன்னைக்கும் மீட்பர்.

அவர் காப்பாற்றியிருக்காவிட்டால் மரியாள் நம்மைப் போல் தான் உற்பவித்திருப்பாள். 

ஆகவே இறைமகன் இயேசு தான் அவரது தாய்க்கும் மீட்பர்.

தனது வயிற்றில் மனுவுரு எடுத்திருப்பது இறை மகன் என்பது அவளுக்குத் தெரியும்.

தன்னைப் படைத்த கடவுள்தான் தன் வயிற்றில் மனிதனாக உற்பவித்திருக்கிறார் என்பதும் அவளுக்கு தெரியும்.

தன் மகனைப் புகழ்ந்தே இந்தப் புகழ்ச்சிப் பாடலை மரியாள் பாடினாள்.

அவளது மகனை நினைத்ததுமே அவளது இதயம் மகிழ்ச்சியால் பொங்கியது.

இயேசு போதனையாளர் மட்டுமல்ல, சாதனையாளர்.

தனது போதனைகளை வாழ்ந்து காட்டியவர்.

தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கின்றவர்கள் உயர்நிலையை அடைவார்கள் என்று போதித்தவர்,

தனது அடிமையைத் தனது தாய் நிலைக்கு உயர்த்தினார்.

அது மட்டும் அல்லாமல் அவளை விண்ணக மண்ணக அரசியாக உயர்த்தினார்.

மற்ற மனிதர்களிலும் தாழ்ச்சியுடன் வாழ்கின்ற மிகச் சிறியவர்கள் விண்ணரசில் பெரியவர்களாக கருதப்படுவார்கள் என்றார்.

நமது அன்னையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்,

நமது அன்னையின் அருள் நிறைந்த தன்மை இறைவன் அவருக்கு அளித்த விசேச வரம்.

அருளைப் பொருத்தம் மட்டில் அவள் சமுத்திரம் என்றால் நாம் ஒரு தம்ளர் மட்டுமே.

நாம் பாவிகள். பாவ நிலையில் இறைவனின் அருளை நம்மால் பெற இயலாது.

ஆனாலும் இறைவனின் அருளின் உதவி இன்றி நம்மால் பாவங்களுக்கு மனஸ்தாபப்பட முடியாது.

அதற்கான அருளை இறைவன் எல்லோருக்கும் தருகிறார்.

அதைப் பயன்படுத்தி பாவங்களுக்கு 
மனஸ்தாபப்பட்டு, பாவ மன்னிப்பு பெற்றுவிட்டால் நமது ஆன்மாவிற்கு இறைவன் அருள் கிடைக்கும்.

அந்த அருளின் உதவியால் பாவ சந்தர்ப்பங்களை விலக்கி, பாவங்களைச் செய்யாமல், புண்ணிய வாழ்வு வாழ்ந்தால்

புண்ணியங்களின் அளவுக்கு ஏற்ப நமக்கு அதிகமான அருள் கிடைக்கும்.

சமுத்திரத்தின் அளவு அருள் கிடைக்காவிட்டாலும்

 தம்ளரின் அளவு இறைவனின் அருளை நம்மால் ஈட்ட முடியும்.

நமது புண்ணிய வாழ்வால் எவ்வளவு இறையருளைப் பெற முடியுமோ அவ்வளவு பெற முயற்சி செய்ய வேண்டும்.

கருவுற்றிருந்த நிலையிலும் மலை நாட்டிற்கு நடந்து சென்று எலிசபெத்தம்மாளுக்கு அன்னை மரியாள் உதவி செய்தாள்.

அன்னையைப் பின்பற்றி நாம் நமது பிறருக்கு உதவி செய்வதன் மூலம் அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழலாம்.

நமது அன்னையைப் போல நாமும் நமது ஜெபத்தின் போது தனது அருளால் நம்மை வழி நடத்தி வரும் இறைவனை புகழ்ந்து பாடுவோம்.

நம் மீது இறைவன் கொண்டுள்ள அன்பை நினைத்து அகமகிழ்வோம்.

நமது அன்னையைப் பின்பற்றி வாழ்ந்தால் விண்ணுலகில் அவள் அருகே அமர்ந்து 

நித்திய பேரின்ப வாழ்வு வாழ நமக்கு இறைவன் அருள் கிடைக்கும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment