Monday, October 9, 2023

"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது "(லூக்.10:42)

"ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது "
(லூக்.10:42)

ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையானது ஒன்றுதான்.

நம்மை வழி நடக்கும் இறைவனின் வார்த்தைக்குச் செவி கொடுப்பதுதான் அது.

இறைவன் பல வகைகளில் நம்மோடு பேசுகிறார்.

அமைதியான தியான நிலையில் இருக்கும் போது அவர் நமது உள்ளத்தில் பேசுவார்.

அவர் பேசுவது கேட்க வேண்டும் என்றால் நமது உள்ளம் முழுவதும் அவரிடம் இருக்க வேண்டும்.

பராக்குக்கும், அனாவசியமான எண்ணங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது.

இயேசுவை மட்டும் உள்ளத்தில் இருத்தி கூர்ந்து கவனித்தால் அவர் பேசுவது தெளிவாகக் கேட்கும்.

பைபிள் வாசிக்கும்போது பைபிளில் வசனங்களின் மூலமாக நம்மோடு பேசுவார்.

வசனங்கள் எந்த சூழலில் (Context) எழுதப்பட்டுள்ளனவோ அதற்கு ஏற்றபடி அர்த்தம் கொடுக்க வேண்டும்.

நமது இஷ்டப்படி பொருள் கொடுக்க கூடாது,

பைபிள் வசனங்களுக்கு சரியான பொருள் கூற கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.

மீட்புக்கு பைபிள் மட்டும் போதும் என்று கூறிக் கொண்டு 

ஒரு பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு இஷ்டம்போல் பொருள் கூறிக்கொண்டு திரியும்

 பிரிவினைச் சகோதரர்கள் கொடுக்கும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ள கூடாது.

ஏதாவது ஒரு பைபிள் வசனத்திற்கு விளக்கம் புரியாவிட்டால் ஒரு கத்தோலிக்க குருவானவரை அணுகி விளக்கம் பெற வேண்டும்.

ஆயிர கணக்கான பிரிவினை சபைகள் இருப்பதற்கு காரணம் அவரவர்கள் அவரவர் இஸ்டம்போல் வசனங்களுக்கு விளக்கம் கொடுப்பதுதான்.

திருப்பலியின் போது குருவானவர் அன்றன்றைய வாசகங்களுக்கு கொடுக்கும் விளக்கங்களை தினசரி கேட்டு வந்தாலே பைபிள் முழுமைக்கும் விளக்கம் கிடைக்கும்.

நம்மை வழி நடத்துவதற்காக திருச்சபைக் கொடுத்திருக்கும் பங்குக் குருவானவர் மூலமும் இயேசு பேசுகிறார். 

எழுத வாசிக்க தெரியாத பாமர மக்களுக்குப்  பங்குக் குருவானவர்தான் பைபிள்.
  
வீட்டில் பெற்றோர், பள்ளியில் ஆசிரியர்கள் வழியாக இயேசு பேசுகிறார்.

பத்து கட்டளைகளில் இறைவனைப் பற்றிய கட்டளைகளுக்கு அடுத்த படி இடம்பெற்றிருப்பது  பெற்றோரைப் பற்றிய கட்டளைதான் 

நமது பெற்றோருக்கு நாம் கீழ்படிந்து நடக்க வேண்டும்.

அவர்கள் மூலமாகத்தான் நம்மைக் கடவுள் உலகத்திற்கு அனுப்பினார்.

நம்மை வளர்த்து வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறார்.

பெற்றோர் ஆன்மீக வாழ்வில் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடப்பதோடு 

 தங்களது புத்திமதிகளால்,
அவர்களை விண்ணக வாழ்வை நோக்கி சரியான பாதையில் வழி நடத்த வேண்டும்.


பெற்றோருடைய அன்பும், அரவணைப்பும்தான் பிள்ளைகளை மகிழ்ச்சிகரமாக ஆன்மீக வாழ்வு வாழ உதவும்.

சர்வ வல்லமை வாய்ந்த இறைமகன் கூட தான் மனிதனாய் பிறப்பதற்கு ஒரு தாயையும், தன்னை வளர்ப்பதற்கு ஒரு தந்தையையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

குழந்தைப் பருவம் முதல்  ஏறக்குறைய 30 ஆண்டுகள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

கடவுளையே அன்பிலும் அரவணைப்பிலும் வளர்த்த பெருமை அன்னை மரியாளையும் சூசையப்பரையும் சேரும்.

ஒரு குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு திருக்குடும்பம் ஒரு எடுத்துக்காட்டு.

இயேசு 12 வயதில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்ச்சியை வாசிக்கும் போது மனதில் ஒரு உண்மைப் பட்டது. 

இயேசு சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று அன்னை மரியாளுக்கும் சூசையப்பருக்கும் தெரியும்.

கடவுளால் தொலைந்து போக முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும்.

ஆனாலும் ஒரு சாதாரண பெற்றோர் தங்கள் மனித குழந்தையை எப்படி தேடி அலைவார்களோ அதே போல் தங்கள் தெய்வக் குழந்தையைத் தேடி அலைந்தார்கள்.

அது நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நமது ஆன்மீக வாழ்வில் சில சமயங்களில் கஷ்டங்கள் வரும்போது இயேசு நம்மை கைவிட்டுப் போய்விட்டது போல் தோன்றும்.

ஒரு இருட்டான இரவில் நாம் மாட்டிக் கொண்டது போல் தோன்றும்.

ஆனால் இயேசு ஒரு பக்கமும் போயிருக்க மாட்டார்.

நாம் அவரை தேட வேண்டும் என்பதற்காக நம்மை விட்டு கொஞ்சம் மறைந்து கொள்வார்.

நாம் நமது உள்ளத்தால் அவரை தேட வேண்டும். அவரைப் பற்றி உள்ளத்தில் தியானித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவர் திரும்பி வந்து நம்மை இரட்டிப்பு மகிழ்ச்சியில்  ஆழ்த்துவார்.

நம்மை அவர் ஒரு வினாடி கூட மறக்க மாட்டார்.

பெற்றோர் அன்னை மரியாளையும் சூசையப்பரையும் பின்பற்றி அவர்கள்  இயேசுவை வளர்த்தது போல் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். 

இயேசுவின் பண்புகளை  எல்லாம் தம் மக்களுக்கும் ஊட்டி வளர்க்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் திருக் குடும்பமாக திகழ வேண்டும்.

ஆசிரியர்கள் மூலமாகவும் இயேசு நம்மோடு பேசுகிறார்.

உண்மையான ஆசிரியர் இறை பக்தி உள்ளவராகவும், இறைவனுக்காக வாழ்பவராகவும் இருக்க வேண்டும்.

ஆசு + இரியர்  என்ற வார்த்தைக்குக் குற்றங்களை நீக்குபவர் என்று பொருள்.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை குற்றம் குறை இல்லாத நல்ல மாணவர்களாக மாற்றுவது தான் ஆசிரியருடைய முதல் கடமை.

குற்றம் குறை இல்லாத நல்ல மாணவர்களால் தான் பாடத் திட்டத்தில் உள்ள உலகைச் சேர்ந்த பாடங்களை தங்களது ஆன்மாவுக்கு எந்தவித குறையும் ஏற்படாமல் படிக்க முடியும்.

அதிகம் படித்த மாணவர்கள் கெட்டுப் போவதற்குக் காரணம் அவர்கள் நல்ல மாணவர்களாக வளர்க்கப்படாதது தான்.

நல்ல ஆசிரியர்கள் மூலம் கடவுள் மாணவர்களோடு பேசுகிறார்.

உலகில் நல்லவர்களாக வாழ வழிகாட்டுகிறார்.

மாணவர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என்றால், 

முதலில் ஆசிரியர்கள் உங்களை நல்லவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடவுள் மனிதனை படைக்கும் முன் இயற்கையைப் படைத்தார்.

இயற்கையைக் கூர்ந்து கவனித்தால் கடவுள் எவ்வளவு நல்லவர் என்றும், வல்லவர் என்றும் நமக்குத் தெரியும்.

94 பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம் பரந்து கிடக்கும் அண்டம்,

அதில் அததன் நீள வட்டப் பாதையில் வலம் வரும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்,

அவை ஒவ்வொன்றையும்  
வலம் வரும் பல கோள்கள், 

சூரியன் என்ற நட்சத்திரத்தை வலம் வரும் பூமி,

பூமியை அலங்கரிக்கும் இயற்கைத் தாவரங்கள்,

ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன போன்ற பிராணிகள்,

 இவற்றையெல்லாம் படைத்த பின்பு தான் இவற்றை ஆண்டு அனுபவிக்க மனிதனைப் படைத்தார்.

இயற்கை மனிதனிடம் அவனைப் படைத்த இறைவன் அவன் மீது கொண்ட அன்பைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்கிறது.

அதன் பேச்சுக்கு அவன் செவி சாய்த்தால் அவன் இயற்கையை அனாவசியமாக அழிக்க மாட்டான்.

இறைப் பணிக்காக அதைப் பயன்படுத்துவான்.

ஒவ்வொரு வினாடியும் பல வழிகளில் நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் இறைவனோடு நாமும் ஒவ்வொரு வினாடியும் பேசுவோம்.

நம்மைப் படைத்து பராமரித்து வருவதற்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

நமக்குத் தேவையான ஆன்மீக வரங்களைக் கேட்போம்.

நாம்  அவரை நேசிப்பதை சிந்தனையாலும், சொல்லாலும் செயலாலும் அவரிடம்  சொல்லுவோம்.
..
Jesus, I love you.

இயேசுவே நான் உம்மை நேசிக்கிறேன்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment