Tuesday, November 29, 2022

கடவுளின் தாய் மரியாள். (தொடர்ச்சி)

கடவுளின் தாய் மரியாள்.
   (தொடர்ச்சி)

"தாத்தா, வகுப்புல மாணவர்கள் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பது அறிவைப் பெறுவதற்காக.

ஆனால் நமது பிரிவினை சபையினர் நம்மிடம் கேள்வி கேட்பது நம்மைக் குழப்புவதற்காக.

ஆகவே அவர்களைப் பற்றி கவலைப்படாமல் நாம் பேசுவோம்.

அன்னை மரியாள் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பற்றி திருச்சபை கூறுவதைக் கூறுங்கள்."

",இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது அருளப்பரை பார்த்து என்ன சொன்னார்?"

"இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.

 பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். 

அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்."

",மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்திருந்தால் இயேசு அவளை அருளப்பர் பாதுகாப்பில் விட்டிருப்பாரா?"

"நமக்குத் தெரியும் இயேசு மட்டுமே அன்னை மரியாளின் மகன் என்று.

சிந்திக்கத் தெரியாதவர்களுக்கு மட்டும் தெரியாது.


இயேசு தனது மரணத்திற்கு பின் தனது அன்னைக்கு பாதுகாவலராக அருளப்பரை நியமிக்கிறார்.

மகனுக்குரிய பாசத்தோடு அவளைக் கவனிப்பதற்காகத்தான் அருளப்பரை நோக்கி,

"இதோ! உன் தாய்" என்றார்"

",அன்னை மரியாள் அருளப்பரை மட்டுமல்ல எல்லா அப்போஸ்தலர்களையும் தனது பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டாள்.

திருச்சபையின் தாயும் அவள் தான்.

ஆகவே நம் அனைவருக்கும் தாய் அவள் தான்.

இயேசுவை நேசித்தது போலவே நம் அனைவரையும் நம் அன்னை நேசிக்கிறாள்."

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் மரியாள் தன் மகனை நமது மீட்புக்காக தந்தை இறைவனுக்கு பலியாக ஒப்புக்கொடுத்தது போல 

நம்மையும் ஒப்புக் கொடுப்பாள் போல் இருக்கிறது!"

",போல் இருக்கிறது' என்ன?

நமது ஆன்மீக வாழ்க்கையின் நோக்கமே அதுதானே.

இயேசு நம்மை நமது சிலுவைகளை சுமக்க சொன்னது நம்மை இறைவனுக்கு பலியாக ஒப்புக் கொடுப்பதற்காகத் தானே.

அதில் நமக்கு உதவுவதற்காகத் தான் தன் அன்னையை நமது அன்னையாக இயேசு தந்திருக்கிறார்.

மரியன்னை பக்தியின் உண்மையான நோக்கம் அதுதான்.

அன்னையிடம் சென்று நாம் மீட்பு பெற வேண்டிய உதவியைக் கேட்காமல் உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டால்,

நாம் பள்ளிக்கூடம் சென்று பாடங்களைப் படிக்காமல்,

விளையாடி விட்டு வரும் மாணவர்களுக்குச் சமம் ஆவோம்.


மரியாளை நமது அன்னையாக நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் ஏற்றுக் கொண்டால், '

நமக்கு பேரின்ப நிலை வாழ்வு உறுதி."

"தாத்தா அன்னையின் விண்ணேற்பு பற்றி சொல்லுங்கள்.

விவிலிய ஆதாரங்களை நான் கேட்கவில்லை.

 அது அறிஞர்களுக்கு.

 நாம் சாதாரண மக்கள்.

 நமக்கு அன்னை மீது பக்தி தான் முக்கியம்.

சாப்பாடு எங்கிருந்து வந்தது என்பதை பற்றி கவலைப்படாமல், ருசியாக இருந்தால் சாப்பிடுபவர்கள் நாம்.

சொல்லுங்கள். சாப்பாட்டை பற்றி அல்ல. 

அன்னையின் விண்ணேற்பைப் பற்றி."

''அன்னை மரியாள் அருளப்பரின் பாதுகாப்பில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தாள்.

அப்போஸ்தலர்கள் நற்செய்தி அறிவிப்பததற்காக உலகெங்கும் சென்று விட்டார்கள்.

அன்னையின் மரணம் நெருங்கிய போது அந்தச் செய்தி பரிசுத்த ஆவியால் அப்போஸ்தலர்களுக்கு அவர்களது உள்ளுணர்வு மூலம் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர்கள் செருசலேமுக்குத் திரும்பினார்கள்.

தோமையார் தவிர மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் வந்துவிட்டார்கள்.

அன்னை மரணம் அடைந்தவுடன் யூத முறைமைப்படி அவளை அடக்கம் செய்தார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு தோமையார் வந்து சேர்ந்தார்.

வந்தவர் "தாயின் முகத்தைப் பார்க்க வேண்டும்,

 கல்லறையை திறந்து காட்டுங்கள்" என்று மற்றவர்களை கட்டாயப்படுத்தினார். 

அவரது கட்டாயத்திற்காக கல்லறை திறக்கப்பட்டது.

ஆனால் அங்கே மரியாளின் உடல் இல்லை.

மரியாள் ஆன்ம சரிரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் என்று தீர்மானித்தார்கள்.

மரியாள் தோமையாருக்குக் காட்சி கொடுத்து தான் ஆன்ம சரிரத்தோடு விண்ணகத்தில் இருக்கும் செய்தியை தெரிவித்தாள்.

மரியாளின் விண்ணேற்பு செய்தியை நாம் அறிய உதவியவர் தோமையார்தான்.

தன் மகனோடு மரியாள் விண்ணகத்தில் ஆன்ம சரிரத்தோடு இருக்கும் செய்தியை அப்போஸ்தலர்கள் தாங்கள் நற்செய்தி அறிவிக்கச் சென்ற இடத்திலெல்லாம் மக்களுக்கு அறிவித்தார்கள். 

அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே
மக்கள் மரியாளின் விண்ணேற்பை விழாவாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.

திருச்சபையின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லாமலேயே திருச்சபை முழுவதும் மக்களால் 

அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்தே விண்ணேற்புத் திருவிழா கொண்டாடப்பட்டு வந்தது.

1950இல்தான் பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் மரியாள் விண்ணேற்பு அடைந்ததை கிறித்தவ விசுவாச உண்மையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதியில் அன்னையின் விண்ணேற்பு திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம்."

"இதிலும் கூட அன்னையின் தாழ்ச்சியைப் பாருங்கள்.

தான் ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதை திருச்சபை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க 1950 வரை விண்ணகத்தில் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள்.


இராயப்பர் நினைத்திருந்தால் அவரே செய்திருக்கலாம்.

ஆனால் கடவுள் சித்தப்படிதானே எல்லாம் நடக்கும்."

",சரியாகச் சொன்னாய்..

இறைவனால் எல்லாம் முடியும்.

கடவுள் நினைத்திருந்தால் மனிதனை பாவம் செய்ய முடியாதவனாகப் படைத்திருக்கலாம்.

ஆனால் அவனை முழு சுதந்திரத்தோடு படைத்தது அவர் சித்தம்.

அவர் நினைத்திருந்தால் மனிதனாகப் பிறக்காமலேயே மனிதர்களின் பாவங்களை மன்னித்திருக்கலாம்.

ஆனால் தான் பாடுகள் பட்டு, மரித்து, மனிதர்களின் பாவங்களுக்கு தானே பரிகாரம் செய்த பின்பு தான் மன்னிக்க வேண்டும் என்பது அவர் சித்தம்.

அவர் நினைத்திருந்தால் அவர் உலகில் வாழும் போதே அப்போஸ்தலர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் அதை பரிசுத்த ஆவியின் மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்பது அவர் சித்தம்.

நாம் என்ன நினைத்தாலும் எல்லாம் இறைவன் சித்தப்படி தான் நடக்கும்."

"தாத்தா, அன்னை மரியாள் விண்ணகத்திற்கு ஆன்ம, 
சரீரத்தோடு எடுத்துக் கொள்ளப்பட்டாள்.

விண்ணகம் எங்கே இருக்கிறது?''

",எங்கேயும் இல்லை."

" நான் விளையாட்டுக்கு கேட்கவில்லை. உண்மையிலேயே கேட்கிறேன்."

", நானும் விளையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையிலேயே சொல்கிறேன்.

விண்ணகம் நமது உலகத்தை போல ஒரு சடப் பொருள் அல்ல.

சடப் பொருளுக்கு தான் இருக்க இடம் தேவை.

ஆவி இருக்க இடம் தேவை இல்லை.

ஆவியாகிய இறைவன் வாழ்வது போல,

ஆவியாகிய நமது ஆன்மாவும் விண்ணகத்தில் வாழும்.

"ஆண்டவராகிய கடவுள் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் முகத்தில் உயிர் மூச்சை ஊதவே, மனிதன் உயிருள்ளவன் ஆனான்."

ஆதாமிற்குள் ஊதப்பட்ட உயிர் 
மூச்சுதான் ஆன்மா.

உயிர் மூச்சாகிப ஆன்மாவைக் கடவுள் உடலிலிருந்து பிரித்து விட்டால்

உடல் பழையபடி களிமண்ணாகி விடுகிறது.

உடலிலிருந்து பிரிந்த ஆன்மா விண்ணக நிலையை அடைகிறது.

மனிதனாய் பிறந்த இயேசு மரிக்கும்போதும்,

மரியாள் மரிக்கும்போதும் அவர்களுடைய ஆன்மாக்கள் இதே நிலையைத்தான் அடைந்தன.

இயேசு உயிர்க்கும் போது சடப்பொருளாய் அடக்கம் பண்ணப் பட்ட அவரது உடல், Spiritual body யாக மாற்றம் அடைந்தது.

உயிர்த்தபோது உடலோடும் ஆன்மாவோடும் இயேசு விண்ணகம் எய்தினார். .(Ascended)

அன்னை மரியாள் கடவுளால் ஆன்ம சரீரத்தோடு விண்ணக நிலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்.(Assumed)

இயேசு கடவுள், ஆகவே சொந்த வல்லமையினால் ஆன்ம, சரீரத்தோடு விண்ணகம் எய்தினார்.

மரியாள் கடவுளால் ஆன்ம, சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்."

லூர்து செல்வம்.

Monday, November 28, 2022

கடவுளின் தாய் மரியாள். (தொடர்ச்சி)

கடவுளின் தாய் மரியாள்.
   (தொடர்ச்சி)

"தாத்தா, அன்னை மரியாளுக்கு இயேசுவை தவிர வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதற்கு பிரிவினை சகோதரர்கள் எடுத்துக்காட்டும் பைபிள் வசனம்:

"இவர் தச்சன் அல்லரோ?

 மரியாளின் மகன் தானே!

 யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே!

 இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ?" 

என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர். (மாற்கு, 6:3)


",பேரப்பிள்ள, ஒரு முக்கியமான உண்மையை சொல்லிவிட்டு நீ குறிப்பிட்ட வசனத்திற்கு வருவோம்.

ஆன்மீக ரீதியாக நாம் யாருடைய பிள்ளைகள்?"

"நமது ஆண்டவரால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் பிள்ளைகள்."

",அதாவது கத்தோலிக்க திருச்சபை நமது தாய்.

இயேசுவின் போதனைகளில் தவறு இருக்க முடியுமா?"

"உறுதியாக முடியாது. ஏனெனில் அவர் கடவுள்."

",தனது போதனைகளை நமக்கு தருவதற்காக அவரே நியமித்த கத்தோலிக்க திருச்சபை தவற முடியுமா?"

"அதனால் தவற முடிந்தால் கடவுள் அதை நமது மீட்புக்காக ஏற்படுத்தியதில் அர்த்தமே இல்லை.

உலக கஷ்டங்களுக்கு அப்பாற்பட்ட, கஷ்டப்படவே முடியாத சர்வ வல்லவ கடவுள்

 நம்மை மீட்பதற்காக பாடுகள் படுவதற்காகவே மனிதனாகப் பிறந்து, 

பாடுகள் பட்டு மரித்து 
  தவறு செய்யக்கூடிய தாயை நமக்குத் தந்தால் 

அவர் பாடுபட்டு மரித்ததற்கு பொருள் இல்லாமல் போய்விடும். 

திருச்சபையின் தலைவராக நியமிக்கப்படவிருந்த இராயப்பரை நோக்கி:

"நான் உனக்குச் சொல்லுகிறேன்.

 உன் பெயர் "பாறை." இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.

 நரகத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிக்கொள்ளா.

வானகத்தின் திறவுகோல்களை உனக்குக் கொடுப்பேன்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ கட்டுவாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் கட்டப்பட்டதாகவே இருக்கும்.

 எதெல்லாம் மண்ணகத்தில் நீ அவிழ்ப்பாயோ அதெல்லாம் விண்ணகத்திலும் அவிழ்க்கப்பட்டதாகவே இருக்கும்" என்றார். (மத்.16:18, 19)

இராயப்பரின் தலைமையில் இயங்கும் திருச்சபையால் தவறு செய்ய முடியாதபடி இயேசுவின் பாதுகாப்பு இருக்கும்.

திருச்சபையின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த வாழ்வில் தவறு செய்ய முடியும். ஏனெனில் நாம் எல்லோரும் பாவிகள் தான்.

ஆனால் விசுவாசம் சார்ந்த போதனையில் திருச்சபை என்ற அமைப்பினால் தவறு செய்ய முடியாது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகிய பாப்பரசர் விசுவாசம் சார்ந்த விசயங்களை பற்றி உலகோர் அனைவருக்கும்  போதிக்கும் போது அவரால் தவற முடியாது.

இதைத் தவறா வரம் என்று அழைக்கிறோம். 

திருச்சபையில் உள்ள அனைவருக்கும் எழுத வாசிக்க தெரியும் என்று சொல்ல முடியாது.

எல்லோராலும்  பைபிள் வாசிக்க முடியாது.

பைபிள் வாசிக்க முடியாததால் மீட்பு அடையாமல் இருக்க முடியாது.

அவர்கள் தங்களுடைய விசுவாச அறிவுக்கு திருச்சபையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள்.

ஆகவே அனைவருமே ஆன்மீக வாழ்வில் திருச்சபை சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

நமது கத்தோலிக்க திருச்சபை சொல்கிறது அன்னை மரியாள் முக்காலமும் கன்னி என்று.

அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

சரி, இப்போது நீ குறிப்பிட்ட வசனத்திற்கு வா.

யாரெல்லாம் இயேசுவின் சகோதரர்கள் என்று குறிக்கப் பட்டிருக்கிறார்கள்?"

"யாகப்பன், சூசை, யூதா, சீமோன்."

",இவர்கள் அன்னை மரியாளின் மக்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார்களா?"

"இல்லை. இயேசுவின் சகோதரர்கள் என்றுதான் குறிக்கப் பட்டிருக்கிறார்கள்.''

",நீ என்னை தாத்தா என்று அழைக்கிறாய்.

 நான் உனது அம்மாவைப் பெற்ற தாத்தாவா? 
இல்லை, அப்பாவைப் பெற்ற 
தாத்தாவா?"

"இரண்டுமே இல்லை. நமக்குள் இரத்த உறவு இல்லை. 

வயதானவர்களை எல்லாம் மரியாதையாக தாத்தா என்று அழைப்பது தமிழர்களின் பழக்கம்." 

",நம்மை போலவே யூதர்களும் சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா மக்களையும்,

சில தூரத்து உறவுகளையும் கூட சகோதர, சகோதரிகள் என்று அழைப்பது வழக்கம்.

மத்தேயு 27:55,56 ஐ வாசி."


"கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்."

",யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாய் யார்?"

"மரியாள்."

", மாற்கு 16:1ஐ வாசி."

"ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும்,
 யாகப்பரின் தாய் மரியாளும், சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்."

", யாகப்பரின் தாய்  யார்?"

"மரியாள். சூசைக்கும் தாய் இவள்தான்."

",இந்த மரியாள் இயேசுவின் தாய் என்று நினைக்கிறாயா?"

"இல்லவே இல்லை. இருந்திருந்தால் அப்படியே நற்செய்தி எழுதியவர் எழுதியிருப்பார்."

மத்.27: 61 ஐ வாசி.

அங்கே மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிரே அமர்ந்திருந்தனர்."

",யார் இந்த மற்ற மரியாள்?"

"மதலென் மரியாளோடு நின்ற, 
  மரியாள். யாகப்பர், சூசை ஆகியவர்களின்  தாய்."

",இப்போது ஒன்று புரிந்திருக்கும். 

யாகப்பர், சூசை ஆகியவர்களின்  தாய் மரியாளும், 

இயேசுவின் தாய் மரியாளும் வெவ்வேறு நபர்கள்.

அதனால்தான் யாகப்பர், சூசை ஆகியவர்களின்  தாயை மற்ற மரியாள் என்று நற்செய்தியாக அறிவிக்கிறார்.

இப்போது ஒன்று புரிந்திருக்கும்.

 நீ முதலில் குறிப்பிட்ட வசனத்தில் வருபவர்கள் அன்னை மரியாளின் மக்கள் அல்ல.

 மற்றொரு மரியாளின் மக்கள்."

"யார் இந்த மற்றொரு மரியாள்?

மத். 28:1ஐ வாசி."


"ஓய்வுநாளுக்குப்பின், வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தனர்."

", அரு. 19:25. ஐ வாசி."

"இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், 

அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும்,

 மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்."

",கிலோப்பாவின் மனைவி  மரியாள், அன்னை மரியாளின் சகோதரி.

கிலோப்பாவின் மனைவியைத்  தான் மத்தேயு மற்ற மரியாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவள் அன்னை மரியாளின் சகோதரி,

 அதாவது இயேசுவின் சித்தி, '

 அதாவது யாகப்பரும், சூசையும் இயேசுவின் சித்தி மக்கள்,

ஆகவே சகோதரர்கள்.

இப்போது இயேசுவின் சகோதரர்கள் என்றால் பொருள் புரிந்திருக்குமே?"

"இது ஏன் நமது பிரிவினை சகோதரர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புரியவில்லை."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Sunday, November 27, 2022

கடவுளின் தாய் மரியாள். (தொடர்ச்சி

     கடவுளின் தாய் மரியாள்.
   (தொடர்ச்சி

"தாத்தா, அந்த ஆள் சொல்றாரு, 
இயேசு பிறந்த பிற்பாடு மாதாவுக்கு சூசையப்பர் மூலமாக குழந்தைகள் பிறந்தனவாம்,

அவள் இயேசு பிறக்கும் வரை தான் கன்னியாம்.

முக்காலமும் கன்னி இல்லையாம்.

வசன ஆதாரங்கள் இருக்கின்றனவாம்.

என்ன பதில் சொல்கிறீர்கள்."

",நாற்காலிக்கு எத்தனை கால்கள்?"

"நான்கு கால்கள்."

",ஒரு நாற்காலியின் ஒரு காலை அப்புறப்படுத்தி விட்டால் அதன் பிறகு அதை நாற்காலி என்று சொல்லலாமா?"

"முக்காலி என்று வேண்டுமானால் சொல்லலாம்.''

",பழைய ஏற்பாட்டுப் புத்தகங்களையும்,  
புதிய ஏற்பாட்டு புத்தகங்களையும்
 பைபிள் என்ற ஒரே நூலாக மக்களுக்கு தந்தது கத்தோலிக்க திருச்சபை.

கத்தோலிக்க திருச்சபை தந்த பைபிளில் மொத்தம் 73 .புத்தகங்கள் உள்ளன.

பழைய ஏற்பாடு 46 புத்தகங்கள்.
புதிய ஏற்பாடு     27 புத்தகங்கள்.

73 புத்தகங்களைக் கொண்ட பைபிள் கத்தோலிக்க திருச்சபையின் சொத்து.

16 ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபையை விட்டு பிரிந்து சென்ற Protestants 

உண்மையான முழுமையான கத்தோலிக்க பைபிளிலிருந்து ஏழு புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு 

மீதி 66 புத்தகங்கள் உள்ள நூலை பைபிள் என்று கூறிக்கொண்டு 

கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையான பைபிளிலிருந்து 7 புத்தகங்களை நீக்கியது போலவே,

வசனங்களுக்கு தங்கள் இஷ்டம் போல் பொருள் கூறுவதிலும் அவர்கள் வல்லவர்கள்.

இன்று ஆயிரக்கணக்கான Protestant பிரிவுகள் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரே வசனத்திற்கு ஒவ்வொரு பிரிவும் ஒரு பொருள் கொடுக்கும்.

உண்மையான பொருள் முழுமையான பைபிளைத் தந்த கத்தோலிக்க  திருச்சபையிடம் தான் உள்ளது.''

"தாத்தா, ஒரு நிமிடம். என் நண்பன் ஒருவன்  ஒளவையார் மது அருந்தும் படி நமக்கு புத்திமதி சொல்கிறார் என்கிறான்.

அதற்கு அவளுடைய ஆத்திசூடியையே ஆதாரமாக காட்டுகிறான்.

"ஊக்கமது கைவிடேல்."

பதவுரை :

ஊக்கம் = ஊக்கம் தரக்கூடிய,
மது = மதுவை,
கைவிடேல் = கைவிட்டு விடாதீர்கள்.

பொருளுரை: 
எல்லோரும் எப்போதும் மது அருந்தி கொண்டே இருங்கள்."

",Protestant கள் வசனங்களுக்கு பொருள் கூறுவதற்கு நீ சொல்வது நல்ல ஒப்புமை.

இயேசு மனிதனாய் பிறந்து உலகுக்கு வந்ததன் ஒரே நோக்கம் பாவ பரிகாரமாக தன்னையே பலி கொடுப்பதற்கு, அதன் மூலம் நாம் பாவ மன்னிப்பு பெறுவதற்கு.

வந்த இடத்தில் தான் அவர் நற்செய்தியை அறிவித்தார், புதுமைகள் பல செய்து நோயாளிகளை குணமாக்கினார். 

நற்செய்தியை அறிவித்த காலத்திலும், புதுமையாக செய்து நோயாளிகளைச் குணமாக்கிய போதும்

இயேசு அடிக்கடி சொல்வார்:

"என் நேரம் இன்னும் வரவில்லை."

அவர் நேரம் என்று குறிப்பிடுவது

 அவர் உலகிற்கு எதற்காக வந்தாரோ அந்த நேரம்,

 அதாவது பாவப் பரிகாரமாக பாடுகள் பட்டு, மரிக்கும் நேரம்.

புனித வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு இவைதான் அவரது நேரத்திற்குள் அடங்கும்.''

"அப்போ இயேசு நோயாளிகளைக் குணமாக்குவதற்காக வரவில்லையா?''

",குற்றாலத்திற்கு எதற்காகப் போகிறோம்?"

''குளிப்பதற்காக.''

",பஸ்ஸில் ஏறுவதற்கும் அதிலிருந்து இறங்குவதற்கும், துண்டு வாங்குவதற்கும்,
கடையில் இட்லி சாப்பிடுவதற்கும் 
போகவில்லையே.

அதே போல் தான் இயேசு உலகிற்கு வந்தது நம்மை பாவத்திலிருந்து மீட்க,

 அதற்காகத்தான் பாடுகளும் சிலுவை மரணமும், உயிர்ப்பும்.

அவரது 33 ஆண்டு வாழ்வும் இதற்கான தயாரிப்பு காலம்தான்.

கத்தோலிக்க திருச்சபை இந்த நேரத்தைத் தான் தினமும் கொண்டாடுகிறது.

  தினமும் திருப்பலி ஒப்புக் கொடுத்து,  திவ்ய நற்கருணை வழங்குவதன் மூலம் இயேசு உலகிற்கு வந்ததன் நோக்கத்தை கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது.

எங்கே பாவ சங்கீர்த்தனமும், திருப்பலியும், 
திவ்ய நற்கருணையும் இருக்கிறதோ

அங்கேதான் கத்தோலிக்க திருச்சபையும் இருக்கிறது.

நான் சொல்வதன் கருத்து உனக்கு புரியும் என எண்ணுகிறேன்."

"புரிகிறது. இந்த மூன்றும் உள்ள சபைதான் இயேசுவால் நிறுவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை."

",எங்கே திவ்ய நற்கருணைப் பேழை இருக்கிறதோ அதுவே இயேசு வாழும் ஆலயம்.

பிரிவினை சபையினர் வைத்திருப்பது செபக் கூடங்கள் மட்டும் தான்.

புனித வியாழன் அன்று இயேசு தனது அப்போஸ்தலர்களுக்குக் குருப் பட்டம் கொடுத்தார்.

அவர்களிலிருந்து தொடர்ச்சியாக வரும் அவர்களது வாரிசுகளாகிய குருக்களால் மட்டுமே இயேசு புனித வியாழனன்று செய்ததை செய்ய முடியும்,

அதாவது அப்பத்தை இயேசுவின் உடலாகவும் ரசத்தை அவருடைய  இரத்தமாகவும் மாற்ற முடியும்.

அதாவது அவர்களால் மட்டுமே திருப்பலி நிறைவேற்ற முடியும்.

பாப்பரசரின் தலைமையில் இயங்கும் திருச்சபை தான் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட திருச்சபை.

அது கத்தோலிக்க திருச்சபை மட்டுமே."

"மாதாவின் கன்னிமைக்கு எதிராக மற்றவர்கள் கூறும் கருத்துக்களுக்கு பதில் கேட்டால் 

நீங்கள்  அதை இன்னும் சொல்லவில்லை."

",எனது மகன் சின்னப் பையனாக இருக்கும்போது 

"அப்பா, உவரி அந்தோனியார் கோவிலுக்குப் போக வேண்டும்" என்று சொன்னான்.

நாங்களும் கோவிலுக்கு போவதற்காக Bus stand குப் போனோம்.

என் மகன் கேட்டான்,

"அப்பா, அந்தோனியார் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொன்னால்,

Bus stand குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்?"

அப்படி இருக்கிறது உன் கேள்வி."

(தொடரும்)

லூர்து செல்வம்.




..

கடவுளின் தாய் மரியாள்.(தொடர்ச்சி)

.கடவுளின் தாய் மரியாள்.
(தொடர்ச்சி)

"தாத்தா, 

"கானவூர் கல்யாண வீட்டில் ஏசுவாலே கடிந்து கொள்ளப் பட்டவர் தான் இந்த மரியாள்." என்ற கட்டுரையாளரின் விமர்சனத்திற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?"

",இயேசுவின் பொது வாழ்வில் அவர் செய்த முதல் புதுமை கானாவூர் திருமணத்தின்போது தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. 

அவர் செய்த மற்ற புதுமைகள் ஒன்று அவராகவே செய்தவையாய் இருக்கும், அல்லது நோயாளிகளின் 
வேண்டுதலுக்காக செய்தவையாய் இருக்கும்.

ஆனால் கானாவூர் திருமணத்தில் செய்த புதுமை தனது தாயின் வேண்டுதலின் பேரில் செய்தது.

தனது தாய்க்கு தன்னிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை நமக்கு அறிவிப்பதற்காகத்தான் இந்த புதுமையைச் செய்திருக்கிறார்,

திருமணத்தின் போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது.

அன்னை மரியாள் இயேசுவை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்."

என்ன நோக்கத்தில் மரியாள் தன் மகனைடம் இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்?

திருமணத்திற்கு வரும்போது இயேசு திருமண வீட்டாருக்கு கொடுப்பதற்காக ரசம் கொண்டு வந்திருந்தாரா?

நிச்சயமாக அவரிடம் திராட்சை ரசம் இல்லை என்று மரியாளுக்கு தெரியும்.

ஆனாலும் அவர் சர்வ வல்லவ கடவுள் என்று அவளுக்கு தெரியும்.

30 ஆண்டுகளாக அவளுக்குக் கீழ்படிந்து நடந்த அவளது அன்பு மகன் தனது சொல்லை தட்டாமல் ஏதாவது செய்வார் என்று அவளுக்கு தெரியும்.

இயேசு திருமண வீட்டாருக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில் தான் மரியாள் ரசம் தீர்ந்து விட்டது என்று அவரிடம் சொன்னார்.

கட்டுரையாளர் சொல்வது போல இயேசு எனது தாயை கடிந்து கொண்டாரா?

அவர் தனது தாயை நோக்கி, 

"அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றுதான் சொன்னார்.

எந்த வார்த்தையை வைத்து இயேசு தன் தாயை கடிந்து கொண்டார் என்று கட்டுரையாளர் சொல்கிறார்?"

"தாத்தா, நீங்கள் குறிப்பிட்ட அம்மா என்ற சொல்லுக்குப் பதில் அவர்களுடைய பைபிளில் 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்றிருக்கிறது.

தாயை யாராவது 'பெண்ணே' என்று அழைப்பார்களா என்று அவர் நினைத்திருப்பார்."

",பெண்ணே' என்பது கடிந்து கொள்வதற்கு உரிய வார்த்தையா?

ஒரு மாம்பழத்தைக் கண்ணால் பார்த்தாலோ, தோலை உரிக்காமல் வாயில் வைத்தாலோ ருசிக்காது.

தோலை உரித்து விட்டு உள்ளே உள்ள சதையை தின்றால்தான் ருசிக்கும்.

இறைவாக்கும் வாசித்தவுடன் புரியாது. உள்ளே சென்று தியானித்தால்தான் புரியும்.

உள்ளே சென்று தியானிப்போமா?

கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?"

"ஆணும், பெண்ணுமாகப் படைத்தார். அவரால் படைக்கப்பட்ட பெண்தான் முதலில் பாவம் செய்தாள்."

",படைப்பை பற்றிய வரலாற்றில் வேறு எங்காவது பெண் என்ற வார்த்தை வருகிறதா?"

"வருகிறது.

உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்: அவள் உன் தலையை நசுக்குவாள்."

கடவுள் பாம்பை நோக்கி கூறிய வார்த்தைகள்."

",முதலில் சொல்லப்பட்ட பெண் யார் ? இரண்டாவது சொல்லப்பட்ட பெண் யார்?"

'முதலில் சொல்லப்பட்ட பெண் ஏவாள்.

இரண்டாவது சொல்லப்பட்ட பெண் சாத்தானின் தலையை நசுக்கிய மரியாள்."

",உனக்கும், பெண்ணுக்கும்" என்று சொன்னது யார்?"

" இறைவன்."

"பெண்ணின் வித்து யார்?"

"இயேசு."

",இயேசுவின் தாயை பெண் என்றுதான் கடவுளே, அதாவது, இயேசுவே குறிப்பிட்டிருக்கிறார்.

அவளை கடிந்து 
கொள்வதற்காகவா?"


"இல்லை. முதலில் கடவுள் மரியாளை பெண் என்று குறிப்பிட்டபோது மரியாள் பிறக்கவே இல்லை.

பிறக்குமுன்பே கடவுள் அவளைப் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார், அவள் சாத்தானின் தலையை நசுக்குவாள் என்று,

அதாவது சாத்தானால் ஏமாற்றப்பட்ட பெண் செய்த பாவம் இயேசுவைப் பெறப்போகும் பெண்ணை அணுகாது என்று."

",இப்போது சொல்லு இயேசு தனது தாயை பெண்ணே என்று அழைத்தது அவளை கடிந்து கொள்வதற்கா?"

"இல்லை. 'சாத்தானின் தலையை நசுக்கிய எனது அன்னையே' என்ற பொருளில் தான் சொல்லியிருப்பார்."

அவர் சொன்ன வார்த்தையை பிற் காலத்தில் வாசிப்பவர்கள்

 அவருடைய அன்னை பாவ மாசற்றவள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லியிருப்பார்.

(தொடரும்)

லூர்து செல்வம்.

Saturday, November 26, 2022

கடவுளின் தாய் மரியாள்.

கடவுளின் தாய் மரியாள்.

"தாத்தா, நான் ஒரு கட்டுரை எழுதலாம் என்றிருக்கிறேன்"

", very good. தினமும் ஏதாவது கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பாய். இப்போது எழுதலாம் என்றிருக்கிறாய். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்."

"தாத்தா, இப்போதும் கேள்விகள் கேட்கத் தான் வந்திருக்கிறேன்."

", எப்போது கட்டுரை எழுதுவாய்?"

"எனது கேள்விகளுக்கு உங்கள் பதிலைத் தெரிந்து கொண்ட பின்,

முதலில் ஒரு முன்னுரை."

", கட்டுரைக்கா?"

"இல்லை. எனது கேள்விகளுக்கு"

",கேள்விகளுக்கு முன்னுரையா?"

"ஆமா. நான் உறுப்பினராக இருக்கும் ஒரு குழுவின் (Group) நிர்வாகி (Administrator) மிகவும் பக்தியுள்ள கத்தோலிக்கர்.

கத்தோலிக்கத் திருச்சபையின் கொள்கைகளை மக்களிடையே பரப்புவதற்காகத் தான் குழுவை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

குழுவில் கத்தோலிக்கர் அல்லாதோரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அவர்களும் கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளை அறிய வேண்டும் என்பதுதான் குழுவின் நோக்கம்,

ஆனால் அவர்களில் ஒருவர் Forward செய்த ஒரு கட்டுரை இறைவனின் தாயாகிய நம் அன்னையை உண்மைக்கு புறம்பான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்திருக்கிறது.

அதை எழுதியவர் யார் என்று நமக்குத் தெரியாது. Forward செய்தவர் மட்டும் தான் நமக்குத் தெரியும்.

கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்.

"மரியாள் இயேசுவுக்கு சமமாக, இன்னும் மேலாக கருதப் படுகிறார்கள்.

 இன்னும் சொல்லப் போனால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எப்படி கொண்டாடப்படுகின்றதோ

  அப்படியே கன்னி மரியாளின் பிறந்த நாளும் மிக ஆடம்பரமாக கொண்டாடப் படுகிறது.".

இல்லாத ஒன்றை அச்சிட்டு விட்டால் அது உண்மையாகி விடுமா தாத்தா?"

",கத்தோலிக்க திருச்சபை எந்த காலத்திலும் மரியாள் இயேசுவுக்கு சமமானவள் என்று கூறவேயில்லை.

நம்மைப் போலவே அவளும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு பெண்மணி.

அவர் தான் மனிதனாகப் பிறக்கும் போது தனக்குத் தாயாக இருக்க ஒரு பெண்மணியை நித்திய காலமும் திட்டமிட்டு,

அந்த நோக்கத்திற்காகவே அவரால் குறிக்கப்பட்ட காலத்தில் அவளைப் படைத்தார்.

இயேசு தேவ சுபாவத்தில் காலங்களைக் கடந்தவர், நித்தியர்.

 மனித சுபாவத்தில் காலத்திற்கு உட்பட்டவர், பிறப்பும் இறப்பும் உள்ளவர்.

மரியாள் நம்மை போலவே காலத்திற்கு உட்பட்டவர்.

காலத்திற்கு உட்பட்ட மரியாள் எப்படி காலங்களை கடந்த கடவுள் இயேசுவுக்குச்
சமமானவளாக இருக்க முடியும்?

இருக்கிறாள் என்று திருச்சபை சொல்லுமா?

இயேசு சர்வ வல்லவர்.
சர்வ வல்லவருக்கு சமமாக மரியாள் இருக்கிறாள் என்று திருச்சபை சொல்லுமா?

சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொன்னால் உண்மையாகி விடுமா?


திருவிழா கொண்டாட்டங்களை வைத்து எப்படி அன்னைக்கு இயேசுவை விட அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்ல முடியும்?

பெற்றோர் குழந்தையின் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினால், குழந்தை பெற்றோரைவிட பெரியவன் ஆகிவிடுவானா?

நாம் இயேசுவுக்கும் விழாக் கொண்டாடுகின்றோம்,

புனிதர்களுக்கும் விழாக் கொண்டாடுகின்றோம்.

பூனை நான்கு கால்களால் நடக்கிறது,

 புலி நான்கு கால்களால் நடக்கிறது,

 ஆகவே பூனையும் புலியும் சமம் என்று கூறுவது போல்

 அவரது கூற்று இருக்கிறது.

இயேசுவுக்கு கொண்டாடப்படும் விழாக்களுக்கும்,

புனிதர்களுக்கு கொண்டாடப்படும் விழாக்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

அது நமக்குத் தெரியும்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கொண்டாட்டம் மட்டுமே தெரியும்."




"ஆண்டவரின் தாய். இந்த கோட்பாட்டின் படி இயேசுவின் தாய்க்கும் இயேசுவுக்கு ஒரே சம நிலையில் மதிப்பு கொடுக்கப் படுகின்றது." என்று கட்டுரை ஆசிரியர் எழுதுகிறார்.

அன்னை மரியாளை கடவுளின் தாய் என்று நாம் அழைப்பதால் அவளை இயேசுவுக்கு சமமாக நாம் கருதுகின்றோமாம்."

", இயேசு கடவுள். அன்னை மரியாள் கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்தாள். ஆகவே அவள் கடவுளின் தாய்.

சாதாரண பெண்மணிகளை விட கடவுளின் தாயாகிய மரியாள் பெருமைக்கு உரியவள்.

நாம் இயேசுவை கடவுளாகவும்,
 மரியாளை அவருடைய தாயாகவும் கருதுகிறோம்.

கடவுளை மனிதனாகப் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றவன் மரியாள் என்று தான் சொல்லுகிறோம். இயேசுவுக்கு சமமானவள் என்று சொல்லவில்லை.

"இறைவனின் தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்றுதான் சொல்லுகிறோம்.

"இறைவனுக்கு சமமானவளே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று நாம் சொல்லவில்லை."

"எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்று சொல்லும் போதே இயேசு அன்னையை விட மேலானவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம்."


",இயேசு கிறிஸ்து *ஸ்தீரீயே* என்ற பொருள் படும் வகையில் தொடர்பு கொள்ளும் வகையில் தான் சொல்லப்பட்டு இருக்கின்றது."
என்று எழுதியிருக்கிறார்.

",மரியாள் அவரது அன்புக்குரிய தாயாக இருந்ததால்தான் இயேசு தான் 33 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்வில் மரியாளுக்கு 30 ஆண்டுகள் கீழ்ப்படிந்து நடந்தார்.

இறைவனின் 10 கட்டளைகளில் நான்காவது கட்டளை பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்வது.

அவரது கட்டளையை அவரே பின்பற்றி நடந்து நமக்கு முன்மாதிரிகை காட்டி இருக்கிறார்."


"தாத்தா, அந்தக் கட்டுரை ஆசிரியர் ''அப்படியே ஆண்டவரின் தாய் என்று சொன்னாலும் இன்றைய வழக்கத்தின் படி ஒருவர் தனது வாடகை தாய்க்கு எந்த மரியாதையை கொடுக்கின்றாரோ அதே கனத்தை தான் இயேசு கிறிஸ்து மரியாளுக்கு கொடுக்கின்றார்" என்று சொல்கிறார்

சர்வத்தையும் படைத்து பராமரித்து வரும் சர்வ வல்லவ கடவுள் தன்னை மனிதனாய்ப் பெற்ற தாயை வாடகைத் தாய்க்குச் சமமாகக் கருதுவாரா?

 தனது தாயை வாடகை தாய்க்குச் சமமானவள்  என்று கூறும் அளவிற்கு தரம் கெட்டு போனவர்களைப் பற்றி இயேசு என்ன நினைப்பார்?"

",இயேசு பாவிகளை நேசிக்கும் கடவுள்.

தன்னைக் காட்டி கொடுத்த யூதாசையே 'நண்பனே' என்று அழைத்தவர்.

இப்படிப் பட்டவர்வர்களுக்காகவும் சேர்த்துதான் இயேசு சிலுவையில் தன்னை பலியாக்கினார்.

நாமும் அவர்களை மன்னித்து அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்."

"தாத்தா, நாம் அன்னை மரியாளை சென்ம பாவமருவின்றி உற்பவித்தவள்  என்று விசுவசிக்கிறோம்.

தனது வாழ்நாள் முழுவதும் பாவமாசின்றி வாழ்ந்தவள் நமது அன்னை.

ஆனால் அந்த கட்டுரையாசிரியர் அன்னை மரியாள் 
பாவமற்றவர் என்று வேதத்தில் எந்த இடத்திலும் சொல்லப் பட வில்லை என்று கூறுகிறார்."

", கபிரியேல் தூதர் மரியாளை "அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்று வாழ்த்தியதை நண்பர் வாசித்திருக்க மாட்டார்.

ஒரு பாத்திரம் ஒரு பொருளால் நிறைந்திருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம்?"

"அந்தப் பாத்திரத்தில் அந்த பொருளைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று அர்த்தம்."

", மரியாள் அருள் நிறைந்தவள் என்று சொன்னால், அவளிடம் அருளுக்கு எதிரான பாவம் சிறிதும் இருக்க முடியாது என்று அர்த்தம்.

மரியாளை அருள் நிறைந்தவள் என்று வாழ்த்தியவர் இறைவனால் அனுப்பப்பட்ட வான தூதர்.

அவர் இறைவன் கொடுத்த வாழ்த்துச் செய்தியை அப்படியே மரியாளுக்கு தெரிவித்தார்.

மரியாளிடம் எந்தவித மாசும் இல்லை என்று தனது தூதர் வழியாக அறிவித்தவர் எல்லாம் வல்ல இறைவன்.

பாவங்கள் இரண்டு வகை. சென்மப் பாவம், கர்மப் பாவம்.

நமது முதல் பெற்றோர் செய்த பாவத்தின் விளைவாக நாம் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே சென்ப பாவத்தோடு உற்பவிக்கிறோம்.

நாம் இறைவன் கட்டளையை மீறி செய்கிற பாவம் கர்ம பாவம்.

இந்த இரண்டு வித பாவங்களும் மரியாளிடம் இல்லை.

பரிசுத்தமான கடவுள் தான் மனித உரு எடுப்பதற்காக தனது தாயை சென்மப் பாவம் இன்றி படைத்தார்.

அவள் வேறு எந்த பாவமும் செய்து விடாதபடி தனது அருள் வரத்தால் காத்தார்.

இது அவருடைய தாய்க்கு மட்டும் கொடுக்கப்பட்ட விசேசமான வரம்.

"அருள் நிறைந்தவளே வாழ்க," 
என்ற கபிரியேல் தூதரின் வாழ்த்துரையில் இந்த உண்மை அடங்கியிருக்கிறது.

வேண்டுமென்றே மரியாளை விரும்பாத நமது பிரிவினை சகோதரர்களுக்கு இது புரியாது.

புரிந்தாலும் புரியாதது போல் நடிப்பார்கள்."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Friday, November 25, 2022

"மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."(லூக்.21:36)

"மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."(லூக்.21:36)

உலகின் முடிவு நெருங்கும்போது என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இயேசு கூறிவிட்டு,

"நீங்களும் இதெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது கடவுளின் அரசு அண்மையில் உள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்."


 "களியாட்டத்தாலும் குடிவெறியாலும் உலகக் கவலையாலும் உங்கள் உள்ளங்கள் மந்தமடையாதபடியும்,

 அந்நாள் எதிர்பாராமல் கண்ணிபோல் உங்களைச் சிக்கவைக்காதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்."



"நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்பித்துக்கொண்டு

 மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."

என்று கூறுகிறார்.

உலக முடிவு நெருங்கும் காலத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுவாகக் கூறிய இந்த புத்திமதி 

 நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலும் பொருந்தும்.

இவ்வுலகில் நமது வாழ்நாள் நிலையானது அல்ல என்பதால்

 நமது வாழ்வை தொடங்கும் போதே அதன் முடிவை நோக்கித்தான் நாம் நகர்கிறோம்.

நாம் பிறந்த பின் உண்மையில் நாம் வளர்வதில்லை.

மாறாக நமது வாழ்வின் மொத்த காலமும் ஒவ்வொரு நாளாக குறைந்து கொண்டுதான் வருகிறது.

நமது முதல் பிறந்தநாளை நாம் கொண்டாடும்போது நமது மொத்த வாழ்வில் ஒரு வருடம் குறைந்துவிட்டது.

ஆகையால் நமது வயது அதிகரிக்க அதிகரிக்க வாழ்நாள் தேய்ந்து கொண்டு தான் வருகிறது.

ஆகவேதான் ஆரம்ப காலத்தில் இருந்தே இறுதி காலத்திற்காக நம்மையே தயார் படுத்தி கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் நமது இறுதி நாள் என்று என்று நமக்கு தெரியாததால்,

இறுதி நாளில் ஆண்டவரின் வருகைக்காக தயாராக இருக்க வேண்டிய நாம்,

நாம் வாழும் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்துக் கொண்டு இயேசுவின் வருகைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அவரின்றி அணுவும் அசையாது.

நமது விண் நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு அசைவிற்கும் இயேசுவின் இடைவிடாத உதவி தேவைப்படுகிறது.

இயேசு 'கேளுங்கள் கொடுக்கப்படும்' என்று சொன்னது இந்த உதவியைத்தான்.


"மனுமகன்முன் நிற்க நீங்கள் வலிமையுள்ளவர்களாய் இருக்கும்படி, எந்நேரமும் செபித்து விழிப்பாயிருங்கள்."

நமது வாழ்வின் இறுதியில் இயேசுவின் முன்பு தனித் தீர்வைக்காக நிற்பதற்கு வேண்டிய வலிமையைத் தரும்படி,

நாம் இயேசுவை நோக்கி ஒவ்வொரு வினாடியும் செபிக்க வேண்டும்.

பகலிலும், இரவிலும்,
பணியிலும், ஓய்விலும்

நமது சிந்தனை இயேசுவின் மேலேயே இருக்க வேண்டும்.

செபம் என்றாலே இறைவனோடு இணைந்திருப்பது தான்.

Prayer means union with God.

வாழ்வின் இறுதியில் இறைவனை தைரியத்தோடு சந்திக்க வரம் தரும்படி அவரிடமே வேண்ட வேண்டும்.

தைரியத்தோடு சந்திப்பது என்றால் பாவமாசின்றி, பரிசுத்தமான இருதயத்தோடு சந்திப்பது.

பாவம் செய்யாதிக்கவும், புண்ணியத்தில் வளரவும் வேண்டிய வரம் வேண்டி இறைவனை மன்றாட வேண்டும்.

இறைவன் தரும் வரத்தைப் பயன்படுத்தி நாம் செயல்பட வேண்டும்.

பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்க வேண்டும்.

இறை வரங்களின் வாய்க்கால்களாகிய தேவத்திரவிய அனுமானங்களைப் பெற வேண்டும்.

அடிக்கடி பாவ சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

பரிசுத்தமான உள்ளத்தோடு அடிக்கடி திவ்ய நற்கருணை உண்ண வேண்டும்.

அடிக்கடி திருப்பலியில் கலந்துகொண்டு இறை மகனை இறைத் தந்தைக்கு நமது பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறு வாழ்ந்தால் நமது வாழ்வின் இறுதியைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வுலக வாழ்வின் இறுதிதான் நிலை வாழ்வின் ஆரம்பம்.

இதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு வினாடியும் வாழ்வோம்.

நிலை வாழ்வு நமதே.

லூர்து செல்வம்.

Thursday, November 24, 2022

"எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்."(லூக்.21:13)

"எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்."
(லூக்.21:13)

"வணக்கம், சார்."

"வணக்கம்."

"சார், என்னை ஞாபகம் இருக்கிறதா?"

", அமல்ராஜ் தானே!"

"அமல்ராஜேதான். பெயரை ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி சார்.

என்னைப் பற்றி வேறு ஏதாவது ஞாபகத்தில் இருக்கிறதா, சார்?"

", ஏண்டா, வாத்தியாருக்கே பரீட்சையா?"

"சாரி, சார். நானே சொல்லிவிடுகிறேன்.

'உனக்கு படிப்பில் விருப்பம் இல்லை. விருப்பம் இல்லாத இடத்துக்கு வந்து உன் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்க வேண்டாம். நாளையிலிருந்து நீ பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டாம் பேசாமல் வீட்டிலிருந்து விருப்பப்பட்ட வேலையை பார்.' என்று

சொல்லிக்கொண்டே பிரம்பால் உள்ளங்கையில் ஒரு அடி அடித்தீர்களே."

",இதே வார்த்தைகளை நிறைய பேருக்கு சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரும் எனக்குக் கீழ்ப்படியவில்லை, உன்னைத் தவிர. 

வருடங்கள் பத்து ஓடிவிட்டன. இப்போது எப்படி இருக்கிறாய்?"

"உங்களுக்கு கீழ்ப்படிந்ததால் தான் நன்றாக இருக்கிறேன்.

 மறுநாளே ஒரு பெட்டிக்  கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.

இரண்டு ஆண்டுகள் சம்பளத்தை சேர்த்து வைத்து நானே ஒரு பெட்டிக்கடை ஆரம்பித்தேன்.

நல்ல வியாபாரம்.

பெட்டிக்கடையை பலசரக்குக் கடையாக மாற்றினேன்.

இப்போது 10 பேருக்கு நான் சம்பளம் கொடுக்கிறேன்.

எனது உள்ளங்கையை பார்க்கும் போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான் வரும்.

நான் வாழ்க்கையில் முன்னேற நீங்கள் கொடுத்த அடி தான் காரணம்.

நீங்கள் கொடுத்த அடி அன்று வலித்தது, இன்று இனிக்கிறது.

இன்று ஒவ்வொரு மாதமும் நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக 

எனக்கு கடை மூலம் வருமானம் வருகிறது.

 அதற்கு நீங்கள்தான்,

 நீங்கள் என் உள்ளங்கையில் கொடுத்த அடிதான் காரணம்.

உங்களை மறக்க முடியாது.

ரொம்ப நன்றி, சார்."

இது உண்மையிலேயே நடந்த சம்பவம். மாணவனின் பெயரை மட்டும் மாற்றிப் 
போட்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவது நம்மை கஷ்டப்படுத்துவதற்காக அல்ல, நமக்கு பாடம் கற்பிக்க.

என்ன பாடம்?

கஷ்டங்களை நித்திய பேரின்பமாக மாற்றலாம். 

எப்படி?

அவற்றை நமது பாவங்களுக்குப் பரிகாரமாக கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதன் மூலம்.

நமது செபங்கள் உடனடியாக கேட்கப்படாதது நமது நன்மைக்கே.

ஒரு கடைக்கு ஒரு புத்தகம் வாங்க போகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

போன உடனேயே நாம் கேட்ட புத்தகம் கிடைத்துவிட்டால்  புத்தகத்தை வாசிப்பதில் தான் ஆர்வம் இருக்குமே தவிர கடையை மறந்து விடுவோம்.

ஆனால் ஒவ்வொரு முறை போகும்போதும் இன்னும் இரண்டு நாள் ஆகும் என்று கடைக்காரர் சொன்னால்

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, பலமுறைகள் கடைக்குச் செல்வோம்.

கடைக் காரருக்கும், நமக்கும் இடையில் நட்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இறைவனை விட நாம் விரும்புவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து

 விரும்புவதை இறைவனிடம் கேட்கும் போது 

கேட்ட உடனே தராமல் தாமதித்தால் 

திரும்பத் திரும்ப இறைவனைத் தேடிச் செல்வோம்.

 இறைவனுக்கும் நமக்கும் இடையே உள்ள உறவு அதிக நெருக்கம் அடையும்.

வெகு நாள் கழித்து கேட்டது கிடைக்கும் போது இறைவனின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வோம்.

 காலப்போக்கில் பொருளை விட அதை தரும் இறைவனே முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வோம்.

நம்மை திரும்பத் திரும்ப அவரிடம் வரவைப்பதற்கே கடவுள் நாம் கேட்டதை தர காலம் தாழ்த்துகிறார்.

செபத்தின் மூலம் கேட்பதை விட செபமே முக்கியம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் 

கேட்பதை விட செபத்தின் மூலம் அவரோடு இணைந்து இருப்பதையே வாழ்வாகக் கொள்வோம்.

எப்போதும் கடவுளோடு இணைந்திருந்தால், நமக்கு வேண்டியதை அவர் நாம் கேட்காமலேயே தருவார். 

வாழ்வில் ஏற்படும் தோல்விகள் உண்மையிலேயே தோல்விகள் அல்ல.

அவை வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை வெற்றி பெற்ற பின்பு தான் உணர்வோம்.


இயேசு பிறந்த சமயத்தில் ஏரோது மன்னன்,

அவரைக் கொல்வதாக நினைத்துக் கொண்டு,

 அநேக மாசில்லாத குழந்தைகளைக் கொன்றான்.

குழந்தைகளின் பெற்றோரின் நிலையில் நின்று பார்த்தால், அவர்கள் குழந்தைகளை இழந்தார்கள்.

ஆனால் குழந்தைகளின் நிலையில் நின்று பார்த்தால்,

அவர்கள் எந்தவித உலக துன்பங்கள் இன்றி

நித்திய பேரின்பத்தை அனுபவிக்க 

விண்ணகம் சென்று விட்டார்கள்.

 உண்மையிலேயே அவர்கள் பாக்கியவான்கள்.

"இதற்கெல்லாம் முன்னதாக என் பெயரின்பொருட்டு உங்களைப் பிடித்து, செபக்கூடங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் இழுத்துச் சென்று, அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் உங்களைக் கையளித்துத் துன்புறுத்துவர்.


 எனக்கு நீங்கள் சாட்சியாயிருப்பதற்கு இவை உங்களுக்கு வாய்ப்பு அளிக்கும்."

என்று இயேசு சீடர்களைப் பார்த்து  சொல்கிறார்.

கிறிஸ்தவத்தை விரும்பாத மன்னர்கள் கிறிஸ்துவின் சீடர்களை பிடித்து துன்புறுத்துவது 

அவர்கள் இயேசுவைப் பற்றி அவருடைய எதிரிகளுக்குக் கூற வாய்ப்பளிக்கும். 

அவர்கள் இயேசுவுக்கு சாட்சிகளாக, அதாவது, வேத சாட்சிகளாக மரிப்பதற்கு 

வேத கலாபனை காலம் வாய்ப்பு அளிக்கும்.

அவர்கள் சிந்தும் இரத்தத்தில் தான் திருச்சபை வளரும்.

இன்று நாம் தாய்த்திருச்சபையில் சேர்ந்து,

மீட்புப் பெற, வாய்ப்புப் பெற்றிருக்கிறோம் என்றால்

 அதற்கு இயேசுவுக்கு சாட்சிகளாக மரித்த அவரின் சீடர்களே காரணம்.

இன்றும் கிறிஸ்துவின் விரோதிகள் நம்மைத் துன்பப்படுத்தி,

நம்மைக் கொல்லும் அளவிற்கு ஏதாவது செய்தாலும் கூட,

நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

ஏனெனில் நாம் இயேசுவின் சாட்சிகளாகவும்,

 அனேகர் மனம் திரும்பி,

 அவரிடம் வருவதற்கு காரணர்களாகவும் விளங்குவோம்.

துன்பங்கள் வரும்போது மகிழ்வோம்.

நித்திய பேரின்பத்திற்கு காரணம் அவைகள்தான்.

இயேசுவின் பாடுகள்தான் நமது மீட்புக்குக் காரணம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, November 22, 2022

"மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று"(லூக்.22:24)

"மேலும் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்ற வாக்குவாதம் அவர்களிடையே உண்டாயிற்று"
(லூக்.22:24)

இயேசுவின் இறுதி இரவு உணவு நேரம்.

கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்ட பலிப் பொருளை ஒப்புக்கொடுத்தவர்கள் உண்பது வழக்கம்.

இயேசு வெள்ளிக்கிழமை அன்று தந்தைக்குப் பலியாக ஒப்புக்கொடுக்கப்படவிருக்கும் தன்னை 

வியாழக்கிழமை அன்றே தனது சீடர்களுக்கு உணவாகக் கொடுக்கிறார்.

அப்பத்தை தனது உடலாகவும் ரசத்தை தனது இரத்தமாகவும் மாற்றி தனது சீடர்களுக்கு உணவாக கொடுக்கிறார்.

இயேசு பிறந்த பின்  செய்த முதல் புதுமை கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது.

இறக்குமுன் அவர் செய்த கடைசி புதுமை திராட்சை ரசத்தை தன் ரத்தமாக மாற்றியது.

கானாவூர் புதுமை இதற்கு ஒரு முன் அடையாளம்.

"திராட்சை இரசம் தீர்ந்துவிடவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, "இரசம் தீர்ந்துவிட்டது" என்றாள்.

அதற்கு இயேசு, "அம்மா! அதை ஏன் என்னிடம் கூறுகிறீர்? 

எனது நேரம் இன்னும் வரவில்லை" என்றார்."

இயேசு இன்னும் வரவில்லை என்று குறிப்பிட்ட நேரம் இறுதி உணவு நேரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

திருமணத்தின் போது திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது.

இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார்.

இறுதி உணவின்போது திராட்சை இரசத்தை தனது இரத்தமாக மாற்றுகிறார்.

தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதும் உணவாக கொடுப்பதற்காகத் தான்.


திராட்சை இரசத்தை தனது இரத்தமாக மாற்றியதும் உணவாக கொடுப்பதற்காகத் தான்.

கடவுளால் எல்லாம் முடியும்.

சர்வ வல்லமையுள்ள கடவுள் மனிதனாகப் பிறக்கும்போது பாவம் தவிர மனிதனிடம்  உள்ள எல்லா பலகீனங்களையும் தன்னுடையவையாக ஏற்றுக் கொண்டார்.

பாடுகள் பட்டு மரித்து மனிதனை மீட்பதற்காகவே மனிதனாய் பிறந்த சர்வ வல்லமை உள்ள கடவுள் ஏற்றுக் கொண்ட பலகீனங்களில் ஒன்று பயம்.

இது தான் மெய்யாகவே மனிதன் என்பதை நாம் அறிந்து கொள்வதற்காகத்தான்.

பயத்தின் காரணமாக இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட போராட்டம் தான் 

கெத்சேமனி தோட்டத்தில் இயேசுவின் இரத்த வேர்வையாகவும் 

தந்தையை நோக்கி சொன்ன செபமாகவும் வெளிப்பட்டது.

இந்த போராட்டத்தின் மத்தியில் அவருடைய சீடர்கள் நடந்து கொண்ட விதம்தான் நமக்கு கவலையை அளிக்கிறது.

பன்னிருவரில் ஒருவனான யூதாஸ் இயேசுவை உணவாக உட்கொண்டவுடன் அவரைக் காட்டிக் கொடுக்கப் புறப்பட்டான்.

மற்ற சீடர்கள் தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்று வாக்குவாதம் செய்யத் தொடங்கினர்.

சிறிது நேரத்திற்கு முன்புதான் அவர்களுக்கு குருப் பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.

"இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்ற வார்த்தைகள் மூலம்,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை அவரது இரத்தமாகவும் மாற்றும் வல்லமை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்ல, உணவிற்கு முன்னால் இயேசு சீடர்களின் பாதங்களை கழுவி தாழ்ச்சியைப் பற்றி அவர்களுக்கு போதித்திருந்தார்.

"ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், 

நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்.

நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்: நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்."

என்று சொல்லியிருந்தார்.

இவ்வளவையும் கேட்டபின், மூன்று ஆண்டுகள் இயேசுவிடம் பயிற்சி பெற்ற சீடர்கள் 

தங்களுள் யாரைப் பெரியவனாகக் கருதவேண்டும் என்று வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்கள்.

இயேசு பொறுமையாக, 

"உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், 

தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்.

யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? 

பந்தியில் அமர்பவன் அன்றோ?

 நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்." என்றார்.

இயேசு சீடர்களுக்கு சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

 நாம் ஒவ்வொருவரும் சமுதாயத்தில் பெரிய மனிதன் ஆவதற்கு தான் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கூடத்தில் முதல் வகுப்பில் பையனை சேர்க்கும்போதே

" நன்கு படிக்க வேண்டும், 

முதல் மதிப்பெண் பெற வேண்டும்.

பட்டங்கள் பெற வேண்டும், 

பதவிகள் பெற வேண்டும், 

மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்,

பெரிய மனிதன் என்று பெயர் எடுக்க வேண்டும்" என்றுதான் சொல்கிறோம்.

ஒரு அலுவலகத்தில் வேலைக்கு சேரும்போது பதவி உயர்வு பெற்று நிர்வாகியாக மாற வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம்.

MLA ஆன உடனே முதல்வர் பதவிக்கு முயற்சி செய்கிறோம்.

நமது திருச்சபையில் கூட பங்குச்சாமியாருக்கு ஆயர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கும்.

பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையை பார்த்தவுடன் சிறியவர்களுக்கும் பெரியவர்கள் ஆக ஆசை பிறக்கும்.

நம்மைப் பார்த்து ஆண்டவர் சொல்கிறார், 

"நான் என்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவியது போல நீங்கள்   மற்றவர்களுக்கு சேவை செய்யுங்கள்.

நான் விண்ணையும் மண்ணையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கடவுள்.

காலங்களை கடந்து நித்தியத்தில் வாழ்பவர்.

நான் ஏன் மண்ணுலகில் மனிதராக பிறந்து,

எனது சீடர்களின் பாதங்களைக் கழுவும் அளவுக்கு என்னையே தாழ்த்தி,

மனிதர்களாகிய உங்களுக்கு பணி புரிகிறேன்?

நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தானே!

நான் உங்களை அன்பு செயவது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்தால்,

ஏற்றத்தாழ்வு பார்க்காமல் ஒருவர்க்கு ஒருவர் பணிபுரிவீர்கள்.

சமூக அந்தஸ்தைப் பார்க்காதீர்கள்.

உங்களது அன்பை மட்டும் பாருங்கள்.

எல்லோருக்கும் பணி புரியுங்கள்.

உங்களது அன்பும், பணிவும், பணியும் மட்டும்தான் உங்களை எனது அன்பிற்கு இனிய சீடர்களாக மாற்றும்.

பணி புரிவது உங்களது வாழ்வாக இருக்கட்டும்."

பெரியவர், சிறியவர் என்று பார்க்காமல்,

 ஒருவருக்கு ஒருவர் பணிபுரிந்து இயேசுவின் சீடர்களாக வாழ்வோம்.

இயேசு மட்டுமே நம்மை விட பெரியவர்.

நாம் எல்லோருமே சிறியவர்கள் தான்.

இதைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Monday, November 21, 2022

"நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்."(லூக்.21:19)

"நிலைத்துநின்றால், உங்கள் ஆன்மாக்களை மீடடுக்கொள்வீர்கள்."
(லூக்.21:19)

"நான் டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டுதான் எனது அப்பா என்னை படிக்க வைத்தார்."

"அப்படியா? பிறகு ஏன் ஆகவில்லை?"

"மெடிக்கல் காலேஜ்ல சேர முடியல."

"ஏன் சேர முடியல?"

"அப்ளிகேஷன் போட்டாத்தான் சேப்பாங்களாம். நான் அப்ளிகேஷன் போடல."

"ஏன்?"

"ஒண்ணாங் க்ளாஸ் கூட பாஸ் பண்ணாதவங்க அப்ளிகேஷன் போட முடியாதுன்னு சொல்லிட்டாங்க."

"என்னது? 
ஒண்ணாங் க்ளாஸ் கூட பாஸ் பண்ணலியா?"

"எங்க அப்பா என்னை ஒண்ணாங் க்ளாஸ்ல சேர்த்து விட்டாரு.

அன்றைக்கு பள்ளிக்கூடம் 
போனவன்தான். பிறகு போகவில்லை."

" நீங்கள் மெடிக்கல் காலேஜ்ல சேர முடியலன்னு சொல்றீங்க!"

"உண்மையைத்தானே சொன்னேன்.

ஆரம்பித்தேன், நிலைத்திருக்கவில்லை.

ஆரம்பித்ததை செய்து முடித்தால்தானே வெற்றி வரும்.

சரி, அது இருக்கட்டும். உங்கள் திருமணம் கோவிலில் தானே நடந்தது. அதற்குப் பின் நீங்கள் ஏன் கோவிலுக்கு வரவில்லை?"

"நான் பிறந்தது கிறிஸ்தவம் அல்லாத குடும்பத்தில்.

ஆனால் ஒரு கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்தேன்.

நான் ஞானஸ்நானம் பெற்றால் தான் அவளை திருமணம் முடிக்க முடியும் என்று சொன்னார்கள்.

அதற்காக ஞானோபதேசம் படித்து, ஞானஸ்நானம் பெற்றேன். 

காதலித்த பெண்ணைக் கல்யாணம் முடித்தேன்.

அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பெண்ணுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.

கிடைத்த பின் வரவில்லை.

இனி எங்களை யாராலும் பிரிக்க முடியாது."

"ஞானஸ்நானம் பெற்றால் கிறிஸ்தவனாக வாழ வேண்டும்.

ஆரம்பித்த வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்."

"இல்லாவிட்டால்?"

"உங்கள் ஆன்மாவை இழக்க நேரிடும்."

"அப்படீன்னா?"

"உங்களால் மீட்பு அடைய முடியாது."

"அப்படீன்னா?"

"விசுவசித்து ஞானஸ்நானம் பெற வேண்டும். 

பெற்ற பின் வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ வேண்டும். 

 வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ்ந்தால் தான்

 இறந்தபின் நமது ஆன்மா நித்திய பேரின்ப வாழ்வுக்குள் நுழைய முடியும்.

 இதற்குப் பெயர்தான் மீட்பு. 

மீட்பு அடையாவிட்டால் ஆன்மா நித்திய பேரிடர் நிலையை அடையும்.

ஞானஸ்நானம் பெறு முன்பே சொல்லி இருப்பார்களே."

"சொன்னார்கள். நான் அதையெல்லாம் கவனிக்கவில்லை.

நீங்கள் ஒண்ணாங் கிளாஸ் கூட பாஸ் பண்ண வில்லையே.

எழுத வாசிக்க தெரியாதே. 

பைபிள் வாசிக்க முடியாதே.

பைபிள் வாசிக்க முடியாத உங்களால் எப்படி வாழ்நாள் முழுவதும் விசுவாச வாழ்வு வாழ முடியும்."

"பைபிள் வாசிக்க முடிவதற்கும்,
விசுவாச வாழ்வு வாழ்வதற்கும் சம்பந்தமே இல்லை.

இயேசுவால் நிறுவப்பட்ட தாய்த் திருச்சபையின் சொல் கேட்டு,

அதன் படி வாழ்வதுதான் விசுவாசம் வாழ்வு,
 
வாழும்போது சோதனைகள் பல வரலாம்.

அவற்றை வென்று விசுவாச வாழ்வில் நிலைத்திருக்க வேண்டும்."

"விசுவாச வாழ்வுன்னு சொல்லுகிறீர்களே. அப்படி என்றால் என்ன?"

"நீங்கள் கேட்பது திருமணம் முடித்த பின் கல்யாணம் என்றால் என்ன என்று கேட்பது போல் இருக்கிறது.

ஞானஸ்தானம் பெறுவதற்கு முன்பே உங்களுக்கு விசுவாசத்தை பற்றி கூறியிருப்பார்கள்.

நீங்கள் பெண் மேலே குறியாக இருந்ததால் அதை கவனித்திற்க மாட்டீர்கள்.

நான் சுருக்கமாக சொல்லி விடுகிறேன்.

இயேசுவையும்,
 அவரது நற்செய்தியையும் ஏற்றுக்கொண்டு,

கத்தோலிக்க திருச்சபையில் சேர்ந்து,

இயேசுவின் போதனைப்படி வாழ்வதுதான் விசுவாச வாழ்வு.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும்,

நம்மை நாம் நேசிப்பது போல இறைவனால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிக்க வேண்டும்

இதுதான் இயேசு போதித்த நற்செய்தியின் ரத்தின சுருக்கம்.

பைபிள் வாசிக்க தெரியாதவர்களுக்கு பங்கு சுவாமியார்தான் பைபிள்.

ஒவ்வொரு திருப்பலியின் போதும் அவர் வைக்கிற பிரசங்கத்தை ஒழுங்காக கேட்டாலே போதும் பைபிளை வாசித்தது போல் தான்.

பைபிளை வாசிக்க தெரிந்தவர்களுக்கும் அதன் பொருளை புரிய வைப்பது குருக்கள் தான்.

இயேசுவின் போதனைப்படி இறையன்பிலும், பிறர் அன்பிலும் நிலைத்திருப்பது தான் விசுவாச வாழ்வில் நிலைத்திருப்பது.

நமது அன்பு சொல்லிலும் செயலிலும், வெளிப்பட வேண்டும்.

இயேசுவின் பெயரால் நாம் செய்யும் நற்செயல்கள்தான் நாம்  விசுவாச வாழ்வு வாழ்கிறோம் என்பதற்கான வெளி அடையாளம்."

"வாழ்வதை ஏன் நிலைத்திருப்பது என்று கூறுகிறீர்கள்?"

''விசுவாச வாழ்வு வாழும் போது வெளியிலிருந்து இடையூறுகள் நிறைய வரும்.

கிறிஸ்தவத்தையே அழிக்க ஆசைப்படும் அனேக மக்கள் நம்மை சுற்றி வாழ்கின்றனர்.

அவர்கள் நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காகவே நம்மை வெறுப்பார்கள்.

கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியாதபடி இடையூறுகள் செய்து கொண்டிருப்பார்கள்.

அவற்றின் மத்தியிலும் நமது விசுவாசத்தை இழக்காமல் வாழ்வதுதான் கிறிஸ்தவத்தில் நிலைத்து நிற்பது.

நிலைத்து நிற்பவர்கள் தான் மீட்பு பெறுவார்கள்."

"நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவேயில்லையே."

"உங்கள் மனைவி?"

"அவள் கிறிஸ்தவ வாழ்வு வாழ்வதில் நான் குறுக்கிடவில்லை.

அவள் ஒழுங்காக கோவிலுக்குப் போகிறாள், செபம் சொல்கிறாள், மற்றவர்களுக்கு உதவி செய்கிறாள்.

நான் எதையும் தடுப்பதில்லை.''

"இனி உங்களது மனைவியுடன் கிறிஸ்தவ வாழ்வை வாழ ஆரம்பியுங்கள்.

பின்பு அதில் நிலைத்து நில்லுங்கள்."

"பேச்சோடு பேச்சாக உங்களது விசுவாச ஆர்வத்தை என்னில் ஊட்டியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

அடுத்து உங்களை சந்திக்கும் போது நல்ல கிறிஸ்தவனாகச் சந்திப்பேன்."

"ஆசைப்படும்போதே ஆரம்பித்து விட்டீர்கள். நிலைத்திருங்கள். 
உறுதியாக மீட்பு அடைவீர்கள்."

லூர்து செல்வம்.

Sunday, November 20, 2022

"வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.(மத்.12:50)

''வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ அவனே என் சகோதரனும் சகோதரியும் தாயும் ஆவான்" என்றார்.
(மத்.12:50)

இயேசு தனது தந்தையைப் பற்றி பேசும் போதெல்லாம் நாம் ஒரு இறை இயல் உண்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தையும், மகனும், பரிசுத்த ஆவியும் ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே வல்லமை, ஒரே ஞானம், ஒரே சித்தம்.

ஆகவே தந்தையின் சித்தம் தான் மகனின் சித்தமும்.

ஆகவே,

"தந்தையின் விருப்பப்படி" என்று சொல்வதை அவர் "எனது விருப்பப்படி" என்று சொன்னாலும் சரியே.

ஆனாலும் "வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ," என்று சொல்கிறார்.

பூங்காவனத்தில் அவர் இரத்த வியர்வை வியர்த்தபோதும்,

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்"

என்றுதான் சொன்னார்.

தந்தையின் விருப்பமும், அவரது விருப்பமும் ஒரே விருப்பமாக இருந்தாலும்

ஏன் "உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்றார்?

நமக்காக மனுவுரு எடுத்த இயேசுவின் ஒவ்வொரு சொல்லும், செயலும், ஒவ்வொரு அசைவும் கூட நமக்கு ஒரு முன்மாதிரியாகவே இருக்கும்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் நம் இயேசு.

நம்மைப் படைத்த கடவுள் நாம் அனுசரிக்க நமக்கு கட்டளைகளைத் தந்திருக்கிறார் என்பதன் பொருள் என்ன?

அவரது விருப்பம் தான் கட்டளை வடிவில் நமக்கு தரப்பட்டிருக்கிறது.

நாம் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனை நேசிக்க வேண்டும்,

 நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்

 என்பது நம்மை படைத்த இறைவனின் விருப்பம்.

இறைவனின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக்கொண்டு  அதை நிறைவேற்ற வேண்டும்.

நாம் கிறிஸ்துவை அறியாதிருந்தபோது நமக்கு நற்செய்தி போதிக்கப்படுகிறது.

நாம் ஞானஸ்நானம் பெற விரும்புகிறோம்.

ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவன் ஆகிறோம்.

நல்ல கிறிஸ்தவனாக வாழ விரும்புகிறோம்.

இங்கு விரும்புகிறோம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோம்.

ஆனால் உண்மையில் விரும்புவது நாம் அல்ல, நம்மை படைத்த இறைவன்,

இறைவன்தான் நாம் மனம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறார், 

அந்த விருப்பத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

 பாவம் மட்டும்தான் 

நமது விருப்பத்தால் 

இறைவனது விருப்பத்திற்கு எதிராக செய்யப்படுகிறது.

பாவம் தவிர மற்ற எல்லா செயல்களும் இறைவனது விருப்பப்படிதான், திட்டப்படிதான் நடக்கின்றன.

" நீ ஏன் கிறிஸ்தவனாக மாறினாய்?" என்று யாராவது கேட்டால் நாம் சொல்ல வேண்டிய பதில் 

"அது என்னை படைத்தவரின் விருப்பம்."

"நீ ஏன் குருமடத்திற்குப் போனாய்?" 

"அது கடவுளின் விருப்பம். அதை நிறைவேற்றினேன்."

"நீ ஏன் ஏழைகளுக்கு உதவி செய்கிறாய்?"

"அது கடவுளின் விருப்பம்."

நமது வாழ்வில் எத்தனை நல்ல காரியங்கள் நாம் செய்தாலும் அவையெல்லாம் கடவுளின் விருப்பப்படி தான் செய்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

"நான் விரும்பினேன், செய்தேன்."
என்று சொல்வது தற்பெருமைக்கு ஆரம்ப நிலை.

இறையியல் படி தந்தைக்கும் மகனுக்கும் ஒரே சித்தம் தான், ஒரே விருப்பம் தான்.

இருந்தாலும் அவர் தந்தையை நோக்கி,

"என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்கிறார்.

ஆனால் நமக்கும் இறைவனுக்கும் ஒரே விருப்பம் அல்ல.

 இறைவனின் விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்றுக் கொள்கிறோம், அவ்வளவுதான்.


 நாம் செயல்படுவது நமது விருப்பத்தினால் அல்ல, நம்மை படைத்தவனின் விருப்பத்தினால்.

 ஆனால் அநேக சமயங்களில் நாம் தான் எல்லாவற்றையும் சாதித்ததாக பெருமைபட பேசிக் கொள்கிறோம்.

 அப்படி பேசக்கூடாது.

 எல்லாம் இறைவன் செயல் என்ற மனநிலையில் நாம் செயல்பட வேண்டும் என்று நமக்கு போதிப்பதற்காகவே,  

தந்தைக்கும் மகனுக்கும் ஒரே விருப்பமாக இருந்தாலும் கூட

 மகன் "தந்தையே உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று சொல்கிறார்.


"என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவன் எவனோ,"

என்பதற்கு,

"கடவுளின் விருப்பப்படி வாழ்கிறவன் எவனோ"

என்பதுதான் பொருள்.

அப்படி வாழ்பவன்தான் இயேசுவின் தாயும், சகோதரனுமாக இருக்க முடியும்.

அன்னை மரியாள் திருமணம் ஆவதற்கு முன்பே கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

அவளது கன்னிமைக்கு பாதுகாவலாகத்தான் 

 மனைவியை இழந்த, வயதான சூசையப்பரை,

அவளை வளர்த்த பெரிய குரு

அவளுக்குத் திருமணம் செய்து வைத்திருந்தார்.

கதிரியேல் தூதர் மரியாளுக்கு மங்கள வார்த்தை சொன்னபோது மரியாள்,

 "இது எங்ஙனம் ஆகும்? நானோ கணவனை அறியேனே"

என்று தனது கன்னிமை வார்த்தைப் பாட்டை வான தூதருக்கு நினைவு படுத்தினாள்.

ஆனால் அவள் வயிற்றில் பிறக்கப் போவது "கடவுளுடைய மகன்" 
என்பதை அறிந்த உடனே,

 "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்" 
என்று கூறினாள்.

கடவுளுக்குத் தானே வார்த்தைப்பாடு கொடுத்திருந்தாள்.

ஆகவே அவரால் தன்னுடைய கன்னிமைக்கு பழுது வராது என்பது அவளுக்கு தெரியும்.

இறைவன் விருப்பப்படி நடக்க அவள் ஏற்றுக் கொண்டதால்தான் அவள் இறைவனின் தாயானாள்.

யாரெல்லாம் தந்தையின் விருப்பப்படி வாழ்கின்றார்களோ அவர்கள் எல்லாம் இயேசுவின் தாயைப் போன்றவர்கள்.

அன்னை மரியாளின் உண்மையான பக்தர்கள் எல்லாம் அன்னை மரியாளைப் போன்றவர்களே.

தாயைப் போல் தானே பிள்ளை.

"உண்மையான பக்தர்கள்." என்றேன்.

அம்மாவை போல வாழ்வதற்காக அவள் மீது பக்தி வைத்திருப்பவர்கள் உண்மையான பக்தர்கள்.

கேட்டது கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் பக்தி வைத்திருப்பவர்கள் பக்தர்கள் தான், 

ஆனால் எதற்காக பக்தி வைக்க வேண்டுமோ அது அவர்களிடம் இல்லை, ஆகவே உண்மையான பக்தி இல்லை.

மரியாளைப் பிடிக்காத சில பிரிவினை சகோதரர்கள் மரியாள் பக்திக்கு எதிராக இந்த வசனத்தை பயன்படுத்துகிறார்கள்.

மாறாக இது மரியாளுக்கு பெருமை சேர்க்கும் வசனம்.

தன் அன்னை தந்தையின் 
சித்தப்படி வாழ்கின்றாள் என்பதை இயேசு இந்த வசனத்தால் உறுதி செய்கிறார்.


"என் தாய் வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடக்கிறவள்."

என்ற உண்மை இந்த வசனத்துக்குள் இருக்கிறது.

இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்,

நமது வாழ்வின் போது நாம் நல்ல காரியங்களை செய்யும்போது,

"நான் செய்தேன்." என்று பெருமை பட பேசக்கூடாது.

நல்ல காரியங்களை செய்ய கடவுள் நம்மைக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒருவர் தேர்வு எழுதும் போது பேனாவா எழுதுகிறது?

பேனா எழுதுபவரின் கருவி.

எழுதுபவர் பேனாவை பைக்குள் வைத்து விட்டால் பேனாவால் எழுத முடியுமா?

இறைவன் முன் நமது நிலையும் அதுதான்.

இதை ஏற்றுக் கொள்வது தான் தாழ்ச்சி, புண்ணியங்களின் அரசி.

"நான் தான் செய்தேன்" என்று சொல்வது தற்பெருமை.

தற்பெருமை தலையான பாவங்களின் தலையான பாவம்,
லூசிபெரை சாத்தானாக மாற்றிய பாவம்.

நாம் தாழ்ச்சியுடன்

இறைவன் விருப்பப்படி வாழ்வோம்.

"எல்லாம் இறைவன் செயல்" எனக்கூறி புகழை எல்லாம் இறைவனுக்குக் கொடுப்போம்.

இயேசுவின் தாயாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, November 19, 2022

நான் யாருக்கு அடிமை?

நான் யாருக்கு அடிமை?   

நமது அன்னை மரியாள் சொன்னாள்,

" இதோ ஆண்டவருடைய அடிமை."

நமது அன்னை ஆண்டவருடைய அடிமையாக இருந்தால் நாம் யார்?

தாயைப் போல் பிள்ளை இருக்க வேண்டும், 

இல்லாவிட்டால் அவளை தாய் என்று அழைக்க நமக்கு அருகதை இல்லாமல் போய்விடும்.

உண்மையில் மனிதர்கள் அனைவரும் அடிமைகள் தான், முதலாளிகள் அல்ல.

ஒன்றுமில்லாமல் அம்மணமாக பிறந்த நம்மிடம் என்ன முதல் இருக்க முடியும்?

எல்லோரும் அடிமைகள் தான், ஆனால் யாருக்கு என்பதுதான் கேள்வி.

அருள் நிறைந்த மரியாள் ஆண்டவருக்கு அடிமை,

அருளின் வாசமே இல்லாதவர்கள் உலகத்திற்கு அடிமைகள்.

அருளின் வாசமே இல்லாதவர்கள் பொருள் மட்டும் உள்ளவர்கள்.

உடல் நலத்திற்காக உண்பவனுக்கும்,

ருசிக்காக மட்டும் உண்பவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

உடல் நலத்திற்காக உண்பவன் நலமாக வாழ்வான்.

ருசிக்காக மட்டும் உண்பவன் நோய்களின் இருப்பிடமாக வாழ்வான்.

அருள் மட்டும் உள்ளவன் அவனைப் படைத்த ஆண்டவரோடு வாழ்கிறான்.

பொருள் மட்டும் உள்ளவன் 
பாவங்களின் இருப்பிடமாக வாழ்கிறான்.

அப்படியானால் அருள் மட்டும் உள்ளவரிடம் பொருள் இருக்கக் கூடாதா?

இருக்கலாம். பொருளும் அருளுக்காக இருக்கலாம்.

பொருளை பொருளுக்காக மட்டும் வைத்திருப்பவன் தான் பாவங்களின் இருப்பிடம்.

இவ்வுலக பொருள்களைக் கொண்டு நாம் விண்ணகத்தில் நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளலாம்.

நம்மிடம் உள்ள பொருளை பிறர் அன்பு பணிக்காக பயன்படுத்தினால்,

அதனால் பயன்பெற்ற அனைவரும் நமது  விண்ணக நண்பர்களே.

பிறர் அன்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட பொருள் நமக்கு விண்ணக நிலையான பேரின்பத்தையும் பெற்று தருகிறது.

ஆகவே பொருளை அருளாக மாற்றலாம், நமக்கு அன்பு இருந்தால்.

அருளை ஈட்டுவது புண்ணியம்.

பொருளை ஈட்டுவது பாவமா?

அருளைப் பற்றி கவலைப்படாமல் பொருளை ஈட்டுபவன் பாவகரமான வழிகளில் செல்வான்.

லஞ்சம் வாங்குபவன், கொள்ளையடிப்பவன், திருடுபவன், ஏமாற்றுபவன் ஆகியோர் பொருளை ஈட்டுவதில் பாவம் செய்பவர்கள்.

அருளின் ஊற்றாகிய ஆண்டவரின் அடிமை அவரை நேசிப்பதோடு அவரால் படைக்கப்பட்ட அனைவரையும் நேசிப்பான்.

அவனது வாழ்க்கையே இறைப் பணியும், பிறர் பணியும்தான்.

பணிவோடு வாழ்வான்,
பணிக்காக வாழ்வான்.

பணிவோடு, பணிக்காக வாழ்பவன் அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பான்,

அரசன் சிம்மாசனத்தில் வீற்றிருப்பது போல.

ஆண்டவரின் அடிமையின் சேவைக்காக அனைவரும் காத்திருப்பர்.

தன்னைத் தானே தாழ்த்துகிறவன் மற்ற அனைவரின் உள்ளத்தில் உயரத்தில் வீற்றிருப்பான்.

தன்னை தானே தாழ்த்திய அன்னை மரியாள் இன்று மண்ணக , விண்ணக அரசியாகத் திகழ்கின்றாள். 


நிறைவான பொருளுக்கு உரிமையாளர் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் உண்மையில் பொருளுக்கு அடிமை.

பொருள் எப்போதும் அவனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

அவனால் பொருளை விட்டு வெளியே வர முடியாது.

பொருள் மீது பற்றுள்ளவன் அதை யாருக்கும் ஈய மாட்டான்.

ஆகவே அவனுக்கு யாருடைய உள்ளத்திலும் உயரிய இடம் இருக்காது.

பொருளை ஈட்டும் ஒரே நோக்கோடு உயர்ந்த பதவியிலும், அதிகாரத்திலும் இருப்பவர்கள்

 மற்றவர்களது மனதில் அடிவாரத்தில் தான் இருப்பார்கள்.

உண்மையான சேவையாளர்களுக்கு கிடைக்கிற மரியாதை,

 சேவையை தான் பொருள் ஈட்டவே பயன்படுத்துபவர்களுக்கு கிடையாது.

ஆண்டிக்கு கிடைக்கும் சுதந்திரம் ஆள்பவர்களுக்கு கிடைக்காது.

ஆள்பவர்கள் பின்னால் செல்லும் கூட்டம் தங்களுக்காகவே செல்லும்.

வாழ்க என்று சொல்பவர்கள் கூட சம்பளம் வாங்கிக்கொண்டுதான் சொல்வார்கள்.

பொருளையே நம்பி வாழ்கின்றவர்கள் அருளைத் தேட மாட்டார்கள்.

ஆகவே அவர்களுக்கு ஆண்டவரிடம் இடமில்லை.    

இறுதி நேரத்தில் இவர்கள் ஈட்டிய பொருளும் உடன் வராது,

ஆட்சி போய் விட்டால் ஆண்டி கூட மதிக்க மாட்டான்.

இவ்வுலகில் அன்னை மரியாளைப் போல ஆண்டவருக்கு மட்டும் அடிமைகளாக வாழ்வோம்.

விண்ணகத்தில் பரலோக பூலோக 
அரசியின் பிள்ளைகளாக வாழ வரம் பெறுவோம்.

லூர்து செல்வம்.

Friday, November 18, 2022

தாயும், பிள்ளையும்.

        தாயும், பிள்ளையும்.

உலகில் உள்ள சடப் பொருட்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

சடப் பொருட்கள் நாம் பயன்படுத்துவதற்காக இறைவனால் தரப்பட்டவை.

உறவுகள் அன்பு செய்வதற்காகவும் ஆதரவாக இருப்பதற்காகவும் அதே இறைவனால் தரப்பட்டவை.

உறவுகளோடு வாழ்வதுதான் வாழ்க்கை.

நாம் அனைவரும் விண்ணக தந்தையின் பிள்ளைகள்.

இறை மகன் இயேசு நமது அன்பு சகோதரர்.

நமது மேலுள்ள அன்பின் காரணமாக மனிதனாக பிறந்து,

நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டு,

 சிலுவையில் மரித்து, 

மூன்றாம் நாள் உயிர்த்து

விண்ணகம் எய்து முன்,

ஆன்மீக ரீதியாக நம்மை பராமரிப்பதற்காக அன்பு நிறைந்த ஒரு தாயைத் தந்தார்.

ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்க திருச்சபை தான் இயேசு நமக்கு தந்த அன்புத் தாய்.

கத்தோலிக்க திருச்சபைக்கும், நமக்கும் இடையிலான உறவு தாய்க்கும் பிள்ளைக்கும் உள்ள உறவு.

தாயும் பிள்ளையும் ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதில்லை.

ஒருவரை ஒருவர் அன்பு செய்கிறோம்.

அன்புதான், அன்பு மட்டும்தான், நமது வாழ்க்கை.

நாம் நமது தாயையும், சகோதர, சகோதரிகளையும், 

நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் அன்பு செய்கிறோம்.

தாய்க்குக் கீழ்ப்படிந்து,

 சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்து வாழ்கிறோம்.

அதுதான், அது மட்டும் தான், நமது வாழ்க்கை.

தாய்த் திருச்சபையை நேசிக்கும் போது நாம் இயேசுவை நேசிக்கிறோம்,

தாய்த் திருச்சபைக்குக் கீழ்படியும்போது இயேசுவுக்குக் கீழ்படிகிறோம்.

நம்மை இரட்சிப்பதற்காக மனிதனாக பிறந்த இயேசு தாய்த் திருச்சபையின் மூலமாகவே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.

தாய்த் திருச்சபைக்கும் நமக்கும் உள்ள உறவு ஆன்மீக ரீதியானது.

தாயின் முதல் கடமை பிள்ளைக்கு உணவு ஊட்டி வளர்ப்பது.

அடுத்த கடமை அறிவூட்டி வளர்ப்பது.

அடுத்த கடமை வாழ்க்கைக்கு வழிகாட்டுவது.

 தாய்த் திருச்சபை நமது ஆன்மாவிற்கு இறையருளை ஊட்டி வளர்க்கிறாள்.

இயேசு அவளிடம் ஒப்படைத்துள்ள ஏழு தேவத் திரவிய அனுமானங்கள் மூலம் இறையருளை நமக்கு ஊட்டுகிறாள்.

ஞானஸ்நானத்தின் மூலம் அவள் ஊட்டும் இறையருள் மூலம் சென்மப் பாவத்தை மன்னித்து நம்மை பரிசுத்தமாக்குகிறாள்.

பச்சாத்தாபத்தின் மூலம் அவள் ஊட்டும் இறையருள் மூலம் நமது கர்மப் பாவங்களை மன்னித்து நம்மை பரிசுத்தமாக்குகிறாள்.

உறுதிப்பூசுதல் மூலம் அவள் ஊட்டும் இறையருள் மூலம் நம்மை ஆன்மீகத்தில் உறுதிப்படுத்துகிறாள்.

திவ்ய நற்கருணை மூலம் நம்மை இரட்சித்த நமது ஆண்டவரையே நமது ஆன்மீக உணவாக தருகின்றாள். இறைமகன் இயேசு நமக்குள் உணவாக வரும்போது விண்ணகத்தில் அவரோடு வாழும்போது அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தை முன் ருசி பார்க்கிறோம்.

குருத்துவத்தின் மூலம் நமது பாவங்களை மன்னிக்கவல்ல,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை அவருடைய இரத்தமாகவும் மாற்ற வல்ல,

நமது ஆன்மீக வழிகாட்டிகளான குருக்களை நமக்குத் தருகிறாள். 

மெய்விவாகத்தின் மூலம் நமது திருமண உறவை அர்ச்சிக்கிறாள்.

அவஸ்தைப்பூசுதல் மூலம் விண்ணகத்திற்குள் நுழைய தயாரிக்கிறாள்.

இறை அருள் இயேசுவாகிய ஊற்றிலிருந்து தேவத் திரவிய அனுமானங்கள் மூலமே நமது ஆன்மாவிற்குள் பாய்கிறது.

இறையருளாகிய உணவு ஊட்டி நமது ஆன்மாவை வளர்ப்பது போலவே,

இறைஞானமாகிய அறிவையும் ஊட்டி வளர்ப்பவள் நமது தாய்த் திருச்சபை.

நமக்கு இறைவனின் ஞானத்தை தருவது அவருடைய வார்த்தையே.

இறைவாக்கு அடங்கியுள்ள 46 பழைய ஏற்பாட்டு நூல்களையும்,

27 புதிய ஏற்பாட்டு நூல்களையும் தொகுத்து 

மொத்தம் 73 நூல்கள் அடங்கிய பைபிளாக மக்களுக்கு தந்தது கத்தோலிக்க திருச்சபை தான்.

பைபிளை மக்களுக்கு தந்த கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டும் தான் அதற்கு பொருள் கூறும் அதிகாரம் உண்டு.

"இந்நூலில் எழுதப்பெறாத வேறு பல அருங்குறிகளையும் இயேசு தம் சீடர்கள் கண்முன் செய்தார்."

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

இவை நற்செய்தியாளர் அருளப்பரின் வார்த்தைகள்.

இயேசு கூறிய, செய்த அனைத்தும் நற்செய்தி நூல்களில் எழுதப்படவில்லை.

எழுதப்படாத உண்மைகள் கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியம் மூலம் நமக்கு வந்திருக்கின்றன.

இயேசுவைப் பற்றிய முழுமையான அறிவை பெற வேண்டும் என்றால் 

புதிய ஏற்பாட்டு நூல்களையும்,

 கத்தோலிக்க திருச்சபையின் பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் இயேசுவை முழுமையாக அறிய முடியாது.

நமது தாய்த் திருச்சபை இயேசுவைப் பற்றிய முழுமையாக ஞானத்தை தந்து,

அந்த ஞானத்தில் நம்மை வழி நடத்துகிறாள்.

நமது ஆண்டவர் நமது தாய்த் திருச்சபையின் மூலமாகத்தான் நம்மோடு பேசுகிறார்.

நமது திருச்சபையின் சொற்படி நடப்பவர்கள் இயேசுவின் சொற்படி நடக்கிறார்கள் என்பதை உணர்ந்து

நமது தாய் காட்டும் வழியில் நடப்போம்.

கத்தோலிக்க திருச்சபையின் 
பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோர் காட்டும் விண்ணக வழி தான் இயேசு காட்டும் வழி.

மொத்தமாக மட்டுமின்றி ஒவ்வொரு தனி நபரையும் வழி நடத்துவதற்காக தான் திருச்சபை பங்கு குருக்களை நியமித்திருக்கிறாள்.

அவர்கள் தான் இயேசுவின் பெயரால் நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

இயேசுவையே நமக்கு உணவாகத் தருகிறார்கள். 

நம்மை விண்ணக பாதையில் வழிநடத்திச் செல்லுகிறார்கள்.

கத்தோலிக்க திருச்சபையின் பிள்ளைகளாகிய நாம்

 தாய் காட்டும் வழியில் நடந்து 

விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, November 16, 2022

கேளுங்கள், கொடுக்கப்படும்.(தொடர்ச்சி)

கேளுங்கள், கொடுக்கப்படும்.
(தொடர்ச்சி)

"தாத்தா,  கடவுள் முதலில் உலகத்தை படைத்து அதன் பின் மனிதனை படைத்தது உலகப் பொருள்களை அவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தானே."

",கரெக்ட். நீ சொல்வது சரிதான். 

பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான்.

எதற்காகப் பயன்படுத்த என்பதுதான் கேள்வி.

ஆன்மாவும் உடலும் சேர்ந்ததே மனிதன்.

ஆன்மா விண்ணுலக வாழ்வுக்காகப் படைக்கப்பட்டது. அதற்கு உதவி செய்வதற்காகவே உடல் படைக்கப்பட்டது.

மண்ணுலகும் அதிலிருந்து எடுக்கப்பட்ட உடலும்

 ஆன்மா  விண்ணுலகை  நோக்கி பயணம் செய்ய  உதவ வேண்டும்.

ஆனால் மனிதன் செய்த பாவத்தினால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

அதாவது நமது உடல் நமது ஆன்மாவை இவ்வுலக வாழ்வுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் உடல் ஆன்மாவுக்கு உதவ வேண்டும்.

இவ்வுலகப் பொருட்கள் ஆன்மீக வாழ்வுக்கு உதவ வேண்டும்.

பாவத்தினால் பாதிக்கப்பட்ட நமது இயல்பு உலகப் பொருள்களை உலக வாழ்வுக்காகவே பயன்படுத்த விரும்புகிறது.

அதை திருத்துவதற்காக தான் நமது ஆண்டவர் ஆன்மா உலகப் பொருட்களின் மீது பற்று வைக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

உலகத்தின் மீது பற்று இல்லாத மனது எளிய மனது எனப் படுகிறது.

 ஆகவேதான் ஆண்டவர் 'எளிய மனதோர் பேறு பெற்றோர்' என்கிறார்.

(Blessed are the poor in spirit)

உலகத்தின் மீது பற்று இருந்தால் விண்ணக வாழ்வின் மீது பற்று இருக்காது.

உலகத்தின் மீது பற்று உள்ளவர்கள் உலகப் பொருள்களை உலக வாழ்வுக்காகவே பயன்படுத்துவார்கள்.

விண்ணகத்தின் மீது பற்று உள்ளவர்கள் உலகப் பொருள்களை விண்ணக வாழ்வுக்காக பயன்படுத்துவார்கள்.

மாணவர்கள் நோட்டு புத்தகம் வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட பணத்தை பண்டம் வாங்கி தின்பதற்காக பயன்படுத்தலாமா?

விண்ணுலக பேரின்ப வாழ்வுக்கு நம்மைத் தயாரிப்பதற்காக  கொடுக்கப்பட்ட உலகப் பொருட்களை இவ்வுலக சிற்றின்ப  வாழ்வுக்காகப் பயன்படுத்தலாமா?"


"புரிகிறது. அதனால் தான் ஆண்டவர்

"கடவுளுக்கும் செல்வத்திற்கும் நீங்கள் ஊழியம் செய்யமுடியாது." 
என்கிறார்."

",அதுமட்டுமல்ல.

ஆதலால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.

 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர்.

 உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.

ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்:

 இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்."

என்றும் ஆண்டவர் சொல்கிறார்.

விண்ணக வாழ்வை தேடுபவர்களுக்கு அதற்கு உதவியான உலகப் பொருட்கள் கேட்காமலேயே கொடுக்கப்படும்."

"சோறு கேட்பவர்களுக்கு சாம்பார் கேட்காமலேயே கொடுக்கப்படுவது போல!" 

",கரெக்ட். நாம் ஆன்மீக காரியங்களில் மட்டும் அக்கறை காட்ட வேண்டும்.  

 வாழும் நாளே வாழ்வின் இறுதி நாள் என்று எண்ணி ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள் 

விட்டு விட்டு போகவேண்டிய இவ்வுலக வாழ்வைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

இன்றே விண்ணகம்  சென்று விடுவோம் என்று எண்ணுபவர்கள் அந்த மகிழ்ச்சியில் வாழ்வார்களே தவிர மறுநாளை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

ஒவ்வொரு நாளையும் அப்படியே வாழ வேண்டும்."

"தாத்தா, கேட்க வேண்டியதை விசுவாசத்தோடு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஆண்டவர்,

"கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இம்மலையை நோக்கி, "இவ்விடம் விட்டு அவ்விடம் செல்" என்றால் அது பெயர்ந்து செல்லும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது."

என்று சொல்கிறாரே.

அதை கொண்டு பார்க்கும் போது இவ்வுலகில் யாருக்குமே விசுவாசம் இருப்பதாக தெரியவில்லையே."

",ஆண்டவர் எதிர்பார்க்கிற அளவு நம்மிடம் விசுவாசம் இல்லை.

"கொரோனா நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்."

என்று ஆண்டவர் சொல்லும் அளவிற்கு கொரோனா காலத்தில் நடந்து கொண்டோமா?

தொழு நோயாளிகளை தொட்டு சேவை செய்த அன்னை தெரசாவை பற்றி பெருமையாக பேசுகிறோம்.

கொரோனா நோயாளியைத் தொட்டு நம்மால் சேவை செய்ய முடிந்ததா?

அந்த அளவுக்கு நம்மிடம் விசுவாசம் இருந்ததா?

உணவு என்று சொன்னவுடன் வயிறு நிறையாது,

உணவை சாப்பிட்டால் தான் நிறையும்,

'விசுவசிக்கிறேன்' என்று சொல்வது மட்டும் ஆன்மீக வாழ்வு அல்ல.

விசுவாசத்தை வாழ்வதுதான் ஆன்மீக வாழ்வு.

நமது விசுவாசத்தை வலுப்படுத்துமாறும்,

அதை வாழ நமக்கு உதவி செய்யுமாறும் கேட்போம்.

ஆண்டவரைக் கேட்போம்.

விசுவாசத்தோடு கேட்போம்.

கேட்பது உறுதியாக கிடைக்கும்.

"உறுதியான விசுவாசத்தைக் கேளுங்கள், தரப்படும்."

லூர்து செல்வம்.

கேளுங்கள், கொடுக்கப்படும்.

   கேளுங்கள், கொடுக்கப்படும்.


''தாத்தா, ஆண்டவர் இயேசு,

"கேளுங்கள், கொடுக்கப்படும்." என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் எதைக் கேளுங்கள், எவ்வளவு கேளுங்கள் என்று சொல்லவில்லை.

ஆகவே எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம் அல்லவா?

கேட்டால் கட்டாயம் தருவார் அல்லவா?"

",எதை வேண்டுமானாலும் என்றால்?"

''சொத்து, சுகம், பணம், பதவி, நீண்ட வாழ்வு போன்றவை."

", ஒரு டாக்டர் நோயாளிடம் 'நீ காய்கறி மட்டும்தான் சாப்பிட வேண்டும்' என்று சொல்லிவிட்டு

 'வீட்டில் மட்டன் பிரியாணி இருக்கிறது, வந்து எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடு' என்று சொல்லுவாரா?"

"அதெப்படிச் சொல்லுவார்? காய்கறி மட்டும் சாப்பிட வேண்டியவனை எப்படி மட்டன் சாப்பிட சொல்லுவார்?"

",ஆங்கில ஆசிரியர் தனது வகுப்பில் மாணவர்களை பார்த்து, "கணக்கில் என்ன சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்" என்று சொல்லுவாரா?"

"அதெப்படிச் சொல்லுவார்? 'ஆங்கில பாடத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள், என்று தான் சொல்லுவார்."

",ஏழைகளே நீங்கள் பாக்கியவான்கள்' என்று சொன்ன இயேசு 

'ஏழைகளை பார்த்து "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று சொல்வாரா?"

"அதெப்படிச் சொல்லுவார்?

வேறு எப்படிச் சொல்லுவார்?"

",பேரப்புள்ள, ஆண்டவர் எதற்காக மனிதனாகப் பிறந்தார்?"

"நம்மை இரட்சிக்க.''

", அப்போ எதைக் கேளுங்கள் என்பார்?"

''இரட்சிப்புக்கு தேவையான அருள் வரங்களைக் கேளுங்கள் என்பார்."

",சொத்து, சுகம், பணம் போன்றவை ஆன்மீக இரட்சிப்புக்குத் தேவையா?"

"தேவையில்லை. ஆகவே ஆண்டவர் அவற்றைப் பற்றி கூறியிருக்க மாட்டார்.

ஆனால் மக்கள் அவற்றைத்தானே கேட்கிறார்கள்!"

",அதற்கு நான் என்ன செய்வேன்? 

மக்கள் கேட்பது அவர்களது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருந்தால் கடவுள் அவற்றைக் கொடுப்பார். 

உதவியாக இல்லாவிட்டால் கொடுக்க மாட்டார்.

மத். 7.11 ஐ வாசி."

"ஆகவே தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால்,

 வானகத்திலுள்ள
 உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!"

",உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!


நன்கு கவனி "நன்மை செய்வார்."

மக்கள் எதைக் கேட்டாலும் தந்தை நன்மையானதை மட்டும் செய்வார்.

உலகப் பொருட்கள் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு உதவியாக இருக்குமானால் அவற்றைத் தருவார்.

மத். 6:11 ஐ வாசி. "

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
( மத். 6:11)

ஆண்டவர் செபம் சொல்ல கற்றுத் தரும்போது 

'எங்களுக்கு அன்றன்று வேண்டியதை அன்றன்று தாரும்'

என்று பொருள் பட

"எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்" என்று தந்தையிடம் கேட்கச் சொல்கிறார்"

",அதாவது..."

"எதையும் மொத்தமாக கேட்கச் சொல்லவில்லை."

",மத்.6:19-21 ஐ வாசி."


"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம்.

 இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்: 

திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.

ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். 

அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை: 

திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.(மத்.6:19-21)"


",எவற்றைக் கேட்க சொல்கிறார்?"

"விண்ணுலகச் செல்வங்களை."

",நீ சொன்ன சொத்து, பணம், பட்டம், பதவி எல்லாம் உன்னோடு விண்ணுலகுக்கு வருமா?"

"நிச்சயமாக வராது.  நாம் விண்ணுலகம் செல்லும் போது நமது உடலையே மண்ணிற்குள் போட்டு புதைத்து விடுவார்கள்.

உலக முடிவில் நாம் உயிர்த்தெழும்போது சடப் பொருளாகிய உடல் ஆன்மீக 
உடலாக (Spiritual body) மாறியே உயிர்க்கும்."

",இப்போ புரிகிறதா?"

"புரிகிறது. ஆன்மீக சம்பந்தமாக அருள் வரங்களையே ஆண்டவர் கேட்கச் சொல்கிறார்.

ஆனால், தாத்தா, நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள்

 கையில் பைபிளை வைத்துக்கொண்டு 

இயேசுவிடம் வாருங்கள்

" செழிப்பாக வாழலாம், '

கடன் தொல்லைகள் தீரும்,

நோய் நொடிகள் குணமாகும்."

என்று போதிக்கிறார்களே!"

",அது தங்களிடம் 
வருபவர்களிடமிருந்து தசம பாகத்தைக் காணிக்கையாகப் பெற்று

 தங்களது சொத்து சுகங்களை பெருக்கி,

சொகுசாக வாழ்வதற்காக."

'''ஏன், தாத்தா, நம்மவர்களிடம் பண ஆசை உள்ளவர்கள் இல்லையா?"

", பன்னிருவரில் யூதாஸ் இருந்தானே, 30 வெள்ளிக் காசுக்காக ஆண்டவரைக் காட்டிக் கொடுத்தவன்.

அவன் என்ன ஆனான் என்பது உனக்குத் தெரியுமே.

அவனிடமிருந்து 'பண ஆசை கூடாது,' என்ற பாடத்தைக் கற்றுக் கொள்வோம்.

யூதாசிடமிருந்து மட்டுமல்ல சாத்தாளிடமிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

என்ன பாடத்தை என்று சொல்லு பார்ப்போம்."

"தற்பெருமை உள்ளவர்கள் விண்ணகத்திற்குள் நுழைய முடியாது."

(தொடரும்)

லூர்து செல்வம்.

Monday, November 14, 2022

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" (லூக்.19:26)

"உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" (லூக்.19:26)

உள்ளவன் யார்?
 இல்லாதவன் யார்? 

இயேசு சொன்ன உவமையிலிருந்து இவற்றிற்குரிய பதிலை முதலில் பார்ப்போம்.

பொற்காசுகள் உவமையில்,

பெருங்குடி மகன் ஒருவன் வணிகம் செய்து பணம் சம்பாதிக்க 

ஒருவனுக்கு பத்து பொற்காசுகளும், 

இன்னொருவனுக்கு ஒரு பொற்காசும் கொடுக்கின்றான்.

பத்து பொற்காசுகள் பெற்றவன் வணிகம் செய்து பத்து பொற்காசுகள் சம்பாதிக்கிறான்.

 ஒரு பொற்காசு பெற்றவன் வணிகம் செய்யவும் இல்லை, எதுவும் சம்பாத்தியம் செய்யவும் இல்லை.

ஆண்டவர் பத்து பொற்காசுகள் ஈட்டியவனை உள்ளவன் என்கிறார்,

எதுவும் ஈட்டாதவனை இல்லாதவன் என்கிறார்.

கொடுக்கப்பட்டது போக

 ஒருவனிடம் பத்து பொற்காசுகள் உள்ளன. ஆகவே உள்ளவன்.

மற்றவனிடம் எதுவும் இல்லை. ஆகவே இல்லாதவன்.


உள்ளவன் பத்து நகர்களுக்கு அதிகாரியாக ஆக்கப்படுகிறான்.

இல்லாதவனிடமிருந்து அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு காசும் எடுக்கப்படுகிறது.

இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

இறைவன் மனிதர்களை அவரை அறிந்து, நேசித்து, அவருக்கு சேவை செய்து அவரோடு விண்ணகத்தில் வாழ்வதற்காக படைக்கிறார்.

படைக்கப்பட்டவர்கள் அதற்கு முன் ஒன்றுமில்லாதவர்கள்.

படைக்கப்பட்ட பின் அவர்களைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை.

நாம் தண்ணீர் எடுக்க கடையிலிருந்து குடம் வாங்கும் போது குடத்திற்குள் எதுவும் இருக்காது.

சுயமாக எதுவும் இல்லாத நம்மை ஆன்மீக வாழ்வை துவக்குவதற்காக இறைவன் முதலில் அவரது அருள் வரங்களை கொடுக்கிறார்.

வணிகம் செய்பவன் தன்னிடம் முதல் முதலில் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து வணிகம் செய்வது போல,

முதலில் கிடைத்த அருள் வரங்களை கொண்டு,

அவற்றின் உதவியால்,

அவர்கள் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் 

தொடர்ந்து அருள் வரங்களை ஈட்டி ஆன்மீக வாழ்வில் வளர வேண்டும்.

அப்படி வளர்பவர்களுக்கு விண்ணக வாழ்வு பரிசாக அழைக்கப்படும்.  

முதலில் கொடுக்கப்பட்ட அருள் வரங்களை பயன்படுத்தாமல்

ஆன்மீக வாழ்வை வாழாமல் இருப்பவர்களிடமிருந்து 

பயன்படுத்தப்படாமல் இருக்கும் அருள் வரங்கள் திரும்பப் பெறப்படும். 

எந்த வரமும் இல்லாத அவர்கள் 
நரக நிலையைத்தான் அடைவார்கள்.

இயேசு கூறிய உவமைகளை வாசிப்பது மட்டும் போதாது.

அவை நமக்கு கூறும் பாடங்களை கற்க வேண்டும்.

பாடங்களைக் கற்றால் மட்டும் போதாது,

கற்றதை வாழ வேண்டும்.

முதலில் சுய சிந்தனை செய்து 

நமக்கு தரப்பட்ட அருள் வரங்களை பயன்படுத்தி, 

புதிதாக அருள் வரங்களை ஈட்டி,

 ஆன்மீக வாழ்வு வாழ்கின்றோமா என்பதை கண்டறிய வேண்டும்.

இரவில் படுக்கப் போகும்போது,

''ஆண்டவரே, நான் இரவில் தூங்குவதும் உமது அதிமிக மகிமைக்காகவே. எனது தூக்கத்தை உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன்."

என்று சொல்லி தூங்கினால், தூக்கம் ஆண்டவரின் அருள் வரங்களோடுதான் இருக்கும்.

காலையில், "தந்தை, மகன், தூய ஆவியின் பெயராது எழுந்து, எனது நாளை ஆரம்பிக்கிறேன்" என்று செபித்து எழுந்தால், ஏற்கனவே நம்மில் இருக்கும் அருள் வரங்களோடு புதிய அருள் வரங்கள் சேர்ந்து கொள்ளும்.

நாளின் வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே நமது மூச்சு உட்பட அனைத்து செயல்களையும் ஆண்டவருக்கு ஒப்படைத்து விட்டால்,

அன்றைய நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு அருள் வரங்களை ஈட்டிக் 
கொண்டேயிருக்கும்.

இப்படி வரங்களை ஈட்டிக் 
கொண்டே வாழ்ந்தால் 

நமது சிந்தனை, சொல், செயல் அனைத்தும் ஆண்டவருக்காகவே இருப்பதால்,

நமக்கு விண்ணக வாழ்வு உறுதி ஆகிவிடும்.

உவமையில் வரும் அரசன்,

"நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்ததால், பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரு" 

என்று கூறியது போல, ஆண்டவர் நம்மை நோக்கி,

"நன்று நன்று, நல்ல ஊழியனே, மிகச் சிறியதில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்ததால்

விண்ணக வாழ்வை உனக்கு உரிமையாக்குகிறேன்." என்று கூறுவார்.

நமது ஒவ்வொரு செயலையும்,

"இறைவா, உமக்காக." என்று சொல்லி ஆரம்பிப்போம்.

நாம் இறைவனின் அருள் வரங்களிலும், ஆன்மீகத்திலும் வளர்வோம்.

இறைவன் நமது இறுதி நாளில்,

"மோட்சம் உனக்காக." என்று சொல்வார்.

லூர்து செல்வம்.

நம்மை நாம் நேசிப்போம்.


நம்மை நாம் நேசிப்போம்.

நித்திய காலமாக வாழும் கடவுள் நித்திய காலமாக தன்னை அளவு கடந்த விதமாக நேசிக்கிறார்.

அவர் நம்மை அவரது சாயலில் படைத்திருக்கிறார்.

நம்மை நாம் நேசிக்கும் இயல்போடு படைத்திருக்கிறார்.

அவர் தன்னை நேசிப்பது போல நாம் நம்மை நேசிக்கிறோம்.

நாம் நம்மை நேசிப்பது நமது இயல்பு.

ஆகவேதான் நமது ஆண்டவராகிய இயேசு நமக்கு கொடுத்த இரண்டாவது கட்டளையில் 

நம்மை நாம் நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

நேசிக்கப் படுகின்றவர்களுக்கு நல்லதையே செய்வது நேசத்தின் இயல்பு.

நாம் நமக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று விரும்பினால்தான் 

நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களை நேசிக்கும் போது

அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவோம்.

நாம்  நமக்கு எப்போதும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

Charity begins at home.

நம்மை நாம் அன்பு செய்யும் இயல்போடு இறைவன் நம்மை படைத்திருப்பதால் 

நமது அன்பு அதன் இல்லமாகிய நம்மில் பிறந்து

நம்மை படைத்த இறைவனை நோக்கியும்,

நம்மோடு படைக்கப்பட்ட நமது அயலானை நோக்கியும் செல்லும்.

'நமது அன்பு' என்று குறிப்பிடப்படுவது இறைவன் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய அன்பு.

அவர் நம்மோடு பகிர்ந்து கொண்ட அவருடைய அன்பு பரிசுத்தமானது.

அதன் பரிசுத்தத்தனத்தைக் காப்பாற்ற வேண்டியது நமது முதல் கடமை.

உலகியலில் கூட நமது உடலை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள ஆசிக்கிறோம்.

அது போல் தான் ஆன்மீகத்தில் நாம் நமது ஆன்மாவை சுத்தமாக வைத்துக் கொள்ள ஆசிக்க வேண்டும்.

உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பாதவன் தன்னைப் பற்றி கவலைப்படாதவன்.

அழுக்கான அவன் உடல் பலவித நோய் நொடிகளுக்கு இருப்பிடமாக ஆகிவிடும்.

அதேபோலத்தான் ஒருவன் தனது ஆன்மாவின் பரிசுத்தத்தைப் பற்றி கவலைப்படாவிட்டால் அவனது ஆன்மா பலவிதமான பாவங்களுக்கு இருப்பிடமாக மாறிவிடும்.

பாவங்கள் இறைவன் நம்மோடு  பகிர்ந்து கொண்ட அன்பையும் களங்கப்படுத்தி விடும்.

பாவங்களால் 
களங்கப்படுத்தப்பட்ட அன்பை பரிசுத்தமாக்குவது எப்படி?

அதற்காகத்தான் நமது ஆண்டவர் பாவ சங்கீர்த்தனம் என்னும் தேவத் திரவிய அனுமானத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

நமது உடலில் அழுக்குப் படும்போது தண்ணீரில் குளித்து அதை சுத்தப்படுத்துவது போல,

பாவத்தினால் நமது அன்பு களங்கப்படும்போது,

பாவ சங்கீர்த்தனம் செய்து,

பாவ மன்னிப்பு பெற்று,

அதை பரிசுத்தமாக்க வேண்டும்.

அழுக்கு நிறைந்த பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்பட்ட தண்ணீர் எப்படி இருக்கும்?.

பாவங்கள் நிறைந்த மனிதனின் உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்கள் எப்படி இருக்கும்?

அந்த எண்ணங்களின் விளைவான செயல்கள் எப்படி இருக்கும்?

இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்தித்துப் பார்த்தால் 

நாம் வாழும் உலகின் இன்றைய நிலைமைக்கு காரணம்

நம் மீது நாம் கொண்டுள்ள அன்பின் களங்கம்தான் என்பது புரியும்.

உலகினர் ஒவ்வொருவரின் அன்பும் பரிசுத்தமாக இருந்தால்

உலகமே பரிசுத்தமாக இருக்கும். 

உலகில் ஏன் சமாதானம் நிலவவில்லை?

ஏனென்றால் நமது மனதில் சமாதானம் இல்லை.

இருப்பதைத்தான் கொடுக்க முடியும்.

உலகில் ஏன் நாடுகளிடையே ஒத்துழைப்பு இல்லை?

நமது உடலே நமது ஆன்மாவோடு 
ஒத்துழைக்கவில்லையே!

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."
என்பது நமது ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளை.

தங்களை தாங்களே உண்மையிலேயே அன்பு செய்பவர்கள் 

தங்களைத் தாங்களே பட்டினி போட மாட்டார்கள். 

தங்கள் அயலானையும் பட்டினியாய் இருக்க விட மாட்டார்கள்.

ஆடை அணியாமல் இருக்க மாட்டார்கள்.

தங்கள் அயலானையும் ஆடை இல்லாமல் இருக்க விட மாட்டார்கள்.

தங்களுக்கு நோய் வந்தால் வைத்தியம் பார்ப்பார்கள்.

தங்கள் அயலானுக்கு நோய் வந்தால் அவனுக்கும் வைத்தியம் பார்ப்பார்கள்.

தங்களை யாரும் கெடுத்து பேசுவதை அனுமதிக்க மாட்டார்கள்.

தாங்களும் யாரையும் கெடுத்து பேச மாட்டார்கள்.

தாங்கள் செல்லும் விண்ணகப் பாதையில் மற்றவர்களையும் அழைத்துச் செல்வார்கள்.

தாங்களும் நல்லவர்களாக வாழ்வார்கள்.

 மற்றவர்களையும் நல்லவர்களாக வாழ வைப்பார்கள்.

சுருக்கமாக தாங்கள் எப்படி இருக்க விரும்புகிறார்களோ அப்படியே மற்றவர்களும் இருக்க விரும்புவார்கள்.

மிகச் சுருக்கமாக மோட்சத்திற்கு தனியே செல்ல மாட்டார்கள்.

எல்லோரும் நம்மை நாமே நேசிப்பதை விட அதிகமாக 

நம்மைப் படைத்த இறைவனை நேசிப்போம்.

லூர்து செல்வம்.