Friday, November 18, 2022

தாயும், பிள்ளையும்.

        தாயும், பிள்ளையும்.

உலகில் உள்ள சடப் பொருட்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

சடப் பொருட்கள் நாம் பயன்படுத்துவதற்காக இறைவனால் தரப்பட்டவை.

உறவுகள் அன்பு செய்வதற்காகவும் ஆதரவாக இருப்பதற்காகவும் அதே இறைவனால் தரப்பட்டவை.

உறவுகளோடு வாழ்வதுதான் வாழ்க்கை.

நாம் அனைவரும் விண்ணக தந்தையின் பிள்ளைகள்.

இறை மகன் இயேசு நமது அன்பு சகோதரர்.

நமது மேலுள்ள அன்பின் காரணமாக மனிதனாக பிறந்து,

நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு,

 சிலுவையில் மரித்து, 

மூன்றாம் நாள் உயிர்த்து

விண்ணகம் எய்து முன்,

ஆன்மீக ரீதியாக நம்மை பராமரிப்பதற்காக அன்பு நிறைந்த ஒரு தாயைத் தந்தார்.

ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை தான் இயேசு நமக்கு தந்த அன்புத் தாய்.

கத்தோலிக்க திருச்சபைக்கும், நமக்கும் இடையிலான உறவு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு.

தாயும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதில்லை.

ஒருவரை ஒருவர் அன்பு செய்கிறோம்.

அன்புதான், அன்பு மட்டும்தான், நமது வாழ்க்கை.

நாம் நமது தாயையும், சகோதர, சகோதரிகளையும், 

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்கிறோம்.

தாய்க்குக் கீழ்ப்படிந்து,

 சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்து வாழ்கிறோம்.

அதுதான், அது மட்டும் தான், நமது வாழ்க்கை.

தாய்த் திருச்சபையை நேசிக்கும் போது நாம் இயேசுவை நேசிக்கிறோம்,

தாய்த் திருச்சபைக்குக் கீழ்படியும்போது இயேசுவுக்குக் கீழ்படிகிறோம்.

நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாக பிறந்த இயேசு தாய்த் திருச்சபையின் மூலமாகவே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.

தாய்த் திருச்சபைக்கும் நமக்கும் உள்ள உறவு ஆன்மீக ரீதியானது.

தாயின் முதல் கடமை பிள்ளைக்கு உணவு ஊட்டி வளர்ப்பது.

அடுத்த கடமை அறிவூட்டி வளர்ப்பது.

அடுத்த கடமை வாழ்க்கைக்கு வழிகாட்டுவது.

 தாய்த் திருச்சபை நமது ஆன்மாவிற்கு இறையருளை ஊட்டி வளர்க்கிறாள்.

இயேசு அவளிடம் ஒப்படைத்துள்ள ஏழு தேவத் திரவிய அனுமானங்கள் மூலம் இறையருளை நமக்கு ஊட்டுகிறாள்.

ஞானஸ்நானத்தின் மூலம் அவள் ஊட்டும் இறையருள் மூலம் சென்மப் பாவத்தை மன்னித்து நம்மை பரிசுத்தமாக்குகிறாள்.

பச்சாத்தாபத்தின் மூலம் அவள் ஊட்டும் இறையருள் மூலம் நமது கர்மப் பாவங்களை மன்னித்து நம்மை பரிசுத்தமாக்குகிறாள்.

உறுதிப்பூசுதல் மூலம் அவள் ஊட்டும் இறையருள் மூலம் நம்மை ஆன்மீகத்தில் உறுதிப்படுத்துகிறாள்.

திவ்ய நற்கருணை மூலம் நம்மை இரட்சித்த நமது ஆண்டவரையே நமது ஆன்மீக உணவாக தருகின்றாள். இறைமகன் இயேசு நமக்குள் உணவாக வரும்போது விண்ணகத்தில் அவரோடு வாழும்போது அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தை முன் ருசி பார்க்கிறோம்.

குருத்துவத்தின் மூலம் நமது பாவங்களை மன்னிக்கவல்ல,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்ற வல்ல,

நமது ஆன்மீக வழிகாட்டிகளான குருக்களை நமக்குத் தருகிறாள். 

மெய்விவாகத்தின் மூலம் நமது திருமண உறவை அர்ச்சிக்கிறாள்.

அவஸ்தைப்பூசுதல் மூலம் விண்ணகத்திற்குள் நுழைய தயாரிக்கிறாள்.

இறை அருள் இயேசுவாகிய ஊற்றிலிருந்து தேவத் திரவிய அனுமானங்கள் மூலமே நமது ஆன்மாவிற்குள் பாய்கிறது.

இறையருளாகிய உணவு ஊட்டி நமது ஆன்மாவை வளர்ப்பது போலவே,

இறைஞானமாகிய அறிவையும் ஊட்டி வளர்ப்பவள் நமது தாய்த் திருச்சபை.

நமக்கு இறைவனின் ஞானத்தை தருவது அவருடைய வார்த்தையே.

இறைவாக்கு அடங்கியுள்ள 46 பழைய ஏற்பாட்டு நூல்களையும்,

27 புதிய ஏற்பாட்டு நூல்களையும் தொகுத்து 

மொத்தம் 73 நூல்கள் அடங்கிய பைபிளாக மக்களுக்கு தந்தது கத்தோலிக்க திருச்சபை தான்.

பைபிளை மக்களுக்கு தந்த கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டும் தான் அதற்கு பொருள் கூறும் அதிகாரம் உண்டு.

"இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்."

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

இவை நற்செய்தியாளர் அருளப்பரின் வார்த்தைகள்.

இயேசு கூறிய, செய்த அனைத்தும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை.

எழுதப்படாத உண்மைகள் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம் மூலம் நமக்கு வந்திருக்கின்றன.

இயேசுவைப் பற்றிய முழுமையான அறிவை பெற வேண்டும் என்றால் 

புதிய ஏற்பாட்டு நூல்களையும்,

 கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் இயேசுவை முழுமையாக அறிய முடியாது.

நமது தாய்த் திருச்சபை இயேசுவைப் பற்றிய முழுமையாக ஞானத்தை தந்து,

அந்த ஞானத்தில் நம்மை வழி நடத்துகிறாள்.

நமது ஆண்டவர் நமது தாய்த் திருச்சபையின் மூலமாகத்தான் நம்மோடு பேசுகிறார்.

நமது திருச்சபையின் சொற்படி நடப்பவர்கள் இயேசுவின் சொற்படி நடக்கிறார்கள் என்பதை உணர்ந்து

நமது தாய் காட்டும் வழியில் நடப்போம்.

கத்தோலிக்க திருச்சபையின் 
பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் காட்டும் விண்ணக வழி தான் இயேசு காட்டும் வழி.

மொத்தமாக மட்டுமின்றி ஒவ்வொரு தனி நபரையும் வழி நடத்துவதற்காக தான் திருச்சபை பங்கு குருக்களை நியமித்திருக்கிறாள்.

அவர்கள் தான் இயேசுவின் பெயரால் நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

இயேசுவையே நமக்கு உணவாகத் தருகிறார்கள். 

நம்மை விண்ணக பாதையில் வழிநடத்திச் செல்லுகிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபையின் பிள்ளைகளாகிய நாம்

 தாய் காட்டும் வழியில் நடந்து 

விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment