Sunday, November 12, 2023

விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.''(மத்.25:13)

"விழிப்பாயிருங்கள்: ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.''
(மத்.25:13)

"', இங்கே வா. இப்போது மணி என்ன?"

''இரவு 10 மணி"

"' தூங்கப்போகல?"

"இன்று இரவு முழுவதும் விழித்திருக்கப் போகிறேன்."

"'தூக்கம் வரவில்லையா?"

"தூக்கம் வந்தாலும் தூங்கப்போவதில்லை''..

"'ஏன்?"

"இன்று இரவு எனது மாமா வரப்போவதாக அப்பா சொல்லி இருக்கிறார்."

"'வருகின்றவரைக் காலையில் பார்த்துக் கொள்ளலாமே அதற்கு ஏன் விடிய விடிய தூங்காமலிருக்க வேண்டும்."

"மாமா வந்தவுடன் அப்பாவை பார்த்துவிட்டு உடனே ஊருக்கு போய்விடுவார்.

என்னையும் அவரோடு கூட்டிக்கொண்டு போய்விடுவார்.

மாமாவுடன் போவதற்காகத் தான் நான் தூங்காமல் விழித்திருக்கிறேன்."


ஆன்மீகத்தில் இந்த பையனின் நிலைதான் நமது நிலையும்,

நமது ஆண்டவராகிய இயேசு நம்மை மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டு போவதற்காக எந்த நேரமும் வருவார்.

அவர் வரும்போது நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

தயார் நிலையில் என்றால் பாவம் இல்லாமல் என்பது பொருள்.

ஆண்டவர் வரும்போது நாம் பாவ நிலையில் இருந்தால் அவரோடு மோட்சத்திற்குப் போக முடியாது.

ஆகவே எப்போதும் நமது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் நாம் பாவம் இல்லாமல் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஆண்டவரை வரவேற்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நாம் தூங்கும் போது அவர் வரலாம்.

விழித்திருக்கும் போதும் வரலாம்.

பயணம் செய்து கொண்டிருக்கும் போதும் வரலாம்.

அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் போதும் வரலாம்.


அவர் நம்மை மோட்சத்திற்கு அழைத்துக் கொண்டு போக வர விருப்பதால் அவர் வரும் நேரம் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும்.

எப்போதாவது நாம் பாவத்தில் விழ நேர்ந்தால் உடனடியாக நமது 
ஆண்டவரிடம் பாவ மன்னிப்பு பெற்று தயார் நிலைக்குத் திரும்ப வேண்டும்.

ஆண்டவர் நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்ல வரும் நேரத்தை தானே மரணம் என்கிறோம்.

'ஆனால் யாருக்கும் மரணம் மகிழ்ச்சியை தரும் நேரமாக தெரியவில்லையே. 

இந்த உலகிலேயே எப்போதும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றவர்களுக்குத்தான் மரணம் மகிழ்ச்சியைத் தராது.

மோட்சத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகின்ற அவர்களுக்கு மரணம் மகிழ்ச்சிகரமான நேரம்.

நாம் பாவமே செய்யாதிருந்தால் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம்.

விண்ணகம் தான் நமது நிரந்தரமான வீடு.

அதை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

பயணத்தை விட வீட்டைப் பற்றிய நினைவுதான் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.

ஆண்டவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

நாம் தயாராக இருப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment