Friday, July 1, 2022

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்."(மத்.9:9)

"என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்."
(மத்.9:9)

மத்தேயு என்ற ஒருவர் சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு

இயேசு அவரை நோக்கி, "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.

இயேவைப் பின்சென்ற பின் அவர்இயேசுவின் சீடராக மாறினார் என்பது நமக்கு தெரியும்.

சீடராக மாறி எப்படியெல்லாம் இயேசுவுக்கு சேவை செய்தார் என்பதுவும் நமக்குத் தெரியும்.

ஆனால் ஆண்டவர் அழைக்கு முன் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்று நமக்குத் தெரியாது.

அவர் வரி வசூலிப்பவர் என்பது மட்டும் நமக்குத் தெரியும்.

வரி வசூலிப்பவர் என்றால் தனது இன மக்களிடமிருந்து வரி வசூலித்து உரோமை அரசுக்குக் கொடுப்பவர்.

பரிசேயர்கள் வரி வசூலித்தவர்களைப் பாவிகளாகக் கருதினர்.

பரிசேயர்களால் பாவியாகக் கருதப் பட்ட மத்தேயுவை இயேசு அழைத்தது மட்டுமல்ல, 

அவர் வீட்டிற்குச் சாப்பிடவும் செல்கிறார்.

இயேசு பந்தியமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.

 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.

இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.

பரிசேயர்கள் வரி வசூலிப்பவர்களை பாவிகள் என கருதினார்கள்.

உண்மையில் பரிசேயர்கள் பரிசுத்தவான்கள் அல்ல. தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த பாவிகள்.

அவர்களால் பாவிகள் என்று நினைக்கப்பட்டவர்கள் தாங்கள் பாவிகள் என்பதை மறுக்கவில்லை.

தங்களை சுகம் இல்லாதவர்கள் என்பதை ஏற்றுக் கொள்பவர்கள் மருத்துவரை பார்த்து சுகம் பெறுவர்.

சுகம் இல்லாமலிருந்தும் அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மருத்துவரையும் பார்க்க மாட்டார்கள், சுகமும் பெற மாட்டார்கள்.

பாவிகள் என கருதப்பட்டு அதை ஏற்றுக் கொண்டவர்கள் தாங்கள் மனம் திரும்பி வாழ்வதற்காக இயேசுவுடனேயே சென்றார்கள்.

தங்களை பரிசுத்தவான்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பரிசேயர்கள் இயேசுவை கொல்வதற்கு திட்டம் போடுவதற்காகவே அவர் பின்னால் சென்றார்கள்.

இயேசு எல்லா பாவிகளையும்தான் தேடி வந்தார்.

ஆயக்காரர்கள் வீட்டில் உணவு உண்டதுபோலவே, பரிசேயர்கள் வீட்டிலும் உணவு உண்டிருக்கிறார்.

தங்கள் நிலையை ஏற்றுக் கொண்ட பாவிகள்தான் பயன் பெற்றிருக்கிறார்கள்.

மத்தேயு இயேசு தன்னை அழைத்தவுடனே

அவர் வரி வசூலிப்பதை விட்டு விட்டு எழுந்து அவரைப் பின்சென்றார்.

இப்பொழுது பக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தேவ அழைத்தல் வரும் என்ற கருத்து நிலவுகிறது.

குருமடத்தில் நிறைய படிக்க வேண்டியதிருப்பதால் படிக்கும் ஆற்றல் உள்ளவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

நாம் நினைப்பது போல இயேசு நினைத்திருந்தால் வரி வசூலிப்பவரையும், மீன்பிடிப்பவர் களையும்  தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்.

இயேசு யாரைத் தேர்ந்தெடுக்க விரும்பினாரோ அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.

யூதாசைக்கூட அவர்தான் தேர்ந்தெடுத்தார், தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்று தெரிந்திருந்தும்.

பன்னிருவரும் அவரது பொதுவாழ்வு முழுவதும் அவருடன்தான் இருந்தார்கள், அவர் போதனையையெல்லாம் கேட்டார்கள்.

மூன்று ஆண்டுகள் முடிந்தபின் இன்று தேர்வு வைப்பது போல் 
பதினொருவருக்கும் ஒரு தேர்வு வைத்திருந்தால் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள்?

இயேசு மரித்த மூன்றாம் நாள் காலையில் ஒரு தேர்வு, ஒரே ஒரு கேள்வி.

இயேசு உயிர்த்து விட்டாரா?

எல்லோரும் ஒரே பதில்தான் எழுதியிருப்பார்கள்:

"தெரியாது."

மதிப்பெண்கள்: 0

நாமாக இருந்திருந்தால் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பியிருப்போம்.

ஆனால் இயேசு?

இயேசு உயிர்த்து விட்டதாக மதலேன்மரியாள் கூறியதை நம்பாத அப்போஸ்தலர்களின்

விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டு 

 அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான்.
(மாற்கு, 16:14-16)

யாராவது பரிட்சையில் fail ஆகி விட்டால் வேலை கொடுப்பார்களா?

அவர் உயிர்த்ததை நம்பாதவர்களைக் கடிந்து மட்டும் செய்து கொண்டு,

நற்செய்தி அறிவிக்கும் பெரிய பணியைக் கொடுத்தார்.

"பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, 

அவரது வல்லமையைப் பெற்று,

 யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்.''

பரிசுத்த ஆவி அவரது வல்லமையை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களை வழி நடத்துவார்.

இப்போது மிக முக்கியமான மறை உண்மையை நினைவில் கொள்ள வேண்டும்.

 பரிசுத்த ஆவியும், இயேசுவும் ஒரே கடவுள்தான்.

பரிசுத்த ஆவியின் வல்லமை என்றாலே அது தந்தையின் வல்லமை தான், மகனின் வல்லமையும் தான்.

 மூவருக்கும் ஒரே வல்லமை தான்

 மூவரும் அப்போஸ்தலர்களுடனும், அவர்களது வாரிசுகளுடனும் எப்போதும் கூடவே இருப்பார்கள்.

உலகம் முடியுமட்டும் இயேசுவின் சீடர்கள் எதைச் செய்தாலும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் செய்வார்கள்.

அவர்களது மறை பரப்புப் பணிக்கு வெற்றியைக் கொடுப்பது அவர்களது படிப்போ, குருமடத்தில் பெற்ற பயிற்சியோ அல்ல,

தந்தை, மகன், தூய ஆவியின் வல்லமை தான்.

அதனால்தான் இயேசு வரிதண்டுபவரையும், மீன்பிடிப்பவர்களையும், படிக்காதவர்களையும் அப்போஸ்தலர்களாகத் தேர்ந்தெடுத்தார்.

இதுவரை திருச்சபையை வழி நடத்தியது, இன்னும் நடத்தப்போவது பரிசுத்த தம திரித்துவம்தான்.

இப்படி சொல்லும் போது நமது குருக்களை நாம் குறைத்து மதிப்பீடு செய்யவில்லை.

அவர்கள் எப்போதும் கடவுளின் கண்காணிப்பில் இருக்கிறார்கள், ஆகவே அவர்களால் வழி நடத்தப் படும்போது இறைவனால் வழிநடத்தப் படுகிறோம்,

ஆகவே அவர்களை நூற்றுக்கு நூறு நம்பி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

நமது குருக்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது நாம் மூவொரு தேவனுக்குக் கீழ்ப்படிந்து  நடக்கிறோம்,

ஏனெனில் அவர் அவர்கள் மூலமாகவே செயல்புரிகிறார்.

பாவசங்கீர்த்தனத் தொட்டியில் அமர்ந்து, நமது பாவங்களை மன்னிப்பது இயேசுதான்.

"இது என் சரீரம், இது என் இரத்தம்" எனக் கூறித் திருப்பலி நிறைவேற்றி, தன்னையே நமது உணவாகத் தருபவர் இயேசு தான்.

நாம் நமது குருக்களைப் பார்க்கும் போது எப்போதும் அவர்களோடு இருந்து செயல் படுகின்ற இயேசுவைப் பார்ப்போம்.

திவ்ய நற்கருணை மூலம் நமது உணவாக நம்மிடம் வருவதால் இயேசு நம்மோடும் இருக்கிறார்.

குருக்கள் நிறைவேற்றுகின்ற தேவத் திரவிய அனுமானங்கள் மூலம் இயேசு தனது அருள் வரங்களோடு நம்மிடம் வருகின்றார்.

கிறிஸ்துவையும், நம்மையும் இணைக்கும் பாலம் போல் குருவானவர் செயல்படுகிறார்.

பாலத்தைப் பயன்படுத்துவோம் இயேசுவோடு இணைவதற்கு.

இயேசு நம்மை நோக்கி,

"என்னைப் பின்செல்" என்றால்

துணிந்து பின்செல்வோம்.

ஏனெனில் அவர் நம்மோடுதான் இருப்பார்.
 
லூர்து செல்வம்.

No comments:

Post a Comment