Thursday, November 10, 2022

நாம் எதற்காக இயேசுவைத் தேட வேண்டும்?

நாம் எதற்காக இயேசுவைத் தேட வேண்டும்?

நாம் சமூகப் பிராணிகள்.

கடவுள் நமது முதல் பெற்றோரை குடும்பம் என்ற சமூகமாக படைத்தது

 மனுக்குலம் என்ற சமூகத்திலும்,

 திருச்சபை என்ற சமூகத்திலும் நாம் வாழ்வதற்காகத்தான்.

நம்மால் தனியாக வாழ முடியாது.

சமூகத்தில் உள்ள அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கின்றார்கள்.

நாம் வாழும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குரிய ஒன்பது கோள்களும் 

ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல் வலம் வந்து கொண்டிருப்பதற்குக் காரணம்  

அவற்றை ஒன்றோடு ஒன்று ஈர்த்துக் கொண்டிருக்கும் புவி ஈர்ப்பு விசை தான்.

லட்சக்கணக்கான சூரிய குடும்பங்கள் தங்கள் தங்கள் பாதையில் வலம் வந்து கொண்டிருப்பதற்கு காரணம் அதே ஈர்ப்பு விசை தான்.

அதேபோல் அன்பு என்ற ஈர்ப்பு விசை தான் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளாமல் ஒற்றுமையாக வாழச் செய்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் ஒன்றை ஒன்று  சந்திப்பதில்லை.

கோள்கள் எதுவும் சூரியனையும் சந்திப்பது இல்லை.

அதற்கு காரணம் அதே ஈர்ப்பு விசைதான்.

கோள்கள் சூரியனை நெருங்கினால் அவை எரிந்து சாம்பலாகிவிடும்.

ஆனால் மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் அவரவர் பாதையில் மட்டும் செல்ல முடியாது.

அன்பு என்னும் ஈர்ப்பு விசையால் ஒருவர் ஒருவர் சந்தித்து பழகி தங்களது அன்பின் அளவை அதிகரித்துக் கொள்கிறார்கள்.

அன்பின் அளவு அதிகமாக ஈர்ப்பு விசையால் ஏற்படும் நெருக்கமும் அதிகமாகும்.

ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி பழக வேண்டியது அன்பு அதிகரிக்க அவசியமானது.

இன்றைய காலக்கட்டத்தில் நமது பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
என்பதன் அடிப்படையில்

மக்கள் கடல் கடந்து சென்று விடுவதால் உறவுகள் நெருக்கமாக வேண்டிய அளவிற்கு அன்பு வளர்வதில்லை.

மனிதன் பாசத்தை விட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டான்.

நமது சமூக சீரழிவிற்கு மிக முக்கியமான காரணம் நாம் பொருளாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான்.

நம்மை படைத்து உலகில் வாழ வைத்திருக்கும் இறைவன் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக இரண்டு கட்டளைகளைக் கொடுத்திருக்கிறார்.

முதலாவது நம்மை படைத்த இறைவனை மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக நாம் நேசிக்க வேண்டும்.

இரண்டாவது நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

இறையன்பும், பிறரன்பும் வளர வேண்டுமென்றால் நாம் இறைவனோடும் பிறரோடும் நெருங்கி பழக வேண்டும்.

ஒருவரை ஒருவர் சந்திக்காவிட்டால் உறவு நெருக்கமாகாது.

ஆனால் இப்போதெல்லாம்,

 அறிவியல் கண்டுபிடிப்புகளின் காரணமாக,

 நாம் WhatsApp ல் காலை வணக்கம் போடுவதின் மூலமும்,

Video Call உதவியுடன் பேசுவதின் மூலமும் நமது அன்பை பரிமாறி கொள்கிறோம்.

ஆனால் அடிக்கடி இன்டர்நெட் கோளாறு காரணமாக நமது அன்பு பரிமாற்றம் நமது செல்போனில் வட்டம் போட்டுக் கொண்டே இருக்கும்.

Cell phone ல் உணவு வகைகளை download செய்தால் அவை நமது கண்ணுக்கு மட்டும் எட்டும், வாய்க்கு எட்டாது.

வாய்க்கு எட்டாத உணவினால் நமது வயிற்றுக்கு என்ன பயன்?

உலகியல் வாழ்வில் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்
அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆன்மீகத்திலும் நுழைய ஆரம்பித்து விட்டன.

அனேகர் திருப்பலியைக் கூட YouTube ல் பார்த்து திருப்தி அடைந்து விடுகின்றனர்.

YouTube ஐ மட்டும் பார்த்து ஆன்மீகத்தில் வளர முடியாது.

நம்மை படைத்த இறைவன் எப்போதும் நம்முடனே இருக்கிறார்.

இரண்டு வகைகளில் நம்முடன் இருக்கிறார்.

அரூபியான அவர், நாம் வாழும் இடத்திற்கும், காலத்திற்கும்  வெளியே வாழ்ந்தாலும்,

தனது வல்லமை மிக்க அன்பினாலும், பராமரிப்பினாலும் ஒவ்வொரு வினாடியும்  நம்முடனையே இருக்கிறார்.

நமது ஒவ்வொரு அசைவையும் அவர் தான் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு வினாடி அவர் நம்மை மறந்தாலும் நாம் ஒன்றும் இல்லாமைக்குத் திரும்பி விடுவோம்.

ஆனால் அவரால் நம்மை மறக்க முடியாது.

அவர் அறிவியலுக்கு அப்பாற்பட்டவர்.

எந்த அறிவியல் கண்டுபிடிப்பாலும் அவரை நம்மை விட்டு பிரிக்க முடியாது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மைத்தான் அவரை விட்டு பிரித்து விடுகின்றன.

கடவுள் எப்போதும் நம்மோடு இருப்பது போல நாமும் எப்போதும் அவருடனேயே இருக்க வேண்டும்.

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் எப்போதும் அவருடனேயே இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வினாடியும் நமக்குள் வாழும் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பதுதான் செபம்.

அவரைப் பற்றி பேசுவது தான் நற்செய்தி அறிவிப்பு.

அவர் சொன்னபடி செய்வதுதான் பிறர் அன்புப் பணி. 


அரூபியாக இடத்திற்கும் காலத்திற்கும் வெளியே வாழும் அவர்,

இடத்திற்கும் காலத்திற்கும் உள்ளே வாழும் நம்மோடு கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக 

நம்மைப் போலவே இடத்திற்கும் காலத்திற்கும் உள்ளே வாழ்வதற்காக மனிதனாக பிறந்தார். 

தனது சிலுவை மரணத்திற்கு பின் விண்ணகம் சென்று விட்ட பின்னும் 

தனது உடலோடும் ஆன்மாவோடும் நம்மோடு தொடர்ந்து வாழ்வதற்காக 

திவ்ய நற்கருணை என்னும் திரு அருட் சாதனத்தை இயேசு ஏற்படுத்தினார்.

  அன்னை மரியாளின் வயிற்றிலிருந்து பிறந்த அதே இயேசு,

அன்று வாழ்ந்த அதே உடலோடும் அதே ஆன்மாவோடும் 

இன்றும் திவ்ய நற்கருணையில் நம்மோடு இருக்கிறார்.

அன்பர்களை அடிக்கடி சந்தித்து பேசும் போது தான் நமது அன்பு வளரும் என்பதால் 
 
நமது உண்மையான அன்பராகிய திவ்ய நற்கருணை நாதரை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்.

திவ்ய நற்கருணையில் வாழும் இயேசுவைச் சந்தித்து என்ன பேச வேண்டும்? 

ஒரு அரசாங்க அதிகாரியை நமது அலுவல் நிமித்தம் சந்திக்க போகும்போது என்ன பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு தான் போவோம்.

ஆனால் உயிருக்கு உயிரான நண்பரை பார்க்க போகும்போது என்ன பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை.

நண்பரை பார்த்த உடனேயே

 நமது வாய் பேசுமுன்மே உள்ளங்கள் பேச ஆரம்பித்து விடும்.

ஒரு ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.

எழுதப் படிக்கத் தெரியாது.

அவன் ஒவ்வொரு நாளும் வயலுக்குத் செல்லும்போதும்,

வயலிலிருந்து திரும்பும் போதும் 

கோவிலுக்கு சென்று, நற்கருணை பேழையின் உள் நின்று,

சுமார் பத்து நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருப்பான்.

இதை வெகு நாட்கள் பார்த்துக் கொண்டிருந்த பங்கு குருவானவர் அவனிடம்,

"ஐயா, தினமும் காலையும், மாலையும் நற்கருணை நாதரைப் பார்க்க வருகின்றீர்களே,

அவரிடம் என்ன வேண்டுவீர்கள்?"

"சுவாமி, எனக்கு எழுத வாசிக்க தெரியாது. ஆகவே புத்தகம் எதையும் பார்த்து செபிக்கத் தெரியாது,  

எந்த செபத்தையும் மனப்பாடமாகத் சொல்லத் தெரியாது.

நான் கோவிலுக்கு வருவதே இயேசுவைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான். 

நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

அவரும் என்னை பார்த்துக் கொண்டிருப்பார்.

உள்ளத்தில் "இயேசுவே உம்மை நேசிக்கிறேன். எனது பாவங்களை மன்னியும்." என்று மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

அவ்வளவுதான் எனது செபம்."

சுவாமியாருக்கு மட்டற்ற சந்தோசம்.

"மிகவும் சக்தியுள்ள செபம். உள்ளத்திலிருந்து வரும் உண்மையான செபம்.

தொடர்ந்து உங்கள் அன்பை இயேசுவிடம் தெரிவித்துக் கொண்டேயிருங்கள்.

ஆசீர்வாதம்." என்று கூறி நெற்றியில் சிலுவை போட்டார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment