Saturday, November 19, 2022

நான் யாருக்கு அடிமை?

நான் யாருக்கு அடிமை?   

நமது அன்னை மரியாள் சொன்னாள்,

" இதோ ஆண்டவருடைய அடிமை."

நமது அன்னை ஆண்டவருடைய அடிமையாக இருந்தால் நாம் யார்?

தாயைப் போல் பிள்ளை இருக்க வேண்டும், 

இல்லாவிட்டால் அவளை தாய் என்று அழைக்க நமக்கு அருகதை இல்லாமல் போய்விடும்.

உண்மையில் மனிதர்கள் அனைவரும் அடிமைகள் தான், முதலாளிகள் அல்ல.

ஒன்றுமில்லாமல் அம்மணமாக பிறந்த நம்மிடம் என்ன முதல் இருக்க முடியும்?

எல்லோரும் அடிமைகள் தான், ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி.

அருள் நிறைந்த மரியாள் ஆண்டவருக்கு அடிமை,

அருளின் வாசமே இல்லாதவர்கள் உலகத்திற்கு அடிமைகள்.

அருளின் வாசமே இல்லாதவர்கள் பொருள் மட்டும் உள்ளவர்கள்.

உடல் நலத்திற்காக உண்பவனுக்கும்,

ருசிக்காக மட்டும் உண்பவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

உடல் நலத்திற்காக உண்பவன் நலமாக வாழ்வான்.

ருசிக்காக மட்டும் உண்பவன் நோய்களின் இருப்பிடமாக வாழ்வான்.

அருள் மட்டும் உள்ளவன் அவனைப் படைத்த ஆண்டவரோடு வாழ்கிறான்.

பொருள் மட்டும் உள்ளவன் 
பாவங்களின் இருப்பிடமாக வாழ்கிறான்.

அப்படியானால் அருள் மட்டும் உள்ளவரிடம் பொருள் இருக்கக் கூடாதா?

இருக்கலாம். பொருளும் அருளுக்காக இருக்கலாம்.

பொருளை பொருளுக்காக மட்டும் வைத்திருப்பவன் தான் பாவங்களின் இருப்பிடம்.

இவ்வுலக பொருள்களைக் கொண்டு நாம் விண்ணகத்தில் நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளலாம்.

நம்மிடம் உள்ள பொருளை பிறர் அன்பு பணிக்காக பயன்படுத்தினால்,

அதனால் பயன்பெற்ற அனைவரும் நமது  விண்ணக நண்பர்களே.

பிறர் அன்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட பொருள் நமக்கு விண்ணக நிலையான பேரின்பத்தையும் பெற்று தருகிறது.

ஆகவே பொருளை அருளாக மாற்றலாம், நமக்கு அன்பு இருந்தால்.

அருளை ஈட்டுவது புண்ணியம்.

பொருளை ஈட்டுவது பாவமா?

அருளைப் பற்றி கவலைப்படாமல் பொருளை ஈட்டுபவன் பாவகரமான வழிகளில் செல்வான்.

லஞ்சம் வாங்குபவன், கொள்ளையடிப்பவன், திருடுபவன், ஏமாற்றுபவன் ஆகியோர் பொருளை ஈட்டுவதில் பாவம் செய்பவர்கள்.

அருளின் ஊற்றாகிய ஆண்டவரின் அடிமை அவரை நேசிப்பதோடு அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்பான்.

அவனது வாழ்க்கையே இறைப் பணியும், பிறர் பணியும்தான்.

பணிவோடு வாழ்வான்,
பணிக்காக வாழ்வான்.

பணிவோடு, பணிக்காக வாழ்பவன் அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பான்,

அரசன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல.

ஆண்டவரின் அடிமையின் சேவைக்காக அனைவரும் காத்திருப்பர்.

தன்னைத் தானே தாழ்த்துகிறவன் மற்ற அனைவரின் உள்ளத்தில் உயரத்தில் வீற்றிருப்பான்.

தன்னை தானே தாழ்த்திய அன்னை மரியாள் இன்று மண்ணக , விண்ணக அரசியாகத் திகழ்கின்றாள். 


நிறைவான பொருளுக்கு உரிமையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் உண்மையில் பொருளுக்கு அடிமை.

பொருள் எப்போதும் அவனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

அவனால் பொருளை விட்டு வெளியே வர முடியாது.

பொருள் மீது பற்றுள்ளவன் அதை யாருக்கும் ஈய மாட்டான்.

ஆகவே அவனுக்கு யாருடைய உள்ளத்திலும் உயரிய இடம் இருக்காது.

பொருளை ஈட்டும் ஒரே நோக்கோடு உயர்ந்த பதவியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள்

 மற்றவர்களது மனதில் அடிவாரத்தில் தான் இருப்பார்கள்.

உண்மையான சேவையாளர்களுக்கு கிடைக்கிற மரியாதை,

 சேவையை தான் பொருள் ஈட்டவே பயன்படுத்துபவர்களுக்கு கிடையாது.

ஆண்டிக்கு கிடைக்கும் சுதந்திரம் ஆள்பவர்களுக்கு கிடைக்காது.

ஆள்பவர்கள் பின்னால் செல்லும் கூட்டம் தங்களுக்காகவே செல்லும்.

வாழ்க என்று சொல்பவர்கள் கூட சம்பளம் வாங்கிக்கொண்டுதான் சொல்வார்கள்.

பொருளையே நம்பி வாழ்கின்றவர்கள் அருளைத் தேட மாட்டார்கள்.

ஆகவே அவர்களுக்கு ஆண்டவரிடம் இடமில்லை.    

இறுதி நேரத்தில் இவர்கள் ஈட்டிய பொருளும் உடன் வராது,

ஆட்சி போய் விட்டால் ஆண்டி கூட மதிக்க மாட்டான்.

இவ்வுலகில் அன்னை மரியாளைப் போல ஆண்டவருக்கு மட்டும் அடிமைகளாக வாழ்வோம்.

விண்ணகத்தில் பரலோக பூலோக 
அரசியின் பிள்ளைகளாக வாழ வரம் பெறுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment