Monday, October 30, 2023

அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்துவைக்கிறாள். மாவு முழுவதும் புளிப்பேறுகிறது."(லூக்.13:21)

அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்துவைக்கிறாள். மாவு முழுவதும் புளிப்பேறுகிறது."
(லூக்.13:21)

கொதிக்க வைத்து ஆற வைத்த பாலுக்குள் சிறிது புளிக்கும் மோரை ஊற்றினால் மறுநாள் பால் முழுவதும் தயிராகி விழுகிறது.

தயிரைக் கடைந்தால் மோர் கிடைக்கிறது.

ஆக மோருக்கு பாலை மோராக ஆக்கும் ஆற்றல் இருக்கிறது.

முந்திய நாள் ஆட்டிய மாவை புளிக்க வைத்தால்தான் மறுநாள் அதைக் கொண்டு பண்டங்கள் செய்ய முடியும்.

மூன்றுபடி மாவைப் புளிக்க வைக்க அதில் சிறிதளவு ஏற்கனவே புளித்த மாவை சேர்க்க வேண்டும்.

புளித்த மாவுக்கு புளியாதிருக்கும் மாவையும் புளிக்க வைக்கும் ஆற்றல் உண்டு.

கடவுளின் அரசுக்கு அவரைச் சாராத அரசை அவரது அரசாக மாற்றும் வல்லமை உண்டு.

இறையரசை உலகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமையை இயேசு நமக்குத் தந்திருக்கிறார்.

பேனாவுக்கு எழுதும் சக்தி உண்டு. ஆனால் பேப்பர் மீது பேனாவை வைத்துவிட்டால் அது எழுதாது. நாம் அதைக் கையில் எடுத்து எழுத வேண்டும்.

நாம் ஞானஸ்நானம் பெரும்பொழுது இறையரசுக்குள் நுழைகிறோம்.

நமக்குள் இறையரசு இருக்கிறது.

நமக்குள் இருக்கும் இறையரசை உலகெங்கும் பரப்ப வேண்டும்.

உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த கட்டளை இதைச் சார்ந்தது தான்.

நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்க வேண்டுமானால் நாம் உலக மக்களிடையே நற்செய்தியை வாழ வேண்டும்.

இறையரசை உலகெங்கும் சென்று பரப்ப வேண்டுமானால் நாம் உலக மக்களிடையே இறையரசை வாழ வேண்டும்.

எப்படி புளிப்பு மாவைச் சாதாரண மாவுடன் கலக்கும்போது அது முழுவதும் புளிப்பு மாவாக மாறிவிடுகிறதோ,

 அதே போல் தான்,

கடவுளின் அரசை நாம் மக்களிடையே வாழும்போது மக்கள் அனைவரும் கடவுளின் அரசில் சேர்ந்து விடுகிறார்கள்.

கி.பி. முதல் நூற்றாண்டிலேயே புனித தோமையார் இந்தியாவிற்கு நற்செய்தியை அறிவிக்க வந்துவிட்டார்.

அனேகர் நற்செய்தியை ஏற்று ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

தமிழ்நாட்டில் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருக்கும் போது இயேசுவுக்காக வேத சாட்சியாக மரித்தார்.

கிறிஸ்துவின் அரசு கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டது.

இப்போது நடந்து கொண்டிருப்பது 21ஆவது நூற்றாண்டு.

ஆண்டவர் எதிர்பார்க்கிற கணக்கின்படி பார்த்தால் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் வாழும் நாடாக மாறியிருக்க வேண்டும்.

ஒவ்வொரு நபரும் மற்றொரு நபரை இறையரசுக்குள் கொண்டு வந்திருந்தால் கூட கிறிஸ்தவம் இந்தியாவில் பொங்கி பிற நாடுகளை நோக்கி பரவியிருக்க வேண்டும்.

ஆனால் நாம் இன்று சிறுபான்மையினராகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காரணம் கிறிஸ்தவமாகிய புளிப்பு மாவை இந்தியாவாகிய மாவுக்குள் நாம் என்னும் கலக்கவில்லை.

நாம் பட்டும் படாமலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காந்தம் இரும்பை தன்நோக்கி இழுப்பது போல,

நமது கிறிஸ்தவ வாழ்வு இன்னும் மற்றவர்களை நம்மை நோக்கி இழுக்கவில்லை.

காரணம் நாம் இன்னும் கிறிஸ்தவர்களாக வாழ வில்லை.

ஞானஸ்நானம் பெற்ற நாம் கோவிலுக்கு போவது மட்டும் கிறிஸ்தவ வாழ்வு அல்ல.

நாம் இன்னும் முழுமையான இறை நம்பிக்கையில் வளரவில்லை.

கேளுங்கள் தரப்படும் என்று கூறிய ஆண்டவரிடம் 

எத்தனை பேர், "நாங்கள் நல்ல, முன்மாதிரிகையான கிறிஸ்தவர்களாக வாழ வரம் தரும் ஆண்டவரே" என்று கேட்கிறோம்?

"தேர்வில் வெற்றி பெற உதவி செய்யும்,

நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும்,

ஒரு புது வீடு கட்ட ஆவன தந்து உதவும்,

ஒரு ஆண் குழந்தையைத் தாரும்" 
என்று ஆன்மீகம் சாராத உதவிகளைத் தானே கேட்டு ஜெபிக்கிறோம்.

நமது பிறர் அன்பு பணிகள் விளக்குத் தண்டின் மேல் வைத்த விளக்கின் ஒளி  தெரிவது போல் மற்றவர்களுக்குத் தெரியவில்லை. 

நமது பிறர் அன்பு பணிகளைப் பார்த்து பிற சமயத்தவர் கிறிஸ்துவைப் நோக்கி வரக்கூடிய அளவிற்கு நமது பணிகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

நம்மைப் பார்ப்பவர்கள் அவர்களில் ஒருவராக பார்க்கின்றார்களே தவிர ஆன்மீகத்தில் அவர்களை விட வித்தியாசமானவர்களாக நம்மை பார்க்கவில்லை.

ஏனெனில் நாம் வித்தியாசமானவர்களாக இல்லை.

கிறிஸ்துவின் வார்த்தைகளில் நாம் புளிப்பு மாவாக செயல்படவில்லை.

புளியாத மாவு புளியாத மாவாகவே தொடர்கிறது.

நமது தவறை நாம் ஏற்றுக் கொண்டு,

நல்ல கிறிஸ்தவர்களாக,

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழக்கூடிய கிறிஸ்தவர்களாக,

இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றக்கூடிய கிறிஸ்தவர்களாக

கிறிஸ்து அவர்களாக வாழ்வோம்.

நாம் முயன்றால் உலகையே இறை அரசுக்குள் நம்மால் கொண்டு வர முடியும்.

உலகம் மாவென்றால் , நாம் நாம் புளிப்பு மாவாக செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 29, 2023

ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?(லூக். 13:15)

ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
(லூக். 13:15)

மோயீசன் மூலமாகத்  திருச்சட்டத்தை  இறைவன் கொடுத்தது   .அவரது  திருச் சித்தத்தை மக்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

இறைவன் மேல் முழுமையான அன்பு செலுத்த வேண்டும்,

 நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் 

என்பதுதான் இறைவனின் சித்தம்.

"திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" என்று ஆண்டவரே சொல்லியிருக்கிறார்.
( மத்.22:39)

பரிசேயர்களும், சது சேயர்களும், மறை நூல் அறிஞர்களும் திருச் சட்டத்தை  எழுத்தளவிலேயே பின்பற்றினார்கள்.

திருச்சட்டம் எதை விரும்புகிறது என்பதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

(They followed the letter of the law, not  its spirit.)

ஓய்வு நாளில் அவர்கள் வேலை எதுவும் செய்வதில்லை.

ஓய்வு நாளில் வேலை எதுவும் செய்யாமல் படுத்துத் தூங்குவதற்கென்று அது கொடுக்கப்படவில்லை.

வாரத்தில் மற்ற ஆறு நாட்களும் நமக்கு வருமானம் வரக்கூடிய வேலையைச் செய்கிறோம்.

ஓய்வு நாளை ஆண்டவருக்காகவும், அயலானுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

எல்லா நாட்களிலுமே இறைவனை வழிபடுகிறோம்.
பிறருக்கு உதவிகளும் செய்கிறோம்.

நாம் சாதாரணமாக வீட்டில் சாப்பிடுவதற்கும்,

 திருமண வீட்டில் விருந்து சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அதே போல் தான் சாதாரண நாட்களில் இறைவனை வழிபடுவதற்கும்,

 ஓய்வு நாளில் இறைவனை வழிபடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

சாதாரண நாட்களில் காலை மாலை செபம் சொல்கிறோம்.

ஒவ்வொரு வேலையையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

நமது செயல்கள் யாவற்றையும் இறைவனது மகிமைக்காகச் செய்கிறோம்.

ஆனால், ஓய்வு நாளில் நாம் சமூகத்தின் உறுப்பினர் என்ற முறையில் சமூகமாக கோவிலில் ஒன்று கூடி திருவழிபாட்டில் கலந்து கொள்கிறோம்.

திருப்பலியில் கலந்து கொள்ளும் போது நமது ஆன்மா கல்வாரி மலை நோக்கி பயணம் செய்து,

 அன்று உலகம் அனைத்துக்குமாக தன்னையே பலியாக்கிய நமது ஆண்டவரை வழிபடுகிறது.

ஆண்டவர் பலியானது தனிப்பட்ட நபராகிய நமக்காக  மட்டுமல்ல, மனித சமூகத்திற்காக.

இதை நினைவு கூறும் வகையில் தான் சமூகமாக ஒன்று கூடி   ஆண்டவரது திருப்பலியிலும்,

திரு விருந்தினும் கலந்து கொள்கிறோம்.

புனித வியாழனன்று அன்று இயேசு தனது சீடர்களுக்குத் தன்னையே உணவாக வழங்கினார்.

இன்றும் அதே இயேசு அவரது சீடர்களாகிய நமக்குத் தன்னையே உணவாக வழங்குகிறார்.

சாதாரண நாட்களில் நமது அன்றாட பணிகளுக்கு மத்தியில் இயேசுவை முழு மனதோடு நேசிக்கிறோம்.

ஓய்வு நாளில் நமது அன்றாட பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு 

முழு மனதோடு இயேசுவை நேசிப்பதை நமது திருப்பலி வழிபாட்டின் மூலம் அவருக்குத் தெரிவிக்கிறோம்.

திருப்பலியின் போது இயேசுவோடு உரையாடிய நாம் திருப்பலி முடிந்த உடன் கோவிலுக்கு வந்திருக்கும் நமது சபை உறுப்பினர்களுடன், 

அதாவது, இயேசுவில் நமது சகோதரர்களுடன் உரையாட வேண்டும்.

இந்த உரையாடல் ஒன்றிணைந்த சபையின்   ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுகிறது.

நமது சபை சகோதரர்களில் யார் யாருக்கு நம்முடைய உதவி தேவைப்படும் என்பதை 

நமது உரையாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  

நாம் அறிந்து கொள்வதைச் செயல்படுத்தும் விதமாக அன்று அவர்களுக்கு வேண்டிய பிறர் அன்பு உதவிகளைச் செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு,

 நமது உரையாடல்களின் போது ஏதாவது ஒரு சகோதரரின் வீட்டில் யாருக்காவது சுகம் இல்லை என்பது தெரிய வந்தால்

 அன்று அவரைச் சந்திக்கச் செல்வதோடு அவர் சுகம் அடைவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும்.

"நான் சுகமில்லாதிருந்தேன், என்னைப் பார்த்து ஆறுதல் கூற வந்தாய், ஆகவே என்னுடன் நித்திய பேரின்ப வாழ்வில் இணைந்து நித்திய காலம் வாழ
மோட்சத்திற்கு வா"

என்று நமது தீர்ப்பு நாளில் நமது ஆண்டவர் நமக்கு அழைப்பு விடுப்பார்.

ஓய்வு நாளில் உணவில்லாதவர்களை நமது வீட்டுக்கு அழைத்து வந்தோ,

 அல்லது அவர்கள் வீட்டுக்கு சென்றோ உணவு கொடுக்கலாம்.

சிறைப் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லலாம்.

நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபடலாம்.

ஓய்வு நாளில் இப்படிப்பட்ட ஆன்மீகப் பணிகளைச் செய்தால் இயேசு நமது இறுதி நாளில் நம்மை நோக்கி,

"பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்.

 தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள்.

 அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.

 ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்.

 நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். 

சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள்.

ஆகவே,   

உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக."

என்று கூறி மோட்ச வாழ்வுக்குள் நம்மை  அழைப்பார்.

"ஓய்வு நாளில் திருப்பலி முடிந்தவுடன் மட்டன் வாங்க வேண்டும்,

பிரியாணி தயாரிக்க வேண்டும்,

நன்கு சாப்பிட்டு விட்டு டிவி பார்க்க வேண்டும்,

முடிந்தால் தூங்க வேண்டும்."

என்ற எண்ணத்தை விட்டு விட்டு,

சமூகத்தோடு கூடி இறைவழிபாடு செய்ய வேண்டும்,

சமூகத்தில் உள்ளவர்களுக்கு பிறர் அன்புப் பணி ஆற்ற வேண்டும் என்று தீர்மானிப்போம், அதன்படி செயல்படுவோம்.

லூர்து  செல்வம்.

Saturday, October 28, 2023

"உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

"உன் மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."(மத்.22:39)

''தாத்தா, ஒரு பொடி சந்தேகம்.

இயேசு உனது கடவுளை நேசி உனது அயலானை நேசி என்று மட்டும் சொல்லவில்லை.

 கடவுளை  முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்ய வேண்டும்.

முழு உள்ளத்தையும் இறைவனுக்குக் கொடுத்து விட்டால் வேறு யாருக்கும் கொடுப்பதற்கு உள்ளம் இருக்காது.

அதாவது எனக்கோ, எனது அயலானுக்கோ கொடுப்பதற்கு உள்ளம் இருக்காது.

அதாவது என்னையோ, எனது அயலானையோ நேசிக்க முடியாது.

என் மீது நான் அன்பு காட்ட முடியாத போது 

என்னை நேசிப்பது போல எனது அயலானை எப்படி நேசிப்பது?"

"'உனக்கு வந்திருப்பது சந்தேகம் அல்ல, அறியாமை.

உனக்கு உனது அம்மா கூட பிறந்த மாமா இருக்காங்களா?''

"மூன்று மாமாமார் இருக்காங்க.".

"'எந்த மாமாவாவது உங்கள் வீட்டுக்கு வரும்போது பண்டம் வாங்கிக் கொண்டு வருவாங்களா?" 

"நிறையவே வாங்கிக் கொண்டு வருவாங்க."

''வாங்கிக் கொண்டு வந்ததை யாரிடம் கொடுப்பாங்க?"
.
""முழுவதையுமே அம்மாவிடம் கொடுப்பாங்க."

"உனக்கு?"

"அம்மா தருவாங்க."

"'தனக்குத் தனது சகோதரன் கொடுத்ததை முழுவதையும் தானே சாப்பிட்டு விடாமல் உனக்கு ஏன் தருவாங்க?"

"ஏனென்றால் நான் அவர்கள் பெற்ற பிள்ளை."

"'ஆன்மீக ரீதியாக நமது தந்தை யார்?"

"கடவுள்."

"'குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் குடும்பத் தலைவருக்குள் அடக்கம்.

உங்கள் வீட்டு ரேஷன் கார்டு உங்களது அப்பா பெயரில் தான் இருக்கும்.

ஆனாலும் அவர் வாங்குவது அனைத்தும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொந்தம்.

அதேபோல் தான் நமது வானகத் தந்தைக்குள் அவரால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களும் அடக்கம்.

நமது முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் உலகைப் படைத்த கடவுளை அன்பு செய்யும்போது 

நாம் அவரால் படைக்கப்பட்ட அனைத்து  மனிதர்களையும் சேர்த்து தான் அன்பு செய்கிறோம்.

கடவுளை அன்பு செய்யாதவனால் அவரால் படைக்கப்பட்ட மனிதர்களை அன்பு செய்ய முடியாது.

"நீ உன்னை நேசி" என்று இயேசு சொல்லவில்லை.

ஆனால் அவரது சாயலில்  நம்மைப் படைத்தபோது அவர் தன்னையே நேசிப்பது போல நாமும் நம்மையே நேசிக்க ஆரம்பிக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பது இறைவன் நமக்கு தந்த வரம்.

நம்மை நாம் நேசித்தால் தான் நித்திய பேரின்ப வாழ்வுக்கு நாம் ஆசைப்படுவோம்.

நம்மை நாம் நேசித்தால் தான் நல்லவர்களாக வாழ்ந்து இறைவனுடைய ஆசீரைப் பெற ஆசைப்படுவோம்.

நம்மை நாம் நேசித்தால் தான் நமது ஆன்மா என்றென்றும் சந்தோஷமாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுவோம்.

நமக்கு என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோமோ அது மற்றவர்களுக்கும் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்,

அதாவது நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.

நாம் விண்ணக வாழ்வுக்குள் நுழையும்போது தனியாக நுழையக்கூடாது, நமது அன்பினால் பெற்ற நண்பர்களும் நம்மைப் பின்பற்றி வர வேண்டும்.

நாம் பிறர் மீது கொண்டுள்ள அன்பு நமது ஆன்மீக அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

அதாவது நாம் பாவத்திலிருந்து மீட்படைவது போல அவர்களும் மீட்படைய வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

அன்பு என்ற பெயரில் அவர்களது மீட்புக்கு எதிராக எதையும் செய்து விடக் கூடாது.

நட்பு எந்த பெயரில் நண்பர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்தால் அது நமக்கும் பாவம், மற்றவர்களையும் பாவம் செய்யச் செய்கிறோம்.

'இயேசு தன்னைப் பெற்ற அன்னையை வசதியுள்ள பணக்காரப் பெண்ணாக படைக்கவில்லை, அருள் நிறைந்தவளாக, ஆனால் ஏழையாகப் படைத்தார்."

"ஆனால், தாத்தா, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் வசதியாக வாழ்கின்றார்களே, அது எப்படி?"

"'ஆங்கில பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது கணிதம் சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்கக் கூடாது.

ஆன்மீக ரீதியாக பேசிக் கொண்டிருக்கும்போது அது சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்க வேண்டும்.

உலக ரீதியாக மட்டும் வாழ்பவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்காது.

அவர்களையும் கடவுள் தான் படைத்தார். படைத்தவரை நம்பாமல் உலக ரீதியாக இஷ்டம் போல் வாழ்பவர்களின் ஆன்ம நிலைக்கு அவர்கள் தான் பொறுப்பு.

அவர்களும் மனம் திரும்பும் படி அதற்கேற்ற சூழ்நிலைகளை கடவுள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

ஆனால் உலகியலில் மூழ்கிக் கிடக்கும் அவர்கள் அதைக் கவனிப்பதில்லை."

''தாத்தா, அவர்களும் பிறர் சினேக உதவிகளைச் செய்கிறார்களே!"

'"நீ  பள்ளிக்கூடத்திற்குப் போகாமல்,

 நீயாகவே புத்தகங்களைப் படித்துவிட்டு,

 நீயாகவே தேர்வு வைத்து,

 நீயாகவே எழுதி,

நீயாகவே அதே  மதிப்பீடு செய்து 

 நீயாகவே  அதில் வெற்றி பெற்று,

நீயாகவே உனக்கு ஒரு சான்றிதழ் கொடுத்து

அதைக் கொண்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் உன்னை அரசு ஏற்றுக்கொள்ளுமா?"

"ஏற்றுக்கொள்ளாது. அரசு தேர்வு எழுதி, அரசு சான்றிதழ் இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். "

"'இறைவனை முழு மனதோடு நேசித்து,

 இறைவனுக்காக பிறனையும் நேசித்து,

 இறைவனுக்காக பிறருக்கு உதவி செய்தால் மட்டுமே 

அந்த உதவிக்கு இறைவனுடைய சன்மானம் உண்டு.

புரியும் என்று எண்ணுகிறேன்.".

"புரிகிறது. ஆனால், தாத்தா, ஞானஸ்தானம் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்களே

 பிறருக்கு இறைவனுக்காக உதவி செய்யாமல் 

தங்கள் சுய பெருமைக்காக செய்தால் அதற்கு இறைவனுடைய சன்மானம் உண்டா?"

""நிச்சயமாக இல்லை. இறைவனுடைய மகிமைக்காக செய்யப்படும் உதவிகளுக்கு மட்டுமே இறைவனுடைய சன்மானம் உண்டு."

"நம்மை நாமே நேசித்தால் அதற்கு இறைவனின் சன்மானம் உண்டா?''

''"இறைவனது மகிமைக்காக நன்னையே நேசிப்பவன் தான் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வான்.

அவன் தான் இறைவனது மகிமைக்கானக் காரியங்களைச் செய்வான்.

நாம் மூச்சு விடுவது உட்பட ஒவ்வொரு காரியத்தையும் இறைவனது மகிமைக்காகச் செய்ய வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் செபம் சொல்லுகிறோமே எதற்கு?

நாம் இறைவனது மகிமைக்காகச் சாப்பிடுவதற்கு.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் எழுந்து,

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் வாழ்ந்து,

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தூங்குபவன் 

எந்த வினாடியில் மரித்தாலும் இறைவனடி சேர்வது உறுதி.

இறைவனுக்காக வாழ்வோம்.

 இறைவனுக்காக மரிப்போம்.


இறைவனோடு பேரின்ப வாழ்வை அனுபவிப்போம்.''

லூர்து செல்வம்.

Friday, October 27, 2023

அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்.(லூக்.6.12)

அந்நாட்களில் அவர் செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்.
(லூக்.6.12)

இயேசு என்று சொன்னவுடனே நமது மனதில் ஒரு முக்கியமான தேவ ரகசியம் ஞாபகத்துக்கு வர வேண்டும்.

ஒரே கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார்.

இறைமகன் இரண்டாம் ஆள். ஆள் ஒன்று சுபாவங்கள் இரண்டு, தேவ சுபாவம், மனித சுபாவம்.

கடவுள் ஒருவர் என்பதை ஏற்றுக் கொண்டால்,

"இயேசு செபிக்கும்படி மலைக்குச் சென்று, கடவுளை வேண்டுவதில் இரவெல்லாம் கழித்தார்."

எந்த வசனத்துக்கு எப்படிப் பொருள் கொள்வது?

இயேசு மலைக்குச் சென்று எந்தக் கடவுளை வேண்டினார்?

பரிசுத்த தம திரித்துவத்தைச் சரியான முறையில் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு இடம் இல்லை.

கடவுள் ஒருவர்.

அவர் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

மூவரும் வெவ்வேறு ஆட்கள்.

தந்தை மகனும் அல்ல, பரிசுத்த ஆவியும் அல்ல.

மகன் தந்தையும் அல்ல . பரிசுத்த ஆவியும் அல்ல.

பரிசுத்த ஆவி தந்தையும் அல்ல, மகனும் அல்ல.

ஆனால் மூவரும் ஒரே கடவுள்.

தந்தை மகனைப் பெறுகிறார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிலவும் அன்பு தான் பரிசுத்த ஆவி.

கடவுள் அன்பு மயமானவர்.

தந்தை அன்புமயமானவர்.
மகன் அன்பு மயமானவர்.
பரிசுத்த ஆவி அன்புமயமானவர்.

மூன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஒரே அன்பு தான் ஒரே கடவுள்.

உலகில் கணவன், மனைவி இருவருக்கும் உள்ள ஒரே வேலை ஒருவரை ஒருவர் காதலிப்பது.

அந்த காதலின் விளைவு தான் குடும்பம்.

கடவுள், அதாவது, பரிசுத்த தம திரித்துவம் நித்திய காலமாக செய்து வந்த ஒரே வேலை

 தன்னைத்தானே அளவில்லாத விதமாய் நேசிப்பது, 

அதாவது மூன்று ஆட்களும் ஒருவரை ஒருவர் அளவில்லாத விதமாய் நேசிப்பது.

அந்த நேசம் தான், அதாவது, அன்பு தான் ஒரே கடவுள்.

அன்பே கடவுள்.

கடவுளின் அளவு கடந்த அன்பு தான் மனித இனம் படைக்கப்பட காரணமாக இருந்தது.

தனது அன்பை பகிர்ந்து கொள்வதற்காகவே மனிதனைப் படைத்தார்.

ஜெபம் என்றால் என்ன?

கடவுளோடு அன்பில் இணைந்திருப்பது தான் ஜெபம்.

நாம் கடவுளிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தான் ஜெபம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

அன்பில் இணைந்திருக்கும் போது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமே தவிர,

அன்பில் இணையாமல் விண்ணப்பங்களை மட்டுமே சமர்ப்பித்தால் அது உண்மையான ஜெபம் அல்ல.

நற்கருணைப் பேழையின் முன் அமர்ந்து கொண்டு நற்கருணை நாதரை மனதுக்குள் வரவழைத்து,

 அவரை தியானித்துக் கொண்டிருப்பது ஜெபம்.

கோவிலுக்குப் போக முடியாவிட்டால் எங்கிருந்தாலும் மனதை ஒருநிலைப்படுத்தி மூவொரு தேவனை மனதிற்குள் கொண்டு வந்து அவரைப் பற்றி தியானிப்பது தான் ஜெபம்.

நமக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.

ஜெபத்தில் விண்ணப்பங்கள் முக்கியமல்ல.

"அவர் செபிக்கும்படி மலைக்குச் |சென்று,'' என்று வசனம் கூறுகிறது.

மனிதனாய்ப் பிறந்த இயேசு ஒரு தேவ ஆள், (மூவரில் இரண்டாம் ஆள்.)

அவர் ஒவ்வொரு வினாடியும் பரிசுத்த தம திரித்துவத்தில் அன்பில் ஒன்றித்திருக்கிறார்.

பரிசுத்த தம திரித்துவத்தில் அன்பில் ஒன்றித்திருப்பது தான் 
ஜெபம் என்றால் இயேசு வாழ்வது ஜெப வாழ்வு தான்.

உலகில் அவர் வாழ்ந்த 
பொதுவாழ்வின் போது நற்செய்தி அறிவித்தல் நோயாளிகளைக் குணமாக்குதல் போன்ற மற்ற பணிகளையும் செய்தார்.

இரவில் அவர் மலைக்குச் சென்றுத் தனியாகவோ, அல்லது சீடர்களுடனோ தங்கினார்.

நாம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது இயேசு முழுமையாக மனிதனாக(Fully man) இருந்தாலும்,

அவர் பரிசுத்த 
தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆள், முழுமையாக கடவுள் (Fully God)

 இந்த சந்தர்ப்பத்தில் மற்றொரு மறை உண்மையையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள், நமக்காக பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாகப் பிறந்தார்.

துன்பப் படவே முடியாத கடவுள் நமக்காக பாடுகள் பட்டு சிலுவையில் மரித்தார்.

நாம் அவருடைய மகிமைக்காகவும், நமது அயலானின் நன்மைக்காகவும் எவ்வளவு தியாகங்கள் செய்ய வேண்டும் என்பதற்கு நமக்கு முன் உதாரணமாக இயேசு வாழ்ந்தார்.

இவ்வுலகில் இறைவனோடு இணைந்து ஜெப வாழ்வு வாழ்வோம்.

அதே வாழ்வு மறு உலகிலும் தொடரும்.

லூர்து செல்வம்.

Thursday, October 26, 2023

நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். ( லூக்.12:58)

நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். 
(லூக்.12:58)

நமக்கு முன் அனுபவம் இல்லாத ஆன்மீக காரியங்களை விளக்குவதற்கு 

ஆண்டவர் நமக்கு அனுபவம் உள்ள உலக காரியங்களை உதாரணமாகக் கூறுவது வழக்கம்.

நாட் இவ்வுலக வாழ்க்கையை முடித்துவிட்டு ஆண்டவர் முன் தீர்ப்புக்குச் செல்லும் போது 

இவ்வுலகில் நாம் வாழ்ந்த ஆன்மீக வாழ்வின் அடிப்படையில் நமக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும்.

பாவ மாசின்றி வாழ்ந்தவர்கள் விண்னக மோட்ச வாழ்வுக்கும்,

சாவான பாவ வாழ்க்கை வாழ்ந்தவர்கள் நித்திய பேரிடர் வாழ்வுக்கும் அனுப்பப்படுவார்கள்.

இறுதித் தீர்ப்பை நாம் இறந்த பின்பு தான் சந்திக்க வேண்டும்.

தீர்ப்பு நாளில் நமக்கு விண்ணக மோட்ச வாழ்வு கிடைக்க வேண்டும் என்றால் நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?

உலக ரீதியாக நாம் ஒரு நபருக்கு எதிராக ஒரு குற்றம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம்.

யாருக்கு விரோதமாகக் குற்றம் செய்தோமோ அவர் நம்மை பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நமது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நமக்கு தண்டனை வழங்கப்படும்.

நமக்கு தண்டனை கிடைக்கக் கூடாது என்று நாம் ஆசைப்பட்டால்,

 நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே

 யாருக்கு விரோதமாக குற்றம் செய்தோமோ அவரிடம் சென்று நமது குற்றத்தை மன்னிக்கும் படி கெஞ்சிக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அவர் நமது குற்றத்தை மன்னித்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வார்.

நாம் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இது உலக அனுபவம்.

ஆன்மீகத்துக்கு வருவோம்.

இறைவன் நம்மைப் படைத்தது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

இவ்வுலகில் அவரது சித்தப்படி வாழ்ந்து

 மறு உலகில் அவரோடு நிரந்தரமாக நித்தியகாலம் பேரின்ப இன்பத்தில் வாழ்வதற்காகவே நம்மைப் படைத்தார்.

ஆனால் இவ்வுலகில் அவரது கட்டளைகளை மீறி பாவ வாழ்க்கை வாழ்வோர் மறு உலகில் நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.

நித்திய பேரின்ப வாழ்வோ, அதன் இழப்போ நமது மரணத்திற்குப் பின் நடைபெறும் தீர்ப்பு முதல் ஆரம்பமாகும்.

ஆகவே இவ்வுலகில் பாவ வாழ்க்கை வாழ்வோர் தங்கள் மரணத்துக்கு முன் பாவ சங்கீர்த்தனம் மூலம் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்று இறைவனோடு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

சமாதானம் செய்து கொள்ளாவிட்டால் மரணத்திற்குப் பின் நித்திய பேரிடர் வாழ்விலிருந்து தப்பிக்க முடியாது.

இதைத்தான் நமது ஆண்டவர் பின்வரும் வசனத்தின் மூலம் விளக்குகிறார்.


"நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்.

(பாவம் செய்பவர்கள் தங்களைப் படைத்த கடவுளுக்கு எதிராக செயல்படுவதால் கடவுளையே தங்கள் எதிரியாக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் கடவுளிடம் பாவ மன்னிப்புப் பெற்று அவரைத் தங்கள் நண்பராக்கிக் கொள்ள வேண்டும்)



 இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும்.
சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்."

(கடவுள் தான் மனிதர்களுடைய நீதிபதி. தீர்ப்பு நாளைக்கு முன் அதாவது மரணத்துக்கு முன் நீதிபதியிடமே தங்களது பாவங்களுக்கு மன்னிப்புப் பெறாவிட்டால் பாவங்களுக்கான தண்டனை பெற நேரிடும்)

கடவுளுக்கு எதிராக நாம் செய்த பாவங்களுக்கு நமக்கு மன்னிப்புத் தரும் அதிகாரத்தை கத்தோலிக்க திருச்சபையின் குருக்களுக்கு இறைவன் அளித்திருக்கிறார்.

"எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:23)

நமது குருக்களிடம் அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்து நமது ஆன்மாவைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி வைத்துக் கொண்டால் நமக்கு இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு உறுதி.

லூர்து செல்வம்.

Wednesday, October 25, 2023

நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்.12:51)

நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன். (லூக்.12:51)

இயேசு சமாதானத்தின் தேவன்.

தான் செய்த பாவத்தினால் மனிதன் இறைவனோடு தனக்கு இருந்த சமாதான உறவை இழந்தான்.

மனிதன் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்து

 அவனை மன்னித்து

 அவன் இழந்த சமாதானத்தை மீட்டுக் கொடுக்கவே இறைமகன் மனிதனாய் பிறந்தார்.

பிறரன்புக்கு விரோதமான பாவங்கள் மனித சமூகத்திலும் சமாதானத்தைப் பாழாக்கி விட்டன.

பிறர் அன்புக்கு விரோதமான பாவங்களுக்காகவும் இயேசு பாடுகள் பட்டு பரிகாரம் செய்தார்.

மொத்தத்தில் இயேசு சமாதானத்தின் தேவனாகவே உலகிற்கு வந்தார்.

மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தபின் தனது சீடர்களுக்குத் தோன்றிய போதெல்லாம்,

 "உங்களுக்கு சமாதானம் உண்டாகுக" என்று தான் வாழ்த்தினார்.

நாம் பெற்ற ஞானஸ்நானம் என்னும் தேவத்திரவிய அனுமானம் நமது சென்மப் பாவத்தை மன்னித்து நம்மை இறைவனோடு சமாதானப்படுத்துகிறது.

உறுதிப் பூசுதல் என்னும் 
தேவத்திரவிய அனுமானத்தின் போது பரிசுத்த ஆவியானவர் நம் மீது இறங்கி,

 இறைவனோடும் நமது அயலானோடும் நாம் கொண்டுள்ள ஆன்மீக சமாதான வாழ்வை உறுதிப்படுத்துகிறது.

பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத்திரவிய அனுமானம் இறைவனுக்கு விரோதமாக நாம் செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து, இறைவனோடு சமாதான வாழ்வில் தொடர உதவுகிறது.

திருப்பலியில் திரு விருந்தின் போது சமாதானத்தின் தேவனாகிய இயேசு தன்னையே நமக்கு உணவாகத் தந்து நமது ஆன்மீக சமாதான வாழ்வை வளம் பெறச் செய்கிறார்.

குருத்துவம் என்னும் தேவத் திரவிய அனுமானம் நமது பாவங்களை மன்னிக்க குருக்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது. குருக்கள் தான் நம்மை இறைவனோடும் நமது பிறரோடும் சமாதான வாழ்வில் வழி நடத்துகிறார்கள்.

 மெய் விவாகம் என்னும் தேவத் திரவிய அனுமானம் திருமணத் தம்பதிகள் ஒருவர் ஒருவரோடும், இறைவனோடும் சமாதான உறவில் வாழ வேண்டிய அருள் வரங்களை அள்ளித் தருகிறது.

அவஸ்தைப் பூசுதல் என்னும் தேவத் திரவிய அனுமானம் நமது வாழ்வின் இறுதியில் நாம் சமாதானத்தோடு இறைவன் பாதத்தை அடைய வேண்டிய அருள் வரங்களை தருகிறது. 

ஆக கிறிஸ்தவம் என்றாலே இறைவனோடு சமாதான வாழ்வு என்றுதான் அர்த்தம்.


அப்படியிருக்க, இயேசு ஏன்,

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன்.'' என்று சொல்கிறார்?

தான் பெற்ற பிள்ளைகள் தன் சொற்படி கேட்காமல் தங்கள் இஸ்டம்போல் நடப்பதைப் பார்த்த தாய் பொறுக்காமல், 

"நான் பத்து மாதம் சுமந்து பெற்றது இரண்டு பிள்ளைகள் அல்ல, பேய்கள்."

என்று சொன்னால் அதை எந்த பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதே பொருளில் ஆண்டவருடைய வார்த்தைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிள்ளை உண்டாகும் முன் பிள்ளைக்கு ஆசைப்பட்ட தாய்,

பிள்ளை உண்டான போது பேறு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாய்,

பிள்ளை பிறந்த போது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த தாய், 

பிள்ளைகள் வளர்ந்து ரவுடிகளாக 
மாறிவிட்டால்,

"உன்னைப் பெற்றதற்குப் பதிலாக ஒரு விளக்குமாற்றைப் பெற்றிருக்கலாம், 
பெருக்கவாவது உதவும்" என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். 

ஆனால் அவளுடைய ஆசை அது அல்ல. அவளுடைய மனநிலை.

இறைவன் நமது முதல் பெற்றோரைப் படைக்கும் போது அவர்களை நல்லவர்களாகத்தான் படைத்தார்.

ஆனால் அவர்கள் பாவம் செய்து கெட்டுப் போனார்கள்.

இறை மகனாகிய இயேசு மனு மகனாய்ப் பிறந்தது நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்து அவற்றை மன்னித்து,

 நமக்கும் அவருக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான்.

ஆனால் நம்மில் அநேகர் அவர் ஏற்படுத்துவதற்காக ஆசைப்பட்ட சமாதானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

நமது முதல் பெற்றோர்களைப் போல அவர்களும் பாவத்தினால் 
தங்களைப் படைத்த இறைவனோடும், தங்களோடு வாழ்கின்ற அயலானோடும் சமாதானம் இன்றி வாழ்கின்றார்கள்.

கடவுளைப் பொறுத்த மட்டில் அவர் அளவில்லாத ஞானம் உள்ளவர்.

நித்திய காலத்திலிருந்தே தன்னால் படைக்கப்பட்டவர்கள் இப்படித்தான் வாழ்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆனாலும் பிள்ளைகளைப் பெற்ற தாயின் மனநிலையை நமக்கு புரிய வைப்பதற்காக,

புரிந்து கொண்டு நம்மைப் படைத்த நமது வானகத் தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப நாம் வாழ வேண்டும் என்பதை நமக்கு அறிவுருத்துவதற்காகவும்
அவ்வாறு சொன்னார்.

இயேசுவுக்கு இரண்டு சுபாவங்கள்.

துன்பப்படவோ வருத்தப்படவோ முடியாத தேவ சுபாவம்.

பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் மனித மனநிலை உள்ள மனித சுபாவம்.

இயேசு முழுமையாகக் கடவுள் (Fully God)

முழுமையாக மனிதன் (Fully man)

இயேசு மனித சுபாவத்தில் மக்கள் தன் சொல்லை கேளாததற்காக வருத்தப்பட்டார்,

லாசர் இறந்த போது அழுதார்,

தான் யூதர்களால் கைது செய்யப்படுவதற்கு முன் ஒலிவமலையில் வைத்து, தனது பாடுகளின் வேதனையை நினைத்து பயந்து, தன் தந்தையை நோக்கி 

"தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்: 

எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.

இதைப்போல் மனித மனநிலையில் தான்,

"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்." என்று கூறினார்.

16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து லூத்தர் பிரிந்து சென்ற நிகழ்வும்,

இன்று  பைபிளை மட்டும் கையில் வைத்துக் கொண்டு உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நாற்பதாயிரத்துக்கு மேலான பிரிவினை சபையார்களும்,


கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே இயேசுவின் வழிகாட்டல் படி வாழாமல் பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்

 அன்று இயேசுவின் மனதில் இருந்திருக்க வேண்டும்.

ஒரு மனித தாயின் மனநிலையில் தான் இயேசு,

 "நான் சமாதானத்தை அல்ல, பிரிவினையை ஏற்படுத்தவே வந்தேன்" என்று கூறுகிறார்.

ஒரு தாய் கெட்டுப்போன தன் மகனைப் பார்த்து,

"நான் ஒரு பேயைப் பெற்று விட்டேன்" என்று கூறும் போது,

வார்த்தைகள் பிள்ளையின் மனசாட்சியைக் குத்த வேண்டும்.

அவன் திருந்த வேண்டும்"

அதேபோல் தான் இயேசு

"பிரிவினையை உண்டாக்கவே வந்தேன்" 

என்ற இயேசுவின் வார்த்தைகள் கெட்ட கிறிஸ்தவர்களின் மனசாட்சியைக் குத்த வேண்டும்.

தங்களைப் பற்றி தான் இயேசு இவ்வாறு கூறுகிறார் என்பதை உணர்ந்து நல்ல கிறிஸ்தவர்களாக வாழ ஆரம்பிக்க வேண்டும்.

பாவத்தின் காரணமாக மனச் சமாதானம் இல்லாதவர்கள் உடனடியாகப் பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பங்குகளில் பங்குக் குருவோடு சமாதானம் இல்லாமல், தகராறு பண்ணிக் கொண்டிருப்பவர்கள்,

தங்கள் நிலையை மாற்றி சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

பெற்றோருடன் சமாதானம் இல்லாமல் வாழும் பிள்ளைகள் சமாதானத்தோடு வாழ வேண்டும்.

வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் தங்கள் தவறை உணர்ந்து பெற்றோரை நன்கு கவனிக்க வேண்டும்.

சகோதர, சகோதரிகளுடனும், பக்கத்து வீட்டுக் காரர்களுடனும் சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் மன்னிப்புக் கேட்டு சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.

நமது மீட்பர் இயேசுவின் ஆசைப்படி அனைவரும் சமாதானமாக வாழ வாழ்த்துகிறேன்.

லூர்து செல்வம்.

Tuesday, October 24, 2023

எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்.(லூக்.12:48)

எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும்.
(லூக்.12:48)

"தாத்தா, எல்லா மனிதர்களையும் ஒரே கடவுள் தானே படைத்தார். அதுவும் தனது சாயலில் தானே படைத்தார்.

ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லையே, ஏன்?"

"'மனிதன் இயந்திரங்களைக் கொண்டு உண்டாக்கும் பொருள்கள் ஒரே மாதிரியாக இருக்கும்.

அவை ஒரே மாதிரியாக இருக்கும் படிதான் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் கடவுள் இயந்திரம் அல்ல.

அளவில்லாத வல்லமையும், ஞானமும், சுதந்திரமும் உள்ளவர்.

அடிப்படைக் குணங்களில் மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருந்தாலும்,

ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமான அளவுள்ள திறமைகளோடு படைக்கப்பட்டிருக்கிறான்.

எல்லோராலும் பேச முடியும். ஆனால் பேச்சாற்றலின் அளவு வித்தியாசமாக இருக்கும்.

 திறமைகள் கொடுக்கப் பட்டிருப்பது அவற்றைப் பயன்படுத்துவதற்கே.

பயன்படுத்தும் தன்மையைப் பொறுத்து அவர்கள் திறமைசாலிகளாகவோ,

திறமை குறைந்தவர்களாகவோ,

 நல்லவர்களாகவோ அல்லது கெட்டவர்களாகவோ கருதப்படுவர்.

ஒரு பெரிய கூட்டத்தை தனது பேச்சாற்றலால் தன் பக்கம் திருப்புபவன் சிறந்த பேச்சாளன்.

நல்ல காரியத்துக்காகத் திருப்புவன் நல்லவன்.

மோசமான காரியத்துக்காகத் திருப்புபவன் கெட்டவன்.

புனித அந்தோனியார் இளமையில் பேச்சாற்றல் மிக்கவர்.

அவர் தன் பேச்சாற்றலை நற்செய்தி மணிக்குப் பயன்படுத்தி லட்சக்கணக்கான பேரை ஆண்டவர் பால் கொண்டு வந்தார்.

அவருடைய பேச்சாற்றல் லட்சக்கணக்கான பேரை மோட்ச பேரின்ப வீட்டுக்கு அழைத்துச் சென்றது.

ஆகவே அவர் புனிதர்.


மார்ட்டின் லூத்தரும் பேச்சாற்றல் மிக்கவர் தான்.

ஆனால் அவருடைய ஆற்றல் அநேகரை கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து பிரித்துச் சென்று விட்டது.

புனித அந்தோனியார் தன் திறமையை ஆண்டவருக்காகப் பயன்படுத்தினார்.

லூத்தர் தன் திறமையை 
ஆண்டவருக்கு எதிராகப் பயன்படுத்தினார்.

எழுத்தாற்றல் மிக்க மோயீசன் இறைவன் தனக்கு அறிவித்த செய்தியைப் புத்தகங்களாக எழுதி உலகத்தாருக்கு அறிவித்தார்.

அதேபோல் தான் பைபிளின் இதர புத்தகங்களை எழுதியவர்களும்.

நாம் வாசிக்கும் அனைத்து ஞான வாசகப் புத்தகங்களும் எழுத்தாற்றல் மிக்கவர்களால்தான் எழுதப்பட்டன.

இறைச் செய்திக்கு எதிரான புத்தகங்கள் எழுதி சாத்தானின் பணியாளர்களாகச் செயல்படுபவர்களும் இருக்கிறார்கள்.

தங்களது பணம் ஈட்டும் திறமையை நேர்மையாகப் பயன்படுத்தி 

ஈட்டிய பணத்தைக் கொண்டு பிறர் சிநேக உதவிகளைச் செய்து வருபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

பாவ வாழ்க்கை வாழ்வதற்காக மட்டும் தங்களது பணம் ஈட்டும் திறமையைப் பயன்படுத்துவர்களும் இருக்கிறார்கள்.

அதிகமான திறமை உள்ளவர்களிடமிருந்து இறைப்பணியில் அதிகமான செயல்பாட்டை இறைவன் எதிர்பார்க்கிறார்.

இறைவன் நமக்கு அளித்திருக்கும் திறமைகளை நம்மால் இயன்ற மட்டும் இறைப்பணியில் நாம் பயன்படுத்த வேண்டும்.

திறமைகளின் அளவு மாறுபடலாமே தவிர திறமைகளே இல்லாதவர்களே கிடையாது.

தங்களுக்கு எந்த அளவு திறமை இருந்தாலும் அதை ஆண்டவருக்காக நாம் பயன்படுத்த வேண்டும்.

நமக்கு அளிக்கப்பட்ட திறமைகளின் அடிப்படையில் நம்மிடம் இறுதி நாளில் கணக்குக் கேட்கப்படும்.

ஆகவே நமது திறமைகள் அனைத்தையும் முழுமையாக இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Monday, October 23, 2023

இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."(லூக்.12:40)

இதையுணர்ந்து நீங்களும் ஆயத்தமாக இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மனுமகன் வருவார்."
(லூக்.12:40)

திருடன் தான் திருட வரும் நேரத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு வரமாட்டான். நாம் எதிர்பாராத நேரத்தில் வருவான்.

அதேபோல் தான் மனுமகன் நம்மை அழைக்க வரும் நேரமும்,

 அதாவது, மரணமும் இருக்கும்.

இவ்வுலகில் வாழும் நம்மை இயேசு மறு உலகிற்கு அழைத்துச் செல்லும் நேரத்தை மரணம் என்கிறோம்.

ஞானஸ்நானத்தின் போது நாம் பெற்ற பரிசுத்தத்தனத்தை மரணம் வரைப் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

எப்போதாவது நமது பாவத்தினால் அதை இழக்க நேரிட்டால் பாவ சங்கீர்த்தனம் செய்து இழந்த பரிசுத்தத்தனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மரணத்தின் போது நமது ஆன்மா பரிசுத்தமாக இருந்தால்தான் இறைவனோடு வாழ விண்ணகம் செல்லும்.

சாவான பாவ நிலையிலிருந்தால் நித்திய பேரின்ப வாழ்வை இழக்க நேரிடும்.

 பாவத்தினால் பரிசுத்தத்தனத்தை இழக்க நேரிட்டால், மரணம் வரும்போது பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்ளலாம் என்று மெத்தனமாக இருக்கக் கூடாது.

ஏனெனில் மரணம் எதிர்பாராத நேரத்தில் வருமாகையால் மரண நேரத்தில் பாவ நிலையில் இருக்க நேரிடலாம்.

ஆகவே நாம் எப்போதும், ஒவ்வொரு வினாடியும், நமது ஆன்மாவை பாவம் இல்லாமல் பரிசுத்தமாக காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படி திருமணத்தின் போது மணமகனின் வருகையை மணமகள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ

 அதே போல நாமும் ஆண்டவரின் வருகையை ஒவ்வொரு வினாடியும் பரிசுத்தமான ஆன்மாவோடு

 ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

மரணம் விண்ணகத்தின் வாசல் என்பதால், மரணம் வரும் நேரம் நமக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.

எதிர்பாராமல் வரும் மரணத்தை ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் பாவம் எதுவும் செய்ய மாட்டான்.

எப்போதும் ஆண்டவரின் வருகையை அவரின் நினைவோடு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.

விண்ணகப் பேரின்ப வாழ்வு வேண்டுமா?

எப்போதும் பாவம் இல்லாமல் பரிசுத்தமாய் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Sunday, October 22, 2023

மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.(லூக்.12:8)

மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.(லூக்.12:8)

"நம்முடைய நாடு மத சார்பற்ற நாடு தானே!"

"'ஆமா, அதில் என்ன சந்தேகம்?"

'நீங்கள் மதசார்பு உள்ளவர்களா, மதசார்பு அற்றவர்களா?"

'''நான் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன்?"

" அதாவது மத சார்பு உள்ளவர்."

"'கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். ஆகவே மதசார்பு உள்ளவன்"

''மதசார்பு உள்ள நீங்கள் எப்படி ஒரு மத சார்பற்ற நாட்டில் வசிக்கலாம்?"

"'நமது நாடு ஒரு மதசார்பற்ற நாடு. அதாவது நமது நாட்டின் அரசியல் சட்டம் இங்கு வாழும் மக்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

நமது நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்பதுதான் அரசியல் சட்டத்தின் நோக்கம்.

இங்கு வாழும் மக்களின் சமய நம்பிக்கையில் அரசியல் சட்டம் குறுக்கிடாது.

நமக்கு இஷ்டப்பட்ட சமயத்தைப் பின்பற்றவும் அதை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் நமது அரசியல் சட்டம் அனுமதி அளிக்கிறது.

Article 25 guarantees the freedom of conscience, the freedom to profess, practice, and propagate religion to all citizens."

"மதசார்பற்ற நாட்டின் வாழும் மக்களை எப்படி நீங்கள் உங்கள் மதத்தைச் சார்ந்தவர்களாக வாழும்படி செய்யலாம்?"

"'எங்கள் சமயக் கொள்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

நாங்கள் சொல்வதை நம்பவோ நம்பாதிருக்கவோ மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது.


உலக மக்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு அவர்களுக்கு நித்திய வாழ்வை அளிக்க இறை மகன் இயேசு மனிதனாய்ப் பிறந்து பாடுகள் பட்டு மரித்தார் என்பது எங்களது நம்பிக்கை.

எங்கள் நம்பிக்கையை உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்பது இயேசு எங்களுக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

இயேசுவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும் விதத்தில் தான் நாங்கள் எங்களது சமயக் கொள்கைகளை மற்றவர்களுக்கு அறிவிக்கிறோம்.

அறிவிக்காவிட்டால் நாங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல.

எங்கள் அறிவிப்பை ஏற்று அதன்படி நடந்து மீட்பு அடைவதும்,

ஏற்றுக்கொள்ளாமல் மீட்பு அடையாதிருப்பதும் அவரவர் சுதந்திரத்திற்கு உட்பட்டது.

மற்றவர்களது சுதந்திரத்தில் நாங்கள் குறுக்கிடுவதில்லை.

மனிதர்முன் இயேசுவை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, 

மற்றவர்களுக்கும் அவரை அறிவிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.

கடவுளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது எங்கள் கடமை."

"ஒவ்வொருவரும் அவரவர் சமயக் கொள்கைகளைச் சரி என்று ஏற்றுக் கொண்டால் தங்களது கொள்கைகளோடு ஒத்து மற்றவர்களது கொள்கைகளைத் தவறு என்று நினைக்கிறார்கள் என்று தானே அர்த்தம்."

"'2 + 2 = 4என்பது உண்மையானால் 2 + 2 = 5 என்பது தவறு தானே!"

"அதாவது உங்களைப் பொறுத்தமட்டில் உங்களது சமயக் கொள்கைகள் மட்டுமே சரி, அப்படித் தானே!"


"'அவரவர்கள் அவரவர்களது கொள்கைகள் சரி என்று நினைப்பார்கள்.

நினைக்காவிட்டால் எப்படி அவர்கள் அதை நம்ப முடியும்? "

"எங்களது கொள்கைகள் தவறு என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?"

"'எங்களது கொள்கைகள் சரி என்று சொல்ல எங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.

நாங்கள் நம்புகிறோம், நம்புவதை செயல்படுத்துகிறோம், அதாவது வாழ்கிறோம்.

எல்லோருடைய முன்னால் தானே வாழ்கிறோம்.

கடவுளை அன்பு செய்து, அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் அன்பு செய்து, அனைவருக்கும் உதவி செய்து வாழ்கிறோம்.

எங்களது வாழ்க்கையின் ஒளியில் இயேசு தெரிந்தால் நீங்களும் அவரை ஏற்றுக் கொள்வீர்கள்."

"இயேசு தெரியாவிட்டால்?"

"'நாங்கள் சரியாக வாழவில்லை என்று அர்த்தம்.

இயேசுவின் ஒளியியில், அவர் காட்டும் வழியில் நாங்கள் நடந்தால் 

நிச்சயமாக நீங்கள் அவரைக் காண்பீர்கள்."

"இயேசு காட்டும் வழியில் நடந்தால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?"

"'இவ்வுலகில் எங்கள் வாழ்வு முடிந்தவுடன் விண்ணுலகில் இயேசு எங்களை ஏற்றுக் கொள்வார்.

அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்."

லூர்து செல்வம்.

Friday, October 20, 2023

"எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது".(லூக்.12:15)

"எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது".(லூக்.12:15)


"பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை. அருள் இல்லார்க்கு விண்ணுலகு இல்லை." என்று சொல்வார்கள்.

நாம் படைக்கப்பட்டிருப்பது இவ்வுலகில் வாழ்வதற்கு அல்ல, விண்ணுலகில் வாழ்வதற்கு.

தங்களிடம் இவ்வுலகைச் சார்ந்த பொருளோ பணமோ இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.

வெளிநாட்டுக்கு செல்ல விரும்புகிறவர்கள் தான் தங்களிடம் பாஸ்போர்ட் இருக்கிறதா என்பதை பற்றி யோசிக்க வேண்டும்.

எங்கும் போக விரும்பாதவர்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்.

விண்ணுலகம் சென்று இறைவனோடு வாழ்வதையே நோக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு இவ்வுலகைச் சார்ந்த பொருளைப் பற்றிய சிந்தனை வேண்டாம்.

 இவ்வுலகில் வாழ ஆசைப்படுபவர்கள் மட்டுமே பொருளின் மீது ஆசை வைப்பர்.

இறைவனையே நோக்கமாக கொண்டு வாழ்பவர்களுக்கு அவரது அருள் மட்டுமே போதும்.

தங்களிடம் உள்ள பொருளைக் கூட இறைவனது அருளை ஈட்டவே பயன்படுத்த வேண்டும்.

பொருளைக் கொண்டு அருளை எவ்வாறு ஈட்டுவது?

விண்ணுலக வாழ்வுக்காக நம்மை படைத்த இறைவன் ஏன் இவ்வுலகில் வாழ வைத்தார்?

இவ்வுலகில் வாழ வைத்தது நிரந்தரமாக இங்கே வாழ்வதற்கு அல்ல.

உலக ரீதியாக பார்த்தால் கூட ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு உழைத்து மாதக் கடைசியில் சம்பளமாக பணத்தை வாங்குவது பணத்தைச் சாப்பிடுவதற்கு அல்ல.

பணத்தை உடுக்க முடியாது,

 உண்ண முடியாது, 

பணத்தை விரித்து அதன் மேல் படுத்து உறங்க முடியாது.

ஆனால் பணத்தைக் கொண்டு உடுக்க உடை வாங்கலாம்,.

உண்ண உணவு வாங்கலாம்,

படுக்க பாய் வாங்கலாம்.

அதே பணத்தைக் கொண்டு விண்ணக வாழ்வு வாழ வழி செல்வதற்கு வேண்டிய அருளையும் ஈட்டலாம்.

அருளைப் பெற வேண்டியது இறைவனிடமிருந்து.

இறையன்பு, பிறர் அன்பு இரண்டும் இருந்தால் பணத்தைக் கொண்டு அருளை ஈட்டலாம்.

இறைவனை அன்பு செய்யும்போது அவரால் படைக்கப்பட்ட நமது பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க முடியாது.

பிறனை அன்பு செய்ய வேண்டும் என்று இறைவனே நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்.

உள்ளத்தால் அன்பு செய்தால் பற்றாது.

ஆன்மீக வாழ்வின் உயிர் அன்பு தான்.

உயிருள்ள எந்த பிராணியும் இயங்காமல் இருக்காது.

அதேபோல அன்பு என்னும் உயிருள்ள நமது பிறருறவு இயங்க வேண்டுமானால் அன்பு செயலில் வெளிப்பட வேண்டும்.

அன்பு அன்பர்களின் நலனையே
விரும்பும்.

அன்பர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காணவே முயலும்.

அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் உதவிக்கரம் நீட்டும்.

நம்மிடம் பிறரன்பு இருக்குமானால், அவர்களுக்கு தேவைகள் ஏற்படும் போதெல்லாம் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவி செய்வோம்.

உதவி செய்ய நம்மிடம் உள்ள பணம் அல்லது பொருள் பயன்படும்.

பிறருக்கு உதவி செய்வதற்காக நாம் பயன்படுத்தும் பொருள் இறைவனது அருளை நமக்கு ஈட்டித் தரும்.

" சீடன் என்பதற்காக இச் சிறியவருள் ஒருவனுக்கு ஒரே ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவனும் கைம்மாறு பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்." (மத்.10:42)

பொருளாசை இல்லாதவன் தான் தன்னிடம் உள்ள பொருளை மற்றவர்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்துவான்.

பொருளாசை உள்ளவன் ஈட்டும் பொருள் இவ்வுலகில் அவனுக்கு நிரந்தரமான வாழ்வை தந்து விடாது.

அருளாசை உள்ளவன் ஈட்டும் பொருள் மறு உலக வாழ்வுக்கு வேண்டிய அருளைப் பெற்றுத் தரும்.

நம்மிடம் பொருள் இருந்தால்,

 அதை அனுபவிக்க ஆசைப்படாமல்,

இறைவன் தரும் அருளைப் பெற பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 18, 2023

உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.,( லூக். 12:4)

உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.,( லூக். 12:4)

"நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதை மறந்து விட்டீர்களா?"

"யார் சொன்னது?"

"யாருமே சொல்லவில்லை. நேற்று பூசைக்கு வரவில்லையே.
அதனால் தான் கேட்டேன்?"

"பூசைக்கு வராதது என் தப்புதான்.
ஆனால் என் நிலைமை அப்படி ஆகிவிட்டது?"

''அப்படி என்ன நிலைமை?"

"உங்களால் மணிக்கணக்காக நடக்க முடியும் தானே!"

"'ஆமா."

"யாராவது உங்கள் கால்கள் இரண்டையும் சேர்த்து இறுக்கக் கட்டி போட்டு விட்டால் உங்களால் நடக்க முடியுமா?"

"நிச்சயமாக முடியாது."

"அப்படித்தான் என் நிலையும்."

"ஞாயிற்றுக் கிழமையன்று உனது கால்களை யாராவது கட்டிப் போட்டு விட்டார்களா?"  

"கால்களைக் கட்டி போடவில்லை.
என்னை முழுவதும் கட்டிப் போட்டு விட்டார்கள்."

"'யார் உன்னை முழுவதும் கட்டிப் போட்டது?''

"நான் வேலை பார்க்கும் கடை முதலாளி ஞாயிற்றுக் கிழமையன்று கடையை விட்டு எங்கும் போகக் கூடாது என்றும்,  

 மீறிப் போனால் வேலை கிடையாது என்றும்  சொல்லிவிட்டார்.

அதனால்தான் என்னால் 
பூசைக்கு வர முடியவில்லை."

"ஞாயிற்றுக் கிழமை பூசைக்கு வராவிட்டால் சாவான பாவம் என்று உனக்குத் தெரியுமா? தெரியாதா?"

''தெரியும்."

"சாவான பாவத்தோடு மரித்தால் நித்திய நரகத்துக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? தெரியாதா?"

"அதுவும் தெரியும்."

'அப்படியானால் நித்திய மோட்ச வாழ்வை விட உனக்கு இவ்வுலக வேலை தான் முக்கியம்.

கடவுளை விட உனது கடை முதலாளி தான் முக்கியம்.

 அப்படித்தானே."

''கடவுள் தான் முக்கியம். ஆனாலும் சாவான பாவத்தோடு மரணம் அடைந்தால் தானே நரகத்துக்கு போக நேரிடும்.

நான் நன்றாகத் தானே இருக்கிறேன்.

எனக்கு இப்போது மரணம் வராது."

"நன்றாக இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களில் எத்தனை பேர் Heart attack கினால் இறந்து போயிருக்கிறார்கள் தெரியுமா?"

'எனது இதயம் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு Heart attack வராது."

'நேற்று மாலையில் நமது ஊரிலேயே நான்கு பேர் கார் விபத்தில் இறந்ததைப் பற்றி கேள்விப்படவில்லையா?

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பேருக்கு தாங்கள் இறப்போம் என்று அதற்கு முந்திய வினாடி வரை தெரியாது.

துருக்கியில் நடந்த பூமி அதிர்ச்சியில் விழுந்த நகரத்தைப் பற்றி பத்திரிகைகளில் நீ வாசித்ததில்லையா?

மரணம் யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரும்.

எதிர்பாராத நேரத்தில் கூட வரும்.

எப்போதும் சாவான பாவம் இல்லாத பரிசுத்தமான ஆன்மாவோடு வாழ்ந்தால் தான், 

எப்போது மரித்தாலும் மோட்சத்திற்குச் செல்வோம்.

இவ்வுலக முதலாளிகளையும், நிரந்தரமற்ற வாழ்க்கையையும்
 விட,

 நித்திய கடவுளும், நித்திய பேரின்ப வாழ்வும் தான் நமக்கு முக்கியம்.

இவ்வுலக முதலாளிக்குக் கீழ்படிவதற்காக  நம்மைப் படைத்த கடவுளை  எதிர்த்த நீ ஒரு முட்டாள்."

"நான் கடவுளை எதிர்க்கவில்லையே!" 

"பாவம் கடவுளுக்கு எதிரானது.
எதிரானதைச் செய்பவன் எதிர்ப்பவன் தானே.

உன் மகன் உனது பகைவனோடு கூட்டுச் சேர்ந்தால் அவன் உன்னை எதிர்க்கிறானா? ஆதரிக்கிறானா?"

"இப்போது புரிகிறது. நான் செய்தது கடவுளுக்கு எதிராக சாவான பாவம்.

உடனடியாக சுவாமியாரிடம் சென்று பாவ சங்கீர்த்தனம் செய்து கொள்கிறேன்.

எனது வேலைக்கு என்ன நேர்ந்தாலும் கவலை இல்லை.

இனிமேல் ஒழுங்காக ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வந்து விடுவேன்.

தங்களது புத்திமதிக்கு நன்றி"

லூர்து செல்வம்.

Tuesday, October 17, 2023

அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.(லூக்.10:2)

அறுவடையோ மிகுதி: வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.(லூக்.10:2)

அறுவடையின் ஆண்டவர் இயேசு அவர் அனுப்புகின்ற ஆட்களைப் பார்த்து

 "தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்." என்று கூறுகிறார்.

வயல் உரிமையாளர் வயலில் அறுவடை அதிகமாக இருந்தால் அதிகமான ஆட்களை அழைத்து வருவது வழக்கம்.

இயேசு தன்னை வயல் உரிமையாவதாகக் கற்பனை செய்து கொள்கிறார்.

உலகம் அவளுடைய வயல்.

அறுவடை நற்செய்தி அறிவித்தல்.

நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய மக்கள் ஏராளமாக உள்ளனர்.

நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்பவர் வயல் உரிமையாளரான ஆண்டவர் தான்.

நற்செய்தி பணிக்காக ஆள்கள் ஆண்டவரால் தேர்வு செய்யப்படுவதை தேவ அழைத்தல் என்கிறோம்.

அழைப்பவர் ஆண்டவர் இயேசு தான்.

அவரே நம்மைப் பார்த்து,

"நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டிய மக்கள் ஏராளமாக உள்ளனர்.

ஆகவே அப்பணிக்கு அதிகமான ஆட்களை தேர்வு செய்யும்படி என்னை மன்றாடுங்கள்.'

அறுவடையின் ஆண்டவரே அவர்தான்,

அதனால்தான் என்னை மன்றாடுங்கள் என்று குறிப்பிட்டேன்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று இயேசு சொல்லும்போது 

என்னைக் " கேளுங்கள்" என்றுதானே சொல்கிறார்!

ஏன் அவர் செய்ய வேண்டிய வேலையை செய்யும்படி நம்மைக் கேட்க சொல்கிறார்?

நாம் கேட்காமலேயே அவரால் அறுவடைக்கான ஆட்களை தேர்வு செய்ய முடியுமே?

முதலில் நாம் கிறிஸ்தவர்கள், அதாவது, கிறிஸ்துவின் சீடர்கள், என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

குரு செய்யும் பணிக்கு முழுமையாக ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டியவன் சீடன்.

அந்த வகையில் நற்செய்தி அறிவிக்கும் பணி இயேசுவுடையது மட்டுமல்ல நமது பணியும் தான்.

என்று நாம் ஞானஸ்நானம் பெற்றோமோ, 

அன்றே, 

இறை மகனாகிய இயேசு என்ன பணி செய்ய உலகுக்கு வந்தாரோ 

அப்பணியில் அவருக்கு உதவிகரமாக இருக்க  சீடர்கள் என்ற முறையில் நமக்குக் கடமை ஏற்பட்டது.

இயேசு மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் பட்டு, மரித்து, 

அவர்களைப் பாவத்திலிருந்து மீட்பதற்காக மனிதனாய் பிறந்தார்.

இயேசு மீட்க வந்தது மனிதர்களை, 

ஆகவே மனிதர்கள் என்ற முறையில் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புக் கொடுக்க நமக்கு கடமை உண்டு.

நமது குடும்பம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் போது

 அதைத் தீர்க்க ஒருவர் உதவிக்கு வந்தால் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது உண்மைதானே.

மனுக்குலம் நமது குடும்பம்.

அதை மீட்கவே இயேசு மனிதனாகப் பிறந்தார்.

நாம் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

நாம் எப்படி ஒத்துழைப்புக் கொடுப்பது?

முதலாவது நாம் அவரை நமது மீட்பராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அடுத்து அவர் நமது மீட்புக்காக என்னவெல்லாம் செய்தாரோ, அவற்றில் நம்மால் செய்ய 
முடிந்தவற்றை செய்ய வேண்டும்.


அவர் நமக்காக பாடுகள் பட்டு மரித்து, அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாகப் பரம தந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

நாம் நமக்கு வரும் துன்பங்களைப் பாடுகளாக ஏற்றுக்கொண்டு,

அவற்றை நமது பாவங்களுக்கும், அகில உலகத்தின் பாவங்களுக்கும் பரிகாரிமாக பரம தந்தைக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இதைத்தான் இயேசு சிலுவையைச் சுமந்து கொண்டு என் பின்னால் வருபவனே எனது சீடன் என்கிறார்.

இயேசு உலக மக்களின் பாவங்களை மன்னிப்பதற்காக உலகிற்கு வந்தார்.

நாம் மன்னிக்கும் மனப்பான்மையைப் பெற வேண்டும்.

உலகத்தின் பாவங்களை மன்னிக்க நமக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

உலகத்தின் பாவங்களை மன்னிக்க இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்கத் திருச்சபையின் குருக்களுக்கு அதிகாரம் உண்டு.

இது இயேசுவால் கொடுக்கப்பட்ட அதிகாரம்.

அதிகமான குருக்களை உலகிற்கு அனுப்பும்படி இயேசுவிடம் மன்றாட வேண்டும்.

அதாவது தேவ அழைத்தல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி அழைக்கும் ஆண்டவரைக் கேட்க வேண்டும்.

நம்மைக் குருத்துவப் பணிக்கு இயேசு அழைத்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குருக்களுக்கு அதிகாரபூர்வமாக விளக்கங்களோடு நற்செய்தி அறிவிக்கும் பணி உண்டு.

இதுதான் அறுவடைப் பணி.

இந்த அறுவடை பணிக்கு அதிகமான ஆட்களை, அதாவது, ' குருக்களை அனுப்பும்படி 
அறுவடையின் ஆண்டவராகிய இயேசுவிடம் மன்றாட வேண்டும்.

இவ்வாறு மன்றாடும் போது, நாம்
 அறுவடைப் பணியில் அதிகமான ஆர்வம் காட்டுகிறோம்.

நாம் சாதாரண சீடர்கள். நாம் நமது குருவாகிய இயேசுவிடம் அடிக்கடி மன்றாடும் போது, குரு-
சீடர் உறவு நெருக்கம் அடைகிறது.

அறுவடையின் ஆண்டவரை மன்றாடினால் மட்டும் போதாது.

நமது குடும்பங்களிலிருந்து தான் இயேசு குருத்துவத்திற்கான ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

நமது பிள்ளைகளை அதற்கான சூழ்நிலையில் நல்ல, இறைபணியில் ஆர்வம் உள்ள கிறிஸ்தவ பிள்ளைகளாக வளர்க்க வேண்டும்.

குடும்பம் தான் குருத்துவத்தின் நாற்றங்கால்.
அதைப் பராமரிக்கும் பொறுப்பினை இயேசு பொது நிலையினரிடம் தான் ஒப்படைத்திருக்கிறார்.

நாம் நமது கிறிஸ்தவக் கடமைகளை உணர்ந்து நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்ந்தால் தான் நமது பிள்ளைகளும் நம்மை போல வளர்வார்கள்.

மாவு சரியாக இருந்தால் தான் இட்லி நல்லதாக இருக்கும்.

நல்ல குடும்பங்களிலிருந்து தான் நல்ல குருக்கள் உற்பத்தியாவார்கள்.

நல்ல குடும்பங்களைப் பராமரிப்பதன் மூலம்  அறுவடைக்குச் சரியான ஆட்களைத் தேர்ந்தெடுக்க இயேசுவைக்கே உதவுகிறோம்.

நமது பிள்ளைகளுக்கு சரியான முறையில் நற்செய்தியை அறிவித்து, அதன்படி வாழ அவர்களுக்கு உதவுவதின் மூலம்,
அவர்கள் குருத்துவத்தைத் தேர்ந்தெடுக்க உதவுகிறோம்.

 அறுவடைக்காக அதிகமான ஆட்களை தேர்ந்தெடுக்கும் படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுவோம்.

நமது குடும்பங்களிலிருந்து தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதால் நமது பிள்ளைகளை அதற்கு ஏற்றவர்களாக வளர்ப்போம்.

லூர்து செல்வம்.

Monday, October 16, 2023

ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.(மத்.22:5)

ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.(மத்.22:5) 

அரசன் ஒருவன் தன் மகனின் திருமண விருந்துக்கு அநேகருக்கு அழைப்பு கொடுத்திருந்தான்.

அவர்களோ சாக்குப் போக்கு சொல்லி விருந்துக்கு வரவில்லை.

ஒருவன் தன் தோட்டத்திற்குச் சென்றுவிட்டான்.

வேறொருவன் வியாபார காரியமாக வெளியூர் சென்று விட்டான்.

அரசனுக்கு இது கௌரவ பிரச்சனை.

முதலாவது அவன் நாட்டின் அரசன். நாட்டில் உள்ள அனைவரும் அவரது சொல்லுக்கு கட்டுப்பட கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இரண்டாவது அரசன் அழைக்கும் போது செல்லாதவர்கள் அவரை அவமதிக்கிறார்கள்.

கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறார்கள்.

கடவுள் கொடுத்திருக்கும் கட்டளைகள் கடினமானவை அல்ல, இனிமையானவை.

ஆளுக்கு ஒரு லட்டு கொடுத்து சாப்பிடுங்கள் என்று சொன்னால் யாராவது வேண்டாம் என்பார்களா?

நேசிப்பதை விட உலகில் இனிமையாக செயல் வேறு எது இருக்கிறது.

ஆண்களும் சரி, பெண்களும் சரி ஒரு குறிப்பிட்ட வயது வந்த உடனே யாரும் சொல்லாமல் தாங்களாகவே செய்யும் செயல் காதலிப்பது. 

காதல் அன்பின் ஒரு பிரிவு, எதிர்ப்பாலினத்துக்கு மட்டும் உரியது.

அன்பு எல்லோருக்கும் பொதுவானது.

எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளின் கட்டளை-

நம்மைப் படைத்த கடவுளையும், அவரால் படைக்கப்பட்ட நம்மைப் போன்றவர்களையும் அன்பு செய்ய வேண்டும்.

அன்பு செய்பவர்கள், அதாவது அனைவரையும் நேசிப்பவர்கள் நித்திய பேரின்ப விருந்துக்கு கடவுளால் அழைக்கப் படுவார்கள்.

அன்புதான் ஆன்மாவின் உயிர்.

உயிருள்ள நபரால் இயங்காமல் இருக்க முடியாது.

இருதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு சொல்லாகவும் செயலாகவும் இயங்கிக் கொண்டே இருக்கும்.

அன்பினால் இணைக்கப்பட்ட நண்பர்கள் மணிக்கணக்காக சலிப்பில்லாமல் பேசிக் கொண்டிருப்பதை நமது அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

கடவுள் நம்மை அளவு கடந்த விதமாய் நேசிக்கிறார்.

நாமும் கடவுளை நேசிக்கும் போது அவருக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு மிகவும் நெருக்கம் ஆகும்.

கடவுள் தனது உள் தூண்டுதல்கள் (Inspirations)மூலமாக நம்மோடு இடை விடாது பேசிக்கொண்டு நம்மை வழிநடத்தி பராமரித்து வருகிறார்.

நாமும் அவரோடு பேச வேண்டும். நாம் அவரை நேசிப்பதை அவரிடம் சொல்ல வேண்டும். ஒவ்வொரு வினாடியும் அவரோடு உறவில் இணைந்திருக்க வேண்டும். இறைவனோடு நாம் இணைந்திருப்பதற்கு பெயர் தான் ஜெபம். ஜெபம் வெளி வார்த்தைகளாலும் இருக்கலாம், மௌன வார்த்தைகளாலும் இருக்கலாம்.

மௌனமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் அவரோடு இணைந்திருக்கும் நாம் செயல்கள் மூலம் எப்படி இணைந்திருப்பது.

திருப்பலியில் கலந்து கொள்ளுதல்,

திருவிருந்தில் கலந்து கொள்ளுதல்,
'
கத்தோலிக்கர்கள் இணைந்து நடக்கும் ஜெப வழிபாட்டில் கலந்து கொள்ளுதல்,

நாம் வழிபடும் இறைவனின் நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தல்,

கடவுளால் படைக்கப்பட்ட மற்ற மனிதர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்தல் 


போன்ற செயல்கள் மூலம் நமது அன்பை செயலில் வெளிப்படுத்தலாம்.

நமது பிறர் சிநேகமும் சொல்லிலும், செயலிலும் வெளிப்பட வேண்டும்.

ஒருவருடன் அன்போடு பேசுவதின் மூலம் நமது அன்பை சொல்லில் வெளிப்படுத்தலாம்.

பிறருக்கு வேண்டிய உதவிகளை இறைவனுக்காக செய்வதில் மூலம் நமது அன்பை செயலில் பயன்படுத்தலாம்.

இறையன்பு மூலமும் பிறர் அன்பு மூலமும் நித்திய பேரின்ப விருந்துக்கு இறைவன் விடுத்திருக்கும் அழைப்பை அனேகர் ஏற்றுக்கொள்வதில்லை.

கடவுள் விடுத்திருக்கும் இந்த அன்பின் அழைப்பை விட பணம், பொருள் ஆகியவை விடுக்கும் அழைப்பு இவர்களுக்கு பிரியமானதாக தெரிகிறது.

பணத்தினால் கிடைக்கும் 
சிற்றின்பம் கடவுள் அளிப்பதாகச் சொல்லும் பேரின்பத்தை விட கவர்ச்சிகரமாக இவர்களுக்குத் தெரிகிறது.

ஆகவே இவர்கள்

"இறைவா, நீர் அளிப்பதாகச் சொல்லும் பேரின்பத்தை நாங்கள் மரணம் அடைந்த பின்பு தான் அனுபவிக்க முடியும்.

அதைவிட இப்பொழுது நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிற்றின்பமே எங்களுக்கு போதும்."

என்று கூறி கடவுளின் அழைப்பை நிராகரித்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு இவ்வுலக வாழ்வு முடிந்தவுடன் நித்திய கால பேரிடர் காத்துக் கொண்டிருக்கிறது.

நாம் இறைவனின் அழைப்பை ஏற்று நித்திய கால பேரின்ப மோட்ச வாழ்வுக்கு நம்மையே தயாரிப்போம்.

கடவுளுடைய அருள் நமக்கு உதவிகரமாக இருக்கும்.

லூர்து செல்வம்.

Sunday, October 15, 2023

மருத்துவ மனைக்குச் செல்லலாமா?

மருத்துவ மனைக்குச் செல்லலாமா?

"தாத்தா, நலமாக இருக்கிறீர்களா?"

"கடவுள் அருளால் நலமாக இருக்கிறேன்.''

"தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்சொல்லாதவன் என் சீடனாயிருக்க முடியாது.

 என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

சிலுவை என்றால் நமக்கு வரும் துன்பங்கள் தானே.

உதாரணத்துக்கு, நமக்கு வரும் நோய் ஒரு சிலுவை தானே?''

"'என் கையில் இருப்பது என்ன?"

"பத்து ரூபாய் நோட்டு.''

"இல்லை, இது என் பென்சன்.

இதை கோவில் உண்டியலில் போட்டால் அது என்ன?"

''காணிக்கை."

"இதையே ஒரு உதவி பெறுவதற்காக அரசியல்வாதியிடம் கொடுத்தால்?"

"அப்போது இது லஞ்சம்."

" நமக்கு கஷ்டம் தரக்கூடிய ஒரு நிகழ்வைத் துன்பம் என்கிறோம்.

அந்த வகையில் நோயும் ஒரு துன்பம் தான். 

நீ என்னைப் பற்றி மற்றவர்களிடம் கெடுத்துப் பேசுகிறாய் என்று வைத்துக்கொள்வோம்.

அந்தச் செய்தி எனது காதில் விழுந்தால் அது எனது மனதுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.

அதுவும் துன்பம் தான்.

இந்த துன்பங்களை நமது பாவங்களுக்கும், உலகின் பாவங்களுக்கும் பரிகாரமாக நாம் இயேசுவிடம் ஒப்புக்கொடுத்தால் அது சிலுவை.

இயேசு இவ்வுலகில் பட்ட ஒவ்வொரு துன்பமும் சிலுவை தான், ஏனென்றால் அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டு தனது விண்ணகத் தந்தையிடம் ஒப்புக்கொடுத்தார்."

"ஒருவருக்கு நோய் வருகிறது. அவர் உடனே ஒரு மருத்துவரைச் சந்தித்து அந்த நோய் குணமாவதற்கான மருந்தை வாங்கிச் சாப்பிடுகிறார். நோய் குணமாகிறது. 

நோயாகிய துன்பத்தை சிலுவையாக ஏற்றுக் கொள்ளாமல் மருத்துவர்களிடம் செல்வது சரியா தவறா?"

"'உனது கேள்விக்கு ஒரு உள்நோக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஏனெனில் நான் இப்போதுதான்_" மருத்துவ மனையிலிருந்து திரும்பியிருக்கிறேன்."

''உங்களது பதில் உங்களை நியாயப்படுத்துவதாக இருக்கக் கூடாது. உண்மையாக இருக்க வேண்டும்"

'''நமது ஆண்டவர் தனது மூன்று ஆண்டு பொது வாழ்வின் போது பாடுகள் படுவதற்கு முன்னால் என்ன செய்தார்?"

''நற்செய்தி அறிவித்தார், நோயாளிகளைக் குணமாக்கினார்."

"'இயேசு நோயாளிகளை குணமாக்கியது சரியா, தவறா?"

''தாத்தா உங்கள் கேள்விதான் தவறு. இயேசு செய்தது சரியா, தவறா என்று எப்படி கேட்கலாம்?

இயேசு கடவுள். அவரால் தவறு செய்ய முடியாது."

"'கரெக்ட். இயேசுவால் தவறு செய்ய முடியாது.

தங்களைக் குணமாக்கும் படி நோயாளிகள் இயேசுவிடம் கேட்டபோது 

அவர்களது விசுவாசத்தை பாராட்டி அவர்களை குணமாக்கினார்.

இயேசுவின் மேல் விசுவாசமும், நோய்கள் குணமானதும் நேரடி தொடர்பு உடையவை.

ஒவ்வொரு முறை நோயைக் குணமாக்கிய போதும் குணமான நோயாளியைப் பார்த்து இயேசு உனது விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று என்பார்.

நோயாளிகளிடம் விசுவாசம் இல்லாதிருந்திருந்தால் அவர்களால் குணமாகியிருக்க முடியாது.

நாம் இயேசுவை நோக்கி வேண்டும் போது அவர் முதலில் பார்ப்பது நம்மிடம் விசுவாசம் இருக்கிறதா? இல்லையா? என்பதைத் தான்.

இயேசுவை முழுமையாக நமது கடவுளாக ஏற்றுக் கொள்வதும், அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைத்திருப்பதும் விசுவாசத்தில் அடங்கும்.

இயேசுவின் மீது விசுவாசம் இல்லாதவர்கள் அவரை அணுகியிருக்க மாட்டார்கள்.''

"ஆனால், தாத்தா, நீங்கள் இயேசுவை நம்பி மருத்துவமனைக்குச் சென்றீர்களா, மருத்துவரை நம்பி சென்றீர்களா?"

"நீ சாப்பிட Dining table ல் அமரும்போது சாப்பாட்டுக்கு அம்மாவை நம்பி உட்காருகிறாயா அல்லது Dining table ஐ நம்பி  உட்காருகிறாயா?"

'அம்மாவை நம்பி தான்."

""நாம் சுகமில்லாது இருக்கும்போதும் சுகம் தரும் படி கடவுளை வேண்ட வேண்டும்.

அவர் நேரடியாகவும் நம்மை குணமாக்கலாம்

 அல்லது 

ஒரு கருவியைப் பயன்படுத்தியும் நம்மை குணமாக்கலாம்.

கடவுள் ஒரு மருத்துவரைக் கருவியாக பயன்படுத்த விரும்பினால் 

எந்த மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதை நமது உள்ளத்தில் உணர்த்தி நம்மை வழி நடத்துவார்.

அவரது வழி நடத்துதலின்படி செல்ல வேண்டும்.

மருத்துவர் ஒரு கருவிதான். உண்மையில் குணமாக்குபவர் கடவுளே."

"திரும்பவும் கேட்கிறேன் நாம் ஏன் குணம் பெற விரும்ப வேண்டும்?"

""சுகமில்லாத நிலையில் நமது அந்தஸ்தின் கடமைகளை எப்படி நிறைவேற்ற முடியும்? அதற்காக 
குணம் பெற விரும்பலாமே?"

"நோயுள்ள நிலையில் அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று கடவுளுக்குத் தெரியுமே. தெரிந்தும் ஏன் நோயை வர விடுகிறார்?"

"'பேரப்பிள்ளை, நீ உன் பார்வையிலேயே ஒவ்வொன்றையும் பார்க்கிறாய்.

ரோஜா செடி வளர்க்கும் விவசாயி செடிகளை அடிகடி கத்தரித்து விடுவதைப் பார்த்திருத்துகிறாயா?"

"பார்த்திருக்கிறேன்.''

""உன் பார்வையில் அது எப்படித் தோன்றும்?"

"நன்கு வளர்ந்த ரோஜா செடியை அவன் ஒடித்து பாதியாக்கி விடுவதாகத் தோன்றும்."

"'ஆனால் ரோஜா செடி கத்தரித்து விட்டால்தான் நன்கு தளிர்த்து நிறையப் பூக்கும் என்று விவசாயிக்கு தெரியும்.

ஒரு துணியை என்ன செய்தால் ஒரு சட்டையாக மாறும் என்று
Tailor க்குத் தெரியும்.

புதுத் துணியை கத்தரிக்கோல் கொண்டு துண்டு துண்டாக வெட்டுவதை மட்டும் பார்க்கக் கூடாது. பக்கத்தில் தையல் மெஷின் இருப்பதையும் பார்க்க வேண்டும்.

நகை செய்யும் ஆசாரியிடம் நகை செய்வதற்காக தங்கத்தைக் கொடுத்தால் முதலில் அவன் அதை உருக்குவான்.

உருக்குவதைப் பார்த்துவிட்டு,

"ஐயோ, என் தங்கம் போய்விட்டதே" என்று கத்தக் கூடாது.

தங்கத்தை உருக்கி அவன் நகை செய்வதைப் பார்க்க வேண்டும்.

கிணற்றைத் தோண்டினால் தான் தண்ணீர் வரும்.

உலகை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்த கடவுளுக்கு அதில் உள்ள ஒவ்வொரு பொருளையும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.

அவருடைய வழிமுறைகளை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

அளவில்லாத நன்மைத் தனம் நிறைந்தவர் கடவுள்.

அவர் என்ன செய்தாலும் அது நன்மைக்காகவே இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொண்டால் 

அவர் ஏன் செய்கிறார் என்று கேட்க மாட்டோம்.

நம்மை விழத் தாட்டுகிறவரும் அவர்தான், தூக்கி விடுகிறவரும் அவர்தான். அவர் விழத் தாட்டுவது நமது நன்மைக்காகவே இருக்கும்.

நமக்கு மரணமே வந்தாலும் அதுவும் நமது நன்மைக்கே.

ஏனெனில் மரணம் தான் மோட்சத்துக்குள் நுழையும் வாசல்."

'நீங்கள் சுகம் இல்லாமல் ஆனது உங்களது நன்மைக்கு என்கிறீர்களா?"

""உறுதியாக. என்ன நன்மை என்று கடவுளுக்குத் தெரியும்.

நிலத்தை கலப்பையைக் கொண்டு உழுவது எதற்கு என்று உனக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் விவசாயிக்கு தெரியும்."

''இப்போது எனது சந்தேகம் தீர்ந்தது.. என்ன நடந்தாலும் நமது கடமையை நாம் செய்வோம்.''

லூர்து செல்வம்.

Saturday, October 14, 2023

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான். (லூக்.11:33)

எவனும் விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான். (லூக்.11:33)

சிறுவயதில் ஒரு அனுபவம்..

Teen age ஐ அடைந்த பருவம்.

நானும் எனது தம்பியும் ஒரு வேலையாய் வயலுக்கு போயிருந்தோம்.

மாலை வந்தது. இரவும் நெருங்கியது. போன வேலை முடியவில்லை.

நான் என் தம்பியைப்
 பார்த்து,

"வந்த வேலை முடியவில்லை. இரவில் வயலில் தங்கி, அதிகாலையில் எழுந்து வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வோம்."

"வயலில் தங்குவது சரி.

 ஆனால் இரவில் சாப்பாடு யார் தருவார்கள்?

 அம்மா வீட்டில் அல்லவா இருக்கிறார்கள்."

"ஒன்று செய். இப்பொழுது மாலை நீ வீட்டுக்குச் சென்று, இரவு உணவு உண்டு விட்டு, எனக்கும் உணவு எடுத்துக் கொண்டு வா."

"நீ சொல்வது சரிதான். ஆனால் இரவில் இருட்டில் வயல் வரப்பு வழியே எப்படி நடந்து வருவது?"

"வீட்டில் லாந்தர் விளக்கு இருக்கிறது. கையில் எடுத்துக் கொண்டு வா."

நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு தம்பி வீட்டுக்குச் சென்றான்.

இரவில் ஏழு மணியளவில் சாப்பிட்டு விட்டு, எட்டு மணிக்கு வயலுக்கு வந்து விடுவான் என்று நினைத்தேன்.

ஆனால் 8 மணிக்கு வரவில்லை.

இருட்டில் தனியாக நிற்பது எனக்கு பயமாக இருந்தது.

என் கையில் ஒரு விளக்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் இல்லையே.

'நம்பி வரும்போது மணி பத்து.

'வீட்டிலிருந்து வயலுக்கு வர இவ்வளவு நேரமா?" என்று கேட்டேன். 

"நின்ற இடத்திலேயே நின்று கொண்டு கேள்வி கேட்பது எளிது.

பதில் சொல்வது தான் கடினம்.

நீ சொன்ன படி விளக்கை எடுத்துக்கொண்டு வயலுக்குப் புறப்பட்டேன்.

குளத்துக் கரையில் பஞ்சாயத்து விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

வெளிச்சத்தில் நடந்து வந்து விட்டேன்.

ஆனால் கரையை விட்டு இறங்கி வயலுக்குள் வந்தபோது வரப்பு தெரியவில்லை."

"ஏன்? கையில் விளக்கு வைத்திருக்கிறாயே!"

"நீ சொன்னபடி விளக்கை எடுத்துக்கொண்டு வந்தேன்.

வயலுக்கு வந்த பின் தான் தெரிந்தது விளக்கை ஏற்றவில்லை என்று.

திரும்ப வீட்டுக்குச் சென்று விளக்கை ஏற்றிவிட்டு வருகிறேன்."

"இவ்வளவு வயதாகிறது. விளக்கை ஏற்றினால்தான் வெளிச்சம் தெரியும் என்று தெரியவில்லை. நல்ல பையன்!'

"நானே உலகின் ஒளி." (அரு.8:12)
என்று கூறிய நம் ஆண்டவர்,

'உலகிற்கு ஒளி நீங்கள்"(மத்.5:14)
என்றும் கூறியுள்ளார்.

உலகிற்கு ஒளி இயேசுவா அல்லது நாமா?

தீப்பெட்டியில் உள்ள குச்சை அதில் உரசினால் தீப்பிடிக்கிறது.

கொஞ்ச நேரத்தில் விறகு அடுப்பில் விறகு தீப்பற்றி எரிகிறது.

நாம் பார்க்கும் தீ தீப்பெட்டிக்குச் சொந்தமா அல்லது விறகுக்குச் சொந்தமா?

தீப்பெட்டி இல்லாவிட்டால் நம்மால் விறகைப் பற்ற வைக்க முடியாது.

கடவுள் நம்மைப் படைக்கும் போது தனது பண்புகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கடவுள் அன்பாய் இருக்கிறார்.

அன்பு என்ற பண்பை கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்டதால் நாமும் அன்பாயிருக்கிறோம்.

அதேபோல கடவுள் ஒளியாய் இருக்கிறார்.

நாம் ஒளியாக இருக்க வேண்டுமென்றால் கடவுள் நம்மோடு ஒளியை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்னால் நம்மில் ஜென்மப் பாவம் இருந்ததால் நம்மிடம் ஒளி இல்லை.

நாம் ஞானஸ்நானம் பெறும்போது பரிசுத்த ஆவி நம் மீது இறங்கி வருகிறார். இறைவனின் அருள் வரமாகிய ஒளியும் நமக்கு கிடைக்கிறது.

கடவுளிடமிருந்து நமக்கு ஒளிகிடைக்காவிட்டால் நம்மால் உலகின் ஒளியாக இருக்க முடியாது.


"விளக்கை ஏற்றி நிலவறையிலோ, மரக்காலின் கீழோ வைப்பதில்லை. மாறாக, உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்கிறான்."

நாம் விளக்கு.

 முதலில் விளக்காகிய நம்மில் இறைவனின் ஒளியை ஏற்ற வேண்டும்.

ஒளி ஏற்றப்பட்ட விளக்கை எல்லோரும் காணும் இடத்தில் வைக்க வேண்டும்.

அப்போதுதான் எல்லோரும் நம்மால் பயன் பெறுவர்.

இறைவனின் அருளால் நாம் வாழும் முன் மாதிரிகையான வாழ்க்கையை மற்றவர்கள் காணும் போது

 நமது வாழ்க்கையை பார்த்து அவர்களும் இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்.

இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட தனது ஒளியை நாம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது 

அவர்களும் இறைவனின் ஒளியைப் பெறுவதால்

 அவர்கள் அந்த ஒளியின் உதவியோடு இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பார்கள்.

கடவுள் ஏன் தன்னையும் நம்மையும் ஒளிக்கு ஒப்பிடுகிறார்?

ஒளியின் வெளிச்சம் எந்த பொருட்களின் மீது படுகிறதோ அந்த பொருள்களை மட்டும் நம்மால் பார்க்க முடியும்.

நாம் நடக்கும் வழியில் ஒளி இல்லாவிட்டால் வழி நமக்குத் தெரியாது.

நாம் நடந்து கொண்டிருக்கும் ஆன்மீக பாதையில் கடவுளின் அருளாகிய ஒளி இருக்க வேண்டும்.

கடவுளின் உதவியால் மட்டுமே நம்மால் ஆன்மீக வழியை பார்க்க முடியுமாகையால் கடவுள் தன்னை ஒளியோடு ஒப்பிடுகிறார்.

நம்மை பார்ப்பவர்களுக்கும் நாம் நடக்கும் சரியான ஆன்மீகப் பாதை தெரிய வேண்டும்.

நாம் நாம் இறைவன் அருளோடு முன் மாதிரிகையாக வாழ்வது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒளியை ஏற்றி

உள்ளே வருவோரெல்லாரும் வெளிச்சத்தைக் காணும்படி விளக்குத் தண்டின்மீது வைக்க வேண்டும் என்கிறார்.

நாம் மற்றவர்கள் காணும்படி வாழ்வது சுய விளம்பரத்திற்காக அல்ல முன்மாதிரிகையாக.


சுய விளம்பரத்திற்காக வாழ்ந்தால் அது தாழ்ச்சி இன்னும் புண்ணியத்துக்கு எதிரான பாவம்.

முன்மாதிரி கையாக வாழ்ந்தால் நாம் வாழும் நற்செய்தியை மற்றவர்களுக்கு செயல் மூலம் அறிவிக்கிறோம்.

இருட்டை குறை சொல்வதற்குப் பதிலாக ஒரு மெழுகு திரியை ஏற்றுங்கள் என்று சொல்வார்கள்.

மற்றவர்களை மனம் திருப்ப வேண்டுமென்றால் நாம் ஆன்மீக வாழ்வில் மெழுகு திரியாய்
 செயல்படுவோம்.

நமது ஒளி உலகெங்கும் பிரகாசிக்கட்டும்.

அந்த ஒளியில் உலகம் இயேசுவைப் பார்த்து அவரிடம் வந்து சேரட்டும்.

லூர்து செல்வம்.

Friday, October 13, 2023

அவரோ, "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.(லூக்.11:28)

அவரோ, "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.
(லூக்.11:28)
.
இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் எழுந்து,

" உம்மைத் தாங்கிய வயிறு பேறு பெற்றது" என்றாள்.

இயேசு மறுமொழியாக,

ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.

அன்னை மரியாள் பேறு பெற்றிருப்பதற்குக் காரணமே கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடித்து வாழ்ந்ததே.

அவள் கடவுளின் தாய் என்பதால் அவளைப் பற்றி நாம் பெருமையாக பேசுவது இயல்புதான்.

அன்னை மரியாள் மீது பக்தி உள்ளவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எந்த புனிதர் மீது பக்தி கொண்டிருக்கிறோமோ அவரைப் புகழ்வதிலும், அவரிடம் நமக்கு வேண்டிய உதவிகளைக் கேட்பதிலும் திருப்தி அடைந்து விடுகிறோம்.

வேளாங்கண்ணிக்கு செல்பவர்கள் மாதாவைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள்.

தாங்கள் கொண்டு சென்ற காணிக்கைகளைச் செலுத்துவார்கள்.

தங்களுக்காக இறைவனிடம் வேண்டி தங்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெற்று தரும்படி ஜெபிப்பார்கள்.

பெருமையாக பேசினாலும், காணிக்கைகளைச் செலுத்தினாலும் அவர்களது நோக்கம் ஒன்றுதான்.

தங்களுக்கு வேண்டிய உதவிகளைக் பெற்றுக் கொள்வது தான்.

குழந்தை வரம், திருமண உதவி போன்ற உதவிகளை கேட்பதற்காகத்தான் அன்னையின் திருத்தலத்திற்கு திரு யாத்திரையாக செல்வார்கள்.

பூசைக் கருத்துகளில் கூட வேண்டிய உதவிகள் தான் குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனால் அது உண்மையான பக்தி (Devotion) அல்ல.

இறைவனை உதவிகள் செய்பவர்களாகவும்,

புனிதர்களை உதவிகளைப் பெற்றுத் தருபவர்களாகவும் 
மட்டும் நினைப்பது பக்தி அல்ல.

உலக ரீதியாகப் பேசினால் கூட நாம் யார் மீது அன்பு வைத்திருக்கிறமோ அவர்களைப் போலவே வாழ விரும்புவோம்.

காதலியின் அன்பை வெல்வதற்காக தனது நடை உடை பாவனைகளை அவளைப் போலவே மாற்றிக்கொள்ளும் காதலர்களைப் பார்க்கிறோம்.

அவளுக்குப் பிடித்த கலர் உடைகளை அணிவது.

அவளுக்கு பிடித்த ஹோட்டலுக்குப் போவது.

அவளது விருப்பங்களை நிறைவேற்றுவது. etc.

நாம் கடவுளை உண்மையாகவே நேசித்தால் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவரது பண்புகளில் நாம் வளர ஆர்வம் காட்டுவோம்.

அவரைப்போல அனைவரையும் நேசிப்போம்.

நம்மை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்வோம்.

நமக்கு விரோதமாக குற்றம் செய்தவர்களை மன்னிப்போம்.

"ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"
(மத்.5:48)

என்று நம் ஆண்டவரே கூறியிருக்கிறார்.

வானகதந்தையைப் போல நிறை உள்ளவர்களாய் இருக்க 
முயல்பவர்கள் தான் உண்மையான இறை பக்தர்கள்.

அன்னை மரியாளின் அத்தனைப் பண்புகளையும் தங்களுடையவைகளாகக் கொண்டிருப்பவர்கள் தான் உண்மையான மரியாளின் பக்தர்கள்.

மரியாள் தன்னை ஆண்டவரின் அடிமையாக ஒப்புக்கொடுத்தாள்.

எதிர்க் கேள்வி கேட்காமல் கீழ்படிப்பவன் தான் அடிமை.

என்றும் கன்னியாய் வாழ கடவுளுக்கு வாக்குக் கொடுத்திருந்தாள்.

குழந்தைப் பேறு மீது அவளுக்கு விருப்பமில்லை.

ஆனால் இறைமகனை மனு மகனாய் அவள் பெற வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொண்டாள்.

இறைவனும் அவளது கன்னிமைக்கு எந்தவித பழுதும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்.

தன்னை இறைவனின் அடிமையாக ஒப்புக் கொடுப்பவன் தான் உண்மையான மரியாள் பக்தன்.

ஒருவனுக்கு ஆண் குழந்தை மீது விருப்பம் இருக்கிறது.

ஆனால் அது இறைவனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தால் இறைவனது விருப்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தனது கன்னிமைக்கு பாதுகாப்பாளராக அவள் சூசையப்பரைக் கணவராக ஏற்றுக் கொண்டாள்.

சூசையப்பர் வான தூதர் மூலம் தெரிவிக்கப்பட்ட இறைவன் சித்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

மரியாளும் சூசையப்பர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.

"குழந்தையை எடுத்துக்கொண்டு எகிப்துக்கு செல்"

சென்றார்.

"எகிப்தில் இருந்து திரும்பவும் ஊருக்குச் செல்"

சென்றார்.

"கலிலேயாவுக்கு செல்."

சென்றார்.

சூசையப்பர் வான தூதர் சொன்ன சொல்லைத் தட்டவில்லை.

மரியாள் சூசையப்பர் சொன்ன சொல்லைத் தட்டவில்லை.

இறைமகன் அவர்கள் கையில்.

அதுதான் திருக்குடும்பம்.

உண்மையான மாதா பக்தி மாதாவின் நற்குணங்களை நாமும் கொண்டிருப்பதில் அடங்கியிருக்கிறது.

முழு மனதோடு ஆண்டவருக்கு அடிமையாக,

வாழ்வில் வரும் வியாகுலங்களை ஏற்றுக் கொள்பவர்களாக,

இயேசுவின் சிலுவைப் பாதையில் நடப்பவர்களாக,

சிலுவை அடியில் நிற்பவர்களாக

வாழ்பவர்கள் மட்டுமே உண்மையான மரியாள் பக்தர்கள்.

விண்ணப்பங்களைக் கொடுப்பதற்கு மட்டும் அவளைத் தேடுபவர்கள் உண்மையான பக்தர்கள் அல்ல.

இறைவனின் சொல்லைக் கேட்டு அப்படியே நடப்பவர்கள் இயேசுவின் அன்னையைப் போலவே பாக்கியசாலிகள்.


"கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்று ஆண்டவர் சொல்கிறாரே,

 அன்னை மரியாளை விட பேறு பெற்றவர்களா?

இறைவனது சித்தத்தை ஏற்று நாம் அதன் படி நடக்க வேண்டும் என்ற கருத்தை வலியு.றுத்துவதற்காக

உயர்வு நவிற்சி அணியில் இயேசு பேசுகிறார்.

வானகத் தந்தையின் சித்தத்தை நிறைவேற்றுவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்கட்டும்.

லூர்து செல்வம்.

Thursday, October 12, 2023

அவர் இங்கே இல்லை: தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார்.(மத்.22:6)

அவர் இங்கே இல்லை: தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார்.
(மத்.22:6)

இயேசு மரித்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் 

மதலேன்மரியாளும்,

அன்னை மரியாளின் சகோதரியும், சின்ன யாகப்பரின் தாயுமான மரியாளும்,

அருளப்பர், பெரிய  யாகப்பர் ஆகியோரின் தாயுமான சலோமேயும்

இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் பூசுவதற்காகக் கல்லறைக்கு வந்தனர்.

கல்லறையில் அமர்ந்திருந்த வான தூதர்கள் இயேசு உயிர்த்து விட்ட செய்தியை அவர்களுக்கு அறிவித்தனர்.

செய்தியை இயேசுவின் சீடர்களுக்கு அறிவிக்கும் படியும் கூறினர்.

இயேசு உயிர்த்த செய்தியை முதல் முதல் அறிவித்தவர்கள் இந்தப் பெண்மணிகள் தான்.

இயேசு உயிர்த்தார் என்பதன் பொருள் என்ன?

இதை அறிய முன் இன்னொரு முக்கிய உண்மையை அறிந்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு மரணம் உண்டு.

ஆனால் மனிதனுடைய ஆன்மாவுக்கு மரணம் இல்லை.

மனித ஆன்மா உடலோடு இருக்கும்போது இந்த சடப் பொருட்களால் ஆன (material) உலகில் வாழ்கிறது.

உடலை விட்டு பிரியும் ஆன்மா பாவ மாசு இல்லாமல் இருந்தால் விண்ணுலகை அடைகிறது.

விண்ணுலகு இடம், நேரம் இல்லாத உலகு.

ஆவி (Spirit)  ஆகிய கடவுள் இடம், நேரம் இல்லாத விண்ணுலகில்தான் நித்திய காலம் வாழ்கிறார்.

இயேசு மெய்யாகவே மனிதன்.

அவர் சிலுவையில் மரித்த வினாடியே அவரது ஆன்மா விண்ணுலகுக்குச் சென்று விட்டது.

விண்ணுலகம் என்பது ஒரு வாழ்க்கை நிலை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மனுக் குலம் ஆரம்பித்த நாள் முதல் 

இயேசு மனிதர்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கும் வினாடி வரை

மரித்த புண்ணியவான்களின்
 ஆன்மாக்கள் லிம்போ நிலையில் இருந்தன.

According to the Catechism of the Catholic Church, before the Resurrection, Abraham, Noah, Moses, Adam and Eve, and all the righteous were in the Limbo of the Fathers (limbus patrum) where they remained until “in his human soul united to his divine person, the dead Christ went down to the realm of the dead. He opened heaven’s gates for the just who had gone before him” (CCC 637).

இயேசு மரித்தவுடன் 
,
அதாவது, அவர் பாவப் பரிகார பலி செய்து முடித்தவுடன்,

அவருடைய ஆன்மா (இயேசு)
 லிம்போவுக்குச் சென்று

 (இதை நமது விசுவாசப் பிரமாணத்தில் பாதாளத்தில் இறங்கி என்று சொல்கிறோம்) 

அங்கு அவருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்த புண்ணியவான்களின் ஆன்மாக்களை மோட்சத்திற்கு அழைத்துச் சென்றார்.

இயேசு மரித்த வினாடி மோட்ச வாசல் திறந்தது.

இயேசுவின் தந்தை சூசையப்பர் கூட அப்போதுதான் மோட்சத்துக்குள் நுழைந்தார்.

நல்ல கள்ளன்  இயேசு மரித்த வினாடியே அவரோடு விண்ணகம் சென்று விட்டான்.

"'இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்."

என்று இயேசு அவனுக்கு வாக்குக் கொடுத்திருந்தார்.

விண்ணகம் சென்றுவிட்ட இயேசுவின் ஆன்மா மரித்த மூன்றாம் நாள் அவரது உடலோடு இணைந்தது.

அந்த வினாடி அதற்கு முன் சடப்பொருளாக இருந்த அவரது உடல் ஆன்மீக உடலாக மாறியது.

இயேசு உயிர்த்த பின் 40 நாட்கள், விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டே அவ்வப்போது தனது சீடர்களுக்குக் காட்சியளித்தார்.

நாற்பதாவது நாள் அதற்குப் பின் காட்சியளிப்பதை நிறுத்திவிட்டார்.

இயேசு மரித்தவுடன் அவரது ஆன்மா விண்ணகம் சென்று விட்டாலும்,

உயிர்த்தவுடன் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் சென்று விட்டாலும்,

அவர் உயிர்த்த 40வது நாளில் தான் அவர் விண்ணகத்திற்குச் சென்ற திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இயேசு உயிர்த்தார் என்பதன் பொருள் என்ன?

என்ற கேள்விக்கு இப்பொழுது பதில் புரிந்திருக்கும்.

மரித்தவுடன் விண்ணகம் சென்று விட்ட ஆன்மா திரும்பவும் பூமியில் உள்ள தன் உடலோடு சேர்வதைத்தான் உயிர்ப்பு என்கிறோம்.

நாமும் ஒரு நாள் உயிர்ப்போம் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு ஒரு முன் அடையாளம்.

நாம் இறந்தவுடன் நமது ஆன்மாக்களும் இயேசுவோடு வாழ மோட்சத்திற்கு சென்று விடும்.

அதாவது நமது ஆன்மாக்கள் மட்டும் மோட்சத்தில் இறைவனோடு வாழும்.

ஒரு நாள் உலகம் அழியும்.

உலகம் அழியும்போது மோட்சத்தில் வாழும் நமது ஆன்மாக்கள் 

அழிந்து கொண்டிருக்கும் பூமியில் உள்ள தங்கள் உடல்களோடு சேர்ந்து 

உயிர்த்து நாம் ஆன்ம சரீரத்தோடு விண்ணகம் செல்வோம்.

உலகம் அழிந்த பின் நாமும் இயேசுவைப் போலவும்,

 அன்னை மரியாளைப் போலவும்

 மோட்சத்தில் ஆன்ம சரிதத்தோடு வாழ்வோம்.

இயேசு கடவுள், ஆகவே அவர் சொந்த வல்லமையால் உயிர்த்தார்.

அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்.

உலக முடிவில் இயேசுவின் இரண்டாவது வருகையின் போது அவருடைய வல்லமையால் நாம் உயிர்ப்போம்.

உயிர்த்தபின் இயேசுவோடு முடிவில்லாத காலம் வாழப் போகிற நமது உடலைப்

 பாவம் செய்ய பயன்படுத்தாமல் புண்ணியம் செய்ய பயன்படுத்துவோம்.

இறையன்பு சேவையிலும்,
 பிறர் அன்பு சேவையிலும் பயன்படுத்துவோம்.

லூர்து செல்வம்.

Wednesday, October 11, 2023

என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.(லூக்.11:23)

என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான். என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்.
(லூக்.11:23)

ஒரு வினாத்தாளில் சரியான விடையைத் தேர்ந்தெடு கேள்வியில் பின்வரும் கேள்வி கேட்கப் பட்டிருந்தது.

23 x 23 = 529 (a) சரி
          : '             (b) தவறு
                          (C)சரியாகவும் . 
                                 இருக்கலாம்,
                                  தவறாகவும்
                                  இருக்கலாம்.

ஒரு மாணவன் சரியாகவும் . 
                        . இருக்கலாம்,
                                  தவறாகவும்
                                  இருக்கலாம்

என்று விடை எழுதியிருந்தான்.

ஆசிரியர் விடையைத் தவறு என்று குறித்து மதிப்பெண் கொடுக்கவில்லை.
'
விடைத்தாளைப பெற்ற பின் மாணவன் ஆசிரியரிடம் வந்து,

"சார், இந்த பதிலுக்கு அரை மதிப்பெண்ணாவது கொடுங்கள்" என்றான்.

ஆசிரியர் மாணவனுக்கு ஒரு அறை கொடுத்தார்.

"சார், எனது முழு விடையும் தவறாக இருக்கலாம். ஆனாலும் சரியாக இருக்கலாம் என்று எழுதியிருக்கிறேனே.

அதில் உள்ள சரி என்ற வார்த்தைக்காவது பாதி மதிப்பெண் கொடுங்கள்." என்று கேட்டான்.

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து,

''நன்கு கவனியுங்கள்.

ஒரு விடை முழுவதும் சரியாக இருக்கும். அல்லது முழுவதும் தவறாக இருக்கும்.

பாதி சரியாக இருக்க முடியாது.

சரியாக இல்லை என்றால் தவறு."

இந்த தத்துவம் ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.

ஒருவன் ஆன்மீக வாழ்வில் முன்னேறுவான். அல்லது பின்னடைவான்.

முன்னேறாமலும் பின்னடையாமலும் அதே இடத்தில் இருக்க முடியாது.

(In spiritual life one will progress or regress, he can't stagnate.)

அதே போல ஒருவன் கடவுளுக்கு ஊழியம் செய்வான் 

அல்லது 

சாத்தானுக்கு ஊழியம் செய்வான்.

யாருக்கும் ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது.

ஒருவன் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பி அவருக்கு ஊழியம் செய்கிறான்.

ஒருவன் கடவுளையும் நம்பவில்லை, சாத்தானையும் நம்பவில்லை. அவன் யார் பக்கம்?

சாத்தான் இல்லை என்று அவன் சொன்னாலும் அவன் சாத்தான் பக்கம்தான்.

கடவுள் பக்கம் இல்லாதவன் அவருக்கு எதிர்ப் பக்கத்தில் இருக்கிறான்.

கடவுள் இருக்கிறார் என்று நம்பும் ஒருவன் அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியாவிட்டால் அவன் கடவுளுக்கு எதிர் அணியில் அதாவது சாத்தான் அணியில் இருக்கிறான்.

ஒருவன் ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவனாக இருக்கலாம்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை உள்ளூரில் திருப்பலி இருந்தும்

 திருப்பலியில் கலந்து கொள்ளாமல் வியாபாரம் செய்ய புறப்படுகிறவன் கிறிஸ்தவன் அல்ல.

இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லிக்கொண்டு

 தனது இல்ல திருமண விழாவை

 நல்ல நேரம், சகுனம் பார்த்து நடத்துபவன்

 (திருமணம் நமது கோவிலில் நடந்தாலும்)

 கிறிஸ்தவன் அல்ல.

கத்தோலிக்க திருச்சபையின் போதனைப்படி எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.

நல்ல நேரம், சகுனம் பார்ப்பது இறை நம்பிக்கைக்கு எதிரான பாவம்.

சகுனத்தை நம்புகிறவன் இறைவனை நம்பவில்லை.

உண்மை நிகழ்வு:

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர் தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார்.

சகுனம் பார்த்து திருமணத்திற்கான நாளையும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொண்டார்.

திருமண நாளில் பங்குக் குருவிடம் சென்று,

"சுவாமி சரியாக 10 மணிக்கு பெண்ணின் கழுத்தில் தாலி ஏற வேண்டும்.

ஒரு நிமிடம் கூட நேரம் முந்தவோ பிந்தவோ கூடாது." என்றார்.

குருவானவர் பதில் ஒன்றும் கூறவில்லை.

ஆனால் திருமண திருப்பலியின் போது சுவாமியார் பிரசங்கத்தின் நேரத்தை வேண்டுமென்றே நீட்டி விட்டார்.

பெண்ணின் தந்தைக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

ஆனால் திருப்பலியின் போது ஒன்றும் செய்ய முடியவில்லை.

பதினோரு மணிக்கு பெண்ணின் கழுத்தில் தாலி ஏறியது தாலி.

பூசை முடிந்தவுடன் கோபத்தோடு சுவாமிரிடம் வந்தார்.

சுவாமியார் கத்தோலிக்க திருச்சபையின் நிலையை எடுத்துக் கூறினார்.

 அவர் கூறியதை பெண்ணின் தந்தை ஏற்றுக்கொண்டார்.

மணமக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன் முழுமையாக கத்தோலிக்க கிறிஸ்தவனாக வாழ வேண்டும்.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலியில் கலந்து விட்டு

  மாலையில் பிரிவினை சபையார் நடத்தும் சுகம் அளிக்கும் ஜெப கூட்டத்தில் கலந்து கொள்பவன் கத்தோலிக்க அல்ல.

கடவுள் கொடுத்த பத்து கட்டளைகளையும் அனுசரிக்க வேண்டும்.

ஏதாவது ஒரு கட்டளையை மட்டும் அனுசரிக்காமல் இருந்தால் அவன் 10 கட்டளைகளை அனுசரிக்கவில்லை.

தீர்வை நாளில்,

"ஆண்டவரே நான் 10 கட்டளைகளில் ஒன்பதை மட்டும் ஒழுங்காகக் கடைபிடித்தேன்.

ஒரு கட்டளையை மட்டும் கடைபிடிக்கவில்லை.

எனக்கு மோட்சத்தில் பத்தில் ஒன்பது பங்கு தாரும்"

 என்று கேட்டால்,

ஆண்டவர் கூறுவார்,

"ஒன்று முழுமையாக மோட்சத்திற்கு வர வேண்டும்.

 அல்லது முழுமையாக நரகத்திற்குச் செல்ல வேண்டும்.

 பத்தில் ஒன்பது பங்கு மோட்சம், பத்தில் ஒரு பங்கு நரகம் என்ற கணக்கு இங்கு செல்லாது." என்று கூறுவார்.

தனது முன்மாதிரியான வாழ்க்கையால் மக்களை இறைவன் பக்கம் சேர்க்காதவன்,

மக்களை இறைவன் பக்கம் வர விடாமல் வாழ்கிறான்.

அதனால் தான்,

"என்னோடு சேகரிக்காதவன் சிதறடிக்கிறான்."

என்று ஆண்டவர் சொல்கிறார்.

திருமண விருந்துக்குச் செல்லும்போது விருந்து ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும் முன்பே சென்று விடுகிறோம்.

ஞாயிறு திருப்பலிக்குப் பாதி பூசை முடிந்த பின் வந்தால்,

பூசைக்கு வரவில்லை என்று தான் அர்த்தம்.

ஒருவர்

 "சென்று வாருங்கள், பூசை முடிந்து விட்டது"

 என்று சுவாமியார் செல்லும்போது கோவிலுக்குள் நுழைந்தார்.

"ஏன்?" என்று கேட்டால்,

"பூசை முடிந்த பின் சபையார் கூட்டம் நடைபெறும் " என்று சுவாமியார் போன வாரம் சொன்னார். நான் சபையார். கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்" என்று பதிலளித்தார்.

பூசைக்கு வராதவருக்கு சபையார் கூட்டத்தில் என்ன வேலை?

நம்மில் அநேகர் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்கிறார்கள்.

முழுமையான கிறிஸ்தவர்களாக வாழ்வோம். 

முழுமையாக வாழ்ந்தால் தான் முழுமையாக மோட்சத்திற்குள் நுழைய முடியும்.

லூர்து செல்வம்..

Tuesday, October 10, 2023

மேலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். (லூக்.11:9)

மேலும் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்: தேடுங்கள், கண்டடைவீர்கள்: தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். (லூக்.11:9)

சமூக அறிவியல் ஆசிரியர் முதல் உலகப்போரின் காரணங்கள் சம்பந்தமான பாடத்தை நடத்திவிட்டு,

மாணவர்களிடம்

''ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்றார்.

ஒரு மாணவன் எழுந்து|

"இந்த ஆண்டு தீபாவளி எப்போது, சார், வரும்" என்றான்.

அவனுக்கு என்ன பதில் கிடைத்திருக்கும்?

பதில் கிடைத்திருக்காது. அடி கிடைத்திருக்கும்.

அவன் என்ன கேட்டிருக்க வேண்டும்?

ஆசிரியர் நடத்திய பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டிருக்க வேண்டும்.

சம்பந்தமே இல்லாத விஷயத்தை பற்றிக் கேட்டால் தண்டனைதான் கிடைக்கும்.

இயேசு தந்தையை நோக்கி எப்படி ஜெயிப்பது என்று சொல்லிக் கொடுத்துவிட்டு,

விடாது கேட்கும் நண்பனுக்கு நள்ளிரவில் எழுந்து கொடுக்கும் நண்பனை பற்றிய உவமையை கூறிவிட்டு,

"கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னால்,

 என்ன கேட்க வேண்டும்?

ஆன்மீக சம்பந்தமான ஏதாவது ஒரு உதவியைக் கேட்க வேண்டும்.

ஆண்டவரே சொல்கிறார்,

"கேட்கிற எவனும் பெறுகிறான்: .......

வானகத்திலுள்ள உங்கள் தந்தை, தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய்ப் பரிசுத்த ஆவியை அளிப்பார்! " என்று.

விண்ணகப் பாதையில் வழி நடக்கும் நாம் அது சம்பந்தமான ஆன்மீக உதவிகளை ஆண்டவரிடம் கேட்க வேண்டும்.

திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.

விடாமல் கேட்க வேண்டும்.
'
ஆனால் நாம் ஆண்டவருடைய வார்த்தைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அவரிடம் என்ன கேட்கிறோம்?

எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும்.

மகனுக்கு நாங்கள் விண்ணப்பித்திருக்கும் கல்லூரியில் இடம் கிடைக்க.

'விண்ணப்பித்திருக்கிற வேலை கிடைக்க வேண்டும்.

இவை போன்ற ஆன்மீக சம்பந்தம் இல்லாத உதவிகளைக் கேட்கிறோம்.

இந்த உதவிகளைக் கேட்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து திருத்தலங்களுக்குச் செல்கிறோம்.

விண்ணக தந்தை நமது தந்தை.

நமது நலனில் அக்கறை உள்ள தந்தை.

ஆகவே இத்தகைய உதவிகளை கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் ஆன்மீக வாழ்வைப் பற்றி அக்கறை கொள்ளாமல் இவ்வுலக காரியங்களைப் பற்றி மட்டும் அக்கறை கொண்டு அவற்றை பற்றிய உதவிகளை மட்டும் கேட்டால்,

அது ரயில்வே நிலையத்துக்குச் சென்று புகைவண்டி பயணத்திற்காக டிக்கெட் கேட்காமல்,

''போண்டா" கேட்பதற்கு சமம்.

பல மைல்கள் பயணம் செய்து, குற்றாலத்திற்குச் சென்று அருவியில் குளிக்காமல் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு வந்தால் நாம் எப்படிப் பட்டவர்கள்?

பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அருவியில் குளித்துவிட்டு சாப்பிட வேண்டும்.

கடவுள் நம்மை படைத்திருப்பது இவ்வுலகில் நிரந்தரமாக வாழ்வதற்கு அல்ல.

இவ்வுலக பொருள்களைப் பயன்படுத்தி ஆன்மீக வாழ்வு வாழ்ந்து விண்ணகம் சென்று அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வதற்காக.

நாம் நம்மை படைத்தவரிடம் எதைக் கேட்டாலும் அது நமது விண்ணக வாழ்வுக்கு உதவிகரமாய் இருக்க வேண்டும்.

உதவிகரமாய் இல்லாவிட்டால் அந்த உதவி நமக்குக் கிடைக்காது.

நமது ஜெபத்தில் ஆண்டவரிடம் ஆன்மீக உதவிகளைக் கேட்போம்.

பெறுவோம், நித்திய பேரின்ப வாழ்வை.

லூர்து செல்வம்.