Saturday, October 28, 2023

"உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

"உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

''தாத்தா, ஒரு பொடி சந்தேகம்.

இயேசு உனது கடவுளை நேசி உனது அயலானை நேசி என்று மட்டும் சொல்லவில்லை.

 கடவுளை  முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்ய வேண்டும்.

முழு உள்ளத்தையும் இறைவனுக்குக் கொடுத்து விட்டால் வேறு யாருக்கும் கொடுப்பதற்கு உள்ளம் இருக்காது.

அதாவது எனக்கோ, எனது அயலானுக்கோ கொடுப்பதற்கு உள்ளம் இருக்காது.

அதாவது என்னையோ, எனது அயலானையோ நேசிக்க முடியாது.

என் மீது நான் அன்பு காட்ட முடியாத போது 

என்னை நேசிப்பது போல எனது அயலானை எப்படி நேசிப்பது?"

"'உனக்கு வந்திருப்பது சந்தேகம் அல்ல, அறியாமை.

உனக்கு உனது அம்மா கூட பிறந்த மாமா இருக்காங்களா?''

"மூன்று மாமாமார் இருக்காங்க.".

"'எந்த மாமாவாவது உங்கள் வீட்டுக்கு வரும்போது பண்டம் வாங்கிக் கொண்டு வருவாங்களா?" 

"நிறையவே வாங்கிக் கொண்டு வருவாங்க."

''வாங்கிக் கொண்டு வந்ததை யாரிடம் கொடுப்பாங்க?"
.
""முழுவதையுமே அம்மாவிடம் கொடுப்பாங்க."

"உனக்கு?"

"அம்மா தருவாங்க."

"'தனக்குத் தனது சகோதரன் கொடுத்ததை முழுவதையும் தானே சாப்பிட்டு விடாமல் உனக்கு ஏன் தருவாங்க?"

"ஏனென்றால் நான் அவர்கள் பெற்ற பிள்ளை."

"'ஆன்மீக ரீதியாக நமது தந்தை யார்?"

"கடவுள்."

"'குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத் தலைவருக்குள் அடக்கம்.

உங்கள் வீட்டு ரேஷன் கார்டு உங்களது அப்பா பெயரில் தான் இருக்கும்.

ஆனாலும் அவர் வாங்குவது அனைத்தும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தம்.

அதேபோல் தான் நமது வானகத் தந்தைக்குள் அவரால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களும் அடக்கம்.

நமது முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் உலகைப் படைத்த கடவுளை அன்பு செய்யும்போது 

நாம் அவரால் படைக்கப்பட்ட அனைத்து  மனிதர்களையும் சேர்த்து தான் அன்பு செய்கிறோம்.

கடவுளை அன்பு செய்யாதவனால் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களை அன்பு செய்ய முடியாது.

"நீ உன்னை நேசி" என்று இயேசு சொல்லவில்லை.

ஆனால் அவரது சாயலில்  நம்மைப் படைத்தபோது அவர் தன்னையே நேசிப்பது போல நாமும் நம்மையே நேசிக்க ஆரம்பிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பது இறைவன் நமக்கு தந்த வரம்.

நம்மை நாம் நேசித்தால் தான் நித்திய பேரின்ப வாழ்வுக்கு நாம் ஆசைப்படுவோம்.

நம்மை நாம் நேசித்தால் தான் நல்லவர்களாக வாழ்ந்து இறைவனுடைய ஆசீரைப் பெற ஆசைப்படுவோம்.

நம்மை நாம் நேசித்தால் தான் நமது ஆன்மா என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுவோம்.

நமக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோமோ அது மற்றவர்களுக்கும் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்,

அதாவது நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழையும்போது தனியாக நுழையக்கூடாது, நமது அன்பினால் பெற்ற நண்பர்களும் நம்மைப் பின்பற்றி வர வேண்டும்.

நாம் பிறர் மீது கொண்டுள்ள அன்பு நமது ஆன்மீக அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

அதாவது நாம் பாவத்திலிருந்து மீட்படைவது போல அவர்களும் மீட்படைய வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

அன்பு என்ற பெயரில் அவர்களது மீட்புக்கு எதிராக எதையும் செய்து விடக் கூடாது.

நட்பு எந்த பெயரில் நண்பர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்தால் அது நமக்கும் பாவம், மற்றவர்களையும் பாவம் செய்யச் செய்கிறோம்.

'இயேசு தன்னைப் பெற்ற அன்னையை வசதியுள்ள பணக்காரப் பெண்ணாக படைக்கவில்லை, அருள் நிறைந்தவளாக, ஆனால் ஏழையாகப் படைத்தார்."

"ஆனால், தாத்தா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வசதியாக வாழ்கின்றார்களே, அது எப்படி?"

"'ஆங்கில பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது கணிதம் சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது.

ஆன்மீக ரீதியாக பேசிக் கொண்டிருக்கும்போது அது சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்க வேண்டும்.

உலக ரீதியாக மட்டும் வாழ்பவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்காது.

அவர்களையும் கடவுள் தான் படைத்தார். படைத்தவரை நம்பாமல் உலக ரீதியாக இஷ்டம் போல் வாழ்பவர்களின் ஆன்ம நிலைக்கு அவர்கள் தான் பொறுப்பு.

அவர்களும் மனம் திரும்பும் படி அதற்கேற்ற சூழ்நிலைகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

ஆனால் உலகியலில் மூழ்கிக் கிடக்கும் அவர்கள் அதைக் கவனிப்பதில்லை."

''தாத்தா, அவர்களும் பிறர் சினேக உதவிகளைச் செய்கிறார்களே!"

'"நீ  பள்ளிக்கூடத்திற்குப் போகாமல்,

 நீயாகவே புத்தகங்களைப் படித்துவிட்டு,

 நீயாகவே தேர்வு வைத்து,

 நீயாகவே எழுதி,

நீயாகவே அதே  மதிப்பீடு செய்து 

 நீயாகவே  அதில் வெற்றி பெற்று,

நீயாகவே உனக்கு ஒரு சான்றிதழ் கொடுத்து

அதைக் கொண்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் உன்னை அரசு ஏற்றுக்கொள்ளுமா?"

"ஏற்றுக்கொள்ளாது. அரசு தேர்வு எழுதி, அரசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். "

"'இறைவனை முழு மனதோடு நேசித்து,

 இறைவனுக்காக பிறனையும் நேசித்து,

 இறைவனுக்காக பிறருக்கு உதவி செய்தால் மட்டுமே 

அந்த உதவிக்கு இறைவனுடைய சன்மானம் உண்டு.

புரியும் என்று எண்ணுகிறேன்.".

"புரிகிறது. ஆனால், தாத்தா, ஞானஸ்தானம் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்களே

 பிறருக்கு இறைவனுக்காக உதவி செய்யாமல் 

தங்கள் சுய பெருமைக்காக செய்தால் அதற்கு இறைவனுடைய சன்மானம் உண்டா?"

""நிச்சயமாக இல்லை. இறைவனுடைய மகிமைக்காக செய்யப்படும் உதவிகளுக்கு மட்டுமே இறைவனுடைய சன்மானம் உண்டு."

"நம்மை நாமே நேசித்தால் அதற்கு இறைவனின் சன்மானம் உண்டா?''

''"இறைவனது மகிமைக்காக நன்னையே நேசிப்பவன் தான் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வான்.

அவன் தான் இறைவனது மகிமைக்கானக் காரியங்களைச் செய்வான்.

நாம் மூச்சு விடுவது உட்பட ஒவ்வொரு காரியத்தையும் இறைவனது மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் செபம் சொல்லுகிறோமே எதற்கு?

நாம் இறைவனது மகிமைக்காகச் சாப்பிடுவதற்கு.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழுந்து,

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் வாழ்ந்து,

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தூங்குபவன் 

எந்த வினாடியில் மரித்தாலும் இறைவனடி சேர்வது உறுதி.

இறைவனுக்காக வாழ்வோம்.

 இறைவனுக்காக மரிப்போம்.


இறைவனோடு பேரின்ப வாழ்வை அனுபவிப்போம்.''

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment