Saturday, September 17, 2022

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."(லூக்.16:13)

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."
(லூக்.16:13)

"தாத்தா, நாம் நமது தலைவருக்குத்தானே ஊழியம் செய்ய முடியும்?"

", ஆமா. அதில் என்ன சந்தேகம்?"

"கடவுள் நம்மைப் படைத்தவர். ஆகவே அவர் நம் தலைவர். அவருக்கு மட்டும்தான் நாம் ஊழியம் செய்ய வேண்டும். அதில் சந்தேகம் இல்லை.

இயேசு எந்த வேலைக்காரனும் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறாரே.

முதலில் இரண்டு தலைவர்கள் இருக்கவே முடியாது.

"கடவுளுக்கும் செல்வத்திற்க்கும் நீங்கள் ஊழியம் செய்ய முடியாது."

என்று ஆண்டவர் கூறியிருக்கிறார்.

செல்வம் ஒரு தலைவரா?"

",பள்ளிக்கூடத்திற்கு எப்படிப் போகிறாய்?"

'"சைக்கிளில்."

",சைக்கிள் யார் வாங்கி தந்தது?"

"அப்பா."

',பள்ளிக்கூடத்தில் சேர்த்தது யார்?"

'"அப்பா."

",அப்பா நீ பள்ளிக்கூடம் போக சைக்கிள் வாங்கி தந்தாரா? அல்லது சைக்கிள் மிதிப்பதற்காக பள்ளிக்கூடத்தில் சேர்த்தாரா?"

''பள்ளிக்கூடம் போவதற்காகத்தான் சைக்கிள் வாங்கி தந்தார்.''

",உனக்கு சைக்கிள் மிதிப்பதில் ஆர்வம் உண்டா?'

''உண்டு."

",ஒரு நாள் நீ சைக்கிளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் போகாமல் 

சைக்கிள் மிதிக்க வேண்டும் எந்த ஆர்வத்தில் 

பகல் முழுவதும் சைக்கிளிலேயே ஊர் சுற்றிவிட்டு 

மாலையில் வீட்டுக்கு வந்தால் அப்பா என்ன சொல்லுவார்?"

"ஒன்றும் சொல்ல மாட்டார்
 அடிப்பார்."

'',ஏன்?"

"பள்ளிக்கூடம் போவதற்காகத் தானே சைக்கிள், ஊர் சுற்ற அல்லவே."

",உன்னைப் படைத்த கடவுள் உலகத்தையும் ஏன் படைத்தார்?"

"நான் வாழ்வதற்காக."

",அப்படியானால் நீ கடவுளுக்காக வாழவில்லை!

ஞானோபதேச வகுப்பில் ஆசிரியர்
"கடவுள் உன்னை எதற்காக படைத்தார்?" என்று கேட்டால் என்ன சொல்வாய்?"

"தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும் அதனால் மோட்சத்தை அடையவும் படைத்தார்." என்று சொல்லுவேன்."

",உலகில் வாழ என்று சொல்வாயா?"

"சொல்ல மாட்டேன். கடவுள் என்னை உலகத்தில் வாழ்வதற்காக படைக்கவில்லை.
மோட்சத்தில் வாழ்வதற்காக படைத்தார்."

'',நான் கேட்டால் உலகத்தில் வாழ்வதற்காக என்று சொல்கிறாய்!"

"Sorry தாத்தா. உலகைப் படைத்தது அதை இறைவனது சேவையில் பயன்படுத்துவதற்காக."

", உலகத்தில் வாழ்வதற்காகவே வாழ்கின்றார்களே, அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்?''

"அவர்கள் கடவுளுக்கு சேவை செய்யவில்லை. உலகத்திற்குத் தான் சேவை செய்கிறார்கள்."

",உலகத்திற்கு சேவை செய்தால் என்ன அர்த்தம்?"

"கடவுளை தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் உலகத்தை தலைவராக ஏற்றுக் கொள்கிறார்கள்."

"அதாவது?"

 "கடவுளுக்கு ஊழியம் செய்யாமல் உலகத்திற்கு ஊழியம் செய்கிறார்கள்."

",இப்போது உனது கேள்விக்கு விடை கிடைத்து விட்டதா?" 

"கிடைத்துவிட்டது. கடவுளுக்கு ஊழியம் செய்யாதவர்கள் உலகுக்கு ஊழியம் செய்கிறார்கள்" 

",ஒரே நேரத்தில் கடவுளுக்கும் உலகுக்கும் ஊழியம் செய்ய முடியுமா?" 

"அது எப்படி முடியும்? கடவுளுக்கு ஊழியம் செய்தால் உலகத்தை அவருக்காக பயன்படுத்த வேண்டும்.

கடவுளுக்காக வாழ்பவர்கள் உலகத்திற்காக வாழ முடியாது.

உலகத்துக்காக வாழ்பவர்கள் கடவுளுக்காக வாழ முடியாது."

",இதைத்தானே ஆண்டவர் சொன்னார். 

கடவுளுக்காக உலகைப் பயன்படுத்தாமல், உலகத்துக்காக கடவுளைப் பயன் படுத்திகிறவர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?"

"நிறைய பேர் இருக்கிறார்கள். 

இவர்கள் ஆன்ம வளர்ச்சிக்கான அருள் வரம் கேட்பதற்காக கோவிலுக்கு போவதில்லை.

உலக சம்பந்தமான உதவிகளை கேட்பதற்கு மட்டும் கடவுளைத் தேடி கோவிலுக்கு போகிறார்கள்."

",உலக சம்பந்தமாக உதவிகளை கேட்கக் கூடாதா?"

"தங்களது ஆன்மீக வளர்ச்சிக்காக அவைகளைக் கேட்கலாம்.  

நல்ல சம்பளம் வரும் வேலையை கேட்கலாம், அதை பிறர் சிநேக பணியில் செலவழிப்பதற்காக.

குழந்தை வரம் கேட்கலாம், அதை ஆண்டவருக்காக வளர்ப்பதற்காக.

உலகப் பொருள்கள் அனைத்தையுமே ஆண்டவருக்காக பயன்படுத்த வேண்டுமே.

அப்படி பயன்படுத்துவதற்காக அவற்றை கேட்கலாம்."

", கேட்டது கிடைக்காவிட்டாலும்..."

"கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்."

",இப்போது சொல்லு, உலகம் எதற்காக?'

"இறை ஊழியத்தில் அதை பயன்படுத்துவதற்காக."

",எதற்காக அல்ல?"

"நாம் வாழ்வதற்காக அல்ல.

நாம் வாழ வேண்டிய இடம் மோட்சம் மட்டுமே.

அதற்காக நம்மை இவ்வுலகில் தயாரிக்க வேண்டும்.

அதற்குப் பெயர் தான் ஆன்மீக வாழ்க்கை.''

",இறைவனுக்கு ஊழியம் செய்வோம். 

இறைவனுக்கு மட்டுமே ஊழியம் செய்வோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment