Sunday, November 19, 2023

இதோ, என் தாயும் என் சகோதரரும்.( மத்.12:49)

இதோ, என் தாயும் என் சகோதரரும்.
( மத்.12:49)

இயேசு அவரைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்திற்கு நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது அன்னை மரியாளும், அவளுடைய சகோதரியின் பிள்ளைகளும்
இயேசுவைப் பார்ப்பதற்காக வந்தவர்கள் கூட்டத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்.

கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி, "இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மோடு பேச வெளியே காத்துக்கொண்டிருக்கின்றனர்" என்றான்.

அதைக் காதில் வாங்கிக் கொண்ட இயேசு,

தம் சீடர்பக்கம் கையைக் காட்டி, 

"இதோ, என் தாயும் என் சகோதரரும்.

வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.

நமது அன்னையை விரும்பாத நமது பிரிவினை சகோதரர்கள்,

இயேசுவின் இந்த வார்த்தைகளைத் தங்களுக்குச் சாதகமாக தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

தனது சீடர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைத் தனது அன்னைக்குக் கொடுக்கவில்லை என்பது போல் பேசுகிறார்கள்.

இயேசு தனது அன்னையை அளவு கடந்த விதமாய் நேசித்தார்.

தனது தந்தையின் விருப்பப்படி மனிதனாகப் பிறக்கத் தீர்மானத்த இயேசு

கன்னி மரியாள்தான் தனது அன்னையாக இருக்க வேண்டும் என்று நித்திய காலத்திலிருந்தே தீர்மானித்துவிட்டார். 

இங்கே ஒரு முக்கியமான உண்மையை மனதில் கொள்ள வேண்டும்.

தனது நித்திய தந்தையின் விருப்பத்தை மட்டுமல்ல,

தான் தனது தாயாக தேர்ந்தெடுத்த மரியாளின் விருப்பத்தையும் இயேசு நிறைவேற்றினார்.

மரியாள் சிறுமியாக இருக்கும்போதே கடவுளின் முன் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

இறைமகன் மனித சுபாவத்தில் தனது அன்னையாக தேர்ந்தெடுத்த மரியாளின் விருப்பத்திற்கு இணங்க 

அவளது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படாமல், பரிசுத்த ஆவியின் வல்லமையால் அவளது வயிற்றில் மனிதவுரு எடுத்தார். 

கன்னி மரியாள் இயேசு அவளது வயிற்றில் மனிதவுரு எடுக்கு முன்னும் கன்னி, 

எடுக்கும் போதும் கன்னி, 

பிறந்த பிறகும் கன்னி, 

முக்காலமும் கன்னி.

ஆக இயேசு தனது இறைத் தந்தையின் சித்தத்தையும், மனிதத் தாயின் சித்தத்தையும் நிறைவேற்றினார்.

அது மட்டுமல்ல தனது அன்னை அவளது தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே அவளை ஜென்மப் பாவ மாசிலிருந்து காப்பாற்றினார்.

உற்பவித்த கணத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் அருள் நிறைந்தவளாக வாழ்ந்த ஒரே பெண்ணரசி அன்னை மரியாள் மட்டும்தான்.

கடவுளின் தூதரே மரியாளை,

"அருள் நிறைந்தவளே வாழ்க," என்று வாழ்த்தும் வரம் பெற்றாள்.

மனுமகன் தனது தாயின் வயிற்றில் 10 மாதங்கள் வாழ்ந்து பிறந்தார்.

பிறந்தபின் 30 ஆண்டுகள் தனது தாய்க்குக் கீழ்படிந்து வாழ்ந்தார்.

இயேசு பொது வாழ்க்கை வாழ்ந்தது மூன்றே ஆண்டுகள் தான். ஆனால் தனது அன்னைக்குக் கீழ்படிந்து வாழ்ந்தது 30 ஆண்டுகள்.

கீழ்ப்படிந்து வாழ்வதன் அவசியத்தை இயேசு தனது வாழ்க்கையின் மூலமே நமக்குப் போதித்தார்.

இயேசு தன்னைப் பெற்ற அன்னைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஆதாரம்.

இயேசு தனது சீடர்களைக் காண்பித்து,

"இதோ, என் தாயும் என் சகோதரரும்."
என்று ஏன் சொன்னார்?

ஒரு காதலன் தனது காதலியை நோக்கி,  

"நீதான் எனக்கு உயிர்"

என்று சொன்னால் அவனுக்கு உயிர் இல்லை என்று அர்த்தம் அல்ல,

அவனது உயிருக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை காதலிக்கும் கொடுக்கிறான் என்பது தான் அர்த்தம்.

அதாவது அவனது  காதலி அவனது உயிரைப் போன்றவள் என்பது தான் அர்த்தம்.


இயேசு ஏதாவது ஒரு பொருளை வலியுறுத்த வேண்டுமென்றால் அதை உயர்வு நவிர்ச்சி அணி மூலம் மிகைப்படுத்தி கூறுவது வழக்கம்.

ஒருமுறை ஸ்நாபக அருளப்பரைப் பற்றி கூறும்போது,

இயேசு, "பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை." என்று கூறினார்.

இயேசுவே பெண்ணிடம் பிறந்தவர் தான். அப்படியானால் அருளப்பர் இயேசுவை விட மேலானவர் என்று அர்த்தமா? 

ஸ்நாபக அருளப்பரின் பெருமையை வலியுறுத்துவதற்காகத் தான் இயேசு அப்படிச் சொன்னார்.


இயேசுவின் வார்த்தைகளை அவரது நோக்கிலிருந்து பார்க்க வேண்டும், நமது 
நோக்கிலிருந்து அல்ல.

மரியாள் விண்ணகத் தந்தையின் சித்தத்தின் படி நடந்து கொள்வது போலவே,

இயேசுவின் சீடர்களும் விண்ணகத் தந்தையின் சித்தத்தின் படி நடந்து கொள்கிறார்கள்.

ஆகவே அவர்களும் இயேசுவின் தாய் போன்றவர்கள் தான்.

ஆனாலும் "அருள் நிறைந்த" என்ற வார்த்தைகள் மரியாளுக்கு மட்டுமே பொருந்தும்.

"அருள் நிறைந்த இராயப்பரே" என்று நாம் சொல்ல முடியாது.

ஒரு பாத்திரம் நிறைய நீர் இருந்தால் அதற்குள் வேறு எந்தப் பொருளும் இருக்க முடியாது.

அதேபோல ஒருவரது ஆன்மா அருளால் நிறைந்திருந்தால் அங்கு அருள் தவிற அதற்கு எதிரான ஒரு சிறு மாசு மறு கூட இருக்கக் முடியாது.

இயேசு தனது தாயை மாசு மறு இல்லாமல் அருள் நிறைந்தவளாக படைத்தார்.

தனது அன்னையைப் போலவே வேறு யாரையும் படைக்கவில்லை.

மற்றவர்கள் அருளில் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அன்னை மரியாள் அளவுக்கு வளர முடியாது.

உலகத்தில் தனது வாழ்க்கையை ஆண்டவரின் அடிமையாகத் தொடங்கினாள்.

இன்று பரலோக பூலோக இராக்கினியாய் விளங்குகிறாள்.

வேறு எந்த புனிதரையும் அந்த பெயரால் அழைக்க முடியாது.

இன்று மோட்சத்தில் ஆன்மாவோடும் சரீரத்தோடும் இருப்பவர்கள் இயேசுவும், அவரது அன்னையும் மட்டும்தான்.

மற்ற புனிதர்களுக்கு அந்த வரம் இயேசுவின் இரண்டாவது வருகைக்குப் பின் தான் கிடைக்கும்.

இயேசு தனது சீடர்களைக் காண்பித்து,

"இதோ, என் தாயும் என் சகோதரரும்."
என்று கூறினார்.

நமது சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவைப் பின்பற்றும் நாம் அனைவரும் அவரின் சீடர்கள் தான்.

அப்படியானால் அவருடைய வார்த்தைகள் நமக்குப் பொருந்துமா?

நாம் அன்னை மரியாள் செய்தது போல ஆண்டவரின் அடிமைகளாய் வாழ்ந்து விண்ணகத் தந்தையின் திருச் சித்தத்தை பூமியில் நிறைவேற்றினால் நாமும் அன்னை மரியாளைப் போன்றவர்களே.

"தாயைப் போல் பிள்ளை."

இயேசுவின் உண்மையான சீடர்களாய் நாம் வாழ்ந்தால் 

மற்றவர்கள் நம்மில் இயேசுவைப் பார்ப்பது போலவே அன்னை மரியாளையும் பார்ப்பார்கள்.

மற்றொரு மரியாளாக வாழ்வோம்..

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment