Thursday, September 22, 2022

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்".(லூக்.9:13).

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" (லூக்.9:13)

வெகு நேரம் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களை 

சாப்பிட அனுப்பி விடும்படி சீடர்கள் அவரிடம் சொல்கிறார்கள்.

அவர் அவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று  சொல்கிறார்.

ஆண்களே ஏறக்குறைய ஐயாயிரம் பேர் உள்ள கூட்டத்திற்கு,

(பெண்களையும் சேர்த்தால் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.)

அவர்களால் உணவு கொடுக்க முடியாது என்று அவருக்குத் தெரியும்.

ஆயினும் "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று சொல்கிறார்.

அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தான் உண்டு." என்கிறார்கள்.

இயேசு கடவுளுக்குரிய தனது வல்லமையைப் பயன் படுத்தி அவற்றைக் கொண்டு அனைவருக்கும் உணவளிக்கிறார்.

மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

ஐந்து அப்பங்களை எப்படி ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பங்களாக மாற்றினார்?

இதற்கு அறிவியல் ரீதியாக எந்த விளக்கமும் கொடுக்க முடியாது.

ஒரு விவசாயி தன் நிலத்தில் ஒரு நெல் மணியை நூற்றுக் கணக்கான நெல் மணிகளாக மாற்றுகிறான் என்றால் அது அறிவியலுக்கு உட்பட்டது.

ஒரு முயல் தன் வயிற்றிலிருந்து பத்து குட்டிகளைப் போடுகிறது என்றால் அது அறிவியலுக்கு உட்பட்டது.

அறிவியல் விதிகளும் கடவுளால்தான் படைக்கப்பட்டவை.

இயேசுவின் கையில் ஒரு அப்பம் ஐயாயிரம் அப்பங்களாக மாறியது அறிவியலுக்கு அப்பாற்பட்ட புதுமை.

ஒன்றும் இல்லாமையிலிருந்து உலகையே படைத்தவருக்கு ஒரு அப்பத்தை ஐயாயிரம் 
அப்பங்களாக மாற்ற முடியாதா?

அவரால் எதை எதாக வேண்டுமானாலும் மாற்ற முடியும்,  எத்தனையாக வேண்டுமானாலும் மாற்ற முடியும்.

கானாவூர் கல்யாணத்தில் தண்ணீரை  திராட்சை ரசமாக மாற்றியவர் அவர்.

"நானே விண்ணிலிருந்து இறங்கி வந்த உயிருள்ள உணவு" என்று கூறிய அவர்,

தனது உடலையே நமது ஆன்மீக உடலாகத் தருகிறாரே, எப்படி?

கோதுமை அப்பத்தை தன் உடலாகவும், திராட்சை இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றித்தானே!

 கன்னி மரியின் வயிற்றில் மனித உருவெடுத்து, நமக்காக பாடுபட்டு மரித்த அதே இயேசு தான் திவ்ய நற்கருணை.

அவரால் எல்லாம் முடியும்.

தான் எல்லாம் வல்ல கடவுள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் தான் மனிதனாய் உலகில் வாழ்ந்த காலத்தில் புதுமைகள் பல செய்தார்,

இன்றும் செய்து கொண்டு வருகிறார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று சொல்லும்போதே கொடுக்கப்போவது தான்தான். என்று அவருக்குத் தெரியும்.

இன்றும் நம்மை மற்றவர்களுக்கு உதவி செய்ய சொல்லும்போதும், 

மற்றவர்களுக்கு உதவ நமக்கு உதவுபவரும் அவர்தான்.

நேரடியாகவும் உதவலாம், மற்றவர்கள் மூலமாகவும் உதவலாம்.

ஏதோ ஒரு ஏழை ரோட்டில் அடிபட்டுக் கிடக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவனுக்கு உதவ வேண்டும் போல் தோன்றுகிறது.

மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

நம்மிடம் இரக்கம் இருக்கிறது,
 ஆனால் காசு இல்லை.

ஆனாலும் ஒரு ஆட்டோவை நிறுத்துகிறோம்.

"சார், இந்த ஆள் யாரென்று தெரியவில்லை. அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என்னிடம் காசில்லை. கொஞ்சம் உதவுங்களேன்."

நமது நிலையைப் பார்த்தவுடன் அவருக்கே இரக்கம் வந்து விடும்.

"சரி, ஏற்றுங்கள்."

அவனை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று நர்ஸ்மாரிடம் நிலையைச் சொன்னால் அவர்கள் இரக்கப்பட்டு, அவனுக்கு இலவசமாகவே மருத்துவம் பார்த்து விடுவார்கள்.

நாம் இரக்கப்பட்டு ஆரம்பித்து வைத்ததை  கடவுள் இரக்கப்பட்டு  செய்து முடித்து விடுவார். 

சில உதவி மையங்கள் கையில் காசு இல்லாத, இரக்கம் மட்டும் உள்ளவர்களால் ஆரம்பிக்கப் பட்டு,   

இரக்கமும், காசும் உள்ளவர்களின் உதவியால் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இரக்கத்தின் தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

"இரக்கமுடையோர் பேறுபெற்றோர், 

ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர். "

இது இயேசுவின் வாக்கு.

நம்மிடம் இரக்கம் இருக்கிறது. பிறருக்கு உதவ ஆசையாக இருக்கிறது. இரக்கத்தின் உதவியால் உதவ ஆரம்பித்து விட்டோம். தொடர்ந்து உதவ கையில் காசில்லை. கடவுளை உதவிக்கு அழைக்கிறோம்.

அவர் நம்மீது இரக்கப் பட்டு, தொடர்ந்து உதவ எப்படியாவது  காசுக்கு ஏற்பாடு செய்துவிடுவார்.

"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்"

என்று சீடர்களிடம் சொல்லிவிட்டு,

அவர்களிடம் போதிய உணவு இல்லாததால்

 அவரே உணவு கொடுத்தது போல,

நீங்கள் பிறருக்கு உதவி செய்யுங்கள் என்று சொல்லி விட்டு

உதவி செய்ய நம்மிடம் போதிய பணம் இல்லாவிட்டால்,

அந்த உதவியை அவரே செய்து விடுவார்.

ஆனால், நாம் முதலில் உதவி செய்ய ஆசைப்பட்டிருக்க வேண்டும்.

பிறருக்கு உதவ ஆசைப்படுவோம்.
நமது ஆசை நிறைவேற இயேசு உதவுவார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment