Monday, November 28, 2022

கடவுளின் தாய் மரியாள். (தொடர்ச்சி)

கடவுளின் தாய் மரியாள்.
   (தொடர்ச்சி)

"தாத்தா, அன்னை மரியாளுக்கு இயேசுவை தவிர வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதற்கு பிரிவினை சகோதரர்கள் எடுத்துக்காட்டும் பைபிள் வசனம்:

"இவர் தச்சன் அல்லரோ?

 மரியாளின் மகன் தானே!

 யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே!

 இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ?" 

என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர். (மாற்கு, 6:3)


",பேரப்பிள்ள, ஒரு முக்கியமான உண்மையை சொல்லிவிட்டு நீ குறிப்பிட்ட வசனத்திற்கு வருவோம்.

ஆன்மீக ரீதியாக நாம் யாருடைய பிள்ளைகள்?"

"நமது ஆண்டவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிள்ளைகள்."

",அதாவது கத்தோலிக்க திருச்சபை நமது தாய்.

இயேசுவின் போதனைகளில் தவறு இருக்க முடியுமா?"

"உறுதியாக முடியாது. ஏனெனில் அவர் கடவுள்."

",தனது போதனைகளை நமக்கு தருவதற்காக அவரே நியமித்த கத்தோலிக்க திருச்சபை தவற முடியுமா?"

"அதனால் தவற முடிந்தால் கடவுள் அதை நமது மீட்புக்காக ஏற்படுத்தியதில் அர்த்தமே இல்லை.

உலக கஷ்டங்களுக்கு அப்பாற்பட்ட, கஷ்டப்படவே முடியாத சர்வ வல்லவ கடவுள்

 நம்மை மீட்பதற்காக பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்து, 

பாடுகள் பட்டு மரித்து 
  தவறு செய்யக்கூடிய தாயை நமக்குத் தந்தால் 

அவர் பாடுபட்டு மரித்ததற்கு பொருள் இல்லாமல் போய்விடும். 

திருச்சபையின் தலைவராக நியமிக்கப்படவிருந்த இராயப்பரை நோக்கி:

"நான் உனக்குச் சொல்லுகிறேன்.

 உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார். (மத்.16:18, 19)

இராயப்பரின் தலைமையில் இயங்கும் திருச்சபையால் தவறு செய்ய முடியாதபடி இயேசுவின் பாதுகாப்பு இருக்கும்.

திருச்சபையின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த வாழ்வில் தவறு செய்ய முடியும். ஏனெனில் நாம் எல்லோரும் பாவிகள் தான்.

ஆனால் விசுவாசம் சார்ந்த போதனையில் திருச்சபை என்ற அமைப்பினால் தவறு செய்ய முடியாது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய பாப்பரசர் விசுவாசம் சார்ந்த விசயங்களை பற்றி உலகோர் அனைவருக்கும்  போதிக்கும் போது அவரால் தவற முடியாது.

இதைத் தவறா வரம் என்று அழைக்கிறோம். 

திருச்சபையில் உள்ள அனைவருக்கும் எழுத வாசிக்க தெரியும் என்று சொல்ல முடியாது.

எல்லோராலும்  பைபிள் வாசிக்க முடியாது.

பைபிள் வாசிக்க முடியாததால் மீட்பு அடையாமல் இருக்க முடியாது.

அவர்கள் தங்களுடைய விசுவாச அறிவுக்கு திருச்சபையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

ஆகவே அனைவருமே ஆன்மீக வாழ்வில் திருச்சபை சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

நமது கத்தோலிக்க திருச்சபை சொல்கிறது அன்னை மரியாள் முக்காலமும் கன்னி என்று.

அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

சரி, இப்போது நீ குறிப்பிட்ட வசனத்திற்கு வா.

யாரெல்லாம் இயேசுவின் சகோதரர்கள் என்று குறிக்கப் பட்டிருக்கிறார்கள்?"

"யாகப்பன், சூசை, யூதா, சீமோன்."

",இவர்கள் அன்னை மரியாளின் மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்களா?"

"இல்லை. இயேசுவின் சகோதரர்கள் என்றுதான் குறிக்கப் பட்டிருக்கிறார்கள்.''

",நீ என்னை தாத்தா என்று அழைக்கிறாய்.

 நான் உனது அம்மாவைப் பெற்ற தாத்தாவா? 
இல்லை, அப்பாவைப் பெற்ற 
தாத்தாவா?"

"இரண்டுமே இல்லை. நமக்குள் இரத்த உறவு இல்லை. 

வயதானவர்களை எல்லாம் மரியாதையாக தாத்தா என்று அழைப்பது தமிழர்களின் பழக்கம்." 

",நம்மை போலவே யூதர்களும் சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா மக்களையும்,

சில தூரத்து உறவுகளையும் கூட சகோதர, சகோதரிகள் என்று அழைப்பது வழக்கம்.

மத்தேயு 27:55,56 ஐ வாசி."


"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்."

",யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாய் யார்?"

"மரியாள்."

", மாற்கு 16:1ஐ வாசி."

"ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும்,
 யாகப்பரின் தாய் மரியாளும், சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்."

", யாகப்பரின் தாய்  யார்?"

"மரியாள். சூசைக்கும் தாய் இவள்தான்."

",இந்த மரியாள் இயேசுவின் தாய் என்று நினைக்கிறாயா?"

"இல்லவே இல்லை. இருந்திருந்தால் அப்படியே நற்செய்தி எழுதியவர் எழுதியிருப்பார்."

மத்.27: 61 ஐ வாசி.

அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்."

",யார் இந்த மற்ற மரியாள்?"

"மதலென் மரியாளோடு நின்ற, 
  மரியாள். யாகப்பர், சூசை ஆகியவர்களின்  தாய்."

",இப்போது ஒன்று புரிந்திருக்கும். 

யாகப்பர், சூசை ஆகியவர்களின்  தாய் மரியாளும், 

இயேசுவின் தாய் மரியாளும் வெவ்வேறு நபர்கள்.

அதனால்தான் யாகப்பர், சூசை ஆகியவர்களின்  தாயை மற்ற மரியாள் என்று நற்செய்தியாக அறிவிக்கிறார்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

 நீ முதலில் குறிப்பிட்ட வசனத்தில் வருபவர்கள் அன்னை மரியாளின் மக்கள் அல்ல.

 மற்றொரு மரியாளின் மக்கள்."

"யார் இந்த மற்றொரு மரியாள்?

மத். 28:1ஐ வாசி."


"ஓய்வுநாளுக்குப்பின், வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தனர்."

", அரு. 19:25. ஐ வாசி."

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,

 மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்."

",கிலோப்பாவின் மனைவி  மரியாள், அன்னை மரியாளின் சகோதரி.

கிலோப்பாவின் மனைவியைத்  தான் மத்தேயு மற்ற மரியாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவள் அன்னை மரியாளின் சகோதரி,

 அதாவது இயேசுவின் சித்தி, '

 அதாவது யாகப்பரும், சூசையும் இயேசுவின் சித்தி மக்கள்,

ஆகவே சகோதரர்கள்.

இப்போது இயேசுவின் சகோதரர்கள் என்றால் பொருள் புரிந்திருக்குமே?"

"இது ஏன் நமது பிரிவினை சகோதரர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புரியவில்லை."

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment