Thursday, September 15, 2022

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"  (லூக்.8:21)

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" 
 (லூக்.8:21)

இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்தபோது,

"உம் தாயும் சகோதரரும் உம்மைக் காண விரும்பி வெளியே நிற்கின்றனர்"

என்று அவருக்கு அறிவிக்கப் பட்டது.

அதற்கு ஆண்டவர்,

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்"  என்றார்.

தேவதாயின் மீது அக்கரை இல்லாத நம் பிரிவினை சகோதரர்கள் இந்த வசனத்தை தங்கள் வாதத்திற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது, இயேசுவுக்குப் பெற்ற தாய் மீது அக்கரை இல்லாததது போலவும், அதனால்தான்

"கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்களே எனக்குத் தாயும் சகோதரரும் ஆவர்" என்று சொன்னதாகவும் கூறுகிறார்கள்.

பைபிள் வசனத்திற்கு பொருள் காணும்போது சொன்னவருடைய பண்பின் அடிப்படையில் பொருள் காணவேண்டுமே தவிர

வெறும் வார்த்தைகள் அடிப்படையில் அல்ல.

தனது 33 ஆண்டு கால வாழ்வில் 30 ஆண்டுகள் தாய்க்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவர் தாய் மீது அக்கரை இல்லாதவரா?

சிலுவையில் தான் சாகும் தருவாயில் தன் தாயைத் தன் பிரியமான சீடர் அருளப்பர் பொறுப்பில் ஒப்படைத்தவர் தாய் மீது அக்கரை இல்லாதவரா? 

மற்றவர்கள் தன் தாயைப் பற்றி அறிவித்த சந்தர்ப்பத்தை தனது நற்செய்தியை நமக்கு அறிவிக்கப் பயன்படுத்திக் கொண்டார்.

நாம் கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும், அப்படி நடந்தால் நாம் அவருடைய தாயும், சகோதரரும் போன்றவர், என்கிறார்.

அதுமட்டுமல்ல, அவருடைய தாய் கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்தார் என்ற உண்மையும் அந்த வசனத்தில் அடங்கியிருக்கிறது.

மரியாள் கோவிலில் வளரும்போதே கன்னிமை வார்த்தைப் பாடு கொடுத்திருந்தார்.

இது அவரை வளர்த்த பெரிய குருவுக்கும் தெரியும்.

அவரது கன்னிமைக்கு பாதுகாவலாகத்தான் அவரை வயதான,
widower ஆகிய சூசையப்பருக்குத் திருமண ஒப்பந்தம் செய்து வைத்தார்.

கபிரியேல் சம்மனசு அவளது கன்னிமைக்கு பங்கம் ஏற்படாமல்
அவள் வயிற்றில் இயேசு பிறக்கவிருப்பதை அறிவித்த போது,

"இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற வார்த்தைகளால் தன்னை இறைப் பணிக்கு முற்றிலும் அர்ப்பணித்தார்.

அந்த விநாடியிலிருந்து இயேசுவின் பாடுகளில் அவளும் பங்கெடுத்துக் கொண்டார்.


பாடுகளில் பங்கெடுத்துக் கொண்டதால் வாழ் நாள் முழுவதும் வியாகுல மாதாவாகவே வாழ்ந்தார்.

சிலுவையில் மரித்த இயேசுவை அவளும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தைக்கு ஒப்புக் கொடுத்தார்.

இயேசு மரித்த பின் உயிர்த்தபோது முதல் முதல் தன் அன்னைக்குதான் காட்சி கொடுத்தார்.

இயேசு விண்ணகம் எய்திய பின் அப்போஸ்தலகள் அன்னையின் கண்காணிப்பில்தான் இருந்தார்கள்.

திருச்சபை செயல்பட ஆரம்பித்த பெந்தெகோஸ்தே நாளன்று அன்னை அப்போஸ்தலர்களுடன் தான் இருந்தார்.

ஆரம்ப காலத்திலிருந்தே திருச்சபையின் அன்னையாக செயல்பட்டவர் அன்னை மரியாள் தான்.

அன்னை மரணப் படுக்கையில் இருந்தபோது பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் தோமையாரைத் தவிர மற்றவர்கள் வந்து விட்டார்கள்.

அன்னை மரணம் அடைந்தவுடன் அடக்கம் செய்தார்கள்.

சில நாட்கள் கழித்து தோமையார் வந்தார்.

வந்தவர் அன்னையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

அவருக்காக கல்லரையைத் திறந்தார்கள்.

ஆனால் உள்ளே அன்னையின் உடல் இல்லை.

அப்போதுதான் அன்னை ஆன்ம சரீரத்தோடு விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப் பட்டதை அறிந்தார்கள்.

தனது வாழ்நாள் முழுவதும் தன் மகனுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்த அன்னை மீது மகனுக்கு அக்கரை இல்லை என்று சொல்வது 

எவ்வளவு புத்திசாலித்தனம். 

நம்மைப் பொறுத்த மட்டில் இயேசுக்கு அடுத்தபடி விண்ணகத்தில் ஆன்ம சரீரத்தோடு இருப்பவர் இயேசுவின் தாய் மட்டும்தான்.

அவள் மூலம் இயேசுவிடம் செல்வதுதான் நமக்கு எளிதான வழி.

அருள் நிறைந்த அன்னை மரியை
நம்புவோம்.

அவள் வழியே விண்ணகம் செல்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment